Wednesday 28 November 2012

கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்?

பக்தா என்ற குரல் கேட்டதும் எனக்கு பயமாகவே போய்விட்டது. இத்தனை நாட்கள் நிம்மதி இன்று தொலைந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை கலைத்து வீட்டின் ஜன்னல் கதவின் வழியாக பார்த்தேன். அங்கு சாமியார் நின்று கொண்டிருந்தார். வீட்டினை திறப்பதா வேண்டாமா என மிகவும் யோசித்தேன். மீண்டும் பக்தா நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன் என்றார்.

நான் கதவினை திறக்காமல் பேசாமல் சென்று படுத்து விட்டேன். இருந்தாலும் மனம் திக் திக் என அடித்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டின் கதவு திறந்து கொண்ட சப்தம் எனது பயத்தை மிகவும் அதிகமாக்கியது. மெதுவாக வீட்டின் வாசற்புறம் திரும்பி பார்த்தேன். ஆமாம், வீட்டின் கதவு திறந்து சாமியார் உள்ளே வந்து கொண்டிருந்தார். இந்த அம்மாவும், அப்பாவும் இந்த நேரத்தில் எங்கு தான் போய்த் தொலைந்தார்கள் என மனம் வெகுவேகமாக அடிக்கத் தொடங்கியது.

என்னிடம் மந்திர சக்தி இருப்பதை மறந்து விட்டாயா பக்தா என்றார் சாமியார். நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்தவன் போல அடடே சாமியாரா, வாருங்கள் நான் நன்றாக தூங்கிவிட்டேன் அதனால் தான் நீங்கள் வந்தது கூட தெரியாமல் போய்விட்டது என்றேன். நான் கதவை சரியாக பூட்டித் தொலைக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். நான் சாமானியன், பொய் பேசலாம், ஆனால் சாமியார் எதோ மந்திர சக்தி மூலம் கதவை திறந்ததாக பொய் சொல்கிறாரே என மனதில் கோபம் வந்தது.

இந்த மதிய வேளையில் கூட உனக்குத் தூக்கம் வருமா? என்றார் சாமியார். தலைவலி சற்று அதிகமாக இருந்தது, அதுதான் தூங்கிவிட்டேன் என பொய் சொன்னேன். சரி சென்று முகம் அலம்பி கொண்டு வா, நாம் ஒரு இடம் போகலாம் என்றார். எனக்கு எரிச்சலாக போய்விட்டது. நன்றாக தூங்கி கொண்டு இருந்தானை எதற்கு இந்த ஆள் வம்பு செய்கிறார் என நொந்து கொண்டேன். எனக்கு தலைவலி மிகவும் அதிகமாக இருக்கிறது அதனால் நான் எங்கும் வர இயலாது என மீண்டும் ஒரு பொய் சொன்னேன்.

சாமி, நீங்கள் தான் மந்திர சக்தியால் கதவை திறந்து கொண்டு வந்தீர்கள் அல்லவா, அது போல எனது தலைவலியை மந்திர சக்தியால் போக்கிவிடுங்களேன் என சொன்னேன். இருக்கிற தலைவலியை போக்கலாம், ஆனால் இல்லாத தலைவலியை எப்படி போக்குவது? அது எந்த மந்திர சக்திக்கும் கட்டுக்கு அடங்காதே என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் அதிகமானது. நான் பொய் சொன்னது எல்லாம் இவருக்கு தெரிந்து இருக்குமோ என அச்சம் என்னை வாட்டியது. ஆனால் அவர் பொய் தானே சொல்லி இருக்கிறார் என எனது தலையணையை நகற்றிய போது வீட்டு கதவின் சாவி எனது கைக்கு அகப்பட்டது. சாமியார் எதோ மந்திர சக்தியால் தான் கதவை திறந்து இருக்கிறார் என முடிவுக்கு வந்த வேளையில் நிறையவே யோசிக்கிறாய் என்றார் சாமியார். உடனே கிளம்பு வா போகலாம் என்றார்.

