Thursday 14 November 2013

இன்னுமொரு கிரகத்தில் மனிதர்கள்

எத்தனை கதைகள் வந்து இருக்கும், எப்படி எல்லாம் மனிதர்கள் கற்பனையில் வேற்று கிரகவாசிகள் வந்து போய் இருப்பார்கள். உயிரினங்கள் பூமியில் இருந்து தோன்றி இருக்காது எனவும்,வேறு ஒரு கிரகத்தில் இருந்தே வந்து இருக்க கூடும் என்றே ஒரு கோட்பாடு உண்டு.

இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் கிட்டத்தட்ட பத்து பில்லியன்கள் வருடங்கள் முன்னர் தோன்றி இருக்க கூடும் என்பது ஒரு தோராயனமான கணிப்பு, இது கிட்டத்தட்ட நமது சூரியக் குடும்பம் தோன்றியதற்கு முன்னர் உள்ள கணிப்பு. இன்றுவரை பலரும் வேறு கிரக உயிர்கள் சாத்தியம் என்றே நம்புகிறார்கள். ஆனால் இதுவரை அப்படி கிரக உயிர்கள் இருப்பதாக எந்த ஒரு அடையாளமும், குறிப்புகளும் கிடைக்கவில்லை.

தேவலோகம், இந்திரலோகம் என்றெல்லாம் எதை வைத்து கற்பனை செய்தார்கள் என புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை அப்படி இருந்து அவை எல்லாம் பிற்காலத்தில் நம்மை விட்டு வெகு தூரம் சென்று விட்டதா என எந்தவொரு அடையாளம் இல்லை. வைகுண்டம் எல்லாம் எங்கே இருக்கும் என்றே மிகவும் யோசனையாக இருக்கிறது. இவை எல்லாம் கற்பனை என்றே புறந்தள்ளிவிட முடியாது. புராணங்கள் கணக்குப்படி அன்றைய கால கட்ட மனிதர்களின் வயது காலம் பன்மடங்கு இருந்தது என்றே குறிக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் பூமிக்கு என்று மட்டுமே ஒரு சிறப்பு தன்மை இல்லை, இதைப்போல பல கிரகங்கள் பிரபஞ்சத்தில் உண்டு என சொல்வது புராணங்கள் அல்ல, மாபெரும் அறிவியலாளர்கள். வியாழனின் கிரகத்தில் ஈரோப்பா நிலா, சனி கிரகத்தின் என்செலாடஸ் எனும் நிலா போன்ற இடங்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நவம்பர் நான்காம் தேதி 40 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் இருப்பதாகவும், அதில் 11 பில்லியன் பூமி போன்ற கிரகங்கள் சூரியன் போன்ற நட்சத்திரங்களை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்கள் முன்னர் வேற்றுகிரகவாசிகள் எவரேனும் தொடர்பில் உள்ளனரா என அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு தரும் அளவிற்கு மனிதர்கள் சிலர் வேற்று கிரக வாசிகள் இருப்பதாகவே நம்புகிறார்கள்.

இந்த பூமி எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் இருந்தவர்களுக்கு அமெரிக்காவில் இருந்தவர்களை தெரியாது. ஆனால் மனிதர்கள் இங்கும் அங்கும் இருக்கவே செய்தார்கள். இவர்களுக்கான தகவல் தொடர்பு, வழித் தொடர்பு என எதுவும் இல்லை. ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனித சமூகம் உலகமெலாம் பரவியது என இருப்பினும் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட முப்பது நாற்பது வருடங்கள் முன்னர் வெளிநாடு என்றாலே பெரிய விசயமாக கருதப்பட்டது. ஆனால் இன்று மூலை முடுக்கெல்லாம் எல்லா நாடுகளும் தெரிகிறது

இதே போலவே வேறு கிரகத்தில் நம்மை போலவே மனிதர்கள் இருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளும் தொலைவில் நாம் இல்லை. ஏனெனில் பன்னிரண்டு ஒளிவருடங்கள் தொலைவில் ஒரு பூமி போன்ற கிரகம் உள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது ஒரு வினாடிக்கு 300000000 மீட்டர்  என கணக்கில் சொல்லப்படுகிறது. இதை ஒருநாள், ஒருவாரம், ஒரு மாதம் ஒரு வருடம் என கணக்கில் கொண்டு பார்த்தால் மிக அதிக தொலைவு என்பது புலப்படும். மனித வாழ்நாள் குறைந்து போனதால்.பல விசயங்கள் சாத்தியம் அற்றதுதான்.

