Sunday 18 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 18

காயத்திரியின் சோகமான முகம் கண்டு அம்மா பதட்டம் கொண்டார்கள். 

''என்ன காயத்ரி, ஒருமாதிரி இருக்க, அக்காவை நினைச்சி கவலைப்படறியா?''

''இல்லம்மா''

''அப்புறம் எதுக்கு உன் முகம் ஒருமாதிரி இருக்கு''

நான் இடைமறித்தேன். 

''அந்த சுபத்ரா, காயத்ரி அக்கா வாழ்க்கை என் கையில அப்படின்னு மிரட்டிட்டு போனா''

''என்ன சொல்ற நீ''

''ஆமா''

''அவளை இப்பவே ரெண்டுல ஒன்னு பாத்துட்டு வரேன்''

அப்பா அம்மாவை தடுத்தார். 

''என்ன காயத்ரி நீ, உடனே அவங்களை அடிக்க போக துடிக்கிற, பாவம் சின்ன பொண்ணு, அவளே வருத்தமா இருக்கா''

நான் மட்டுமே என் காயத்ரியை காயூ என அழைக்கிறேன். அப்பா, அம்மாவை காயத்ரி என்றே அழைக்கிறார். 

''பிறகு என்னாங்க, என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு''

வீட்டிற்கு வந்தபின்னும் அம்மா முனுமுனுத்து கொண்டே இருந்தார். காயத்ரி எதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தாள், அல்லது நடித்து கொண்டிருந்தாள். மிகவும் குறைவாகவே இரவு சாப்பிட்டாள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. நாளை விடுமுறை என்பதால் அவளை எங்காவது அழைத்து செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். 

காலையில் எழுந்து அனைவரும் தயாரானோம். வாசற்கதவு தட்டப்பட்டு திறக்கப்படுகையில் சுபத்ரா நின்று கொண்டிருந்தாள். அம்மாவுக்கு கோபம் ஜிவ்வென தலைக்கேறியது. 

''அடுத்த அடி எடுத்து வைச்ச காலை வெட்டிருவேன்''

அம்மாவின் அந்த ஆவேசம் சுபத்ராவை மட்டுமல்ல எங்களையும் நிலைகுலைய வைத்தது. 

''அத்தை...''

''யாரு அத்தை, யாருடீ அத்தை. அடுத்தவங்க வாழ்க்கையில விளையாடறவங்க எல்லாம் என்னை அத்தைனு கூப்பிட என்ன அதிகாரம் இருக்கு, ஒழுங்கா திரும்பி போ, இல்லை உதைபட்டே சாவ''

அம்மாவின் கோபம் கண்டு பல நாட்கள் ஆகிப் போனது. காயத்ரி கூட பயத்துடன் இருந்தாள். அப்பாதான் அம்மாவை சமாதானம் பண்ணினார். 

''உள்ளே வாம்மா சுபா''

''என்னங்க, இது மாதிரி அசிங்கங்களை இப்பவே துடைச்சிரனும், வளரவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது''

சுபத்ரா அங்கே மறுகணம் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டாள்.

''என்ன காயத்ரி நீ, வீட்டுக்கு வந்த பொண்ணை இப்படி கேவலபடுத்தி அனுப்பிட்ட''

அம்மா காயத்ரியை தனது பக்கத்தில் இழுத்து வைத்து கொண்டு 

''இதோ இந்த புள்ளையோட முகத்தை பாருங்க, இவங்க அம்மா செத்ததுல இருந்து என்னைக்கு இந்த புள்ளையால சிரிச்சி சந்தோசமா இருக்க முடிஞ்சது, இதுல இப்போ இந்த சனியன் வேற வந்து ஏழரைய கூட்ட நினைச்சா எப்படிங்க பாத்துட்டு சும்மா இருக்கிறது''

அம்மாவின் காயத்ரி மீதான பாசம் எனக்கு மிகவும் நெகிழ்வாக இருந்தது. அப்பாவும் சரி என பேசாமல் இருந்தார். நானும் காயத்ரியும் வெளியில் செல்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்பினோம். 

''காயூ எங்க போகலாம்?''

