Monday 14 November 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? வக்கத்தவனும் போக்கத்தவனும்

தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் மனிதர்கள் கல்தனை பல வேலைகளுக்கு உபயோகப்படுத்தி வந்தார்கள் என்பதை அறியலாம். இந்த கற்காலம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வருடங்கள் வரை மனித வாழ்வில் பெரும் இடம் பெற்று உள்ளது. தற்போது கூட இந்த கல்லானது மனித வாழ்வில் பெரும் பங்கு வகித்தாலும் அவை உபயோக பொருளாக இல்லாமல் உபய பொருளாக மாறிவிட்டது. கல்லிலே கலைவண்ணம் கண்டான் என சிலாகித்து பாடும் வண்ணம் இந்த கல் பெருமை பெற்றது. சில வேதிவினை ஆராய்ச்சிகள் மூலம் ஒரு கல்லானது எப்படி இருக்கிறது, எதற்காக உபயோகப்படுத்தபட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். சில கல்லின் அமைப்புகள் அவை பல விசயங்களுக்கு உபயோகபடுத்தபட்டு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.


                                                         நன்றி : விக்கிபீடியா   


விலங்குகளை வெட்டி உண்ணும் பழக்கம் உடையவராக இந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இரும்பு, தாமிரம் போன்ற தகடுகள் உபயோகத்தில் இல்லை. எனவே இந்த கல்லினை கூறு செய்து அதை ஆயுதமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அன்றைய மனிதர்கள் மட்டுமா கல்லினை ஆயுதமாக உபயோகம் செய்தார்கள்? இன்று கூட கல்லினை எடுத்து வாகனங்களை உடைப்பது, அடுத்தவரின் மண்டையை உடைப்பது என கல்லினை இன்றைய மனிதர்களும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.

இந்த கல்லினை ஆயுதமாக உபயோகபடுத்தியது மட்டுமில்லாமல் இந்த கல்லை தங்களுக்கு தரும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் உபயோகப்படுத்தி வந்து இருக்கிறார்கள். மரக்கிளைகள் கூட இந்த கால கட்டத்தில் ஆயுதமாக இருந்து இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கி இன்றைக்கு அவை நிலக்கரியாகவோ, வாயுவாகவோ, எண்ணையாகவோ மாறி இருந்து இருக்கலாம். எனவே தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போனது ஆச்சரியம் இல்லை.

இந்த கல் மூலம் பல விசயங்களை செய்த இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த கல்லில் இருந்து எப்பொழுது உலோகங்களை  கண்டு கொண்டனரோ அப்பொழுது இந்த கற்காலம் மறைந்து உலோக காலம் தொடங்கியது. அந்த கால கட்டத்திற்கு சற்று முன்னர் தான் விவசாயம் எனும் முறையை இந்த மனிதர்கள் கற்றறிந்து இருந்தார்கள். பன்னிரண்டு ஆயிரம் வருடங்கள் முன்னர் தான் இந்த விவாசய முறை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்தப்பட்டது. அப்பொழுது அவர்களிடம் இருந்த காட்டுமிராண்டி நாகரிகம் குறையத் தொடங்கியது. அதோடு மட்டுமில்லாமல் முதன் முதலில் தாமிரத்தை கல்லில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை எட்டாயிரம் வருடங்கள் முன்னர் மனிதர்கள் கண்டறிந்தார்கள். தாமிர கத்தி போன்றவை உருவானது. அதற்கு பின்னர் தாமிரத்தையும் பிற தனிமங்களுடன் கலந்து உருவாக்கும் தன்மையை கண்டறிந்து இருக்கிறார்கள்.

