Monday 31 October 2011

கம்யூனிசமும் கருவாடும் - 7


 கம்யூனிசம் என்றால் என்ன, அது என்ன சொல்ல வருகிறது என்பது அத்தனை சிரமம் இல்லை. இந்த கம்யூனிசம் குறித்து ஒரு தளத்திலிருக்கும் விசயத்தை அப்படியே எழுதி, தேவையிருப்பின் மேற்கோளிட்டு காட்டுவேன், அதாவது திருடி எனது தளத்தில் பிரசுரித்து கம்யூனிச பிரச்சார பதிவாக இருக்க வேண்டாம் என்பதால் எனது எழுத்துகளின் மூலமே கொடுக்கிறேன். இந்த கட்டுரையின்  கடைசி அத்தியாயத்தில் அன்றைய தினத்தில் என்ன மார்க்சும், இங்க்கேல்சும் கம்யூனிசம் பற்றி நினைத்தார்களோ அது குறித்த சிந்தனை இப்படியாக முடிகிறது. 

'கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.'' நன்றி மார்க்சிஸ்ட் தளம்


இன்றைய அனைத்து கம்யூனிஸ்ட்கள் இதை எல்லாம் படித்து இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் எதற்காக கம்யூனிசம் ஆரம்பித்தது என்கிற அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு இவர்கள் எல்லாம் கம்யூனிசத்தில் இணைந்து இருந்தால் இவர்கள் தங்களை கம்யூனிஸ்ட்கள் என்று பெருமிதப்பட்டு கொள்ளலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொண்டு இவர்கள் பண்ணும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது. இதனால் உண்மையான கம்யூனிஸ்ட்களுக்கு அதாவது தங்களை தாங்களே அர்பணித்து கொண்டவர்களுக்கு, இவர்கள் அவப்பெயரைத் தேடி தந்துவிடுகிறார்கள். 

சமூக அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஆதரவு? இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் என அரசியல் கட்சிகள் ஆரம்பித்ததுதான் மிச்சம். மாவோயிஸ்ட், நக்சலைட், யிஸ்ட் என யிஸ்ட் என கூவியதுதான் மிச்சம். அதுவும் கேவலம், இந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும், அந்த கட்சியிடம் எத்தனை தொகுதி கிடைக்கும் என நாய்படாத பாடு பட்டதை கண்டு கம்யூனிஸ்ட்கள் குறித்து நகைப்பு மட்டுமே மிஞ்சும். அதுவும் இந்த கம்யூனிஸ்ட்கள் தங்களது பைக்கு எத்தனை பைசா வரும்படி கிடைக்கும் என முதலாளிகள் அறைக்கு சென்று கை கட்டி பேசி வந்ததை பார்த்தது இருக்கிறேன். இதே கம்யூனிஸ்ட்கள் வெளிநாட்டு கூலிப்படைகளாக அலைந்து திரிவது கூட அவமானம். இவர்கள் இங்கே அமைப்பு நடத்த எவரோ பணம் தருகிறார்கள் எனும் குற்றச்சாட்டு உண்மையாகவே இருக்க கூடும். உழைக்காமல் பணம் எப்படி வரும்? இவர்கள் கம்யூனிஸ்ட்கள் என சொல்லிக்கொள்ள அருகதையற்றவர்களா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது அத்தனை கஷ்டமில்லை. இவர்களைப் போன்ற ஒரு சிலரால் மொத்த கம்யூனிசத்திற்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. 

இன்றைய சூழலில் முதலாளித்துவத்தை வெறுக்கின்ற பலர் இருந்தாலும் இந்த கம்யூனிசம் போர்வைக்குள் செல்ல மறுக்கிறார்கள். முதலாளி வர்க்கம். பாட்டாளி வர்க்கம். கூலி வேலை செய்பவர்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கம். நானும் பாட்டாளி வர்க்கம் தான். நானும் கூலி வேலைதான் செய்கிறேன். எனது உழைப்பிற்கு அதிகமோ, குறைவோ மாதம் மாதம் ஊதியம் பெற்று கொள்கிறேன். எனது உழைப்பில் கிடைக்கும் வரவுதனில் பங்கு எதுவும் எனக்கு கிடையாது. ஆனால் என்னை பாட்டாளி வர்க்கம் என சொல்லக்கூடாது, என்னை நடுத்தர வர்க்கம் என சொல்ல வேண்டும் என பிரிக்கிறார்கள். 

ஒரு தொழிற்சாலை வைத்திருப்பவர் முதலீடு செய்கிறார். இந்த முதலீட்டு பணம் அவரது கைகளில் இருந்து வருகிறது, அல்லது எங்காவது கடன் வாங்குகிறார். இந்த முதலீட்டு பணத்தையோ, அல்லது அவரது உழைப்புக்கு  அவர் உபயோகபடுத்தும் அறிவையோ இந்த பாட்டாளி வர்க்கத்தினர் பகிர்ந்து கொள்வதில்லை. இவர்கள் தங்கள் உடல் உழைப்பை மட்டுமே தருகிறார்கள். இதையெல்லாம் மறந்து இவர்கள் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிறது கம்யூனிசம். 

