Tuesday 13 December 2011

அணையை உடைச்சிட போறானுங்க

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் தற்போது பெரிய அளவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இரண்டு மாநில அரசியல் தலைவர்களின் மதி கெட்ட செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகப் போவது மக்கள் தானே தவிர அரசியல் தலைவர்கள் அல்ல. நீதியை முறையாக கடைபிடிக்கும் நாடாக, பிரச்சினைக்குரிய விசயங்களில் சமயோசிதமாக நடக்கும் நாடாக  இந்தியா இன்று இருந்து இருக்கும் எனில் பல பிரச்சினைகள் எளிதாக முடிந்து இருக்கும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக பல பிரச்சினைகள் இழுவையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு நீதி ஒன்றும் பொருட்டு அல்ல!

எதற்கு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அரசு நடந்து கொள்ள மறுக்கிறது என தெரியவில்லை. இந்த அணை கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூற்றி பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. சில வருடங்கள் முன்னர் இந்த அணையில் சிறு கசிவு ஏற்பட்டதால் அணையின் ஸ்திரதன்மை பாதிக்கப்பட்டு இருக்கலாமோ எனும் அச்சம் வருவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி மொத்த அணையும் உடைந்துவிடும் என அடிப்படை காரணம் இல்லாமல் அவதூறு பரப்புவது நியாயம் இல்லை. இதற்கு தூபம் போடும் வகையில் வெளிவந்த ஒரு திரைப்படம் DAM999 இந்த படத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருந்து இருந்தால் இன்று இத்தனை பிரச்சினை வந்திருக்குமா என தெரியாது. இந்த திரைப்படத்தை தடை செய்வது முதற்கொண்டு இவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டார்கள். இன்று தேனி போன்ற மாவட்டங்களில் பெரும் போராட்டங்களும் கடை அடைப்புகளும் நடந்தேறி கொண்டிருக்கின்றன. இதற்கு தகுந்த தீர்வை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என இல்லை. அந்த அந்த பகுதி வாழ் மக்கள் புரிந்துணர்வுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது போன்ற நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நதிகள் தேசியமயமாக்கப்படுவது குறித்து மக்கள் புரட்சி செய்தாக வேண்டும். இப்பொழுது கூட கேரளா அரசு வேறு ஒரு அணையை கட்ட எவரும் தடை விதிக்க முடியாது எனும் ஒரு நிலை வந்தால் பெரும் பிரச்சினைதான். முல்லை பெரியாறு அணியின் பின்னணி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

முதன் முதலாக கட்டப்பட்ட அணையானது வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குக் தலைமையில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் போராடி கட்டப்பட்ட அணை தான் இந்த முல்லைப் பெரியாறு அணை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சார்ந்த பிரதானி முத்து இருளப்ப பிள்ளை என்பவர் தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் முன்னர் செயல்படுத்த திட்டமிட்டவர். இந்த் அணையின் மூலம் தமிழக மாநிலங்கள் பயன்பெறும் எனவும், ராமநாதபுரம் அதிக பயன் பெரும் எனவும் திட்டமிட்டவர். முத்துராமலிங்க சேதுபதி சிறுவராக இருந்ததால் முத்து இருளப்ப பிள்ளை ஆட்சி பொறுப்பினை ஏற்றார். ஆட்சிக்கு வந்த இந்த முத்து இருளப்ப பிள்ளை பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் முத்துராமலிங்க சேதுபதி தான் வளர்ந்த பின்னர் இவரின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லி முத்து இருளப்ப பிள்ளையை ஒரு துரோகியாகவே சித்தரித்து இருப்பதாக வரலாறு சொல்கிறது. இதனால் வெறுப்புற்ற முத்து இருளப்ப பிள்ளை தனது அமைச்சர் பதவியை துறந்தார், அத்துடன் இவரது வரலாறு மறக்கடிக்கப்பட்டது.

பென்னிகுக் பற்றி அந்தோணி முத்து பிள்ளை அன்றைய காலத்தில் பெரிதாக போற்றினார். தண்ணீரில் உனது பெயர் எழுதப்பட்டு இருந்தாலும் இந்த பெரியார் ஆறு ஓடும் வரை உனது பெயர் இருக்கும் என்றார். அப்படிப்பட்ட பெரும் பாரம்பரியம் மிக்க பெரியார் அணையை இப்பொழுது ஏதேதோ காரணம் காட்டி உடைத்துவிட்டு புதிய அணையை வேறொரு இடத்தில் கட்ட இருப்பதாக கேரளா அரசு சட்டசபையில் மசோதா இயற்றி இருப்பது வேடிக்கைக்கு உரியது.

