Thursday 18 March 2010

தரையில் கிடந்த இருபதாயிரம் ரூபாய்

சுய மதிப்பீடு மெதுவாக விரிவடைந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு இளைஞன் மிகவும் நன்றாகப் படித்தவன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு என ஒவ்வொரு தேர்விலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வந்தான். ஆனால் அவனுக்கு இருக்கும் ஒரு சிறிய பிரச்சினை என்னவெனில் பேசுவது. எவரேனும் கேள்வி கேட்டால் அதற்கு உரிய பதிலைத் தராமல் சுற்றி வளைத்து விளக்கம் சொல்வதையே பழகி இருந்தான். இப்படி இருந்த இளைஞனின் குடும்பமோ மிகவும் ஏழ்மையானது.

அந்த இளைஞனின் தந்தையும், தாயும் கூலி வேலைக்கு விவசாயம் பார்ப்பவர்கள். எப்படியாவது மகனை நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பும் கனவும் அவர்களுக்கு நிறையவே இருந்தது. அவர்களின் கனவினை நிறைவேற்றும் பொருட்டு அந்த இளைஞனும் நன்றாகவே படித்து கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு அடைந்தான். அவனது குடும்பச் சூழல் காரணமாக அவனால் மருத்துவருக்கோ, பொறியியல் வல்லுநருக்கோ படிக்க இயலவில்லை.

வேலை எனத் தேடிச் சென்றபோதுதான் அவனுக்குள் இருந்த அந்த பேசும் பிரச்சினை பெரிதாகத் தெரிந்தது. எந்த ஒரு நிறுவனமும் அவனை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. மிகவும் மனமுடைந்தவனாகவே தாய் தந்தையருடன் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்தான். இவ்வளவு படிக்க வைத்தும் இப்படி விவசாய வேலை செய்கிறானே, இதை இவனை சிறுவனாக இருந்தபோதே செய்யச் சொல்லி இருக்கலாமே என பெற்றோர்கள் மனம் நொந்தனர்.

வேலைக்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தான், அப்போதுதான் அவனுக்கு ஒன்று புரிந்தது. தான் பேசுவதை சரி செய்ய வேண்டுமென ஒரு முறை ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ஒருவர் அவனுக்குச் சொன்னதும் எப்படி சரி செய்வது என மிகவும் முயற்சி செய்து தன்னை ஒரு தெளிவு படுத்திக் கொண்டான். தன்னில் இருக்கும் குறைகளை நாம் தெரிந்து கொள்வது என்பது பல வேளைகளில் எளிதாக நடப்பதில்லை, அதன் காரணமாக பிறர் ஒருவர் நமது குறைகளைச் சுட்டிக்காட்டும் போது உடனே உதாசீனப்படுத்தாமல் என்ன ஏதுவென சில மணித்துளிகள் செலவிட்டு சரிபார்த்துக் கொள்வதன் மூலம் எதுவும் நாம் இழந்துவிடப் போவதில்லை.

மேலும் சில நேர்முகத் தேர்வுகளுக்குப் போனான், ஆனால் அவன் அதிர்ஷ்டமோ, துரதிர்ஷ்டமோ அவனுக்கு வேலை கிடைத்தபாடில்லை. வீட்டில் வறுமையின் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டேதான் போனது. இப்படியாக இருந்தபோது அந்த இளைஞன் சாலையில் நடந்து கொண்டிருந்த போது வழியில்

ஒருநாள் ஒரு ரூபாய் தாளினைப் பார்த்தான்.

மற்றொரு நாள் ஒரு ஐநூறு ரூபாய் தாளினைக் கண்டான்.

மற்றொரு முறை இருபதாயிரம் ரூபாய் கட்டுகளைப் பார்த்தான்.

ஒவ்வொரு முறையும் அந்த பணம் தனை பார்த்தபோது அவன் செய்தது என்னவாக இருக்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.

