Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.


Sunday 29 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) 2 நிறைவு


20 இரவு

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு இப்படி சோகமாகத்தான் எழுத வேண்டுமா என அவரிடம் கேட்டு வைக்க அதற்கு அவர் இது என் பாணி, நீ வேண்டுமெனில் சந்தோசமாக எழுதி வைத்துக் கொள் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, சிந்தனை உண்டு.

இரவு குறித்த கதையில் பெண்ணின் கைப்பை உவமை அழகு. விட்டத்து பல்லி பேய்க்கதைகள் கரப்பான் பூச்சி என இரவின் பயத்தை பாடல்களே துணை

21. ஸ்வீட்டான்

மிகவும் அழகிய கவிதை. ஒற்றுப்பிரச்சினை எனக்கு உண்டு. எங்கு க்  வரும் த்  என. தேவதைத்தனங்கள் தேவதை தனங்கள். கைகள் மெத்தை. மிகவும் அழகாக சிவந்த முதுகின் காரணம் மருதாணி கரங்கள்.

22 பிரார்த்தனை

நல்ல புத்தி கொடு என சின்னஞ்சிறு குழந்தையே சாமியிடம் வேண்டும். ஒரு வெள்ளேந்தியாக சாமியிடம் பிரார்த்தனை மிகவும் சிறப்பு. என்னவெல்லாம் எண்ணம் வரும் என நேர்த்தியான சிந்தனை

23 மீ காதல்

காதலித்தபடி இருக்கிறோம் இயல்பாக இருப்பதே சுகம். எதையும் கேட்காமல் தரப்படுவது காதல். பெண்ணியம். ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என தாண்டி அன்பில் நிலைத்து நிற்கும்

24 இதழதிகாரம்

முத்தம் தாடி. சிலுங்கும் கொலுசு. பெண் முத்தங்கள்.

25 ஊடலுணவு

கோபங்கள் தொலையுமிடம் அன்பு

26 தேவதைகள்

சிறுமியின் தேவதை உரையாடல் கவிதைத்தனமானதுதான். கட்டுபாடற்ற வாழ்வே சிறப்பு

27 காத்திருப்பு

நொடிகளுக்கு யுகம். நிறைவடைந்த நினைவுகள். இதை ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

28 யாத்திரை.

தமிழ் மின்னிதழில் வெளியான கவிதைகளில் இதுவும் ஒன்று.

29 அறியாமை

அம்மா! அம்மா இல்லாத வாழ்வு குறித்த ஓர் பார்வை இது. என்னவெல்லாம் அம்மா தன்  குழந்தையைப் பற்றி அறிந்து இருப்பார் என சுகம் சொல்லி சோகம் ஆகும் கவிதை.

30 படையல்

சற்று வித்தியாசமான சிந்தனை

31 எதிர்காலம்

உறவுகள் சலிப்பூட்டுகின்றன. நீ இருக்கிறாய் என்பதே போதுமானது எதிர்காலம் சிறப்புற

32 ஜன்னல்

ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள்  இல்லை எனலாம். அத்தனை வசீகரமானவை. ஜன்னல் ஒரு காட்சி பெட்டகம். கம்பிகள் கொண்ட ஜன்னல். முத்தாய்ப்பான முடிவு

33 விலைமகள்

தமிழ் மின்னிதழில் வெளியான மற்றொரு கவிதை.

34 குறுங்கவிதைகள்.

உழைப்பு எனத்  தொடங்கி ஒவ்வொரு கவிதையும் வெகு சிறப்பு

வலிக்குதா வலிக்குதா என்று குழந்தை தன்  அம்மாவைப் போல் அல்லாமல் பொம்மையிடம் கேட்பதாக முடிகிறது கவிதைத்தொகுப்பு.

எளிய வார்த்தைகள் கொண்டு அழகிய மாலைகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. சின்ன சின்ன நிகழ்வுகளே ஒரு காவியம் ஆகின்றன. பேசத் தெரியாதவனுக்கு பேச்சு சொல்லிக் கொடுப்பதைப் போல கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லித் தருகின்றன.

கவிதைகள் அந்த படைப்பாளியின் எண்ணத்தை வெளிக்கொண்டு வருவனவாக இருந்தாலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலும் ஒருவர் சிந்திக்கக் இயலும். பெரும்பாலும் ஒரு படைப்பாளி சுதந்திரமாக சிந்திக்கும் போது  தன்னை பாதிக்கும் விசயங்களையே கவிதைக்கான கருப்பொருளாக வைப்பார். இந்த கவிதைகளில் அன்பு, அம்மா, காதல் என உறவுகள் பற்றியே வலம்  வருகிறது.

