Thursday 30 July 2009

இனிய உறவுகள்

'அம்மா ! அம்மா...........'
அழுகையுடன் ஓடி வந்தான் பத்து வயது சிறுவன் அன்பு.

அழுகையை கண்ட அம்மா
'என்ன......... என்ன ஆச்சு '
என அடுப்பங்களையில் இருந்து ஓடி வந்தாள்.

'என்னோட காரை எடுத்துட்டு சீராம் தர மாட்றான்மா'

'ஓ.......
உனக்கும் அவனுக்கும் மூணு நாளா இதே வேளையாப் போச்சு.
இதுக்கா அழுவாங்க
இரு வாங்கி தரேன்'

'காரை தாப்பா'
அம்மா எட்டு வயது சீராமிடம் கேட்க
தர மனம் இல்லாவிட்டாலும்
புரிந்து கொண்டு அவனும் தந்துவிட்டான்.

காரை பெற்றுக் கொண்ட சந்தோசத்தில் அன்புவின் அழுகை மறந்தே போனது.

சீராம் வெகு நேரமாக ஏக்கத்தோடு அன்புவின் காரை பார்த்துக் கொண்டே இருந்தான்.

ஆனாலும் இந்த முறை சிறீராமுக்கு அன்புவின் காரை பறிக்கத் தோணவில்லை.

மாறாக இம்முறை அன்புவிடம் சிறீராம்
'நான் கொஞ்சம் விளையாடிட்டு தரட்டா'
என்று கேட்டான்.

'இந்தா
அஞ்சு நிமிசத்தில தந்துரனும்'

சரியென வாங்கி விளையாடிய அன்பு
ஐந்து நிமிடம் முன்னராகவே சிறீராமின் காரை திருப்பிக் கொடுத்து விட்டு
வீட்டுக்கு போவதாக கூறி வந்துவிட்டான்.

'அம்மா எதுக்குமா சீராம் என் காரையே பறிக்கிறான்?'

அன்புவின் மனதுக்குள் எழுந்த வினாவுக்கு
அவன் அம்மாவிடம் விடை தேடினான்.

'அவனுக்கு அவங்க வீட்டுல கார் வாங்கி தர காசு இல்லப்பா'

அன்பு மெளனமாக திரும்பி சிறீராம் சென்ற திசையை நோக்கி பார்வையை செலுத்தினான்.

அவன் பார்வையில் சிறீராம் தென்படவில்லை.

மனதுக்குள் எதையோ நினைத்தவனாய்
அவன் அறைக்குள் நுழைந்தான்.

தனது வீட்டில் இருந்த தேவைக்கு அதிகமான நல்ல கார்கள் எல்லாம் அவன் கண்ணில் பட்டது.

தனது தேவைக்கு அதிகமான கார்களையும் , கூடவே தான் படித்த மூன்றாம் வகுப்பு புத்தகங்களையும் கையிலெடுத்துக் கொண்டு வெளியேறினான்.

'எங்க கடையில போடப் போறியா'

'இல்லம்மா சீராமுக்கு தரப் போறேன்'
என்றவாறு சிறீராமின் குடிசையை நோக்கி நடந்தான்.

அன்புவின் அம்மாவின் மனது
பேருக்கேத்த புள்ள என்று பெருமைப்பட்டது.

அவளும் அவனோடு சேர்ந்தே நடந்தாள்.
அன்பு அம்மாவோடு சிறீராமை தேடிச் செல்லும் போது
சீராம் தன் குடிசை வீட்டின் முற்றத்தில் அம்மாவுடன் சேர்ந்து முற்றத்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டு இருந்தான்.

அன்பு
அம்மாவின் உதவியுடன் புத்தகங்கள் கார்கள் எல்லாம் கொண்டு வந்து சீராமிடம் தந்தான்.

அவற்றில் புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டான் சீராம்.

'கார் வேணாம்?'

ஊகும்!
வேண்டாம் என்று தலையாட்டினான்.

வீட்டில் இருந்த மோர் கொண்டு வந்து அவர்களுக்கு தந்தார் சீராம் அம்மா.

