Saturday 21 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 8

8. காதல் ஒரு கொடை

யசோதை செல்லும் முன்னர் நாச்சியார் யார் எனப் பார்க்கச் சென்றார். சுந்தரவேலனைப் பார்த்த கணம் அவருக்கு அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. நாச்சியாரை அங்கே சற்றும் எதிர்பார்க்காத சுந்தரவேலன் உடனடியாக சுதாரித்துக் கொண்டு நிலைமையை சாதாரண நிலைக்கு கொண்டு வர முயற்சிஸ் செய்தான்.

''அம்மா, எப்போ வந்தீங்க''

''வந்து கொஞ்ச நேரம்தான் ஆகுதுப்பா, உள்ளே வா''

''யசோதை இருக்காளா?''

சுந்தரவேலன் கேட்டுக் கொண்டு இருக்கும்போதே யசோதை அங்கு வந்து நின்றாள். முகம் சற்று வியர்த்து இருந்தது. இந்த உலகில் மனிதர்கள் தாங்கள் இயல்பாகச் செய்யும் விசயங்களைக் கூட இந்தச் சமூகத்தின் சொற்களுக்கு அச்சம் கொண்டு தாங்கள் தவறு இழைப்பது போல எண்ணிக் கொள்கின்றனர்.

எப்போது ஒன்றை நாம் பிறரிடம் இருந்து மறைக்க முயற்சி செய்கிறோமோ அப்போது நாம் தவறு செய்வது போலவே உணர்கிறோம். நமது விருப்பங்கள் பல இப்படிப்பட்ட ஒரு மறைப்பு தன்மை கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே நாம் செய்யும் இயல்பான விசயங்கள் நமக்கு அச்ச உணர்வை கொண்டு வந்து சேர்க்கின்றன.

வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது எனும் சொல் வழக்கு நாம் ஒன்றை அச்சத்தோடு அணுகும் போது அது காமம் ஒத்த நிகழ்வு போன்றே இருக்கிறது. பெரும்பாலும் காமம் குறித்த நிகழ்வுகளை நாம் மறைத்தே செய்ய முயல்கிறோம். காமுறுதல் என்பது இயல்பான நிகழ்வு. இதை ஆண்டாள் வெட்ட வெளிச்சமாகவே சொல்லி இருப்பாள். அப்படி சொன்னவள் மீதான சமூக கண்ணோட்டம் பல்வேறு நிலைகளை கொண்டு இருக்கிறது, அதனை பக்தி இலக்கியம் என்றும் காதல் பக்தி என பிரித்துக் கொள்கிறோம்.

எப்போது ஒரு சமூக அச்சம் தொற்றிக் கொள்ளுமோ அப்போது நமது வயிற்றுக்குச் செல்லும் இரத்தம் குறைந்து அந்த இரத்தம் திசுக்களுக்குச் சென்று ஒருவித படபடப்பை உண்டாக்கி பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடவென அடிப்பது போன்று அடித்துக் கொள்ளும். இப்படி திசுக்களுக்குச் செல்லும் இரத்தம் திசுக்களுக்கு நிறைய ஆக்சிஜன் தேவைப்படும் என இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கி அதற்கென சுரப்பிகள் அட்ரீனலின் எனப்படும் சுரப்பியை சுரக்கின்றன. இப்படியான பட்டாம்பூச்சி வயிற்றில் பறந்து கொள்வது என்பது ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நிகழ்வது இல்லை.

''வா வேலா'' சொற்கள் சற்று குழறியபடியே வந்து விழுந்தன. தனது ஆசைகளை எப்போதும் நிறைவேற்றித் தரும் நாச்சியார் அவளுக்குள் சிறிது தைரியத்தைத் தந்து கொண்டு இருந்தாள்.

சுந்தரவேலன் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.

''அத்தை, நானும் வேலனும் காதலிக்கிறோம். அப்பா அம்மா என்ன சொல்வாங்கனு தெரியலை, வேலனும் பயப்படுறான்''

நாச்சியார் என்ன ஏது எனக் கேட்கும் முன்னர் விசயத்தை அவருக்குச் சொல்லிவிட வேண்டும் எனும் ஆர்வம் யசோதைக்கு இருந்தது, பயம் வெளித்தெரியக்கூடாது என எண்ணி படபடவென சொல்லி முடித்தாள்.