முதல் அத்தியாயத்தில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த கம்யூனிச அடிப்படை சிந்தனையான அனைவரும் பொது என்கிற கொள்கையானது ரஷ்யாவில் நிலம் பொதுவுடைமை, அயர்லாந்து போன்ற நாடுகளில் பொதுவுடைமை நிலம் என சில குழு சமுதாயங்கள், கிராம சமுதாயங்கள் எல்லாம் இருந்து இருப்பதாக பல அறிஞர்கள் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு பின்னர் இந்த சமுதாய கட்டமைப்புகள் ஒழிந்து ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட தொடங்கினர். இன்றைய நிலைமையில் இந்த வேறுபாடு அதிகமாகி பாட்டாளி வர்க்கத்தினர் ஒடுக்கப்பட்டதோடு, போராட்டத்தில் தோற்று போயினர். இந்த நிலைமை கார்ல் மார்க்ஸ் காலத்தில் அதிகமாகவே இருந்து இருக்கிறது. அவர் காலம் போகட்டும், ஆனால் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் குடும்பம் எப்படி தெரியுமா இருக்கிறது? இவர்களின் நிலம் எல்லாம் வெவ்வேறு. இவர்கள் வேலைக்கு ஆள் வைத்து கொள்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் என கத்துகிறார்கள். பாவம் கார்ல் மார்க்ஸ். 

இந்த அத்தியாயத்தில் எப்படி பல வர்க்கங்கள், அதன் உட்பிரிவுகள் இருந்திருக்கிறது என மத்திய காலம், ரோம பேரரசு காலம் என குறித்து வைக்கிறார். நிலபிரபுத்துவம் அழிந்து நவீன முதலாளித்துவம் வந்தாலும் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டும் அதற்குரிய புது நிலைமைகளை உருவாக்கி வந்துள்ளதாகவே மார்க்சும், இங்கெல்சும் ஆதங்கபட்டார்கள். இதற்கெல்லாம் ஒரு மாற்று வேண்டாமா என எதற்கு நாம் சிந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். 

எப்படி இந்த முதலைத்துவம் அதாவது முதலாளித்துவம் வளர்ந்தது என்பதை கோடிட்டு காட்டுகிறார் மார்க்ஸ். ஒரு அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, கடல்வழி அதாவது நன்னம்பிக்கை வழி பயணம் என பிற நாடுகளுக்கு செல்லும் வழியே இந்த பண்ணையடிமையிலிருந்து வெளியேறிய நகரத்தார் பலருக்கு இந்த முதலாளித்துவ கூறுகள் வளர்க்க வழிபோட்டது. அதோடும்ட்டுமில்லாமல் கிழக்கிந்திய, சீன சந்தைகள் என உலக பொருளாதார இயக்கமே இந்த சீர்குலைவுக்கு அடிகோலிட்டது என குமுறுகிறார் மார்க்ஸ். 

கைவினை குழுமம் இந்த சந்தைகளுக்கு ஈடுகட்ட முடியாததால், பட்டறை குழுமம் உருவானது. ஆனால் இந்த தனிதனி பட்டறைகள் தங்களது உழைப்பில் பிரிவினை கொண்டாடின. இந்த பட்டறைகளால் கைவினை குழுமம் நலிந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அதாவது எப்படி ஒரு மனித சமூகம் தொழில்வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள புதிய புதிய வழிமுறையை கண்டது என்பதை குறிப்பிட்டு அன்றைய காலத்தில் எப்படி இந்த தொழில்முறை உருவாகின என்பதை விளக்குகிறார்கள் இருவரும். இந்த பட்டறை தொழில் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால் நீராவி, எந்திரங்கள் எல்லாம் உருவானது. கைவினை தொழிலாளிகள் பாட்டாளி வர்க்கத்தினர். அதற்கு அடுத்து பட்டறை தொழில் வைத்திருந்தவர்கள் நடுத்தர வர்க்கத்தினர். அதையெல்லாம் தாண்டி இந்த எந்திரங்கள் எல்லாம் வைத்து தொழிலில் புரட்சி செய்தவர்கள் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர். 

சந்தை புரட்சியை ஈடுகட்ட தொழிற்புரட்சி உருவானது. அந்த தொழிற்புரட்சி தான் கம்யூனிசம் கருவாடாகிப் போனதற்கு காரணம். பொதுவாக ஒரு பொருளை உருவாக்கினால் அந்த பொருளானது பிற நாடுகளுக்கு பிற இடங்களுக்கு விற்பனைக்கு செல்ல வேண்டும், அதற்கு போக்குவரத்து மிகவும் அவசியம். கழுதையிலும், குதிரையிலும், மாடுகளிலும் என கட்ட வண்டி, குதிரை வண்டி என உருவாக்கி இருந்த காலம் போய், ரயில், கப்பல் போக்குவரத்து என தொடங்கியதால் இந்த உலக சந்தையில் முதலாளிகள் அளப்பரிய வளர்ச்சியை அடைந்தார்கள். 

இப்படியாக அந்த முதலைத்துவம் பற்றி மார்க்சும், இங்க்கேல்சும் கோடிட்டு காட்டுகிறார்கள். இந்த முதலைத்துவம் பல வர்க்கங்களை பின்னுக்கு தள்ளியது. அதோடு அரசியலும் வளர்ச்சி அடைந்தது, ஆங்காங்கே போராட்டமும் வெடித்தது. மேலும் இந்த அத்தியாயம் பல விசயங்களை அலசுகிறது. அதனை அடுத்து பார்ப்போம். 

இப்பொழுது உங்களுக்குள் நீங்கள் கேட்க வேண்டிய ஒரு கேள்வி.

