Sunday 6 September 2009

என்னுடைய ஆசிரியர்கள் - 4

GATE - இந்த தேர்வில் தேர்வாக அனைத்து ஆசிரியர்களின் சிறப்பான பாடம் நடத்தும் முறையே உதவியது எனலாம், குறிப்பாக ஹபீப் மற்றும் பிரகாஷ். அதிகபட்ச கேள்விகள் இதில் இருந்துதான் வந்தது. GATE -ல் 84.7 percentile 234 வது இடம் எடுத்து தேறினேன். 1400 பேர் எழுதி இருந்தார்கள்.

பீகார் மற்றும் கல்கத்தாவில் இருந்து வாய்ப்பு வந்தது. இரண்டும் 10 நாட்கள் என்ற வித்தியாசத்தில் இருந்ததால் இரண்டும் செல்ல வேண்டியது என முடிவு எடுத்தாலும் கல்கத்தாவில்தான் எனது மனம் நின்றது. அப்பொழுது செல்லும் முன்னர் எனது தாயிடம் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை வாழ்ந்துவிட்ட நீங்கள் உலகினைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? இதுதான் அந்த கேள்வி. உலகில் ஒன்றுமே இல்லை இதுதான் எனது தாய் தந்த பதில். ஒரு மாபெரும் ஆசிரியராக எனது தாய் எனது கண்ணிற்கு தெரிந்தார். அவர் 3 வது வரை படித்து இருந்தார். ஐந்தாவது வரை படித்து இருந்தால் ஆசிரியராகி இருப்பார். படிக்க முடியாததன் காரணம் இளம் வயதில் அவர் அவரது தாயை இழந்தது. மக்களைப் பெற்ற மகராசி என பெயர் பெற்றவர். பொறுமையின் சிகரமாக போற்றப்படுபவர். எனக்கு அவரது பதிலில் வாழ்க்கையின் முக்கியமான விசயம் புரிந்து போனது.

ஜதாவ்பூர் பல்கலைகழகம் கல்கத்தா.

பீகாரில் தோல்வி அடைந்து கல்கத்தாவில் மருந்தியல் நுண்ணுயிர்கள் பிரிவினை எடுத்தேன். பின்னர் நான் கேட்ட pharmaceutical chemistry கிடைத்தது ஆனால் நான் மாற்ற வேண்டாம் என முடிவுக்கு காரணமானவர் சுஜாதா கோஷ் டஷ்டிதார் என்னும் ஆசிரியை.

சுஜாதா : இவர்தான் எனது முதுநிலை மருந்தியல் படிப்பின் supervisor. பொதுவாக ஆறு மாதம் செய்ய வேண்டிய ஆய்வகப்பணியினை 18 மாதங்கள் செய்ய வைத்தவர். கல்லூரி தொடங்கிய தினம் அன்று முதல் முடிக்கும் வரை ஆய்வகத்தில் வேலை பார்த்தேன். ஆராய்ச்சியில் எனக்கு இருந்த ஈடுபாடு அதிகமானதற்கு காரணம் இவர்தான். சிறந்த ஆராய்ச்சி செய்ய உதவியவர். அதிக கோபம் வரும். நன்றாக பாடம் நடத்துவார். இதே நுண்ணுயிர் பிரிவில் உள்ள மற்றொரு ஆசிரியர் புகைத்துக் கொண்டே பாடம் நடத்துவார். மிக மிக வித்தியாசமாக உணர்ந்தேன், ஆசிரியர்களிடம் நெருங்கிய நட்பு இங்குதான் ஏற்பட்டது.