நாச்சியார் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

''நல்ல விசயம்தானே யசோ. நான் பெருமாள் மேல வைச்சிருக்கிற காதல் போல உன்னோடது ஒரு மானுடக் காதல். காதலிக்கிறது ஒரு கொடை. அன்பை பரிமாறுதல் போல பேரழகான விசயம் எதுவும் இல்லை யசோ. அதோட மாணிக்கவாசகர் ஒன்னும் இதுக்கு மறுப்பு சொல்லமாட்டாரே. என் அண்ணன், அண்ணிகிட்ட நான் பேசிக்கிறேன் அவங்க எதுக்கு மறுப்பு சொல்லப்போறாங்க. எதுக்கு தப்பு பண்றது போல நினைக்கிற''

''அதில்லைங்க அத்தை, ஊருல மத்தவங்களும் ஏத்துக்கிறனுமே, அதை நினைச்சி வீட்டுல மறுப்பு சொல்வாங்களோனு பயமா இருக்கு''

''பயப்படாதே யசோ, உன்னோட விருப்பத்தை நான் நிறைவேத்துறேன்''

இந்த உலகில் சாய்ந்து கொள்ள ஒரு தோள், நம்பிக்கை தளர்கின்ற போதெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் ஒரு உறவு என இதெல்லாம் அமைந்து விடுவது என்பது பெரும் வரம்.

சுந்தரவேலன் நாச்சியாரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினான். நம்மை புரிந்து கொள்ளும் நபர் நமக்கு எல்லாமும் ஆவது என்பதும் வரமே.

''நான் வந்த விசயமே, இந்த வாரம் புதன்கிழமை சாயந்திரம் அங்கங்கள் வளர்ச்சி குறித்த ஒரு நிகழ்வு பத்தி சொல்லி இருந்தேன் நீ எதுவும் முடிவு சொல்லாமயே இருந்த, அதுக்கு நீ வரியானு கேட்டுட்டு போக வந்தேன்''

சுந்தரவேலன் சொன்னதும் கட்டாயம் வரேன் என்றாள் யசோதை. நாச்சியார் ஆவலுடன் நானும் வரலாமா எனக் கேட்டு வைத்தார். மூவரும் அந்த நிகழ்வுக்குச் செல்வது குறித்து முடிவானது. பட்டாம்பூச்சி குறித்து நாச்சியார் சுந்தரவேலனுக்கும் சொல்லி வைத்தார்.

நமக்கு வியப்பு தரும் விசயங்களை இந்த உலகோடு பகிர்ந்து கொள்ளும் போது நமக்குள் ஒருவித மகிழ்ச்சி உண்டாகிறது. அதோடு வியப்பு தரும் விசயங்களை கேட்பதற்கென்றே சிலர் நமக்கு வாய்ப்பது எல்லாம் பேரின்பம்.

''நான் தங்கி இருக்க வீட்டுல உள்ளபொண்ணு வண்ணத்துப் பூச்சிக நிறைய வளர்க்கிறா''

நாச்சியாரின் உலகம் பட்டாம்பூச்சிகளால் வண்ணமயமாக நிறைக்கப்பட்டு கொண்டு இருந்தது.

(தொடரும்) 

Friday 20 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 7

7. இடப்பெயர்ச்சி

உயிரினங்கள் பொதுவாக கால சூழலுக்கு ஏற்ப இடம் பெயர்கின்றன. இந்த இடத்திற்குச் சென்றால் தான் உயிர் பிழைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ஒரு உயிரினத்திற்கு எப்படி முன் அறிவு உண்டானது என்பதை எவரும் முழுவதுமாக கண்டுபிடித்தது இல்லை. பறவைகள் இந்த இடம் பெயர்ச்சியில் முன்மாதிரியாக இருக்கின்றன. வியப்பான விசயம் என்னவெனில் இந்த பட்டாம்பூச்சிகளில் சில இடம் பெயரவும் செய்கின்றன.

