Monday 29 June 2009

வேத நூல் - 1

அத்தியாயம் 1.

கி.மு 10400.

பேச மட்டுமே வழக்கத்தில் இருந்த மொழி. எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்படாமல் இருந்த காலம். ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள ஒரே விதமான ஒரே மொழி. ஒரு வார்த்தைக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டுமே. இப்படிப் பேசும் மொழியை முதலில் எழுத்தில் கொண்டு வரவேண்டும் என நினைத்தவன் சாங்கோ.

சாங்கோவின் நண்பர்கள் மிபலோ, குவ்விலான். குவ்விலானுக்கு பேச வராது. வெறும் சைகை மட்டுமே. இதனால் குவ்விலான் மனதில் இருக்கும் விசயங்களை அவன் சொல்வதற்கு ஏற்றபடி எழுத்தை உருவாக்க வேண்டும் என எட்டு வயதாக இருக்கும்போது சாங்கோவுக்கு ஒரு எண்ணம் உருவானது.

சாங்கோ இருந்த இடம் தானேஸ்ரா என அப்பொழுது அழைக்கப்பட்டது. மொத்தக் குடும்பங்கள் பதினெட்டு. இது தற்போதைய கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இடமாகும். அந்த ஊரில் இருப்பவர்கள் கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டு வருவதும், காட்டில் சென்று வேட்டையாடி வருவதும் தான் முக்கியத் தொழில்.

மிபலோ எப்பொழுதும் அமைதியாகவே இருப்பவன். அவனது ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு சாங்கோ பொறாமைப்படுவான், ஆனால் நண்பர்களாக இம்மூவர் மட்டுமே சேர்ந்து இருந்தனர். விளையாட்டு, உறக்கம் இதுதான் அந்த ஊர்ச் சிறுவர்களின் தொழில். ஆனால் சாங்கோ, மிபலோ, குவ்விலான் மூவரும் தங்களது தந்தையர்களுடன் வேட்டையாட, மீன் பிடிக்கச் செல்வார்கள்.

குரு என்றால் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. அன்னையும் தந்தையும் மட்டுமே குருவாக விளங்கினர். மிகவும் அச்சத்துடனே வாழ்ந்து வந்தவர்கள், அச்சத்தை எதிர்த்துக் கொள்ள ஆயுதம் செய்து வைத்துக் கொண்டனர். இந்த ஆயுதங்கள் எல்லாம் மிபலோவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. சாங்கோவிடம் இப்படி உயிர் வதைப்பதை நிறுத்த வேண்டும் என சிறு வயதிலேயே சொல்வான் மிபலோ. மிபலோ தனது பெற்றோர்களிடம் இவ்விசயத்தைக் கூறியபோது பயந்தால் ஒன்றும் நடக்காது, வீரமுடன் இருக்க வேண்டும் எனச் சொல்லி அடக்கி வைத்தார்கள்.

ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல ஒரு மாத காலம் ஆகும். எனவே ஊர்த் தொடர்பு எல்லாம் ஒரு சில ஊர்களுக்கு மட்டும் தான். சிரகமெரா எனும் சிறுமிக்கு சாங்கோவை மிகவும் சிறு வயதிலேயேப் பிடித்து இருந்தது. சிரகமெராவைக் கண்டால் மகிழ்ச்சியில் துள்ளுவான் சாங்கோ.

எழுத்தை உருவாக்கும் முயற்சியில் சாங்கோ இறங்கியபோது அவனுக்கு பத்து வயதாகி இருந்தது. ஒருநாள் மிபலோ ஆர்வத்துடன் நீ எழுத்தை உருவாக்கி விடுவாயா, அப்படி உருவாக்கினால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றான். அதற்கு சாங்கோ நிச்சயம் உருவாக்குவேன் எனக்கு குவ்விலான் மனதில் இருப்பதை அறிய ஆவல், அவனது சைகை எனக்குப் புரியமாட்டேன்கிறது என்றான்.

குவ்விலானுக்கு மட்டும்தான் எழுத்தை உருவாக்குகிறாயா, எனக்காக உருவாக்கமாட்டாயா? எனக் கேட்டான் மிபலோ. ஏன் நீதான் பேசுகிறாயே என்றான் சாங்கோ. நான் பேசுகிறேன் ஆனால் எனது ஆழ்ந்த சிந்தனைகள் அனைத்தையும் ஒன்றாக எழுதி வைக்க வேண்டும் என்றான் மிபலோ. அப்படியெனில் நீயே உருவாக்கிக் கொள் என்றான் சாங்கோ. எனக்கு எழுத வராது, மணலில் நான் வரைந்த படம் எல்லாம் பார்த்தாயா எப்படி இருந்தது என பரிதாபமாகச் சொன்னான் மிபலோ. அது மணல் அழியத்தான் செய்யும் என்று சொன்ன சாங்கோ எழுத்தை உருவாக்கலாம் ஆனால் அதை எதில் எழுதுவது என யோசித்தான்.

என்ன யோசனை எனக் கேட்டான் மிபலோ. எதில் எழுதுவது என்றான் சாங்கோ. இந்த விசயத்தையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த குவ்விலான் அவர்களை அழைத்துச் சென்று பெரிய இலையைக் காட்டினான். சந்தோசமானான் சாங்கோ. பக்கத்தில் இருந்த ஒரு மரத்தை பிடித்து பழங்களை உலுக்கினான் குவ்விலான். பழங்களை சாறாக்கினான். சாறு கருப்பாக இருந்தது. ஒரு சின்னக் குச்சியை எடுத்து அச்சாறில் தொட்டு இலையில் ஒரு கோடு போட்டான் குவ்விலான். சாங்கோ உற்சாகமானான். மிபலோ ஆழ்ந்த சிந்தனையில் அப்பொழுதே அமர்ந்தான்.