பயோகெமிஸ்ட்ரி மற்றும் பார்மகாலஜி இரண்டும் எனது துணைப்பாடங்கள். இதில் பயோகெமிஸ்ட்ரி ஆசிரியர் 5 முறை ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். மிக சிறப்பாக பாடம் நடத்துவார். பார்மகாலஜி ஆசிரியர் மிகவும் சிறப்பாக பாடம் நடத்துவார். நல்ல திறமையானவர். மேலும் சில பாட ஆசிரியர்கள் முதுநிலை தானே என விடாமல் சிரத்தையுடன் பாடம் நடத்துவார்கள். பாட வகுப்பில் அமர்ந்த காலங்கள் விட ஆய்வகத்தில் செலவிட்ட காலங்கள் இங்கு அதிகம்.

சுஜாதா அவர்களிடம் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு கிடைத்தும் மறுத்துவிட்டு டில்லி சென்றேன். டில்லியில் AIMS ல் பி ஹெச் டி பண்ண வாய்ப்பு தந்தார் ஒரு ஆசிரியர். சில மாதங்கள் இருந்துவிட்டு நானே ஆசிரியராக மாறினேன். இலண்டன் சென்ற பின்னர் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் எனது கொள்கையில் பிடிப்புடன் முதன் முதலில் அமலா எனனும் ஆசிரியை சந்திக்கச் சென்றேன்.

அவர்தான் மாணவர்கள் நலன் பேணுபவராக அந்த தருணத்தில் இருந்தார். அவரிடம் இருந்த புரொஜெக்ட்ஸ்களை காட்டினார். இதில் உனக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள் என்றார். ஒரு நிமிடம் யோசித்தேன். அப்படி ஒரு நிமிட சிந்தனையில் வந்து விழுந்ததுதான் அந்த புரொஜெக்ட். எந்த நம்பிக்கையில் தேர்ந்தெடுத்தேன் எந்த நம்பிக்கையில் அவர் என்னிடம் கொடுத்தார் என்பது தெரியாது. பதினைந்து நாட்கள் இருந்த பட்சத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பண நிதிக்கு விண்ணப்பம் பண்ண வைத்து வெற்றி பெற வைத்து எனது ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். இவர் ஒரு perfectionist. இவர் தந்த ஊக்கம் வார்த்தையில் சொல்லி வைக்க இயலாது. எனது மேல் கொண்ட நம்பிக்கையில் எனக்கு இவர் மற்றொரு ஆசிரியரை துணை மேலாளாராக வைத்துக் கொள்ள வேண்டி அறிமுகப்படுத்தினார். நான் எடுத்துக் கொண்ட புரொஜக்ட், ஒரு வருடத்தில் கிடைத்த ஆய்வு வெற்றியின் காரணமாக ஒரு நிறுவனம் மொத்தமாக நிதி உதவி செய்தது. ஆராய்ச்சி என்றால் இவரைப் போல் செய்ய வேண்டும் என எனக்கு வழி காட்டியவர் இந்த ஆசிரியை. இரு வாரத்திற்கு ஒரு முறை என அனைத்து ஆய்வக முடிவுகளை முகம் கோணாமல் சரி பார்ப்பார். இரண்டரை வருட காலங்களே நான் முடித்து இருந்த வேலையில் அதே ஆய்வகத்தில் அந்த நிறுவனம் என்னை பணியாளானாக ஏற்றுக் கொண்டது, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றது இன்னமும் மறக்க முடியாத நினைவு.

இவர் நான் தீஸிஸ் முடிக்கும் முன்னர் அமெரிக்காவிற்கு மாற்றம் ஆகிச் சென்றார் இருப்பினும் நான் வெற்றிகரமாக முடிக்க எல்லா உதவிகளும் செய்தார், இனியும் உதவிகள் செய்து கொண்டு இருக்கிறார். எனக்கு பக்கபலமாக தற்போது இருந்துவரும் மூன்று ஆசிரியர்கள் பற்றி ஒரே வார்த்தை சாதனையாளர்கள். எனது மாணவர்கள் என்னை எப்படி ஆசிரியராக பார்த்தார்கள் என்பதற்காக அந்த ஒரு வருடம் ஆசிரியர் பணி முடித்து நான் லண்டன் வந்தபோது மூன்று பரிசு தந்தார்கள். அதனை பின்னர் குறிப்பிடுகிறேன்.