சிந்தனைகள் செழித்தோங்கி பல அழகிய படைப்புகள் தந்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

(நிறைவு 


Sunday 22 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) -1

அம்மா - சௌம்யா அவர்களின் கவிதைத்தொகுப்பு மின்னூல் வடிவில். பல புத்தகங்கள் வெளிவர வேண்டுமென வாழ்த்துகிறோம்.

'சமூகத்தலைவி' மீனம்மாகயலின் அட்டைவடிவமைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிஞ்சு கால்களை தாயின் கரங்கள் அள்ளி குவிப்பது போல அமைந்து இருக்கிறது. அம்மா என்ற எழுத்தில் வைக்கப்பட்ட அழகிய சிவந்த நிற பொட்டு. மின்னூல் எவ்வித வண்ணம் இல்லாமல் கருப்பு வெள்ளை வடிவில் அமைந்து இருக்கிறது. எளிமைதான்.

அறிமுகமே இப்படித்தான் தொடங்குகிறது. 'அரட்டைகேர்ள்' என்ற பெயரில் 2011 முதல் ட்விட்டரில் இயங்கி வரும் சௌம்யா கோவையைச் சேர்ந்தவர் என. அவர் எழுதிய பல கவிதைகளின் தொகுப்பாக இந்த மின்னூல் இலவசமாக இங்கு  பெற்றுக் கொள்ளலாம். மின்னூல் விற்பனைக்கு கூட பண்ணலாம் என இப்போதுதான் தெரியும். இந்த கவிதைத் தொகுப்பை எப்படி வாசிப்பது என சென்றால் மொபைல் போனில் இதற்குரிய அப்ளிகேசன்ஸ் தரவிறக்கம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டு இருந்தது. உடனே தரவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கியாகிவிட்டது. வலைதளம்  பேஸ்புக், ட்விட்டர் என தமிழில் இவரது இயக்கம் சொல்லப்பட்டு இருக்கிறது. ட்விட்டர், வலைதளம் பார்த்தது உண்டு. பேஸ்புக் பார்த்தது இல்லை.

1. கிடா

இந்த கவிதையை ஏற்கனவே வாசித்த அனுபவம் உண்டு. எனது கிராமத்தின் நிகழ்வை கண்ணுக்கு முன்னர் கொண்டு வந்து நிறுத்திய ஒரு அற்புதமான கவிதை. கிடா எப்படி எல்லாம் அன்புடன் ஓடியாடி திரிந்தது என கவிதையாக நிற்கும். 'சாமி ஆடு, கைய கிய்ய வைச்சீங்க' என அப்படியே அந்த நிகழ்வு. அதுவும் அந்த கடைசி வரியில் கவிதைக்கான உயிர்நாடி.

2.  அம்மா

வேண்டாம். ஒரு தாயின் மரணம் பற்றி எழுதவே வேண்டாம். ஜில்லுனுதானே இருக்கு என்ற வரி படித்தபோது ஒரு இனம் புரியாத நெருடல். தாயை இழந்த பின்னர் எப்படி எல்லாம் நாம் தாயிடம் சொல்லிக்கொள்வோம் என்பது போன்ற உணர்வினை அழகாக தென்பட்டு இருக்கிறது

3. அப்பா

அப்பா அடித்ததேயில்லை. ஆமாம். பலருக்கும் பரிச்சயமான வரி. ஒரு தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான வரிகளில் தெளிவாகத் தெரிகிறார் அப்பா. 'நீ குழந்தை தானேடா' இப்போது கூட இதே வார்த்தைகளை என் தந்தை என்னிடம் சொன்னது உண்டு.

4. கணவன்

முத்தம் ரகசியம் தாம்பத்யம் வளவிக்கீறல் என சொல்லி சோகமான ஒரு கவிதைதான் என்பது கடைசி வரியில் தென்பட்டது.

என்ன இது எல்லா கவிதைகளுமே ஒரு வலியின் தடமாக இருக்கிறதே என்று யோசித்தேன். அடுத்து வந்தது பருவம்

5. பருவம்

குழந்தமை, பால்யம் பதின்மம் என சொல்லி ஒரு சிறுமியின் பருவம் எய்த நிலையை சொல்லிச் சென்றது கவிதை. முதுமை எல்லாம் சொல்லாமல் பருவம் என்றால் பருவமாக இருந்தது.

