Tuesday 25 October 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? காட்டுமிராண்டி நாகரிகம்

உலகம் எப்படி படைக்கப்பட்டது என்பதற்கு திரும்பத் திரும்ப ஒரே விசயத்தையே சொல்லிட்டு இருக்கிறதுல அப்படி என்ன திருப்தியோ? உலகத்துல முக்காவாசி பேரு கடவுள்தான் அதுவும் அல்லாதான் இல்லை இல்லை பரம பிதாதான், இல்லை இல்லை பிரம்மாதான் உலகத்தை படைச்சாருனும், இல்லை இல்லை இது இயற்கையாக நடந்தது அதாவது இயற்கைத் தேர்வு அப்படினும் தெரியாத ஒன்னை இப்படித்தான் இருக்கும்னுசொல்லிட்டு இருக்காங்களே அவங்களை எல்லாம் என்ன பண்றது. 

என்ன பண்றது, அதுவும் ஒருத்தருக்கும் உண்மையான உண்மை தெரியாது, இது எப்படி எனக்கு தெரியும்? எல்லாம் யூகம் தான், ஆனா ஊர்பட்ட கதை எல்லாம் எல்லாரலாயும் சொல்ல முடியும் அப்படிங்கிறதுக்கு ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி சொன்ன விசயங்களை படிச்சிப் பார்த்தா விளங்கும். 

இப்படித்தான் ஒருத்தரோட பேசிட்டு இருந்தேன். நீங்க கடவுளை நம்புறமாதிரி தெரியலையேன்னு சொன்னாரு. எதை வைச்சி சொல்றீங்கனு நானும் கேட்டு வைச்சேன். உங்க பேச்சுல இருந்து தெரியுதுன்னு சொன்னாரு. சரி நான் அறிவியலை நம்புறேனு நினைக்கிறீங்களான்னு கேட்டேன். அப்படியும் தெரியலைன்னு சொன்னாரு. நம்பி நம்பி நாசமா போனவங்கதான் நம்ம மனித குலம், அதனால நான் எதையுமே நம்புறது இல்லை அப்படின்னு சொன்னேன். நீங்க உசிரோட இருக்கறதை கூடவானு கேட்டு வைச்சார். ஆமா, அப்படின்னு சொன்னேன். என்னை சரியான பைத்தியம்னு அவர் சொல்லிட்டுப்  போய்ட்டார். இப்ப நல்லா யோசிச்சி பாருங்க. உசிரு அப்படிங்கிறதுக்கு ஒரு விளக்கம் நாம சொல்லி வைச்சிருக்கோம். அதாவது விதிகளுக்கு உட்பட்டு வாழற வாழ்க்கை. இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும். இது இப்படி இருந்தா ஈர்ப்பு விசை. அப்படி இருந்தா எதிர்ப்பு விசை அப்படின்னு ஒரு பெரிய திட்டம் எல்லாம் போட்டு வைச்சிட்டோம், கணக்கு பண்ணி வைச்சிட்டோம். எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்காம். அறிவு, சிந்தனை எல்லாம் நம்மகிட்ட பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. 

சரி, நாம நினைக்கிற, பேசற விசயங்கள் எல்லாம் மத்தவங்க என்ன சொல்லி இருக்காங்க. அதை எப்படி சொன்னாங்க, எதை வைச்சி சொன்னாங்க அப்படிங்கிற அடிப்படையில்தான். உற்று நோக்குதல், ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல். இதுதான் வாழ்க்கையின் முழு கட்டாய சூழல். அப்படி நாம தொடர்பு படுத்தாம வாழப் பழகிகிட்டா பல விசயங்கள் அடிபட்டு போகும். ஆனா அது சாதாரண விசயம் இல்லை.

 இதுக்குதான் நம்ம ஆளுங்க அட்டகாசமா சொல்லி வைச்சாங்க. கல்லை கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லை காணோம். ஒரு கல்லில் செதுக்கப்பட்ட நாய் உருவம் அந்த சிற்பியின் திறமையால் உயிருள்ள நாயைப் போன்று தென்படுமாம். அட அட என்ன ஒரு சிந்தனை. ஆனா இதையே ஒரு நாய் எதிர்படும் போது, அந்த நாயை அடிக்க கல் தேடியபோது கல் காணவில்லை என்பது கூட ஒருவித சிந்தனைதான்.