''கோவிலுக்கு''

''கோவிலுக்கு வேணாம், ஏதாவது பார்க்குக்கு போகலாம்''

''கோவிலுக்கு போய்ட்டு பார்க்குக்கு போகலாம்''

சரியென கோவிலுக்கே சென்றோம். அங்கே கோவிலில் காயத்ரியின் அக்காவும், ரங்கநாதனும் நின்று கொண்டிருந்தார்கள். 

''காயூ, நீயும் உங்க அக்காவும் பேசி வைச்சீங்களா?''

''இல்லை''

அவர்கள் இருவரையும் சந்தித்து சுபத்ரா விசயமும் சொன்னோம். ரங்கநாதன் மிகவும் கோபப்பட்டார். சுபத்ராவை தனது வீட்டுக்குள் விடாதவாறு பார்த்து கொள்வதாக சொன்னார். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு கிளம்பினோம். 

அங்கே இருந்து ஒரு மணி நேரத்தில் பார்க் அடைந்தோம். அங்கே எனக்கு பிடித்த ஆசிரியர் அவரது குடும்பத்துடன் அமர்ந்து இருந்தார். வாங்க என வரவேற்றார். நாங்கள் இருவரும் அவரது கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தோம் ஆனால் அவர் எங்களை கண்டதும் அழைத்துவிட்டார்.

''என்ன அதிசயமா இந்த பக்கம்''

''சும்மா வந்தோம் சார்''

அவரது குடும்பத்தை அறிமுகப்படுத்தினார். மனைவி, பத்து வயது நிரம்பிய பையன், பதினான்கு வயது நிரம்பிய பெண். அவர்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆசையாக இருந்தது. துறுதுறுவென பையனும், பெண்ணும் ஓடியாடி திரிந்தார்கள். 

''எங்களுக்கு இதுதான் பொழுதுபோக்கு இடம், மாசத்தில இரண்டுவாட்டி வந்துருவோம்''

''இப்பதான் சார், நாங்க முதல் முதலா வரோம்''

அவருடன் பேசிக் கொண்டிருந்த நேரம் அற்புதமான நேரம் என்றே சொல்லலாம். காயத்ரி மிகவும் லேசாக உணர்ந்தாள். ஆசிரியரின் மனைவி மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர்களது திருமணம் காதல் திருமணம் என்றும், எப்படியெல்லாம் நாடகம் ஆடி திருமணம் செய்தார்கள் என்பதை விவரித்தபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 

''சார், நம்ம காலேஜ்ல உங்களைதான் ரொம்ப பிடிக்கும்''

''பக்கத்தில காயத்ரி இருக்கா, அதைக்கூட கவனிக்காம இப்படி சொல்றியேப்பா''

''காயத்ரியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார்''

''என்னங்க உங்க சூடன்ட் உங்களை மாதிரியே அறுக்கிறார்''

''ஒரே வெட்டா வெட்டத்தான் செய்வார்'' 

காயத்ரியின் பதில் எனக்கு சௌகரியமாக இருந்தது. 

அரைமணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். 

''காயூ''

''என்ன முருகேசா''

''இந்த உலகம் இரண்டே இரண்டு வகை மனிதர்களால் ஆனது''

''சொல்லு''

''ஒன்று சந்தோசம் உடைய மனிதர்கள், மற்றொன்று துக்கம் உடைய மனிதர்கள்''

''மொத்தமா பிரிச்சி வைக்க முடியாதுல''

''ஆமா, இங்கிட்டும், அங்கிட்டும் ஆடிக்கிட்டே இருப்பாங்க''

''என்னை மாதிரி''

''இல்ல, என்னை மாதிரி''

''முருகேசா, இப்படி வெளில வந்து இருக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு''

''ம்ம்''

''வாரம் வாரம் இப்படி வந்துருவோம், ஷாப்பிங், லைப்ரரி எல்லாம் வேணாம்''

''ம்ம்''

''அம்மா என் மேல பிரியமா இருக்காங்கள''

''அம்மா எப்பவும் அன்புக்கு கட்டுபட்டவங்க''

''சுபத்ராவை போய் பார்ப்போமா''

நான் காயத்ரியின் முகத்தை மட்டுமே பார்த்தேன். 

