Friday 2 July 2010

இனிமேல் பொய் பேசாதே

பொய் பேசுவதால் பிரச்சினைகள் தீர்ந்து போய்விடும் எனும் கணக்கு தவறுதான். 
பிரச்சினைகள் பெரிதாகி கொண்டேதான் போய்க் கொண்டிருக்கின்றன. 
இந்த பொய்யானது அந்த பிரச்சனைகளை ஒருபோதும் தீர்த்தபாடில்லை. 
இருப்பினும் பொய் பேசுவது என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகத்தான் இருக்கிறது. 

பொய் பேசுவதால் ஏமாற்றுக்காரன் என சொல்லித்தான் செல்கிறார்கள். 
ஏமாற்றுக்காரன் மட்டுமல்ல ஏமாந்தவர்களில் பொய் பேசுபவரும் ஒருவராம். 
நேர்மையாய் இருப்பது மிகவும் அசௌகரியம் என்பதால் மட்டுமே
பொய் பேசித் திரியும் காலம் இனிப்பாகவே இருக்கிறது. 

பொய் பேசுவதை நிறுத்துவது என்பது பெரும்பாடாகத்தான் இருக்கிறது
சத்தியம் செய்தாலும் அதை தவறுவது எளிதாக இருக்கிறது
குடிகாரர்களுக்கு மட்டுமல்ல இந்த பொய் பேசுபவர்களுக்கு கூட 
குடிகார பழமொழி மிகவும் பொருந்தும் தான். 

இனிமேலாவது பொய் பேசாதே என எச்சரித்து விடலாம்
ஆனால் பொய் பேசுவது என்பது மிகவும் சுகமாகத்தான் இருக்கிறது
கனவுகளும் கற்பனைகளும் கூட பொய்யின் குழந்தைகள்தான்
அந்த கனவுகளும் கற்பனைகளும் ஒருநாளேனும் உண்மையாகட்டும். 
 

குடிசை - சினிமா விமர்சனம்

இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. இது போன்று ஒரு திரைப்படம் வருமா என எண்ண வைக்குமளவுக்கு அமைந்து விட்ட இந்த திரைப்படம் தமிழ் திரையுலகின் ஒரு மைல் கல் எனத் தைரியமாகச் சொல்லலாம்.

நடிகர், நடிகைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் அனைவருமே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.

தமிழ் திரைப்படங்களில் கதை இல்லை எனும் குறையை தீர்த்து வைத்தப் படம் என சொல்லலாம். மசாலாவாக இருக்கட்டும் என நடிகையர்களை குழுவாக அரைகுறை ஆடையுடன் ஆட விடாமல், யதார்த்தம் இருக்க வேண்டும் என கிழிசல் உடையுடன் திரிபவர்கள் என எவரையும் காட்டாமல் இப்படியும் ஒரு திரைப்படம் எடுக்கலாம் கொஞ்சமும் மசாலா இல்லாமல் மிகவும் அழகாகவே ஒரு திரைப்படம் எடுத்து விட வேண்டும் என துணிந்து படம் எடுத்த இயக்குநர் அவர்களுக்கு ஒரு பாராட்டு.

பாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை எல்லாம் ஐந்து நிமிட பாடல்கள் என தனி இடம் பெறாமல் படத்தோடு ஒரு சில நிமிடங்கள் என அந்த கிராமத்தில் பாடித் திரிபவர்கள் பாடியதை படமாக்கி இருக்கிறார்கள். இதற்கெனவே பாடலை மிகவும் சிரமப்பட்டு ஆங்கில வார்த்தை கலக்காமல் அழகிய தமிழில் எழுதிய பாடலாசியருக்கு ஒரு பாராட்டு.

இசை. இதைப் பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். எத்தனை தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஏதேதோ சொல்கிறார்கள். ஆனால் இந்த இசை அமைப்பாளர் இயற்கையாய் ஏற்படும் ஓசையை மட்டுமே பதிவு செய்து அதை படத்துடன் மிகவும் சாதுர்யமாக இணைத்து இருக்கிறார். கடமுடவன அதிர்வு சத்தங்களோ, காதினை குடையும் இரைச்சல் சத்தங்களோ படத்தில் எங்குமே கேட்க இயலவில்லை. நம்மை சுற்றி ஏற்படும் சப்தங்களையே இசையாக்கி தந்திருக்கும் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.

