Wednesday 19 September 2012

கசாப்பு கடைக்காரர் கையில் காப்பு கட்டலாமா?

இந்தியா பயண கட்டுரைத் தொடரில் இருந்து சற்று விலகிச் செல்லலாம் என நினைக்க வைத்த ஒரு விசயம் இது. பொதுவாகவே இந்த இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் மனிதனை ஒரு கட்டுபாடுக்குள் இருக்க கொண்டு  வரப்பட்டவைதான் என்பதில் எனக்கு மறு கருத்து இல்லை, இருப்பினும் இந்து மத சாத்திரங்கள், சம்பிராயதங்கள் எல்லாம் எந்த அளவுக்கு பின்பற்ற முடியும் என்பதில் ஒரு பல பரீட்சையே செய்து கொள்ளலாம் என்றுதான் எண்ணத் தோணுகிறது.

 சென்ற வருடம் லண்டனில் உள்ள கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்ற போது, கையில் காப்பு கட்டச் சொன்னார்கள். இந்த பிரமோற்சவம் வருடாந்தோரும் ஆகஸ்ட் மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். பத்து நாட்களில் கடைசி ஞாயிறு அன்று தேர்த்திருவிழா நடைபெறும். திங்கள் கிழமை அன்று விழா இனிதே முடிவடையும். இப்படி இருக்கும் பட்சத்தில் சில கட்டுபாடுகள் சொன்னார்கள். மனைவியுடன் உறவு கொள்ளாது இருத்தல். அசைவ உணவு சாப்பிடாது இருத்தல், சுருக்கமாகஸ் சொன்னால் அக சுத்தம், புற சுத்தம் என சுத்தமாக இருத்தல். லண்டனுக்கு வெளியில் செல்லாது இருத்தல் போன்ற கட்டுபாடுகள். நான் ஏற்கனவே ஸ்பெயின் தீவான மயோர்கா செல்ல முடிவு எடுத்து இருந்ததால் காப்பு கட்ட வேண்டாம் என நினைத்து காப்பு கட்ட மறுத்துவிட்டேன்.

ஆனால் இந்த வருடம் காப்பு கட்ட வேண்டிய சூழல் வந்தது. முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஏனெனில் எனக்கு இது போன்ற சடங்கு சாத்திரங்களின் கட்டுபாடுக்குள் சிக்கி கொள்ள விரும்புவதில்லை. இதைக் கட்டினால் இது எல்லாம் செய்யக் கூடாது என சொல்லப்படும்போது அதைக் கட்டிக்கொண்டு செய்யக் கூடாததை செய்தால் என்ன நடக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் சற்று அதிகமாகவே உண்டு. எனக்கு காப்பு கட்ட வேண்டிய நேரம் வந்தபோது ஐயர் சற்று அதிகமாகவே தயங்கினார். எனது மன நிலை அவர் அறிந்து வைத்து இருந்தாரா என தெரியவில்லை. விழா முடிந்ததும் கேட்டுவிடலாம் என்றுதான் நினைக்கிறேன்.

சரி, கட்டுங்கள் சாமி என்று சொல்லி கெட்டியாக கட்டியாகிவிட்டது. எதுக்கு கட்டினோம் எனும் மனநிலை வேறு. வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் காப்பு கட்டிவிட்டு வந்துவிட்டேன் என காட்டினேன். எதற்கு இதெல்லாம் என்றே கேட்டார்கள். ஏனெனில் நான் எப்போதுமே இதுபோன்று செய்து கொண்டது இல்லை. கட்டிவிட்டு விட்டார்கள் என்றேன் அப்பாவியாய். உங்கள் சம்மதம் இல்லாமலா கட்டினார்கள் என்றதும் இல்லை வேறு வழியின்றி கட்டிக்கொண்டேன் என சொன்னதோடு நாம் எனது கையில் காப்பு இருக்கும் வரை சற்று தள்ளி இருக்க  வேண்டும் என்றேன். இதை  மீண்டும் மீண்டும் சொல்லி வைத்தேன். அருகில் அருகே தூங்குவது கூட தவறோ என்று மனைவி சொல்ல அதெல்லாம் எவர் சொன்னது என்று அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்றே சொல்லியாகிவிட்டது.

முதல் நாள் ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் அன்பின் மிகுதி அதிகமாகவே இருந்தது. அடுத்த நாள் இரவு மிகவும் அன்பாக பல விசயங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் எங்கள் இருவருக்குள் ஒன்றுமே இல்லாத விசயம் குறித்து கருத்து வேறுபாடு வந்தது.  ஏதேனும் ஒரு மாலை வேளையில் ஒரு புது வீடு பார்க்கலாமா என்றார் மனைவி. நானோ இந்த பத்து நாட்கள் என்னை எங்கும் அழைக்காதே என்று சொன்னேன். இதுதான் நடந்தது. அதற்கடுத்து எதற்கு பத்து நாட்கள் எதுவும் செய்ய கூடாது என்று ஆரம்பித்து சின்ன ஊடல். எனக்கோ என்ன இது என தோணியது. நம்மை இறைவன் பிரித்து வைக்க சதி பண்ணுகிறான் என்று காப்பு மீது பழியை போட்டு விட்டு இரண்டாம் கழிந்தது. காப்பு குறித்து எனது மனைவி சற்று பயந்தே விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். காப்பு கையில் இருக்கிறது, கவனம் என்றே சொன்னார். அன்னியோன்யம் அநியாயத்திற்கு விலகி நின்றது. எனக்கே ஆச்சர்யம்.