இப்பொழுது சுயமதிப்பீடு என்பது எத்தனை வலிமையானது என்பது உங்களுக்கேப் புரியும். இதே சூழல் வந்தால் அப்போது எப்படி நடந்து இருப்பீர்கள் என்பதை அந்த நேரத்தில் மட்டுமே உங்களால் தீர்மானிக்க முடியும் என நீங்கள் இருந்துவிடாதீர்கள், மேலும் இது ஒரு கற்பனையான விசயம் தானே எனவும் கற்பனையாக பதிலை உருவாக்க வேண்டாம். உண்மையிலேயே அப்படி ஒரு சூழல் வந்தால் என்ன செய்வீர்கள் என்று மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் நீங்கள் அந்த பணம் தனை கண்டெடுக்கும் போதெல்லாம் எவரும் உங்களை கண்காணிக்கவும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது சிந்தித்து வைத்துக் கொண்டுவிட்டு மேற்கொண்டு படியுங்கள். 

இப்படித்தான் நான் ஒரு முறையல்ல பலமுறை கடைக்காரர் தவறுதலாக பணம் தந்தபோது அவரிடம் சென்று திரும்பிக் கொடுத்துவிட்டு தவறுதலாக கொடுத்து விட்டீர்கள், கொஞ்சம் கவனமாக இருங்கள் என சொல்லியே வந்து இருக்கிறேன். இதை கேள்விபட்ட பலர் 'சரியான ஏமாளியாக' இருக்கிறாயே என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். நான் ஏமாளியாக இருந்தால் கூட பரவாயில்லை, பிறர் என்னால் ஏமாளியாக இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.

இதே போன்று சாலையில் பணம் இருந்தால் (இதுவரை அதிக தொகை பார்த்தது இல்லை, மிஞ்சிப் போனால் ஒரு ஒரு பென்ஸ், ஐந்து பென்ஸ் அவ்வளவுதான்) அதை எடுக்காமலேச் சென்று இருக்கிறேன், கவனக்குறைவோ, குறைந்த பணமோ என்கிற உதாசீனம் என்றெல்லாம் இல்லை. ஏன் எடுக்க வேண்டும் என்கிற மனப்பான்மையே. ஆனால் சுயமதிப்பீடு சொல்லித் தரும் பாடம் மிகவும் அசாத்தியமானது.

அது சரி ஒவ்வொரு முறையும் அந்த பணம்தனை பார்த்தபோது என்னதான் செய்வதாக சிந்தித்து இருந்தீர்கள்.

ஒரு ரூபாய் தாள் தானே என பையில் வைத்துக் கொள்ளவில்லை அந்த இளைஞன். பணத்தை எடுத்தான் நேராக அவனுக்குத் தெரிந்த மிகவும் நல்ல திறமையான ஒரு தொண்டு நிறுவனத்திடம் அந்த பணத்தைச் சேர்த்தான். அதே போலவே ஐநூறு ரூபாயையும், இருபதாயிரம் ரூபாயையும் கொண்டு போய் அதே தொண்டு நிறுவனத்திடம் கொடுத்தான்.

இங்கே அவன் அந்த பணத்தை காவல் நிலையத்தாரிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஒருவிதத்தில் முறை என்றிருந்தாலும், அந்த பணமானது காவல் அதிகாரிகளால் பங்கு போடப்பட்டுவிடும் எனும் ஒருவித அச்ச உணர்வு அவனுக்கு இருந்திருக்கலாம். மேலும் பணம் தொலைத்தவர் காவல் அதிகாரிகளிடம் புகார் தந்தாலும் அந்த பணம் காவல் அதிகாரிகளிடம் கிடைத்தாலும் அவர்கள் உரிய முறையில் அந்த பணத்தைச் சேர்ப்பார்களா என்பது தெரியாது எனவும் அவன் நினைத்து இருக்கலாம். எனவே அவன் சமயோசிதமாக தொண்டு நிறுவனத்திடம் சேர்த்தது சரியே என்கிறார்கள் சுயமதிப்பீடு பற்றி சொல்பவர்கள். இது சரிதானா என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள், மேலும் காவல் அதிகாரிகளைத் தவறாக சித்தரிக்க வேண்டுமெனும் எண்ணம் இந்த எழுத்துக்கும் இல்லை என்பதையும் குறித்துக் கொள்கிறேன்.

