Saturday 2 January 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 5

கல்லூரிக்குக் கிளம்பிச் செல்ல தயார் ஆனான் ரகுராமன். ஊர் மந்தையில் ரகுராமனை கிரிக்கெட் விளையாடுபவர்கள் பலரும் சூழ்ந்து கொண்டார்கள்.

'இனி எப்போண்ணே வருவே' என்றான் சுப்பிரமணியன்.

'ரெண்டு மூணு மாசம் ஆகும்டா சுப்பு, நீயாவது ஒழுங்காப் படி, இதோ இவனுகளை மாதிரி ஆயிராதே' என்றான் ரகுராமன்.

'எங்களுக்கென்னடா குறைச்சல், நினைச்சப்போ வேலை செய்வோம், இன்னொருத்தருக்கு கைகட்டி சேவகம் பண்ற பொழப்பா எங்கது' என்றான் அழகர்பாண்டி

'அழபா, ஃபிலிம் காட்டுறியா' என்றான் பழனிச்சாமி.

'விவசாயம் பாக்குறது தப்புனு சொல்லலை, விவரமா, விவேகமா வாழனும்னுதான் சொல்றேன். பள்ளிக்கூடத்துக்கோ, காலேஜுக்குப் போயோப் படிச்சிட்டா மட்டும் அது படிப்பில்லை, ஒரு சமய சந்தர்ப்பம் வாய்க்கறப்போ எப்படி நடந்துக்குறோம்னு நமக்கு நாமச் சொல்லித்தரதும், பிறர்கிட்ட இருந்து படிக்கிறதும்தான் படிப்பு, அதை வைச்சித்தான் சொல்றேன்' என்றான் ரகுராமன்.

ரகுராமன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினான். சுப்பிரமணியன் ரகுராமனிடம்

'அண்ணே, கட்சி எப்போண்ணே ஆரம்பம்' என்றான்.

'கட்டாயமா சொல்றேன்' எனச் சிரித்துக்கொண்டே விலகினான் ரகுராமன்.

கல்லூரியில் எல்லாம் அவனுக்கு புதிதாகத் தெரிந்தது. சில தினங்களாக தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னான்.

'அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போறியா?'

எனச் சந்தேகத்துடனும் சற்று வெறுப்புடன் சந்தானலட்சுமி கேட்பாள் என சற்றும் ரகுராமன் எதிர்பார்க்கவில்லை. தன்னைப் போல எண்ணம் கொண்டவள் என்றே எண்ணிக் கொண்டிருந்த ரகுராமனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

'நீ, நான் எது செஞ்சாலும் கூட இருப்பேனு நினைச்சேன்' என்றான் ரகுராமன்.

'எனக்குப் பிடிக்கலை' என்றாள் சந்தானலட்சுமி.

'மனசுல ஒரு பெரிய திட்டம் போட்டு வைச்சிருக்கேன், அதைச் செய்யனும், நீ பக்கபலமா இருப்பேனு மனசுல உறுதியா இருந்தேன், நீ சொல்றதப் பார்த்தா என்னால கட்சி ஆரம்பிக்க முடியாதுனு நீ நினைக்கிற‌' என்றான் ரகுராமன்.

'சரி, கட்சி ஆரம்பிச்சி என்ன செய்யப் போற?' என்றாள் சந்தானலட்சுமி.

'ம்ம்... ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கப் போறேன், ஏழை எளியோர்கள்னு எல்லாருமே சந்தோசமா இருக்க வழி பண்ணப் போறேன், சாதி சமயம் எல்லாம் இல்லாத ஒரு சமூகமா மாத்தப் போறேன், உழைப்பே மூலதனம்னு நினைக்கிற சமுதாயம் என் லட்சியம்' என வேகமாகப் பேசினான் ரகுராமன்.