இப்படி கல்லூரியிலும் பள்ளியிலும் ஆசிரியர்களாக இருந்த இவர்கள் என்னை எத்தனையோ மெருகேற்றி இருக்கிறார்கள், இது தவிர வெளி உலக வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்கள் மற்றும் இயற்கை விசயங்கள் எனக்கு ஆசிரியர்களாக இருந்து கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் சொல்லித்தர வேண்டும் என சொல்லித்தரமாட்டார்கள். இவர்களிடம் இருந்து நாமாக கற்றுக் கொள்வதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயனும் பண்பும். இந்த தருணத்தில் நான் விளையாடி மகிழும் பகவான் நாராயணனையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். இந்த பகவான் நாராயணன் யார் என்பதை நிச்சயம் நுனிப்புல்லில் எழுதி விடுவேன் என்ற அளவு கடந்த எண்ணம் உண்டு.

முத்தமிழ்மன்ற பள்ளியில், இப்போது வலைப்பூக்களில் எனது ஆசானாக/ஆசிரியர்களாக இருப்பவர்கள் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. ஒரு சில ஆசிரியர்கள் பற்றி குறிப்பிடாமல் விட்டு இருந்தால் என்னை மன்னித்து விடுவார்கள்.

என்னுடைய ஆசிரியர்கள் - 3

உத்தங்குடி கே எம் மருந்தாக்கியல் கல்லூரி (தமிழ்நாடு எம் ஜி ஆர் பல்கலைகழகம்)

டாக்டர் ரவீந்திரன் : இவர்தான் நான் மருந்தாக்கியல் படிக்க வழி வகுத்தவர். எனது இளைய அக்காவின் திருமணம் மே மாதம் நடந்தது. அப்பொழுது எனது நிலையை அறிந்த எனது பாவா, அவருக்குத் தெரிந்த டாக்டர் ரவீந்திரன் என்பவர் கே எம் மருந்தாக்கியல் கல்லூரியில் முன்பு anatomy physiology யில் வேலை பார்த்தார், எனவே அவரிடம் கேட்கலாம் என சென்று எனது மதிப்பெண்கள் மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் காட்டி அந்த கல்லூரியில் ஒரு இடம் வாங்கித் தந்தார். இதில் என்னவென்றால் மொத்தமே தமிழகத்தில் ஐந்து இளநிலை மருந்தாக்கியல் கல்லூரிகள் மட்டுமே அப்பொழுது இருந்தது. diploma மருந்தாக்கியல் படிப்பு மதுரை மருத்துவ கல்லூரியில் கிடைத்தும் மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் சேர்ந்தேன். இதே படிப்பை ஊட்டியில் பணம் கட்டி படிக்க வாய்ப்பு வந்தும் வேண்டாமென மறுத்துவிட்டு இந்த கல்லூரியில் மிகவும் குறைவாக பணம் கட்ட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது இப்படியெல்லாம் படிக்கத்தான் வேண்டுமா? என என்னுள் எழுந்த கேள்விக்கு தேவை இல்லை என்ற பதில் வந்து இருக்குமானால் பின்வருவனவற்றை எழுத வாய்ப்பின்றி போயிருந்திருக்கும்.

கல்லூரியின் முதல் வருடத்தில் சைமன் என்ற மருத்துவர் அனாடமி சொல்லித் தருவார். இவரிடம் நான் கற்றுக்கொண்டது, முன் அறிவிப்பு இல்லாமலே ஆச்சரியப்படுத்தும் வகையில் திடீரென தேர்வு வைப்பார். அமைதியாக பேசுவார். மிக அழகாக இருக்கும் சொல்லாடல். இதுவரை தமிழில் படித்துவிட்டு ஆங்கில உலகத்தில் எனக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. ஒரு முறை ஆய்வுக்கூடத்தில் cover slip என வரும் அதற்கு பதிலாக cover sleep என நோட்டில் எழுதி திருத்த கொடுத்துவிட்டேன். இதனை பார்த்து எனக்கு இவர் ஒரு அடி கொடுத்தார். அந்த நோட்டு இன்னும் எனது வீட்டில் இருக்கிறது, சிரிப்பாக இருக்கும்!

