Thursday 22 August 2013

சூரியனின் வெகு அருகில் கோள்கள்

சாப்பிட்டுட்டு அப்புறமா போய் தூங்கு என அம்மா சொன்னதையும் கேட்காமல் தூங்க சென்றுவிட்டேன். சொன்னா கேட்கமாட்டியா என அம்மா வந்து மீண்டும் எழுப்பி நான் சாப்பிட்ட பின்னரே என்னை உறங்க அனுப்பினார்.

நல்ல அசதியாக இருந்தது. மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். எனக்கு எரிச்சல் வந்தது. பார்த்தால் சாமியார் வந்து அருகில் நின்று கொண்டிருந்தார்.

''பக்தா, உடல் அலுப்போ''

''என்ன சாமி, இந்த நேரத்தில் வந்து எழுப்புகிறீர்கள்''

''என்னை கண்டால் உனக்கு வெறுப்பு வருமே, வரவில்லையா''

''இல்லை சாமி, அப்படி எல்லாம் வெறுப்பு இல்லை, நீங்கள் வராமல் இருப்பதே எனக்கு சங்கடமாக இருக்கிறது''

''பக்தா, நீ பூமி பற்றி அறிந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது''

''சாமி, சொல்லுங்கள்''

''ஒரு சூரிய குடும்பம் உருவாக பல பில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. உருவான சூரிய குடும்பங்களில் இருக்கும் ஆற்றல் மீண்டும் மீண்டும் சூரிய குடும்பங்களை உருவாக்கி கொண்டே இருக்கின்றன. அப்படி உருவாகும் சூரிய குடும்பங்களில் உள்ள கோள்கள் சூரியனுக்கு வெகு அருகாமையில் இருப்பது இல்லை. கிட்ட இருந்தால் முட்டப் பகை என்பது போல இந்த கோள்கள் சற்று தள்ளியே அமைந்து விடுவதுண்டு. இதன் காரணமாக சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

சூரியனை அனைத்து கோள்களும் சுற்றி வரும் என்பது நீ அறிந்தது தான். அதுவும் அருகில் இருக்கும் கோள்கள் மிகவும் வேகமாக சுற்றும் தன்மை கொண்டது. இதன் காரணமாக அவை சூரியனின் இழுப்புகள் சென்று விடுவது இல்லை.

ஆனால் சில கோள்கள் மிக மிக அருகாமையில் அதுவும் நான்கு மணி நேரத்தில் சூரியனை சுற்றிவிடும் அளவுக்கு உள்ள கோள்கள் சில இருக்கத்தான் செய்கின்றன. இத்தனை அருகாமையில் சென்றால் சூரியன் தனது வெப்ப அலைகள் மூலம் கோள்களை பிரித்து மேய்ந்துவிடும். அந்த கோள்கள் அழிந்தே போய்விடும். ஆனால் அப்படி அழிவுக்கு உட்படாத இந்த கோள்கள் இருப்பது ஒரு அதிசயத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

சூரியனை சுற்ற நமது பூமி எடுத்துக் கொள்வதோ 365 நாட்கள்.  சூரியனுக்கு அருகாமையில் உள்ள புதன் எடுத்து கொள்ளும் நாட்கள் 88. ஆனால் நான்கு மணி நேரம் என்பது நினைத்து கூட பார்க்க இயலா ஒன்று.

இப்படி இருக்கும் கோள்கள் இரும்பு தாதுக்களால் மட்டுமே ஆனதாக கூட இருக்கும் என யூகம் சொல்கிறார்கள். இவர்களின் கணக்கீட்டு படி பூமி செல்லும் வேகம் வினாடிக்கு 30கிலோமீட்டர், இந்த கோள்கள் ஒரு வினாடிக்கு 250கிலோமீட்டர் வேகம். அப்படி பார்த்தால் எட்டு மடங்கு குறைந்து, குறைந்தது நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து  நாட்கள் ஆகும். ஆனால் நான்கே மணி நேரத்தில் சுற்றுவது என்பது சுற்றும் அளவை கூட குறித்ததாக இருக்கலாம். பக்தா...

