Thursday 10 September 2009

காதல்

உன்மேல் எனது ஈர்ப்பு
உயிரின் பாதுகாப்பு
தொட்டதற்கெல்லாம் குற்றம்
தொலையாது மனம் சுற்றும்
விட்டுவிட்டு போக நினைக்கையில்
கால்களுக்கும் மனம் இருக்கும்
வாசல் கடக்காது
கட்டுப்பட்டே நிற்கும்!

என்ன கொணர்ந்தேன் என
கைகளைப் பார்த்துக்கொண்டே
இதயத்தில் நுழைவாய்
அன்புதனை விடவா
பொருள் பெரிதென்றால்
பொருள்தான் பெண்ணின் அழகு
பொருள்படச் சொல்வாய்
புரிந்தவனாக நான் இல்லை!

காதலை மனதில் பூட்டிக் கொண்டால்
கண்கள் எப்படி சொல்லிக் காட்டும்
ஊடலின் வலி என்னுள் விதைத்து
பூட்டினை உடைப்பாய் கட்டியே அணைத்து
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த் துளிகள்
விருப்பமில்லாத விளக்கங்கள் சொல்லி வழியும்
பொருளில் இல்லை காதல் என்பதை
உனது புன்னகைச் சொல்லிக் கிறங்கும்

எனது ஆயுள் உன்னில் அடங்கும்
பிள்ளைப்பேறினால் உலகம் இருக்கத் தொடரும்
கைகள் இணைத்து நடந்தே செல்கையில்
ஒருவருக்கொருவர் முதுமையில் முதுகில் சாய்கையில்
எப்படி வாழ்ந்தோம் என எண்ணியே
முகத்தோடு முகம் ஒட்டுகையில்
இறைவனாக நாம் இயங்க வைத்த
காதலை கணக்கிட்டு சொல்லவும் கூடுமா?
உன்மேல் எனது ஈர்ப்பு
நமது உயிரின் பாதுகாப்பு!

(நம்பிக்கை குழுமம் நடத்திய போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கவிதை)

Wednesday 9 September 2009

சிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.

சிறுகதைப் பட்டறை குறித்த இன்றைய பதிவு ஒன்றைப் படித்ததும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. முன்னர் இதே சிறுகதைப் பட்டறை சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தெரிவித்தும் இருந்தேன்.

நானூறு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று எழுதப்பட்டு இருந்ததைப் படித்துதான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன். தொழில்ரீதியாக தங்களை மெருகேற்றிட பணம் செலவழித்து பல பட்டறைகளில் தங்களை இணைத்துக்கொள்பவர்களிடையே எழுத்துத் தொழிலையும் போற்றி இந்த சிறுகதைப் பட்டறை மூலம் தங்களை மெருகேற்றிட நினைத்து இருக்கும் பல ஆர்வலர்களை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கே அதிக பணம் செலவழிந்துவிடும் என்பதுதான் வருத்தத்துக்குரிய விசயம். சிறுகதை எழுதிட அமைதியான சூழல் அவசியம், ஆடம்பரமான சூழல் அல்ல!

பிறந்தநாள் விழா, தலைவர் படம் என விழாக்கள், சினிமா என செலவிடும் பணத்தைப் பார்க்கும்போது இந்த பணம் ஒருவிதத்தில் மிகவும் குறைவுதான். ஆனால் இந்த பணத்தைக் கூடத் தர இயலாமல் எழுதத் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருக்கவும் கூடும்.

இன்றைய வாழ்க்கை சூழலில் தானாக கற்றுக் கொள்வது என்பது குறைந்து போய்விட்டது. எதையும் எவரேனும் சொல்லித் தந்தால் மட்டுமே கற்றுக் கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் இதற்காக தனியாக நேரம் செலவிட முடியாததும், தன் முனைப்பு இல்லாததும் காரணமாகும். இது போன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் நாம் மெருகேறிவிடலாம் என கனவு காண்பவர்கள், இதன் மூலம் பெறும் அனுபவங்களை முயற்சியாக்க வேண்டும் என நினைவுடன் இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இப்படித்தான் லண்டனில் மருத்துவத் துறைக்குச் செல்ல மருத்துவம் சம்பந்தமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும் பட்டறைகளில் பணம் செலவழித்து கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர். இதுபோன்ற பட்டறைகளில் கலந்து கொள்வதால் ஒரு விழிப்புணர்வும், நல்ல அனுபவமும் கிடைக்கக் கூடியதாகவே கலந்து கொள்பவர்கள் கூறுகிறார்கள், மேலும் இவ்வாறு கலந்து கொண்டதற்கான தரப்படும் சான்றிதழ் பெரும் மதிப்பு உடையதாக இருக்கிறது.

சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்திட வாழ்த்துகள்.

உனக்கென இருக்கும் உடல்

உயிரை உடலுக்குள் எங்கு
வைத்து இருக்கிறாய்
இந்த உடல் வளர வளர
உயிர் சுருங்கிக் கொண்டே வருமோ
உடல் வளரும் முன்னே
சுருங்கிப் போன
உயிர்களும் உண்டே இங்கு!

வெளியில் விடுதலையுடன் இருந்த
உயிரையா உடலுக்குள் வைத்தாய்
வெளிச் செல்ல வேண்டுமென்றா
தினமும் போராடுகிறது
இருக்குமிடம் அறியாத எனக்கு
அதன் போராட்டம் புரிவதில்லை!

ஆதியும் அந்தமும் இல்லாத
உயிரினை எங்ஙனம் படைத்தாய்
உறுப்புகள் உடல் பிரிகையில்
உயிரும் துணை சென்று வருமோ
உன்னை உணர்ந்திட
உடல் தேடி வருவதேன்!

உயிருக்கு உன்னை உணர வைக்கும்
ஒரு வழி காட்டியது இவ்வுடல்
புதைக்கவோ எரிக்கவோ வேண்டாம்
மீண்டும் அதே உயிர்
உணர்தல் தொலைத்து உடல்
தேடி வரலாம் பாதுகாத்து வையுங்கள்.