அம்மாவுடன் திரும்பும் போது தான் கொண்டு சென்ற கார்களுடனே திரும்பினான் அன்பு.

மறுநாள் இருவரும் சேர்ந்தே விளையாடினார்கள்.

இம்முறை சீராமுக்கும் சேர்த்து கார் எடுத்துச் சென்றான் அன்பு.

முற்றும்

எதுங்க மகிழ்ச்சியான வாழ்க்கை? - 1

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அவரவர் மகிழ்ச்சியாக இருப்பது.

நான் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்குக் காரணம் பிறரது கஷ்டங்களை முன்னிறுத்த மாட்டேன். மேலும் அடுத்தவர் கஷ்டங்கள் குறித்து அநாவசியமாக கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கமாட்டேன். தீர்க்க முடிந்தால் தீர்ப்பேன், இல்லையெனில் எனது மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுபவன் இல்லை நான், வாடிய பயிரைக் கண்டபோது தண்ணீர் ஊற்றி மகிழ்ந்திருப்பவனே நான்.

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது மனிதர்களுக்கு இயலாத காரியமாக இருக்கிறது. ஏதாவது ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய கவலையில் மனிதர்கள் தங்கள் பொழுதுகளை இழந்துவிடுகிறார்கள்.

நகைச்சுவையாகச் சொல்வார்கள், ''பிரச்சினைகளே எனக்கு இல்லையே, என்ன வாழ்க்கை இது'' என கவலைப்பட்டுக் கொண்டிருந்தாராம் ஒருவர்.

மகிழ்ச்சியாக இருக்கனும்னா சன்னியாசம் போ என குடும்பஸ்தர்களைச் சொல்வது போல, மகிழ்ச்சியாக இருக்கனும்னா குடும்பஸ்தனா போ என சன்னியாசிகளும் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். அக்கரை இக்கரை எனும் அக்கறை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது இதுதான் என சில விசயங்களை வரையறுப்பது என்பது தவறாகவே முடியும். எதிலும் ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவைப் பார் என வட்டார மொழி ஒன்று வழக்கத்தில் உண்டு.

உண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா?! என்னாது!

கோவிலுக்கு எனப் பணத்தைச் செலவழிக்கிறோம், மக்களை மறந்துவிட்டோம், முக்கியமற்ற செய்திகளை நாளேடுகள் வெளியிடுகின்றன எனும் செய்திக்கு என்னுள் எழுந்த வினாக்கள் இவை.

1. நாம் குடியிருக்கும் வீடு மூன்று குடும்பங்களுக்கு தங்க வைத்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கிறது என்பதற்காக பண வசதியின்றி வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு வாடகை வாங்காமல் வீட்டில் தங்க வைத்திடும் தைரியம் எவர்க்கேனும் உண்டா? (எனக்கு இல்லை!)

2. கடவுளைப் பற்றி காராசாரமாக விவாதிக்கும் நாம் நமது குடும்பத்தில் நடக்கின்ற விசயங்களை (உண்டியல் போடுவது முதற்கொண்டு அனைத்து விசயங்களைச் சொல்கிறேன்) நம்மால் தடுத்த நிறுத்த இயலுமா? (என்னால் இயலாது காரணம் நம்பிக்கை கொண்டவர்களை புண்படுத்தும் பழக்கம் என்னிடம் இல்லை).

3. எதற்கெடுத்தாலும் ஆலயங்கள், வருமானம் என பேசுகிறோமே இப்படியெல்லாம் நடக்கிறதே என அலுத்துக் கொள்கிறோமே, நமது வீட்டில் நாம் சாப்பிடும் சாப்பாடுடன் இன்னும் பலருக்கு சாப்பாடு போட்டு அவர்களை வாழ்வில் முன்னேற வழிவகுக்கும் திறமை இருந்தும் நாம் செய்கிறோமா? (நான் செய்வது இல்லை, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை)