பிற்போக்காளர்கள் யார்? முற்போக்காளர்கள் யார்? 

முற்போக்கு சிந்தனை உடையவர்கள் எல்லாம் முதலாளிகள். பிற்போக்கு சிந்தனை உடையவர்களே பாட்டாளிகள். அந்த பாட்டாளிகளை சூறையாடி கொண்டு வருகிறோம். வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைத்தது எவரின் குற்றம்? அந்த வளர்ச்சிக்கு துணையாய் நின்றது பாட்டாளிகளின் குற்றமா? உழைத்தால் மட்டுமே உணவு என்கிற நிலை இருந்ததால் உழைக்காமல் உயிர் துறக்க பாட்டாளிகளின் உயிர் ஒன்றும் போராளிகளின் உயிர் இல்லை. போராளிகள் எவரும் நிலத்தில் உழைத்து பணம் சம்பாதித்ததை வரலாறு குறிக்கவில்லை. இவர்கள் பாழாய் போன பாட்டாளிகளின் மிச்சம் மீதி இருந்த உழைப்பின் பலனையும் சுரண்டி தின்றார்கள். இதில் பாட்டாளிகளுக்கு பெருமை வேறு. எங்களுக்காக போராடுகிறார்கள் என. இந்த போராட்ட புரட்சிகர இயக்கம் தொடங்குவதில் பல காலம் தொலைந்தது என்கிறார் கார்ல் மார்க்ஸ். அதன் காரணமாகவே அவர் தொழிலாளர்களை ஒன்று கூட சொன்னார். போராளிகளை அல்ல. 

இது போன்ற சமூக சீரழிவு தொடங்கியபோது தங்களது நிலைமையை உணராமல் அதற்கு அடிபணிந்து நின்றது எவர் குற்றம்? உழைப்பை சுரண்டுகிறார்கள் என்கிற உணர்வே இல்லாம் வாழ்ந்த அவர்களுக்கு யார் இருந்தார் வழிகாட்டியாய், அல்லது இன்றும் எவர் இருக்கிறார் வழிகாட்டியாய். ஐம்பது ரூபாய்க்கு சம்பாதிக்க வேண்டியது, நாற்பது ரூபாய்க்கு தண்ணி அடிக்க வேண்டியது, பத்து ரூபாய்க்கு சீட்டு ஆட வேண்டியது. இப்படி தங்கள் குடும்பத்தின் மேன்மைக்கென உழைக்காமல், தங்களை தாங்களே அழித்து கொள்ள உதவிய பாட்டாளிகள் நிலைமையை தனது வசமாக்கி அரசியல் கட்சி அமைப்புகள் ஆடும் ஆட்டம் எத்தனை. தங்களுக்கு தாங்களே தலித் என்று ஒரு பட்டம் வேறு. சிறுமைபடுத்தி கொள்ளாதீர்கள். நாங்கள் எல்லாம் தலித் இல்லை, நாங்கள் எல்லாம் மனிதர்கள் என சிந்தியுங்கள். இந்த போராட்டத்துக்குதான் கார்ல் மார்க்ஸ் கூப்பாடு போட்டார். அதாவது முதலாளிகள் அழிக்கப்பட வேண்டுமென்பது அனைவருமே உழைக்கவேண்டும் என்பது. அனைவருமே பலன் அடைய வேண்டும் என்பது. 

தலித் என்பவரோ, தாழ்த்தப்பட்டவரோ தனக்கு தகுதி இல்லாத நிலையினை, தனது குல தகுதியால் பெற்று கொள்வது என்பதை கம்யூனிசம் ஒருபோதும் ஆதரிப்பது இல்லை. (தொடரும்). 

Sunday 30 October 2011

விவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா?

திருமணம் முடித்துவிட்டு சேர்ந்து வாழ முடியாமல் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து அதுதான் சரியான முடிவு என வாழும் சக மனிதர்களுக்கு எனது வருத்தங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்துவிட்டு வேறு வழியின்றி அதுதான் சரியான முடிவு என சேர்ந்து வாழும் சக மனிதர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

திருமணம் முடித்ததன் அவசியம் புரிந்து வாழ்க்கையை மிகவும் மென்மையாக நேசித்து வாழும் சக மனிதர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். 

இப்படி பூங்கா ஒன்றில் எனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த அந்த வயதானவரைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஒரு சில வாரங்கள் மட்டுமே அவரை பார்க்கின்றேன். அவர் எழுதி கொண்டிருந்ததை கண்டதும் எனக்குள் அவரிடம் பேச வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டியது. எப்படி பேசுவது என்ற யோசனை எதுவும் எழுந்திடாமல் அவரது எழுத்துகளையே விசயமாக பேசினேன். 

'என்ன சார், எதுக்காக இப்படி எழுதிட்டு இருக்கீங்க?'

'என்னுடைய அனுமதி இல்லாம நான் எழுதுறதை படிக்கிறது உனக்கு அநாகரிகமா தெரியலையா?'

'சாரி சார், நீங்க எழுதினது சுவாரஸ்யமா இருந்துச்சி அதுதான் பக்கத்து சீட்டுல உட்கார்ந்திருக்கவங்க படிக்கிற பேப்பரை எட்டி பார்க்கிறமாதிரி பாத்துட்டேன்' 

'உனக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆச்சு?'

'என்னோட பர்சனல் விசயத்தை நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படறது உங்களுக்கு அநாகரிகமா தெரியலையா சார்?' 