புதிய அணையை கட்டுவதைவிட இருக்கும் அணையை பராமரித்தல் என்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விசயம் இல்லை. அணை கட்டப்பட்டு இருக்குமிடம் கேரளா என்றாலும் 999 வருட குத்தகைக்கு தமிழக அரசு இந்த அணை மற்றும் அணையை சுற்றியுள்ள இடங்களை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்று உள்ளதுதான் பிரச்சினை.

இந்த அணை உடைந்து போகும் அபாயம் என சொல்லி அவதூறு பிரச்சாரங்களை கேரளா அரசு மேற்கொண்டு வருவது மூலம் தமிழர்கள் மலையாளிகள் இடையே உள்ள நல்லுறவை குலைக்கும் வண்ணம் சிலர் செயல்படுவது கண்டனத்துக்குரியது. கேரளாவில் தான் படித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றால் முட்டாள்களும் நிறைய இருக்கிறார்கள் என காட்ட இந்த கேரளா அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது வேதனைக்குரியது. செம்மறியாடு போன்ற குணங்கள் கொண்ட மக்கள் பலரை இரண்டு அரசுகளும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதனால் பொதுவுடைமை பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் பலர் ஈடுபடுவதால் பதட்டம் நிலவுவதை தவிர்க்க இயலாது. ஒருவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார், மற்றொருவர் அதைப் பார்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். இந்த உண்ணாவிரதம் மூலம் இவர்கள் உயிர் போகாது என்பது இவர்களுக்கு தெரியும் என்பதால் இது போன்ற வித்தைகளை காட்டி மக்களுக்காக போராடுகிறேன் என பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

இந்த பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் உரிய வசதிகள் இல்லாமல் வாடும் ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசும் சரி, இதற்கு முந்தைய அரசுகளும் சரி என்ன செய்தது?

தண்ணீர் கொள்ளளவு 142 அடி என இருந்தால் பிரச்சினை வரும் என்கிறது கேரள அரசு. அணையானது வலுவாக இருப்பதாக சில மாதங்கள் முன்னர் ஆராய்ந்த குழு சொல்லியாகிவிட்டது. இந்த மாதம் கூட மேலும் ஒரு குழு சோதனைக்கு வர இருக்கிறதாம். ஒரு அணை வலுவா இல்லையா என்பதை எப்படி சோதிக்கிறார்கள்?

கேரளா அரசு தனது காரியத்தில் சாதிக்க வேண்டுமென நினைத்து எது வேண்டுமெனிலும் செய்துவிடுமோ எனும் அவசியமற்ற அர்த்தமற்ற அச்சம் எழத்தான் செய்கிறது. ஆனால் இதை அரசியல்வாதிகள் பேசினால் பெரும் பிரச்சினை ஆக வாய்ப்புண்டு. அதோடு மட்டுமில்லாமல் சோதனை செய்கிறேன் என செல்பவர்களும், போராட்டம் செய்கிறேன் என அணையின் மீது ஏறி நின்று போர்க்கொடி தூக்குபவர்களும் அணையை உடைச்சிட போறானுங்க எனும் கவலை மட்டுமே எஞ்சி நிற்கிறது ஒரு பாபர் மசூதியை தொலைத்தது போல!

Monday 12 December 2011

ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1

ஓம் நமோ நாராயணாய நமஹ 

நீ என் மிக அருகினில் இருப்பினும்
உன்னை என்னுள் உணராதவரை
உன்னை தேடுதல் ஒரு தேவை.

ஒரு விசயத்தை பற்றி எழுதும்போதோ, அது குறித்து பேசும்போதோ, போதிய ஞானம் இல்லாத பட்சத்தில் அந்த விசயம் குறித்து மிகவும் தெளிவுபட எழுதவோ, பேசவோ இயலாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். தமிழ் மொழியை தவிர நான் கற்று கொண்ட பிறிதொரு மொழி ஆங்கிலம் மட்டுமே. இந்தி மொழியை சிரத்தையுடன் ஒரு நண்பரின் உதவியால் கல்லூரி காலங்களில் கற்றுகொண்டாலும், தொடர்ந்து கற்று கொள்ளாத காரணத்தினால் இந்தி மொழி மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே ஆகிவிட்டது.

இந்த ஸ்ரீமத் பாகவதம்தனை எடுத்து வாசிக்கும் போது அதில் இருக்கும் மொழி பரிச்சயப்பட்டது போன்றே தென்பட்டது. எனினும் எனது சிற்றறிவுக்கு வாசிப்பது அத்தனை எளிதாக இல்லை. மேலும் இறைவன் எனும் ஒரு விசயத்தில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டதால் வாசிக்கும்போதே ஏதேதோ கேள்விகள் எழுந்து கொண்டே இருப்பதை தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் ஸ்ரீமத் பாகவதம் மட்டுமே எழுதிட விழைகின்றேன். அன்பர் ஒருவர் ஸ்லோகங்கள் கேட்டதால் அதையும் எழுதிவிட வேண்டுமென முயற்சியுடன் எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க.

