Wednesday 12 September 2012

என்ன சொல்லி தந்தது இந்தியா? 3

கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும் என்பதால் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க லண்டனில் இருந்து வருகை தந்த ஐயர் அவர்களை சந்திக்கும் ஏற்பாடு இருந்தது. நேராக கோயம்பேடு வந்து விடுங்கள் அங்கே இருந்து பாரிமுனை பக்கம் செல்லலாம் என சொன்னார். 

நாங்கள் அவரை சந்தித்த நேரம் மாலை நான்கு மணி மேல் இருக்கும். பைக்கில் வந்தவர் காரில் ஏறாமல் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். நேரம் ஆகி கொண்டு இருக்கிறதே, கடைகள் எல்லாம் மூடிவிடுவார்கள் எனும் அச்சம் வேறு. சின்ன சின்ன தெருக்களில் கார் சென்றபோது எத்தனைவிதமான இடைஞ்சல்களில் இந்தியாவில் வாழ்க்கை பயணித்து கொண்டிருக்கிறது என எண்ணிக் கொண்டேன். 

அவரது வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் சென்றபோது நேரத்தின் மீதுதான் கண் இருந்தது. சில இயந்திரங்களை  முன்னரே வாங்கி வைத்ததாக காட்டினார். இவர் லண்டனில் ஏற்கனவே பணி புரிந்துவிட்டு மீண்டும் லண்டனில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்காக ஓராண்டு முன்னர் தான் லண்டனில் உள்ள கோவிலில் இணைந்தார். வெளிநாட்டில் பணி புரிவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயர்ந்துவிடுவதாக அவர் சொன்னபோது மறுக்க இயலவில்லை. ஆனால் அதற்கடுத்து நான் கண்ட காட்சிகள் இந்தியாவில் உள்ள திறமைமிக்க வியாபாரிகள் போல உலகில் காண்பது சற்று கடினம் தான் என்றே எண்ண தோன்றியது. 

முதலில் தேவையான ஆராதனை பொருட்கள், கலசங்கள், குத்துவிளக்கு, குடை என வாங்கிட மிகவும் குறுகலான தெரு ஒன்றில் சென்றோம். இருபுறமும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அவ்வப்போது சாலையில் ஆட்டோ வந்து போய் கொண்டிருந்தது. நடப்பதற்கே மிகவும் கடினமாக இருந்தது. அந்த தெருவில் இருந்த சில கடைகளில் விசாரிக்க ஒரே பொருளின் விலை வேறு வேறாக இருந்தது. சரி என ஐயர் தனக்கு தெரிந்த ஒரு கடைக்கு அழைத்து சென்றார். கடை மிகவும் சிறிதாக இருந்தது. இந்த கடையில் என்ன பொருட்கள் இருந்து விடப்போகிறது என நினைக்க மாடிக்கு அழைத்து சென்றார்கள். அங்கே நிற்கவே இடம் இல்லாமல் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. எந்த பொருள் கேட்டாலும் அங்கே வேலை செய்தவர் ஓடோடி எடுத்து காண்பித்தது ஆச்சர்யமாக இருந்தது. இல்லாத பொருளை கூட இல்லை என சொல்லாமல் இரண்டு நாட்கள் கழித்து வாங்கி கொள்ளுங்கள் என கணக்கு போட்டபோது ஓரிரு மணி நேரங்களில் லட்சம் ரூபாய்க்கான வியாபாரம்! சில்லறை வியாபார கடைகள் முதலாளிகளிடம் பேசினால் தான் கடைகளின் நிலவரம் புரியும் என நினைக்க கடைகளுக்கு சர்வ சாதாரணமாக வந்து போய் கொண்டிருந்தார்கள் மக்கள். 

அடுத்தொரு கடை. அங்கே ஹோமத்திற்கு தேவையான கட்டைகள், குங்குமம் போன்ற பொருட்கள். அந்த கடையும் சிறிதாகத்தான் இருந்தது. நாங்கள் அந்த கடையை சென்றடைந்தபோது இரவு பத்து மணி இருக்கும் என்றே நினைக்கிறேன். கடையை மூடும் நேரம். லிஸ்ட் கொடுங்க, இரண்டு நாள் கழிச்சி வாங்கிகோங்க என்றார். அவரது மேசையில் கணினி இல்லை, கால்குலேட்டர் இல்லை. ஒவ்வொன்றாக சொல்ல விலை போட்டு கொண்டே வருகிறார். இது கிடைக்கும், இது பக்கத்து கடையில்  வாங்கிகொள்ளுங்கள் என வேகமாக சொல்லிக்கொண்டே செல்கிறார். அடுத்து விறு விறுவென மொத்த கணக்கையும் போட்டு காட்டியபோது எனக்கு சரிபார்க்க மனமே வரவில்லை. சரி முன் பணம் கொஞ்சம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம். 

