Saturday 12 September 2009

எங்க ஊரு ஆலமரம்.

''என்னடா ஆலமரத்தையேப் பார்த்துட்டு நிற்கிறே, போய் மாட்டுக்கு புல்லும், ஆட்டுக்கும் இலையும் பிடுங்கிட்டு வா''

''இருங்க முதலாளி, இப்போ போறேன்''

''ஏண்டா சொல்லிட்டே இருக்கேன், பதிலாப் பேசற''

தரையில் கிடந்த குச்சியை எடுத்து ஓங்கி கருத்தபாண்டியின் முதுகில் அடித்தார் பண்ணையார் குருபாண்டி. வலி தாங்கமுடியாமல் வார்த்தைகளை முனங்கியபடி ஓடினான் கருத்தபாண்டி.

மாட்டுக்கு புல்லும் ஆட்டுக்கு இலையும் பறித்துப் போட்டுவிட்டு மீண்டும் ஆலமரத்திற்கு கீழே போய் நின்றுகொண்டான். அவனுக்கு நேற்றிலிருந்து ஆலமரத்தின் மேல் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது. தாய் தந்தையை சிறுவயதிலே இழந்து தனது குழந்தை பருவம் முதற்கொண்டு பண்ணையார் வீட்டிலேயே வேலை செய்து காலம்தனை கடந்தான். பத்து வயதுதான் ஆனால் வேலைக்கு இது பத்தாது என பண்ணையாரா சொல்லப் போகிறார்.

''டேய் பாண்டி உன்னை பண்ணணயாரு வீட்டுக்கு வரச் சொல்லுறாருடா''

குரல் கேட்டதும் ஆலமரத்தின் மேல் வைத்த கண்ணை எடுத்துத் திரும்பி ஓட்டம் ஓட்டமாய் பண்ணையார் வீட்டை அடைந்தான்.

''ஏண்டா உன்னை ஒரு வேலை சொன்னா அதை மட்டும்தான் செய்வியா, ஏண்டா நேத்திலிருந்து ஆலமரத்துக்கு கீழேயே நிற்கிற''

கருத்தபாண்டி எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருக்க பண்ணையார் எழுந்து அவனை ஓங்கி ஒரு அறை விட்டார். கருத்தபாண்டி ஓ என அழுதுவிட்டான். அழுததை பொருட்படுத்தாமல் மேலும் சில அடிகள் கொடுத்தார்.

''ஏன் பச்சைப் புள்ளைய போட்டு இந்த அடி அடிக்கிறீங்க''

பண்ணையாரின் மனைவி கருத்தபாண்டியை அழைத்து சாதம் போட்டார். விக்கிக் கொண்டே சாதம்தனை விழுங்கினான்.

''அவர் எப்பதான் உன்னை அடிக்கிறதை நிறுத்தப் போறாரோ, ஏன் இப்படி இவர்கிட்டயே கிடந்து அடிவாங்கி சாகுற எங்காவது ஓடிப்போய் வாழ வேண்டியதுதான''

சாப்பிட்டுவிட்டு பதில் எதுவும் பேசாமல் திண்னையில் வந்து ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டான். பண்ணையார் குருபாண்டி அவனருகில் வந்தார். கருத்தபாண்டி நடுங்கியவாறே எழுந்தான்.

''படுடா படு, நீ அந்த ஆலமரத்துக்கிட்ட நிற்கிறது எனக்குப் பிடிக்கலடா இனிமே உன்னை அங்க கண்டேன் கொன்னு போட்டுருவேன்''

ஆனால் அதிகாலை எழுந்து ஆலமரத்துக்குத்தான் போனான் கருத்தபாண்டி. அங்கேயே நின்று கொண்டிருந்தவன் நேரம் போவதை கவனிக்கத் தவறினான். பண்ணையார் நேராக அங்கே வந்தார்.

