Wednesday 27 October 2010

இந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6

கொச்சின் என அறிவிப்புதனை பார்த்ததும் கொச்சின் செல்லலாம் என மனதில் எண்ணம் ஓடியது. நண்பரிடம் கேட்டேன். 'அதெல்லாம் போலாம் சார்' என்றார். 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவது சிரமம் எனில் என்னிடம் சொல்லுங்கள், நான் வாகனம் ஓட்டுகிறேன்' என நண்பரிடம் சொல்லி வைத்தேன். அதெல்லாம் வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டார். நானும் மனதில் நிம்மதி அடைந்தேன். எனக்கு இந்தியாவில் வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் மலைப்பாகவே இருக்கிறது.

கொச்சின் என்றதும் எனது மனைவி அங்கு படகு வீடு இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் அங்கு தங்கலாம் என சொல்லிவிட சரி என கொச்சின் பயணித்தோம். மலைகளும் அதை மூடியிருந்த தேயிலை தோட்டங்களும் என பச்சை பசேலென இருந்தது. பனி மூட்டத்தினால் பாதையே சரியாக தெரியவில்லை. அந்த மலைகளில் கட்டப்பட்டிருந்த வீடுகள் மனிதர்களின் தைரியத்தை பாராட்ட தோன்றியது. மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

கோயமுத்தூரில் இருந்து எனது பாவா நாங்கள் மூணாறு சென்றோமா இல்லையா என்பதை அறியவே இல்லை. அவர் எங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நாங்கள் தொடர்பில் இல்லை. அவரையும் தொடர்பு கொள்ளவில்லை. சரியென ஓரிடத்தில் தேநீர் அருந்த வாகனத்தை நிறுத்தினோம். அங்கே இருந்த தொலைபேசி மூலம் பாவாவிடம் தகவல் சொன்னபிறகே நிம்மதியானார். அதற்குள் எனது சகோதரன் மகன் சீனிக்கு தகவல் தெரிவித்து விசாரிக்க சொல்லி இருக்கிறார். அவனும் முயன்று பின்னர் தகவல் பெற இயலாது போனதை அறிந்து கொண்டேன். நாங்கள் கொச்சின் செல்கிறோம் என சொன்னதும் 'அட எப்படி பாவா இப்படி திடீர் திடீர்னு பயணம் போறீங்க, அதான் நல்லது என' அவர் பாணியிலே சொன்னதோடு கொச்சினில் ராஜேஷ் எனும் உறவுக்கார பையன் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரித்து இடங்களை சுற்றி பார்க்க சொன்னார்.

நல்லது என பல தூரம் கடந்த பின்னர் செல்பேசி இணைப்பு வந்தது. ராஜேஷிடம் தொடர்பு கொண்டால் தான் ஊருக்கு சென்று இருப்பதாக தகவல் சொன்னான். சரி என சீனியிடம் படகு வீடு விசாரித்தோம். 'என்ன சித்தப்பா இப்ப சொல்றீங்க' என தகவல் சேகரித்து அனுப்புவதாக சொன்னான். பயணித்து கொண்டே இருந்தோம். அவனிடம் இருந்து தகவல் வந்தது. பயமும் வந்தது.

ஆலப்புழா அல்லது குமரகோம் போக வேண்டும் என சொன்னான். அந்த வழியை கடந்துவிட்டோமே என நினைத்தேன். கொச்சினில் படகு வீடு இல்லை என திட்டவட்டமாக சொன்னவன் ஓணம் பண்டிகையின் பொருட்டு படகு வீடு கிடைப்பதே கடினம் என பயமுறுத்தினான். ஆனால் அதே வேளையில் எங்களை ஆலப்புழா போக சொன்னான். ஆலப்புழா போய்கொண்டே இருங்கள் அதற்குள் ஏதாவது பண்ணுகிறேன் என முடிவு சொன்னான்.