இந்த மனிதர்களுக்கு எந்த வாத்தியார் சொல்லி கொடுத்தார்? இந்த மனிதர்களுக்கு எந்த காவல்காரர் காவல் இருந்தார்? எதன் காரணமோ வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை என சொல்லி வைத்தார்கள். நாம் கற்று கொள்ள எந்த ஆசிரியரும் அவசியம் இல்லை, நம்மை பாதுகாத்து கொள்ள எந்த போலிசும் அவசியம் இல்லை. ஆனால் நமது அறிவு வளர்ச்சியானது ஆசிரியர்களை கொண்ட பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் ஊருக்கு ஊர் காவல் நிலையங்களை உருவாக்கி வைக்கச் சொல்லிவிட்டது. இந்த வாழ்க்கை சீரழிவுக்கு உப்டடுத்தபட்ட நாம் காட்டுமிராண்டி நாகரிகத்தை விட கேவலமான நாகரிகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் மறுத்தாலும் நான் மறுக்கப் போவதில்லை.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பலர் பள்ளிக்கூடங்களில் இவைகளை கற்றுக்கொண்டதில்லை. பள்ளிக்கூடங்கள், இவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்றுதான் கற்றுத் தருகிறது. எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என எந்த பள்ளிக்கூடமும் கற்றுத் தருவதில்லை. கற்றுக் கொள்தல் என்பது அவரவர் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. எண்களை கண்டுபிடித்தவருக்கு எந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்? இதோ இந்த கணினி எப்படி உபயோகிப்பது என்பது குறித்து எந்த ஆசிரியரிடம் நாம் கற்றுக் கொண்டோம்? ஒருவர் உருவாக்குகிறார், அதன் பயனை பலர் அனுபவிக்கிறோம். அந்த கற்றுக் கொள்தலை பிறருக்கு சொல்லி தருகிறோம், அப்படி சொல்லித் தருவதால் நாம் ஆசிரியர் ஆகிறோம், இதன் காரணமாகவே கல்வி ஒரு வியாபார பொருளாகிப் போனது.

கொலை, கொள்ளை, திருட்டு என்பதெல்லாம் காட்டுமிராண்டி நாகரிகத்தில் இல்லாமல் இல்லை. அப்பொழுது பணம் என்பது இல்லாமல் போனதன் காரணமாக, தனது உடைமைகள் என எதையும் பாதுக்காக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாததன் காரணமாக அவையெல்லாம் பெரிய விசயமாகவே இல்லை. மனிதர்களை கொன்று தின்னும் நரமாமிசர்கள் இருந்தார்கள் என்கிறது வரலாறு, இன்னும் ஆங்காங்கே இருந்து தொலைக்கிறார்கள் எனும் செய்தியும் உலவுகிறது. இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் பலியிடுதல் எனும் கொடுமைகள் இல்லை. கொன்றால் அவை உணவு என்றுதான் இருந்தது. இப்பொழுது திருடர்கள், அவர்கள் திருட்டுக்கு தண்டனை, தண்டனை கொடுக்க சட்டம், அதை பாதுகாக்க சட்ட நிபுணர்கள், காவல் அதிகாரிகள். அறிவு வளர வளர பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், ஆனால் பயம் அதிகரித்துப் போனது நம்மிடம்.

இரும்பு போன்றவைகளை உபயோக செய்யும் அறிவு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து முன்னூறு வருடங்கள் முன்னரே உருவானது. அந்த இரும்பு உலோகம் இன்று வீச்சருவா, வெட்டருவா, வேல், கத்தி என பரிணாமம் கொண்டது. இந்த உலோகங்களின் தன்மையினால் அவை துப்பாக்கிகளாகவும், பீரங்கிகளாகவும் பரிணமித்தது. வானில் பறக்கும் விமானம் கூட ஆயுதமாக மாற்றப்பட்ட கேவலமான நாகரிகம் நம்முடையதுதான். அந்த கேவலத்தை செய்ய ஒரு மதம் காரணமாக காட்டப்பட்டது காட்டுமிராண்டித்தனத்தினை விட மிகவும் கேவலமானது.

வாழ்க்கையில் சீரழிய முட்டாளாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அறிவினை முட்டாள்தனமாக உபயோகபடுத்த தெரிந்தால் அது போதும்.

முட்டாள்தனமான அறிவு குறித்து தொடர்வோம்.

---------

To earn money thorough Bingo Liner, click here

Friday 11 November 2011

தாம்பத்ய வாழ்க்கையும் தத்து பிள்ளையும்

பாரதியாரின் கவிதை வரிகளை கண்கள் மேய்ந்து கொண்டிருந்தது. 

பாயுமொளி நீ யெனக்கு பார்க்கும்விழி நானுனக்கு
தோயுமது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு 
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மையெல்லாம்; 
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!   

தொடர்ந்து அந்த கவிதை வரிகளை அசைபோட்டுக் கொண்டிருந்தபோது மனதுக்குள் சின்ன வரி ஒன்று முளைத்திருந்தது. 

காலமடி நீ யெனக்கு காதலடி நானுனக்கு

சந்தம் சரியாகவே அமைந்து இருந்தது போலிருந்தது. ஏதேனும் இலக்கணப் பிழைகள் இருக்குமோ என அணி பிரித்துப் பார்க்க தோணவில்லை. இந்த சின்ன வார்த்தைகளை பாரதியாரின் இந்த  கவிதை வரிகளில் தேடியபோது தென்படவில்லை. கவிதையினை முடிக்கும் தருவாயிற்கு வந்து சேர்ந்தது கண்கள். 

ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

பாரதியாரின் இந்த கவிதையின் கடைசிவரிகள் கண்டபோது பாவ்லோவ் எனும் ஒரு ஆராய்ச்சியாளனின் சோதனை மனதில் நிழலாடியது. பாவ்லோவ் எனும் ஆராய்ச்சியாளன் தான் வளர்த்த நாய்க்கு தினமும் காலையில் உணவு வைப்பானாம். உணவு வைத்தவுடன் ஒரு மணியை ஒலிப்பானாம். உணவினை கண்டதும் அந்த நாய்க்கு எச்சில் ஊறுமாம். இவ்வாறு தொடர்ந்து சில தினங்கள் செய்த பாவ்லோவ் ஒரு தினம் உணவு வைக்காமல் மணியை மட்டும் ஒலித்தானாம். அந்த மணி ஓசையை கேட்டதும் நாயின் வாயில் எச்சில் ஊறியதாம். இந்த சோதனையை சில முறை செய்து ஊர்ஜிதப்படுத்திய பாவ்லோவ் இதை நரம்புகளின் தன் உணர்ச்சிகள் என வரையறுத்தானாம்.

இந்த சோதனையை போலவே தன் காதலியை நினைக்கும்போது மனதில் இனிய சுவை ஏற்படுவதாக, தனது கற்பனை காதலி என்பவர் ஊனமற்ற நல்லழகு பொருந்தியவராக இருப்பவர் எனும் சாதாரண மனிதனின் கற்பனை மகாகவியின் கவிதை வரியில் தென்பட்டது.  

காலமடி நீயெனக்கு காதலடி நானுனக்கு

அர்த்தம் கொண்டா இந்த வரிகள் என்னுள் முளைத்தன?! இந்த வரிகள் முளைத்ததும் அர்த்தம் தேடிச் சென்றேனா என்பதே  புரியாதபோது மீண்டும் சில வரிகள் வந்து முளைத்தன. இசையின் சந்தத்திற்கு ஏற்ப வரிகள் அமைத்துக் கொள்வது சற்று எளிதுதான்.

கோலமடி நீயெனக்கு கெஞ்சுமொழி நானுனக்கு

தாம்பத்ய வாழ்க்கை. உறவுகளில் ஒழுக்கம் வேண்டும் என்பதற்காக, ஒருவனுக்கு ஒருத்தி என்று   உணர்த்தப்பட்ட வாழ்க்கை. திருமணம் என்பது இந்த தாம்பத்ய வாழ்க்கைக்கு அளிக்கப்பட்ட ஒரு அங்கீகாரம். இஷ்டப்பட்டவருடன் இணைந்து வாழ்ந்து விட்டு, கஷ்டம் மனதில் வரும்போது பிரிந்துவிடலாம் என்பதை மறுபரிசீலனை செய்ய சொல்லும் வாழ்க்கை. இந்த தாம்பத்ய வாழ்க்கையின் உன்னதம் குறித்த சிந்தனை அதிக அளவில் எழுவதில்லை. 

காமத்தின் இச்சை தணிக்கவோ, உடலோடு உடல் கொள்ளும் உறவுக்காகவோ அமைந்தது அல்ல இந்த தாம்பத்ய வாழ்க்கை. திருமணம் என்பது தேவையற்ற ஒன்று, ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழலாம் என்பதுமாய், ஒரு குடும்பம் என்றால் என்ன என்கிற உணர்வு குறைந்து போய்விட்ட இக்கால சூழலில் இந்த தாம்பத்ய வாழ்க்கை குறித்த சிந்தனை அதிக அளவில் எழுவதும் இல்லை. 

மோகமடி நீயெனக்கு முள்ளுமடி நானுனக்கு 

மனதோடு உடலும் சேர்வதுதான் தாம்பத்ய வாழ்க்கை. ஒருவரின் ஒருவர் உணர்வை அறிந்து, இருவருக்குமாய் சேர்ந்து ஏற்படுகின்ற உணர்வில் வருவதுதான் பேரின்பம். உணர்வற்ற நிலையில் ஒருவரும், தன் உணர்வை தீர்க்க வேண்டிய உறுதியில் மட்டுமே ஒருவருமாய் நடந்து கொள்கின்ற முறை  சரியான முறையும் அல்ல. உடலின் இச்சை தீர்க்க வேண்டி பரத்தையர் கூட்டம் நாடும் உடலைப் போன்றே காம இச்சையின் பொருட்டு கற்பனை உலகில் ஆடும் மனம் கொடியது. 

