Thursday 7 January 2010

உண்மை எது?

உண்மை என்றால் என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளும் பட்சத்தில் உண்மையின் சொரூபமாக இறைவன் விளங்குகிறாரா, விளங்கவில்லையா என்பது தெரிந்துவிடும். எப்படி உண்மை என்று உருவானது எனத் தேடி தேடிக் களைத்துப் போனேன். களைத்திருந்த வேளையில் அவ்வழிதனை கடந்த ஒருவர் சொல்லிச் சென்றார், உண்மை ஒருநாள் வெளி வரும். ஒளிந்திருக்கத்தானா உண்மை? மறைந்திருக்கத்தானா உண்மை? ஒரு உண்மையை பற்றி விளக்கக்கூட ஒரு பொய்மை நிகழ்வுதானா தேவைப்படுகிறது? சிந்தித்துப் பார்க்கையில் இறைவன் இஷ்டம் போல சிரிக்கிறான்.

ஒரு நிகழ்வு நடக்கிறது, அந்த நிகழ்வு உண்மையிலே நடந்ததா எனும் கேள்வி எழுகிறது. அதாவது ஒன்று நடந்தது எனில் அது எவ்வாறு நடந்தது, எந்த முறையில் நடந்தது எனும் விளக்கங்கள் தேவைப்படுகிறது. அந்த நிகழ்வினைப் பார்க்கும் தனித்தனி நபர் சொல்லும்போது ஒவ்வொருவரின் விளக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் காரணமாக அங்கே நிகழ்வின் தன்மை மாற்றம் கொள்கிறது. உண்மையான நிகழ்வு என்பது இப்போது பல சந்தேகங்களுக்கு உட்பட்டு தள்ளாடித் தவிக்கிறது. ஒரு அரை மணி நேரம் முன்னர் நடந்த விசயத்தையே நம்மால் புரிந்து கொள்ள இயல்வதில்லை, அதன் தன்மையை அப்படியே நம்மால் விவரிக்க இயல்வதில்லை. இதைத்தான் எந்தவொரு ஆராய்ச்சியும் ஒரு பொருளின் தனித்தன்மையை முழுவதுமாகச் சொல்லிவிட இயல்வதில்லை என ஒருவர் அழகாக எழுதி வைத்ததை உண்மை என்றே இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறேன். அதுதான் உண்மையா என எப்படிச் சோதித்து கண்டு கொள்வது, எந்த சோதனைப் பயிற்சியைச் செய்து பார்ப்பது? புரியவில்லை. இதன் காரணமாக உண்மை எதுவென இன்னமும் தெரியவில்லை.

உண்மை எதுவெனத் தெரியாதபோது எப்படி இறைவன் உண்மையின் சொரூபமாகத் திகழ்கிறார் எனச் சொல்வது? நல்லது நடக்க வேண்டுமெனில் ஒரு பொய் என ஓராயிரம் பொய் கூடச் சொல் என்கிறது முன்னோர்களின் அறிவு. ஒரு பொய்தனைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதுவே உண்மையாகிவிடுகிறது என்கிறது ஆய்வுகளுக்கு உட்படாத அறிவு. பொய் என்பது என்ன என எண்ணிப் பார்த்தோமெனில் உண்மையைத் தவிர்த்த அறிவு எனக் கொள்ளலாம். இருப்பதன் அடிப்படையில், அந்த அந்த அறிவுக்கு அடிப்படையில் ஒரு நிகழ்வினைப் பார்க்கும்போது, அந்த நிகழ்வுக்கான காரணிகள் என காணும்போது உண்மை எது, பொய் எது எனும் நிலைத் தடுமாற்றம் என்பது ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அறிவு என்றால் எதுவெனச் சிந்தித்துப் பார்த்தேன்.

