Wednesday 29 July 2009

புத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் பொருள் அல்ல!

ஒரு நாவல் எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதை உணர வைக்கும் சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். அன்புக்குரிய நண்பர் கிரி அவர்கள் என்னிடம் புத்தகம் அச்சடித்துத் தரும்போது சொன்னது இதுதான் 'வரவரைக்கும் லாபம்னு நினைக்க வேண்டியதுதான்'. அவரிடம் ஏன் நீங்கள் உங்கள் படைப்புகளை அச்சடித்து வெளியிடக்கூடாது என சொல்லும்போதெல்லாம் சிரித்துக்கொண்டே 'நம்மதை யார் படிப்பா, நாமளே படிச்சிக்கிற வேண்டியதுதான்' என்பார். இவரின் தன்னடக்கம் கண்டு வியந்து இருக்கிறேன். அவரது படைப்புகள் அனைத்தும் தரமிக்கவை என்பதில் எனக்கு எந்தவித ஐயமுமில்லை. ஆனால் 'தரம் வேண்டும் அல்லவா' என்பார். அவர் அன்று சொன்னது எனது நுனிப்புல் நாவலுக்கு எத்தனையோ பொருந்திப் போய்விட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது.

நுனிப்புல் தரம் உடையதா இல்லையா என்பதை வாசகர்களும் விற்பனையாளர்களுமே தீர்மானிக்கக்கூடும். அப்படிப்பட்ட தீர்மானம் என்னவென்பதை விமர்சனங்கள் மூலம் என்னால் யூகித்துக்கொள்ள முடியாமல் போனாலும் பலர் விமர்சனம் பண்ணாமலிருப்பது குறித்து ஒரு நண்பரிடம் நான் கேட்டபோது அவர் குறிப்பிட்டது இதுதான் 'உங்களை மனம் வருத்தம் அடையச் செய்ய வேண்டாம்னு நினைக்கிறாங்க'. நானும் மனதில் நினைத்துக்கொண்டேன் இதில் என்ன மனவருத்தம் அடைய வேண்டியிருக்கிறது என. விமர்சனங்கள் குறித்தோ விற்பனை குறித்தோ அத்தனை பெரிதாக கவலை கொள்ளவில்லை. ஆனால் பிறருக்கு சிரமம் தருவதே எனக்குப் பெரிய கவலையாக இருந்து வந்துள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிட்டு இருக்கிறேன்.

நண்பர் கிரி அவர்களை மிகவும் தொந்தரவு செய்துவிட்டேன் என்றே இன்றும் கருதுகின்றேன். முத்தமிழ்மன்ற பதிப்பகம் என அச்சிட்டது முதல் அவருக்கு நான் தந்த சிரமம் சற்று அதிகமே. ஆனால் அவர் பெருந்தன்மையுடன் இதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்லும்போதெல்லாம் இப்படியும் சகிப்புதன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்களா என வியந்து போனதுண்டு. எனது உறவினர் ஒருவரிடம் புத்தக விற்பனை குறித்து பேசி இருந்தேன், ஆனால் அவர் பல காரணங்களால் சில மாதங்கள் கழித்து முடியாது என கூற அனைத்து புத்தகங்களும் கிரி அவர்களிடமே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. அவருக்கு மேலும் சிரமம்தான். சிரமமாக கருத வேண்டாம் என கூறிவிட்டார்.

புத்தகம் விற்றால் நல்லதுதான், விற்பனையாகாவிட்டாலும் பரவாயில்லை இதுகுறித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். இலண்டனில் சில கடைகளிடம் கொடுத்து இருந்தேன், ஆனால் அதுகுறித்து எந்த ஒரு விளம்பரமும் பண்ணவில்லை. ஒரு நண்பர் 15 புத்தகங்கள் வேண்டுமென வாங்கிச் சென்றார். கடைகளில் அனைத்து புத்தகங்களும் விற்பனையாகி உள்ளது. அப்படி விற்பனைக்கு வந்த புத்தகம் வாங்கி படித்த ஒருவர் நூலைப் பற்றி வெகுவாக பாராட்டியது இன்னும் மனதில் உள்ளது. ஒவ்வொரு பகுதியாக என்னிடம் பேசினார். ஏனோ எழுதித்தாருங்கள் என கேட்கத் தோன்றவில்லை. காரணம் நான் கேட்டவர்கள் அவர்களது சொந்த அலுவல்கள் காரணமாக எழுதித் தர தாமதம் ஆனதே காரணம். எதற்காக வீண் சிரமம் தருவானேன் என இருந்துவிட்டேன். தமிழ் ஆசிரியை ஒருவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் 'ஒரு பேப்பர்' பத்திரிக்கைக்கு விமர்சனம் எழுதி இருக்கிறேன், பல விசயங்கள் குறித்து வைத்திருக்கிறேன், தருகிறேன் என்பார். குளோனிங் பற்றி எழுதியது தேவையில்லை என்றே இப்போதும் சொல்வார். இப்படி நுனிப்புல் தந்த மகிழ்ச்சி அதிகமே.