திருமணம் முடிந்த சில மாதங்களில் அந்நியோநியத்தை வெளிப்படுத்த ஒரு முத்திரையாய் குழந்தை. பிடிக்காமலே ஆடவரும், பிடிக்காமலே பெண்டிரும் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட பெற்றுக் கொள்வதற்காக இந்த மண்ணில் வந்து விழுந்த குழந்தைகள் ஏராளம். இந்த குழந்தைகளின் வாழ்விற்காக போராடும் போராளிகளாய் மாறியபின்னர் தாம்பத்ய வாழ்க்கை ஒரு சம்பிராதயமாகிப் போகிறது. 

காமமடி நீ யெனக்கு, குழந்தையடி நானுனக்கு 

இந்த குழந்தை பெற்றுக் கொள்தல் வரம்.  இந்த வரம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை. மலடி என்ற சொல், மங்கையருக்கு மழலைச் செல்வம் வாய்க்காத தருணத்தில் வந்து வாய்க்கின்ற ஒரு பெயர். அறிவியல் அறிவு குறைந்த கால காரணத்தினாலும், ஆடவன் வலிமை உடையவன் என்கிற ஆணவத்தினாலும் மலடன் என்ற சொல் முளைக்காமலே போனது.  'ஆண்மையற்றவர்' என்பதை வீரத்திற்கு சேர்த்துப் பொருத்திப் பார்த்தது உலகம். 

இன்றைய அறிவியல் வளர்ந்த சூழலில் எப்படி குழந்தை பிறக்கிறது என்பது குறித்த சிந்தனை பன்னிரண்டு வயது குழந்தைக்கும் கல்வி சொல்லித் தரப்படுகிறது. கற்றுக் கொள்பவரும், கற்றுத் தருபவரும் முறையோடு இருந்து கொண்டால் கற்றுக் கொள்வதில் தவறில்லை. காமத்தில் குரூரம் இல்லாதபோது காம உணர்வின் தலைவன் மன்மதனும், காமனும் இலக்கியங்களில் போற்றப்படும் தெய்வமாகிறார்கள். 

இந்த குழந்தை பிறப்புக்கு என பெண்களில் ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஷ்டீரோன் மட்டுமல்லாது, FSH (Follicular Stimulating Hormone), LH (Leutinising Hormone) முக்கிய பங்கு வகிக்கிறது. வயதுக்கு வந்துவிடுதல் என்பதன் அடையாளமாய் ஆணுக்கு குரல் மாற்றமும், அங்கங்களில் அங்கங்கே முடி வளர்வதுமாய் இருந்திட, பெண்ணுக்கு அடையாளமாய் அங்கத்தில் சில மாற்றமும், குரல் மாற்றமும் , மாதவிடாய் எனப்படும் ரத்த வெளியேற்றமும் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் பத்து பன்னிரண்டு வயதுகளில் இந்த ஹார்மோன்களால் ஏற்படுகிறது. 

முட்டை செல்கள் உருவாக்கிட ஈஸ்ட்ரோஜென், FSH (Follicular Stimulating Hormone) பெரும் உதவியாய் இருக்கிறது. மாதவிடாய் தொடங்கி பதினான்கு நாள்களில் LH (Leutinising Hormone) உதவியின் மூலம் இந்த முட்டை செல்களானது முட்டைப்பையில் (ovary) இருந்து வெளிப்பட்டு (oviduct) கருக்குழலில் பயணிக்கின்றது. கருத்தரித்தல் நடைபெறாத பட்சத்தில் ப்ரோஜெஷ்டீரோன் அளவு குறைந்து ரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது. இப்பொழுதெல்லாம் சுத்தம் பற்றிய விழிப்புணர்வும், இந்த மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்த வேண்டி வாங்க சொல்லும் துணி உறை விளம்பரங்களும் அதிகரித்து, 'வீட்டுக்கு விலக்காகி இருக்கேன்' என தனியாய் எவரும் போவதில்லை. 