ஆனா காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் இதெல்லாம் இல்லை. இனப்பெருக்கம், வயிற்றுக்கு உணவு. தனக்கு போட்டியாக வருபவர் எதிரி. இந்த காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் சிக்கி தள்ளாடும் மனிதர்கள் இன்றும் உண்டு. காட்டுமிராண்டிகள் நாகரித்தில் கல் மட்டுமே ஆயுதம். தற்போதைய மனிதர்கள் இந்த மனிச குலம் எப்படி உருவாச்சு, என்னவெல்லாம் செஞ்சாங்க அப்படிங்கிறதை ஆராய்ச்சி செஞ்சி பல விசயங்கள் சொல்லி வைச்சிருக்காங்க. நமக்கு முன்னால வாழ்ந்தவங்க இப்படியெல்லாமா இருந்தாங்க அப்படின்னு நாம நினைக்கிறப்ப பிரமிப்பு மட்டுமே மிஞ்சும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு சொல்லி வைச்சி பிரமிக்க வைக்கிறாங்க.

சரி திருடப் போவோம். முழு நீள சித்திரமா சொல்றதை விட இரத்தின சுருக்கமா சொல்லி வைச்சிருவோம். உணவு, உறக்கம் இல்லாம பல விசயங்களை தெரிஞ்சிக்க சுகமான வாழ்க்கையை எடுத்து எறிஞ்சிட்டு இந்த உலகம் பல விசயங்கள் தெரிஞ்சிக்கிரனும்னு போராடின மனிதர்களுக்கு நாம எப்பவும் மரியாதை செலுத்தனும்.

மனித குல வரலாறு பத்தி தெரிஞ்சிக்கனும்னா ரொம்ப பேரு நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் ஒரு விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கிரனும் அப்படிங்கிற ஆர்வம் தான். மத்தபடி இவங்க எல்லாம் பெரிய புத்திசாலிகளோ, அறிவாளிகளோ கிடையாது. உற்று நோக்குதல். ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல் அப்படிங்கிற ஒரு சிந்தனை மிக மிக முக்கியம். வெகு குறிப்பிட்ட சிலரே அறிவு சார்ந்த விசயங்களில் தங்களை அர்பணித்து கொண்டார்கள்.

ஒரு குழந்தைகிட்ட ஒரு பொருளை கொடுங்க. அந்த குழந்தை அந்த பொருளை அப்படியே வைச்சிருந்தா அந்த குழந்தை மங்குனி. அதை உடைச்சி பிரிச்சி மேஞ்சா ஒரு தேடல். அப்படி பிரிச்சி மேஞ்ச குழந்தையை அதட்டினப்புறம் அடுத்தவாட்டி பிரிச்சி மேயாம போனா இனி அந்த குழந்தை மங்குனி. அதாவது ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆர்வம் வந்து சேரும். ஆனால் காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் கல் ஒன்றுதான் கண்ணுக்கு தென்பட்டது.

இந்த கல்லை வைத்து என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் என்கிறது வரலாறு. ஏழு மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலம் தோன்றி இருக்கலாம் என்பது நிரூபிக்கபடாத ஒரு விசயம். ஆப்ரிக்காவில் மூன்று மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலத்தின் முன்னோர்கள் தோன்றியிருக்க கூடும் என்பதும் ஆராய்ச்சியின் வெளிப்பாடு. பல மனித குலம் அழிந்து போயிருக்கிறது என்பது ஆராய்ச்சி காட்டும் உண்மை.

காட்டுமிராண்டிகள் நாகரிகம் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.