மற்றுமொரு மருத்துவர் சுற்றுப்புற சுகாதரம் பற்றி பேசி நாமே நமக்கு எவ்வளவு கெடுதல்களை செய்கிறோம் என அருமையாக பாடம் எடுப்பார். இவரது வகுப்பு மிகவும் நன்றாக இருக்கும். எனது கல்லூரியில் எனது படிப்பு வருடத்தில் இரண்டே மாணவிகள் தான், மீதம் 48 பேர் மாணவர்கள்.

இராமமூர்த்தி; இவர் inorganic chemistry எடுப்பார். நான் புத்தகம் வாங்கியதே இல்லை. இவர் வகுப்பில் சொல்வதை நோட்டில் எழுதி அதை அப்படியே மனனம் செய்து தேர்வு எழுதுவோம். இவர் தேர்வு அமைக்கும் முறை வித்தியாசமாக இருக்கும். MCQ வினாத்தாள்களின் பதில்கள் a or b or c or d என்பதில் முப்பது கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்கும் எனவே முதல் தேர்வில் இதை கண்டுபிடித்த நாங்கள் அப்படியே பதில் எழுதப் பழகிக் கொண்டோம். ஒருவன் ஒருமுறை 0 வாங்கினான் பி பதிலாக அ போட்டதுதான் காரணம். இவரது வகுப்பு கலை கட்டும். இவர்தான் மூன்றாம் வருடத்தில் business management சொல்லித் தந்தார்.

physical chemistry இவருடைய வகுப்பு மிகவும் அமைதியாக இருக்கும். சிறப்பாக இருக்கும். organic chemistry நந்தகுமார் இரண்டாம் வருடமும் இவரே. இவர் மிகச் சிறந்த ஆசிரியர். எளிதாகப் புரியும். இரண்டாம் வருட இறுதி தேர்வில் செய்முறை பயிற்சியில் எனது titration reading தவறாக வந்தது என lab technician மாற்றச் சொல்லி நான் மாற்றியதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து 32 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி என்னை கரையேற்றியவர். இவர் மட்டும் அன்று மிகவும் கடுமையாக நடந்து இருந்தால் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து இருப்பேன்.

statistics ஒரு ஆசிரியை. ஒரு வகுப்பு மட்டுமே வாரத்திற்கு. நன்றாக திட்டுவார்கள். எனது நண்பன் ஒருவன் இந்த ஆசிரியை வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான் ஆதலால் ஒரு முறை அவனை வகுப்பறையை விட்டே வெளியேப் போகச் சொல்லிவிட்டார்கள், எனக்கோ பயமாக இருந்தது. அவன் அருகில்தான் நான் அமர்ந்து இருப்பேன். இறுதிவரை எதுவும் அவ்வாறு நடக்கவில்லை.

விஜயா ஆசிரியை : இவர்கள்தான் இரண்டாம் வருடத்திலும் நான்காம் வருடத்திலும் preparative மற்றும் industrial pharmacy எடுத்தார்கள். சாக்பீஸ் எல்லாம் எறிவார்கள். கோபம் கோபமாக வரும் இவர்களுக்கு. இறுதியாண்டில் விபத்துக்கு உள்ளானார்கள், சிறிதுகாலம் பின்னர் சரியாகியது. இவரிடம்தான் நான் எனது மூன்று மாத புரொஜக்ட் செய்தேன் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார். கோபம் வந்தாலும் குரல் சாந்தமாக இருக்கும்.

biochemistry and biotechnology ஆசிரியர் இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர், தாராளமாக மதிப்பெண்கள் வழங்குவார். இவரது வகுப்பு கலகலப்பாக இருக்கும். இரண்டாம் வருடம் நான்காம் வருடம் இவர்தான்.