''பாண்டி பண்ணையார் வராருடா''

கருத்தபாண்டி திரும்பி பார்த்தவன் ஓட்டமாக ஓடினான். மாடுகளை அவிழ்த்துக்கொண்டு காட்டுப் பக்கம் போனான். பண்ணையார் மாடுகளை ஓட்டிச் செல்வதைப் பார்த்து பேசாமல் வீட்டிற்குச் சென்று விட்டார். மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவன் எங்காவது ஆலமரம் தென்படுகிறதா எனப் பார்த்தான். ஆனால் காட்டில் ஆலமரங்களே தென்படவில்லை. நன்றாக வெயில் அடித்ததும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

''ஏண்டா நேத்து என்ன சொன்னேன், நீ என்ன செஞ்ச அந்த ஆலமரத்துக்குக் கீழ போய் நிற்காதடா''

''அந்த ஆலமரத்துக்கு எத்தனை பறவை வருது ஐயா, மரம் விரட்ட மாட்டேங்குதே, வேலை வாங்க மாட்டுதே ஐயா''

சொல்லிவிட்டு ஓடிப்போனான் கருத்தபாண்டி. மிகவும் யோசித்தார் குருபாண்டி. அடுத்த தினமே தனது மனைவியை அழைத்துக்கொண்டு அந்த ஊரு பள்ளி தலைமை ஆசிரியரை சந்திக்கச் சென்றார் பண்ணையார் குருபாண்டி.

முற்றும்.

Friday 11 September 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4

எலக்ட்ரானின் எதிர் தன்மையை காட்டியவர் ஜே. ஜே. தாம்ஸன். புரோட்டானின் நேர் தன்மையை காட்டியவர் கோல்ட்ஸ்டெயின். இவர்களின் ஆராய்ச்சியின்படி ஒரு அணுவின் மொத்த நிறையும் நேர்தன்மையுடைய புரோட்டான் துகளால்தான் வருகிறது எனவும் மிக மிக மெல்லிய நிறை கொண்டது எலக்ட்ரான் எனவும் தெரிய வந்தது.

உதாரணமாக எலக்ட்ரான் 1837 மடங்கு புரோட்டானை விட சிறியது என ஹைட்ரஜனில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரிந்தது.

இந்த எலக்ட்ரான்களினால்தான் அணுக்களின் எண் பற்றி எளிதாக அறிய முடிந்தது. இது குறித்து மோஸ்லியின் ஆராய்ச்சிகள் சொன்னது என்னவெனில் எலக்ட்ரான்கள் உலோகத்தினை மோதும்போது எக்ஸ்-ரே கதிர்களை உருவாக்குகிறது இந்த கதிர்களுக்கு எந்தவித தன்மையும் இல்லை அதே வேளையில் ஒரு தனிமத்தில் இருந்து மற்றொரு தனிமமாக மாறும்போது அத்தனிமத்தின் நிறை அதிகரிப்பதாகவும் அது புரோட்டானின் நேர்தன்மையினால்தான் என கண்டறிந்தார். எனவே புரோட்டான் தான் அணு எண்ணுக்கு காரணம் என அறிவித்தார் இது தான் ஒரு அணுவிற்கு அடிப்படையானதும் கூட. ஒரே எண்கள் கொண்ட வெவ்வேறு அணுக்கள் இல்லவே இல்லை என்பதைச் சொல்வதைக் காட்டிலும் இதுவரையிலும் எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மெண்டலீவ் தனிம அட்டவணையை உருவாக்கியவர். இவரது கணிப்புகள் வேதியியலுக்கு பல வகையில் உதவி செய்தன என சொன்னால் மிகையாகாது. மென்டலீவின் ஒருங்கினைப்பு சிந்தனை அற்புதமான செயல்பாடு எனலாம்.

சாட்விக் நியூட்ரானைக் கண்டுபிடித்தார், கண்டுபிடிக்கப்பட்டு 85 வருடங்கள் கூட இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த நியூட்ரானின் எடையும் புரோட்டான் எடையும் ஒன்றாக இருந்தது. இதனுடைய கூட்டுத்தான் ஒரு அணுவின் நிறை எனலாம் அதாவது நிறை எண்.