Friday 21 October 2011

தொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)

                                 தொலைநோக்கிப் பார்வை - சிறுகதை  (2011)


இருபத்தி நான்கு வயதாகும் விஷ்ணு ஒரு விசித்திரமான ஆர்வம் கொண்டவன். திடமான உடல். நன்றாக கலைத்து விடப்பட்ட தலைமுடி. மாதக்கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். கண்களில் அடக்க முடியாத ஒரு தேடல். நான்கு மணி நேர உறக்கம். இரவு வந்துவிட்டால் நட்சத்திரங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவான். நிலாவில் ஏதேனும் தெரிகிறதா என கண்களை கசக்கி கசக்கிப் பார்ப்பான். என்ன காரணமோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது வானமும், நட்சத்திரங்களும் அவனது மனதில் ஒருவித ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. அவனது குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதாகிப் போனது. பகலில் வயலில் வேலை செய்தது போக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களில் சென்று வானவியல் பற்றிய புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். மிக குறைந்த அளவிலான வான சாஸ்திரம் புத்தகங்களே நூலகங்களில் இருந்தன.

கடந்த ஏழெட்டு வருடங்களில் இவன் புத்தகங்களில் இருந்து எடுத்து குறித்து கொண்ட குறிப்புகள் இவனுக்குள் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்தன. எவரேனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கிடைக்கமாட்டர்களா எனும் ஏக்கத்தில் நட்சத்திரம் பற்றி பேசினால் நடிகர் நடிகைகள் பற்றி பிறர் பேசுவது கண்டு ஏமாற்றமே அடைந்தான். இரவு நேரங்களில் தோட்டத்தில் வேலை பார்க்க செல்லும் போது நிலவின் ஒளியை ஒரு இடத்தில் குவித்து வைக்க முடியுமா எனப் பார்ப்பான். வானமும், வயலும் என வாழ்க்கையில் வருடங்கள் மிக வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கடந்த வருடம் தான் கொரட்டூர் பஞ்சு ஆலையில் வேலைக்கு சேர்ந்தான்.

விஷ்ணுவுக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பித்தார்கள். கொரட்டூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சின்னவயல் எனும் ஊரில் எட்டு வரை படித்திருந்த ஜெயலட்சுமியை விஷ்ணுவுக்குப் பிடித்துப் போனது, ஜெயலட்சுமிக்கும் விஷ்ணுவைப் பிடித்துப் போனது. ஜெயலட்சுமி வெட்டப்படாத நீண்ட கூந்தல் உடையவளாய் இருந்தாள். அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதி ஆறு மாதங்களுக்கு பின்னர் என குறித்து வைத்தார்கள்.

பெண் பார்க்க சென்ற நாள் அன்றே தனது ஆர்வத்தை பற்றி ஜெயலட்சுமியிடம் பேசினான் விஷ்ணு. 

''எனக்கு இந்த வானம், நட்சத்திரங்கள் மேல நிறைய ஆர்வம், உங்களுக்கு அதுபோல எதுவும் ஆர்வம் உண்டா''

விஷ்ணுவின் ஆர்வத்தைக் கேட்ட ஜெயலட்சுமி முதலில் புரியாமல் விழித்தாள். 

''வானத்தையே வெறிச்சிப் பார்த்துட்டு இருப்பீங்களா, நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துர மாட்டீங்களே''

''இல்லை, வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பத்தி நிறையத் தெரிஞ்சிக்க ஆசைப்படுவேன், கல்யாணம் பண்ண முன்னாடியே மறக்குறதைப் பத்தி கேட்கறீங்களே''

''உங்களுக்குப் பிடிச்சது எனக்கும் பிடிச்சா நல்லா இருக்கும்''

''ம்ம், நல்லா பேசறீங்க, ரொம்பப் பிடிச்சிருக்கு'' 

விஷ்ணு தன்னை வந்துப் பார்த்துச் சென்றதில் இருந்து வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டாள் ஜெயலட்சுமி. 

பின்னர் ஒரு நாள் இது குறித்து அவளுடைய தோழி ஆண்டாளிடம் பேசினாள். 

''உனக்கு வானத்தைப் பார்த்து ஆராய்ச்சி பண்றவங்க யாருனாலும் தெரியுமா?''