இந்த கருக்குழலில்தான் முட்டை செல்லும், விந்து செல்லும் இணைந்து கருத்தரித்தல் நடக்கிறது. கருத்தரிக்கப்பட்ட முட்டையானது பயணித்து கருப்பை(uterus)தனை வந்து அடைகிறது. இப்பொழுது ரத்த நாளங்கள் உடைந்து போகாமல் தேவையான உணவுப் பொருட்கள் கிடைத்திட குழந்தை உருவாகி கருப்பையில் வளர்கிறது. இப்படி உருவாகும் குழந்தையை கடமைக்காக பெற்றுக் கொள்தல் என்பதும், காம இச்சையின் காரணம் மட்டும் கொண்டே உருவாக்கி அந்த குழந்தையை பேணி காக்காமல் உலகில் அல்லல்பட விடுவது எவ்விதத்தில் நியாயம்.  

'கர்வமடி நீ யெனக்கு, ஆர்வமடி நானுனக்கு' 

இந்த குழந்தையை பெற இயலாமல் போராடும் தம்பதிகள் அதிகம் உண்டு. பெண்ணின் கருவாயில் ஏற்படும் அடைப்பு, ஆணின் விந்துகுழாயில் அடைப்பு போன்றவைகளால் பெரும்பாலும் இயற்கையாக கருத்தரித்தல் நடைபெற வாய்ப்பில்லாமல் போகும். கருப்பையின் பலவீனம் கூட முக்கிய காரணமாகவும்  அமைகிறது. இத்தனை வருஷம் ஆச்சா? இன்னுமா குழந்தை பெத்துக்கிரலை? ஒரு குழந்தை போதுமா? இன்னொன்னு பெத்துகிறது? போன்ற வாக்கியங்கள் சர்வசாதாரணம். 

உடலுக்குள் கருத்தரித்தல் நடைபெற இயலாத பட்சத்தில் உடலுக்கு வெளியே கருத்தரிக்கும் முறையானது invitro fertilisation (IVF) கையாளப்பட்டு கருவினை பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தையை உருவாக்குவது இன்றைய சூழலில் அதிகரித்தாலும் இந்த முறைக்காக ஆகும் செலவுகள் அதிகம், (வெற்றி சதவிகிதமும் குறைவு, பக்க விளைவுகளும் அதிகம்,) மேலும் இந்த சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்படும் தம்பதிகள் பெரும்பாலும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். 

வாடகைத் தாய், எவரோ ஒருவரின் முட்டை செல், விந்து செல் மூலம் குழந்தை பெறுதல்  என்கிற அளவுக்கு எல்லாம் உலகம் முன்னேறிவிட்டது. செல்வதுக்குள் எல்லாம் செவிச்செல்வம் அச்செல்வம் மழலைச் செல்வம் என்றாகிப் போனது. குடும்பஸ்தன் என்பற்கான ஒரு அடையாளமாகவே இந்த சந்ததிகள் விளங்குகிறார்கள். 

'தேர்வுமடி நீ யெனக்கு, தீர்வுமடி நானுனக்கு' 

பெண் பார்த்து திருமணம் செய்த நாட்கள் என்பது போய் எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும் என்கிற அளவுக்கு, கருவில்தனிலே எந்த வியாதி இருக்கிறது என்பதை முதற்கொண்டு தீர்மானித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவ முறைகள் அதிகரித்துவிட்டன. இதை கருத் தேர்வு (embroyinic screening) என அழைக்கலாம். பெண்ணுக்கு என்ன குரோமோசோம்கள், ஆணுக்கு என்ன குரோமோசோம்கள் என தீர்வை கண்டபின்னர் 'பொட்ட பிள்ளைய பெத்துட்டே' என பெண்ணை திட்டும் காலம் போய்,  பெண் பிள்ளைக்கு ஆண்தான் காரணம் என சட்டம் பேச வாய்ப்பு வந்துவிட்டது. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிற காலம் பழுதாகிப் போகுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. 

''என்னங்க, நமக்குன்னு ஒரு குழந்தை இருக்கு. இன்னொரு குழந்தை பெத்துக்கிறதை விட ஒரு குழந்தைய தத்து எடுத்துகிரலாமா?'' வார்த்தைகள் வீரியமாய் வந்து விழுந்தன. 

''எதற்கு தத்து எடுக்க வேண்டும்?'' வார்த்தைகளில் கோபம் சிதற எத்தனித்தது. 

''எனக்கு பெண் குழந்தை ஆசையாய் இருக்கிறது, நாம் ஒன்று பெற்றுக் கொள்ள நினைத்து அதுவும் ஆணாக பிறந்துவிட்டால் என்ன செய்வது?'' வார்த்தைகளில் மென்மையான வலி தெரிந்தது. 

