Friday 16 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 1

அஷ்டமாசித்திகள் என்றால் எட்டு பேறுகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இதனை அடைய பெற்றவர்கள் மாபெரும் பலன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்றே அறியப்படுகிறது. பெரும்பாலும் சித்தர்கள் இத்தகைய எட்டு சித்திகள் பெற்றவர்களாகவே  காட்டப்படுகிறார்கள். இந்த எட்டு சித்திகள் பெறுவது என்பது அத்தனை எளிதான காரியமாக சாமானியர்களுக்குத் தெரிவதில்லை. இவை எல்லாம் கண் கட்டு வித்தையாக இருக்கலாம் என்றே பொதுவாக உணரப்பட்டாலும், ஒருவேளை இருக்குமோ என்கிற மாய பிம்பம் தென்படத்தான் செய்கிறது.

அஷ்டமாசித்திகள் எவை எவை.

1. அணிமா. இதை அணுத்தன்மை அல்லது நுண்மை என்றே குறிப்பிடலாம். அதாவது அணுவைப் போன்று சிறியவையாதல் என பொருள்படும்.

'கறந்த பால் மடிபுகா' என்று சொன்னாலும் யோக நிலையின் மூலம் உடலை சிறியது ஆக்கலாம் என்றே சொல்கிறார்கள். பொதுவாக பார்க்கப் போனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே ஆகிறது. ஆனால் உடல் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை என்னவென பார்க்கும் போது சில விசயங்கள் சாத்தியப்படலாம். மூன்று வகை உடல்கள் எவை எவை.

அ . ஸ்தூல சரீரம் அதாவது  கண்களுக்கு புலப்படக் கூடிய உடல்

ஆ . சூக்ஷ்ம சரீரம் அதாவது கண்களுக்கு புலப்படாமல் நுட்பமாய் அமைந்து இருப்பது. இதனை லிங்க சரீரம் என்றும் சொல்கிறார்கள். இந்த லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு, பிராண வாயு ஒன்று என்பவைகளால் ஆனது.

இ. காரண உடல். அதாவது பருவுடல், காரண உடல் இரண்டிற்கும் அடிப்படை இந்த காரண உடல்.

பருவுடம்பு மட்டுமில்லாமல் வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு மற்றும் இன்ப உடம்பு எனவும் உடம்பு பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒரு நிலை ஆகும். இப்படி பிரித்தெடுத்து சிந்தித்த முன்னோர்கள் போற்றத்தக்கவர்கள் தான்.

தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம் மற்றும் சோத்திரம் இவை ஞானேந்திரியங்கள். அதாவது   மெய் (உணர்தல்), வாய் (சுவை) ,கண் (பார்வை), மூக்கு (வாசம்), செவி (கேட்டல்) என ஐம்பொறிகளாக வகைப்படுத்தலாம். லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் மூலம் ஆனது என்பது இவை கண்களுக்கு புலப்படாத விசயங்கள் உணர்வதாக குறிப்பிடுகிறார்கள். இவைகளை பஞ்ச தன்மாத்திரைகள் என்றே சொல்கிறார்கள்.

வாக்கு, பாணி, பாதம், பாயுரு மற்றும் உபஸ்தம் என்பவை கர்மேந்திரியங்கள் என்றே  குறிக்கப்படுகின்றன. அதாவது வாய், கை, கால், மலவாய், கருவாய். இவை சொல்லல், நடத்தல் கொடுத்தல், விடுதல், மகிழ்தல் என கர்மங்களை செய்வதால் இவை கர்மேந்திரியங்கள் என்றே குறிக்கப்படுகின்றன.

மனம், அறிவு, நினைவு மற்றும் முனைப்பு போன்றவை அந்தக்கரணங்கள் என்றே வழங்கப்படுகின்றன. அந்தக்கரணங்கள் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் கட்டுபாட்டில் வைக்கக் கூடியவை. மனம், புத்தி இரண்டுமே எவை என்பது பிரித்தறிய மனம் நினைப்பு என்றும் புத்தி என்பது அறிவு என்றும் சொல்கிறார்கள். நாம் ஒன்றை நினைக்க மனம் துணையாகும். ஆனால் அதை நிச்சயித்து நடத்த புத்தி தேவை என்பதாகும்.

(தொடரும்)


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கங்களுக்கு நன்றி...

Radhakrishnan said...

நன்றி