''என்ன திடீருனு கட்டிக்கிறப்போறவரு வான விஞ்ஞானியா''

''அவருக்கு விருப்பமாம், அதான் என்னனு தெரிஞ்சிக்கிறனும்''

''ம்ம் வீரபத்திரனு ஒருத்தர் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்காரு, நீ வேணும்னா அங்கே போய் பாரு''

இதனை ஜெயலட்சுமி விஷ்ணுவுக்கு தெரியப்படுத்தினாள். விசயம் கேள்விப்பட்ட விஷ்ணு வீரபத்திரனை சந்திக்கச்  சென்றான். ஆய்வாளர்களுக்கே உரிய தோற்றத்துடன் இருந்தார் வீரபத்திரன். ஆய்வகம் பெரும் நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்து வானத்தை ஆராய்ச்சி பண்ணும் தொலைநோக்கிகள் நிறுவப்பட்டு இருந்தன. 

விஷ்ணுவினைக்  கண்டவர்கள் யாரோ ஆராய்ச்சிக்காரன் என்றே நினைத்தார்கள். விஷ்ணுவின் ஆர்வத்தை கண்ட வீரபத்திரன் விஷ்ணுவிடம் சில புத்தகங்கள் தந்தார். அங்கே நிறுவப்பட்ட தொலைநோக்கியை அவனுக்குக் காட்டினார். 

''விஷ்ணு, இந்த தொலைநோக்கியின் மூலம் வியாழன் கிரகத்தின் மேற்பகுதி வரை ஓரளவுக்குப் பார்க்க இயலும்'' 

''சார் ஏதாவது நட்சத்திரம் பற்றி சொல்ல முடியுமா?, என்னவெல்லாம் இந்த தொலைநோக்கி மூலம் பாத்து இருக்கீங்க'' 

''ஒன்னா, ரெண்டா கணக்கிலேயே அடங்காத எந்த நட்சத்திரத்தைப்  பத்தி சொல்றது, புத்தகங்களைப் படிச்சிப் பார், ஒரு மாசம் கழிச்சி வா'' 

 அவனது செல்பேசி எண்களை தனது செல்பேசியில் எழுதியவர் அவனது பெயரை Vishnu informer எனக் குறித்துக் கொண்டார். அவர் கொடுத்த புத்தகங்கள் அவனால் வாசிக்கப்படாதவைகள். புரியாத ஆங்கிலத்தில் சில புத்தகங்கள். கடினப்பட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் புத்தகங்கள் சில. விஷ்ணு தன்னிடம் இருந்த கைகளால் எழுதப்பட்ட குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனைக் கண்டான். 

''நான் வரேன் சார்''

''ம்ம்''

ஆய்வகத்தில் இருந்து பிரதான சாலையை வந்து அடைந்தான் விஷ்ணு. அவனது செல்பேசி ஒலித்தது. விஷ்ணுவை அழைத்தார் வீரபத்திரன். 

''குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை வந்து தந்துட்டுப் போ. எனக்கு நாளைக்கு ஒரு கலந்துரையாடலுக்குத் தேவைப்படுது, மறந்துபோய் உன்கிட்ட கொடுத்துட்டேன்.''

''அதுக்கென்ன சார் வந்து தந்துட்டுப் போறேன்''

புத்தகம்தனை பாதி வழியில் சென்றவன் மீண்டும் வந்து கொடுத்துச் சென்றான். அவனுக்குள் அந்த குறியீடுகள் பற்றிய ஆர்வம அதிகமானது.

திருமண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. பஞ்சு ஆலையில் வேலை பார்த்த வேறு இருவரின் வாய்த் தகராறு, அவர்களுக்குள் அடிதடியில் போய் நின்றது. இந்த விசயம் கொரட்டூர் காவல் நிலையம் வரை சென்றது. கொரட்டூர் எஸ் பி, கோகுல் விசாரித்தார். விஷ்ணுவும் சாட்சியாக விசாரிக்கப்பட்டான். விஷ்ணு சொன்ன சாட்சியின்படி இருவருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் எஸ் பி கோகுல் தீர்ப்பு சொல்லி அனுப்பியவர் விஷ்ணுவை அழைத்தார். 