6. மோகமுள்

இது ஒரு நாவலின் தலைப்பு. உவமைகளைத் தாங்கி வந்திருக்கும் கவிதை. அடர்ந்த வனம். கருத்த தீவு. அதரம், இதழ் நெற்றி, கன்னம் கழுத்து என வார்த்தைகளில் நிறையவே மோகம் தாண்டவமாடுகிறது. மீசை குறித்த பார்வை சிறப்பு.

7. ஞானம்

புத்தனின் ஞானம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரு அழகிய கவிதை. பற்று வைப்பதில் விலகி இருப்பதே துறவறம். பற்று கொண்ட ஒன்றை விட்டு விலகிடுவதெ ஞானம் யசோதரா.

8. மரப்பாச்சி

மரப்பாச்சி பொம்மைகள். தனியாய் மாலையணிந்து வலி சொல்லும் கவிதை இது. சின்ன சின்ன வரிகளில் அதிரவைக்கும் கவித்துவம் தென்படுகிறது.

9. வான்சிறப்பு

வள்ளுவரின் வரிகள் கொண்ட தலைப்பு. மழை என்றால் என்ன எப்படியெனினும் மழை பிரமிப்பு. மழை நினைவுபடுத்திச் செல்லும் கவித்துவம்.

10. உறக்கம்

உறக்கம் மட்டும் இல்லையெனில் இவ்வுயிரின் இயக்கம் ஏதும் இல்லை. உறக்கம் ஒரு வரம். கவித்துவ வரிகளால் சிறப்பிக்கப்பட்ட உறக்கம்.

11. உதிரா நினைவு

அண்ணனின் பிறந்த தினம் குறித்த கவிதை என வாசிக்கத் தொடங்கினால் அம்மாவின் அன்பைச் சொல்லும் அழகிய கவிதை.

12. அவள் பெயர் அட்சயா

பொம்மை குறித்த பொருள் பொதிந்த உயிர் நிறைந்த கவிதை. இதுபோன்ற கவிதைகள் எல்லாம் மிகவும் எளிமையாக இருப்பது மட்டுமல்ல நம்மோடு எளிதாக இணைந்துவிடும் கவிதை. நமது நினைவுகளை கிளறிவிடும் கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

13 மிச்சங்கள்

மீண்டும் ஒரு பழைய நினைவுகளை அசைபோடும் கவிதை. பாத்திரங்களில் பெயர் பதிப்பார்கள். மனித பாத்திரங்களுக்கும் பெயர் வைப்பார்கள்.

14 வலி

பெயர் குறித்த வலி நிறைந்த கவிதை.

15 வன்முறை

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை சொல்லும் கவிதை. முதலில் வாசிக்கும்போது என்னவோ என நினைக்க கடைசியில் ஒரு உணர்வின் மீதான வன்முறையை அழகாக விவரிக்கும் கவிதை

16 மகள்

இந்த கவிதையைப் படித்தவுடன் ஒரு இனம் புரியாத ஏக்கம் வந்து போனது. எதற்கு மகள் வேண்டும் எனும் எனது எழுத்து கூட ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடுதான். நல்ல வரிகளுடன் தொடக்கம். பெண் குழந்தை என்றால் மிகவும் இஷ்டம் போல. அருமையான வெளிப்பாடு.

17. முத்தம்

காதல் முத்தம் அட்டகாசம்.

18 கண்ணீர்

அழுகையில் வடிந்து போனதென் அத்தனை ஆதங்கங்களும், அவமானங்களும், கோபங்களும் இயலாமையும். மனவலி நிவாரணி.

19. காதலிக்கப்படுதல்

காதலிக்கப்படுதல் கடைநிலை மனிதருக்கும் சந்தோசம் தரும். காதலிக்கபடுவதால் என்னவெல்லாம் நடக்கும் எனவும் புரியலாம்.

19. விஷூ

அம்மா முகத்தைத்தான் வெறிக்கிறது பார்வை.

ஒரு நிகழ்வை விவரிக்கும் கவிதையில் சில வரிகளே அந்த நிகழ்வின் சிறப்பம்சம்.

கவிதாயினி சௌம்யாவின் அம்மா அற்புதமாகவே இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் நூலுக்கு நான் எனது எண்ணத்தை  எழுதுவது இதுவே இரண்டாவது தடவை என்றே கருதுகிறேன்.

(தொடரும்)