(தொடரும்)






Saturday 17 August 2013

கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 2

அங்கே சில இடங்களில் விசாரித்துவிட்டு ஒருவரின் வீட்டை அடைந்தோம். வாசற்கதவை தட்டினோம். அவரது வீட்டின் வெளியில் ஒரு திண்ணை இருந்தது. உயரமான நல்ல நிறத்துடன் ஒருவர் கதவை திறந்து நின்று கொண்டிருந்தார். நெற்றியில் நாமம் இட்டு இருந்தார்.

''வணக்கம்''

''யார் நீங்க?''

''கர்நாடக இசை கத்துக்க வந்து இருக்கோம்''

''என்ன சாதி?''

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வீட்டின் வெளியிலே நின்று கொண்டிருந்தோம். உள்ளே கூட அழைக்காமல் இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாரே என எனக்குள் வருத்தமாக இருந்தது. சங்கீதம் தெரிந்தவர் இங்கீதம் கூட தெரியாமல் இருக்கிறாரே என மனதில் புலம்பினேன். நான் பதில் சொல்லும் முன்னர் கருத்தபாண்டி பதில் சொல்லிவிட்டான்.

''நான் பறையர், இவன் தேவர்''

''கீழ் சாதிக்காரங்களுக்கு எல்லாம் நான் சங்கீதம் கத்து தரது இல்லை. இது பாரம்பரிய மிக்க இசை, பிராமணர்கள் மட்டுமே கத்துக்க வேண்டிய இசை. நீங்க போகலாம்''

''புரந்தரதாசர் அப்படி நினைக்கலையே''

''புரந்தரதாசர் பத்தி என்ன தெரியும் உனக்கு''

''தியாகராஜ பாகவதர் கூட இப்படி சொல்லலையே''

''அவங்க ரண்டு பேரு பேரை சொன்னா உங்களை உள்ள விட்டுருவேனா''

பட்டென கதவை சாத்தினார் அவர். கருத்தபாண்டி என்னை முறைத்து பார்த்தான்.

''கதவை உடைக்கட்டுமா''

''வேணாம் விட்டுரு''

''யாரு புரந்தரதாசர், யாரு தியாகராஜ பாகவதர்''

''கர்நாடக இசை மாமேதைகள், புரந்தரதாசர் கர்நாடக இசை தந்தை''

''ஓ...''

கருத்தபாண்டிக்கு இவர்களைத் தெரியாமல் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. ஏமாற்றத்துடன் அவரது வீட்டில் இருந்து கிளம்பினோம். இவர் மிகவும் சிறந்த கர்நாடக இசை ஆசிரியர் என சொன்னதால் மீண்டும் ஒருமுறை கதவை தட்டுவோம் என திரும்பினோம். இந்த முறை கதவை தட்டியதும், திறந்தார்.

''நாங்கள் வெளியில் இந்த திண்ணையில் இருந்து கற்று கொள்கிறோம்''

''நான் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லை''

அடுத்த நிமிடமே கருத்தபாண்டி அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் எறிந்தான். அலறலுடன் அவர் தலையை பிடித்தவாறு கீழே விழுந்தார். அவரது தலையில் ரத்தம் கொட்டியது. வீட்டில் எவரும் இல்லை என புரிந்தது. நான் எனது சட்டையை கிழித்து அவரது தலையில் கட்டினேன். வீட்டு கதவை சாத்திவிட்டு மயக்கத்தில் இருந்தவரை மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவில் தூக்கி கொண்டு சென்றோம். அவருக்கு சிகிச்சை அளித்தார்கள். கருத்தபாண்டியை திட்டி தீர்த்தேன். அவனோ இது போன்ற ஆட்களுக்கு இதுவே தண்டனை என்பது போல் பேசாமல் நின்று கொண்டிருந்தான். கண் விழித்து பார்த்தவரை சென்று பார்த்தோம்.

''எங்களை மன்னிச்சிருங்க ஐயா''

எங்கள் இருவரையே பார்த்து கொண்டிருந்தார். போ போ என கையை அசைத்தார்.

''கர்நாடக இசை...''