ஒரு உயிரினம் தோன்ற மிக முக்கியமாக கார்பன், ஹைட்ரஜன்,ஆக்சிஜன், நைட்ரஜன், என்பதோடு பாஸ்பரஸ்,கந்தகம் தேவைப்படுகிறது. முக்கியமான வேதி வினைகள் நடைபெற தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை எல்லாம் இருந்துவிட்டால் உயிரினம் சாத்தியம் என்றே கருதப்படுகிறது.

நமது சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்து இருக்கலாம் என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கை.இந்த அறிவியல் எப்படி வேண்டுமெனில் தேடட்டும்,

இன்னுமொரு கிரகத்தில் இருக்கும் மனிதர்கள் நம்மை தொடர்பு கொள்ள, நாம் அவர்களை தொடர்பு கொள்ள இன்னுமொரு யுகம் ஆகலாம்.

 

Monday 4 November 2013

தமிழ் எதிரி

ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் அங்கே எழுதப்பட்டு இருக்கும் எழுத்துகள் என்னால் வாசிக்க இயலும் ஆனால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. அந்த எழுத்துக்கள் ஆங்கில உருவில் தான் இருந்தன. அப்போது எனக்குள் தோன்றியது எல்லாம் தமிழை இப்படி செய்து விடலாமே என்றுதான். தமிழ் அழிகிறது என சொல்பவர்களுக்கு தமிழை காப்பாற்ற இதுதான் வழி என்றே எனக்குள் பலமுறை தோன்றியது உண்டு. ஆனால் தமிழ் மீது கொண்ட பாசம் தமிழ் எழுத்துக்கள் தொலைந்துவிடக் கூடாது எனபதில் தான் இருந்தது.

இந்த இணையத்தில் நான் முதன் முதலில் எழுத வந்தபோது ஆங்கில எழுத்துருவில் தான் எழுதினேன். ஆனால் அதற்கு நான் பட்ட அவஸ்தைகள் எனக்கு மட்டுமே தெரியும். எப்படியாவது தமிழ் எழுதும் விசைப்பலகையை கண்டு கொள்ள வேண்டும் எனும் உத்வேகம் தமிழ் எழுதும் எழுத்துருவினை கொண்டு வந்து என்னிடத்தில் சேர்த்தது.

என்னதான் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதினாலும் தமிழை தமிழ் எழுத்துகளால் எழுதும் ஒரு ஜீவன் அதில் இருப்பது இல்லை. என்னதான் ஒரு பெண்ணின் மடி என்றாலும் தாய் மடி போல் அமைவது இல்லை. டைப்ரைட்டர் காலத்தில் இருந்தது போல இப்போது விசைப்பலகை எல்லாம் தமிழில் வந்து கொண்டிருப்பதால் தமிழ் எழுத்துருவை கற்று கொள்வதில் தான் அந்த மொழியின் சிறப்பு இருக்கிறது.

எழுத்துருவு மாற்று கருத்து என்னை போன்ற வெளிநாட்டில் வாழ்ந்து தமிழை தனது சந்ததிக்கு தராமல் தொலைத்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் சரியாகவே பொருந்தும். இலங்கை வாழ் தமிழர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்றாலும் தமிழுக்கு முன்னுரிமை தந்து தனது சந்ததிகளுக்கு தமிழை போதிக்கிறார்கள். அது கூட காலபோக்கில் குறைந்துவிடும்.

ஒரு தமிழ் நாவலை வெளியிட்டபோது தமிழர்கள் பலர் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முடியுமா என்றே கேட்டார்கள். எனக்கோ தமிழ் மொழியை தமிழ் மொழியில் படித்தால் மட்டுமே தமிழ் மொழிக்கு சிறப்பு என்றே தோணியது. நீங்கள் தமிழ் மொழி கற்று கொள்ளுங்கள் என்றே சொல்லி முடித்துவிட்டேன்.

எந்த ஒரு மொழியும் தன்னகத்தே மாற்றத்தை ஏற்றுக்கொண்டு நடமாடும் நிலை வந்தால் ஒழிய அந்த மொழி அழிந்து போகும். சமஸ்கிருதம் ஒரு உதாரணம். மேலும் ஒரு மொழியின் பயன்பாடு ஒரு இனத்துடன் இருப்பது கூட அந்த மொழியின் வளர்ச்சியை தடை செய்யும்.