நர்மதா ஆசிரியை : இவர்களுக்கு அதிகமாக கோபம் வரும். வகுப்பில் சத்தம் கேட்டால் அவ்வளவுதான். மூன்றாம் வருடத்திலும் இவர் பாடம் எடுத்தார். எனக்கு meal maker எனும் சோயாவை அறிமுகப்படுத்தியவர். ஒரு மனிதனாக வாழ வேண்டும் என சொன்னவர். நெற்றியில் B.Pharmacy என ஒட்டிக் கொண்டு திரிவதற்கா இங்கு படிக்கிறீர்கள் என சொன்னவர்., என்னுள் ஒரு மாற்றம் நிகழ்த்தியவர் எனலாம்.

pharmacognosy இது தாவரங்களை பற்றிய மருந்தாக்கியல் படிப்பு. இந்த ஆசிரியரைக் கண்டால் அனைவரும் பயப்படுவோம். தேர்வுக்கு நுழைவுத்தாள் இவரிடம் இருந்துதான் பெற வேண்டும். எனவே மிகவும் பய பக்தியுடன் இவரது வகுப்பில் இருப்போம். கண்டிப்பானவர்

pharmaceutical technology இதை எடுத்தவர் படிப்பு மற்றும் அல்லாது பல்வேறு youth club களில் இணைய வைத்து வாழ்க்கைப்பாடம் சொல்லித் தந்தவர். என்னுள் இருந்த சமூக சிந்தனைக்கு வித்திட்டவர் எனலாம்.

pharmacology ஆசிரியர் இவர் சத்தம் போட்டு பாடம் எடுப்பார். எனது நண்பர்கள் இவர் தங்கி இருந்த வீட்டினில் அருகில் தங்கி இருந்தனர் அப்பொழுது இவர் சத்தம் போட்டு மனனம் செய்வது கேட்குமாம். இவரது குறிப்புகளை வைத்தே படிப்பதுண்டு. சுருக்கமாக தருவார். மூன்றாம் வருட ஆசிரியர்.

medicinal chemistry ஹபீப் , அனைத்து மாணவர்களின் கவனம் ஈர்த்தவர். வெகு திறமையான ஆசிரியர். synthesis எல்லாம் ஒரு பார்வை கூட புத்தகம் பார்க்காமல் எழுதுவார். அதிசயமாக இருக்கும் எனக்கு. இவருக்கும் கோபம் வரும்.

analyitcal chemistry பிரகாஷ் இவரை பார்மஹோப்பியா என அழைப்பது உண்டு. அனைத்து விவரங்களும் அறிந்து வைத்து இருப்பார். மென்மையான குரல். பல விசயங்கள் கற்றுக் கொண்டது உண்டு. சிரித்துக் கொண்டே இருப்பார். என்னை வெகுவாக இவர் பாராட்டுவது உண்டு. viva வில் 25/25 மதிப்பெண்கள் எனக்கு கிடைத்துவிடும்.

principal இவர் சிரித்த முகத்துடன் இருப்பார். இரண்டாம் வருடத்தில் பெரிய பிரச்சினை வந்துவிட்டது. வெளியில் தங்கியிருந்த எனது நண்பர்கள் இறுதியாண்டு கேள்வித்தாளை இரகசியமாக பெற்றுவிட்டனர். விடுதியில் இருந்த நானும் எனது நண்பனும் அதை வாங்கிட மறுக்க, விடுதியில் இருந்த வேறு சில நண்பர்கள் அவர்களது நலனை கருத்தில் கொள்ளுமாறு கூறி எங்களை சம்மதிக்க வைத்தனர், அவர்களுக்கு பதில் தயாரித்து தந்தோம். இது மாபெரும் தவறு என தெரிந்தும் செய்ய வேண்டிய நிர்பந்தம். ஆனால் இரண்டே இரண்டு நண்பர்கள் மட்டும் எங்களுக்காக ஆறு மாதம் படிப்பை இழக்க வேண்டியதாகிவிட்டது அவர்கள் தான் இந்த கேள்வித்தாள்கள் பெற்று வந்தார்கள் என்பதற்காக. அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். இவர் பாடம் நடத்த வருவார் சிரிப்பாக இருக்கும்.