கொச்சினில் நுழைந்து கோட்டயம் வழி மாறி சென்று பின்னர் திரும்பி ஆலப்புழா சாலை அடைந்தபோது அப்பாடா என இருந்தது. நண்பர் நன்றாகவே வாகனம் ஓட்டினார். எந்த படபடப்பும் இல்லை. நிதானமாகவே இருந்தார். அதே நம்பிக்கையான வார்த்தைகள். அதெல்லாம் கரெக்டா போயிரலாம் சார்' மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் தன்னம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆலப்புழா சாலை அடைந்த மறு நிமிடம் சீனியிடம் இருந்து அழைப்பு. 'சித்தப்பா நேராக ஆலப்புழா போங்க, அங்கே தாமஸ் என்பவர் இருக்கிறார். ஒரு படுக்கை அறை உடைய படகு வீடு தயார் என்றான். இரண்டு படுக்கை அறை படகு வீடு இருந்தால் அனைவரும் செல்வது எளிது என்றேன். இரண்டு படுக்கை அறை இல்லை என்றான். தாமஸ் என்பவரின் எண் தந்து பேச சொன்னான். நானும் தாமஸ் என்பவரிடம் பேசினேன். இரண்டு படுக்கை அறை உடைய படகு வீடு தயார், அதற்கு ஐநூறு ரூபாய் மட்டுமே அதிகம் செலுத்த சொன்னார். மொத்த தொகை எட்டாயிரம் மட்டுமே. யார் இந்த தாமஸ். எப்படி இவர் கிடைத்தார்.

சீனி இணையதளத்தின் மூலம் தேடியபோது கிடைத்த நபர் தான் இவர். எந்த அறிமுகமும் இல்லை. அதுவும் ஒரு இரவு ஒரு படகு தனில் சென்று தங்க போகிறோம். நாங்கள் நால்வர் மட்டுமே. மனதில் பயம் இருந்தது. ஏமாற்றபட்டு விடுவோமோ எனும் அச்சம் இருந்தது. இருப்பினும் எது நடந்தாலும் பரவாயில்லை என துணிச்சலுடன்  நம்பிக்கையுடன் சென்றோம்.

சாலை வழிதனை தாமஸ் அவ்வப்போது சொல்லிக் கொண்டே வந்தார். நாங்கள் அவர் சொன்ன இடம் சென்றபோது மாலை மணி ஆறு. சாதாரணமாக படகு மதியம் பன்னிரண்டு மணிக்கே கிளம்பிவிடும். மாலை ஆகிவிட்டால் படகு தனை செலுத்த மாட்டார்கள். எங்களுக்காக ஒரு படகு காத்து கொண்டிருந்தது. ஆனால் தாமஸ் என்பவர் அங்கு இல்லை.

வேறு ஒருவர் வந்தார். எனது பெயரை குறிப்பிட்டார். வாருங்கள் என அலுவலகம் அழைத்து சென்றார். தாமஸ் உங்களுக்காக பதிவு செய்து இருக்கிறார், அவர் என்னுடைய நண்பர்தான் என பணம் தனை பெற்றுக் கொண்டார். எங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு படகினில் ஏறிக்கொண்டோம். எங்களுடன் மூன்று நபர்கள் வந்தார்கள். அதில் ஒருவர் சமையல் செய்பவர், மற்ற இருவர் படகு செலுத்துபவர்கள்.

நன்றாக பேசினார்கள். அதில் ஒருவர் எங்களது சொந்த விசயங்களை பற்றி கேட்டு கொண்டே வந்தார். நாமாக நமது விசயங்களை சொல்லும்போது வராத எரிச்சல் பிறர் கேட்டு சொல்லும்போது தானாக எட்டி பார்த்துவிடுகிறது. சிரித்து கொண்டு கலகலப்பாக பேசினார். முதலில் சொல்ல வேண்டாம் என நினைத்தாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும் என எல்லா உண்மைகளையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அவரும் அவருடைய விபரங்களை பகிர்ந்து கொண்டார். மற்ற இருவரும் நன்றாக பேசினார்கள். எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

