Sunday 25 July 2010

புத்தக வெளியீட்டு விழா - நன்றி

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தகம்தனை மிகவும் சிறப்பாக முறையில் வெளியீடு செய்தமைக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றிகளையும் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

நான் யார் என்றே தெரியாத போதிலும் எனது எழுத்துதனை படித்து அதனை வெகு சிறப்பாக பாராட்டி பேசியதுடன், புத்தகத்தை வெளியிட்ட  தாரா கணேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

முதல் பிரதியை பெற்று கொண்டு நல்வாழ்த்து தெரிவித்த கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

ஐந்தே நிமிடங்களில் பேச வேண்டும் என அழைப்பு விடப்பட்டதும் என்னிடம்  கொண்டிருக்கும் நட்புக்காக மிகவும் சிறப்பாக பேசிய எனது தோழியும், முத்தமிழ்மன்றத்தின் தலைமை நடத்துனர்களில் ஒருவரான சூரியகாந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அசைபடம் எடுக்க வேண்டும் என விண்ணப்பம் தந்ததும், உடனே சம்மதம் தெரிவித்து அசைபடம் எடுக்க உதவியாக இருந்த மணீஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுரையை வழங்கிய புதிய தலைமுறை பத்திரிகையின் ஆசிரியர் அதிஷா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அகநாழிகை பொன் வாசுதேவன் அவர்களின் முயற்சியால் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மற்றும் முத்தமிழ் மன்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த தருணத்தில் விதூஷ், மணீஜி, கேபிள்ஜி ஆகியோருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்புதனை ஏற்படுத்தாமல் போனது குறித்து மனதில் சிறு வருத்தம் வந்தது என்னவோ உண்மை.

விழா குறித்து மேலும் தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.

சினேகன் அவர்களின் புத்தக விமர்சனம் கண்டேன். ஒரு பக்கம் மனதில் மகிழ்ச்சி நிலவினாலும், ஒரு இனம் புரியாத பயமும் வந்து சேர்கிறது. நன்றி சினேகன்.

எங்கோ இருக்கிறேன் என
நினைக்கும்போது
அருகில்தான் இருக்கிறாய் என
அன்புடன்
அரவணைத்து கொண்ட
அனைத்து
தோழர் தோழிகளுக்கும்
எனது
உளமார்ந்த நன்றியை
தெரிவித்து கொள்கிறேன்.

Friday 23 July 2010

களவாணி எனும் திருட்டு பயலே

படம் பேரு என்ன சொன்னீங்க? களவாணியா? கலைவாணியா?

களவாணி தான் படத்தோட பேரு. களவாணி பயலுக ஜாஸ்தியா போய்ட்டாங்க போல, அதான் இப்படி எல்லாம் பேரு வைக்க தோணுது.

திருட்டு பயலே அப்படினு படம் எல்லாம் வந்திருக்குதானே?.

ஆமாம், அதுக்கென்ன, களவாணி அப்படிங்கிறது கிராமத்து பாஷை. அதை களவாண்டுட்டான், இதை களவாண்டுட்டான் அப்படினு சொல்வோம்ல. களவாணி பயலுக ஆட்டை திருடிட்டு போய்ட்டானுக அப்படினு சொல்வோம்ல. இப்ப புரியுதா களவாணி தான் படத்தோட பேரு. திருட்டு பயலே படத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.

திருட்டு பயலே அப்படின்னு சொல்றதும் களவாணி அப்படின்னு சொல்றதும் ஒண்ணுதானே?

அதுக்கு என்ன இப்போ? களவாணி அப்படிங்கிறது பொதுபால். திருட்டு பயல அப்படிங்கிறது ஆண்பால். அதிருக்கட்டும், அந்த கதை வேற, இந்த கதை வேற.

களவாணி எப்படி இருக்கு?

களவாணித்தனம் நிறைய இருக்கு. படம் பாத்து முடிச்சப்பறம் என்ன சொல்ல வராக? அப்படினு தோணிச்சி. அப்படியாகுமோ, இப்படியாகுமோ அப்படினு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காக,  படம் முழுக்க நகைச்சுவையாத் தான் இருக்கு.

நல்லவேளை,  மூட நம்பிக்கையை ஆதரிக்கும் படம் அப்படினு ஒருத்தர் கூட சவாடல் விடக் காணோம்.

என்ன சொல்றீக?

படம் நல்லா இருக்கு. பாருங்க. அதெல்லாம் எதுக்கு. நாம கிண்டிவிடனுமா? நாம நம்பிக்கையில ஊறின ஆளுக.

என்ன விமர்சனம் இப்படி இருக்கு?