விடுதி காப்பாளார் இவர் உடற்பயிற்சி ஆசிரியர் கூட. dignity என வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார். ஒருமுறை எனது நண்பர்கள் முதல்வருடத்தில் ஆவி அழைத்து யார் முதல் மதிப்பெண்கள் எடுப்பார் என கேட்க அந்த ஆவி டம்ளர் நகற்றி என் பெயரை காட்டியதாம். நான் இரவு 10 மணிக்கு தூங்கிவிடுவது வழக்கம். இது அறிந்த அவர் அதில் ஈடுபட்ட நண்பர்கள் அனைவரையும் அன்றிரவே வெளியேறச் சொல்லிவிட்டார். எனக்கு காலையில் தான் தெரியும். பெற்றோர்கள் வந்த பின்னர் அனுமதித்தார், எனது நண்பர்கள் இரண்டாம் வருடத்தில் விடுதியை புறக்கணிக்க காரணமானவர். நான் இறுதியாண்டில் வெளியேறினேன். சுதந்திரம் இல்லாத படிப்பு ஒரு படிப்பு அல்ல என உணர வைத்த விடுதி அது.

இப்படி என்னை மருந்தாக்கியல் வல்லுநராக்க மாபெரும் உதவிகள் புரிந்த இந்த ஆசிரியர்களின் பணி மிகவும் மகத்தானது. வணங்கி மகிழ்கிறேன். நான்காம் வருடத்தில் GATE என்னும் அகில இந்திய தேர்வு வந்தது. இந்த நேரத்தில்தான் இலண்டனில் இருந்து மாப்பிள்ளை பார்க்க வந்தனர்.

என்னுடைய ஆசிரியர்கள் - 2

எப்படி எங்களை எல்லாம் மறந்தாய் என விளையாட்டு ஆசிரியரும், ஓவிய ஆசிரியரும் கேட்பது நினைவில் வந்தது. எனக்கும் விளையாட்டுக்கும் சற்று தொலைவு. எனக்கு வலது கை, சிறு வயதில் உடைந்து போய் திரும்பவும் ஒட்ட வைக்கப்பட்டதால் வேகமாக எறிவதோ எடை அதிகமுள்ள பொருட்களை தூக்குவதோ சற்று சிரமம். அதுபோல் ஒரு முறை மரத்தின் கிளையினை பிடித்து pull ups செய்ய வேண்டிய நிர்பந்தம். விளையாட்டு ஆசிரியர் நான் பல முறை முயன்று 0 எடுத்ததை சிரித்தவாறே உனக்கு 1 போட்டு வைக்கிறேன் என செல்லமாக பிரம்பால் ஒரு அடி போட்டார். என்னை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க செய்ய வேண்டும் என பலமுறை முயன்று தோற்றுப் போனார் இருந்தாலும் உடற்பயிற்சி தேர்வு எழுதுவதில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடுவேன். அன்பாக இருப்பார், நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்.