இதே போன்ற ஒரு கேள்வி அவனின் நேர்முகத் தேர்வு ஒன்றில் கேட்கப்பட்டபோது தான் செய்ததை சொன்னதும் அவனது நேர்மையை பாராட்டி அவனுக்கு வேலையும் தரப்பட்டது. வேலையில் நேர்மை மிக மிக அவசியம் என்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கிறோமா?

Tuesday 16 March 2010

சுய மதிப்பீடு

எப்படியெல்லாம் வாழ வேண்டும், எதையெல்லாம் செய்ய வேண்டும் எனும் ஒரு கனவு எல்லோரிடத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்த கனவினை நனவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டாலும் அந்த முயற்சியானது ஒரு வெற்றியாக அமைந்துவிடாத வண்ணம் ஏதேனும் ஒன்று தடையாக இருந்து வருவது போல நமக்குத் தெரிந்து கொண்டிருக்கும். அந்த தடையை ஏற்படுத்துபவர் வேறு எவரும் அல்ல, நாம் தான் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா?

நீங்கள் எப்படியோ, எனக்குத் தெரியாது, ஆனால் நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். அறிந்து வைத்திருந்தால் மட்டுமே வெற்றிக்கான பாதை எளிதாக கிடைத்து விடுமா? அறிந்து வைத்திருப்பதை செயல்படுத்துவதில் தானே ஒரு வெற்றியினை நிச்சயப்படுத்திக் கொள்ள இயலும். இந்த செயல்படுத்துவது என்பது அத்தனை எளிதாக இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமா?

இப்படித்தான் சென்ற வாரம் வாழ்வில் முன்னேற்றம் காண்பது எப்படி எனும் நிகழ்வில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். இரண்டு தினங்கள் நடந்தது அந்த நிகழ்வு. அந்த நிகழ்வானது பல விசயங்களை புரிய வைத்தது. வேலை செய்யும் போது அந்த வேலை குறித்தும், மேலும் இந்த வேலை போய்விட்டால் அடுத்த வேலை உடனே கிடைக்க எத்தனை தூரம் ஒருவர் தயாராக இருக்கிறார் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வுதான் அது.

ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்று ஆரம்பிக்கிறது சுய மதிப்பீடின் தொடக்கம். எனக்குத் தெரிந்த மொழிகள் என ஓரளவுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரிந்த ஆங்கிலம், தமிழ், பேச மட்டுமே தெரிந்த தமிழ் கலந்த தெலுங்கு என அத்துடன் நின்று போனது. கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். உலகில் உள்ள மொழிகளில் இது மட்டும் தானா எனக்குத் தெரிந்தது என்பதை நினைத்து பார்த்த நாட்களில் அதுவும் ஒரு நாள் கணக்காகத்தான் தெரிந்தது. இலக்கணம் வரை கற்றுக் கொண்ட ஹிந்தி மொழி தொலைத்தேன், பல வார்த்தைகள் பேச தெரிந்த பெங்காலி மொழியையும் தொலைத்து இருந்தேன். வேறு மொழிகள் படி என அறிவுறுத்தப்பட்ட போது ஸ்பானிஸும், ப்ரெஞ்சும் படிக்க வேண்டுமென ஆவலுடன் தொடங்க நினைத்து தொடங்காமலேயே போனதும் நினைவுக்கு வந்தது. கடகடவென ஆண்டுகள் உருண்டோடி போனது. இனியும் ஆண்டுகள் உருண்டோடிவிடும்.

இதுவரை வாழ்க்கையில் என்ன சாதித்து இருக்கிறாய் என சுய மதிப்பீடு தொடர்ந்த போது கல்யாணம் பண்ணி இருக்கிறேன், ஒரு குழந்தைக்கு தந்தையாக இருக்கிறேன் என சொன்னால் எல்லாருமே விழுந்து விழுந்து சிரிக்கத்தான் செய்வார்கள், ஆனால் ஒரு மனிதர் சாதனையாளாராக வேண்டுமெனில் தானிருக்கும் குடும்பம் முதலில் ஒரு கட்டுகோப்பாக உள்ளதாகவும், குடும்பமானது மிகவும் அருமையாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என்பதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சாதனை. வேலையையும், குடும்பத்தையும் எத்தனை பேர் சரிவர நிர்வகித்து நம்மில் வருகிறோம்?