சந்தானலட்சுமி விழுந்து விழுந்து சிரித்தாள். 'ஐயோ ரகு, நீ சினிமாவுக்கு வசனம் எழுதப் போகலாம், ஒரு ஹீரோவா வேசம் போடலாம், அரசியல்வாதி கெட்டப் கூட உனக்கு நல்லா இருக்கும். நீ பேசினியே இப்படித்தான் ரொம்ப பேரு வெட்டித்தனமா கனவு கண்டுட்டு இருக்காங்க, இந்த வெட்டித்தனமான கனவை எழுதி காசு பாக்கிறவனு ஒரு பக்கம், அதே கனவை நிஜம் போல சினிமா காட்டி அதைப் பாக்குறவங்களை கனவு காண வைச்சி காசு பாக்குறவனு ஒரு கூட்டம், நம்ம சமுதாயம் ஒரு கனவு காணுறவங்க இருக்கற சமுதாயம். அதுவும் வெட்டித்தனமான கனவு'

'கனவு ஒருநா மெய்ப்படும் லட்சுமி, உலக மாற்றமே சாதாரண மனிசர்களோட கனவுகளில் இருந்துதான் தொடக்கம். நா கட்சி ஆரம்பிக்கிறதாத்தான் இருக்கேன், அதுல எந்த மாத்தமும் இல்லை. இதுக்கான வழிகளை நான் தேடப் போறேன்' என்றான் ரகுராமன்.

'இருக்கற கட்சி போதாதா?, சமூக நலத்துக்காகப் பாடுபடறவங்க கட்சில நின்னு தோத்தக் கதை எல்லாம் உனக்குத் தெரியாதா?, ஏன் இப்படி தேவையில்லாத வேலை உனக்கு'

சந்தானலட்சுமி சொன்னதைக் கேட்டதும் ரகுராமன் மனம் உடைந்தான். தனது மனதை திடப்படுத்திக் கொண்டு சந்தானலட்சுமியிடம் சொன்னான்.

'எங்க ஊருல இருந்துதான் என் கட்சியோடத் தொடக்கம் இருக்கப் போகுது, எனக்குத் தெரிஞ்சவங்க, என்னோடப் படிச்சவங்கனு எல்லார்கிட்டயும் விரிவாப் பேசப் போறேன், என்னோட முழுத்திட்டத்தையும் எழுதி வைச்சிட்டு உன்கிட்ட பேசறேன். அப்போவாவது எனக்கு நீ சப்போர்ட் பண்றியானுப் பாக்குறேன்' என்றான் ரகுராமன்.

'நீ உண்மையிலே உறுதியா இருக்கியா, எனக்குப் பிடிக்கலை... ஆனா நீ உறுதியா செய்யப் போறதா இருந்தா உன்கூட நான் எப்பவும் இருப்பேன்'

சந்தானலட்சுமியின் அந்த வார்த்தைகள் ரகுராமனுக்கு அளவில்லாத தைரியம் தந்தது.

தட்டிக் கொடுப்பவர்கள் எவரேனும் ஒருவர் இருந்தால் போதும், தைரியம் இல்லாத செயல்கள் கூட தைரியம் பெற்றுவிடுகின்றன. தட்டிக் கழிப்பவர்கள் அதிகம் இருந்த காரணத்தினாலேயே, தன்னைத் தானேத் தட்டிக் கொடுக்கும் வகையில் தனக்கு ஒரு மாபெரும் சக்தி ஒன்று உதவுதாக நினைத்துக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து சாதித்து இருக்கிறார்கள். தடுமாறி, தடம் மாறி விழுந்த போதும் எழ வேண்டும் எனும் எண்ணம் இல்லாத உயிரினம் ஏதேனும் உண்டா உலகில்?

(தொடரும்)

Thursday 31 December 2009

சென்னை புத்தக கண்காட்சி கடை எண் 402




தமிழ் அலை வடிவமைப்பில் வலைமொழி பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்ட 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது கவிதைத் தொகுப்பு சென்னை புத்தக கண்காட்சியில் கவிஞர் அறிவுமதியின் 'வெள்ளைத்தீ எனும் நூலுடன் கிடைக்கப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தமிழ் அலை நிறுவனத்தாருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

மிகவும் நன்றி இஷாக்.