'நான் சொன்னதையே நீ சொல்ற, சொல்லு எத்தனை வருசம் ஆச்சு?'

'ஆறு வருசம் ஆச்சுங்க சார், சில நேரத்துல எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கும்'

'ஏன் கல்யாண வாழ்க்கை புளிச்சி போச்சா?'

'இல்லைங்க சார், சில நேரங்களில் அப்படி தோணுறது சகஜம்தானே, எத்தனையோ பிரச்சினைகள், எத்தனையோ சுமைகள், நம்மளை விட ரொம்ப கஷ்டபடறவங்க இந்த உலகத்துல வாழ்ந்தாலும் நமக்கு வந்திருக்கிற பிரச்சினைதான் பெரிய பிரச்சினைன்னு தோணுமில்லையா சார்? எதுக்குடா இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நினைப்பு வருமில்லையா சார்'

'வேலை பார்க்கிறியா, குழந்தை இருக்கா'

'ஆமா சார், வேலை பார்க்கிறேன், ஒரு ஆணு, ஒரு பொண்ணுன்னு ரெண்டு குழந்தை இருக்காங்க, உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே சார் அதுவும் பொதுவா இப்படி எழுதுறத பத்தி'

'நான் ரிடையர்டு ஆயி ஒரு வருசம் ஆகுது. எனக்கு ஆறு குழந்தைங்க. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு. போன மாசம் தான் கடைசி பொண்ணு என் மருமகன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கனும்னு வந்து நிற்கிறா, கல்யாணம் ஆகி ஒரு வருசம் கூட ஆகலை' 

'சாரி சார், உங்க மனைவி இருக்காங்களா சார்?' 

'ம்ம்... இருக்கா. ரொம்பவும் நொந்து போய் இருக்கா' 

'சார், தப்பா நினைக்கலைன்னா எதுக்கு உங்க பொண்ணு விவாகரத்து வாங்கனும்னு நினைக்கிறாங்க?'

'என்னோட மருமகன் நிறைய பொண்ணுகளோட பழக்கம் வைச்சிருக்காராம், இவகிட்ட அன்போட இருக்க மாட்டேங்கிறாராம், எப்பவும் சண்டை சச்சரவுதானாம், அதானால அவரோட வாழப் பிடிக்கலைன்னு வந்து நிற்கிறா'

அவரின் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீர் என்னை என்னவோ செய்தது. 

'சார், பொதுவா பிரச்சினைனா பொண்ணுங்க அவங்க அம்மா வீட்டுக்கு போறது சகஜம் தானே சார், நீங்க எடுத்து சொன்னீங்களா, அதுவும் இத்தனை வருசம் நீங்க வாழ்ந்த வாழ்க்கை பத்தி சொன்னீங்களா சார்' 

'நீ சொன்னியே, எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைப்பு வரும்னு. அந்த மாதிரி ஒரு நாலு கூட நான் நினைச்சதில்லை. கல்யாணம் பண்ணின அடுத்த நிமிசமே அவதான் என் வாழ்க்கை, நான் தான் அவ வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன். அதை என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப தெளிவாவே சொல்லிட்டேன், நாங்களும் அவகிட்ட ரொம்ப அன்பாவே சொல்லிப் பார்த்தோம் ஆனா ஒரு முடிவா இருக்கா, என்ன பண்றதுன்னு தெரியலை, அதான் தனியா இந்த பார்க்குக்கு வந்து போய்ட்டு இருக்கேன், எதாச்சும் முடிவு கிடைக்காதான்னு' 

'சார், நான் கூட என் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணிருவேன்னு பல தடவை மிரட்டி இருக்கேன், ஆனா பெத்த புள்ளைங்க, சுத்தி இருக்கற சமுதாயத்த பாத்து அந்த நினைப்பு செத்து போயிருக்கு சார், அதுபோல என் பொண்டாட்டியும் என்னை பல தடவை மிரட்டி இருக்கா. ஆனா இதுவரைக்கும் அப்படி ஒரு எல்லைக்கு போனதில்லை சார். அதுக்கு தைரியம் இல்லைன்னு இல்லை சார், அவசியமில்லைன்னு ரெண்டு பேருக்குமே தோணும் சார்' 

'அதுதான் ரெண்டாவது வாக்கியம். வேற வழியில்லைன்னு சேர்ந்து வாழறது. இப்படித்தான் ரொம்ப பேரு வாழறாங்க. வாழ்க்கையோட அடிப்படையை புரிஞ்சிக்க முடியாதவங்க. இவங்களை விட முதல் வாக்கியத்துல சொன்னவங்க எவ்வளோ மேல். வேற வழியில்லன்னு பிரிஞ்சி போயிருரவங்க. ஆனா இதனால பெருமளவு பாதிக்கப்படறது அவங்களோட குழந்தைங்க. நீ ரெண்டாம் வகை' 

'இல்ல சார், நான் மூன்றாம் வகை. என்னால பிரிஞ்சி போக முடியும் சார். அவளாலயும் பிரிஞ்சி போக முடியும் சார். ஆனா கல்யாணம் எதுக்கு பண்ணினோம் அப்படிங்கிறதை புரிஞ்சி வாழறோம் சார். கருத்து வேறுபாடு இல்லாத வாழ்க்கை ரொம்ப சிரமம் சார். ஒரே மொழி பேசத்தான் சார் ஆசை. சில நேரங்களில வாய்க்கிறது இல்லை, அதுக்காக மொத்த வாழ்க்கையும் தொலைக்க ஆசை இல்ல சார்'