4. நாளிதழ்களின் பணி அவர்களுக்கு வருமானம் வேண்டும் அதன் காரணமாக பிரபலங்களை, மக்கள் கவரும் விசயங்களை (எதுவேண்டுமெனினும்) வெளியிட்டு கொள்கின்றன, ஆனால் இப்படி வெளியிடுகிறார்கள் என புறக்கணிக்கும் சக்தி உண்டா? ஓசிப் பேப்பராவது படிக்கிறோமே? (இங்கு ஓசி பேப்பர்கள் அதிகம் வெளியிடப்படுகிறது)

5. சமூக நலத்திட்டம் , சமூக நலத்திட்டம் என பேசும் நாம், நமது வீட்டினைச் சுத்தமாக நமது எண்ணங்களை சுத்தமாக வைத்து கொள்கிறோமா? சரி கோவில்களுக்கு வந்த பணத்தில் தான் கோவில்களுக்கு செலவழிக்கிறார்கள், நிதி என கேட்டு வந்தால் தராமல் இருந்து விடுங்கள், யாரும் வற்புறுத்தி எந்த கோவிலும் வருமானம் சேர்த்துக் கொண்டதாய் இல்லை. நமது வீட்டை அலங்காரப்படுத்தும் பணத்தில் தெருக்களை சீரமைக்கும் சக்தி நமக்கு உண்டா?

6. அறநிலையத் துறை மட்டும்தானா அடித்தட்டு மனிதர்களின் வளர்ச்சிக்குத் தடை? பணக்காரனாக நாம் இருந்தால் அடித்தட்டு மனிதரின் நிலை குறித்து கவலைப் படக் கூட நேரம் இருக்காது காரணம் இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசை. நமது தேவைகள் பெரும் தேவைகளாக இருக்கும்.

7. மடாபதிகளும் ஆத்திகர்களும் மக்கள் இல்லையா? அவர்களை இப்படி ஒதுக்கி வைத்துப் பார்ப்பதே பெரும் குற்றமாகத் தெரியவில்லையா? இதுவும் ஒருவகையில் தீண்டத்தகாமையைச் சார்ந்தது.

8.நிரூபிக்கப்படாத கடவுள்? நாளை நாம் யார் என்பதை இந்த உலகம் மறந்து போகும் நம்மை எப்படி நிரூபிப்பது? ஆண்டாண்டு காலமாய் வழக்கத்தில் வந்து கொண்டு இருக்கும் அந்த ஒன்று இல்லாததாய் இருப்பினும் இருப்பதாய் உணர்வினை உரச வைக்கிறதே அதனை எதிர்க்கிறோம் என பேசுவது முரண்பாடாகத் தெரியவில்லையா? இல்லாமல் போகப் போகும் நமக்கு நாம் எவ்வளவு செலவு செய்கிறோம்? இதனை நியாயப்படுத்தினால் அதுவும் நியாயம் தான். ஆதங்கப்படுவதே நமக்கு வாடிக்கையாய் போய்விட்டது, முடிந்ததை செய்து அதன் மூலம் திருப்தி அடைவதுதான் வாழ்க்கை என்னும் ஒரு சின்ன தத்துவம் கூட நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்னும் பட்சத்தில் நமது பேச்சுக்கள் வியப்பைத் தரும்?

9. ஏழைக்கு உணவு தருதல் அல்ல வாழ்க்கை முறை, ஏழையை உணவு உற்பத்தி பண்ணச் சொல்லி அதன் மூலம் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதுதான் வாழ்க்கை முறை.

10. பணம் பணம் பணம் இதுதானே மூல காரணம், இதனை அழிக்க முடியுமா நம்மால்? இதனை ஒழிக்க முடியும் எனில் கடவுளை உணர்வது பற்றி உரைக்கிறேன். அப்படி முடியாது எனில் தயவு செய்து கடவுள்களை இம்சிக்காதீர்கள், பேதம் பார்க்காதீர்கள். காரணம் நமது மனித இனத்தை மதிக்கத் தெரியாத, மனம் குறுகிப் போன மனிதர்கள் நாம் என்பதை மறந்து போகாதீர்கள்.