இதற்காகவே தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்கள் எல்லாம் பிற மொழிக்கு மொழி பெயர்த்து இருந்திருக்க கூடாது என்றே கருதுவேன். வேண்டுமெனில் வந்து தமிழ் படி எனும் ஒரு உறுதியான நிலை எடுத்து கொளல் வேண்டும்.

தமிழில் ஆங்கிலம் கலந்துவிட்டது. ஒருவர் அருமையாக சொன்னார், அதிர்ஷ்டத்திற்கு லக் என்பது தமிழ் மொழி என! என்றோ எழுதியது இன்னும் நினைவில் இருக்கிறது. தமிழ் எண் சொல் என கேட்ட நண்பனிடம் 1 2 3 எழுதி தந்துவிட  இதுவா தமிழ் எண் என கேட்டு அன்றைய எனது முட்டாள்தனம் எனக்கு புரிந்து போனது.

இனி எப்படி தமிழ் வாழும் என்பது தமிழகத்தில் வாழ்பவர்களை பொருத்தே அமையும். பிற நாடுகளுக்கு செல்பவர்கள் தமிழ் சங்கம் என வைத்து தமிழ் வளர்த்தாலும் இனி வரும் காலங்களில் தமிழ் பிற நாடுகளில் தொலையும். எப்படி பண்டிகைகள் இந்திய பண்டிகைகள் என அடையாளம் கொண்டவனோ அதைப்போல தமிழ் உலக மொழி எனும் அந்தஸ்தை அடையப் போவதில்லை. ஆங்கிலத்தை இனி வெளியேற்றுவது கடினமான செயலே.

தமிழ் அழிந்து போகும் எனில் அதற்கு காரணம் நாம் தான். அடுத்த சந்ததிகளுக்கு முறையாக தமிழை கொண்டு சேர்க்காமல் போகும் என்னை போன்ற பெற்றோர்களே தமிழுக்கு மாபெரும் அநீதி இழைக்கிறார்கள். 

Monday 14 October 2013

பெண்ணியமும் கன்னியமும்

''என்னடா பண்ணிட்டு இருக்க, கடைக்கு போக சொன்னேன் மறந்துட்டியா?'' அம்மாவின் எச்சரிக்கை வார்த்தையில் புத்தகத்தில் இருந்து மீண்டேன்.

''பரீட்சை வருதுமா, அதான் படிச்சிட்டு இருக்கேன். நீ வாங்கிட்டு வாம்மா'' நான் சொன்னதை அம்மா கேட்கவில்லை

''கடைக்கு போய்ட்டு வந்து படி'' அம்மா சற்று குரலை உயர்த்தி சொன்னார்.

''தங்கச்சிய போக சொல்லுமா, அவ சும்மாதான இருக்கா'' நான் சொன்னதும் அம்மாவுக்கு கோவம் வந்துவிட்டது.

''இப்போதான் பெரிய மனுஷி ஆகி இருக்கா, அவளை எல்லாம் கடைக்கு அனுப்ப முடியாது, நீ போகப் போறியா இல்லையா'' அம்மாவின் அந்த வார்த்தை எனக்கு இடைஞ்சல் தந்தது. புத்தகத்தை தரையில் எறிந்துவிட்டு கிளம்பினேன்.

''என்ன வாங்கனும், சொல்லும்மா'' எனக்கும் கோவம் வந்து இருந்தது. அம்மா வாங்கி வர சொன்ன பொருட்கள் ஐந்துக்கு குறைவாகவே இருந்தது. பணத்தை வாங்கிக் கொண்டு விறுவிறுவென கடையை அடைந்தேன்.

''மாப்பிள்ளை, உன் தங்கச்சிய  எனக்கு கட்டி கொடுப்பியாளே'' என்றார் எனக்கு தெரிந்த வயது அதிகமான மாமா.

''கிழட்டு கிறுக்கனுக்கு புத்திய பாரு'' நான் கோவத்துடன் சொல்லி வைத்தேன்.

''என்ன மட்டு மருவாதி இல்லாம பேசற'' அவர் கையை ஓங்கி அடிக்க வந்தார். நானும் நேராக நின்றேன்.