பொதுவாக இந்த எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் எப்படி வந்தது என உள்நோக்கிப் பார்த்தால் ஒன்றுமே புரியாத விசயமாக இருக்கும். இப்படி ஒரு மின்சாரத் தன்மையான சக்தி எப்படி வந்தது?

முதலில் வாயுக்கள் போன்ற தூசுப் பொருட்கள் இருந்து இருக்கிறது என்று சொல்லும் போது அதனிலிருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறது என சொல்லும் போது வேதியியல் வேதம் பேசுகிறது என்று தான் தோன்றுகிறது.

இந்த சூரியனின் ஆயுட்காலம் 13.5 பில்லியன் வருடங்கள் வரை தான் அதில் தற்போது 4.5 பில்லியன் வருடங்கள் முடிந்து விட்டது இனி 7.5 பில்லியன் வருடங்கள் இருக்கிறது அதில் என்னவெல்லாம் நடக்கும் என பில்லியன் வருடம் வீதமாக சொல்லி வைத்து விட்டார்கள். முடிவில் ஒன்றுமே இல்லாத ஒரு சூரியனாய் போய்விடுமாம். இந்த ஆய்வு ஆச்சரியம் தருகிறது.

அறிவியல் கூற்றுப்படி தனிமங்கள் எல்லாம் பின்னால் தோன்றியவை, ஒன்றில் இருந்து ஒன்று மாறி வந்தவை எனும் போது இவையெல்லாம் முன்னால் இருந்தவை எனும் கூற்று அடிப்பட்டு போகும். அப்படி முன்னால் இருந்தவை என்றால் எதற்கு அனைத்து கோள்களும் ஒரே மாதிரியான நிலையை பெறவில்லை என்ற கேள்வியும் எழும். இயற்பியலும் வேதம் பேசுகிறது.

இந்த தட்பவெப்ப நிலையே உயிர் வாழச் சாதகமானது என சொல்லப்படும் பட்சத்தில் காற்றில்லாமல் வாழும் உயிரினங்கள், தரையில் வந்தால் செத்துப் போகும் உயிரினங்கள், தண்ணீரில் சென்றால் தவித்துப் போகும் உயிரினங்கள் என பிரிந்து இருக்கும் பட்சத்தில் மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கத் தானே செய்யும்? கண்ணுக்குத் தெரியாமல் வாழும் உயிரினங்களா அவை? கேட்கும் சப்தம் இருக்கிறதே அதைக் கூட அளந்து வைத்து இருக்கிறார்கள். அதனை டெசிபல்ஸ் எனப்படும். அந்த அளவுக்கு உட்பட்ட சப்தம் மட்டுமே நாம் கேட்கமுடியும்! அப்படியெனில் உயிரியலும் வேதம் பேசுகிறது!

எழுத நினைத்ததும்

கவிதை எப்படி வருமாம்
காதலித்தால் வருமாம்
கற்பனை இருந்தால் வருமாம்
கலங்கி கிடக்கும் நெஞ்சம்
புலம்பி தவிக்கையில் வருமாம்

துயரம் கண்டு துடிதுடிக்கையில்
துள்ளிக்கொண்டு சீறிப்பாய்ந்து வருமாம்
கண்ணை மூடி கடவுளை நினைக்கையில்
கனிந்து தவழ்ந்து வருமாம்

கண்ணீர் சிந்தி அழுவதற்கு பதில்
எழுதுகோல் சிந்தி அழுது வருமாம்
வார்த்தை அலங்காரம் செய்துவிட
வேடிக்கைக் காட்டி வருமாம்
வண்ணத்துபூச்சிப்போலே பறந்து
வண்ணகனவுகளுடன் வருமாம்

எழுத நினைத்தும்
எழுத வார்த்தைகளன்றி இருப்போர்க்கு
ஊமையாகவும் வருமாம்
புன்னகையாகவும் வருமாம்
அழுகையாகவும் வருமாம்
தோழமையாகவும் வருமாம்

இனி
கவிதை வந்தவிதம்தனை
நீங்கள்தான் சொல்ல வேண்டும்.