ஒரு முறை 'பொழுது போக்கு நேரம் கொல்லும்' என்கிற ஒரு சிறு கட்டுரையை எழுதி இருந்தேன், அப்போது நான் குறிப்பிட்டது என்னவெனில் முதல் தர வேலை எது நமது என்பதை நாம் தீர்மானித்துக் கொள்வது அவசியமாகும் என்பதுதான் அந்த கட்டுரையின் நோக்கம். இப்பொழுது மீண்டும் அதே சிந்தனையை புரட்டிப் பார்க்கிறேன். எனது முதல் தர வேலை என்பது திறம்பட ஆய்வு செய்து அந்த ஆராய்ச்சியின் மூலம் சமுதாயத்திற்கு பலன் கிடைக்கும்படியோ அல்லது என் பின் வரும் சந்ததியினர் எனது ஆராய்ச்சியை ஒரு முன் மாதிரியாக வைத்துக் கொண்டு அதன்படி அவர்கள் செயல்பட்டு சமுதாயத்துக்கு பயன் தருவது என வைத்துக் கொள்ளலாம். அந்த ஆராய்ச்சி காலகட்டங்கள் என பதின்மூன்று வருட காலங்களை பின்னோக்கிப் பார்க்கிறேன்.

திரும்பிப் பார்க்காதே என்றுதான் மனம் சொல்கிறது, நான் எனது ஆராய்ச்சியில் சாதனை புரிந்ததாக சில குறிப்புகள் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டிருந்தாலும் என்னளவில் ஆராய்ச்சியில் ஒரு தோல்வியாளனாகவே என்னை காண்கிறேன். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக என்னில் ஒரு எழுத்தாளன் மட்டுமே வளரத் தொடங்கி இருந்திருக்கிறான், ஆராய்ச்சியாளன் அதனால் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறான் என்பதை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது. எனது கனவு நசுக்கப்படும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது. குழந்தை கால எழுத்து கனவு, இளைஞன் கால ஆராய்ச்சி கனவினை கொஞ்சம் கொஞ்சமாக மென்று கொண்டிருக்கிறது. நான் எழுத்துக்காக செலவிட்ட நேரங்கள் என நினைக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதோ இந்த நேரமும் சேர்த்துத்தான்.

ஒரு தெளிவான மனநிலை இருக்குமெனில், ஒரு குறிக்கோள் நோக்கிய பயணம் வெற்றி பெற வேண்டுமெனில் தினமும் சுய மதிப்பீடு அவசியம். இன்றைய நாள் எப்படி கழிந்தது என்பதை எவர் ஒருவர் அன்றைய தினமே சுய மதிப்பீடு செய்து கொண்டு செயல்படுகிறாரோ அப்பொழுதே அவரது வாழ்வில் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகள் வெகு வலிமையாக கட்டப்பட்டு விடுகின்றன. நம்மில் பலர் அவ்வாறு செய்கிறோமோ?

ஒன்றை எழுதி அதன் மூலம் பெரும் மகிழ்ச்சியை விட ஒரு ஆராய்ச்சி செய்து அதன் மூலம் கிடைக்கும் விடைகளே பெரு மகிழ்ச்சியை எனக்குத் தந்திருக்கின்றன. எழுத்தை மொத்தமாக விட்டுவிட்டு பல மாதங்கள் இருந்திருக்கிறேன், ஆனாலும் எனக்குள் இருக்கும் ஒரு எழுத்துத் தன்மை என்னை எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டுமென்பது தவறுதான் இங்கே, ஏனெனில் ஆராய்ச்சி பொருள் ஆதாரம் மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு செயல்படுவது, அதற்கு பலன் இருந்தே தீரும். ஒரு எழுத்து சமூக நலனை கொண்டு வந்துவிட முடியாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். எழுதுபவர்கள் இது எத்துனை தூரம் உண்மை என்பதை தன்னைத் தானே கேள்வி கேட்டு கொள்ளட்டும்.