'என் பொண்ணுக்கு இது புரியலையே, எல்லா பிள்ளைகளும் நல்லாத்தான் இருக்காங்க, இவ மட்டும் எதுக்கு இப்படி. மருமகன் கிட்ட பேசிட்டேன், அவர் விவாகரத்து பண்ண சம்மதிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு, ஆனா இவதான் ஒரேயடியா வம்பா நிற்கிறா'

'சார், உங்க மருமகன் கிட்ட பிரச்சினை இருக்கு சார், அவரை  உங்க பொண்ணு விருப்பப்படி வாழ சொல்லுங்க சார், எல்லாம் சரியாப் போயிரும்' 

'நீ என்னப்பா சொல்ற'

'அனுபவத்தில சொல்றேன் சார். ரொம்ப ஈசி சார், விவாகரத்து பண்றது அவ்வளவு ஈசின்னா வாழறது கூட ரொம்ப ஈசி சார். புருஷன், பொண்டாட்டி இவங்க ரெண்டு பேரு நடுவுல எந்த கொம்பனும் உள்ள வரக்கூடாது சார். புருசனுக்கு பொண்டாட்டிதான் எல்லாம், பொண்டாட்டிக்கு புருஷன் தான் எல்லாம். ரொம்ப சிம்பிளான பார்முலா சார். இந்த அடிப்படை விசயம் எங்க கால வேகத்துல அடிப்பட்டு போகுது சார். அதுதான் எனக்கு கூட சில நேரத்தில எதுக்குடா கல்யாணம்னு தோணும் சார்'

'புரியலை, இதெல்லாம் தெரியாமலா இருக்கும். எல்லாம் படிச்சவங்கதான. ஆனா இந்த காலத்துல விவாகரத்து பண்றவங்க அதிகம் ஆகிட்டாங்களே. அது பிடிக்கலை, இது பிடிக்கலைன்னு காரணம் சொல்லி பிரிஞ்சி போறவங்களை பார்த்து வருத்தம் மட்டுமே மிஞ்சுது. அதுதான் முத வாக்கியம்'  

'வாழ்க்கைய வாழற பொறுமை இல்லை சார் எங்களுக்கு, அந்த பொறுமை தொலையறப்போ, சகிப்பு தன்மை அழியறப்போ எதுவுமே கண்ணுக்கு தெரியறது இல்லை சார். விவாகரத்து பண்றவங்க மன வலியோட தான் பண்ணிகிறாங்க, யாரும் விருப்பபட்டு செய்றது இல்லை சார். அது அத்தனை ஈசியான விசயம் இல்லை சார், உங்க பொண்ணுகிட்ட பேசலாமா சார்' 

'ம்ம்' 

வாழ்க்கையில் எதற்கு விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியாதது இல்லை. ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதெல்லாம் விதி எனவும் சொல்லி முடிக்கிறார்கள். சிலர் தங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் கொள்வது இல்லை. வறட்டு பிடிவாதம் பிடிக்கிறார்கள். விட்டு கொடுத்து போவது என்பது கடினமாகிப் போகிறது. ஏதோ ஒரு காரணம். ஏதோ ஒரு வலி. ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. 

அந்த வயதானவருடன் சென்றேன். அவரின் மகளைப் பார்த்தேன். திருக்குறளை சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளுக்கு என்ன பிரச்சினையோ, அதையெல்லாம் மனம் விட்டு பேசுவாளா என சந்தேகத்துடன் அவளிடம் பேசினேன். 'அன்பும் அறனும் உடைத்தாயின்' என நான் ஆரம்பிக்கும்போதே அவள் 'இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என முடித்தாள். 

'இங்க பாருங்க, கல்யாணம் பண்றது சேர்ந்து வாழத்தான், எந்த பிரச்சினைனாலும் பேசி தீர்த்துக்கோங்க, எதுக்கு இப்படி அடம் பிடிகிறீங்க' 

அவளிடம் நிறைய பேசினேன். அவளும் புரிந்து கொண்டவளாய் தலையாட்டினாள். 

'நீங்க உங்க கணவர் கிட்ட நிறைய பேசுங்க. என்கிட்டே சொன்னது போல அவர் கிட்டயும் மனசு விட்டு பேசுங்க. அவர் புரிஞ்சிக்கிரனும்னு எதிர்பார்க்காதீங்க, இப்படியெல்லாம் சொல்லணும், அப்படியெல்லாம் பேசணும்னு எதிர்பார்க்காதீங்க. புதுசா வாழ்க்கைய தொடங்குங்க' 

எனது பேச்சை அவள் கேட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. வயதானவர் மிகவம் சந்தோசம் கொண்டார். அவர்களிடம் விடைபெற்ற மகிழ்ச்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். 

'இன்னைக்கு ஒரு பொண்ணு விவாகரத்து பண்ண போறதை நிறுத்திட்டேன் தெரியுமா'

'யாரு அது, உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. கண்ட கண்ட பொண்ணுகளோட பழகாதீங்கனு. பேசமா அவளோட போய் தொலைய வேண்டியதுதானே'

சே, இவளை போய் கட்டிகிட்டோமேன்னு மனசு கிடந்து அலை பாயத் தொடங்கியது. விவாகரத்து என்பது அத்தனை எளிதா என்ன? 

