Tuesday 8 June 2010

இது பணம் பறிக்கும் முயற்சி அல்ல

உலக தமிழ் வாசகர்களே,

எனது கனவு உலகில் உள்ள மிகவும் சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்மாலான உதவியை செய்வது என்பதாகும். இந்த சின்னஞ்சிறு உதவியை செய்வதற்கென பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த தொண்டு நிறுவனங்கள் இதற்கென பணியாட்களை நியமித்து செயல்படுவதால் கொடுக்கப்படும் பணத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு என செலவாகிவிடுவது வாடிக்கையாகும்.

மேலும் ஆப்ரிக்கா போன்ற மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கென இந்த தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. நமது நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளில் வறுமையின் காரணமாக பல சிறுவர் சிறுமியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள போகிறார்கள் என நினைக்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

நமது வளத்தை நாம் பாதுகாத்து கொள்வது அவசியமாகும். நமது தேவைகள் எப்போதும் குறையப்போவதில்லை. அந்த தேவைகளுக்கும் இடையில் நம்மால் முடிந்த உதவிகள் நலிந்தோருக்கு செய்வது நமது வாழ்நாளில் நாம் செய்யும் ஒரு முக்கிய பணியாகவே கருதுகிறேன்.

பணம் மட்டுமே எல்லா விசயங்களுக்கும் முடிவாகி விடாது. ஆனால் இந்த பணம் மூலம் பல காரியங்களை நிச்சயம் நல்ல முறையில் சாதிக்க இயலும். இதற்கான திட்டபணிகள் எல்லாம் விரிவாக நடைபெறும். பணம் இல்லாமல் பேசுவது ஆகாயத்தை பார்த்து கோட்டை கட்டுவதாகும். எனவே முதலில் உரிய பணம் சேர்ப்பதுதான் எனது முதல் திட்ட நடவடிக்கை.

பெரிய கடல்தனை சுத்தம் செய்யும் முயற்சியல்ல இது. சின்ன சின்ன ஓடைகளை, சின்ன சின்ன ஆறுகளை சுத்தம் செய்யும் பணி இது. இந்த சிறிய முயற்சி நிச்சயம் கடல்தனை சுத்தப்படுத்தும் அளவுக்கு விரிவடையும். எனது நோக்கம் உதவ வேண்டும் எனும் எண்ணம் உடைய மனிதர்களின் கரங்களின் மூலம் இந்த நல்லதொரு செயலை செய்வதாகும்.

என்னை எப்படி நம்புவது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். இதெல்லாம் தேவையா எனும் எண்ணம் கூட எழலாம். எனக்குள் எழுந்த எண்ணங்கள்தான் அவை. தீவிரமாக யோசித்தே இந்த முடிவு எடுத்து இருக்கிறேன். எனது முயற்சி உடனடியாக  பெரும் வெற்றியடையாமல் போகலாம். பல கோடிக்கணக்கான பணம் வைத்து இருக்கிறார்களே இன்னும் உலகம் இப்படி ஏன் இருக்கிறது என எண்ணும்போது எனது வாழ்க்கைமுறையும் என்னை கேலி செய்வதாகத்தான் இருக்கிறது.  கோவில்கள், சாமியார்கள் என பணத்தை கொட்டும் மனிதர்களை ஒருபோதும் குறை சொல்லப்போவதில்லை. அவரவர் தேவை அவரவருக்கு.

உலக  குழந்தைகளின் நலனுக்காக உதவிட எண்ணம் இருப்பவர்கள் உங்கள் உதவியை தாராளமாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று கூறிக்கொண்டு பணம் சம்பாதிக்க முயல்பவர்கள் இருக்கக் கூடும். அதற்கு ஒரு வழி ஏற்படுத்தி நான் தருவதாக நினைத்தால் அதற்காக வருந்துகிறேன். நல்ல செயலையும் கொச்சைப்படுத்தும் கூட்டம் இவ்வுலகில் உண்டு. சுயலாபத்துக்காக எதையும் செய்யும் கூட்டம் உண்டு. அரசுக்கு இல்லாத அக்கறை தனி மனிதனுக்கு எதற்கு என்கிற எண்ணமும் எழலாம். கூட்டங்கள் என தனி தனி பிரிவாக சேர்த்துக் கொண்டு வாழும் மனிதரிடையே தனியாய் ஒரு விதை போட்டு இருக்கிறேன். இதற்கு பின்னால் உதவும் கூட்டம் மட்டுமே எனக்கு தேவை , விளம்பரம் தேடும் கூட்டம் அல்ல என்பதை உறுதி செய்கிறேன்.

