Tuesday 30 March 2010

யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்க?

இந்த வலைப்பக்கம் வந்ததும் வந்தேன், ஏதாவது ஒரு விஷயத்தை எழுதிட்டு இருக்கிறதுக்கு எப்படியெல்லாம் உதவி செய்றாங்க. எத்தனை விதமான தொடர் பதிவுகள். ஆச்சரியம் தருது. பல பதிவுகளுக்கு எழுத நினைச்சி இருக்கேன். நான் பொதுவா தமிழ்மணத்துல இருந்துதான் பல பதிவுகளை தேடி பிடிச்சி படிக்கிறது. அப்பப்போ தமிழிஷ் தமிழ் 10 பாக்குற வழக்கம் உண்டு. பின் தொடர்கிறேனு நூத்து ரெண்டு வலைப்பக்கங்களை நான் சேர்த்து வைச்சிருந்தாலும் உண்மையா பின் தொடருறது என்னவோ கொஞ்சம் தான். ஒவ்வொருத்தரும் எழுதறதை படிக்க இப்போ பாக்கிற வேலையை விட்டுரனும், அதோடு மட்டுமா குடும்பம் பிள்ளைக எல்லாரையும் மறந்துரனும். அவ்வளவு பேரு எழுதுறாங்க.

ஒரே விஷயத்தை ஒவ்வொருத்தர் பார்வையிலும் படிக்க நல்லாத்தான் இருக்கு. எல்லாரையும் நல்லவங்கதானு நம்பி ஏமாந்து போறதை விட எல்லாரும் அவங்க அவங்க அளவுல நல்லவங்கன்னு நினைச்சிட்டு பழகிட்டு போகலாம். ஆனாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

நான் பழகினவங்க எல்லாரும் நல்லவங்கதான். எனக்கு என்னைப் பொருத்தவரை நான் எப்படி ஒருத்தர்கிட்ட நடந்துகிறேனோ அதுபோலவே அவங்களும் என்கிட்டே நடந்துக்குவாங்கனு எனக்கு ரொம்பவே நம்பிக்கை இருக்கு. ஒரு சில எழுத்துகளை படிக்கும் போது எழுதுரத மட்டும் செய்வோம்னு மனசு கிடந்தது அடிச்சிக்குது. ஆனாலும் ஏதாவது பதிவை படிச்சா மனசில நினைக்கிறத எழுத வேண்டி வந்துருது. நாம எழுதுறதை சரியா புரிஞ்சிக்கிட்டு இருப்பாங்கனு மனசுல நினைக்க முடியறதில்ல. எதுக்குன்னா எழுதுனவங்க மனசை புரிஞ்சா நாம படிச்சி மறு மொழி போடுறோம்?

எழுத்துக்கள் ஒரு மனிசரோட குண நலத்தை சொல்லுமானு தெரியல. சொந்த உறவுகள்கிட்ட சில காரணங்களால பகை பாராட்டும் நாம எழுத்துக்கள் மூலம் பழகினவங்களோட எப்பவுமே நட்பு பாராட்டுவோம்னு தெரியாது. ஏதாவது மன கசப்புகள் வரத்தான் செய்யும். எனக்கே சிலரது எழுத்துகள் பிடிக்கிறது இல்ல இருந்தாலும் எழுதினவங்க பார்வையிலும், என் பார்வையிலும் அந்த எழுதப்பட்ட விஷயத்தை பார்த்துட்டு அத்தோட விட்டுருவேன், எனக்கு பிடிக்காததை எழுதிட்டாங்கன்னு எழுதுரவங்களை வெறுக்க முடியுமா? எதை எழுதினாலும் அந்த எழுத்துல என்ன இருக்குன்னு ஒரு பார்வை பாக்குற பழக்கம் இருக்கு.