அறிவு என்பதன் அர்த்தம் அறிந்து கொள்வது எனப் பொருள்படும்படி வைத்துக் கொள்ளலாம். அவரவர் அறிந்து கொள்வது அனைவரும் அறிந்து கொள்வது என்றாகாது, அனைவரும் அறிந்து கொள்வது என்பது அவரவர் அறிந்து கொள்வது என்பதும் ஆகாது. அப்படியெனில் அறிவு என்பது பொதுவான கருவி. இருப்பதை வைத்து அறிந்து கொள்வது என வரும்போது அதற்கான காரணிகள் கிடைக்கும். இல்லாத ஒன்றை வைத்து அறிந்து கொள்வது என்பது கற்பனை அறிவு என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்படியெனில் கற்பனையும் கூட உண்மையின் வசம் தன்னை ஒப்படைத்து இருந்திருக்கக் கூடுமோ?

Monday 4 January 2010

முயல் கறி


ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழிகள் சந்தியா, விந்தியா.

சந்தியாவுக்கு ஏதாவது பிரச்சினை எனில் விந்தியா முதல் ஆளாய் நிற்பாள். சந்தியாவும் அவ்வாறே.

இருவரது ஊரும் பத்து நிமிடத்தில் நடந்து செல்லுமாறு அமைந்து இருந்தது. இரு ஊர்களுக்கும் இடையில் விவசாய நிலங்கள். அந்த விளை நிலங்கள் வீடாகிப் போனால் இரண்டு ஊர்களும் ஒரு ஊராகிப் போய்விடும். சந்தியாவின் சொந்த கிராமம் சற்று தொலைவில் இருந்தது, அங்கே அவரது பாட்டி தாத்தா வசித்து வந்தனர். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்கு பாட்டியின் ஊருக்கு சந்தியாவின் முழுக் குடும்பமும் சென்று விடும். வேறொரு பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் அவளது பெற்றோருக்கு அதுவே செளகரியமாக இருந்தது.

யார் பள்ளித் தேர்வில், விளையாட்டுப் போட்டியில் முதல் வருவது எனும் போட்டி இருவருக்குமிடையில் மிகவும் அதிகமாகவே உண்டு. ஆனால் இவர்கள் இருவரையும் இதுவரை முதலில் வராத வண்ணம் தடுத்து வரும் கணேசனும் அந்த பள்ளியில் உண்டு.

ஐந்தாம் வகுப்பின் அரையாண்டுத் தேர்வு விடுமுறை கழிந்து பள்ளிக்குச் சென்றனர் இருவரும்.

பாட மதி்ப்பெண்கள் என அன்றே அனைத்துப் பாடங்களுக்கும் மதிப்பெண்கள் தரப்பட்டது. சந்தியா முதல் மாணவியாக முதன் முறையாக வந்தாள். விந்தியா மூன்றாம் நிலையில் இம்முறை இருந்தாள். கணேசன் தான் இரண்டாம் நிலை என அறிந்ததும் அழுதுவிட்டான்.

'இனிமே நீ அழப் பழகிக்கோடா' என சந்தியா சற்று கோபமாகவே கணேசனிடம் சொன்னாள்.

'நாங்க எத்தனை தடவை இரண்டாமிடம், மூணாமிடம்னு வந்துருக்கோம், நீ ஏண்டா அழறே' என தன் பங்குக்கு விந்தியாவும் சொல்லி வைத்தாள்.

'என்னை என் அப்பா அடிப்பாரு' என அழுதான் கணேசன்.

'என் புரோகிரஸ் ரிப்போர்ட் வந்ததும் அதை உன்கிட்ட தரவா, அதைப் பார்த்தாவது எத்தனை நான் அடி வாங்கியிருக்கனும்னு உங்க அப்பா நினைக்கட்டும்' என்றாள் சந்தியா.

'என்னதையும் சேர்த்து எடுத்துட்டுப் போ, இப்பவே புரோகிராஸ் ரிப்போர்ட் தந்து தலைவலி தராங்க' என்றாள் விந்தியா.

கணேசன் எதிர்பார்த்தது போல கணேசனின் தந்தை அவனை அடிக்கவில்லை, மாறாக நன்றாகப் படிக்குமாறு வலியுறுத்தினார்.