நடிகர்கள், நடிகைகள் புதுமுகம் எனினும் படத்தின் கதைக்கு அருமையாக ஒத்துப் போகும் அழகிய முக பாவனைகள். முகத்தில் எவ்வித சாயமும் எவரும் பூசவில்லை. இது ஒரு திரைப்படம் என்கிற உணர்வே இல்லாமல் தங்களது வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் யார் கதாநாயகன் எனக் கேட்டால் கதைதான் கதாநாயகன் என சந்தோசமாக சொல்லலாம்.

படத் தொகுப்பு செய்தவரையும், ஒளிப்பதிவாளரையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதிக வெளிச்சம், கும்மிருட்டு, செயற்கை மழை என எதுவுமே இல்லாமல் இயற்கையோடு இணைந்து அந்த அந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். வறண்டு போன பூமி என்பதாலோ என்னவோ மழை காட்சி என படத்தில் இல்லவே இல்லை.

இந்த படமானது அனைத்தும் ஒரே ஒரு முறைதான் எடுக்கப்பட்டதாம். இப்படி நடி, அப்படி நடி என எந்த ஒரு காட்சியும் திரும்ப எடுக்கப்படவே இல்லையாம். இது திரையுலக வரலாற்றில் மாபெரும் சாதனை என சொல்லலாம்.

படம் முழுக்க ஒரு கிராமத்தை வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த கிராமம் மட்டுமே படமாகி இருக்கிறது.

இப்படி ஒரு திரைப்படம் இதுவரைக்கும் தமிழில் வந்ததே இல்லை. குடிசைக்கு அலங்காரம் அவசியமில்லை.

இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளும், நன்றிகளும்.

Thursday 1 July 2010

யாரைத்தான் நண்பர் என ஏற்பது?

உனது நண்பனை பற்றி சொல், உன்னை பற்றி சொல்கிறேன் என  ஒரு வழக்கு சொல் இருக்கிறதாம். எனக்கு அதில் எல்லாம் உடன்பாடு இல்லை. உன்னை பற்றி சொல், உன்னை பற்றி தெரிந்து கொள்கிறேன் என்பதுதான் எனது கோட்பாடு.

இப்படித்தான் நான் கல்லூரியில் படித்தபோது கல்லூரிக்கு அதிகம் வரவே மாட்டான் ஒருவன். பாடங்களை முறையாக படிக்கவும் மாட்டான். அவனை ஒழுங்காக படி என அவனுக்கு அறிவுரை சொல்லுவதோடு, கல்லூரிக்கு சரியாக வர வேண்டும் என அவனிடம் சொல்ல நான் தவறியதே இல்லை.  இத்தனைக்கும் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான் என்பதை தவிர தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டியது இல்லை.

அவன் ஒரு முறை தவறிழைத்துவிட கல்லூரி முதல்வரிடம் அனுப்பபட்டான். அவர் அவனிடம் யார் உனது நண்பன் என கேட்டு இருக்கிறார். அவன் எனது பெயரை சொல்லி இருக்கிறான். அந்த கல்லூரி முதல்வர் சரி போ என அவனை அனுப்பிவிட்டார்.  ஒரு நாள் கல்லூரிக்கு போகவில்லை எனின்  அது மாபெரும் குற்றம் என மனதில் நினைத்து இருந்தேன்.

கல்லூரி முதல்வர் என்னை வகுப்பறையில் பார்த்து 'என்னய்யா உன்னைத்தான் பிரேன்டுனு அவன் சொல்றான்' என்றார்.  புன்முறுவல் செய்தேன். அவன் தவறிய போதெல்லாம் தவறு என திருந்த சொன்ன என்னை அவன் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டாலும் அவன்  படிப்பை தொடர முடியாமல் செல்லும் நிலைதான் அவனுக்கு ஏற்பட்டது.