இப்படியே இருந்தாலும் தெரியாத்தனமா சிலரது எழுத்துல ஒரு பிடிப்பு வந்துரத்தான் செய்யுது. அது தப்புன்னு சொல்ல முடியாது. அப்படியே நட்பு வட்டம் அப்படி இப்படினு வளரத்தான் செய்யுது. இப்போ அமைப்பு அது இதுன்னு ஆரம்பிக்கிறாங்க. ரொம்ப நல்ல விசயம் தான். ஒரு சிறந்த அமைப்பா கொண்டு வரணும்னு முன்னமே வேண்டுகோள் விட்டுட்டேன். ஆனா அந்த அமைப்பில இப்போதைக்கு சேர வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். வெளியில இருந்து ஆதரவு தரதுதான் என்னோட முடிவு. உண்மையிலே சொல்றேன் அமைப்பின் நோக்கம் எதுவுமே எனக்குப் புரியல. உள்நாட்டுல இருக்கிறவங்களுக்கு அது சரியா இருக்கும், எனக்கு சரிப்பட்டு வராது. எழுதுறது என்னோட தொழில் இல்ல! எழுதினா மட்டுமே வலைப்பதிவர் அப்படிங்கிற தகுதி கிடைக்குது, சந்தோசம் தான்.

சக வலைப்பதிவருக்கு என்ன மரியாதை இருக்கு? ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படியெல்லாம் மாத்தி மாத்தி தனிப்பட்ட அளவுல தாக்கி எழுதறாங்க. அதை படிக்க்கும் போது ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து போறது என்னவோ உண்மைதான்.

உலகத்துல யாரு நல்லவங்க? யாரு கெட்டவங்கனு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்? யாருமே நல்லவங்க இல்லை, யாருமே கெட்டவங்க இல்லைன்னு சொன்னாலும் என்ன செய்ய முடியும். ஒவ்வொருத்தரும் மாறி மாறி நடந்துக்கிறாங்க அதுதான் உலகம், இதுல எழுதுறவங்க மட்டும் நல்லவங்களாகவே இருக்கனும்னு எந்த ஊர் நியாயம்னு கேட்டாலும் ஒரு வரைமுறை இருக்கத்தான் செய்கிறது எதற்கும்.

எழுத்து ஒரு போதை. அந்த எழுத்து தரும் போதையில் எதுவும் தெளிவாகத் தெரிவதில்லை. இலக்குகள் இல்லாத பயணமும், குறிக்கோள் இல்லாத எழுத்துகளும் ஒரு போதும் காலத்திற்கு பயன் தரும்படி நிற்பதில்லை.

இதோ நான் விபரீதமான எழுத்துகளில் இருந்து என்னை விடுவித்து கொள்ள முடிவு செய்து விட்டேன். எங்கேனும் தென்படாவிட்டலும் இதோ இங்கே எப்போதும் தென்பட்டு கொண்டுதான் இருப்பேன். யாரு நல்லவங்க, யாரு கெட்டவங்க என்பதில் சரி பாதியாய் மனிதர்கள் இங்கும் அங்கும் என அலைந்து கொண்டிருக்கிறார்கள், ஓரிடத்தில் எவரும் நின்று இளைப்பாறுவதில்லை.

Monday 29 March 2010

ரௌத்ரம் படத்துக்கு பாட்டு எழுத சொன்னான்

இசையில ஆர்வம இருக்குற ஒரு பையனை நான் பார்த்தேன், அவனை இசை அமைப்பாளர் ஒருத்தர் அவர் இசை அமைக்கிற படத்துக்கு ஒரு பாட்டு எழுத சொல்லி கேட்டு இருந்துருக்காரு, அவனும் எழுதி தரேன்னு சொல்லி இருந்துருக்கான்.

அவன் இவன் அப்படின்னு வர ஒரு பாட்டை என்கிட்டே போட்டு காமிச்சான். இது போல எழுதனும்னு சொன்னான். நா கவிதை எழுதுவேன் பாட்டு என்னடா பாட்டு, சந்தம் கொடுடானு சொன்னேன். அவன் சந்தா கொடுக்க சொல்றான்னு நினைச்சிருப்பான் போல. இல்ல வரிய வெட்டி வெட்டி பதினாலு வரி வேணும். அதை நான் அனுப்பி சரியானு கேட்கணும்னு சொல்லிட்டான்.