''நா ன் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்ல''

இனிமேல் அங்கே நின்று பிரயோசனம் இல்லை என கிளம்பினோம்.

''கொன்னு போட்டு இருக்கனும்''

''விடுறா''

''என்ன மனுசங்க''

''மண்ணில் வந்த உடம்பு, மண்ணில் போகும் உடம்பு, ஒருவர் எந்த சாதி என்றால் என்ன, ஒருவர் எந்த நிலையில் இருந்தால் என்ன, இசை எல்லாருக்கும் பொதுவானது''

''நான் பாட்டுக்கு பேசாம தப்பட்டையை தட்டிகிட்டே இருந்து இருப்பேன், நீ என்னவாச்சும் பண்ணு''

கருத்தபாண்டி என்னை தனியாக விட்டுவிட்டு கிளம்பி போனான். எத்தனை எத்தனையோ மனிதர்கள் கண்டேன். அவர்கள் எல்லாம் என்னை என்ன சாதி என்றே கேட்க வில்லை. உணவகத்தில் உணவு அருந்தினேன். அவர்கள் என்ன சாதி என நானும் கேட்கவில்லை. சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கர்நாடக இசை கற்று தருபவர் பற்றி எனக்கு எதிரில் அமர்ந்து இருந்தவரை கேட்டேன். தெரியாது என்றார். மேலும் சிலரிடம் விசாரித்து ஒரு முகவரி வாங்கி கொண்டு சென்றேன்.

வீட்டு வாசலை தட்டினேன். உயரமான ஒருவர் வாசற்கதவை திறந்தார். 

''நான் தேவர் சாதி, கர்நாடக இசை கத்துக்கிரனும்''

''புரந்தரதாசர் காலத்தில் இருந்தே இந்த சாதி கொடுமையை எதிர்த்து போராடி இருக்காங்க, இன்னுமா சாதி பத்தி பேசற, உள்ளே வா''

எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. வீட்டிற்குள் இருந்த திண்ணை ஒன்றில் அமர சொன்னார். வீட்டினுள் சென்று பழங்கள் கொண்டு வந்தார். அவரது துணைவியாரும், அவரது மகளும் உடன் வந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் சொன்னேன்.

''கர்நாடக இசை கத்துக்க வந்துருக்கான்''

புன்னகை புரிந்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

''இதுக்கு முன்னால எங்கேயாவது சங்கீதம் கத்து இருக்கியா''

''இல்லை''

''எத்தனை ராகம், எத்தனை தாளம் எல்லாம் தெரியுமா?''

''கொஞ்சம்''

''கர்நாடக சங்கீதம் பாடுறது, அது இதை வைச்சி தட்டுறது இல்லை''

''புல்லாங்குழல், மிருதங்கம், வீணை எல்லாம் உபயோகம் பண்ணுவாங்களே''

''ஆமா, ஆனா நீ பாட கத்துக்கிற போறியா, இல்லை இசைக்கருவிகளை இசைக்கப் போறியா''

''பாட கத்துக்கிறேன், அதோட இசைக்கருவிகளும்''

''என் பேரு ஆதிராஜன், உன் பேரு''

''ஆதி''

''இதோ பழங்கள் எடுத்து சாப்பிடு''

''இதே ஊருல ஒருத்தர் கீழ் சாதிக்காரங்களுக்கு கத்து தரது இல்லைன்னு சொன்னார்''

''யாரு, சீர்மலைவேதிகரா''

''பேரு கேட்கலை''

''உயரமா நாமம் போட்டுண்டு... அவா அப்படித்தான், சிலரை திருத்த முடியாது''

''இப்படி இருந்தா எப்படி கர்நாடக இசை வளரும்''

''இனிமே யாரு கர்நாடக இசைக்கு மாறப் போறா, கொஞ்ச பேரு என்கிட்டே படிக்க வராங்க. ஆனா என் பொண்ணு சினிமாவுல பாடப் போறா''

''அப்படின்னா இந்த இசை''