இந்த முதல் அத்தியாயத்தில் மொத்தம் இருபத்தி மூன்று ஸ்லோகங்கள் இருக்கின்றன. இந்த அத்தியாத்தில் சௌனகர் என்பவர் சூத முனிவரிடம் தங்களுக்கு பகவான் பெருமையை பற்றி சொல்லுமாறு கேட்பதாகவே அமைந்து உள்ளது. இதில் இந்த ஸ்ரீமத் பாகவதம்தனின் பெருமையை சௌனகர் சொல்கிறார். எப்படியாவது இந்த ஸ்ரீமத் பாகவதம் தனை கேட்க வேண்டும் எனும் ஆவலில் நிறையவே புகழ்ந்து தள்ளுகிறார். அதோடு மட்டுமின்றி தனக்கும் சில விசயங்கள் தெரியும் என்பதை காட்டி கொள்கிறார். அதாவது தனது ஆர்வத்தை பறைசாற்றுகிறார். இந்த ஸ்ரீமத் பாகவதம் தனை போன்ற புராணங்களை தொகுத்தவர் வியாச முனிவர் என்பது எனது அறிவுக்கு தெரிந்த தெளிவு.

இந்த ஸ்லோகங்களுக்கு நேரடியாய் அர்த்தம் கொள்வது என இருந்தாலும் மொழி பெயர்ப்பு என வரும்போது என்னைப் பொறுத்தவரை மூல ஜீவன் ஒரு வகையில் கொல்லப்படத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு பகவான் என சொல்லப்படும் ஸ்லோகங்களில் மஹா விஷ்ணு எனும் மொழி பெயர்ப்பு சரியானதா என கேள்வி எழுந்தாலும் இங்கே மஹா விஷ்ணு போற்றபடுவதால் அது சரியாகப்படலாம். மேலும் எழுதியவரின் மனநிலை நாம் கொள்வது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.

இப்பொழுது எனக்கு சௌனகரின் வரலாறோ, சூத முனிவரின் வரலாறோ, வியாச முனிவரின் வரலாறோ முழுமையாக தெரியாது. காலப்போக்கில் அவர்கள் பற்றி நான் அறிய நேரிடலாம். அப்பொழுது அவர்கள் யார் என்பது குறித்து எழுதுகிறேன். மேலும் மூன்று வகை குணங்கள், அஷ்டமா சித்திகள் போன்ற எனது அறிவுக்கு அப்பாற்பட்ட விசயங்கள் எல்லாம் நான் இப்பொழுது பேசப் போவதில்லை. இப்போதைய எனது நோக்கம் ஸ்ரீமத் பாகவதம் எழுதுவது மட்டுமே. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் வாசித்து, அதற்கான தமிழ் பொழிப்புரையை வாசித்து புரிந்து கொள்வது சிரமமான காரியமாகவே இருக்கிறது. அத்தியாயங்களில் எனக்கு எழுந்துள்ள கேள்விகள் இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

மொத்த ஸ்லோகங்களையும் கடைசியாக தந்துவிடுகிறேன். தமிழை தொடர்ந்து வாசித்து வர தடை இல்லாமல் இருக்கும், அதைப் போலவே ஸ்லோகங்கள் வாசிக்கவும் தடை இல்லாமல் இருக்கும்.

                         ஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 அத்தியாயம் 1 


1  ஆகாயம் முதலிய கார்ய வஸ்துகளில் ஸ்த்ரூபியாய் தொடர்வதாலும், ஆகாஷபுஷ்பம் முதலிய அகார்யாவஷ்துகளில் தொடராததாலும் எந்த பரமாத்மாவிடமிருந்து இவ்வுலகின் உற்பத்தி, வளர்ச்சி, நாசம் இவைகள் உண்டாகின்றதோ, ஸ்ர்வக்ஞரும் சுயமாகவே பிராகசிப்பவருமான பரமாத்மா ஆதிகவியின் பொருட்டு எந்த வேதத்தில் மகாகவிஞரும் மோட்சத்தை அடைகின்றனரோ, அந்த வேதத்தை மனதினால் உணர்த்தினரோ, தேஜஸ், ஜலம் பிருத்வி இவைகளையுடைய ஒன்றில் மற்றொன்றின் தோற்றம் போல் எந்த பரமாத்மாவிடத்தில் மூன்று வகை குணங்களுடன் பூதம், இந்திரியம் தேவதை என்றவைகளின்  ஸ்ருடியானது சத்தியமாக தோன்றுகிறதோ, பேரொளியால் எப்பொழுதும் போக்கடிக்கபட்ட மாயா தீத காரியங்களை உடையவரும், ஷ்த்யஸ்வரூபியுமான அந்த பராமத்மாவை தியானஞ் செய்வோம்.