சரிடா எழுதி தரேன் அப்படின்னு பதினாலு வரி எழுதி கொடுத்தேன். அதுல ஒரு நாலு வரி எழுதினதை பார்த்துட்டு பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். உன் அறிவியல் புத்தி உன்னை விட்டு போகாதானு கேட்காத குறைதான். நானே எழுதி அனுப்பி வைக்கிறேன்னு போய்ட்டான். ஒரு வாய்ப்பை நழுவ விட்டுட்டோமேனு வருத்தமா இருக்கு. மத்த வரிகளை எல்லாம் பாத்து இசை அமைப்பாளர் என்ன சொல்வாரோன்னு ஒரு பயம் வேற.

அவன் சிரிச்ச வரிகளை மட்டும் எழுதுறேன்.

ஆஸ்டிராய்டுகளை எரிப்பான்
கோமெட்டுகளை உடைப்பான்
சூரியனை எரிப்பான்
நெருப்பின் தலைவன் அவன்

பூமியை பிளந்து
மேக்மாவை மேனியில் பூசியவன்
ரௌத்ரம் ரௌத்ரம்
சொல்லும் இவன் சரித்திரம் சரித்திரம்

முத நாலு வரிதான் அவனை அப்படி சிரிக்க வைச்சது. தமிழ் படத்துக்கு பாட்டு எழுத இலக்கியம் மட்டுமே படிக்கனுமா என்ன.

ஒரு காதல் பாட்டும் கேட்டான், போடா முதல இதுக்கு ஓ கே வாங்கிட்டு வானு அனுப்பிட்டேன். நானும் பாடலாசிரியர் ஆகிருவேனு கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அரைகுற ஆராய்ச்சியாளர், வெறும் எழுத்தாளர், இப்போ பாடலாசிரியர்... ம்ம்ம்.

Sunday 28 March 2010

ஆண்டிகள் சேர்ந்து கட்டிய மடம்

எனக்கு இந்த கதையைப் பத்தி முத முத எப்பத் தெரியும்னா நாங்க இங்க ஒரு அமைப்பை உருவாக்க ஜனவரி மாசம் திட்டம் போட்டோம். அதாவது ஊருல இருக்கிற அதாவது தென்மாவட்டங்கள்ல இருக்கிற கிராமத்து பகுதிகளுக்கு நலத்திட்டம் செய்யனும்னு. ஆரம்பிக்கிறப்பவே என் மாமா மகன் சொன்னான், ஆண்டிகளல்லாம் சேர்ந்து கட்டிய மடம் போல ஆகிரக்கூடாதுனு, அப்பதான் என்னனு கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன். சாமிகளா, தமிழ்வலைப்பதிவர் குழுமத்தை அதுமாதிரி ஆக்கிப்பூடாதிங்கனு சொல்லத்தான் இந்த பதிவு.

எப்படி ஒரு அமைப்பு ஆரம்பித்தோம்னு சொல்றேன் கேளுங்க. சமூக சேவை செய்ற நினைப்புள்ளவங்களா உறவினர்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வந்தோம், சரி எப்படித்தான் ஆரம்பிக்கிறதுனு ஒரு திட்டம். இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் அப்படினு ஒரு பெயரை மனசில நினைச்சிக்கிட்டு ஒரு ஹோட்டலுல பதினாலு பேரு குழுமியிருந்தோம். எனக்கு அன்னைக்குனு பாத்து வாந்தியும், காய்ச்சலுமா வந்து சேர்ந்தது அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ!