நுனிப்புல் பற்றிய விற்பனை குறித்து நான் முத்தமிழ்மன்றத்தில் எழுதியபோது அதைப்பார்த்த தம்பி செல்வமுரளி என்னிடம் உதவி புரிவதாக சொன்னார். முத்தமிழ்மன்றத்தில் அது குறித்து சில பதிவுகளும் இட்டார். அவரது உதவும் மனப்பான்மை குறித்து வியந்து போனதுண்டு. நுனிப்புல் வடிவமைப்பு செய்து நமது மன்ற நண்பர்களின் வலைப்பூவில் இடம்பெற யோசனை சொன்னார். அவரது யோசனைப்படி நான் கேட்டக்கொண்டதற்கிணங்க நண்பர்கள் அற்புதகவிஞர், காகிதர், விமல், சுதா அண்ணா, வடுவூர் குமார், சகோதரி பத்மஜா என பலர் அவர்களது வலைப்பூவில் நுனிப்புல் விளம்பரம்தனை வைத்தனர். அவர்களுக்கெல்லாம் சாதாரணமாக நன்றி என சொல்லி செல்ல முடியாதுதான். இப்படி நுனிப்புல் விற்பனையே தனது பணி என எடுத்துக்கொண்டார் தம்பி முரளி.

பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அறிவியல் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொன்னார். சுஜாதா அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய சில தினத்தில் சுஜாதா அவர்கள் மரணமடைந்தது என்னை அதிர்ச்சியுறச் செய்தது. ஆனால் தளர்ச்சியடையச் செய்யவில்லை. ஆழி பதிப்பகம் செந்தில் அவர்களின், கனியன் அவர்கள் குறிப்பிடுவது போல, 'நறுக்' விமர்சனம் குறித்தும் எந்தவித சலனமுமில்லை. சிரித்துக்கொண்டே கதையின் தலைப்பே நுனிப்புல் என கிரி அவர்களிடம் சொன்னதுண்டு.

இப்படி தம்பி முரளி சில மாதங்களாகவே நுனிப்புல் விற்பனைக்காக மிகவும் முயற்சித்தார். இதில் விவேக் தம்பியையும் குறிப்பிட்டாக வேண்டும். எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நுனிப்புல் புத்தகங்களை நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ஆனால் நன்றி என மட்டும் சொல்வது சரிதானா எனத் தெரியவில்லை. முத்தமிழ்மன்றம் என்ற ஒரு நிழலில் அறிமுகம் இல்லாத நபர்களுக்கும் எத்தனை அன்புடன் உதவி புரிகிறார்கள் என எண்ணும்போதே வியந்து போகின்றேன்.

நுனிப்புல் விற்பனை குறித்து ஒரு புத்தக வெளியீட்டாளரிடம் தம்பி முரளி பேசி இருக்கிறார். அவர்களும் வாருங்கள் என சொல்லி இருக்கிறார்கள். சேலத்தில் ஒரு விளம்பர அட்டையை பேருந்து நிலைய கடைக்காக செய்து தந்து இருக்கிறார் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். தம்பி முரளியும் சென்று இருக்கிறார். இவ்வாறு பல முறை சென்று இருக்கிறார். அங்கே அவர்கள் தம்பி முரளியை சற்று அவமரியாதையாகவே நடத்தி இருக்கிறார்கள். வா என சொல்வது, பின்னர் எதுவும் சொல்லாமல் அனுப்புவது. இப்படியே நடந்து இருக்கிறது. அதே வேளையில் கோவையிலும் ஒரு நண்பரிடம் புத்தகம் விற்பனை குறித்து பேசியிருக்கிறார்.