இரவு உணவு சமைத்து கொடுத்தார்கள். மிகவும் பிடித்து இருந்தது. பொதுவாக இரவு பயணிக்க மாட்டோம் என சொன்னவர்கள் எங்களுக்காக படகு எடுத்து வருவதாக சொல்லி படகை மற்றொருபுறத்தில் நிறுத்தியபோது இரவு எட்டு மணி. பம்பை நதியில் தான் பயணம். கரையில் இருபுறங்களிலும் வீடுகள். நிறுத்திய இடத்தில் கூட பல வீடுகள் இருந்தன. எவரேனும் வந்து விடமாட்டார்களா என கேட்டபோது அதெல்லாம் வரமாட்டார்கள் என்றார்கள். இரவு நிம்மதியாக உறங்கினோம் எனலாம். குளிரூட்டப்பட்ட அறை. தொலைகாட்சி என சகல வசதிகளுடன் படகு வீடு இருந்தது.

அதிகாலை கிளம்பி, கிளம்பிய இடத்திற்கே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் எழில்மிகு காட்சிகள். மரங்கள், வீடுகள் மனிதர்கள் என ரம்மியமாக இருந்தது. வீடுகளின் அமைப்பு எங்கள் வீட்டினை நினைவில் கொண்டு வந்தது. படகுகளில் மூலமே பயணம் செய்கிறார்கள். சாலை போக்குவரத்து கிடையாதாம். அங்கங்கே படகு நிற்க இடம். சொந்த படகும் வைத்திருப்பவர்கள் உண்டு. காலை பத்து மணிக்கு ஆலப்புழாவில் இருந்து கிளம்பினோம்.

கம்பம் செல்ல வேண்டும் என வண்டி பெரியார், குமுளி என மலைகளும், மழை துளிகளும் என அழகிய பயணம். கேரளா குமுளி கடந்து தமிழ்நாடு என எல்லையில் வைத்தபோது மனம் வறண்டு போனது. எழில் தொலைத்த தமிழகம்.

படங்கள் எல்லாம் பின்னர் இணைக்கிறேன். :)

(தொடரும்)

Tuesday 26 October 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 3

3. உலக உயிரினங்கள் ஒரு பார்வை

'உலகில் தோன்றும் உயிரினங்கள், இயற்கையின் சூழலுக்கேற்ப, செயற்கைத்தனமான வாழ்வியலுக்கேற்ப, தம்மில் மாற்றம் கொள்வதோடு, தம்மை மாற்றியமைத்துக் கொண்டு வாழும் பழக்கத்தை எடுத்துக்கொள்வது மட்டுமில்லாது, அந்த வெற்றிகரமான காரணிகளை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் தம்மை உலகில் நிலைநிறுத்திக் கொள்கின்றன'

உயிரினங்கள் எப்படி தோன்றியது? உயிரினங்கள் எவரால் படைக்கப்பட்டது? 'படைப்பு கொள்கை' 'சுயம்பு கொள்கை' என இரண்டு வகைகள் இருக்கின்றன என வைத்து கொண்டாலும், படைக்கப்பட்டதோ, தோன்றியதோ அது எப்போது எனும் வினாவிற்கான விடைகள் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

உலகம் தோன்றியது எப்போது? வேதம் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அறிவியல் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அல்லது நானாக ஒரு புதுக் கணக்கு எழுதுவதா? என யோசித்துக் கொண்டிருக்குபோது எல்லாமே ஒருவிதத்தில் பொய் கணக்கு என்றுதான் தோன்றுகிறது.

உலகில் தற்போதுள்ள ஜீவராசி வகைகள் பதினேழு லட்சங்கள் என அறிவியல் அறிஞர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அதில்

முதுகெலும்புள்ள விலங்கினங்கள் வகை  62,305,
முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகை 1, 305, 250.
தாவர இன வகைகள் 321,212
 காளான் வகை, பாசி வகை என 51,563.