ஓவிய ஆசிரியர்; சுப்பு ஆசிரியர். இவரை மனதில் வைத்தே நுனிப்புல்லில் ஓவிய ஆசிரியர் பார்த்தால் ஒரு மதிப்பெண் கூட குறைக்க மாட்டார் என்பது போல் எழுதி இருக்கிறேன். இவரிடம் நான் அதிக மதிப்பெண்கள் வாங்கியது 6/10. அநாயசயமாக படம் வரைவார். இவரின் ஓவியங்கள் உண்மையிலே பேசும். அந்த கருநிறப் பலகையில் வண்ணம் கொண்டு பூசிவிட்டார் என்றால் போதும் அத்தனை சிறப்பாக இருக்கும், ஏனோ எனக்கு தான் இன்னமும் வரைவதில் ஈடுபாடு இல்லை.

தலைமை ஆசிரியர் சீனிவாசன் குறிப்பிட்டு இருக்கிறேன் இவர் பாடம் எடுத்ததில்லை. பிரம்பால் அடி வாங்கி இருக்கிறேன். இவர் எட்டாவது படித்தபோது விலகியவுடன் புது தலைமை ஆசிரியர் வந்தார். அவ்வளவு அமைதி. பாடம் எல்லாம் எங்களுக்கு எடுத்தார். எம்டன் வருது என அந்த கால நினைவுகளையெல்லாம் பகிர்ந்து கொள்வார். அதிர்ந்து பேச மாட்டார். இவரது காலகட்டத்தில் பள்ளி மிகவும் சிறப்பு பெற்றது எனலாம். ஆசிரியர்களை நான் மறந்து போயிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கவும். இங்கு குறிப்பிட்ட ஆசிரியர்களின் பெயர்கள் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் பெயர்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. என்னை ஒரு மாணவனாக உருவாக்கியதில் இவர்களது பங்கு பெரும் மகத்தானது. என்றென்றும் கடமை பட்டு இருக்கிறேன்.

அருப்புக்கோட்டை எஸ் பி கே மேல்நிலைப்பள்ளி

ஜெரால்டு ; எனக்கு இவர் பாடம் சொல்லித்தந்தது இல்லை. எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கு இவர் ஒரு காரணம். எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு எனக்கு கணித பிரிவு தரமுடியாது என மறுத்துவிட்டார். எனது அண்ணன் இந்த பள்ளியில் ஆறாவது இருந்தில் படித்து வந்தார் எனினும் எனக்கு கணித பிரிவு முடியவே முடியாது என மறுக்க நான் மல்லாங்கிணருக்கு திரும்பலாமா என யோசித்த வேளையில் எனது தந்தை இங்கேயே சேர்ந்து அறிவியல் பிரிவு படி என சொல்லியதும் அறிவியல் பிரிவு எடுத்துப் படித்தேன். முதல் மாதத் தேர்வில் முதல் மாணவனாக வந்ததும், ஜெரால்டு விடுதியின் காப்பாளாராகவும் இருந்தார், எனது மதிப்பெண்கள் பார்த்துவிட்டு கணித பிரிவு தராததுக்காக ஜெரால்டு வருத்தம் தெரிவித்தார். இவர் வேதியியல் பாடத்தில் வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரை பார்க்கிறேன் அதே புன்னகை. ஆனால் மிகவும் கண்டிப்பானவர். இவரைக் கண்டு நடுங்குவார்கள்.

இரத்தினசபாபதி தமிழ் ஆசிரியர்: இவரைப் பற்றியும் நுனிப்புல்லில் குறிப்பிட்டு இருக்கிறேன் நூறு நாள் கற்ற கல்வி ஆறுநாள் விடப்போம் என சொல்லி தந்தவர். தமிழ் ஆசிரியர். இவரது சொல்லித்தரும் விதம் அனைவரையும் கவரும். தமிழ் நேசிக்க எனக்கு மேலும் வழிகாட்டியவர்.