''தெரியலை, ஒடுக்கப்பட்ட மக்களுக்குன்னு எத்தனையோ புரட்சி வந்தது உண்டு,  ஒடுக்கப்பட்ட இசைக்கு இசை புரட்சி எதுவும் வரலை, வெஸ்டர்ன் இசை எல்லாம் வந்துருச்சு, எதோ அங்க அங்க இசை கச்சேரி நடத்துறா, விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல இருக்காங்க. நானே என் பொண்ண கர்நாடக இசையில இருக்க வைக்க முடியல''

''எனக்கு கத்து தாங்க, நான் நிறைய பேருக்கு கத்து தாரேன்''

''ம்ம்''

கற்று கொள்ள ஆரம்பித்தேன். கடினமாகவே இருந்தது. ஸ்ருதி, லயம் எல்லாம் சரி செய்ய வேண்டும் என சொன்னார். பணம் வேண்டாம் என மறுத்து விட்டார். மாலை நேரத்தில் நம்பிக்கையுடன் ஊர் வந்தேன். கருத்தபாண்டியை தேடி சென்றேன். அவன் முழுவதுமாக மறுத்துவிட்டான். அம்மாவும் அப்பாவும் எனக்காக காத்து இருந்தார்கள். அப்பாதான் சொன்னார்.

''ஆதி, ஒரு முக்கியமான சேதிடா. நம்ம ஊரு முதலாளி விவசாய நிலத்தை எல்லாம் பட்டா போட்டுட்டு வரார், நிறைய வீடு கட்ட போறாங்களாம்''

''அப்போ விவசாயம்...''

''எல்லாம் அந்த கடவுளுக்கே வெளிச்சம்''

இருளாகிப் போனதைக் கண்டு மனம் விம்மியது.

(முற்றும்)

Friday 16 August 2013

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - எகிப்தியர்கள்

பாபிலோனியர்கள் குறித்து பார்க்கும் முன்னர் எகிப்தியர்கள் பற்றி கண்டு கொள்வோம். தற்போதைய எகிப்தில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து கொள்வோம். தற்போது எகிப்தில் என்னதான் நடக்கிறது என்பதற்கு மிகவும் சுருக்கமாக 'அரசு கொண்டு வரும் மத கட்டுபாடுகள் மீதான அதிருப்தி' என்றே பார்க்கப்படுகிறது. இதே எகிப்தில் தான் சில வருடங்களுக்கு முன்னர் முப்பது வருடங்கள் அரசாண்ட ஒருவரை விரட்டி அடித்தனர் மக்கள். நம்பிக்கையோடு ஒருவரை தேர்ந்தெடுக்க அவர் தலைவலியாக மாறுவதால் ஏற்படும் ராணுவ உதவியுடனான சீற்றங்கள். 

எகிப்து பிரமிடுகளுக்கு என பிரசித்தி பெற்றது. எகிப்து நைல் நதியால் நன்மை பெற்றது. எகிப்து வரலாற்றை இவ்வாறு பிரிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்கள் முன்னர் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இருந்த நகட கால கட்டம். மேல் எகிப்து இது நைல் நதிக்கு இருபக்கத்தில் அமைந்த பகுதி , கீழ் எகிப்து இது தற்போதைய கைரோ போன்ற இடங்கள், என்றே பிரித்து இருந்து இருக்கிறார்கள். இவ்வாறு பிரிந்து கிடந்த இரண்டு பகுதிகளை ஒரே அரசாக பிரித்த சிறப்பு மேனேஷ் எனும் அரசரையே குறிக்கும். பரோ என்றே அரசரை குறிப்பிடுகிறார்கள். இந்த காலகட்டம் ஆயிரத்து அறநூறு வருடங்கள் நிலைத்தது, இதனை தினைட் கால கட்டம் என்கிறார்கள். அப்போதைய தலைநகரம் மெம்பிஸ். என்னதான் ஒன்றாக இணைத்தாலும் எப்போது பிரிந்து செல்லலாம் என்றே முனைப்புடன் இரண்டு பகுதிகளும் இருந்து இருக்கின்றன. 