பூச்சிகள் மட்டும் ஒரு லட்சம் முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகையில் அடக்கமாம். பாலூட்டி வகைகள் வெறும் 5490 மட்டுமே.

இந்த கணக்கெடுப்பில் ஆடுகள், ஒட்டகங்கள், பாக்டீரியாக்கள் போன்றவை கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அந்த அறிவிப்பில் உள்ளது. தற்போது பூமியில் இல்லாது போன மறைந்த ஜீவராசி வகைகள் 300, ௦௦௦ என அறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசி வகைகள் சேர்த்தால் 3,000,000 லிருந்து 10,000,000 அல்லது 50,000,000 இருக்கலாம் என கருதப்படுகிறது.

மறைந்து போன ஜீவராசிகள் எத்தனை என்பதை அறுதியிட்டு கூற இயலாத நிலையும், திடீர் திடீரென புது வகையான ஜீவராசிகள் உருவாவதும் என இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது சூரியக் குடும்பம் தோன்றிய வருடங்களில் முதல் ஒன்றரை பில்லியன் வருடங்கள் மட்டுமே பூமியில் உயிரினங்கள் இல்லை எனவும் அதற்கு பின்னர் பாக்டீரியா தோன்றிவிட்டது என வெளியிடப்படும் அறிவியல் கணக்கெடுப்புகள் ஆச்சர்யம் அளிக்கின்றன. மூன்றரை பில்லியன் வருடங்களாக பாக்டீரியாக்கள் நமது பூமியில் நிலை கொண்டுவிட்டது. நமது மனித இனத்துடன் ஒட்டிய இனம் தோன்றி தற்போது ஏழு மில்லியன் வருடங்கள் (7,000,000) என்பது கணிப்பு.

இதில் எத்தனைவிதமான மாற்றங்கள்? பூமியில் ஏற்பட்ட வேறுபாடுகள்தான் எத்தனை? இருப்பினும் ஜீவராசிகள் பூமியில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள போராடி கொண்டே இருக்கின்றன. ஒரு ஜீவராசி வகை அழிந்தாலும், வேறொரு வகையில் ஜீவராசி தோன்றுவதும், நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதும் 'படைப்பு கொள்கையை' காற்றில் பஞ்சாக பறந்துவிட செய்கிறது.

அதே வேளையில் ஒரு செல் உயிரினம் பூமியில் மட்டும் தோன்ற வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல் உயிரினங்கள் தோன்றியதன் மர்மம் யாது? அறிவியல் இதனை இயற்கை தேர்வு விதி என்கிறது. பூமியில் மட்டுமே உயிரினம் தோன்ற இந்த சூழல் எனில் பிற கிரகங்களில் அந்த சூழல்தனை பயன்படுத்தி இயற்கை எதற்கு உயிரினத்தை உருவாக்கி கொள்ளவில்லை எனும் கேள்விக்கான பதில் இயற்கை தேர்வு விதியில் ஒரு விதிவிலக்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சந்ததியை உருவாக்கிட பாலூட்டி வகைகள் எடுத்து கொள்ளும் கால கட்டங்கள்  அதிகம். அதிலும் குறிப்பாக யானைகள் 660 நாட்களும், மனிதர்கள் சுமார் 270 நாட்களும் எடுத்துக் கொள்கின்றன. பூனைகளும் நாய்களும் முறையே 62 நாட்கள், 65 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பன்றிகள் 115 நாட்கள், ஆடுகள் 145 நாட்கள், பசுக்கள் 283 நாட்கள், குதிரைகள் 336 நாட்கள், சிங்கங்கள் 108 நாட்கள், முயல்கள் 33 நாட்கள் என பல வேறுபாடுகள் இருப்பதை காணலாம்.

இப்படிப்பட்ட பல வித்தியாசங்கள் உள்ளடக்கிய உயிரினங்களில் உள்ள ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருப்பதுதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது மூலம் ஒன்று உண்டு என்பது அறிவியலின் தீர்மானம். உதாரணத்திற்கு சிம்பன்சி எனப்படும் குரங்கின வகையும், மனித வகையும் ஒரு பொது உயிரினத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றுதான் தற்போது கருதப்படுகிறது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை என்பது அறிவியலின் தீர்க்கமான ஒரு முடிவு.