''என்ன சொன்னீங்க சாமி''

''சூரியனை வெகு வேகமாக சுற்ற கூடிய கோள்கள் உண்டு''

''அதனால என்ன சாமி''

''பக்தா, அப்படிப்பட்ட கோள்களில் உயிரினங்கள் வாழ சாத்தியம் இல்லை''

''அதனால என்ன சாமி''

''பக்தா, ஒரு அறிவுக்கு எட்ட வேண்டிய விசயம்''

''தண்ணீர் இல்லாத கோள்களில் கூட உயிரினம் வாழலாம், அந்த சூரியனில் கூட உயிரினம் வாழலாம் சாமி''

''பக்தா, உளறலை நிறுத்து''

''அப்படி அப்படியே உயிரினங்களை இந்த பூமியில் படைத்த இறைவனால் இது எல்லாம் சாத்தியமே''

''அவசியம் இல்லை பக்தா''

''அப்படி எனில், இது போன்று வெகு அருகாமையில் இருக்கும் கோள்கள் பற்றிய அறிவு கூட எனக்கு அவசியம் இல்லை சாமி''

''இந்த உலகில் எண்ணற்ற விசயங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன, அதை அறிந்து கொள்வதில் என்ன சிரமம்''

''தெரிந்து என்ன செய்ய சாமி''

''ஊருக்கெல்லாம் சொல், இந்த பிரபஞ்சம் மிக அதிசயம் என சொல்''

''சொல்லி''

''உன்னிடம் பேசியது வீணோ''

''இதேதானே சாமி, ஊருக்கு சொன்னாலும் நடக்கும்''

திடீரென சாமியார் மறைந்துவிட்டார். என் மீது கோபமோ என நினைத்துப் பார்கையில் காலை சூரியன் கன்னத்தை தழுவிக் கொண்டிருந்தான். மீண்டும் அதே வேலை, அதே வாழ்க்கை. அம்மாவோ, அப்பவோ எழுப்பும் முன்னர் நானே எழுந்து ஓடினேன். 

Wednesday 21 August 2013

கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?

அமரக் காதல், ஜீவித காதல், தெய்வ காதல் இன்னும் எத்தனயோ பெயர் வைத்துக் கொள்ளலாம். காதல் அத்தனை தித்திப்பானது. வேப்பாங்காயை கடித்துவிட்டு இனிக்கிறதே என டுபாக்கூர் விட சொல்லும் காதல். காதல் எதையும் தாங்கும் வல்லமை கொண்டது. காதல்தனை காதலிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். எத்தனையோ புராணங்களில் காதல் புராணம் மிகவும் அற்புதமானது.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் மகன் அம்பிகாபதி மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் மகள் அமராவதியின் காதல் மிகவும் பிரசித்தி பெற்றது. முதலாம் குலோத்துங்க சோழனின் மனதுக்கு பிடித்தவராகிறார் கம்பன். கம்பனின் காவியத் திறமைக்கு மதிப்பளித்து தனது அரசவை கவிஞர் ஆக்குகிறார் சோழ மன்னர். கம்பனின் வளர்ச்சி கண்டு பொறுப்பற்ற தன்மையில் பொறாமை கொள்கிறான் ஒட்டகூத்தன்.

கம்பனின் மகன் அம்பிகாபதியும், சோழ மன்னரின் மகள் அமரவாதியும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததே சோழ மன்னர் தான். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கினங்க அம்பிகாபதி மிகவும் காவிய திறமை வாய்ந்தவனாகவே வளர்கிறான். அம்பிகாபதியும், அமராவதியும் காதல் கொண்ட விசயம் கம்பன் அறிந்தபோது தள்ளாடுகிறான், அல்லாடுகிறான்.

மன்னரின் காதிற்கு விசயம் போனால் பேராபத்து விளையும் என்பதை அறிந்து கொண்ட கம்பன் அம்பிகாபதியிடம் காதலை கைவிடுமாறு கோரிக்கை விடுகிறான். மேலே எழுதிய காதல் வகைகளில் ஒன்றை குறிக்க மறந்து விட்டேன், அது பொருந்தா காதல். அமராவதிதான், அம்பிகாபதியை காதல் புரிந்து இருக்க வேண்டும், காதல் புரிய தூண்டி இருக்க வேண்டும். அரச பரம்பரையில் வந்தவர்கள் அரச பரம்பரையில் தான் திருமணம் முடிப்பார்கள் என்பது எழுதப்படாத நியதி.

இந்த காதல் விசயம் ஒட்டக்கூத்தனுக்கு தெரிய இதுதான் தக்க தருணம் என குலசேகர இளவரசனுடன் இணைந்து கொண்டு பல திட்டங்கள் தீட்டுகிறான், ஒவ்வொன்றிலும் தப்பிக்கிறான் அம்பிகாபதி.