2   ஸ்ரீமன் நாராயணரால் முதலில் உபதேசம் செய்யப்பட இந்த பாகவதத்தில் பொறாமையற்ற மக்களுக்காக, அடியோடு அகற்றப்பட்ட கபடத்தையும், பலா பிசிந்தியையும் உடையதான மிக உயர்ந்ததான பாகவத தர்மம் கூறப்பட்டு இருக்கிறது. பரமார்த்தமானதும், சேமத்தை அளிப்பதும், அத்யாத்மிகம் முதலிய தாபங்களை வேருடன் அகற்றுவதுமான பரமாத்மவஷ்துவானது அறிய முடிந்ததாக இருக்கிறது. மற்ற சாஸ்திரங்களில் பரமாத்மா இருதயத்தில் உடனே நிலைநிறுத்தபடுகின்றாரா என்ன, ஆனால் இந்த ஸ்ரீமத் பாகவத்திலோ, கேட்க விருப்பம் கொண்டவர்களின் இருதயத்தில் உடனே நிலை நிறுத்தபடுகிறார்.

3  ரசிக்கும் தன்மை உடையவர்களே, ரஷவிஷேசத்தை அறிவதில் சிறந்தவர்களே, வேதமாகிய கற்பகவிருட்சதினில் இருந்து சுக முனிவருடைய பூமியில் விழுந்ததும், அமிர்த துளிகளோடு கூடியதும், ரஸஸ்வரூபமாக உள்ளதுமான ஸ்ரீமத் பாகவதம் எனும் பலம் தனை மோட்ச சாம்ராஜ்யம் அடையும் வரை அடிக்கடி அனுபவியுங்கள்.

4  நைமிஸ்ரன்யத்தில் சௌனகர் முதலான மஹாரிஷிகள் சுவர்க்கத்தை அடைவதன் பொருட்டு ஆயிரம் ஆண்டு அனுஸ்டிக்கதக்க யாகத்தை செய்தார்கள்.

5 ஒரு சமயம் ப்ராதகாலத்தில் அந்த மகரிஷிகளே நித்யனநமித்தக காரியங்களின் பொருட்டு ஹோமம் செய்யப்பட அக்னியை உடையவர்களாய் நன்கு உபசரிக்கப்பட்டு அமர்ந்திருப்பவரான சூத மஹரிஷியை அன்போடு கூடிய மேற்சொல்லப்போவதை கேட்டனர்.

6  பாபமற்றவரான உம்மில் பாரதம் முதலான இதிகாசஙகளோடு கூடிய புராணங்களும் எந்த தர்மசாஸ்திரங்களுண்டோ அவைகளும் கற்கபட்டன மேலும் உபதேசிக்கப்பட்டன.

7 புராணம் முதலியவற்றை அறிந்தவரும் சிரேஸ்டரான வியாச பகவான் எந்த இதிகாசம் முதலானவற்றை அறிந்தாரோ மற்ற நிர்குண ஸ்குணபராமங்களை அறிந்த மஹாரிசிகளும் அறிந்தார்களோ.

8 எல்லாவற்றையும் வியாசாதி மகரிஷிகளின் அனுக்ரகத்தால் சாதுவான சூத மகரிசே நீர் உள்ளது உள்ளபடி அறிகிறீர். பிர்யமுள்ள சீடனுக்கு ஆசாரியர்கள் பரம ரகசியத்தையும் கூட சொல்வார்களன்றோ

9 தீர்க்கமான ஆயுளை உடையவரே, புராணங்களில் மக்களுக்கு நித்ய ஸ்ரேயஸ்ஷாக உள்ள யாதொன்று தாங்களால் நிச்சயிக்கப்பட்டதோ அதை விரைவில் எங்களுக்கு சொல்வதற்கு யோகயராகிறீர்கள்

10 சாதே, இந்த யுகத்தில் ஜனங்கள் அநேகமாக அற்பமான ஆயுளை உடையவர்களாகவும் சோம்பல் உள்ளவர்களாகவும் மிகவும் மந்தமான அறிவை உடையவர்களாகவும் தீ வினைப்பயன் உடையவர்களாகவும் வியாதிகள் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்களன்றோ

11 முறைகளுடன் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாக்கள் இருக்கின்றன. அதைப் போல கேட்கவேண்டிய சாஸ்திரங்கள் அனேகம இருக்கின்றன. மகரிசே இவைகளில் யாதொன்று சாரமானதே எதனால் புத்தியானது நன்கு அமைதி அடையுமோ தங்களது அறிவுத்திறத்தால் அடுத்து கேட்பதில் சிரத்தையோடு கூடிய எங்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.

12 சூத மகரிசே உமக்கு நன்மை உண்டாகட்டும். பக்தர்கெல்லாம் பதியான பகவானை எந்த காரியத்தை விருப்பங் கொண்டு வசு தேவருக்கு மனைவியான தேவகியிடத்து தோன்றினதை நீர் அறிவீர்.