'சந்தியாவுக்கு என்ன வேணும்' என்று அவரது தந்தைச் செல்லமாகக் கேட்டார்.

'முயல் வேணும்' என்றாள் சந்தியா.

'முயலா? நீ சொன்னது போல முதல் ராங்க் வந்துட்ட, அதனால உனக்கு வாங்கித் தரேன்' என உறுதி தந்தார் சந்தியாவின் தந்தை சோனைமுத்து.

முயல் விற்கும் இடங்களுக்குத் தேடி அலைந்தனர். கண்கள் உருண்டையான முயல் வேண்டும் எனத் தேடினாள் சந்தியா. காதுகள் கொம்புகள் போல இருக்க வேண்டும் என அடம் பிடித்தாள். வேகமாக துள்ளிக் குதித்தோட வேண்டும் எனவும் வம்பு செய்தாள். அவள் கேட்டபடி வாங்கிட அழுத்துப் போனார் சோனைமுத்து.

கண்கள், காதுகள் சரி, ஓடும் முயல் என எப்படிக் கண்டுபிடிப்பது எனத் தவித்தவர் ஊரில் உள்ள ஒருவனிடம் சொன்னார். அவனும் சில தினங்களுக்குப் பின்னர் ஒரு முயல் ஒன்றைப் பிடித்து வந்து தந்தான். சந்தியாவுக்கு அந்த முயல் மிகவும் பிடித்துப் போனது.

தினமும் அதை தனது செல்லக் குழந்தையைப் போல பாவித்து வந்தாள். பழக்கப்பட்டு போன முயல் ஓட எத்தனிக்கவில்லை, சந்தியாவுடன் ஒட்டிக்கொண்டது. நாய் ஏதேனும் வந்தால் விரட்டி அடித்துவிடுவாள் சந்தியா. பள்ளிக்குச் செல்லும் போது அதனை பத்திரமாக ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்றாள். மதிய உணவு, தண்ணீர் என அனைத்தும் தந்து விடுவாள்.

முயல் கொழுகொழுவென ஆகிப் போனது. ஓடும் வேலையில்லை, உணவு தேடும் தேவையில்லை. முயலுக்கு சோம்பல் அதிகமாகிப் போனது. இதைக் கவனித்த சந்தியா சனி, ஞாயிறு என மாடியில் ஓடச் சொல்லி முயலைத் தூண்டுவாள். முயலும் சொல்வதற்கிணங்க ஓடிக் காண்பிக்கும்.

முழு ஆண்டுத் தேர்வு வந்தது, விடுமுறையும் உடன் வந்தது. முயலை உடன் எடுத்துச் செல்லலாம் என சந்தியா விரும்பினாள். ஆனால் சந்தியாவின் தாய் சுகுமாரி மறுத்துவிட்டார். கிராமத்தில் கொண்டு சென்றால் பிரச்சினை எனச் சொல்லி விந்தியாவிடம் பாதுகாக்கத் தரலாம் என சொன்னாள். சந்தியாவும் விந்தியாவிடம் விபரம் சொல்லிக் கொடுத்தாள்.

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று ஒரு வாரம் ஆனது. நாளிதழ் ஒன்றைப் பார்த்த சந்தியாவின் முகம் வெடவெடத்தது, மனம் படபடத்தது.

'அம்மா, என் முயலுக்கு என்னாகி இருக்குமோ' என அலறினாள்.

'என்னாச்சு'

'இதோ நியூஸ் படிம்மா' எனக் காட்டினாள்.

'முயல் கறி தின்ற பள்ளித் தோழியின் குடும்பம்'

'முயலை என் தோழி வீட்டுலப் பாக்கச் சொல்லிப் போயிருந்தோம், அன்னைக்கி சாயந்திரம் வந்து பார்த்தா முயல் ஓடிப்போச்சுனு சொன்னாங்க, ஆனா முயல் கறி வாசம் அடிச்சது, நாங்க கேட்டப்ப முயல் கொழு கொழுனு இருந்திச்சி அதான் சாப்பிட்டோம்னு சொன்னாங்க' என வேதனையுடன் அந்த நாளிதழின் வரிகள் சொல்லிக் கொண்டிருந்தன.