Friday 28 October 2011

ஏழாம் அறிவு

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் என்ன குறை இருக்கிறது, எதற்கு இப்படி படம் பார்ப்பவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் எனும் சத்தம் தமிழ் திரையுலகில், விமர்சன கூட்டத்தில்  மிகவும் அதிகமாகவே உண்டு. எதுக்குதான் இப்படி பணத்தை செலவழிச்சி குப்பை படம் எடுக்கிறாங்களோ என குறைப்பட்ட படங்கள் தமிழில் அதிகமாகவே உண்டு. நாம் நமது பணத்தை செலவழித்து ஒரு படத்தை மட்டுமல்ல, எந்த ஒரு விசயத்தையுமே செய்யும்போது ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விசயங்கள் இருந்தால் அதை தூக்கிப் பிடிப்பதுதான் மனித எண்ணத்தின் இயற்கை. அதைவிட தன் மொழியில், தன்னால் இயலாத ஒன்றை ஒருவர் செய்து காட்டுகிறாரே என்கிற எரிச்சல் நிறைய பேருக்கு தமிழ் உலகில் உண்டு.

எதற்கெடுத்தாலும் இது அங்கே இருந்து காப்பி அடிச்சது, இங்கே இருந்து எடுத்து போட்டது என புலம்பி தள்ளுபவர்கள் மத்தியில் ஒரு திரைப்படம் அது சொல்ல வந்த விசயத்தை விஷமமாக்கி காட்டும் பண்பு நம்மிடம் அதிகமே உண்டு. அதைப்போல ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பதை பாலானது எப்படி தன்னிடம் இருக்கும் இனிப்பை அமிலமாக்கி தன்னை திரித்து கொள்கிறதோ அதைப்போல தங்களை தாங்களே குற்றம் சொல்லி தமிழர்கள் தலை குனிந்து கொள்கிறார்கள்.

நமது தமிழ் திரையுலகம் மாற வேண்டும், ஆங்கில படங்களுக்கு இணையாக வளர வேண்டும் என்கிற ஒரு கோட்பாடு எல்லாரின் மனதிலும் உண்டு. அதாவது கதை இருக்க வேண்டும், திரைக்கதை சீராக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஒரு நல்ல விசயத்தை மிகவும் தெளிவாக சொல்ல வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் பண்பாடு குறித்த, உறவுகள் குறித்த கதைகள் மக்களின் ரசனையை அதிகம் ஈர்த்தன, சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள் என பாராட்டப்பட்டன. இன்றும் கூட உறவுகள், காதல், நட்பு பற்றிய படங்கள் சிறந்த திரைக்கதை வடிவத்துடன் வந்தால் மக்களால் நேசிக்கப்படுகின்றன. காதல் இல்லாமல் கதை சொல்ல முடியாது என்பதுதான் நமது தமிழ் திரையுலகம் கண்ட ஒரு வெற்றி படிவம். 

பொதுவாகவே நமது முன்னோர்கள் பற்றிய சிந்தனை நம்மில் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் சிந்தனைக்கு எட்டிய விசயங்களை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி சென்றதால் மூட நம்பிக்கை மடையர்கள் என அவர்கள் திட்டப்பட்டார்கள். இதில் சித்தர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். போதி தர்மர் என்ன பெரிய போதி தர்மர்? புத்த மதம் வேறு நாடுகளில் பரவியது, இந்தியாவில் இல்லாமல் ஒழிந்து போனது. இந்து மதத்தின் கோட்பாடுகளை புத்த மதம் திருடியதுதான் என்பார் பலர். ஆனால் புத்த மதத்தின் மிகவும் மென்மையான கடவுளை எதிர்க்கும் கோட்பாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என உலகெங்கும் வீரம் பாராட்டியவர்கள் தமிழர்கள் என்பதை பாடப் புத்தகத்தில் கூட வைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் சிற்ப கலை, நுட்ப கலை என பல விசயங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 

புராணங்களில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நம்மவர்களால் கேலி கூத்தாக்கப்படுவது உண்டு. அதெல்லாம் எப்படி சாத்தியம், இதெல்லாம் எப்படி சாத்தியம் என வெட்டியாக கூவிவிட்டு போய்விடுவார்கள். கூடு விட்டு கூடு பாயும் கலை அறிந்த திருமூலர், சகல மருத்துவங்களையும் சொல்லி சென்ற போகர். இந்த சித்தர்கள் பற்றிய வரலாறு மிகவும் விசித்திரமான, நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும். நாம் எப்பொழுதும் நம்மை பெருமை படுத்திப் பார்ப்பதில்லை என்பதுதான் இயற்கையாக நடக்க கூடிய விசயம்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், அதாவது பணம், நகை, கலை உட்பட எல்லாம் வெளிநாடுகளில் தான் பெரும் பரவலாகப் பேசப்படுகிறது. தியானத்தை, யோகா பயிற்சி முறையை, எண்களை தந்தது இந்தியாதான் ஆனால் அதை கற்று கொண்டிருப்பது உலகில் உள்ள மக்கள். நாம் பெருமைப்பட்டு கொண்டு நாமும் கற்று சிறக்க வேண்டும். உலகப் பொதுமறை என்பது திருக்குறளுக்கு மட்டுமே கிடைத்த பெருமை, எந்த ஒரு நூலுக்கும், அதுவும் மத நூலுக்கும் கூட அப்படி ஒரு பெருமை கிடையாது. 