பழங்கால அரசு. இந்த தினைட் காலகட்டத்திலேயே இந்த ஒரே அரசுதனை முப்பத்தி எட்டு பிரிவுகளாக பிரித்து இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் தான், கலை, கலாச்சாரம், மதம் எல்லாம் தோன்றி இருந்து இருக்கிறது. இந்த அரசர் சூரியனின் பிள்ளைகளாக போற்றப்பட்டும் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பெரிய பிரமிடுகள், கல்லறைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு சக்கரா எனும் இடத்தில் ஜோசெர் எனும் பிரமிடு நான்காயிரம் வருடங்கள் முன்னர் உருவாக்கப்பட்டது. அதற்கு பின்னர் ஐம்பது ஆண்டுகள் செலவழிக்கப்பட்டு ச்நேப்று எனும் பிரமிடு உருவாக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளில் உருவான சாப்ஸ் பிரமிடு. உலக அதிசயங்களில் ஒன்றானபிரமிடு இது. இது கிசா எனப்படும் இடத்தில் வேறு இரண்டு பிரமிடுகளுடன் சேர்த்து கட்டப்பட்டது. இந்த பிரமிடுகள் அடிமைகளால் கட்டப்பட்டது அல்ல. மிகவும் கைதேர்ந்த கட்டிட நிபுணர்களால் கட்டப்பட்டதுதான் என்றே வரலாறு குறிக்கிறது. 

இந்த அரசர்கள் கடவுளை பெரிதும் போற்றி இருக்கிறார்கள். கடவுளை உயர்ந்த நிலையில் வைத்து மகிழ்ந்து இருக்கிறார்கள். இவர்களுடைய கடவுளுக்கு எல்லாம் தலைகள் விலங்கு தலைகளாகவே இருக்கும். இங்கே ஒரு ஒற்றுமையை குறித்தாக வேண்டும். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் சில அவதாரங்கள் விலங்கு தலையை உடையதாகவே இருந்து இருக்கும். அப்படியே பரிணாமத்தை தொட்டு பார்த்தால் நமது மூதாதையர்கள் விலங்குகளாகவே இருந்து இருப்பதும், அதில் இருந்து பிரிந்த பிரிவுதான் நாம் மனித விலங்கு என்றும் சொல்லப்படுகிறது. 

கடவுளின் கலாச்சாரம் தொடங்கப்பட்ட எகிப்தில் நிறைய மத நிறுவனங்கள் வெவ்வேறு கடவுளை உருவாக்கி கொண்டன. ஒவ்வொரு கடவுளுக்கு என ஒரு கதை சொல்லப்பட்டது. அதில் மிக முக்கியமான கதை ஐசிஸ் ஒச்ரிஸ் பற்றியதாகும். ஒச்ரிஸ் உலகத்தையே கட்டுபாட்டில் வைத்து இருந்தபோது, அவரது பொறாமை கொண்ட சகோதரர் செட், ஒஸ்ரிசை துண்டு துண்டாக வெட்டி உலகில் எல்லா இடங்களிலும் சிதறிவிட்டானாம். இதை அறிந்த ஒச்ரிஸ் மனைவி ஐசிஸ் , ஒஸ்ரிசின் பிறப்பு உறுப்பு தவிர எல்லா பகுதியையும் எடுத்து ஒன்று சேர்த்தாளாம். அப்படி உருவாக்கப்பட்ட ஒச்ரிஸ் பாதாள உலகை காத்து வருகிறானாம். 

ஐசிஸ் மற்றும் ஒச்ரிஸ் மகன் ஹோரஸ் தனது மாமா செட் தனை எதிர்த்து போராடி இருக்கிறார். செட் மேல் எகிப்து கடவுளாகவும், ஹோரஸ் கீழ் எகிப்து கடவுளாகவும் இருந்து இருக்கிறார்கள். மேல் எகிப்து வளமானதும், கீழ் எகிப்து பாலைவனமாகவும் இருந்து இருக்கிறது. அனுபிஸ், தோத், கணும் போன்ற கடவுளர்கள் இருந்து இருக்கிறார்கள். அனுபிஸ் ஒச்ரிஸ் பாகங்களை தனது தாயுடன் சேர்ந்து ஒன்று சேர்க்க உதவியவர். தோத் நமது சித்திரகுப்தன் போல. பாவ புண்ணியங்களை எழுதுபவர். கணும் நமது பிரம்மா போல. மக்கள், உயிரனங்கள் என அனைத்தையும் தோற்றுவிப்பவர். இவர் உயிரை உருவாக்குவதுடன் ஆத்மாவையும் அதனுடன் சேர்த்து வைப்பவர். நமது நாட்டில் இருப்பது போலவே ஆத்மாவுக்கு அழிவில்லை என்றே நம்புகிறார்கள். 