விந்தியாவின் வீட்டுக்குப் போன் செய்தாள் சந்தியா.

'பேப்பர் நியூஸ் பார்த்து பயந்திட்டியா' எனச் சிரித்தாள் விந்தியா.

'ம்ம்' என்றாள் சந்தியா.

'உனக்கு ஒண்ணுன்னா நான் சும்மா இருப்பேனா, முயல் எப்பவும் பத்திரமாத்தான் இருக்கும், நீ சந்தோசமா பாட்டி வீட்டுல இரு, கவலைப்படாதே' என நம்பிக்கை சொன்னாள்.

இதைக் கேட்ட சந்தியாவின் அன்னை மனதில் நினைத்தாள்.

புரிந்துணர்வும், ஒருமித்த எண்ணமும் உள்ளவரை எல்லாப் பொருள்களும் இவ்வுலகில் பாதுகாப்பாகவே இருக்கும். நமது முன்னோர்கள் நம்மிடம் தந்த பூமியினை பாதுகாப்பாக வைத்திருக்கிறோமோ முயல் கறி செய்துவிட்டோமா என எண்ணுகையில் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

(முற்றும்)

ஆன்மாவைத் தீண்ட இயலாது

ஆன்மா என்பது என்ன?

இதற்கான பதிலைத் தேடிக் களைத்து விடுவோர்தான் அதிகம். ஆன்மா என்பதை உயிர் எனக் கொள்வோரும் உண்டு. ஜீவாத்மா, பரமாத்மா, மகாத்மா என ஆன்மாதனைப் பிரித்துச் சொல்வோர் உண்டு. நாமெல்லாம் அதாவது மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களும் ஜீவாத்மா எனப் பொருள் கொள்ளலாம். மகாத்மா என்பது ஜீவாத்மா கொள்ளும் உயர் பதவி என எடுத்துக் கொள்ளலாம். பரமாத்மா என்பது ஜீவாத்மா, மகாத்மா, ஆன்மா அற்றது என அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே கருதப்பட்டு வந்தது. அதாவது பரமாத்மா என்பது ஆத்மா அல்லாத ஒன்றையும் (சூன்ய ஆத்மா) அடக்கிக் கொள்வது எனக் கொள்ளும் பட்சத்தில், அதெப்படி ஆத்மா அல்லாத ஒன்றும் பரமாத்மாவில் அடக்கம் என நினைத்து, உயிர் அற்ற ஜடப் பொருளுக்கும் உயிர் உண்டு என பின்னாளில் சிலர் ஏற்றுக்கொள்ளும்படி அமைய வந்தது எனலாம். இருப்பினும் பரமாத்மா தனித்தே இயங்குவதாகத்தான் கருதப்பட வேண்டும், ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என இவைகளை உள்ளடக்கியது என கருதுவது சரியாக இருக்காது.

ஆக ஆன்மா என்பது உயிர்! இந்த உயிர் எங்கும் நிறைந்து இருக்கிறது. அது காற்றின் வடிவினனாய் இருக்கிறது, காற்று அற்ற வடிவினனாகவும் இருக்கிறது. இப்படி எங்குமிருக்கும் உயிர் என்பதாலேயே அதுதான் இறைவன் எனச் சொல்வது முரண்பாடாகத்தான் முடியும்.

தீண்டல் என்பது என்ன?

