Tuesday 8 September 2009

உனக்காக ஒரு பொழுது

நீ பிறந்தவுடன்
நீதான் எனக்கென
எனது கன்னம் பிடித்து
தட்டிக்கொடுத்து நம் திருமணம்
குறித்துப் போன உன் தந்தை!

முடிந்து வளரும் தினமெல்லாம்
நான் பார்த்து ரசிக்க
நீ வாங்கி வந்த வரமாம்
உனது பிறப்பிற்கு பின்னர்
மறுபிறப்பு எடுத்த என் உயிர்
பொய் பேசாமல் சொல்லும் என் அம்மா!

அருகருகே அமர்ந்த மழலை மொழிகள்
காதல் புரியாமலே காதல் பார்வைகள்
முடியாத சக்தியெல்லாம் என்னில் இருப்பதாய்
என்னுயிர் காக்கின்றாய் உன்னுயிர் காத்துக்கொண்டு!

உன்னில் என்னை புதைத்த காலங்கள்
எனது கனவினை சுமக்கும் நேரங்கள்
சிறுவயது காலம் முதல்
இவ்வயது காலம் வரை
எனக்காக நீ வாழ்வது
எனக்காக மட்டுமில்லை அறிவாயா?
உனக்காக ஒரு பொழுதேனும்
உனக்காக மட்டும் ஒதுக்கி வை
உன்னில் இருக்கும்
என்னைப் பற்றிய நினைவுகள்
இளைப்பாறட்டும்!

அன்புள்ள காதலனுக்கு,

நீங்கள் எழுதிய
கவிதை வரிகள் கண்டு
என் வாழ்வின்
வசந்தம் உணர்ந்தேன்

பாலைவனத்தில் மழை பெய்து
பூஞ்சோலை உருவானால்
அதை பார்ப்பவருக்கு
எவ்வளவு மகிழ்ச்சியோ
அதைவிட அளவிலா
மகிழ்ச்சி அடைந்தேன்

தந்தையின் மனம் மாறவில்லை
ஆனாலும் நம் காதலை
மறுக்க முடியவில்லை
காலம் செல்லும் போக்கில்
அவர் தன் மனதை
மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன்

முறையில்லா வாழ்க்கைக்கு
முடிச்சு போடாதீர்கள்
என்று சொன்னேன்
முரண்பட்டவற்றில் உள்ள
முடிச்சை சிக்கலாக்குவதே
என் உயரிய தொண்டு என்றார்

தாயில்லா எனக்கு
தயவு காட்டுங்கள் என்றேன்
தாய்மையின் பெருமையை
நீ உணரும் வரை
என் நிலை விளங்காது என்றார்

நிலவு வரை
காதல் போய்விட்டது
ஏன் நிலவறைக்குள் அடைக்கிறீர்கள்
என்றேன்
பெண்ணை பெற்றவனுக்கு
பெரும்பாடு என்று
மண்ணின் பாட்டை
மறுபடியும் கூறினார்

எனக்கு வரன் பார்ப்பதாக
என்னிடம் கூறினார்
தட்சிணை வைப்பதாய்
இருந்தால் அந்த
காரியத்தை தள்ளி வையுங்கள்
என்றேன்

இந்த காலத்தில்
தட்சிணையின்றி தாலியா
அதற்கு சாத்தியமில்லை என்றார்
அப்படியென்றால்
காதலற்ற மணத்திற்கும்
சாத்தியமில்லை என்றேன்

நீங்கள் கூறியது போல
எல்லாம் அவர் குற்றம்
என்றார்
புரிந்து கொண்டால் நல்லது
என்று புரையோடியவிட்ட
புண்ணை கீறிவிட்டேன்

மருந்து போடுவதற்கு
ஆயத்தமானேன்
நீங்கள் காட்டுபவரை
நான் கைபிடித்து
வாழ்வு சரியாகாதுப் போனால்
அதற்கு என்ன உத்தரவாதம் என்றேன்

ஆனால்
என்னையே அவர்
திருப்பிக் கேட்டார்
காதலரை மணந்தால்
இந்நிலை ஏற்படாது என்று
என்ன உத்தரவாதம் என்றார்

காதல் உத்தரவாதம் என்றேன்
காறித் துப்புகிறது மேலை நாடுகள் என்றார்
நாம் மேலை நாட்டின்
நிலையில் இல்லை என்றேன்
எழுபத்து ஐந்து சதவிகிதம்
தாண்டிவிட்டோம் என்றார்
இருபத்து ஐந்து காப்பாற்றும் என்றேன்

வாக்குவாதம்
வரிகளால் அர்ச்சனை
செய்யப்படும் போது
அவர் விலகி நிற்க
ஆசைப்பட்டார்
என் தந்தையின் மனது
குழப்பமானதை
நானும் உணர்ந்து
விலகி விட்டேன்
நீங்கள் வரும்வரை
நிச்சயம் காத்து இருப்பேன்.

Monday 7 September 2009

செவ்வாயில் தண்ணீர்

இருக்கும் பூமியில் தண்ணீர்
இல்லாமல் போகும் நிலைக்கு
மாற்றுவழி கண்டு மனம்
மகிழ்ந்திட வழியின்றி
பக்கத்து கிரகத்தில்
சேரோடு சகதியில்
தண்ணீர்தானா என தவித்து

பூமியில் வாழும் மனிதர்களுக்கு
நல்வழி காட்டி மகிழாது
பொருளையெல்லாம் கொட்டி
பிஞ்சு உள்ளம் வெந்து
சாவதை கண்டு துடிக்காது
என்ன இந்த விஞ்ஞானம்

எண்ணிப் பார்க்கையில் விந்தைதான்
என் பையில் கொஞ்சம் பணம்
அதிகமாகவே இருக்கிறது
அழுது கொண்டு நிற்கும்
அந்த பையன் இன்னும்
அழுதபடியே!