வெப்ப சூழல் விரும்பும் பட்டாம்பூச்சிகள் குளிர்காலம் தொடங்குகிறது என அறிந்த மறுகணம் வெப்ப சூழல் நோக்கி பயணிக்கின்றன.  காலசூழல் மாறியதும் பறவைகள் மீண்டும் தாங்கள் பறந்து வந்த இடத்துக்கே திரும்பிச் செல்லும் அளவுக்கு வாழ்வு காலமும் நினைவுத்திறனும் கொண்டு இருக்கின்றன. ஆனால் பட்டாம்பூச்சிகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பிப் போனதும் மீண்டும் அதே இடத்திற்கு அவை திரும்ப முடிவது இல்லை, ஆனால் அதனுடைய சந்ததிகள் அதே கால சூழலுக்கு தனது முன்னோர் கிளம்பி வந்த இடத்திற்கே சென்று விடுகின்றன. அதன் பின் அதே சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களைப் பொருத்தவரை திரவியம் தேடுவதற்கென இடப்பெயர்ச்சி அல்லது புலம் பெயர்தல் எனும் நிலை இருந்தது. அதன்பிறகு மனிதர்களில் இனம், மொழி, நிறம், மதம் போன்ற வேற்றுமை உணர்வுகள் தலைதூக்கிய பிறகு தங்களது வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்தார்கள். பெரும்பாலும் திரவியம் தேடிய பிறகு மீண்டும் கூடு வந்து அடையும் பறவைகள் போல திரும்பவே செய்தார்கள். அதில் பலர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அங்கே தமது குடும்பம், சந்ததி என இருக்கவும் செய்தார்கள்.

யசோதை இனி தனது சந்ததி எல்லாம் பெருமாள்பட்டி என்ற ஊரை மறக்க நிறைய வாய்ப்பு உண்டு. வசுதேவனின் சித்தப்பா ஸ்ரீரங்கம் சென்று வாழ்ந்து கொண்டு இருப்பதை போன்று இதுவும் நடக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

''நம்ம ஊரில் இருந்து பறந்து வந்த வண்ணத்துப் பூச்சியா அத்தை''

''தெரியலை யசோ, என்னை பின் தொடர்ந்து வந்து இருக்கும்னு நினைக்கிறப்போ உடம்பு எல்லாம் சிலிர்க்குது''

''என் மேல உட்காந்துட்டு போச்சே அத்தை, ஒருவேளை நானும் பிள்ளைத்தாச்சி ஆயிருவேனா''

யசோதை சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள்.

''ஜோக் சொல்றியா யசோ, அப்படி எல்லாம் ஆகமாட்ட, அப்படி ஆனா நானும் ஒரு பட்டாம்பூச்சியை என் மேல உட்காரச் சொல்லிட்டு போறேன்'' நாச்சியார் சிரித்தபடி சொன்னார்.

''உங்களுக்கு 'வண்ணத்துப்பூச்சி விளைவு' தெரியுமா அத்தை''

''எது, பட்டாம்பூச்சி சிறகுதனை ஏதோ ஒரு ஊருல அசைச்சா இன்னொரு ஊருல பெரும் புயல் வரும்னு சொன்னதா''

''ஆமாங்க அத்தை, ஒரு சிறு விசயம் அல்லது அதிர்வு பெரும் பிரளயத்தையே உண்டு பண்ணும் அளவுக்கு அதற்கு சக்தி உண்டு, ஒரு சிறு பொறி மொத்த காட்டையும் எரிக்கும் தன்மை கொண்டது மாதிரி, இப்போ நம்ம மரபணுவில் ஒரு சிறு அதிர்வு உண்டாக்கி நம்ம உடம்புல அத்தனை மாற்றத்தையும் உண்டாக்கிரலாம்''

''யசோ நீ மரபணு மாற்றம் பத்தி எல்லாம் சொல்ற, இந்த உலக பரிணாமம் எல்லாம் அத்தனை எளிதா சொல்லிர முடியாது, செய்துரவும் முடியாதுனு நினைக்கிறேன்''

''மறுபிறப்பு தத்துவம் எல்லாம் நீங்க கொண்ட நம்பிக்கைதானே அத்தை, மரபணு கடத்தல் மறுபிறப்பு தத்துவம் போல தான், ஆனால் மறுபிறப்பு இல்லை''

யசோதையின் அறிவுதனை எப்போதுமே வியப்போடு பார்ப்பதுதான் நாச்சியாரின் வழக்கம். நாச்சியாருக்கு யசோதை ஒரு ஆண்டாள் போலவோ அல்லது மீரா போலவோ பெருமாள் மீது பயபக்தியோடு இருக்க வேண்டும் எனும் பேராசை இருந்தது உண்டு. மனிதர்களின் மூளை பொதுவாக தாங்கள் எவரிடம் எதைக் கற்றுக் கொள்கிறோமோ அதை அப்படியே மென்மேலும் கற்றுத் தெளிவு பெறும். அப்படித்தான் யசோதை தன்னிடம் பயின்றதால் வருவாள் என நாச்சியார் எண்ணிக்கொண்டு இருந்தார். ஆனால் யசோதை முற்றிலும் வேறுபட்ட மனநிலையுடன் வளரத் தொடங்கினாள்.