மிகவும் நேர்த்தியா லேப்டாப் சகிதமா என்னோட சொந்த அண்ணன் பல திட்டங்களோட வந்தாரு. மைக் எல்லாம் பிடிச்சி யாரும் பேசல. உங்களுக்கு ஏன் இப்படி ஒரு அமைப்பு ஆரம்பிக்கனும்னு விருப்பம், உங்க நோக்கம் என்னனு ஒவ்வொருத்தரா சொல்ல சொன்னாரு. எல்லாரும் ஊருல இருக்கறவங்களக்கு பொதுவா வயதானவர்கள், கல்வி உதவிக்கு நிற்பவர்கள், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு நாம உதவுனும், அதை தனிப்பட்ட மனிசரா செய்றதை விட சேர்ந்து செஞ்சா நல்லாருக்கும், மேலும் வியாபார நோக்கமும் இருக்கனும், அந்த வியாபார நோக்கத்தின் மூலம் வர பணத்தை ஊருக்கு தந்து உதவனும், சுற்றுலா போகனும் அப்படினு ஒவ்வொருத்தரும் ஒரு கனவை சொன்னோம். தலைவர், உபதலைவர், பொருளாளர், செயலாளர் அப்படினு ஒரு மனதா தேர்ந்தெடுத்தோம், அவங்க ரெண்டு வருசத்துக்குத்தான் பதவில இருப்பாங்க, அப்புறம் புது ஆளுக, முதல இருந்தவங்க இருக்க முடியாது. அப்படியே சுற்று சுற்றி வரும். நல்லாதான் இருந்தது. எல்லாரும் இலண்டன் ஸ்ரீவைஷ்ணவ டிரஸ்ட் னு முடிவு பண்ணி பஜ்ஜி, சிக்கன் (வைஷ்ணவம்னா அசைவத்தை நிறுத்துங்க சாமிகளானு ஒரு சத்தம் கேட்டது ) சமோசா, கொகோ கோலா அப்படினு கூட்டம் முடிஞ்சிப் போச்சு. என்னாலதான் எதுவுமே சாப்பிட முடியல. நான் எந்த பதவியும் எடுத்துக்கல, ஏன்னா அந்த நாராயணன் புண்ணியமோ என்னவோ.

பெயரை எல்லாம் பதிவு செய்யனும்னு ஒரு நிர்வாகம் ஆரம்பிக்க முடிவு பண்ணியாச்சு. தைல முடிச்சிரலாம்னு பாத்தோம். ஆனா இன்னமும் நிர்வாகம் பதிவு செய்யலை, பேசினப்பவோ இது உடனடி விசயம் இல்ல, ஐந்தாண்டு திட்டம்னு தெளிவா இருந்தோம், ஒவ்வொருத்தரும் அத்தனை பிஸி. இதுல சமூக சேவைக்கு நேரம் ஒதுக்கறது அத்தனை சுலபமா என்ன. ஏன்னா கூடியிருந்த பதினாலு பேருல எட்டு பேரு முன்னமே மகாலக்ஷ்மி கோவில் நிர்வாகத்தில் இருந்தவங்கதான், அவங்கங்களுக்கு கடுமையான வேலைப்பளு மத்த இதர காரியங்களால, விலகிப் போனவங்கதேன். நான் அந்த கோவிலுல சேர்மனு, செயலாளர், அப்படி இப்படினு பதவி வகிச்சிருக்கேன், அப்புறம் எனக்கு நாராயணனா ரொம்பப் பிரியம். எனக்கு இப்படி ஒன்னா புதுசா ஆரம்பிச்சி செய்றதுக்கு அந்த கோவில் மூலமா செய்யலாமேனு ஒரு ஆதங்கம் எப்பவும் இருக்கு, ஆனா நிலமை அத்தனை சுலபமா இல்லனு தெரிஞ்சதலா புதுசா ஆரம்பிச்சே செய்வோம்னு இவங்களோட இறங்கிட்டேன்.

ஒரு குழு ஆரம்பிச்சி செய்றது ஒன்னு ஈசி இல்ல, என்னமோ ஆரம்பிச்சோம், அதைச் செஞ்சோம், இதைச் செஞ்சோம்னு இருக்கறது பேரு குழு இல்ல, ஒரு தெளிவான, திட்டமிட்ட தைரியமான மனசு வேணும். எப்பவும் கொள்கை விலகாத உறுதி வேணும். அதெல்லாம் நம்ம மக்களுக்கு இருக்கானு நம்மளையே கேட்டுப் பார்த்தாக்க நல்லாவே புரியும்.