'‘அவங்களை காப்பாத்த நீ பொய் சொல்ற, என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற' 

''நான் என்ன பொய் சொன்னேன் சார், அவங்க இரண்டு பேரும் ஒருத்தரைப் புரிஞ்சிக்காம அடிச்சிக்கிட்டாங்க, அதான் தீர்ப்புச் சொல்லிட்டீங்களே. பிறகு என்ன சார்''

''நீ மாட்டாமல் போகமாட்ட''

எஸ் பி கோகுல் அவ்வளவு நல்லவர் கிடையாது. எப்படியாவது தன்னை ஏதேனும் விஷயத்தில் மாட்டிவிடுவார் எனக் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை தேட ஆரம்பித்தான் விஷ்ணு. கொரட்டூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதென்றால் நாளில் பாதி பிரயாணத்தில் செலவாகிவிடும் என நினைத்து அங்கேயே வீடும் தேட ஆரம்பித்தான். இந்த விசயம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் விஷ்ணு தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

வீரபத்திரனைச் சந்தித்தான். 

''சார் இங்கே எனக்கொரு வேலை கிடைக்குமா''

''நீ  Assistant informerஆ எனக்கு கீழே வேலை செய், உனக்குத் தங்குவதற்கு குறைந்த வாடகையில் ஒரு வீடும் ஏற்பாடு செய்றேன்''

''இந்த பெரும் உதவிக்கு நன்றி சார்''

விஷ்ணுவின் உதவியால் வீரபத்திரன் உற்சாகமாக காணப்பட்டார். பொதுவாகவே வீரபத்திரன் ஆய்வகத்தில் இரவு பன்னிரண்டு மணி வரை தனியாய் இருப்பது உண்டு. குறியீடுகள் குறித்து விஷ்ணுவிடம் எல்லா விசயங்களும் சொன்னார் வீரபத்திரன். 

''எப்படியும் பிற நட்சத்திரக் குடும்பங்களில் இருப்பவர்கள் மூலம் நாம் பேச இயலும். சில தகவல்கள் எனக்குக் கிடைத்து இருக்கு'' 

விஷ்ணுவுக்கு வீரபத்திரன் ஆய்வு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியது. 

''எனக்கும் அந்தக் குறியீடுகள் பத்தி சொல்ல முடியுமா''

''விஷ்ணு இந்தக்  குறியீடுகள் அனைத்தும் தனது கணினியில் உள்ளது நீ அதனைக்  காண ஒரு குறியீடு எழுதினால் மட்டுமே முடியும் , குறிச்சிக்கோ S V 42 6J. உள்ளே போய் மத்தக் குறியீடுகள் மூலம் பேசலாம்''

''நன்றி சார்''

''என்னோட அப்பா, அம்மா மற்றும் என்னோட பேரு எல்லாம் இதில இருக்கு யாரிடமும் இந்த குறியீடு மட்டும் தர வேண்டாம், உன் மீதான நம்பிக்கை காரணமாகத்தான் தருகிறேன், இங்கே ஆய்வு புரிபவர்களிடம் இதனை பற்றி நான் எதுவும் சொன்னதில்லை  இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்கு விலைபேசிருவங்க, இன்னும் முழுமையா ஆராய்ச்சிப் பண்ணி இந்த உலகத்துல நாம மட்டும் இல்லை, பிற நட்சத்திரக் குடும்பத்துல உயிரினங்கள் இருக்குனு நிரூபிக்கனும்'' என எச்சரித்தார் வீரபத்திரன்.  

சில மாதங்கள் விஷ்ணு மிகவும் கவனமாகப் பணிபுரிந்து வந்தான். ஒருமுறை மதிய உணவு வேளையில் வீரபத்திரனுடன் சில வருடங்கள் பணிபுரியும் ராகுலிடம் இந்தக் குறியீடுகள் குறித்த விசயங்கள் பற்றி வாய் தவறி சொன்னான் விஷ்ணு. 

''என்னக் குறியீடு விஷ்ணு, எந்த நட்சத்திரங்கள் பத்தியது, ஏலியன்ஸ்?''

சுதாரித்து கொண்டான் விஷ்ணு.