13 சூத மகரிசே அதனை கேட்க விருப்பமுள்ளவர்களான எங்களுக்கு எடுத்து சொல்வதற்கு யோக்யராகிறீர். பகவானின் அவதாரமானது சகல ஜீவராசிகளினுடைய சேமத்தினை பொருட்டும் காப்பாற்றுதலின் பொருட்டும் உள்ளது.

14 காலவசத்தை அடைந்து மிக பயங்கரமான சம்சார பந்தத்தில் ஈடுபட்டு கொண்டு பகவானின் நாமத்தை சொல்கிறவனை கொண்டு அந்த சம்சார பந்தத்தில் இருந்து உடனே விடுபடுகின்றானோ அந்த நாமாவிற்கு பயமானது பயப்படுகிறது.

15 சூத மகரிசே அமைதியை அடைந்தவர்களும், பகவானின் பாத சேவையை அடைந்தவர்கள் மகரிசிகளால் தொடப்பட்டவர்கள் உடனே பரிசுத்தம் ஆகின்றனர். கங்கை ஜலத்தை சேவிப்பதினாலும் பரிசுத்தமாகுகிறது.

16 மஹாநீயர்களால் சோஸ்த்திரம் செய்யப்பட்ட வியாபாரத்தை உடைய மஹா விஷ்ணுவால், கலியில் தோன்றும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் கீர்த்தியை பரிசுத்தம் ஆக விரும்பும் எவர் தான் கேட்கமாட்டார்.

17 தனது லீலைகளால் பிரம்மாவாகவும், ருத்ரனாகவும் உள்ள சொரூபத்தை தரிசிக்கின்ற அந்த பகவானுடைய பெரியவகைளும் நாரத மகரிஷிகளினால் எடுத்து சொல்லபட்டதுமான செய்கைகள் எங்களுக்கு சொல்லுங்கள்.

18 அறிவில் சிறந்தவரே தனது லீலா விநோதத்தினால் இஷ்டப்படி பல்வேறு லீலைகள் செய்பவரான மஹா விஷ்ணுவின் நன்மையை தரத்தக்க மாய அவதார கதைகளை பிறகு சொல்லலாம்.

19 நாங்களோவேனில் பகவானுடைய ப்ராக்ராமங்க்களை கேட்பதில் திருப்தி அடையோம். எந்த பகவானின் பண்புகள் கேட்கின்றவர்களை ரசத்தை அறிந்தவர்களும் ஒவ்வொரு கணமும் கேட்க கேட்க இனிமை அளிக்க கூடியதாகும்.

20 மாய மனுஷன் ஆனவனும் அறியப்படாதவனும் இறைவன் கிருஷ்ணன் பலராமனோடு கூடியவராய் மனித சக்திக்கு அப்பாற்பட்ட வீர்யம் மிகுந்த செய்கைகள் செய்தார் அல்லவா.

21 கலியுகமானது வந்ததை அறிந்து இந்த விஷ்ணு சம்பந்தமான நைமிசாரன்யத்தில் நீண்ட யாக நிமித்தமாக உட்கார்ந்தவர்களால் மஹா விஷ்ணுவின் கதைகளை கேட்பதில் அடையப்பட்ட சந்தர்ப்பங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள் அல்லவா.

22 மக்களின் சக்தியை அபகரிக்க கூடியதும், கடக்க முடியாததுமான கலியுகமாகிய கடலை கடக்க முயலுகின்றவர்களான எங்களுக்கு படகோட்டி போன்று நீர் காணப்படுகிறீர்

23 கர்மத்தை காப்பாற்றுபவரும் யோகிகளுக்கு ஈஸ்வரரும் பரமேஸ்வரரூபியான பரமாத்மா தற்போது தனது எல்லையை அடைந்த அளவில் யாரை சரணமாக அடைந்தது என சொல்லுங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------

1  ஜன்மாத்யஷ்ய யதொன்ஷ்வ்யாதிதர்ஸ்சர்தேஸ்வபிஜ்ஞ: ஸ்வராட் 
    தேனே ப்ரஹ்ம ஷ்தொய யா ஆதிகவயே முஹயந்தி யத் ஷூரேய
    தேஜோ வாரிம்ருதாம் யதா சூநிமயோ யாத்ரா த்ரிஷ்ர்கோ ம்ருஷா 
    தாம்நா ஷ்வென ஸ்தா நிரஸ்த குஹம் ஷ்த்யம் ப்ரம்தீமஹி 