''எப்படி தத்து எடுப்பாய்? குழந்தைகள் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செல்வாய். அதில் எந்த குழந்தை அழகாக இருக்கிறது என கண்களால் அளவு எடுப்பாய். எந்த குழந்தை அறிவாக இருக்கிறது என தேர்வு ஒன்று வைப்பாய். அத்தனை குழந்தைகளில் ஒரு குழந்தை ஒன்றை உனது மனதுக்குப் பிடித்தது போல எடுத்து வருவாய். அத்தனை குழந்தைகளையும் ஏக்கம் கொள்ள செய்துவிட்டு ஒரு குழந்தையை மட்டும் தனியே எடுத்து வருவது சரியாகவே எனக்குப் படவில்லை.  தத்து எடுப்பதாக இருந்தால் மொத்த ஆதரவற்றோர் குழந்தை இல்லத்தை தத்து எடு'' மனதில் உறுதியாய் இருப்பது சரியோ தெரியவில்லை. 

''ஒரு குழந்தையை வளர்க்கத்தான் தத்து எடுக்க சொன்னேன்'' வார்த்தைகள் வலுவிழந்து இருந்தன. 

இந்த தத்துப் பிள்ளையும், மருத்துவ முறையால் தேர்வு செய்யப்படும் பிள்ளைக்கும் சின்ன வித்தியாசம் மட்டுமே உண்டு. குழந்தைகள் பெற இயலாத தம்பதிகள் இந்த தத்து எடுக்கும் முறைக்கு செல்ல பயப்படுகிறார்கள். சொந்த குழந்தை போல வருமா என்கிற உணர்வுடன் வாழ்வதாகவே சொல்கிறார்கள். ''உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினார்கள்'' என குழந்தையிடம் சொன்னால் பெற்ற தாய் எங்கே என மனம் அல்லாடத்தான் செய்யும். அதைப்போலவே தத்து எடுத்துக் கொண்டாலும் மனம் விலகிய வண்ணம் இருக்கும் என்பதை உறுதிபடுத்த வழியில்லை. 

'என்ன தவம் செய்தனை, தாயே யசோதா 
என்ன தவம் செய்தனை
பரபிரம்மம் உன்னை அம்மாவென அழைக்க 
என்ன தவம் செய்தனை'

பல வழிகளில் முயன்று குழந்தை பெறுகின்ற வழி அடைக்கப்பட்டால் காலத்தை வீணாக்காமல் ஒரு குழந்தையாவது தத்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென குழந்தை இருந்தாலும் எவரோ பெற்று விட்டார்கள் நமக்கென்ன தலையெழுத்தா என்று இருக்காமல் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம்  ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வுலகம் குழந்தைகளின் கையில் உள்ளது. 

'நாம குழந்தைய தத்து எடுத்துகிரலாம்' வார்த்தைகள் வண்ணமிட்டுக் கொண்டிருந்தன. 

'நிசமாவா சொல்றீங்க' சந்தோசமாக விரிந்த கண்களில் 'அம்மா' என எங்கோ ஒரு குழந்தையின் அழுகுரல் ஒலிக்கக் கேட்டு, சில வரிகள் முளைத்த மனதில் ஆனந்தமும், பாரதியாரின் கவிதைகளை மேய்ந்த கண்களில் கண்ணீரும் எட்டிப் பார்த்தது. காலமடி நீ யெனக்கு, காதலடி நானுனக்கு.

வானமடி நீ யெனக்கு, வண்ண மயில் நானுனக்கு
பானமடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு 
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!

Thursday 10 November 2011

பல் வலி கொல்லும்?

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது முதுமொழி. பல் போனால் சொல் போச்சு என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் பொக்கை வாய் என கேலி பேசுவோர் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல் என சில பிரிவுகள் உண்டு. 

இந்த பல்லானது ஆறு அல்லது பத்து மாதங்களில் குழந்தைக்கு முளைக்க தொடங்கிவிடும். முன்புறம் வளரத் தொடங்கும் பல்லானது இரண்டு  மூன்று வருடங்களுக்குள் பக்கவாட்டில் வளர்ந்து முழுமை பெறும். இப்படி வளரும் பற்கள்தான் பேச்சுக்கும், மெல்வதற்கும் உறுதுணையாக இருக்கின்றன. இப்போதைய தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் பல்லின் அமைப்பை  மாற்றியமைக்க கூடிய வசதிகள் வந்துவிட்டன. தெத்துப் பல், சொத்தை பல், கோரப் பல் என பல்லானது முக அழகை மாற்றியமைத்துவிடும் தன்மை உடையது. 