துணிகள் இனிமேல் வாங்கமுடியாது, நல்லி சில்க்ஸ் நாளை வாருங்கள் என ஐயர் இடம் சொல்லி அனுப்ப இரவு சாப்பாடு மெக்டோனல்ட்ஸ் சென்று நாங்கள் சாப்பிட்டோம். நான் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. அவனுக்கு தமிழ் தெரியாதோ என நான் நினைக்க அங்கே வேலை பார்க்கும் மற்றொரு பையனிடம் தமிழில் பேசினான். சரி என நான் மீண்டும் தமிழில் கேட்க அவனோ ஆங்கிலத்தில் மட்டுமே என்னிடம் பதில் சொன்னான். தமிழில் சொல்லுங்க என நான் சொன்னது அவனது காதில் விழவே இல்லை. மொழி தொலைந்து போய் விடும் அநாகரிகம்! நகரத்தில் மட்டுமே இப்படி, அதனால் அச்சப்பட தேவையில்லை என்றே டிரைவர் நண்பர் சொன்னார். 

பன்னிரண்டு மணிக்கு ஹோட்டல் அடைந்தபோது அன்றைய தின அலைச்சல் எல்லாம் தொலைந்திட மீண்டும் பெய்த மழைத் தூறலில் சிறிது நேரம் நடந்தோம். காலையில் எழுந்தபோது எட்டு மணி மேல் ஆகி இருந்தது. கிளம்பி தயாராக பத்து மணி ஆகி இருந்தது. இனி சாப்பாடு கிடையாது என நினைத்து ஹோட்டலில் இருக்கும் உணவகம் செல்ல பத்தரை மணி வரை உணவகம் திறந்து இருக்கும் என்றார்கள். கொஞ்சம் நிம்மதி. இட்லி, பொங்கல் வடை என நமது உணவு. பேசாமல் இந்த உணவுக்காகவே இந்தியாவில் வாழ்ந்துவிட்டு போகலாம் என்றே தோணியது. 

திடீரென எனது மனைவி, அதோ ஒரு நடிகை என்றார் (வீட்டில் சன் டிவி, டிவிடி படம் நாங்கள் பார்ப்பது உண்டு). நாங்கள் அமர்ந்து இருந்த நாற்காலியில் இருந்து மூன்று நாற்காலி தள்ளி தனது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார் நடிகை ஜெனிலியா. அவரைப் பார்க்க வேண்டும் என எவரும் ஓடவில்லை. அங்கே பலரும் சாதாரணமாகவே இருந்தார்கள், நாங்கள் உட்பட. அங்கே மிகவும் சாதாரணமாக அவராலும்  இருக்க முடிந்தது. இந்தியாவில் சினிமாவிற்கு என ஒரு தனி இடம், சினிமா கலைஞர்களுக்கு என தனி மரியாதை இருந்தாலும் அங்கே எதுவும் தென்படவில்லை. 

ஹோட்டலில் இருந்து சென்னை வரவே மதியம் ஆகிப்போனது.  மீண்டும் வேறு சில கடைகள் சென்றோம். நல்லியில் சாமிக்கு தேவையான உடைகள் வாங்கினோம். புது நல்லி, பழைய நல்லி என இருப்பது அன்றுதான் தெரிந்து கொண்டேன். சென்னையில் இருந்த சகோதரர் வீடு சென்றோம். அங்கிருந்து மற்றொரு உறவினர் வீடு சென்றோம். மேலும் சில உறவினர்கள் வீடு இருந்தாலும் செல்ல இயலவில்லை. உறவினர் வீடு சென்றபோது இரவு பத்து மணி. தைக்க கொடுக்கப்பட்ட துணி வாங்கிட அன்று முடியாமல் போனது. நாளை எப்படியாவது வாங்கித்தான் ஆக வேண்டும். சென்னையில் இருந்த போக்குவரத்து நெரிசல், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல ஆகும் நேரம் எல்லாம் கணக்கில் வைத்து ஹோட்டலில் இருந்து நாளை மறுநாள் அப்படியே அங்கிருந்து நகரத்திற்குள் வராமல் கிராமம் சென்று விடலாம் என நினைத்தோம். 

அடுத்த நாள் வழக்கம்போல காலை உணவு. அன்று போக்குவரத்து போலீசார்... இந்தியா என்றுமே இந்தியாதான். 

(தொடரும்) 

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

இந்தியா என்றுமே இந்தியாதான்.

முத்தாய்ப்பான வரிகள் சிந்திக்கவைத்தன ...

Easy (EZ) Editorial Calendar said...

அனைத்து வரிகளும் அருமை.....அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது...

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Radhakrishnan said...

நன்றி சகோதரி.

நன்றி மலர்.