ஒவ்வொரு மாதம் முதல் தேதி கணக்கு விபரங்கள் இங்கே காட்டப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த திட்டத்துக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

குள்ளநரிகளின் தொல்லை

நரி அப்படின்னாலே தந்திரம் மிக்கது அப்படினு சொல்வாங்க. நரியும், சிங்கமும், எலியும் அப்படிங்கிற கதை எல்லாம் படிச்சி இருக்கேன். பாட்டி சுட்ட வடை கதையில கூட நரி வரும்ல. சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் அப்படிங்கிற கதையில கூட நரிதான் முன்னிலை வகிக்கும்.

தந்திரமான மனிசரை நரிக்குணம் அப்படினு சொல்வாங்கனு நினைக்க வேண்டாம். இந்த நரிகள் மிகவும் நயவஞ்சகமானவைகள். நாய்க்குணம் அப்படினு மனிசரை சொன்னா நன்றியுள்ளவர்னு அர்த்தம் இல்லீங்க. அதுக்கு அர்த்தமே வேற. அதுபோலவே நயவஞ்சகமான மனிசரைத்தான் நரிகுணம்னு சொல்றாங்கனு அர்த்தப்படுத்திக்கிரனும். எது எப்படியோ, எப்படி அர்த்தப்படுத்திகிறோம் அப்படிங்கிறதுக்கு பாடமா எடுக்க முடியும், அவங்க கற்பனையில, அவங்க அவங்க தோதுக்கு ஏத்தமாதிரி அர்த்தபடுத்திகிற வேண்டியதுதான். 

தந்திரம் அப்படிங்கிறதை நேர்மைக்கு, பொது மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினா பாராட்டலாம். சுயலாபத்துக்கு எல்லாம் பயன்படுத்தினா நயவஞ்சகத்தன்மைனுதான் சொல்ல முடியும். சாணக்யரை தந்திரமிக்க அமைச்சர் அப்படினுதான் சொல்றாங்க. பொதுமக்களின் நன்மைக்காக செயல்பட்டாருனு பேச்சு இருக்கு. அதுலயும் இந்த குள்ளநரிகள் இருக்கே, அது மனிசரோட நண்பர் மாதிரிதான் இருக்கும், ஆனா அதோட தொல்லை தாங்க முடியாது.


இந்த குள்ளநரிகள் காட்டுப்பக்கம் திரிஞ்சிட்டு இருக்காம இப்போ ஊர்பக்கம் எல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சி. வீட்டுக்கு பின்புறத்தில இருக்கிற தோட்டப்புரத்துல இதனுடைய நடமாட்டம் அதிகம் ஆயிருச்சி. இது எலிகள், முயல்கள் அப்படினு பிடிச்சி தின்னுமாம். இப்படி இதனுடைய நடமாட்டம்தனை மனிசங்களும் நேசிச்சாங்க. அதுக்கு உணவு கூட போடற வழக்கம் இருக்கு. இதனால நல்ல சுகம் காண ஆரம்பிச்சிருச்சி.

இப்படி உணவு போடறவங்க நிறுத்திட்டா அது என்ன பண்றதுன்னு தெரியாம அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் எடுக்க ஆரம்பிச்சிருச்சி. நம்ம ஊருல இருக்கிற மாதிரி கோழி எல்லாம் சுத்திட்டு இருந்தா நல்லா சாப்பிட்டு ஹாயா இருந்திருக்கும். பூனைகதான் அங்கிட்டு இங்கிட்டு திரியும். பூனைக இந்த குள்ளநரிகளை பாத்தா ஓடிப்போயிரும்.

இந்த குள்ளநரிகளை சாப்பிடற பிராணி எதுவும் இல்லை அப்படிங்கிறதால இதனோட எண்ணிக்கை அளவுக்கு அதிகமா போயிருச்சி. அதோட இவைகளோட தொல்லை அதிகமாயிருச்சி. சமீபத்துல இரண்டு பச்சிளம் குழந்தைகளை அவங்களோட திறந்திருந்த வீட்டுக்குள்ள படுக்கையறைக்கே போய் கடிச்சி குதறி வைச்சிருச்சி. :( அந்த குழந்தைக உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.