2  தர்ம ப்ரோஜ்ஜிதகைதவோஷ்த்ர ப்ரமோ நிர்மத்ஸ்ராணாம் ஸ்தாம்
    வேத்யம் வாஸ்தவமத்ர வஸ்து ஸ்ரிவதம் தாபத்ரயோன்மூலம்
    ஸ்ரீமத்பாகவதே மகாமுனிக்ருதே கிம் வா பரைரீஷ்வர
    ஸத்யோ ஸ்ருத்யவருத்யதேஷ்த்ர க்ருதிபி ஆஷ்ரூஷிபிஸ்தத்நாத்


3  நிகமகல்ப தரோர்களிதம் பலம் ஷோமுகதம்ருதத்ரவ ஸ்ம்யுதம்
    பிபத பாகவதம் ரஷமால்யம் முஹீரஹோ ரஷிகா புவி பாவுகா   


4  நைமிஷேமுனிமிச சேத்ரே ருஷய சௌனகாதய
   ஸ்தரம் ஸ்வர்காய லோகாய ஸ்ஹஸ்ர ஸம மாஸத


5  த ஏகதா து முயை பராதர்ஹூதஹீதாக்யை 
   ஸ்த்க்ருதம் ஹூதமாஷீனம் பப்ரச்சுரிதமாதராத் 


6  த்வயா கழு புராணனி ஹேபதிஹாசாணி சாகை 
    ஆக்யாதான்யப்யத்தானி தர்ம ஷாஷ்த்ராணி யான்யுத 


7 யானி வேதவிதாம் ஸ்ரேஸ்டோ பகவான் பாதநாராயண 
   அன்யே ஸ முயை சூத பரவரா விதோ விது 


8 ஷித்த தவம் ஸௌமய தத்ஸ்ர்வம் தத்வதததநுக்ரஹாத்
    ப்ரூயு ஸ்நிக்தாஸ்ய சிஷ்யஸ்ய குரவோ குஹ்யமப்யுத 


9  தத்ர தத்ராஞ்ஜஸாஆயுஷ்மன்பவதா யத்விநிஷ்தம் 
    பும்சாமேகந்தத ஸ்ரேயஸ்தன்ன ஸ்ம்சிதுமர்ஹசி 


10 ப்ரயேனால்பாயுச ஸ்ம்ய காலவஸ்மின்யுகே ஜனா 
     மந்தா சீமந்தமதயோ மந்தபாக்யா ஹயுபத்ருதா 


11 பூரிணி பூரிகர்மாணி ஸ்ரோத்வயானி விபாகச 
     அத ஸ்தோ அதர யத்சாரம் சமுத் த்ருத்ய மநீசயா 
     ப்ரூஹி ந சரத்த தானானாம் யேனாத்மா ஸ்மப்ரஸீததி 


12 சூத ஜானாசி பத்ரம் தே பகவான் சாத்விதாம் பதி 
    தேவக்யாம் வசூதேவஷ்ய ஜாதோ யஸ்ய சிகீர்ஷ்ய 


13 தன்ன ஹோஹ்ரூதமான நாமார் ஹஷ்யங்கா நுவர்நிதம் 
     யஸ்யயாவதாரோ பூதானாம் சேமாயா ஸ பாவாய ச 


14 ஆபன்ன ஸ்மருதிம் கோராம் யன்நாம விவசோ க்ருணன் 
     தத ஸ்த்யோ விமுச்யேத யத்பிபேதி ஸ்வயாம் பயம் 


15 யத் பாதசம்ஸ்ரயா சூத முயை ப்ரஹமாயனா 
     ஸ்த்ய புநந்யுபசப்ருஸ்டோ ஸ்வர் துனயாபோ ஆனுசேவாய 


16 கோ வா பகவதஸ்தஸ்ய புண்யஸ்ளோகேட்யாக்ர்மண
      ஷீத்த்காமோ ந ஸ்ருனுயாத்யச கலிமலாபஹம் 


17 தஸ்ய கர்மான்யுதாராணி பரிகீதானி ஸ்ரீபி 
     ப்ரூஹி ந ஸ்ரத்ததாநாநாம் லீலயா ததத கலா 


18 அதாக்யாஹி ஹரோர்தீம்ன அவதாரகதா ஹீபா
     லீலா விததத ஸ்வைரமேஸ் வரஸ்யாத் ம மாயயா 


19 வயம் து ந வித்ருப்யம் உத்தமஸ் லோகவிக்ரமே 
      யஸ்ஸ்ருன்வதாம் ரசஞாநாம் ஸ்வாது ஸ்வாது பதே பதே 


20 க்ருதவான் கில வீர்யாணி ஸ்ஹ ராமென கேசவ 
     அதிமாத்யாணி பகவான் கூட கபடமானு 


21 கலிமாகதமாஜஞாய சேத்திர ஆச்மின்ன விஷ்ணுவே வயம் 
      ஆசிநா தீர்கஸ்தரேன கதாயம் ஸ்ஹநா ஹரே 


