Wednesday 30 January 2013

இதுவே தருணம் - ரஜினி, கமல் இணைந்து புதிய கட்சி


''குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை'' 

தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை – தன் கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக் கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர் கண்டற்று – ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டால் ஒக்கும். (‘கைத்து உண்டாக ஒன்று செய்வான்  எனக் கூட்டுக. ‘ஒன்று’என்பது வினையாதல் ‘செய்வான்’ என்றதனாற் பெற்றாம்.

குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து காணுமதுபோலக் கைத்து உண்டாக வினையை மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும்என்பதாம். - பரிமேலழகர் 

பொருள் வல்லமையுடன், அதிகார பிரயோகம், துஸ்பிரயோகம்  கொண்டு தான் செய்ய நினைக்கும் நல்ல செயல்கள் முதற்கொண்டு தரித்திர செயல்கள் வரை செய்து முடிக்கும் தமிழக அரசின் பல செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உரியவைகளே. இது திருவாளர் கருணாநிதி ஆட்சியிலும் சரி, திருவளர்ச் செல்வி ஜெயலலிதா ஆட்சியிலும் சரி நடந்தேறும் அவலங்களே. 

சமீபத்தில் தனது பிறந்தநாள் விழாவில் திரு. ரஜினி பேசும்போது அரசினை குற்றம் சொல்லாதீர்கள், அதிகாரிகளை குற்றம் சொல்லுங்கள் என்று பேசி இருந்தார். அரசு என்றால் என்ன?, அதிகாரிகள் என்றால் என்ன? அதிகாரிகள் தங்களது பணிகளை சரியாக செய்தால் அரசு சரியாக நடக்கும். ஆனால் அரசின் கைப்பாவைகள், அல்லக்கைகள் தான் அதிகாரிகள் என்பது நாடறிந்த உண்மை. 

நீதித்துறை கூட அரசின் கையில், பொருள் நிறைந்தோர் வளைக்கும் வளைப்பில் தான் உள்ளது என்பதை எவர் சொல்லித் தெரிய வேண்டும்? ஒரு ரூபாய் சம்பாதித்தவர் எல்லாம் கோடி சொத்துகளுடன், சகல சௌகரியங்களுடன் எப்படி வசிக்க முடிந்தது, முடிகிறது? மற்ற பணம் எல்லாம் பிறர் போட்ட பிச்சை என்றா எடுத்துக் கொள்வது? 

திரு ரஜினி சில மாற்றங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார் என்கிறார். மாற்றங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் பணபலம் மட்டும் போதாது, அரசியல் பலமும் மிகவும் அவசியம். 

ஒரு திரைப்படத்தின் மூலம், ஒரு படைப்பின் மூலம்  என்ன சாதித்துவிட முடியும்? ஒரு படைப்பாளி தனது பையினை நிரப்புவதுடன், அல்லது பையினை காலியாக்குவதுடன்  அவனது பணி முடிந்துவிடுகிறது. சமூக அக்கறை எல்லாம் இரண்டாம் பட்சம்தான். வெற்று அறிக்கைகள், வெறும் போராட்டங்கள் நடத்தி காண்பித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என எவர் இவர்களுக்கு சொல்லித் தந்தது? 

திரு. ரஜினி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது, அல்லது உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனும் நோக்கம் உடைய ஒருவர் தைரியமாக கட்சி ஒன்றைத்  தொடங்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. 

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற 
இடுக்கண் இடுக்கட் படும் 

அடுக்கி வரினும் – இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் – தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க ‘அடுக்கி வரினும்’ என்றார். ‘அழிவு’ என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)

எத்தனைத் தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிய முயற்சித்தால் அந்த துன்பமே துன்படும். 