நாச்சியார் சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாகச் சொல்லி இந்த பட்டாம்பூச்சி குறித்து யோசித்தபடி இருந்தார். யசோதை சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

சுந்தரவேலன் பள்ளியில் ஒருமுறை சொன்னது அவளது மனதில் தற்போது நிழல் ஆடியது.

'உன்னைப் பார்க்கறப்ப எல்லாம் வண்ணத்துப்பூச்சி வயித்துக்குள்ள பறக்கிற மாதிரி இருக்கு யசோதை, உனக்கு அப்படி ஏதேனும் இருக்கா'

'எனக்கு பசிக்காக கடமுடானு வயிறு புரட்டும் சத்தம் மட்டுமே மெல்லிசா கேட்குது'

'உனக்கு எப்பவுமே விளையாட்டுதான் யசோதை'

அதன் பிறகுதான் பட்டாம்பூச்சி வயிற்றுக்குள் பறப்பது குறித்து யோசிக்கத் தொடங்கி வயிறுக்கும் இந்த பட்டாம்பூச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து அறிந்தாள்.

அழகாக இருக்கிறதே என்பதற்காக எதையும் உங்களுடையது என ஆக்கி இறுக்கிக்கொள்ள முயற்சி செய்யாதீர்கள். பட்டாம்பூச்சியினை பிடித்து கைகளில் இறுக்கமாக மூடி வைத்துக் கொண்டால் அது எப்படி விரைவில் உயிரற்றுப் போகுமோ அப்படித்தான் எதையும் இறுக்கமாகப் பிடித்து வைக்க அவை அதன் நிலையிலேயே இல்லாமல் போகும்.

''யசோதை''

சுந்தரவேலன் மூடப்பட்டு இருந்த ஒரு கதவினைத் தட்டினான்.

யசோதைக்கு இப்போது பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கத் தொடங்கி இருந்தன.

(தொடரும்)

Thursday 19 September 2019

பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 6

6. யசோதையின் மனம்

நாச்சியார் சிம்மக்கல்லில் ஒரு வீட்டில் வாடகை எடுத்து தங்கி மதுரை மருத்தவமனையில் பயிற்சியாளர் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த யசோதையை முதலில் பார்க்கச் சென்றார். நாச்சியாரின் வருகை யசோதைக்கு பெரும் மகிழ்வைத் தந்து இருந்தது. தனக்கு எது எல்லாம் தேவையோ அதை எல்லாம் நாச்சியார் மூலம் நிறைவேற்றிக் கொள்வது என்பது யசோதைக்கு சிறு வயது முதல் மிகவும் எளிதாக இருந்தது.

யசோதைக்குப் பெயர் வைத்தது கூட நாச்சியார் தான். யசோதை தங்கி இருந்த மாடி வீடு எல்லா வசதிகளும் ஒரு சிறு தனிக்குடும்பத்திற்கு ஏற்றது போலவே கட்டப்பட்டு இருந்தது. மாடிப்படி வீட்டின் உள்ளே வந்து செல்லும்படியாக இருந்ததால் ஒருவகை பாதுகாப்பாகவும் இருந்தது.

''அத்தை, உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை, குடிக்க மோர் கொண்டு வரேன்'' யசோதையின் ஆச்சரியம் கலந்த வரவேற்பு புரிந்துக் கொள்ளக் கூடியதுதான். நாச்சியாருக்கு மோர் கொண்டு வந்து தந்தாள். 

''சொல்லிட்டு வரனும்னுதான் இருந்தேன், இன்னைக்கு எப்படியும் நீ வீட்டுல இருப்பனு தைரியத்துல கிளம்பி வந்துட்டேன், அப்படியே நீ இல்லைன்னாலும் கூடலழகர் பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு வந்து இருப்பேன், நீ ஊருக்கு எல்லாம் வரவே வேணாம்னு முடிவு பண்ணிட்ட போல அதுவும் வந்தா ஒரு நாளு கூட வீட்டுல முழுசா தங்கினது இல்லை, நான் ஒரு வாரம் இங்க தங்கலாம்னு இருக்கேன் உனக்குச் சம்மதம் தான'' என்றார்.