தமிழ் பற்றிய பெருமையை தமிழர்கள் நாம் தான் பேச வேண்டும். தம்பட்டம் என்பது வேறு. இப்படியெல்லாம் இருக்கிறது என தன்மையுடன் சொல்வது வேறு.  சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்களை எவரும் காப்பி அடித்தான் என சொல்லி புலம்புவதில்லை. ஒரு அவதார் படம் வந்தபோது அந்த படத்தின் அடிப்படை கதையம்சம் இந்தியாவில் இருந்துதான் திருடப்பட்டது என்பாரும் உளர். பகவத் கீதை சொல்லும் ஒரு அரிய வாசகம் என ஒரு தமிழரால் எழுதப்பட்ட 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 

அடுத்தது, படிச்சவன் எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுறான் அப்படின்னு ஒரு பேச்சு. வெளிநாட்டுக்கு போனவங்கள எத்தனை பேரு பெரிய சாதனையாளர்கள் அப்படின்னு பேரு எடுத்து இருக்காங்க. இந்தியாவில வசதி இல்லை, ஊழல் அது இது அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் இன்னும் பலர் இந்தியாவில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்ததை விட அவர்கள் நிறையவே சாதித்து இருக்கிறார்கள். வெளிநாடு வேண்டாம் என வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி தள்ளியவர்களை நான் கண்டதுண்டு. அது எதற்கு,  படிக்காதவங்க கூட வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் பொருளாதார வேறுபாடு. திரை கடலோடி திரவியம் தேடு என சொல்லி வைத்த சமூகம் நமது சமூகம் தான். அதைப்போலவே உலகில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றார்கள் என்கிறது வரலாறு. இது போன்ற குற்றசாட்டுகளை, நமது மக்களை நாமே மதிப்பது இல்லை என்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் படத்தில் வருவது சகஜமாகிவிட்டது. 

ஐந்து உணர்வுகள் தான் உயிரினங்களுக்கு பொது, அதாவது பார்க்கும் தன்மை, கேட்கும் தன்மை, தொடுதல் உணர்வு, சுவை உணர்வு மற்றும் வாசம் உணர்வு. சில உயிரினங்களுக்கு இந்த உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். சில உயிரனங்கள், காந்த சக்தி, மின் சக்தி போன்ற வேறு பல சக்திகளை உணரும் தன்மையும் உண்டு என சொல்வார்கள். நாய் ஊளையிடுது, நரி ஊளையிடுது என அதற்கு காரணம் காட்டிய தன்மை நம்மில் உண்டு. மேலும் பல உணர்வுகள் நமது உடலுக்குள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. அதாவது நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பது இந்த உணர்வுகளின் அடிப்படையில் தான். நமது மூளை செயல்பாடு நரம்புகள் மட்டும் வேதி பொருட்களினால் நடைபெறுகிறது என்பதுதான் இப்பொழுது நாம் கண்டு கொண்ட ஒரு விசயம். 

இதையெல்லாம் தாண்டி இப்பொழுது மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி பெருமளவில் நடத்தபடுகிறது. இது மிகவும் அளப்பற்கரிய முன்னேற்றம். எந்த மரபணு எந்த புரதத்தை உருவாக்கும் என்பது வரை நமது அறிவியல் சென்று கொண்டிருக்கிறது. எந்த மரபணு எந்த நோயை உருவாக்கும் என்பது வரை நமது பயணம் செல்கிறது. ஆனால் இது மட்டுமே காரணி அல்ல என்பதும் அறிவியலுக்கு தெரியும். மேலும் ஒன்றை மறந்து விடுகிறார்கள், நமது அறிவு மரபணுக்களில் ஒளிந்திருப்பது இல்லை. எனது தாய்க்கு தெரியாத ஆங்கிலம் எனக்கு தெரியும். எனது தந்தைக்கு புரியாத மொழி எனக்கு புரியும். எனக்கு தெரியாத கலைகள் அவர்களுக்கு தெரியும். இது நரம்புகளின் செயல்பாடு என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். இந்த கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது.

லமார்க் கொள்கை 'தந்தையின் அறிவு பிள்ளைக்கு செல்லும் என்பது' டார்வின் கொள்கை 'எது உயிர் வாழ பயன் தருகிறதோ அந்த தன்மை மற்ற உயிருக்கு செல்லும் என்பது'  படிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது என நிலை வந்தால் படிக்கும் தன்மையுள்ள மரபணு உருவாகலாம் என்பதுதான் பரிணாமத்தின் சாரம்சம். ஆனால் இது மட்டும் காரணி அல்ல என்பதை நினைவு கொள்வோம். வாழ்வில் பல விசயங்களை சுருக்கி கொள்ள முடியாது.