எனக்கு வர விருப்பம் இல்லை என்றேன். அதைக்  கேட்டதும் சாமியார் சிரித்த சிரிப்பு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது என்றார் சாமியார். எனக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஆமாம் எனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது, இந்த கேடு கெட்ட சாமியாரை நான் பார்க்கவே வேண்டாம் என நினைத்தாலும் வந்து தொலைத்து விடுகிறார். அதோடு மட்டுமில்லாமல் என்னை எங்கோ எனது விருப்பத்திற்கு மாறாக அழைத்து செல்வேன் என துடி துடிக்கிறார். வேறு வழியின்றி நான் கிளம்பத் தயாரானேன்.

வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் தர வேண்டும் என தோணவில்லையா என்றார் சாமியார். கடவுளே இந்த சாமியாரை நீ கொன்று விட மாட்டாயா என நினைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்தேன். இவர் கெட்ட கேட்டுக்கு பழச்சாறா தர முடியும் என நினைத்தேன். சாமியார் சிரித்துக் கொண்டே எனது உடலில் எழுபத்தி ஐந்து சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. பரவாயில்லை குடிக்கிறேன் என வாங்கி கொண்டார்.

சாமியாருடன் நானும் கிளம்பினேன். நீ எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து அதை செய்து முடித்து இருக்கிறாயா என்றார் சாமியார். ஆமாம் செய்து முடித்து இருக்கிறேன் என்றேன். சாமியார் சிரித்து கொண்டே பொய் சொல்ல வேண்டும் என நினைத்து அதை செய்துதான் முடித்து கொண்டு இருக்கிறாய் என்றார். எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது. இவருக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறதே என நினைத்து சாமியாரிடம் நீங்கள் இந்த உலகத்தை சீரானதாக மாற்ற நினைக்கலாமே என்றேன். நான் நினைத்து என்ன செய்ய, அந்த கடவுள் நினைக்க வேண்டுமே என்றார் சாமியார். ஆமாம் சாமி, அந்த கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் நீங்கி கோபம் கொப்பளித்தது. நல்லதை செய்ய நாம் நினைத்தால் அதை தீயதில் சென்று முடிக்கும் கடவுள் என்ன கடவுள் என்றேன். நல்ல கடவுள் என்றார் சாமியார். எனக்கு இதனால் தான் இவரை பார்க்கவே பிடிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் கடவுளுக்கு வக்காலத்து வாங்குவார். எங்கோ என்னை அழைத்து கொண்டு வந்துவிட்டார் போல என நினைத்தேன். அதற்குள், நாம் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்றார் சாமியார்.

அந்த இடத்தில் எதுவுமே இல்லை. மரம், செடி கொடிகள் என எதுவுமே இல்லை. மெல்லிய காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதோ இப்படிப்பட்ட இடத்தில் இருந்துதான் மரங்கள், செடிகள், மனிதர்கள், பூச்சிகள், புழுக்கள் என எல்லாமே உருவானது என்றார் சாமியார். சாமி இவைகள் எல்லாம் இறைவனால் படைக்கப்படவில்லையா? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என சாமியார் சொல்லிக் கொண்டே நான் சொல்ல வந்தது உனக்கு புரிந்து இருக்கும் என சொல்லி மறைந்து போன சமயம் பார்த்து நல்ல நாள் அதுவுமா இன்னும் என்ன தூக்கம் என அப்பா என்னை பிரம்பால் ஓங்கி ஒரு அடி அடித்தார். உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் வலிக்குமோ என நினைத்து கொண்டே நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என வலியால் துடித்துக் கொண்டே எழுந்தேன்.

2 comments:

ப.கந்தசாமி said...

நல்ல கனவு, நல்ல முடிவு.

Radhakrishnan said...

நன்றி ஐயா.