Friday 28 September 2012

தூக்கம் - வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்

மிகவும் கடுமையான உழைப்பு உழைத்தால் நன்றாக தூக்கம் வந்துவிடுகிறது. இது உடல் அயர்ச்சியை போக்க நமது உடல் தேர்ந்தெடுத்த பாதை என்கிறார்கள். மன அயர்ச்சி இருந்தால் அத்தனை எளிதாக தூக்கம் வந்து தொலைப்பதில்லை. எனக்கு மிகவும் உடல் அயர்ச்சியாக இருக்கவே நன்றாகவே உறங்கிப் போனேன். எனது குறட்டை சத்தம் கேட்டு 'கொடுத்து வைச்ச மகராசன்' என எவரோ சொன்னது காதில் விழுந்தது. உடல் உபாதைகளும், மன அழுத்தமும் இல்லாத பட்சத்தில் மிகவும் ஆழ்ந்த தூக்கம் வருமாம். 'அடிச்சிப் போட்டது போல தூங்குறான் பாரு' என இன்னொரு சத்தமும் எனது காதில் விழுந்தது. நான் தூங்குகிறேனா, அல்லது தூங்குவது போல நடிக்கிறேனா? எனக்கே மிகவும் சந்தேகமாக போய்விட்டது.

ஒருவர் நான் குறட்டை விடுகிறேன் என்கிறார், ஆனால் எனக்கு குறட்டை சத்தம் கேட்கவில்லை. அவர் பேசும் சப்தம் மட்டும் கேட்கிறது. எதைக் கேட்பது, எதை கேட்க கூடாது என்று எனது சிந்தனைகள் வரையறுத்து கொண்டுவிட்டனவா? எவருமே என்னை அடிக்கவில்லை. இன்று மிகவும் கடுமையான உழைப்பு. அந்த அலுப்பில் தூங்கிவிட்டேன். ஆனால் 'இந்த தூக்கம் உடல் அசதியை போக்க வந்தது அல்ல' என்றார் ஒருவர். விழித்து பார்க்கையில் சாமியார் நின்று கொண்டிருந்தார்.

''எதுவெல்லாம் இயற்கை தேர்வு என்று கண்டுபிடித்துவிட்டாயா'' என்றார் சாமியார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ''நான் என்ன டார்வினா? எல்லாம் இயற்கை தேர்வு என பறவைகளின் உடல் அமைப்பு, விலங்குகளின் உடல் அமைப்பு என சிறு வயதிலேயே தீவுகளுக்கு எல்லாம் சென்று ஆராய்ச்சி செய்து சொல்ல. எதற்கு கண்டுபிடிக்க வேண்டும்? எதுவெல்லாம் இயற்கையாக தோற்றம் கொள்கிறதோ அதுவெல்லாம் இயற்கை தேர்வு'' என்று முடித்தேன். ''

நன்றாக தூங்கினாய் போலிருக்கிறது'' என்றார்.

 ''ஆமாம் உடல் அலுப்பு'' என்றேன்.

 ''அது உடல் அலுப்பு மூலம் வருவது அல்ல, அது உனது மூளைக்கு தேவையான ஒரு இளைப்பாறுதல், பசித்தவுடன் சாப்பிடுவது போல அல்ல இந்த உறக்கம். இந்த தூக்கம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை மிகவும் அதிகமாக கடைப்பிடித்தாலும் ஆபத்து, மிகவும் குறைவாக கடைப்பிடித்தாலும் ஆபத்து. கும்பகுர்ணன் அதிகம் தூங்கியதால் லங்கேஷ்வரம் ராமனால் வெல்லப்பட்டது'' என்றார் சாமியார்.

 ''சாமி இப்போ என்னதான் சொல்ல வரீங்க'' என்றேன் கலையாத தூக்கத்துடன்.

''இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் துயில் கொள்கின்றன. இந்த துயில் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்கின்றன. எத்தனை விதமான சோகம் இருந்தாலும் ஒரு கணத்தில் கண்களை சொக்க வைக்கும் தூக்கம்தனை எவரும் என்னிடம் வராதே என வெறுத்து ஒதுக்க இயலாது. தூக்கம் வந்தே இயலும். நாம் கொட்டாவி விடும்போதே நமது மூளை தூங்கிக் கொண்டிருக்க ஆரம்பித்து விட்டது. நமது செயல்பாட்டில் வேகமானது குறைந்து போய்விடக் கூடும். இறைவனுக்கு கூட இந்த இளைப்பாறுதல் தேவைப்படுகிறது. அதனால் தான் அவரை உறங்க வைக்கும் சமய சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சயன நிலையில் இருக்கும் ரங்கநாதர்'' என சொல்லி முடிக்கும் முன்னர் நான் குறுக்கிட்டேன்.

''சாமி, தூக்கம் பத்தி சொன்னீங்க சரி, இப்போ எதுக்கு இறைவன் துயில் கொள்கிறான், சயன நிலை என வம்பு செய்கிறீர்கள்'' என்றேன்.

''இறைவனே துயில் கொள்ளும்போது அவன் படைத்த ஜீவராசிகள் எங்கனம் என்பதை குறிப்பிடவே அவ்வாறு சொன்னேன். அது இருக்கட்டும். இந்த தூக்கத்தின் மூலம் நாம் சாதிப்பது என்ன? இந்த தூக்கத்தினால் நமது உடல் மூலக்கூறுகள் அளவில் என்ன நடக்கிறது என்பதை இதுவரை முழுவதுமாக கண்டு கொள்ள முடிந்தது இல்லை. பகலெல்லாம் இருமல் மூலம் பாதிக்கப்படுவர் தூங்கியபின்னர் இருமலே இல்லாமல் உறங்கிவிடுகிறார். இது போன்ற பல விசயங்கள் புரிபடமாலே இருக்கின்றன என்பதுதான் பரந்தாமனின் விளையாட்டு'' என்றார் சாமியார்.

''பரந்தாமனின் விளையாட்டு என்பதெல்லாம் நீங்கள் ஆடும் விளையாட்டு, தூங்குவதால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கிறது. விளையாடாமல் சொல்லுங்கள்'' என்றேன். எனக்கு அதிகம் தூக்கம் வந்து தொலைப்பதால் அதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனும் ஒரு எண்ணம்.

''பரந்தாமனின் விளையாட்டு பற்பல. அதை முழுவதும் கண்டுகொண்டார் எவரும் இல்லை. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன்  சூப்பர் ஆக்சைடாக ( O2- )  மாறிவிடுகிறது. இது நமது செல்களை பாதிக்க செய்கிறது. அப்படிப்பட்ட பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஜீன்கள் தூங்கும்போது மிகவும் அதிக அளவில் தனது வேலைப்பாடுகளை செய்கின்றன. சதா இறைவன் மீது பக்தி செல்லும் தொண்டர்கள் கூட சிறிது நேரம் இளைப்பாறுதல் அவசியம். மதியம் குட்டித் தூக்கம் போடுகிறேன் என்பது நம்மை சசுறுசுறுப்பாக வைக்கத்தான். அதிகம் சாப்பிடும்போது வளர்சிதை மாற்றம் வெகுவேகமாக நடைபெறும். அப்போது இந்த சூப்பர் ஆக்சைடு அதிக அளவில் உற்பத்தி ஆகும். அதன் மூலம் ஏற்படும் சேதாரம் சரி செய்ய இந்த தூக்கம் தேவை. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள்'' என்றார் சாமியார்.

''தொண்டர், குண்டர் அப்படி எல்லாம் பேசமா விசயத்தை மட்டும் தெளிவுபடுத்தினால் போதும்'' என்றேன்.

''இதோ உனது பக்கத்தில் உறங்கி கொண்டிருக்கும் இந்த எலி இருபது மணி நேரம் அசராமல் தூங்கும். ஆனால் யானைக்கோ இரண்டு மணி நேர தூக்கம் போதும். ஏனெனில் வளர்சிதை மாற்றம் சிறிய உயிரினங்களில் வெகு வேகமாகவும், பெரிய உயிரினங்களில் மிகவும் மெதுவாகவும் நடைபெறுவதே காரணம். அளவுக்கு அதிகமாக உண்டதால் கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்க வேண்டியதாகிவிட்டது'' என்றார் சாமியார்.