இத்தகைய எண்ணங்கள் தோன்றிட உதவிய  மரபணுக்கள் பற்றி அடுத்த தேடலை தொடர்வோம், அதோடு இன்னும் உயிரினங்களில் அதிக பார்வையை செலுத்துவோம்.

(தொடரும்)


.

நுனிப்புல் பாகம் 2 (20)

திருமால் திரும்பினார் 

விஷ்ணுப்பிரியன் கலக்கத்துடன் திருமாலையும் வாசனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். சிரிப்பொலி சட்டென நின்றது. விஷ்ணுப்பிரியன் அங்கிருந்து கோவில் உள்ளே செல்லாமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருமால் விஷ்ணுப்பிரியனை அழைத்தார். ஆனால் விஷ்ணுப்பிரியன் காதில் வாங்கிக் கொள்ளாது நடந்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை பின் தொடர்ந்து சென்று அவரது கையைப் பிடித்து அழைத்து வந்தான். விஷ்ணுப்பிரியனின் கையைப் பிடித்தபோது அவரது நடுக்கத்தை இவன் உணர்ந்தான். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலின் பக்கவாட்டிற்கு திருமால் அவர்களை அழைத்துச் சென்றார். 

திருமால் விஷ்ணுப்பிரியனின் சுருக்கமாக பெருமாள் தாத்தா சொன்ன விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்ட விஷ்ணுப்பிரியன் மிகவும் மனம் கலங்கினார். அந்த வேளைப் பார்த்து பார்த்தசாரதியும் அங்கே வந்து சேர்ந்தார். விஷ்ணுப்பிரியன் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவே தனது மனைவியை முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பார்த்தசாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் அவசரப்பட்டு செல்களை அழித்துவிட்டதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் தான் மிகவும் வேதனையும் கலக்கமும் அடைவதாக கூறினார். 

திருமால் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் வந்ததாகவும், அப்படி ஒருவேளை விஷ்ணுப்பிரியன் தவறியிருந்தால் அதை ஞாபகப்படுத்திச் செல்லவும், நேரடியாக பார்த்துச் செல்லவும் வந்ததாக கூறினார். இதைக்கேட்ட விஷ்ணுப்பிரியன் சற்று மனம் நிம்மதி அடைந்தவராக தென்பட்டார். பார்த்தசாரதி எல்லாம் அவன் கருணை என வேண்டிக்கொண்டார். வாசன் மட்டும் மிகுந்த யோசனையில் இருந்தான். 

இதை இப்படித் திட்டமிட்டு செய்ய வேண்டிய காரியமும், எவர்க்கும் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்துக் கூறினார். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை ஆரத் தழுவினார். ஆனால் விஷ்ணுப்பிரியன் இந்த விசயத்தை கடைசிவரை பாதுகாப்பது என்றே தான் இருப்பதாகவும், சுபா மருத்துவ குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் என அறிந்ததும், அவளிடம் மறைக்கமுடியாமல் தான் தவித்ததும் குறித்து சில நாட்கள் பல மாதங்கள் போல் நகர்கிறது என்று சொன்னார். திருமால் விஷ்ணுப்பிரியனிடம் தனது முகவரியை தந்தார். வாசன் இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், மெளனமாகவே நின்று கொண்டிருந்தான். 

திருமால் மற்றும் அனைவரும் ஆலய தரிசனம் செய்துவிட்டு பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்றார்கள். பார்த்தசாரதி வீட்டில் உணவருந்தினார்கள். திருமால் உடனடியாக தான் கிளம்ப வேண்டும் என அன்று இரவே கிளம்பினார். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். திருமால் தன்னை திருவில்லிபுத்தூரில் கொண்டு விடுமாறு விஷ்ணுப்பிரியனை கேட்டுக்கொண்டார். வாசன் உடன் சென்றான். 