தீண்டல் என்பது ஒருவகை உணர்வு. கண்ணும் கண்ணும் தீண்டியது எனச் சொல்வோர் உண்டு. 'நினைச்சேன் பாரு' என டெலிபதி பேசுவோர் உண்டு. தீண்டல் தொடுவது மூலம் மட்டுமின்றி தொடாமலே நடக்கக் கூடும் என அரிய தத்துவத்தைச் சொன்னவர்கள் உண்டு. எண்ணப் பரிமாற்றத்தால் ஏற்படும் தீண்டல் மனத் தீண்டல் எனச் சொல்லலாம். உயிர்த் தீண்டல் என இறைவனை வணங்கும் பொருட்டு ஏற்படுவதாகச் சொல்லப்பட்டாலும், உயிர்த் தீண்டல் என ஒன்று நடப்பதே இல்லை.

பரமாத்மா எனப்படும் ஒன்றும் சரி, பரந்து விரிந்து கிடக்கும் உயிர் எனப்படும் ஜீவாத்மா, சூன்ய ஆத்மா என்றாலும் சரி, எந்த வகையிலும் தீண்ட இயலாது. 'என் உயிரேப் போச்சு' எனச் சொல்லக் கேள்விப்படலாம். உயிர் போகும்படி நடந்து கொண்ட ஒரு செயல் ஒரு எண்ணத் தீண்டலேயன்றி உயிர்த் தீண்டல் ஆகாது.

உடலைத் தீண்டினால் உடல் சாகும். உயிர் சாகாது. கல்லைத் தீண்டலாம், கல்லின் உயிரைத் தீண்டலாகாது.

ஆன்ம பலத்திற்காக வேண்டப்படும் வேண்டுதல்களும், இந்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்க வேண்டும் என நினைத்து வாழும் முறைகளும் அவசியமற்றவை.

இதன் மூலம் ஆன்மாவைத் தீண்ட இயலாது என வலியுறுத்தலாம் என கருதுகிறேன்.

தேக பலம் வேண்டி உணவு உண்ணலாம், உடற்பயிற்சி செய்யலாம், தியானம் செய்யலாம். ஆன்ம பலம் வேண்டி எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. 'உடல் வளர்த்தேனே; உயிர் வளர்த்தேனே' என்பது மிகவும் ரசனையான வரிகள், ஆனால் உயிர் வளர்வதுமில்லை, உயிர் ஒடுங்குவதுமில்லை.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.

எத்தனையோ சுடர் எரியும், சூரியச் சுடர் முதற்கொண்டு. சூரிய வெப்பத்தைத் தீண்டும் சக்தி எவருக்கும் இல்லை. எங்கள் ஊரில் கதையாகச் சொல்வார்கள். ஒருவர் சூரியனைத் தொட்டுவிட வேண்டுமென பறவையில் மேல் அமர்ந்து சூரியனுக்கு அருகில் பறந்து சென்றாராம், ஆனால் பறவையும் அவரும் வெந்து போய் கீழே விழுந்துவிட்டார்களாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது, எப்படி ஒருவர் அத்தனை தைரியத்துடன் சூரியனைத் தொட வேண்டுமென பறவையில் அமர்ந்து சென்றார் என, அதுமட்டுமின்றி எப்படி இவர்களால் இப்படியெல்லாம் ஒரு கதையை உருவாக்க முடிந்தது என. அந்த‌ கதைக்கான உண்மையான அர்த்தம் எனக்கு இதுநாள் வரையும் தெரியவில்லை, ஆனால் இப்போது புரிகிறது, ஆன்மாவைத் தொட வேண்டுமென நினைப்பவர்களின் நிலையும் அதுதான் என‌.

பாரதி பாடலைக் குறிப்பிட்டேன், அதற்கான அர்த்தம் ஒரு மகாகவிஞனுக்குள் எழுந்த ஓர் அரிய அற்புத சிந்தனை. சிந்தனையில் தீண்ட முடியும் என பாரதி முயன்றார், ஆனால் சிந்தித்துப்பார்த்தால் எந்த ஒரு சிந்தனையாலும் கூட ஆன்மாவைத் தீண்ட இயலாது.

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா ‍ நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

கண்கள் மட்டும் கலங்குகிறது. எனது கண்ணீரால் கூட ஆன்மாவைத் தீண்ட இயலவில்லை.