நமது ஊரில் சிறு குழந்தையின் பல்லானது விழுந்துவிட்டால் அதை எடுத்து பத்திரமாக வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லையெனினும், சில நாடுகளில் அந்த விழுந்த பல்லை எடுத்து தலையணையின் கீழே வைத்து படுத்துக் கொண்டால் பணம் கிடைக்கும் என அக்கால சிறுவர்கள் நம்பினார்கள் என்கிற கதை உண்டு. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் தனது பெற்றோர்கள் தான் பணத்தை தலையணைக்கு கீழே வைக்கிறார்கள் என்பதை அறிந்து இருந்தாலும் இந்த நிகழ்வை மிகவும் ரசிக்கிறார்கள். மேலும் இந்த குழந்தைகளின் பல்லானது பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக்கொள்ள பெருமளவில் உபயோகப்படுகிறது. 

இந்த பல்லானது எனாமல், டென்டின், சிமென்டம் மற்றும் பல்ப் எனும் ரத்தநாளங்கள், எலும்பு மற்றும் நரம்புகள் கூடிய தசைகளால் ஆனது.  ஈறு, எளிறு என்று தமிழில் சொல்வார்கள். எனாமல் மிகவும் உறுதிவாய்ந்த ஒன்று. இந்த பல் பலமானதற்கு காரணம் கால்சியம் திசுக்களில் சேர்ந்து ஒரு உறுதிபடுத்தப்பட்ட தன்மையை உருவாக்குகிறது. இதன் காரணமாக கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை நாம் உண்பது அவசியமாகிறது. நாம் எத்தகைய கால்சியம் உணவை உண்டாலும், பல்லை சுத்தமில்லாமல் வைத்துகொண்டால் பல வியாதிகள் வர வாய்ப்புண்டு. ஆடு மாடு என்ன பல்லா விலக்குது என நகைச்சுவையாய் சொல்பவர்கள் உண்டு. அவை வேக வைத்த உணவு பண்டங்களை உண்பது இல்லை அதனால் நமக்கு ஏற்படும் தொல்லைகள் போன்று அவைகளுக்கு இல்லை என சொல்பவர் உண்டு. 

செங்கல் பொடி, சாம்பல் பொடி என இவையெல்லாம் வைத்து பல் துலக்குபவர்கள் உண்டு. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என பழமொழி உண்டு. பல்லில் ஏற்படும் பல துயரங்களுக்கு காரணம் பாக்டீரியாக்கள். 

இந்த பாக்டீரியாக்கள் எங்கும் சர்வ சாதாரணமாக திரிவது போல நமது வாயில், பல்லில், நாக்கில் சுழன்று திரியும். அப்படி திரியும் பாக்டீரியாக்கள் சில நல்லவைகள் எனினும், அதன் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க நமது பல்லில் அது ஒரு கூட்டம் அமைத்து வெள்ளைநிற பற்களை பழுப்பு நிறமாக்குவதோடு, பல்லில் ஓட்டை விழ வழி செய்கின்றன. நாம் உண்ணும் உணவு பெரும்பாலும் இந்த பாக்டீரியாக்களுக்கு பெறும் தீனிகளாக அமைவதால் அவை கொழுத்து திரிகின்றன. இதன் காரணமாகவே நாள் ஒன்றுக்கு நான்கு முறை பல் துலக்க வேண்டும். அதுவும் ஒவ்வொரு முறை பல துலக்கும்போது பல் சிறு இடைவெளியை மிகவும் சுத்தமாக துலக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். இந்த சிறு இடைவெளியே பின்னாளில் பெறும் துயரமாக காரணமாகிறது. இந்த பாக்டீரியாக்களே பிளேக் எனப்படும் படிமங்களை பல்லில் ஏற்பட வலி செய்கிறது. 

சின்ன சின்ன புண்கள் நமது வாயில் ஏற்படுவதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் மென்மேலும் வளர்ச்சி பெறுகின்றன. நாம் தெரியாமல் நமது வாயின் பக்க, முன்  தசைகளில் கடிப்பதால் இந்த சின்ன புண்கள் ஏற்படலாம். நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. பெரும்பாலோனோர் பல் மருத்துவரை சென்று பார்க்க பயப்படுகின்றனர். 