எனக்கு இயற்பியல் கற்றுத் தந்த ஆசிரியர் பால சுப்ரமணியம். சிரித்த முகத்துடன் இவர் சொல்லித் தரும் பாங்கு அருமையாக இருக்கும். இவரது திறமையை பள்ளி வெகுவாக பாராட்டும். ஆனால் எனக்கு கிடைத்த வேதியியல் ஆசிரியர் வயதானவர் தலைமை ஆசிரியராக இருந்தார் அனைத்தும் அவரது விரல் நுனியில் இருக்கும் எனினும் எங்களையே படிக்கச் சொல்வார். ஆங்கில ஆசிரியர் எப்பொழுதும் வெத்திலை போட்டுக் கொண்டு ஆங்கிலம் சொல்லித் தருவார். நான் எனது படித்த காலங்களில் எப்பொழுதுமே தேர்வில் தோற்றது இல்லை, மாதத் தேர்வில் கூட.ஆனால் ஆங்கிலத்தில் எப்பொழுதுமே 60 சதவிகிதம் தான்.

விலங்கியல் சொல்லித்தந்த ஆசிரியர் என்னை வியப்பில் ஆழ்த்தினார். அவருக்கு ஒருமுறை உடல்நலம் சரியில்லை என்றதும் அவரது மதத்தின் முறைப்படி மருத்துவரை நாடாது நலமாகி வந்தார், இது என்னை பயங்கரமாக சிந்திக்க வைத்தது! இவர் மருத்துவரிடமே சென்றது இல்லையாம்!

தாவரவியல் சொல்லித்தந்த ஆசிரியை (இது மாணவர்கள் மட்டும் உள்ள பள்ளி) எளிதாக சொல்லித்தருவார்கள், மிகவும் எளிதாகப்புரியும். எனது வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய பாடம் இந்த தாவரவியல். இதில் நான் எடுத்தது 121/200. இத்தனைக்கும் தாவரவியல் இறுதி தேர்வில் நான்கு நாட்கள் விடுமுறை வேறு. எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் குறைந்தேன் என எனக்கு தெரியாது! அந்த பள்ளியில் அறிவியல் பிரிவில் முதல் மாணவனாக வந்தேன் 938 மதிப்பெண்கள். எனக்கு அடுத்து வந்த மாணவன் 937. அவனும் தாவரவியலில் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். இப்பொழுது அந்த தொழிற்கல்வி ஆசிரியரின் சாபம் பலித்தது! நுழைவுத்தேர்வில் நான் எடுத்தது 37/50. பி எஸ் ஸி எல்லாம் படிக்க முடியாது, படித்தால் மருத்துவத் துறை சம்பந்தபட்டதுதான் படிப்பேன் என எந்த ஒரு கல்லூரிக்கும் நான் விண்ணப்பிக்கவில்லை, ஒரே ஒரு கல்லூரி தவிர அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுர்வைசியா கல்லூரி. வேதியியல் படிக்க இடம் கிடைத்தது. நான் மறுத்துவிட்டேன்.

எனக்கு பக்கபலமாக இருந்த எனது தந்தையை நினைத்துப் பார்க்கிறேன். அவர் எனக்கு தந்த ஊக்கமும் அன்பும் வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவர் மாந்தோப்பு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர். எனக்கு வீட்டில் எப்பொழுதும் படிக்க சொல்லித் தந்தது இல்லை. நானாக படித்துவிடுவேன். எனது விசயத்தில் குறுக்கிட்டதும் இல்லை. முழு சுதந்திரம் உடையவனாகவே வாழ்ந்து வந்தேன். எனக்காக அவர் இந்த அருப்புக்கோட்டை பள்ளிக்கு முதன்முதலில் விடுதியில் தங்கி படிக்கச்சென்றபோது பெட்டியை தூக்கி வந்த நிகழ்வு இப்பொழுதும் எனக்கு அழுகையை கொண்டு வரும். என்ன தவம் செய்தேன்! ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர் என்னுடன் இருந்து எனக்கு செய்த உதவி ஒரு தந்தையின் கடமை என நான் சொல்வேனானால் என்னைப் போல் ஒரு முட்டாள் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.