22 த்வம் ந ஸ்ந்நர்சிதோ தாத்ரா துஸ்தரம் னிஸ்திதீர்ததாம் 
     கலிம் ஸ்த்வ ஜரம் பும்சாம் கர்னதார இவார்நுவ 


23 ப்ரூஹி யோகேஸ்வர கிருஷ்ணா ப்ரஹமன்யே தர்மவர்மனி 
      ஸ்வாம் காஷ்டா மதுநோபேத தர்ம கம் ஹீரணம் கத 

Saturday 10 December 2011

மனைவியின் மயோர்கா - 4

பாதை மிகவும் மோசம் என சொன்னாலும் பளிங்கு போல சாலை பளபளப்பாகத்தான் இருந்தது. ஆனால் சாலையின் இருபுறங்களிலும் எவ்வித பாதுகாப்பு இன்றி இருந்தது. அதன் காரணமாகவே அதை மோசமான சாலை என சொல்லி வைத்திருக்கிறார்கள் போலும் என நினைத்து கொண்டேன்.

மலைகளின் மீதான பயணம் வெகு சிறப்பாக இருந்தது. இயற்கை காட்சிகள் அதி அற்புதமாக இருந்தன. எல்லாம் கடந்து ஓரிடம் சென்றால் அங்கு கடற்கரை ஒன்று இருந்தது. அந்த கடற்கரையில் உற்சாகமாக மக்கள் நீந்தி கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டு மீண்டும் பயணம் தொடங்கினோம்.

முதன் முதலில் பார்த்த ஹோட்டல் பக்கம் செல்லலாம் என அந்த பாதை சென்றோம். சாலைகளில் பயணித்து கொண்டே பல இடங்களை பார்த்தாகிவிட்டது. ஒரு முறை ஒரு காரினை பின் தொடர்ந்து செல்ல அந்த காரோ வழி தெரியாமல் வேறு வழி செல்ல நாங்களும் பாதை மாறினோம், ஆனால் விரைவாக சுதாரித்து அருகில் சென்ற சாலையில் மாறி நேர் வழிக்கு வந்தோம். பாதை மாறிய மற்ற காரோ பரிதவித்து நின்று கொண்டிருந்தது. இப்படித்தான் சில ஊர்களுக்கு செல்லும்போது பாதை தெரியாமல் அவதிப்பட்டது உண்டு.

அங்கிருந்து ஒரு சின்ன கிராமம் சென்றோம். அந்த கிராமம் எனது ஊரில் இருக்கும் சாலைகளை நினைவுபடுத்தியது. கட்டை வண்டிகளும், டிராக்டரும் செல்ல கூடிய பாதைகள் கொண்ட எனது ஊரில் அவ்வப்போது கார்கள் வந்து போகும். அதைப் போலவே மிகவும் குறுக்கும் நெடுக்குமாக இருந்த கிராமத்து சாலையில் பயணம் செய்தோம். முன்னே கார் வந்தால் விலக முடியாத சூழல். எவரேனும் திட்டிவிடுவர்களோ எனும் அச்சம் வேறு.

முத்துகள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை தேடி சென்றோம். அந்த தொழிற்சாலை சென்று அடையும் முன்னர் சாலையில் காட்டப்பட்டிருந்த விளம்பரத்தை கண்டு பாதை மாறி வேறு இடம் சென்றோம். பெரிய தலைவலியாக போய்விட்டதே என நினைத்தாலும் எந்த இடங்களும் முன்னர் பார்க்காத இடங்கள் என்பதால் பயணம் வெகு சிறப்பாகவே இருந்தது. சிறிது நேரத்தில் முத்துகள் செய்யும் தொழிற்சாலை அடைந்தோம். இந்த காலத்தில் விடுமுறை என தொழிற்சாலை பூட்டப்பட்டு இருந்தது ஏமாற்றத்தை தந்தாலும் அருகில் இருந்த பெரிய விற்பனை தளத்திற்கு சென்றோம். அங்கே விற்பனையாளர்கள் அதிகம் இருந்தார்கள். வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். இந்த மயோர்கா முத்துக்களுக்கு பிரபலம் என சொல்லிக் கொண்டார்கள்.

முத்து மாலை பல பார்த்தோம், அதில் சில பிடித்து இருந்தது. ஆனால் விலையோ மிகவும் அதிகம். வாங்குவதா வேண்டாமா என மனப் போராட்டத்தில் இருக்கும் இருப்பினை நினைத்து வேண்டாம் என வேண்டா வெறுப்பாக வெளியில் வந்தோம். 'இனி எப்போ இங்க வரப்போறோம், வாங்கலாம் எனும் மனைவியின் ஆசையை அங்கேயே நிராகரிக்க வேண்டிய சூழல் வந்தது' சில நேரங்களில் சில விசயங்கள் நமது கட்டுபாட்டுக்குள் நம்மால் கொண்டு வர இயலும், ஆனால் பெரும்பாலும் அதன்படி நாம் நடப்பதில்லை.