''கும்பகர்ணன் பக்கத்தில இருந்து பாத்தீங்க'' என நான் சொன்னதும்

''''முக்காலமும், எக்காலமும் யாம் அறிவோம், ஆனாலும் தூக்கத்திற்கான இந்த காரணம் தவறு என்போர் உண்டு. வேறு சில காரணங்கள் என நமது உடல் உணவை செரிக்கும்போது உண்டாகும்  சக்தி மூலக்கூறு அளவு குறைந்துவிடும் பட்சத்தில் நமக்கு தூக்கம் வந்தவிடும். இந்த தூக்கம் மூலம் அடினோசின் ஏஎம்பி உருவாக தயாராக இருக்கும். மேலும் மூளையின் நரம்பு மண்டலமானது ஒரு நாளில் பல புதிய புதிய நரம்பியல் பாதையை உருவாக்கி வைத்து இருக்கும். அதில் எது எது அவசியமற்றதோ அதை எல்லாம் நீக்கி நம்மை புத்துணர்வுடன் வைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நமது மூளை நமது நினைவுகள், கற்று கொண்டவை போன்ற பல விசயங்களை பரிசீலனைக்கு உட்படுத்தவே இந்த தூக்கம் வருகிறது'' என்றார் சாமியார்.

''நீங்க சொன்னது எல்லாம் இயற்கை தேர்வு. தூக்கம் நமக்கு இயற்கை கொடுத்தது. தூக்கம் கிடக்கட்டும், நாம எதுக்கு முழிச்சிட்டு இருக்கனும்?'' நான் கேட்ட கேள்வியில் சாமியார் நிலைகுலைந்து போயிருப்பார் என்றே கருதினேன்.

''நாம முழிச்சிட்டு இருக்கிறதுக்கு எப்போதும் பரந்தாமன் புகழ் பாடத்தான். நாம சாப்பிட, நம்மை பாதுகாக்க, நமது இனத்தைப் பெருக்க நாம முழிச்சிட்டு இருக்கணும்னு சாதாரண மனுசாள் சொல்வாங்க. ஆனா எப்பவும் அவன் புகழ் பாடத்தான் நாம முழிச்சிட்டு இருக்கணும்'' என்று சாமியார் சொல்லி முடித்ததும் சட்டென விழித்தேன்.

''நல்லா குறட்டை விட்டடா'' என அப்பாவும், ''அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினடா'' என அம்மா சொன்னதும் தூக்கத்தில் வரும் இந்த கனவு மூளையின் வேலையோ? என புரியாது களைத்திருந்தேன்.




5 comments:

ராஜ நடராஜன் said...

அன்றும்,இன்றும் தூக்கம் எனக்கு வரமே.ஆனால் இப்பொழுதெல்லாம் கனவு காண்கிறேன் என்பது எனக்கே தெரியுது:)

Radhakrishnan said...

ஹா ஹா. இது வேறயா?

G.M Balasubramaniam said...


தினமும் இறந்து பிழைக்கிறோம் என்று தூக்கம் அறிவுறுத்துகிறது. நன்றாகத் தூங்கி எழுந்தால் புத்துண்ர்ச்சியாக இருப்பது புரியும். தூக்கம் சரியாக இல்லாவிட்டால் எதுவுமே சுவைப்பதில்லை. தூக்கம் உடல் ஆரோக்கியத்துக்கும் , மன ஆரோக்கியத்துக்கும் முக்கியம். நல்ல தூக்கம் ஒரு வரம். ஆனால் அதிகம் தூங்கி சோம்பித் திரிவது நல்லதல்ல. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு ஊட்ட தூக்கம் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.

Easy (EZ) Editorial Calendar said...

மனிதர்களுக்கு மட்டும் இல்லை வேறு எல்லாவிதமான உயரினங்களுகும் தூக்கம் மிக மிக அவசியமானதாகும்..

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Radhakrishnan said...

நன்றி ஐயா.

நன்றி மலர்.