இவைகளை என்ன செய்யனும் அப்படினு ஒரு ஆலோசனை சொல்லிட்டு இருக்காங்க. இவைகளை பிடிச்சி மருத்துவர்கிட்ட கொடுத்துட்டா அவங்க சத்தமில்லாம கொன்னுடுவாங்க. நாம யாரும் விஷம் வைச்சி கொல்ல வேணாம் அப்படினு சொல்றாங்க. அதோனோட தேவை கறி, அது எந்த வகையில் இருந்தா என்ன அப்படினு அது தொடங்கிருச்சி.

இந்த குள்ளநரிகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயனுள்ளதா இருந்தா எடுத்துட்டு போகலாம்னு சொல்றாங்க. மத்த விலங்கினங்களை துன்புறுத்துராங்கனு எதிர்ப்பு நடந்துகிட்டு இருக்கு. இந்த குள்ளநரிகள் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா இருக்கிறதால ஒன்னும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டங்கனு சொல்றாங்க.

ஒரு குள்ளநரி இப்படி நடந்துகிட்டதால மொத்த குள்ளநரிகளுக்கும் அபாயம் வந்துருச்சு. நாய் வளக்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொஞ்ச நாள் முன்னாடி விட்டுருந்தாங்க. நாயை பயன்படுத்தி தன்னோட எதிரியை ஒருத்தன் தாக்கினானம். இப்படி அபாயகரமா இந்த மனிதரின் நட்பு விலங்குகள் மாற காரணம் மனிதன் ஒரு சமூக விலங்கு அப்படிங்கிறதை மறந்துட்டதாலதான்னு சொல்றாங்க. விலங்கோ, மனிதனோ எல்லாரையும் எல்லா நேரங்களிலும் நம்ப முடியாதுதானே. அதனுடைய சுபாவத்தை எப்பவாச்சும் எப்படியாச்சும் காட்டிரும். அதுக்காகத்தான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ அப்படினு ஊர் வழக்கத்தில சொல்வாங்க.

எங்கள் வீட்டு தோட்டத்திலும் குள்ளநரிகள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதன் அழகை ரசித்த நான் இப்போது அபாயமாகவே உணர்கிறேன். இருப்பினும் அதன் சுதந்திரத்தை பறித்துக் கொள்ள எனக்கு ஆசை இல்லை. வீட்டுக்குள் நுழைந்துவிடாதபடி கதவுகள் பூட்டப்பட்டுதான்  இருக்கின்றன. வீடு திறந்திருக்கும்போது  அவை ஒருவேளை நுழைந்துவிட்டால், பாதகம் பண்ண துணிந்துவிட்டால் நம்மை காத்துக் கொள்ள அவைகளை கொலை செய்வதில் தயக்கம் ஏதும் தேவை இல்லை.

Monday 7 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 6

6. திட்டம் தொடங்கியது


விஷ்ணுப்பிரியனை கண்ட வாசன் கேள்விக்குறியுடன் அவரை வரவேற்றான். வீட்டினுள் நுழைந்தார்கள்.

‘’என்ன வாசன் ரொம்ப களைச்சிட்டீங்க, திருமணத்தை நல்லபடியா சிறப்பா முடிச்சிட்டீங்க, ரொம்ப சந்தோசம்’’

‘’நன்றி’’

‘’உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசனும், அதுக்கு முன்னால உங்களைப் பத்தி சொல்லுங்க’’

தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்தான் வாசன்.

‘’என்னைப் பத்தி என்ன சொல்ல’’

‘’கோவிலுக்குப் போனா நீங்க ஏன் உங்க நிலையில இருக்கறதில்ல, போன தடவை வந்தப்ப இதேதான் நடந்துச்சு, இப்பவும் இதேதான் நடந்திருக்கு, நான் கேட்க வேணாம்னுதான் நினைச்சேன் , ஆனா தெரிஞ்சிக்கனும்னு தோணுது வாசன்’’

‘’எனக்குத் தெரியலை’’

‘’நல்லா யோசனை பண்ணிச் சொல்லுங்க வாசன், கோவிலுக்குப் போறதால மட்டும் நடக்குதா, இல்லை வேறு இடத்தில, வேற காரணங்களால நடக்குதா’’

‘’சின்ன குழந்தையா இருக்கறப்ப இதுமாதிரி வரும்னு அம்மா சொல்வாங்க, அப்புறம் நான் கோவிலுக்குப் போகாத காலங்களில எனக்கு இது மாதிரி எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் வந்ததில்ல, எங்கயும் வந்ததில்ல, கோவிலுக்குப் போனா மட்டும் அங்க கருவறைக்கு முன்னால நிறைய நேரம் நின்னா உடல்ல ஒரு மாதிரி உணர்றேன்’’