''பொட்ட புள்ளை எல்லாம் படிச்சி என்ன செய்ய போகுது, பேசாம எனக்கு கட்டி கொடு மாப்பிள்ளை'' என்றார் ஓங்கிய கையுடன் கிண்டலாக.

''ஏன் உன் புள்ளைய படிக்க வைக்காம ஒரு தாத்தாவுக்கு கட்டி தர வேண்டிதான. உனக்கு என் தங்கச்சி இளக்காரமோ மூமா, பேசுறான் கிழட்டு கிறுக்கன்'' என கோவத்துடன் நான் சொல்லும்போதே என்னை அவர் சரமாரியாக அடித்தார். அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரின் தலையை பதம் பார்த்தேன்.

அதற்குள் நாட்டாமை பண்ண சிலர் வந்துவிட்டார்கள். பெண்களை பற்றி கேவலமாக பேசுவதே இந்த கிழட்டு கிறுக்கனுக்கு பொழப்பு என சிலர் அவரை வசைபாடினார்கள். என்னை ஒதுங்கி போயிருக்கலாம்ல என்றார்கள். நானும் கடையில் பொருட்கள் வாங்கியபடி வீடு வந்து சேர்ந்தேன்.

''இவ்வளவு நேரமாடா, எவளோட பேசிட்டு இருந்த'' அம்மாவின் அந்த கூரிய வார்த்தைகள் என்னை மேலும் கோவம் அடைய செய்தன.

''சரசு வந்து இருந்தா, அவளோடதான் பேசிட்டு இருந்தேன். இப்போ என்ன அதுக்கு'' நான் சரசு எனும் பெண்ணை காதலிப்பது குறித்து அம்மாவுக்கு நிறைய கோபம்.

''உனக்கு சூடு வைச்சாதான் சரிப்படும்'' அம்மா சொல்லிவிட்டு போனார்.

''எதுக்கு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க, போய் விளையாடு, இல்லைனா படி'' நான் தங்கையிடம் சொல்லி வைத்தேன்.

''வெளில விளையாட போனா அம்மா திட்டும்'' பாவமாக சொன்னாள் தங்கை.

அடுத்த நாள் நான் கல்லூரி பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது வீட்டில் கடையில் நடந்ததை கூறி, எதற்கு இப்படி பெண்களை அடிமைபடுத்துகிறார்கள், பெண்களை தவறாகவே பேசுகிறார்கள் என கேட்டேன்.

''உன் அம்மாகிட்ட கேட்காம என்கிட்டே கேட்கிறே. பெண்களுக்கு பெண்களே எதிரி அப்படின்னு பெண்களே சொல்லிகிருவாங்க'' என்றார் பேராசிரியர்.

''இல்லை சார், பெண்கள் முழு வீச்சில் தங்களை அடிமை தனத்தில் இருந்து வெளியே கொண்டு வரனும். எல்லா துறைகளிலும் அவங்க சாதிக்கனும். பாரதி கண்ட புதுமைப் பெண் போல தீரமிக்கவர்களாக வரனும்'' நான் வீராவேசமாக பேசினேன்.

''பேசி முடிச்சிட்டியா?, கல்யாணம் பண்ணி பாரு. அப்புறம் யாரு அடிமைன்னு தெரியும்'' பேராசிரியரின் சொற்றொடர் எனக்கு புரியவில்லை. அவரிடம் சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கல்லூரி தோழி எழிலரசியிடம் இந்த விசயத்தை பேசிவிட்டு வீடு வந்தேன்.

''எங்கடா போய்ட்டு வர, அந்த சரசு பைத்தியம் பிடிச்சி திரியற''' அம்மாவின் அர்த்தமற்ற கோபம் எனக்குள் கோபத்தை வரவழைத்தது.

''புரபொசர் பாக்கத்தான் போனேன்மா'' என சொல்லிவிட்டு கோபத்தை ஒரு அறையில் உட்கார்ந்து அழுகையாய் வெளிபடுத்தி கொண்டு இருந்தேன்.

''அழாதண்ணா, அம்மா எப்பவும் இப்படிதான். என்னை பூட்டி பூட்டி வைக்கிற மாதிரி உன்னை பூட்டி வைக்க முடியல, அதான் இப்படி பேசுது'' தங்கையின் ஆறுதல் வார்த்தை இதமாகவே இருந்தது.

