Thursday 14 February 2013

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 3

பகுதி  2 

மகிமா என்பது மலை போன்று பெரிதாவது என்றே குறிப்பிடபடுகிறது. விஸ்வரூபம் என்பது கூட ஒருவகையான சித்தி என்றே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஒரு சிறு விதை விருட்சமாவது என்பதை எவரும் மறுக்க இயலாது. ஆனால் விருட்சமான மரமானது மேலும் அதுவும் கணநொடியில் மேலும் விருட்சம் என்பது அபூர்வமான ஒன்றாகவும், நம்ப முடியாத விசயமாகவே நமது எண்ணத்திற்கு தோற்றம் அளிக்க கூடியவனாக இருக்கின்றன. 

ஆனால் இப்படிப்பட்ட மகிமா சக்தியை சித்தர்கள் பெற்று இருந்தார்கள் என்றே இன்னமும் சொல்லப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில் வரும் விஷ்ணுவின் அவதாரம், கிருஷ்ணரின் விஸ்வரூபம் கூட இந்த கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை எவரும் மனித உருவினை விஸ்வரூபம் எடுத்து பெரிதாக காட்டியதாக வரலாறு குறிக்கவே இல்லை. அப்படியெனில் இந்த மகிமா சாத்தியமா? சாத்தியம் அற்றதா? ஒன்று நம்மால் முடியாதவரை அது சாத்தியம் அற்றது என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான முயற்சியும் திறனும் நம்மிடம் நாம் வளர்த்து கொள்ள வேண்டும். 

இப்படிப்பட்ட முயற்சி பற்றி எண்ணிடும்போது சூரிய சித்தாந்தம் பற்றி நினைவுக்கு வந்தது. இந்த சூரிய சித்தாந்தம்தனை எழுதியவர் எவர் என்று குறிப்பில் இல்லை. இந்த சூரிய சித்தாந்தம் சூரிய கடவுள் மாயன் எனும் அசுரனுக்கு தரப்பட்டது என்று ஒரு ஐதீகம் உண்டு. தேவர்கள், அசுரர்கள் என அக்காலத்தில் இருந்து குறிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றன. அசுரர்கள் அழிக்கும் கூட்டம் எனவும், தேவர்கள் காக்கும் கூட்டம் எனவும் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. இந்த சூரிய சித்தாந்தத்தில் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் பல குறிப்புகள் சூரியன் பற்றியும், அதன் கோள்கள் பற்றியும் இருக்கின்றன. கால சூழல் வேறுபாட்டால் பல ஸ்லோகங்கள் தொலைந்து போனதாக வரலாறு குறிப்பிடுகிறது. ஒரு கோளின் அளவினை எல்லாம் இந்த சூரிய சித்தாந்தம் குறிப்பிட்டு இருப்பது, இன்றைய அளவுக்கு மிகவும் சரியாகவே இருப்பது, சைன், டேன், காஸ் டீட்டாகளை எல்லாம் கணக்கில்  வைத்தது பிரமிக்கவைக்கும் செயல் அன்றி வேறு என்னவாக இருக்க இயலும்.

பஞ்சாங்கம் என்பது இந்த சூரிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான். எந்த எந்த நேரத்தில் எந்த கோள்கள் எங்கிருக்கும் என்றெல்லாம் கணக்கீடு செய்து வைத்து இருக்கிறார்கள். அதன் காரணமாகவே சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எல்லாம் தெரிந்து இருக்கிறது. இப்படிப்பட்ட பிரமிப்பில் ஒரு மலையை சூரியனும், கோள்களும் சுற்றிக்கொண்டு இருக்கின்றன என சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மலைகள் எப்படி உருவானது என்பதற்கு பூமித்தட்டுகள் முட்டிக்கொண்டு மேல் எழுந்ததுதான் என்கிறார்கள் இன்றைய அறிவியல் வல்லுனர்கள். இந்த பூமியானது பல தட்டுகளால் உருவானது என்றும் ஒவ்வொரு தட்டுகளும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன, அப்படி நகர்தலின் காரணமாக நிலநடுக்கம், மலைகள் உருவாதல் எல்லாம் நடைபெறுகிறது என்றே சொல்கிறார்கள். தரைமட்டமாக இருந்த நிலபரப்பு திடீரென மலையாய் மாறுதல். மகிமா!