இப்படி இருந்த காலகட்டத்தில் தெற்கில் இருந்து தீபேஷ் வடக்கில் இருந்து ஹெரக்லாபோளிஸ் போன்றவர்கள் எகிப்தின் இந்த பழைய அரசினை சிதறடித்தார்கள். இவர்களுக்கென தனிக்கடவுள் எல்லாம் இருந்து இருக்கிறது. இந்த காலகட்டம் மத்திய அரசு. நேண்டுஹோடேப் எனப்படும் தீபேஷ் அரசர் சிதறடிக்கப்பட்ட அரசாங்கத்தை ஒன்றிணைக்க பாடுபட்டார். அவர் செய்த முயற்சி வெற்றி பெற்று அமுன் எனப்பாடும் கடவுளை தலைமையாக கொண்டார்கள். இதற்கு காரணம் அமேநேம்ஹெட் எனப்படும் அரசர். இவரது காலத்தில் எகிப்தில் வியாபாரம் பெருகியது. நிறைய கோவில்கள், பிரமிடுகள் எழுப்பப்பட்டன. மத்திய கிழக்கு பகுதியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. ராணுவம், விவசாயம், அணைகள் கட்டுதல் என ஒரு வலிமைமிக்க வளமைமிக்க பேரரசாக எகிப்து விளங்கியது. ஆனால் இது அதிக நாள் நிலைக்கவில்லை. 

கிழக்கு பகுதியில் இருந்து ஹைகொஸ் எனப்படும் மக்கள் இந்த பேரரசுக்குள் நுழைந்து அவரின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தார்கள், இருப்பினும் அவர்கள் எகிப்து கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். எகிப்தில் இருந்த வம்சாவளிகள் பெரும் எதிர்ப்பை காட்டின. அஹ்மொசே எனப்படும் அரசர் இந்த ஹைஹோச்களை விரட்டி அடித்தார். இவர் பதினெட்டாவது பரம்பரையாகும். அப்போது புதிய அரசாங்கம் உருவானது. துத்மொசிஸ் எனப்படும் அரசர் சூடான், சிரியா போன்ற பகுதிகளை எல்லாம் கைபற்றினார். ஆப்ரிக்கா நாடுகளில் இருந்த வளத்தை தங்களுடன் இணைத்து கொண்டார். இவரின் மரணத்திற்கு பின்னர் துத்மொசிஸ் மகள் ஹெட்ஷ்புட் அரசு பொறுப்பிற்கு வந்தார். தன்னை மாபெரும் அரசர், தான் ஒரு ஆண் என அறிவித்தார். இவரது அரசாட்சியில் எகிப்து கோலோச்சி விளங்கியது. பெண் என்ற ஒரு காரணத்தினால் இவரது காலகட்டத்தை பூசி மேழுகிவிட்டார்கள். 

அமேன்தொப் மூவாயிரம் வருடங்கள் முன்னர் அரச பதவிக்கு வந்தார். இவரது சிலை இன்னமும் இருக்கிறது. இவரது கால கட்டத்தில் கட்டிட கலை மாபெரும் சிறப்பு பெற்றது. இவரது காலகட்டத்தில் ஒரே கடவுள் எனும் தத்துவம் கொண்டு வந்ததோடு பொற்காலம் என போற்றப்படும் அளவிற்கு போர் என இதுவும் இல்லாமல் விளங்கியது. 

மனித குல வரலாற்றிலேயே மிகவும் பழமையான, அனைவருக்கும் தெரிந்த ஒரு எகிப்திய கலாச்சாரம் மூவாயிரம் வருடங்கள் மேலாக சிறப்பு பெற்று விளங்கியது. அப்படிப்பட்ட எகிப்தியர்கள் இன்றைய நிலை வருத்தத்திற்கு உரியது. எகிப்தியர்கள் பற்றி மேலும் தொடர்வோம்.

(தொடரும்)