பல்லில் வலி ஏற்பட்டால் உடனே ஒரு பாரசிட்டமாலோ, ஐபுப்ரோபேனோ போட்டதுடன் சரியென பலர் இருந்துவிடுவதுண்டு. சாதாரண புண்களால் இந்த பல்லின் தசைகளில் சீழ் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது பலருக்கு தெரியாத விசயம், இதன் காரணமாகவே வாய் துர்நாற்றம் ஏற்படுவது உண்டு. நாம் உண்ணும் உணவு மூலமாக நமது வயிற்று துர்நாற்றம் வாயின் மூலமாக வெளிப்படும். இத்தகைய விசயங்களை கண்டு காணாமல் இருப்போர்கள் நாட்டில் மிகவும் அதிகம். ஒரு குளோஸ் அப் பல்பொடியை எடுத்து விலக்கிவிட்டலோ, சூயிங் கம் போன்ற வாசம் தரும் விசயங்களை வாயில் அள்ளிப்போட்டாலோ எல்லா பிரச்சினைகளும் சரியாகி விடும் என கருதுவோர் உண்டு. 

குறைந்தது மூன்றோ அல்லது ஆறு மாதம் ஒருமுறை பல் மருத்துவரை சென்று பார்த்து வருவது மிகவும் நல்லது. சென்சிடிவ் பல் என சொல்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது எதனால் ஏற்படுகிறது எனில் நமது பல்லில் கீழுள்ள தசையானது பழுதுபட்டுவிடுவதாலும், பல்லை இணைக்கும் நரம்புகள் மீது எளிதாக வெளிப்பொருட்கள் படுவதாலும் இந்த கூசும் உணர்வு ஏற்படுகிறது. இதை சில பல் பொடிகள் மூலம் கட்டுப்படுத்த இயலும், எனினும் பல் மருத்துவரிடம் சென்று காண்பிப்பது நல்லது. 

பல் வலி வந்தால் கிராமப் பகுதிகளில் மூக்கு பொடி வைத்து அந்த வலியை போக்க முயற்சிப்பவர்கள் உண்டு. இப்படியெல்லாம் செய்வது தவறு என்பதை வலியுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. புகையிலையின் காரணமாக வாயில் கேன்சர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேலும் பல்லை துலக்கும்போது ரத்தம் வருவது உண்டு, இதற்கு காரணம் பல் தசையில் இணைந்திருக்கும் ரத்த நாளங்கள் உராயப்படுவதாகும், எனவே பல்லை துலக்கும்போது பாத்திரத்தை துலக்குவது போல முரட்டுத்தனமாக துலக்குவது தவிர்த்தல் நலம்.

மேலும் பல் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள உடனே பல் மருத்துவரை அணுகவும். 

பல் மருத்துவரை காண பயந்து கொண்டு பல்லில் உருவான வலியை பொருட்படுத்தாமல் இருந்த ஒரு கல்லூரி மாணவி தனது பல் தசையில் சீழ் பிடித்து அதன் மூலம் இறந்து போனார் என்பது துயரமான செய்தி. 

இந்த பல்லில் உருவாகும் பாக்டீரியாக்கள் இருதய ரத்த நாளங்களை பாதிக்கும் தன்மை உடையது என ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. 

பல் துலக்கியாச்சா? என எவரேனும் கேட்டால் கோபம் படாதீர்கள். பல் துலக்கவில்லை எனில் எந்த நேரமாக இருந்தாலும் சரி உடனே பல் துலக்கிவிடுங்கள். பலர் காபியிலே பல் துலக்கும் பழக்கம் உடையவர்களாக நமது ஊரில் இருப்பார்கள். அவற்றை எல்லாம் தவிர்த்து விடுங்கள். 

வாயை சுத்தப்படுத்தாமல் தண்ணீரோ, காபியோ அருந்தினால் அந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் சென்று அங்கிருக்கும் அமிலத்தினால் செத்துவிடும் என விவாதம் செய்பவர்கள் உண்டு. இந்த விவாதம் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு பல்லை துலக்குங்கள். 

இறை அவதாரம் எனினும் அவரும் பல் துலக்க வேண்டும் என்பதை நினைத்துதான் ஆண்டாள் இப்படி எழுதினாரோ என்னவோ?

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ 
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. 

வெண்சங்கே உன்னை ஊதுகின்ற அந்த பரந்தாமனின் வாய் வாசனையை கூறாயா என சொல்லும் ஆண்டாளின் கற்பனைதான் எத்தகையது. 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பது நாம் நமது மனதை சுத்தமாக வைத்திருப்பதோடு பல்தனையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொன்னதுதான். 

பல் இருந்தால் தான் இளிக்க முடியும். பல் இருந்தால் தான் வார்த்தை சொலிக்க முடியும் என இத்துடன் பல் புராணம் முடிக்கிறேன்.