சில மாதங்கள் பின்னர் சரசுவை பார்க்க சென்றேன். அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிவிட்டார்கள் என்றே சொன்னார்கள்.

''எப்படி உன்னால இப்படி அடங்கி செல்ல முடிகிறது'' என்றே அவளிடம் கேட்டு வைத்தேன். படங்களில் வரும் வசனம் போல் அம்மாவும் அப்பாவும் செத்து போவதாக சொன்னதாக சொன்னாள்.  நான் இனிமேல் கன்னிப் பையன் தான். எனக்கு என்று பேச எவனும் கொடி பிடிக்க மாட்டான். அவன் ஆம்பளைடா என்றே எனது வலியை துடைத்துவிட்டு போய் விடும் இந்த சமூகம். சோகத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.

''சோனைமுத்து தூக்கில தொங்கிட்டான்டா' என சிலர் அலறிக் கொண்டு ஓடினார்கள். நானும் அங்கே ஓடினேன். அவருக்கு கல்யாணமாகி ஆறுமாதம் ஆகிறது. மனைவி இவரை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போனதாக பேசிக் கொண்டார்கள். அதே சோகத்தில் நான் வீடு வந்து சேர்ந்தேன்.

''எத்தனை தடவை சொல்றது, அந்த சரசு பின்னால போகாதேனு'' அம்மா சத்தம் போட்டு முடிக்கும் முன்னர் நான் சொன்னேன்.

''அவளுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்கமா'' எனது வார்த்தை அவருக்கு அதிக சந்தோசம் தந்து இருக்கும்.

''இப்போதான்டா நிம்மதி'' அம்மா சொல்லிவிட்டு போனார்கள். அப்போது எனது கல்லூரி தோழி எழிலரசி வந்தாள்.

''இந்தா பெண்ணியம் புத்தகம், படி'' என அவள் தந்துவிட்டு போகும் முன்னர்

''எழில், நீயே எடுத்துட்டு போ. ஒரு பெண் தான் என்ன நினைக்கிறாளோ அதை எல்லாம் எவ்வித தடை இன்றி செய்ய வேண்டும், அப்படி செய்ய தடை விதிக்கப்பட்டால் அந்த பெண் அடிமைப்படுத்தபட்டவள். அந்த அடிமைத்தனத்தில் இருந்து அகல அந்த பெண் போராட வேண்டும், அதுதானே பெண்ணியம்'' நான் பேசியதை கேட்டு அவளது முகம் மாறியது.

''பெண்ணியம் அன்பின் வெளிப்பாடு. பெண்களை பற்றிய கண்ணோட்டம் சமூக அளவில் மிகவும் கீழாகவே இருக்கு. இந்த ஆண்கள் எல்லாம் ஒவ்வொரு பெண்ணின் பிண்டங்கள். பெண்களை அடக்கி ஒடுக்கி, கேலி பேசி, கிண்டல் செஞ்சி மூலையில உட்கார வைக்கிற காலம் இருந்தது என்னவோ உண்மை. அப்போ எல்லாம் பெண்ணை பாதுகாக்க வேணும் அப்படிங்கிற அக்கறை மட்டுமே இருந்தது. அந்த அக்கறை அடிமைத்தனத்தில் போய் முடியும்னு யாரும் எதிர்பார்க்கலை. பாலூட்டிகள் எல்லாத்துலயும் பெண் இனம் குழந்தை வளர்ப்புதான் முக்கியம்னு தோணிச்சி. தேனீக்கள் ஆணியம் பத்தி பேசறது இல்லை. அவங்க அவங்க முடிஞ்ச வேலை செஞ்சி வாழரதுல இருக்கு. பெண் சுதந்திரம் அப்படிங்கிறது பெண்ணியம் அப்படிங்கிறது பிறரால் ஒரு பெண்ணின் மனம், உடல் உபாதைக்கு உட்படாமல் வாழனும். பெண்களுக்கு என உரிமைகள்'' அவள் சொல்லி முடித்தாள்.

சில மாதங்கள் பின்னர் ஒரு நாள் கல்லூரியில் பேராசிரியரின் தலையில் பெரிய காயம் இருந்தது.

''என்ன சார்?'' என்றேன்.

''வீட்டில் பெண்ணியம்'' என்றே சிரித்துவிட்டு போனார்.

 நான் இன்னமும் கன்னிப்பையன் தான். சரசு இந்நேரம் உண்டாகி இருப்பாள்.