காதல் என வந்துவிட்டால் அனைவரும் கவிஞர்களாகி விடுவார்கள். ஆனால் கவிஞன் இங்கே காதலனாகி நிற்கிறான். காதல் ரசம் சொட்ட சொட்ட அமராவதியை சிலாகித்து கவிதைகள் பொழிகிறான். ஆண்டாள் கூட தான் காதல் ரசம் சொட்ட சொட்ட ரங்கநாதன் மீது கவிதைகள்  எழுதினாள். இந்த கவிதைகளே அம்பிகாபதிக்கு எதிரிகள் ஆகின.

சோழ மன்னருக்கு விசயம்  ஒட்டகூத்தன் மூலம் சென்றடைகிறது. கம்பர் மீதான மரியாதையில், கம்பரின் வேண்டுகோளுகிணங்க அம்பிகாபதியை நாடு கடத்த உத்தரவு இடுகிறார் மன்னர். புஷ்பக தீவுக்கு செல்லும் வழியில் சென்ற கப்பல் உடைந்து அதில் கிடைத்த மரக்கட்டையின் மீதேறி செண்பக தீவு அடைகிறான் அம்பிகாபதி. உறையூரில் நடக்கும் விசயம் அவனது காத்து எட்டுகிறது. புகழேந்தி புலவரின் மகள் கண்ணம்மாவின் மூலம் அமரவாதியை சந்திக்க ஆயத்தம் செய்கிறான் அம்பிகாபதி. காதலின் வலி, அவனை அமராவதியை அழைத்து கொண்டு ஓடி செல்ல தூண்டுகிறது. அவ்வாறு திரும்பி வந்து அழைத்து செல்லும் தருவாயில் இருவரும் பிடிபடுகிறார்கள்.

இந்த முறையும் கம்பர் மீதான மரியாதையில், அமராவதி அடம்பிடித்ததில் இருந்து  அம்பிகாபதி கொல்லப்படுவதில் இருந்து மீட்கபடுகிறான். சோழ மன்னரோ கவிதைக்கு பெரும் மரியாதை தருபவர், அதன் காரணமாக அம்பிகாபதி நூறு பாடல்கள் புறம் பற்றி, அதாவது போர், அரசியல் குறித்து பாடினால் தனது பெண்ணை மணமுடிக்க சம்மதம் சொல்கிறார், அப்படி இல்லாத பட்சத்தில், கொல்லப்படுவாய் என அரசர் அரசாணை இடுகிறார். காதல் பற்றி ஒரு பாடலும் பாடக் கூடாது என்கிறார். கம்பர் அச்சம் கொள்கிறார். பெண்ணின் மீது காதல் இருக்குமிடத்து புறம் தெரிவது இல்லை. அம்பிகாபதியை மிகவும் எச்சரித்து அனுப்புகிறார். ஓட்டகூத்தனோ தனது திட்டம் தவிடு பொடியாகிவிட்டதே, தனக்கு நிகரான ஒரு புலவனின் மகன் இளவரசனா? என எப்படியாவது இந்த காதல் கரைசேர விடக் கூடாது என திட்டம் தீட்டுகிறான்.

அரச சபை கூடுகிறது. பாடல் பாட ஆரம்பிக்கிறான் அம்பிகாபதி. ஒன்று இரண்டு என தொன்னூற்றி ஒன்பது வந்தாகிவிட்டது. அனைவரும் அமைதியாய் இருக்க, வாழ்த்துபாவுடன் இணைத்து நூறு என எண்ணிக்கொண்டு காதலில் திளைத்த அமராவதி, அம்பிகாபதி முன் சென்று வெற்றி களிப்பில்  நிற்கிறாள். நூறாவது பாடலை அவள் அழகை பாடி முடிக்கிறான் அம்பிகாபதி. ஒட்டக்கூத்தன் எழுகிறான், நூறு பாடல்கள் சொன்னபடி பாடவில்லை என ஆதாரத்துடன் காட்டுகிறான். அரசர் இதை காரணம் காட்டி அம்பிகாபதியை கழுவில் ஏற்றுகிறான். அமராவதியும் உடன் இறக்கிறாள்.

கம்பர் மிகவும் சமயோசிதமாக நடந்து கொண்டும் தனது மகனின் காதலை கைகூட வைக்க முடியவில்லை. கம்பர் இந்த காதலை பொருந்தா காதல் என்றே எண்ணினார். இன்றைய காலகட்டத்தில் காதல் எதிர்ப்பு பெருகி இருக்க, அன்றைய கால கட்டம் இதைவிட சற்று மோசமாகவே இருந்து இருக்க கூடும். கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் முன்னர் அரங்கேறிய நிகழ்வு இது. அதுவும் அரசரின் மகள்.