''ஏலியன்ஸ் இல்லை சார், அது பிற நட்சத்திரங்கள் பற்றியது''

''எத்தனை வருசமா நாங்க இங்க உழைக்கிறோம், எனக்குத் தெரியாத குறியீடு உனக்குத் தெரிஞ்சி இருக்கு, வீரபத்திரனுக்கு நிறைய நெருக்கம் ஆயிட்ட''

''நட்சத்திரங்கள் பத்தி சொல்றதுதான் சார், வேற ஒன்னும் இல்லை''

இதைப் பற்றி ராகுல் அறிந்து கொள்ள முனைந்தவர் தனது நண்பன் கொரட்டூர் எஸ் பி கோகுலிடம் தகவல் தெரிவித்தார். எஸ் பி கோகுல் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தார். 

ஒருநாள் வீட்டிற்குச் செல்லாமல் ஆய்வகத்திலேயே இருந்தார் ராகுல். இரவு பதினோரு மணியளவில் எஸ் பி கோகுல் ஆய்வகத்திற்கு வந்தார். ராகுலும், கோகுலும் வீரபத்திரனிடம் சென்று விசாரித்தார்கள். 

''நீங்க விஷ்ணுகிட்ட குறியீடு தந்து இருக்கீங்க, அதை எங்களுக்குத் தரலைன்னா உங்களை உயிரோட விடமாட்டோம், ஏலியன்ஸ் பத்தி தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க'' மிரட்டினார்கள். 


விஷ்ணுவால் தனக்கு இத்தனை இன்னல்கள் வந்து சேரும் என வீரபத்திரன்  நினைக்கவே இல்லை. இத்தனை வருடங்களாக பாதுகாக்கப்பட்ட இரகசியம் இப்படி ஆகும் என நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் சமாளிக்கவே எண்ணினார். 

''அந்தக் குறியீடுகள் அமெரிக்காவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்படுபவை, இந்த உலகம் தோன்றிய உடன் உருவான நட்சத்திரம் பற்றிய தகவல்கள்தான் வேறு எதுவும் இல்லை''

இதை ராகுல் சற்றும் நம்பவில்லை. ஆனாலும் மேலும் வீரபத்திரனை இதைக் கேட்பதைவிட விஷ்ணுவிடம் அதிகம் பணம் தருவதாகச் சொல்லி மிரட்டி வாங்கிவிடலாம் எனக் கருதினார். 

''சரி, உங்களை நம்பறேன்'' எனச் சொல்லிவிட்டு வெளியேறினார்கள் ராகுலும் கோகுலும். 

''கோகுல், விஷ்ணுனு ஒருத்தன் இங்கே வேலை பார்க்கிறான். அவன்கிட்ட நீ விசாரிச்சி இந்த குறியீடு எல்லாம் எப்படி பார்க்கலாம்னு கேளு. இனி இந்த வீரபத்திரனை சும்மா விடக்கூடாது, இந்த இரகசியம் நான் வெளியிட்டா எனக்குத்தான் பேரும் புகழும் கிடைக்கும்''

மறுநாள் விஷ்ணுவை பார்த்த கோகுல் ஆச்சர்யம் அடைந்தார். 

''எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடி வந்துட்டு இப்ப மாட்டிக்கிட்ட எனக்கு இந்த குறியீடு பத்தி விவரம் சொல்லு''

''நான் சார் கிட்ட கேட்டுட்டு  உங்களுக்கு அனுப்புறேன், பழைய பிரச்சினைகள் இப்போ வேணாம் சார்''

''சரி,  இந்தா  ராகுலோட செல்பேசி எண், அவருக்கு மறக்காமல் அனுப்பிரு அப்படி எதுவும் ஏடாகூடமா பண்ண நினைச்ச தோலை உரிச்சிருவேன்''''

''சரி சார்''

நடந்த விசயத்தை வீரபத்திரனிடம் சொல்லி மன்னிப்பு கேட்டான் விஷ்ணு. அதோடு தன்னை மணம் முடிக்க இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் சென்று தங்குமாறு கூறினான். வீரபத்திரனும் அன்றே ஸ்ரீவைகுண்டம் விட்டு சென்றார்.

விஷ்ணு ராகுலுக்கு  S W H2 6F -இதுதான் குறியீடு  –விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். 

அதோடு வீரபத்திரனுக்கும் Sir, ராகுலிடம்  தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். இந்த இரண்டு விசயத்தையும் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இரண்டு தாள்களில் பிரின்ட் எடுத்த விஷ்ணு அந்த தாள்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டு போனான்.