களவாணிய நாமளும் களவாட வேண்டாம்னு விட்டுட்டேன். படம் பாருங்க. :)

உன்னதமான நட்பு

எரிச்சலூட்டம் நகரம், ஆனாலும் விலகிப் போய்விடமுடியாதபடி வாழ்க்கை. அந்த வாழ்க்கையில்தான் இருந்தான் அஸ்வின். அஸ்வின் ஒரு துடிதுடிப்பான இளைஞன் ஆனால் மனதில் நிறைய வலிகளை சுமந்து கொண்டு கணினித் துறையில் வேலைபார்ப்பவ‌ன். ஒவ்வொரு முறையும் தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை செம்மையாக செய்தபோதும் அதற்கேற்ற அங்கீகாரமும், உதவித் தொகையும் கிடைக்காமல் போவது கண்டு மனம் வெந்து மனதில் உள்ள இந்த துன்பச் சூழலை ஒதுக்கிட பேருந்தில் ஏறி கடற்கரை பக்கம் அவன் செல்வதுண்டு. அந்த கடற்கரையில் இருந்து வேறொரு பேருந்தில் ஏறினால் அவனது வீடு பத்து நிமிடங்களில் வந்துவிடும். போகும்போதும் வரும்போதும் அந்த கடலைப் பார்க்கும்போது தன்னையும் உள்ளிழுத்துக் கொள்ளாதோ இந்த கடல் எனும் எண்ணம் வந்து கொல்வதுண்டு.


இன்று அதே கடற்கரை. ஒவ்வொரு முறை வரும்போதெல்லாம் கடலின் அலைகளைப் பார்த்ததோடு சரி. மனதில் ஏற்படும் அலைகள் வேலை பற்றிய ஒன்றாகவே இருக்கும், அதுவும் பிரச்சினைகள் பற்றியதே. இப்படிப்பட்ட வேலையை விட்டுவிட்டு கிராமத்திற்குச் செல்லும் எண்ணம் அவனுள் ஓட ஆரம்பித்தது. சுற்றுமுற்றம் பார்த்தான்.


தனது பள்ளிக்கால நினைவுகளும் அவனுடன் பழகிய நண்பர்கள் அவனது மனதில் வட்டமிடுகிறார்கள். பெயரை மணலில் எழுதுகிறான். அசோக். அழிக்கிறான். மற்றொரு பெயரை எழுதுகிறான். சுதாகர், அழிக்கிறான். மீண்டும் ஒரு பெயரை எழுதுகிறான் முகமது, பின்னர் அதையும் அழிக்கிறான். தனது பெயரையும் எழுதி அதை அழிக்கிறான். கண்களில் நீர் கோர்த்துக் கொள்கிறது.


அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் அஸ்வின் நோக்கி ஓடிவருகிறார்கள். அஸ்வினின் கவனம் சிதறுகிறது. கத்தலுடனும், கும்மாளத்துடனும் அவர்கள் அவனைத் தாண்டிச் செல்கிறார்கள். அஸ்வின் மீண்டும் தனது பள்ளிக்கால நினைவுகளில் மூழ்குகிறான். அதே நான்கு பெயர்களை மணலில் மீண்டும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்காமல் எழுதுகிறான். இது அழியாமல் காக்கப்பட வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருக்கையில் மழை தூறல் போடத் தொடங்குகிறது. மழை கொஞ்சம் வேகமாகவே கொட்டுகிறது. அந்த பெயர்கள் மெதுவாக அழியத் தொடங்குகிறது. ஆனால் அவனுள் அவனது நண்பர்கள் பற்றிய எண்ணம் நிலைகொள்ளத் தொடங்குகிறது.

அசோக்? சுதாகர்? முகமது? காலத்தின் வேகத்தில் வெவ்வேறு திசையில் சென்றுவிட்ட அந்த நண்பர்களை நினைக்கும்போதே மனதில் ஒரு அழுத்தம் வந்து சேர்கிறது. மழையில் தொப்பலாய் நனைந்து கொண்டே பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில், நிழற்கூடை அது இப்போது மழைகூடை, ஒதுங்குகிறான். அங்கிருப்பவர்களில் ஒருவர் 'நனைஞ்சதுதான் நனைஞ்சிட்டே அப்படியே போக வேண்டியதுதானே' என சிரிக்கிறார். வாழ்க்கையும் அப்படித்தான், தொலைத்த நட்புகளை அப்படியே தொலைத்துவிட்டே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை வருடங்கள்? எண்ணிப் பார்த்தால் கை விரல்களுக்குள் மட்டுமே அடக்கம்.

வெவ்வேறு திசையில் இருந்தே நால்வரும் பள்ளிக்கு வந்ததை நினைத்துப் பார்க்கும்போது அஸ்வின் மனதில் ஒரு சின்ன வலிதான். மழையின் வேகம் குறைகிறது. 'தடுமம் பிடிக்கப்போகுது, துவட்டிக்கோ ராசா' என அங்கிருந்தவர்களில் ஒருவர் தன்னிடமிருந்த துணியை எடுத்து அஸ்வினுக்குத் தருகிறார். 'இல்லை வேணாம்ங்க, மழை விட்டுரும், நான் வீட்டுக்குப் போயிக்கிறேன்' பேருந்து வருகிறது. அவனது நினைவுகள் கலைகிறது?!