போட்டிகள் வைத்தே மணம் முடித்து வைக்கும் பாங்கு அன்றைய தேதியில் இருந்து இருக்கிறது. அம்பிகாபதியின் காதல் ஒரு காவியமாகி போனது. இந்த நிகழ்வுகள் வைத்தே 'பெண் புத்தி பின் புத்தி' என சொல்லப்படுவது உண்டு. அதாவது செய்து முடித்த பின்னர் யோசிப்பது. இந்த அம்பிகாபதி குறித்து இரண்டு முறை தமிழ் சினிமா குறித்து வைத்துள்ளது. இரண்டுமே மாபெரும் வெற்றி படங்கள். ஒன்று தியாகராஜா பாகவதர் நடித்தது, மற்றொன்று சிவாஜி கணேசன் நடித்தது.

கம்பரின் நிலையில் இருந்து இந்த நிகழ்வை எல்லாம் அசை போடும்போது மனம் மிகவும் அதிகமாகவே வலிக்கிறது. கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி?


Tuesday 20 August 2013

ஜீரோ எழுத்து - 4 (ஒண்ணுமில்லை கோட்பாடு)

ஐசக் அசிமோவ் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவர் சொன்னது என்னவெனில் 'நான் இறந்து போய்விட்டால் சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமாட்டேன், மாறாக ஒரு ஒன்றுமில்லா தன்மையான வெறுமையே மிஞ்சி இருக்கும்'. ஆனால் அசிமோவ் எப்படி சொர்க்கம், நரகம் என்பது இல்லை என்று கருதினாரோ அதைப் போலவே ஒன்றுமில்லா தன்மையும் இல்லையென்றே எண்ணினார். அதற்கடுத்து தத்துவமேதை நோஜிக் என்பவரும் இதே கருத்தை கொண்டிருந்தார். அதாவது வாழும்போது மட்டுமே வாழ்க்கை, இறந்தபின்னர் எல்லாம் வெறுமையாகவே இருக்கும் என்பதுதான் அது.

இறந்தபின்னர் என்ன நடக்கும் என்பதை இதுவரை எவருமே அறிந்து சொன்னது இல்லை. இதன் காரணமாகவே பல அறிஞர்கள், தத்துவ மேதைகள் இறந்த பின்னர் சூன்யம் மட்டுமே நிலவுவதாக சொன்னார்கள். சிபயாமா எனும் ஜென் மேதை இந்த சூன்யத்தை ஒரு வட்டமாக வரைந்து காண்பித்தார். இதைத்தான் இந்து தத்துவமும் சொல்கிறது. இருப்பினும் 'ஒன்றுமே இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்றிட வாய்ப்பில்லை' என்பதுதான் இன்றைய அறிவியல் கோட்பாடு.

என்ன இதற்கு முன்னர் இருந்தது என்பது அழிக்கப்படும் பட்சத்தில், உண்மையிலேயே என்ன இருந்தது என எவரால் அறிய முடியும். ஒரு நட்சத்திரம் ஒரு ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி கருந்துளை என ஒன்றாய் முடிவது என்பது அறிவியல் பாடத்தில் படிக்க நன்றாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் உண்மையை அறிந்து கொள்ளும் அறிவு நம்மில் இல்லாதபட்சத்தில் 'ஒருவித வெறுமை' நிலவத்தான் செய்யும்.

ஆனால் அதை எல்லாம் உடைத்து அந்த உண்மையை சொல்ல வந்ததுதான் குவாண்டம் கொள்கை. கருந்துளையிலும் சரி, இவ்வுலகம் தோன்றியதாக சொல்லப்படும் பேரு வெடிப்பு கொள்கையிலும் சரி, கட்டுகடங்கா ஆற்றல் அடங்கி இருந்ததாக, இருப்பதாக இப்போது அறிவியல் சொல்லி முடிக்கிறது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்! கடவுள் என்பதன் தத்துவமும் அதையே சொல்கிறது.

நம்மில் இருக்கும் ஆத்மாவும், நமது வெளியில் இருக்கும் பிரம்மனும் ஒன்றே எனும் தத்துவமே குவாண்டம் கொள்கையின் அடிப்படை, அதை வைத்தே டி என் ஏ எல்லாம் கண்டுபிடிக்கப் பட்டதாக ஒரு பேச்சு உண்டு.

இப்போது சொல்லுங்கள், கந்தகம் நிறைந்த இடத்தை தேடி செல்வீர்களா?

(தொடரும்)