‘’நீங்க சொல்றது எல்லாம் உண்மையா’’

‘’எல்லாம் உண்மை இல்லை’’

‘’அப்படின்னா இதுபத்தி உண்மைய சொல்ல மாட்டீங்க’’

‘’எனக்கு சரியா சொல்லத் தெரியலை’’

‘’அப்படின்னா இனிமே இதையெல்லாம் எழுதி வைச்சிருங்க, எப்ப எப்ப எப்படி இதுமாதிரி வருதுனு எழுதி வைச்சா உபயோகமா இருக்கும்’’

‘’என்ன திடீருனு இப்படி’’

‘’தெரிஞ்சிக்கனும் வாசன்’’

‘’என்னோட செல்களை எடுக்கப் போறீங்களா’’

விஷ்ணுப்பிரியன் தனது திட்டம்தனை செயல்படுத்த இதுதான் சமயம் என அந்த அறையினை நன்றாகப் பார்த்தார்.

‘’வாசன், பூங்கோதையின் கருப்பையில கருவை வைக்க முடியல, பெருமாள் தாத்தாவோட செல்கள் எல்லாம் பயனற்றுப் போயிருச்சி, அதனால இப்படி ஒரு காரியம் நான் பண்றதா இல்ல, உங்களுக்கு இப்படி நடக்குதே அதைத் தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்’’

இதைக் கேட்டதும் வாசன் அதிர்ச்சியும் பதட்டமும் அடைந்தான்.

‘’என்ன சொல்றீங்க டாக்டர்’’

‘’பதட்டப்படாதீங்க வாசன், கருவை உருவாக்க முடியல, பூங்கோதையோட நம்பிக்கையை, பார்த்தனோட எதிர்பார்ப்பை வீணாக்க விரும்பல அதான் கருவை வைச்சிட்டதா சொன்னேன், இது சுபாவுக்குத் தெரியாது, இதுதான் உண்மையிலே நடந்த விசயம் வாசன்’’

‘’இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம பேசறீங்க’’

‘’சம்பந்தமில்லையா, இதை வைச்சித்தானே கல்யாணம் ஏற்பாடு எல்லாம் நடந்தது, அது இருக்கட்டும் இப்பதான் கல்யாணம் நல்லபடியா நடந்துருச்சே, அவங்க தாராளமா குழந்தை பெத்துக்கலாம், நீங்க உங்களுக்கு நடந்ததை சொல்றதுக்கு கடினமா இருந்தா, ஒரு காகிதத்தில உங்களுக்கு என்ன நடந்ததுனு எழுதித் தாங்க,’’

வாசன் தான் அமர்ந்து இருந்த இடம் விட்டு எழுந்தான். தீவிரமாக யோசித்தான். ஒரு காகிதத்தில் சில விசயங்களை எழுதினான். விஷ்ணுப்பிரியன் ஆர்வத்துடன் அமர்ந்து இருந்தார். வாசன் வேக வேகமாக எழுதி முடித்தவன் விஷ்ணுப்பிரியனிடம் தந்தான். விஷ்ணுப்பிரியன் வாசன் எழுதியதை வாசிக்க ஆரம்பித்தார்.

‘என்னை அறிந்து கொள்ள முயற்சிக்கும் தங்களுக்கு எனது நன்றி. எனக்கு ஏற்படும் மாற்றங்களை நான் அத்தனை விபரமாக கவனித்தது இல்லை, இது குறித்து எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு கருவினை ஆய்வகத்தில் உருவாக்கிய நீங்கள், என்னை அறிதல் பொருட்டு அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என இப்பொழுது சொல்வது வேடிக்கை நிகழ்வாக தெரியவில்லை, வேதனை தரும் நிகழ்வாக இருக்கிறது. இது என்னை அச்சப்படுத்துகிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல் எனக்கு இதுபோல் சூழ்நிலை வருமெனில் அதனைப் பற்றி நான் எழுதி வருகிறேன், தயவு செய்து இனிமேல் எந்த ஒரு காரணம் கொண்டும் இக்குழந்தை விபரம்தனை இதுபோல்
விளையாட்டாக பேச வேண்டாம்...