இப்படி நடந்து கொண்டிருக்க புத்தக வெளியீட்டாளர் இம்முறை அழைத்து இருக்கிறார்கள். தம்பி முரளியும் ஆவலுடன் சென்று இருக்கிறார். ஆனால் இம்முறை சற்று கூடுதலாகவே அவமானப்படுத்தியிருக்கிறார்கள், ஏளனப்பார்வையுடன். நுனிப்புல்லினால் அவருக்கு இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது, என்ன காரணம் என யோசிக்கையில் நம்மிடம் இருக்கும் பொருள் தரமிக்கதாக இல்லை என்பதால் தான் என்பதை உணர்ந்திருக்கிறார். எனக்கு இந்த விசயம் தெரியவந்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ஏன் நீங்கள் புத்தகம் வெளியிட்டு பிறரை சிரமப்படுத்துகிறீர்கள் என. ஒரு தரமான எழுத்தை எழுதி வெளியிட வேண்டாமா என உரிமையுடன் கேட்டுக்கொண்டார். நுனிப்புல் புத்தக விற்பனை பற்றி கவலை வேண்டாம், ஆனால் பாகம் இரண்டு மிகவும் நேர்த்தியாக அனைவரையும் கவரும் வண்ணம் வரவேண்டும் அதற்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இப்படி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி நுனிப்புல் விற்பனைக்கு பாடுபட்டு வரும் தம்பி முரளிக்கு நுனிப்புல்லினால் ஏற்பட்ட அவமானம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிமேல் புத்தகங்கள் வெளியிட மாட்டீர்கள்தானே என யாராவது கேட்டால் எனது பதில் புத்தக வெளியீடு தொடரும். எனது குழந்தைகால கனவை பணத்திற்காகவோ புகழுக்காகவோ தூக்கி எறியத் தயாராக இல்லை. கருவிலே தரிக்கும் குழந்தையை நோய் உடைய குழந்தையா, நோய் அற்ற குழந்தையா என கருவை வெளியே உருவாக்கி வைத்து அலசி ஆராய்ந்து பின்னர் கரு தரித்து சந்தோசிக்கும் வாழ்க்கை எனக்கு வேண்டாம். பிறக்கும் குழந்தை பிறர் பார்வைக்கு ஊனமாக தெரிந்தாலும் எனது பார்வைக்கு அது அற்புத குழந்தைதான். முடிந்தவரை குழந்தையை நலமுடன் வாழ வழி செய்வேன். அதுபோன்றே எனது படைப்புகளும், என்னால் முடிந்தவரை சிறந்த முறையில் கொண்டுவர முயற்சி செய்வேன்.

கறைபட்டு விட்டதாய் கலங்குவாயோ நுனிப்புல்லே
முளைவிட்ட மகிழ்ச்சியில் முடங்குவாயோ நுனிப்புல்லே
கன்றுதன் தாயோடு தந்தையோடு உண்ணுகையில் நுனிப்புல்லே
அன்றுதான் நீ பிறந்ததன் அர்த்தமடி நுனிப்புல்லே!

எழுதிய நாள் மே 31, 2008

யாவும் நீ

வெகுவிரைவில் 'வெறும் வார்த்தைகள்' எனும் எனது 'கவிதையெனும் வார்த்தைகள் தொகுப்பு' வெளியிடப்பட இருக்கிறது. அதில் முதல் கவிதையாய் அமர்ந்திருக்கும் கவிதைதான் இது.


படைப்பின் ரகசியம் படைப்பவன் உனக்கே வெளிச்சம்
இயற்கைதான் நீ என்று செயற்கையாய் சொல்லிவிட்டு
செயலற்று நிற்பது எம்மில் பெரும் அச்சம்!

உறங்குகையில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது!

இல்லை நீயென சொல்லுதற்கு சொல்லை தந்துவிட்டு
எல்லையில்லா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருள்கின்றாயோ அறிவதற்கு!

ஒன்றுமில்லா உலகம் என்று காரியங்கள் பல வைத்து
மனம் வென்று வருபவற்கு காத்து இருப்பாய்
அன்போடு அரவணைக்கும் அன்னையாய் நீ!

அறியாமையில் உள்ளம் அவதிபட்டு அழுகையில்
காணமுடியாமல் மனதில் கவலைபட்டு கரைகையில்
உன்னை எம்மில் வைத்து இருந்து விளையாடுவாய் நீ!