ஒரு நண்பன்/ நண்பி என்பவர் யார்? இதற்கு திருக்குறளில் எழுதப்பட்ட பாடலுக்கு விளக்கம் கேட்ட முத்து 'அட போய்யா' என நான் சொன்ன விளக்கத்தை கேட்டு ஏளன பார்வை பார்த்தது மறக்க முடியாது. சாமிக்கு அடிக்கிற உடுக்கையை கீழே தவறவிட்டா அதை தாங்கி பிடிப்பதுதான் நட்பு என சொல்லி இருந்ததாக நினைக்கிறேன். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. பின்னர் சரியாக விளக்கம் தந்தார் முத்து.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

ஊரில் இருந்தவரை என்னுடன் விளையாடித் திரிந்தவர்கள். படித்தபோது உடன் படித்தவர்கள். வேலை பார்த்த இடத்தில் உடன் வேலை பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டிருப்பவர்கள். இந்த எழுத்து  எழுதுமிடத்தில் உடன் எழுதுபவர்கள். எவரையுமே எனது நண்பர்கள் என என்னால் தொடர்ந்து அடையாளம் காட்டவே இயலவில்லை.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும்

எனக்கு எவரையும் தெரிந்து எடுக்க வேண்டிய சூழல் அமையாமல் போனது. தேவையின் அடிப்படையில் மட்டுமே பலர் பழக்கமானார்கள். பழக்கமானவர்கள் என்பதற்காக எனது நண்பர்கள் என சொல்லிக் கொண்டாலும், நட்பு என்கிற பார்வை வெறும் பார்வையாகத்தான் இருந்து வருகிறது.

ஒரே கருத்துடையவர்கள் எளிதாக நண்பர்கள் ஆகிவிடலாம் என சொன்னால் வேறுபட்ட கருத்துள்ளவர்கள் நண்பர்கள் ஆக இயலாதா? எனும் கேள்வி என்னுள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

நட்பு பற்றி சிலாகித்து எழுதியது உண்டு.

நட்பு தினத்தில் நட்பு பாராட்ட எவருமில்லாமல் இருந்த நிலையையும் எழுதியது உண்டு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

'இவன் என் நண்பன்டா' என என்னை எவரும் உரிமையோடு சொன்னதுமில்லை. 'இவர் என் ஆருயிர் நண்பர்' என எவரையும் நான் சொன்னதாக நினைவில் இல்லை.

எனது மனைவிக்கு நிறையவே நண்பிகள், நண்பர்கள் இருந்ததுண்டு. ஆனால் திருமணம் ஆன பின்னர் அந்த நண்பர்கள் நண்பிகள் என எவரும் தொடர்பில் இருந்தது இல்லை. நண்பராக என்னை மட்டும் கருதுவதாக சொல்லும் போதெல்லாம், இப்பொழுது இருக்கும் இந்த உலகில் இழந்த நண்பர்களை அடையாளம் காண்பது எளிது, எனவே தாராளமாக தேடலாம் என சொன்னாலும் காலம் கடந்துவிட்டதாகவே சொல்கிறார். இதே தேடல் இவரது நண்பர்கள், நண்பிகளிடம் இருக்குமா? எனக் கேட்டால் பதில் இல்லை.

பல வருடங்கள் தொடர்பில் இல்லாமல் பத்து வருடங்கள் பின்னர், இருபது வருடங்கள் பின்னர் சந்தித்து பழைய நட்பு பற்றி பேசுவது  நட்பிற்கு தரும் மரியாதையா? அவர்கள் நண்பர்களா? அவரவர் தேவை என ஓடிவிடும் உலகில் இந்த நட்பு பெறுகின்ற இடம் எது?

வழியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுவிட்டு குத்துதே குடையுதே என எதற்கு சொல்ல வேண்டும் என எச்சரிக்கை மொழி இருக்கத்தான் செய்கிறது. நட்பில்  எவையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என மிகவும் அருமையாகவே குறளில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற பாற்று.

இனம் போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்

ஆனால் நட்பு காதலைப் போன்று அத்தனை சுகமானது. காதலை சேர்த்து வைக்கும்  நண்பர்கள். புதிய வேலைக்கு என வழி செய்யும்  நண்பர்கள். துன்பத்தில் எப்போதும் உடனிருந்து துணையாய் நின்று நல்வழி படுத்தும் நண்பர்கள் என  இந்த நண்பர்கள் கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

எனக்கு எதுதேவை எனினும் உடனே செய்து தர பலர் தயாராக இருந்து கொண்டிருக்கிறார்கள். செய்தும் தந்து இருக்கிறார்கள். நட்பு என அவர்களை சொந்தம் கொண்டாட எனக்கும் ஆசை தான். ஆனால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய நான் தொடர்ந்து தயாராக இருக்கிறேனா? என எனக்குள் எழும்  கேள்வியில் என்னை தொலைத்து விடுகிறேன்.