அவன் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இருந்து கதவை பூட்டிவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் ராகுல் வீரபத்திரன் ஆய்வகத்தின் கதவை உடைத்து கணினியில் குறியீடுதனை எழுத கணினி திறக்க மறுத்தது. ராகுல் கோபம் அடைந்தார். விஷ்ணு வெளியில் நின்று அந்த நிகழ்வை எல்லாம் படம் பிடித்தான். காவல் அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னான். 

''ராகுல் சார், நீங்க தப்பிக்க முடியாது''

''நேத்து முளைச்ச காளான் நீ, என்னை மிரட்டுறியா''

''இவ்வளவு படிச்சும் உங்களுக்குத் திருட்டுப் புத்திப் போகலையே, நீங்க இந்த அறையை உடைச்சி வந்தது, அந்தப் பெட்டியில் இருந்து ஆவணங்களைத் திருடினதுனு எல்லாம் படம் பிடிச்சி இருக்கேன்''

''எஸ் பி கோகுல் என்னோட நண்பன்தான், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது''

''தெரியும் சார் அதான் நான் தகவல் கொடுத்தது வேற இடம்''

அங்கே வந்த காவல் அதிகாரிகள் ராகுலை கைது செய்தார்கள். 

விவரம் அறிந்த எஸ் பி கோகுல் விஷ்ணுவிடம் ‘என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கொக்கரித்தார்.  வீரபத்திரன், ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி ஆய்வகம் வந்து சேர்ந்தார். வீரபத்திரன் தலைமையில் விஷ்ணுவின் திருமணம் இனிதே நடைபெற்றது.

எஸ் பி கோகுல். விஷ்ணுவை கைது செய்ய புது திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில் அவரை வேலையை விட்டு ஒரு வருடம் நீக்குவதாக ஒரு கடிதம் அவரது கைகளை தழுவியது. 

Thursday 20 October 2011

போட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்

ஒரு நாட்டின் பொருளாதரத்தை நிர்ணயம் செய்வது அந்த நாட்டின் மக்கள் மட்டுமில்லாமல் அடுத்த நாட்டு மக்களும் தான். 

ஒரு நாடானது தனது தேவையினைப் பூர்த்தி செய்தபின்னரே பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் அந்த நாடு ஒரு முன்னேற்றமடைந்த நாடாக இருக்க இயலும். பொதுவாகவே ஒரு நாடு தனக்கு தேவையில்லாத ஒன்றை உற்பத்தி செய்து அதனை பிற நாடுகளிடம் விற்பனை செய்து தனது பொருளாதாரத்தை முன்னேற்றி கொள்ளலாம். 

மேலும் அந்த அந்த நாட்டின் தேவைகள் குறித்து அந்த அந்த நாட்டுக்கே சென்று உற்பத்தியை பெருக்கி தனது வளமையை வளப்படுத்தலாம். இப்படித்தான் உலக நாடுகள் தனது வர்த்தகத்தை பெருக்கி கொள்கின்றன. ஒரு நாட்டின் தேவை எது, அத்தியாவசியம் எது, அனாவசியம் எது என்பதை தீர்மானிக்கும் நிலையில் நாட்டின் தலைவர்களை விட நாட்டின் மக்களே இருக்கிறார்கள். 

இதை ஒரு வீடு என்பதில் இருந்து தொடங்கலாம். இப்பொழுது சௌகரியம், அசௌகரியம் என எதை விரிவுபடுத்துவத்து அல்லது விளக்கப்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு தங்குவதற்கு தேவையான ஒரு வீடு தேவை. இப்பொழுது வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட ஒரு அமைப்பாகவும் இருக்கலாம். ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவறை மற்றும் குளியலறை, ஒரு பொது அறை, ஒரு படிப்பு அறை என ஒரு வீடு போதுமானது. வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் பொது அறை படுக்கை அறையாக மாறிவிடும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்படி தனிதனி அறைகள் இல்லாமல் கூட வீடு அமையலாம். வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வசதியை பொறுத்து அமைகிறது. 