எல்லாம் சிறப்பும் தந்து எழில்மிகு உலகில்
யாவும் நீயாக இருக்கின்ற உன்னை
மறந்து வாழும் வாழ்க்கை கொண்டால்
"நன்றி கெட்டவர் ஆவோமே யாம்" இறைவா!
நலம் தரும் எமது தெய்வம் நீ!
நம்பினோம் உம்மை, உலகை காத்து அருள்வாய்!

பகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)

தர்மமும் அதர்மமும்:

பகவான் கிருஷ்ணர் எதனை தர்மம் என்கிறார்? எதனை அதர்மம் என்கிறார்? அதர்மம் தலைதூக்கும்போது வருகிறேன் என்கிறார்? அதர்மத்திற்கு என்ன வரையறை வைத்து உள்ளார்?

பிறரை துன்புறுத்தும் தீயவர்களை அழிக்கவும் வருவதாக சொல்கிறார். யார் யாரை துன்புறுத்துகிறார்கள்? எது துன்பம் எனச் சொல்கிறார் கிருஷ்ணர்? துன்பத்தின் வரையறை என எதை வைத்து உள்ளார்? அவனையே நினைத்துக் கொண்டு இருக்க வருமோ இன்னல்? கலக்கம் கொள்ள வைப்பவனும் அவனே, கலக்கம் கலைய வைப்பவனும் அவனே என்று இருக்கும்போது எதற்கு இதுபோன்று பேசுகிறான்?

தர்மம் என்பது பற்றியும், அதர்மம் என்பது பற்றியும் அறியத்தரப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் என்பதில் எப்படி மனிதன் உட்படாமல் போனான்? இறைவனை உணர்ந்து கொள்ளும் நிலை கொண்டமையாலா? இல்லை, மனிதன் தவிர்த்து அனைத்தும் இறை உணரும் தன்மை அற்றதலா?

தர்மம் என்பது வரையறுக்கப்படாத விதியாக இருக்கும்பட்சத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் நிலையானது மாறும். தர்மம் என்பது பொதுவான ஒன்று. அதனை அவர் அவருக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டால் அது தர்மம் ஆகாது, அதே வேளையில் தர்மத்தை கடைப்பிடிக்கவில்லை என்பதற்காக அது அதர்மமும் ஆகாது. இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவெனில் தர்மம் என்பதை யாருமே இதுவரை அறிந்தது இல்லை, அறியத்தரப்பட்டதும் இல்லை. அவரவர் தனக்கேற்றப்படி வகுத்துக் கொண்டதால்தான் தர்மம் தள்ளாடுகிறது. இறைவன் என்ற ஒரு உண்மையானது எப்படி இருட்டடிக்கப்பட்டு உள்ளதோ அதே போல்தான் இந்த தர்மமும். எப்பொழுது ஒருவர் உண்மையை உணர்கிறாரோ அவர் தர்மம்தனை உணர்வார் என்பது மட்டுமே உண்மை.

ஒரு உயிர், நல்லுயிராய் வாழ வழி வகுக்க வேண்டிய உண்மைதான் உண்மையாகச் சொல்லப்படவில்லை எனவே எது தர்மம் என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது. தர்மம் எதுவென தெரியாத பட்சத்தில் அதர்மம் எப்படித் தெரியும்?

இப்பொழுது தர்மம் என்பது ஒன்றே என தர்மம், அதர்மம் எனும் இருநிலைகளை ஒன்றாய் சொன்னதால் பின்னர் ஏன் அதர்மம்தனை பிரித்து வைத்து பார்க்கிறான் அவன்? தர்மமும் அதர்மும் ஒன்றே என்றல்லவா சொல்ல வேண்டும்!

தர்மம், அதர்மத்தைப் பிரித்து உணர, உண்மையாக இருக்கச் சொல்கிறான்! உண்மை நிலை என்னவென்று உணராத/உணர தடையாய் இருக்கும் அரக்க எண்ணங்களை எரிக்கச் சொல்கிறான்! அனைத்தும் அதன் அதன் பொருட்டு நன்றாகவே உள்ளது, தர்மமாக உள்ளது என்னும் பட்சத்தில் இது சற்று இடர்ப்பாடான விசயம்தான்.

உண்மைதான் இறைவன், உண்மைதான் தர்மம்
உண்மை ஒழுங்காக உரைக்கப்படவில்லை என்பதே அதர்மம்!