'பூங்கோதை தாயாகிய நிலை அறிவேன்’

இந்த கடைசி வரியை மட்டும் நன்றாக இடைவெளி விட்டு ஒரு வரியாக எழுதி இருந்தான் வாசன். இது போதும் எனக்கு என்பது போல் விஷ்ணுப்பிரியன் பார்த்தார். பின்னர் வாசனிடம், தற்போது வாசன் கொண்டிருக்கும் நிலையும், அவனது சில செயல்பாடுகள் தனது கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டதாகவும் அதன் பொருட்டு பல விசயங்கள் அறிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டதாகவும், உண்மை விசயத்தை அவனிடம் சொல்லாமல் இருந்தால் நல்லதில்லை என கருதியே சொன்னதாகவும் நம்பாவிட்டால் தனக்குச் சிரமம் இல்லையெனவும் கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார் விஷ்ணுப்பிரியன். வாசன் தனது அறையின் மேசையில் அந்த காகிதம்தனை போட்டுவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டான்.

விஷ்ணுப்பிரியன் உடனடியாக திரும்ப வந்து, நீங்க எழுதின காகிதம் எடுத்துக்கிறேன் என எடுத்துக் கொண்டார். வாசன் அவரது செயலை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

‘’காகிதம் எதற்கு’’

‘’எனக்கு இது ரொம்ப முக்கியம்’’

வாசன் குழப்பமானான். பார்த்தசாரதியிடம் இது குறித்து கேட்கலாமா என நினைத்தான். விஷ்ணுப்பிரியன் வீட்டை விட்டு வெளியே வேகமாக நடந்து சென்றார். அச்சமயம் மாதவியும் தேவகியும் வந்தனர்.

‘’என்ன மான், டாக்டர் ஒண்ணும் பேசாமப் போறார்’’

‘’தேவி நீ எல்லாம் எடுத்து வை, இதோ வரேன்’’

வாசனின் அறைக்குள் சென்றாள் மாதவி. வாசன் மேசை மீது தலையை வைத்து படுத்து இருந்தான். வாசனை தொட்டு எழுப்பினாள் மாதவி.

‘’மாமா, மாமா’’

‘’ம்’’

‘’டாக்டர் வந்துட்டுப் போறார், என்ன பிரச்சினை மாமா’’

விஷ்ணுப்பிரியன் சொன்ன விபரம்தனை கூறினான் வாசன். யோசித்தாள் மாதவி. பின்னர் ஒரு வரைபடம் வரைந்தாள். அந்த வரைபடத்தை வாசனிடம் காட்டி விளக்கினாள். வாசன் பயந்து போனான்.

‘’எப்படி இது சாத்தியம் மாதவி’’

‘’எப்படி மாமா உங்ககிட்ட இதைச் சொல்றது, இது நடக்க வாய்ப்பு இருக்கு, அதுக்குத்தான் அவர் இப்படி பேசி இருக்கார், உங்ககிட்ட எதுக்கு இதுபத்தி பேசனும், நேரா பூங்கோதைகிட்டயும், கேசவன் கிட்டயும் சொல்ல வேண்டியதுதானே, சரி கவலைய விடுங்க மாமா, அவர் என்ன வேணும்னாலும் பண்ணட்டும், அவரோட நீங்க விவாதம் பண்ண வேண்டாம். யார்கிட்டயும் நீங்களா எதுவும் சொல்ல வேண்டாம், பொறுமையா இருங்க மாமா’’

‘’ஒரு கடிதத்தில சில விசயம் எழுதச் சொன்னார், எழுதினேன்’’

‘’அந்த காகிதம் இப்போ எங்க மாமா’’

‘’அவர் எடுத்துட்டுப் போய்ட்டார்’’

‘’மாமா நீங்க இனி சொல்ல வேண்டிய தருணம் வந்தா சொல்ல வேண்டியதுதான்’’

வாசனுக்கு தைரியம் சொல்லிவிட்டு கிளம்பினாள் மாதவி. மாதவியையும் தேவகியையும் வழி அனுப்பிவிட்டு வீட்டில் வந்து அமர்ந்தான் வாசன். மாதவி வரைந்து தந்த படம்தனை பத்திரப்படுத்தினான்.

மாலை நேரம் நெருங்கியது. வாசனது வீட்டிற்கு மணமக்கள் வந்து இருந்தார்கள். அவர்களுடன் பார்த்தசாரதியும், விஷ்ணுப்பிரியனும் மேலும் சிலரும் உடன் வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்று அமர வைத்த வாசன், பார்த்தசாரதி கைகளில் அவன் எழுதிய காகிதத்தின் ஒரு சிறு பகுதி இருப்பதைக் கண்டான்.

(தொடரும்)