நுனிப்புல் நாவலை வெளியிட்டபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி எத்தனை ஆராய்ச்சி புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறாய் என்பதுதான். ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறேன் என சொன்னபோது, ஆராய்ச்சி புத்தகங்கள் பற்றி கேட்டேன் என்றார். அதிர்ச்சியாகத்தான் இன்னும் இருக்கிறது, இதுவரை ஒரு ஆராய்ச்சி புத்தகம் கூட எழுதவில்லை. தலைப்பு வைக்கப்பட்டதோடு ஒரு புத்தகம் கிடப்பில் அப்படியே இருக்கிறது. அதற்குள் வெறும் வார்த்தைகள் எனும் கவிதைத் தொகுப்பு வெளிவந்து விட்டது, 'தொலைக்கப்பட்ட தேடல்கள்' வெளி வர செய்ய வேண்டும் எனும் முனைப்பு இருந்தது, ஆனால் சுயமதிப்பீடு செய்து பார்த்த பின்னர் அதை இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம் என எண்ணம் வந்துவிட்டது.

நம்மில் பலர் 'போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கப்பா' எனச் சொல்வதை பலமுறை வாசித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் தோணும், ஏன் புள்ளை குட்டிகளை படிக்க வைப்பதோடு இந்த எழுத்து காரியத்தையும் தொடர்ந்து செய்தால் தவறா என. உண்மைதான், எழுத்து என்பது என்னைப் பொருத்தவரை கடைசி நிலையில் இருக்க வேண்டிய ஒன்று, ஏனெனில் எனது கனவுகளில் இது ஒரு கடைசி கனவு தான். ஒரு நாவல் எழுதப் போய் பல கதைகள் எழுதிய நிலைமை எப்படி வர வைத்தேன் என நினைத்துப் பார்க்கும் போது என்னை ஆராய்ச்சியில் முன்னேற தடை செய்தது நான்தான் என்பதை நான் வெளியில் சொன்னால் எவருமே நம்பவும் மாட்டார்கள். வெளி உலகப் பார்வைக்கும், என்னை வேலையில் அமர்த்தி இருக்கும் நபர்களுக்கும் நான் ஆராய்ச்சியில் செய்திருப்பது அதிகமாகவே தோணலாம், ஆனால் எனக்கு மிகவும் குறைவாகவேத் தெரிகிறது.

எழுத்து மூலம் பலருடன் பழகிய பின்னர் நாம் தொடந்து எழுதாமல் விட்டுவிட்டால், பிறர் எழுதியதைப் படிக்காமலோ, பதில் சொல்லாமலோ விட்டுவிட்டால் அவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம் நம்மில் எழுமெனில் நாம் மிகப்பெரும் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எப்போதாவது உணர்ந்தது உண்டா? நான் உணர்ந்து இருக்கிறேன். முக்கிய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு எழுத்து நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் எழுதிக் கொண்டிருந்தோமெனில் நம்மை நாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதில் உடன்படுவீர்கள் என்றே நம்புகிறேன்.

சுயக்கட்டுபாடு இல்லாத எவராலும் வாழ்வில் திருப்தி அடைய முடியாது. எழுத்துக்கும், என் வாழ்வுக்கும் ஒரு சுயக்கட்டுபாடு என்பதை ஒருபோதும் நான் முன்னிறுத்தியது இல்லை. ஒரு விசயத்தை உறுதியாகச் செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அவ்வாறு செய்தல் முறையா என ஆய்ந்தறிந்து ஒரு உறுதி மேற்கொண்டால் நிச்சயம் அந்த உறுதியில் வெற்றி பெறலாம்.

எனது கனவு எழுத்தாளன் ஆவதில் இல்லை, ஒரு நல்ல ஆராய்ச்சியாளன் ஆவதில் இருக்கிறது என்பதை மீண்டும் எனக்குள் உறுதி செய்து கொள்கிறேன்.