வீட்டிற்கு தேவையான பொருட்கள் அதாவது அமரும் நாற்காலி, மெத்தைகள், தொலைகாட்சி, வானொலி, சட்டி பாத்திரங்கள் என அவையும் ஒரு வகையில் அடக்கலாம். இப்பொழுது வீடு தயார். இதற்காக செலவழிக்கப்படும் பணம் எவ்வளவு? இந்த பொருட்களையெல்லாம் உற்பத்தி பண்ணுபவர்கள், வீடு கட்டுபவர்கள் என ஒவ்வொருவரின் தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு? கணக்கிட்டு பார்த்தால் வீடு கட்டுமான தொழிலாளர்கள் முதற்கொண்டு சித்தாள் வரையிலான பொருளாதாரம் தெரியும். இப்படித்தான் ஒரு நாட்டின் அமைப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது. 

ஆனால் எந்த ஒரு நாடும் தன்னிடத்தில் அனைத்து பணத்தையும் கொண்டிருப்பதில்லை. இதனை உலக  நிதி அமைப்பிடம் கடனாக பெறுகின்றன. ஒவ்வொரு நாடுமே இத்தகைய கடன் பெற்று வாழ்க்கை நடத்துவதால் ஒவ்வொரு குடிமகனும் கடனாளிகள் என ஆகி விடுகிறார்கள். சிக்கன வாழ்க்கை, சில்லறை வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை, படோபகர வாழ்க்கை என தனது நிலைக்கு மேல் வாழ நினைப்பவர்கள் கஷ்டம் கொள்கிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் கனவுகள் இல்லாத, சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என முனைப்பு இல்லாத எவரும் முன்னேற முடியாது. 

தன்னிடம் போதிய அளவு நிதி இல்லாத பட்சத்தில் நாங்கள் கடன் வாங்க மாட்டோம் என ஒரு நாடு இருந்தால் அந்த நாடு முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கையில் இருப்பை வைத்து கொண்டுதான் எதையும் செய்ய முடியும் என நினைத்தால் எதுவுமே நடக்காது. வருவாயை பெருக்கும் வழியை அறிந்து கொண்டு செலவினங்களை கட்டுபடுத்த வகை செய்ய வேண்டும். 

வீட்டில் சமைத்து சாப்பிடுவது அசௌகரியம் என நினைத்தால் பையில் இருக்கும் பணம் அசௌகரியப்படத்தான் செய்யும். அதே வேளையில் அனைவருமே வீட்டிலேயே சாப்பிட நினைத்துவிட்டால் உணவகங்கள் எல்லாம் அவசியமில்லாமல் போய்விடும். அப்படி உணவகங்கள் அவசியமில்லாமல் போனால் அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த உணவகத்திற்கு தரப்பட்ட பொருட்கள் எல்லாம் நின்று போய்விடும். 

எல்லாருடைய தேவைகளையும் ஒரே நிறுவனத்தினால் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தின் காரணமாகவே சில பல மாற்றங்களுடன் பல நிறுவனங்கள் ஒரே பொருளை சற்று வித்தியாசப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு நிறுவனத்தின் தலைவரின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்தின் பெயரை வலுப்படுத்தவோ, வலுவிளக்கவோ செய்கின்றன. மக்களிடம் பிரசித்து பெற்றுவிட்டால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மென்மேலும் வலுவடைந்து அந்த நிறுவனம் ஒரு தனி இடத்தை இந்த போட்டியில் நிலை நாட்டிக் கொள்கிறது. 

சிறந்த பொருள் அதிக விலை என்பது வியாபார தந்திரம். அதே வேளையில் சிறந்த பொருள் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதை நாம் மறுக்க கூடாது. பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருள்களில் இருக்கும் நம்பிக்கை சின்ன சின்ன கடைகளில் விற்கப்படும் பொருள்களில் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. அது மனித இயற்கை. 

சிறுக சிறுக சேர்த்தல் அவசியம். எது எடுத்தாலும் ஒரு ரூபாய் என விற்பனைக்கு ஒரு நிறுவனம் தொடங்கினால் அதனால் லாபம் அதிகமா, நஷ்டம் அதிகமா? அடுத்து சந்திக்கலாம்.