மூன்றாம் நாள் மீண்டும் சகஜ நிலை. அன்றுதான் நினைவு வந்தது, அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டும், அங்கே இந்த வாரம் கிட்டத்தட்ட ஐம்பத்தி நான்கு கினி பிக்ஸ் கொல்ல வேண்டும் என. அது எனது ஆய்வகத்தில் உள்ள மற்ற நபரின் வேலை. அவருக்கு முன்னரே இதே வேலையில் உதவியதால் இந்த முறையும் செய்ய வேண்டிய நிலை. இந்த வேலையை ஒரு வாரம் தள்ளிப்போட்டு இருந்து இருக்கலாம். ஆனால் காப்பு கட்டப் போகிறேன் எனும் நினைப்பு எல்லாம் முன்னரே இல்லை. அதனால் எல்லா கினி பிக்ஸ் வந்து சேர்ந்துவிட்டது. செய்தே ஆக வேண்டிய சூழல்.  அடடா, ஆராய்ச்சி வேலையில் பல உயிரினங்களை கொல்ல வேண்டி இருக்கிறதே, இதை மறந்து கையில் காப்பு கட்டிவிட்டோமே என நினைத்தேன். அதை மனைவியிடம் சொல்லி வைக்க, உங்களை எல்லாம் எவர் காப்பு கட்ட சொன்னது என்றார்.

வேலைக்கு சென்றேன். கையில் இருக்கும் கயிறு குறித்து தற்போது எவரும் கேள்வி கேட்கவில்லை. இதற்கு முன் சில வருடங்கள் முன்னர் இந்தியா சென்று திரும்பிய போது கையில் கோவிலில் வாங்கிய கருப்பு கயிறு கட்டி இருந்தேன். வேலை இடத்தில் ஒரு உணவு விருந்தில் கையில் என்ன கருப்பு கயிறு என சைனா மாணவன் கேட்க நான் பதில் சொல்லும் முன்னரே கடவுள் நம்பிக்கை இல்லாத எனது ஆசிரியர் அந்த கயிறு இவன் உயிரை காப்பற்றும் என்று சிரித்து வைத்தார். அன்று மாலையே கயிறுதனை கழற்றிவிட்டேன். இந்தியாவில் இருந்தபோது எல்லாம் முருகன் டாலர் வைத்த கயிறு, கையில் கருப்பு கயிறு. அட அட என்ன பக்தி மாயம். எல்லாம் தொலைந்து போனது, என்னையும் சேர்த்து.

முதல் நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. அடுத்த நாள் பதினெட்டு கினி பிக்ஸ் கொல்லப்பட்டது. கையில் இருந்த காப்பு மனதை உறுத்தவே இல்லை. எந்த ஒரு விசயத்திற்கும் காழ்ப்புணர்வு கழித்த மனம் சுத்தமாக இருந்தால் போதும் என்றே உலகில் சொல்லி இருக்கிறார்கள். காப்பு கட்டிய காரணத்தால் மட்டுமே அக சுத்தம், புற சுத்தம் கவனிக்க வேண்டிய ஒன்றில்லை. அக சுத்தம், புற சுத்தம் எல்லாம் எல்லா நேரங்களிலும் மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்பதை எவரேனும் மனித குலத்திற்கு பொட்டில் அடித்தாற்போல் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தினம் தினம் கையில் இருக்கும் காப்பு நினைவுறுத்துவதை போல சொல்லி வைப்பார்களா?

இதற்குதான் இந்த மதத்தில் கசாப்பு கடைக்காரர் மற்றும் நிமிடந்தோறும் நாராயண நாராயணா என சொல்லும் நாரதர் கதை உலகுக்கு சொல்லப்பட்டது. கசாப்பு கடைக்காரர் மோட்சம் அடைந்ததை கண்டு, உன் பெயரையே இரவும் பகலும் உச்சரிக்கும் தனக்கு இன்னமும் மோட்சம் கிட்டாதது குறித்து நாராயணரிடம் கேட்கிறார் நாரதர். அதற்கு நாரணனோ இதோ இந்த கிண்ணத்தில் இருக்கும் எண்ணையை கொட்டிவிடாமல் சுற்றி வா என்கிறார். சுற்றி வருகிறார் நாரதர். எத்தனை முறை நாராயணா சொன்னாய் என்கிறார் நாரணன். நமோ நாராயணா, எனது கவனம் எல்லாம் கிண்ணத்தில் இருக்கும் எண்ணை கொட்டிவிடக்கூடாது என்பதில் தான் இருந்தது, பெயர் உச்சரிக்கவே மறந்து போனேன் என்கிறார் நாரதர். நாராயணன் சிரிக்கிறார். நாரதர் அர்த்தம் புரிந்து கொள்கிறார். இறைவன் பெயரில் மட்டும் சுத்தம் என விரதம், முடி கட்டுதல், பாதை யாத்திரை நடத்தல் என செய்வதை விட எல்லா காலங்களிலும் மனிதர்கள் நியாயம், தர்மம் என கட்டுபாடுக்குள் இருக்க ஒரு காப்பு வேண்டும். அதை எங்கே பெறுவது, எப்படி எல்லாருக்கும் கட்டுவது? 

3 comments:

bandhu said...

(மதங்களின்) சாரத்தை சரியாக புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன். இனி சக்கை (சடங்கு, சம்ப்ரதாயங்கள்) களை பற்றி அதிகம் கவலை பட தேவையில்லை!

தமிழ் காமெடி உலகம் said...

இதை போல் மதங்களை எல்லாரும் முழுமையாக புரிந்து கொண்டால் எந்த சம்பிரதாயமும் பார்க்க மாட்டார்கள்...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Radhakrishnan said...

நன்றி பந்து. நன்றி மலர்.