திரு. கமல் தயாரித்து, இயக்கி, நடித்து தமிழகத்தில் வெளிவரத் துடிக்கும் ஒரு விஸ்வரூபம் திரைப்படம், சமூகப் பிரச்சினையில் இருந்து  அரசியல் பிரச்சினையாகிக் கொண்டு வருகிறது. சக மனிதர்களை மதிக்காதவர்கள் மனிதர்கள் அல்ல. ஒரு படைப்பாளி, அந்த அந்த சமூகத்தின் நிலையை அப்படியே படம் பிடித்து காட்டுபவன். சில நேரங்களில் ஓர வஞ்சகமாகவும் படைப்பாளி நடந்து கொள்வது உண்டு. ஒரு படைப்பு விமர்சனத்திற்கு உள்ளாகலாம், ஆனால் தடை எல்லாம் அவசியம் இல்லை. எந்த ஒரு படைப்பையும் பார்க்கும் உரிமையோ, அல்லது புறக்கணிக்கும் உரிமையோ படைப்பை பார்ப்பவர்களுக்கு உண்டு. அப்படியிருக்க சிறுபான்மையினர் என கூறிக்கொண்ட  அரசின் செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஒரு சமூகத்தின் உணர்வுகள் குறித்தான அக்கறை அரசுக்கு இதுவரை இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்து கொண்ட ஒரு அரசு குறித்து மக்களுக்கு சற்று வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பான்மையினரின் வெறுப்பு அரசுக்கு இனிமேல் தான் புரிய வரும். 

இந்த ஒரு பிரச்சினைக்காக திரு. கமல் நாடு விட்டு நாடு எல்லாம் போக வேண்டியது இல்லை. ரசிகர் மன்றங்கள் எல்லாம் நற்பணி மன்றங்கள் என மாற்றிய பெருமை திரு. கமலுக்கு உண்டு. தனக்கு அரசியல் தெரியாது என்றும்  சினிமா உலகம் மட்டுமே தெரியும் என்பவர். சமூக பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மிக சிறந்த ஆட்சி அமைய, மக்கள் யாவரும் நலம் பெற இந்த மாற்றத்தை இப்போதே உருவாக்க வேண்டும். இதுவே தருணம். 

வாழ்க தமிழ். வாழ்க தமிழகம். 

----

இப்படியாக எழுதி வைத்துவிட்டு, ஒரு தேநீர் கோப்பையுடன் தோட்டத்து பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். 

தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவரிடம், விவசாயம் எல்லாம் எப்படி போகுது என்றே வினவினேன். 

என்னய்யா பண்ண சொல்றீங்க, நீங்க படிச்சி மேல்நாட்டுக்குப் போயீட்டீங்க, எப்போவாச்சும் வரீங்க இங்க மழை தண்ணீ இல்லாம, கரண்ட் இல்லாம நாங்க அன்றாடம் கஷ்ட ஜீவனம் நடத்துறோம் என்றார். 

இதற்கு எல்லாம் அரசு தானே காரணம் என்றேன். 

அட நக்கல் பண்ணாதீங்கயா, எல்லாமே நாம தான் காரணம். நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சது யாரு? வெளில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டது யாரு? 

ஒரு படைப்பாளியான எனக்கு அவரின் கேள்விகள் புதிய அர்த்தங்கள் தந்து கொண்டிருந்தன.

அதுதான் மாற்றங்கள் நாம ஏற்படுத்தலாமே என்றேன். 

தெரியாத பேயை விட, தெரிஞ்ச பேயே மேல் தானே என்றார். 

சரியென தலையாட்டிவிட்டு மிகவும் யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். குன்றேறி யானைப்போர்... மேசையில் எழுதி வைக்கப்பட்டு இருந்த கட்டுரை தற்போது குப்பைத் தொட்டியை அலங்கரித்து கொண்டு இருந்தது.  மக்கள் எப்போது மாற்றம் கொள்வார்கள் என்றே நான் யோசிக்கத் தொடங்கினேன். 



3 comments:

bandhu said...

//இவருக்கு அரசியல் தெரியாது என்பதால், இவர்களது நற்பணி மன்றத்து உறுப்பினர்கள் ரஜினியின் புதிய கட்சிக்கு முழு ஆதரவு கொடுக்க இவர் சம்மதிக்க வேண்டும். //
நல்ல ஜோடி இருவரும். ஒருவருக்கு அரசியல் தெரியாது. இன்னொருவருக்கு தன் படம் வெளிவரும்போது மட்டும் அரசியல் ஞாபகம் வரும். எப்போ வருவேன்னு தெரியாது. எப்பவாவது வரலாம்னு சொல்வார். இருவரும் இணைந்து கட்சியா. உருப்பட்டாற்போலத்தான்!

G.M Balasubramaniam said...


நம் நாட்டுக்கு கட்சி அரசியல் ஒத்துவராது. ஒரு BENEVOLENT DICTATORSHIP தான் தேவை.

Radhakrishnan said...

ஹா ஹா பந்து. அது சரிதான்.

நல்ல யோசனைதான் ஐயா. நடைமுறைபடுத்துவது கடினம் என்றே கருதுகிறேன்.