''தாராளமா தங்குங்க அத்தை, என்ன விசயமா வந்தீங்க''

''உனக்குத்தான் தெரியுமே, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் தொடங்கனும்னு ரொம்ப நாளா ஒரு ஆசை. எல்லாம் பாப்பநாயக்கன்பட்டியில் போய் படிச்சி பழகிட்டோம். இனி வரக்கூடிய பிள்ளைக நம்ம ஊர்ல அஞ்சு வரைக்காவதும் படிக்கட்டுமேனு தோனிகிட்டே இருக்கு, நம்ம ஊரை விட்டு ஆளுகளும் வெளியேறிட்டே இருக்காங்க, பெருமாள் கோவில் மட்டும் தான் நம்ம ஊருக்கு அடையாளம், ஒரு பள்ளிக்கூடம் இருந்தா நல்லதுதானே''

''அதான் முயற்சி பண்ணி முடியலைனு சொல்லிட்டே இருந்தீங்களே''

''முடியலைனு சொல்லலை, முடியமாட்டேங்குது, விருதுநகர் பிரயோசனப்படாதுனு மதுரையில முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு எனக்குத் தெரிஞ்சவங்களை பார்த்துப் பேசனும்''

''சரிங்க அத்தை, இன்னைக்கு மதியம் என்னோட சமையல்தான், சாப்பிட்டு கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு சாயங்காலமா போகலாம், நானும் வரேன்''

''ம்ம், பட்டாம்பூச்சி பத்தி ஏதாச்சும் தெரியுமா யசோ''

''வண்ணத்துப்பூச்சியா''

''ம்ம்''

''எதுக்கு அத்தை''

பூங்கோதையின் வீட்டில் நடந்த பட்டாம்பூச்சி விசயத்தைச் சொல்லி முடித்தார் நாச்சியார். ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த யசோதை மன மகிழ்ந்தாள்.

''கோதை அக்காவுக்கு குழந்தைனு நினைச்சாலே உள்ளுக்குள்ள வண்ணத்துப்பூச்சி பறக்குது அத்தை, அதான் பள்ளிக்கூட விசயத்தை மறுபடியும் கையில் எடுத்துட்டீங்களா''

நாச்சியார் சிரித்தார். நாம் ஏதேனும் பேசிக்கொண்டு இருக்கும்போது நமது மனம் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்திக் கொள்ளும். அது நல்லதுக்கு எனில் மகிழ்வும், நல்லதுக்கு இல்லை எனில் சோகமும் தங்கிவிடும்.

''பட்டாம்பூச்சி பத்தி என்ன நினைக்கிறனு சொல்லு''

''அது ஒரு அரிய வகை பூச்சி இனம் அத்தை, உங்களுக்குத் தெரியாத ஒன்னா''

''ஒரு முட்டை உருமாற்றம் அடைஞ்சி பட்டாம்பூச்சியா மாறுறது பிரமிப்பா இல்ல''

''இந்த அண்டவெளி, நாம நம்மோட மூளை எல்லாமே பிரமிப்புதானே அத்தை''

''இல்லை யசோ, இந்த பட்டாம்பூச்சி எனக்கு இந்த எட்டு மாசமா எதையோ சொல்ல வர மாதிரி இருக்கு''

''அத்தை, எப்பவும் போல பெருமாளேனு இருங்க, அப்படி எல்லாம் பட்டாம்பூச்சி ஒன்னும் சொல்ல வராது, நீங்களே உங்களுக்கு உங்க பெருமாள் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டாதான் உண்டு''

அப்போது அங்கே அறைக்குள் ஒரு பட்டாம்பூச்சி வட்டமடித்து வந்தது. யசோதை பட்டாம்பூச்சியை வியப்புடன் நோக்கினாள். யசோதையின் வலது புற தோளில் பதினைந்து வினாடிகள் மட்டுமே அமர்ந்துவிட்டு சட்டென வெளியில் பறந்தது.

''அத்தை''

நாச்சியார் பட்டாம்பூச்சி சென்ற வழியை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தார்.

(தொடரும்)