பதிவு பண்றதாக்கான பேப்பர் வேலை எல்லாம் ஜரூரா நடந்துக்கிட்டுதான் இருக்கு, என்ன பதினாலு பேரு கையெழுத்துப் போடுறதுக்கு ஒரு மாசம் ஆகிப்போச்சு ;) அட ஒன்னு சொல்ல மறந்துட்டேனே, கூட்டத்துக்கு வந்த ஒருத்தரு எனக்குப் பிடிக்கலனு விலகிக்கிறேனு சொன்னாரு நாங்களும் சரினு சொல்லிட்டோம். அதுக்கு பதிலா இன்னொருத்தரு வந்து சேர்ந்துருக்காரு. அப்புறம் ஸ்ரீவைஷ்ணவனு சுருக்க வேணாம்னு வேற பேர முடிவு பண்ணிட்டோம், அதுக்கு நாங்க எடுத்துக்கிட்ட நாளு கணக்கு என்னவோ சரியா சொன்னா மூணு வாரம். பொறுமையா எதையும் செய்யனும்னுங்கிற பக்குவம் முதல வேணும். சோ காட்டுறதுக்கு ஒரு குழுவோ அமைப்போ ஆரம்பிக்கக்கூடாது, சரிதானே நான் சொல்றது.

குழு ஆரம்பிக்க முன்னாடி நாங்க பேசிக்கிட்டது என்னவோ இதுதான், ஒருமித்த கருத்தில்லாத எவரையும் நிர்வாக குழுவில் சேர்ப்பதில்லை, ஆனால் அவர்கள் நன்கொடை தந்தால் வாங்கிக்கொள்வோம். எவரேனும் எதிராகப் போனால் பொங்கலும் சுண்டலும் தந்து மரியாதையாக அனுப்பி விடுவோம், மேலும் பணம் கொடுப்பவர்களுக்கு பொங்கலும் சுண்டலும் நிச்சயம் உண்டு. அப்படி இப்படினு நகைச்சுவையா ஆரம்பிச்சோம், இப்ப நடக்கறதைப் பாத்தா ஒன்னுமே ஆகாது போலனுதான் நினைப்பாங்க ஆனா எங்க கனவை இந்த குழுவை வெற்றிகரமாக நடத்தி நிச்சயம் நிறைவேத்துவோம்னுங்கிற நினைப்பு எங்களுக்கு இருக்கு என்ன கொஞ்ச நாளு ஆகலாம், அதுக்காக உடனே அவசரப்பட்டு அது இதுனு எழுதிப்பூடாதிங்கண்ணே, நாலு சுவத்துக்கல நல்லா பேசி ஒரு முடிவுக்கு வந்தப்பறம் பதிவை எழுதுங்கண்ணே, இந்த விசயத்துல மட்டும் மனசுல தோணுனதை பதிவுல எழுதறதை நிறுத்திட்டு ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டினத போல இல்லாம ஒரு அட்டகாசமான அமைப்பை கொண்டு வாங்கண்ணேனு எல்லாரையும் கேட்டுக்கிறேன். எங்கனாச்சும் தப்பா எழுதி இருந்தா வருத்தம் தெரிவிச்சிக்கிறேண்ணே. அடுத்தவங்களை அனுசரிச்சி ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போற பழக்கத்தை முதல கையில் எடுங்கண்ணே.

ஊருல இருந்து இருந்தா உங்களையெல்லாம் வைச்சி ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டேன். (இப்படி வெட்டி சவாடலெல்லம் வேண்டாம்ணே). அப்புறம் ஒன்னு கவனத்துல வைச்சிக்கோங்கண்ணே, ஆரம்பிக்கிறப்போ அப்படி இப்படினு தான் இருக்கும், ஒரு தெளிவான நோக்கம் இருந்துட்டா அசைக்க முடியாதுண்ணே. நான் தான் ராசா னு இருக்கிற பதிவுலகத்துல நாங்கதான் சேவகர்களுனு சொல்லிப் பாருங்கண்ணே, தமிழ் வலைப்பதிவர்கள், இணைய பதிவர்கள் அப்படிங்கிற பவர்னு பளிச்சினு இருக்கும்.