 
இது இமயமலைத் தொடர். இதற்கு பெரிய கதையே உண்டு. இப்போதைக்கு அகிலாண்டீஸ்வரியையும், சிவபெருமானையும் விட்டுவிடுவோம். நமது இந்திய நிலபரப்பு பல்வேறு வருடங்களில் நகர்ந்து வந்து மோதியதால் உருவானது இந்த இமயமலை என்பது ஒரு கணக்கீடு. நன்றி: விக்கிபீடியா 



ஆங்காங்கே இந்திய நிலபரப்பு மட்டுமல்லாது, உலகெங்கும் உள்ள மலைகள் இப்படித்தான் உருவாகி இருக்கும் என்பது ஒரு கணக்கீடு. 


இது ஆல்ப்ஸ் மலைத்தொடர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் என உலகில் ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பதாகவும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து சதவிகிதம் பூமி மலைகளால் ஆனது என்றே குறிப்பிடுகிறார்கள். 

ஆனால் மேரு மலை என்று ஒன்று குறிப்பில் உள்ளது. இந்த மேரு மலையில் தான் பிரம்மா மற்றும் அனைத்து கடவுளர்களும் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். இதுவரை இந்த மேரு மலையை எவருமே கண்டதில்லை. இது எங்கு இருக்கிறது என்பதற்கான ஒவ்வொருவரின் எண்ணமும் வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. இந்த மலையின் உயரம் கிட்டத்தட்ட பத்து லட்சம் கிலோமீட்டர் உயரம் என்றும், இதனின் குறுக்களவு பூமியைவிட எண்பத்து ஐந்து மடங்கு பெரிதாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உயரத்தை குறிப்பிட யோஜனா என்றும் ஒரு யோஜனா பதினோரு கிலோமீட்டர் என்றும் கணக்கு சொல்கிறார்கள். 

முன்னர் குறிப்பிட்டது போல இந்த மலையை சூரியன் முதற்கொண்டு பிற கோள்கள் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம். இந்த மேரு மலையை சூரிய சித்தாந்தம் மத்திய பூமியில் இருப்பதாக கணக்கீடு காட்டுகிறது. ஒருவேளை பூமி  வெடித்து சிதறி அதிலிருந்து வேறு பல கோள்கள் உருவாகும் முன்னர் இந்த மலை ஒன்று பூமியில் இருந்து இருக்கலாம் என சூரிய கடவுள் மாயனுக்கு சொல்லி இருக்கலாம். பூமியை சூரியன் சுற்றிய காலமும், சூரியனுக்குள் இருந்த பூமி வெளியே எறியப்பட்ட காலமும் இருந்திருக்கலாம். எவர் கண்டது? ஆனால் இப்படி சூரிய சித்தாந்தத்தில் சொல்லப்பட்ட மேரு மலை இல்லாதது கண்டு பின் வந்தவர்கள் மேரு மலை ஒன்று முன்னர் இருந்தது ஆனால் தற்போது பூமியில் இல்லை என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

இந்த மேரு மலை ஒருமுறை கர்வம் கொண்டதாகவும், அந்த மேரு மலையின் கர்வத்தை போக்கிட நாரதர் வாயு பகவானின் உதவியுடன் மேரு மலையை சிதறடித்ததாகவும் அதிலிருந்துதான் இலங்கை எல்லாம் உருவானது என  ஒரு கதை எல்லாம் உண்டு. அதுவும் லெமூரியா கண்டம் பற்றி எல்லாம் பரபரப்பாக நாம் பேசித் திரிந்த காலம் கூட இங்கே குறிப்பிட வேண்டியதுதான். 

மகிமா என்று சொல்லிவிட்டு மலைகள் பற்றி சொல்லிட வேண்டிய அவசியம் என்ன? பகவான் விஷ்ணு சொல்கிறார் மலைகளில் நான் மேரு. ஒரு மனிதன் தனது எண்ணத்தால், செயலால் உயரும்போது மலையை உதாரணமாக சொல்கிறார்கள். 

உருவத்தில் மனிதன் உயர்வதல்ல மகிமா. மனிதன் தனது உள்ளத்தில், எண்ணத்தில், உணர்வில், செய்கையில் உயர்வது மகிமா. இந்த மகிமா எனும் அஷ்டசித்திகளில் ஒன்றான இதை நாம் பற்றி கொண்டால் உலகம் சுபிட்சமாகவே இருக்கும். 

(தொடரும்)

1 comment:

Unknown said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com