அங்கிருந்து ஒரு வியாபர நகர் சென்றோம். அங்கே வித விதமான பொருட்கள் விற்று கொண்டிருந்தார்கள். பல கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு இருந்தன. மாலை நேரம் நெருங்கி வர ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வரும் வழியில் பல்மா எனும் நகரின் அழகை ரசித்தோம். எங்கேனும் நிறுத்தலாம் என நினைத்தால் இடமே இல்லை. இந்த பல்மா நகரின் அழகை சுற்றிப் பார்க்காமல் மயோர்காவின் பல இடங்களுக்கு சென்று வந்துவிட்டோம் என தோணியது. மறு நாள் பல்மா நகர் என முடிவானது. வரும் வழியில் டேஸ்ட் ஆப் இந்தியா எனும் மற்றொரு கடையை அங்கே பார்த்தோம். அதே போல வேறொரு பிரபலமான சாப்பாடு  கடை ஒன்று இருந்தது.  நாளை வரலாம் என பயணித்தோம்.  பல்மா நகரின் சிறு சிறு சாலைகளில் கட்டிடங்களுக்கு இடையில் எல்லாம் பயணித்தோம். நாம் செல்லும் பாதை சரியா தவறா என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. ஆனால் சரியாகவே வழிகாட்டி வழி காட்டியது என கடைசியாக தெரிந்தது. அன்று இரவும் ஹோட்டலுக்கு அருகில் உள்ள அதே கடையில் சாப்பிடாமல் மற்றொரு இந்தியர் கடையில் சாப்பிட்டோம். சாப்பாடு அந்த அளவுக்கு சரியாக இல்லை. பேசாமல் நேற்று சென்ற கடைக்கே சென்று இருக்கலாம் என தோணியது.

இரவு மீண்டும் அதே பாடல் காட்சி. உறக்கம். காலையில் எழுந்ததும் இன்னும் ஒரு நாளில் இந்த மயோர்கா விட்டு பிரிய வேண்டுமே எனும் ஏக்கம் வந்து சேர்ந்தது. பல்மா நகருக்கு விரைந்தோம். ஓரிடத்தில் காரினை நிறுத்திவிட்டு நடையாய் நடந்தோம். கட்டிடங்கள், படகுகள் கூடிய கடல் என பல இடங்கள் பாத்தோம். வியர்த்து விறுவிறுத்து போனது. எங்கு பார்த்தாலும் கடைகள் என தேவாலயம் எல்லாம் சென்றோம். அதே தொலைவு நடந்து திரும்பினோம். மதியம் ஆனபோது அந்த பிரபலமான கடை மூடி இருந்தது. டேஸ்ட் ஆப் இந்தியாவில் சாப்பிட்டோம்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் காரை திருப்பி தர வேண்டும் என்பதால் வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பலாம் என நினைத்தோம். இருப்பினும் ஒரு கடற்கரை சென்று திரும்பலாம் என புதிய இடத்தை அடைந்தோம். அப்பொழுதுதான் தெரிந்தது மொத்த மயோர்காவையும் சுற்றி முடித்தாகிவிட்டது என்று. கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு காரை திருப்பி ஒப்படைத்தோம்.

பணம் எதுவும் அதிகமாக வாங்கவில்லை. எந்த பிரச்சினையும் செய்யவில்லை. ஊருக்கு கடிதம் அனுப்புவார்கள், பணம் அதிகம் எடுப்பார்கள் என இணையத்தில் படித்து இருந்ததை போல எதுவும் நடக்கவில்லை. காரை விட்டபின்னர் எங்களை பத்திரமாக ஹோட்டல் வந்து சேர்த்தார்கள். அங்கே காருக்கு பெட்ரோல் போட செல்லும் இடங்களில் வேலை பார்க்கும் பையன்கள் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே எல்லாம் நாங்களகாவே பெட்ரோல் போடும் வழக்கம் உண்டு. அதிலும் ஓரிரு இடங்களில் தானியங்கிகள் தான்.

ஹோட்டல் வந்து அடைந்ததும் அதற்கடுத்து டென்ரீப் என மனைவி சொன்னார். சிறிது காலம் போகட்டும் என நினைத்து இருந்தேன். இங்கே தான் கார் ஓட்டியாகிவிட்டதே மாட்ரிட் போன்ற ஐரோப்பா இடங்கள் போகலாம் என சொன்னார். பார்க்கலாம் என அடுத்த நாள் விமானம் ஏறி ஊர் வந்தோம்.

விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த எனது காரில் ஏறி அமர்ந்தபோது இந்த காரை எடுத்து சென்று இருக்கலாம் என தோணியது.

முற்றும்.