வாசனிடம் செடி விசயம் வெற்றிகரமாக முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார் திருமால். வாசன், பேசுவதை இன்று தங்கியே பேசிச் செல்லலாம் என சொன்னான். ஆனால் திருமால் வாசன் கட்டாயம் சென்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாசன் தனது ஆஸ்ரம விசயம் குறித்துச் சொன்னான். திருமால் சிரித்தார். இது அவருக்கு மனதில் கடைசியில் தோன்றிய ஆசையாக இருக்கக்கூடும் என்றார் திருமால். 

திருவில்லிபுத்தூரிலிருந்து ஒன்பது மணியளவில் சென்னைக்குக் கிளம்பினார் திருமால். அவர் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் வாசன். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தான் திருமால் குறித்து பயந்து போனதாக சொன்னார். வாசன் திரும்பியவன் பூங்கோதைக்கு திருமணம் நடைபெறாமல் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீர்கள் எனக் கேட்டான். இந்த விசயத்தில் விஷ்ணுப்பிரியன் நடந்து கொண்ட முறை சற்றும் முறையில்லை என்று சொன்னான். விஷ்ணுப்பிரியன் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வாசன் அவரை அத்தனை எளிதாக விடுவதாக இல்லை. இந்த சூழலால் ஏதாவது பூங்கோதைக்கு பிரச்சினை வரும் எனில் தன்னால் அதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது எனச் சொன்னான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தைரியம் சொன்னார். 

அன்றைய இரவு பொழுது வேகமாக கழிந்தது. காலை எழுந்ததும் பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார்கள். பூங்கோதை கல்லூரிக்குச் செல்ல தயாரானாள். கேசவன் பார்த்தசாரதியுடன் கட்டிட வேலை ஒன்றுக்கு கிளம்பினான். மூன்று மாதங்கள் செல்ல வேண்டுமே என வேண்டிக்கொண்டான் கேசவன். 

வாசனிடம் பூங்கோதை திருமால் குறித்துக் கேட்டாள். வாசன் உண்மை சொல்வதா? வேண்டாமா? என தவித்தான். பொய் சொல்ல விருப்பம் இல்லாதவனாய் மாலை வந்து அனைத்தும் விபரமாக சொல்வதாக சொன்னான். பூங்கோதை சந்தோசமாகச் சென்றாள். 

மலையடிவாரத்தை அடைந்ததும் வாசன் நோட்டினைத் திறந்தான். பெரியவர் சிரித்தார். என்னவெனப் பார்த்தான் வாசன். சிரமப்படாம எல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறியா தம்பி என்றார். வாசன் புரியவில்லை என்றான். ஒரு விதை அத்தனை சாதாரணமா மண்ணில உருவாகிறது இல்லை. இந்த விதையின் மூல ஆதாரம் என்னனு உனக்குத் தெரியுமா? இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா? என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி? என்றார். வாசன் பெரியவரை உற்று நோக்கினான். சற்றே தடுமாறினான். புதன் என பெயரிடப்பட்ட கிரகங்களிலிருந்து புளூட்டோ எனப் பெயரிடப்பட்ட கிரகம் வரைக்கும் தெரியும் என்றான். புத்தகத்தில் படிச்சியா தம்பி என்றார் பெரியவர். வாசன் விதையின் மூல ஆதாரம் தனக்குத் தெரியாது என்றான். பெரியவர் கலகலவெனச் சிரித்தார். சூரியன் சட்டென மறைந்து மின்னல் வெட்டியது. மழை மிக வேகமாக கொட்டியது. ஒதுங்க இடம் இன்றி இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். வாசன் எழுதிய நோட்டுப்புத்தகம் முழுதும் மழையில் நனைந்து இருந்தது. பெரியவரை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசன். அன்றைய தேடல் அப்பொழுதே முடிவுக்கு வந்தது. 

(
தொடரும்)