உலகில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. மொழியில்லா ஒலி எழுப்புவது இயற்கை. மொழியுடன் ஒலி எழுப்பவது செயற்கை, அதாவது கற்று கொள்தல். போதி தர்மனின் ஆய கலைகளும் அவனது பேரனுக்கு செல்வது என்பது எல்லாம் கதை. ஆம் கதை. இது கதை. ஒரு ஊருல ஒரு ராஜாவாம் என சொல்லும் கதையை போல இந்த கதையை கதையாக பார்க்க வேண்டும். அதற்கடுத்து பொதுவாக இன்றைய கால கட்டத்தில் விமானத்தில் ஒரு மசால் பொடி எடுத்து கொண்டு போனால் கூட நாய் மோப்பம் பிடித்துவிடும். அதையெல்லாம் தாண்டிய ஒரு வரத்து போன சிந்தனை இந்த போதி தர்மனை சிதறடித்து விட்டது. போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தாலே இந்த ஏழாம் அறிவு பெரிதளவு பேசப்பட்டிருக்கும், அதைவிட்டுவிட்டு இவரை தெரியுமா என இண்டர்நெட்டிலும், சில பல இடங்களிலும் திருடிவிட்டு நான் தான் இவரை கண்டுபிடித்தேன் என கொடி தூக்குவது கொடுமை. இந்த போதி தர்மனை பற்றி விக்கிபீடியாவில் எழுதியவர் கூட இத்தனை தம்பட்டம் அடித்து கொண்டிருக்க மாட்டார். இன்னும் பல வரலாற்று மனிதர்கள் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள். பல புத்தகங்களில் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் களப்பிரர் காலம் பற்றிய சிந்தனையை கதையில் சொன்னது உண்டு. பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என அவர்களது வரலாற்றில் சொல்லப்பட்ட விசயங்கள் பெரும் காவியங்கள் தான். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இளங்கோ அரச குடும்பத்தில் இருந்தவர்தான். புத்தர் கூட அரசு குடும்பத்தை சேர்ந்தவர்தான். போதி தர்மர். இவரை தெரியுமா? அட அட! இந்த போதி தர்மரை விட சித்த வைத்தியம் எனும் முறை தெரிந்த பல குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன். பார்க்கப் போறா, பார்க்கப் போறா, ஐயோ பாத்துட்டா என தன்னை பார்க்காத ஒரு பெண்ணை தான் பார்ப்பதால் தன்னை பார்ப்பாள் என நினைக்கும் செயல்பாடு. அந்த கண்கள் மூலம் பிறரை மயக்கலாம் என்பது பொது விதி. கிறங்கடிக்கும் பார்வை. மயங்க வைக்கும் பார்வை. ஒருவரை நேருக்கு நேராக பல நிமிடங்கள் எங்குமே பார்க்காமல் பார்த்து கொண்டே இருங்கள். அதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து கொள்ளுங்கள். காதலால் கசிந்து உருகி, கண்ணீர் மல்கி. சிலரை பார்க்க அச்சம் ஏற்படும். சிலரை பார்க்க சந்தோசம் ஏற்படும். இந்த உணர்வுகளை கண்கள் எப்படி மூளைக்கு கடத்துகிறது? ஒளியின் தன்மையா? டெலிபதி என ஒன்றும் உண்டு. நாம் இங்கு ஒன்றை நினைக்க எங்கோ இருப்பவர் உணர்தல். இப்படி பல மர்மங்கள் அடங்கியது இந்த வாழ்வும், நமது எண்ணங்களும். அதைப் பற்றிய ஆராய்ச்சி உலகில் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில விசயங்கள் புரியாமலே இருக்கின்றன. ஆறாம் அறிவு என்பதே சுத்த மோசம். அதில் ஏழாம் அறிவாம். இருப்பது ஒரு அறிவுதான். அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது நமது எண்ணமும் செயல்பாடும்.

ஆறாம் உணர்வு எனும் ஒரு படம் நமது தமிழரால் 'நைட் சியாமளன்' என்பவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த படத்தில் வரும் கதை எல்லாம் சாத்தியம் இல்லாத கதை. இறந்தவர்களுடன் பேசுவது, இறந்தவர்களை காண்பது என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆனால் அந்த கண்கட்டி வித்தையை நம்மில் பலர் உணர்வதாக சொல்வது உண்டு. எனது ஊரே பேய் ஊரு என்றுதான் சொல்லப்பட்டு உண்டு. அந்த கதையின் முடிவு அந்த இயக்குனரை பாராட்ட சொல்லும். சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

எந்திரன் எப்படி ஏமாற்றியதோ அப்படித்தான் பலரும் இந்த ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்து இருப்பார்கள். சிலரும் பாராட்டி இருப்பார்கள்.

அறிவியல் பக்கம் போக வேண்டும் எனும் ஆர்வத்துடன் பணியாற்றும் தமிழ் இயக்குனர்கள் சற்று திரைக்கதையில் கவனம் செலுத்துவதோடு இல்லாமல் நாலு டான்சு பாட்டு, ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, மூணு சண்டை காட்சி என கழுத்தறுக்காமல் அந்த நேரத்தையெல்லாம் திரைக்கதை அமைப்பில் செலவழித்தால் நலம். பாடல் எல்லாம் கேட்பதற்கு என இசை வடிவமாக மட்டுமே வெளியிடுங்கள். பாடலாசிரியர்கள் பிழைத்துவிட்டு போகட்டும்.

சரி இந்த படத்தோட விமர்சனம் எழுதலைன்னு நீங்க கேட்டா, கஷ்டப்பட்டு பல வருசம் உழைச்சி அட்டகாசமா ஒரு படம் எடுத்திருக்கோம்னு நினைச்சி பெருமைபட்டவங்க கிட்ட போங்கப்பா நீங்களும் உங்க குப்பை சிந்தனையும் அப்படின்னு சொன்னா அவங்களுக்கு வலிக்குமா வலிக்காதா? அது சரி இப்படி எழுதி என்னதான் சொல்ல வரேன்னு நீங்க கேட்டா நான் என்ன பண்றது.