(தொடரும்)

கள்ளிப்பாலின் கயமை

முன்னுரை:

கள்ளிப்பால் என சொன்னதும் உசிலம்பட்டி எனும் தமிழக வரைபடத்திலே இல்லாத ஒரு கிராமம் அனைவருக்கும் நினைவில் வந்து செல்லும், அந்த பச்சிளம் குழந்தைகளின் வேதனைகள் மனதை நீங்காமல் வட்டமிட்டு இருக்கும். கள்ளிப்பால் மருந்தாகவும் பயன்படக்கூடியது, மேலும் கள்ளிப்பால் தரும் கள்ளிச்செடி தன்னைக் காத்துக்கொள்ள முட்கள் எல்லாம் வைத்து இருக்கும். இப்படி மருந்தாக பயன்படக்கூடியதை மரணத்திற்காக பயன்படுத்தியது கள்ளிப்பாலின் கயமைத்தனம் என்றால் இல்லை என்று சொல்லலாம். மாறாக இதனை இப்படி உபயோகப்படுத்தலாம் என மனிதர்களின் கயமைத்தனம்தனை வன்மையாக கண்டிக்கலாம்.

இளைஞர்(ஞி)களும் கள்ளிப்பாலும்

'ஆசை ஆசையாய் புள்ளை பிறக்க வேணுமின்னு
அய்யனாருக்கு படையல் வைச்சி வருசம் பல
காத்திருந்து கண் விழிச்சி காத்திருக்கையிலே
பிறந்த புள்ளை பொட்டை புள்ளையாய் போச்சுதுன்னு
இறந்த சேதி சொல்ல கள்ளிப்பாலு கொடுத்தாளே பாட்டி'

எனும் நாட்டுப்புற பாடலில் இருக்கும் அகற்றமுடியாத சோகம் ஒவ்வொரு மனித உயிரையும் உலுக்கி வைக்கும். இந்த கள்ளிப்பால் நிலையில் தான் இன்றைய இளைஞர்களும், இளைஞிகளும் இருக்கிறார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்டு, படித்தபின்னர் இவர்கள் தனது சொந்த சிந்தனையை தொலைத்து போதைப் பொருளுக்கும், சிற்றின்ப விசயத்திற்கும் விலை பேசாமலே இவர்களை தாங்களே விற்றுவிடுகிறார்கள். கள்ளிச்செடியின் முள்ளானது ஓரளவிற்கு எதிர்ப்பு தர முடியும், ஆனால் இந்த இளைஞர்கள் கூட்டம் தகர்க்க முடியாத எதிர்ப்பை தர முடியும். அப்படி இருக்கும் இந்த இளைஞர்கள் இப்படி வீணாகிப்போவது இவர்களது கயமைத்தனத்தையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இவர்களது திறமையை உலகம் முழுவதும் அறிய வேண்டி செயலாற்றுதல் மிகவும் முக்கியமான செயலாகும்.

தனக்கு தீங்கிழைக்காத செயல்கள் மட்டுமின்றி, பிறருக்கு தீங்கிழைக்காத செயலையும் செய்யாது இருப்பது போற்றத்தக்கது. நல்ல விசயங்களை மட்டுமே நாம் தாங்கிக்கொண்டு வந்து இருந்தால், தீமையைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்காது. கள்ளிப்பால் நல்ல விசயத்துக்கு மட்டும் என இருந்து இருந்தால் தீமைக்கு துணை போயிருக்க வேண்டியிருக்காது. ஆனால் இப்படி இயற்கையாய் அமைந்து விட்ட விசயம்தனில் 'அல்லவை தேய நல்லவை நாடி வரும்' என போராடி தீய விசயங்களை அகற்றி செயலாற்றுதல் சிறப்பு.

உயிர்களின் சிறப்பு:

'பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது' 'நன்றும் தீதும் பிறர் தர வாரா' என நம்பிக்கையூட்டும் விசயங்கள் இருந்தாலும் எல்லா உயிர்களும் நன்மை தீமை என அனைத்தையும் தன்னுடன் இணைத்தே வைத்திருக்கிறது.

நுண்ணுயிர்கள் நமது உடலுக்கு தீங்கிழைக்க கூடியதுதான், ஆனால் அவை நமது உயிர் காக்கும் மருந்தாகவும் பயன்படுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரும் கொண்டுள்ள பண்புகளால் அவை கயமைத்தனம் கொண்டவை என கருதமுடியாது. எப்பொழுது ஒரு உயிர் தீயனவாக செயல்படுகிறதோ அப்பொழுதுதான் அந்த உயிர் கயமைத்தனம் உடையதாக கருத முடியும். 'இருந்தும் இல்லாதிருப்பது' என்பது இங்கே சரியாகப் பொருந்தும். தீய விசயங்களுக்கு ஆட்படாமல் உயிர்களின் சிறப்பை நிலை நாட்டும் வண்ணம் நற்பண்புகளுடன் செயல்புரிவது அத்தியாவசியமாகிறது.

முடிவுரை:-

'இவ்வுலக படைப்பில் ஏற்றத் தாழ்வுகள் எதுவுமில்லை, ஏனோ மனிதன் பார்த்த பார்வையில் ஏற்றம் கூட தாழ்வாகிப் போனது'

அனைத்தும் சமமாக இருந்திட இன்னல்கள் இல்லாத சமுதாயம் உருவாக்கிட நமது கயமைத்தனம் அகற்றி நல்ல பார்வையுள்ள மனிதர்களாக வாழ்ந்து சிறப்போம்.

Sunday 28 June 2009

கலையாத கனவும் விளங்காத இயல்பும்

முன்னுரை:

கனவும், இயல்பும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவையாகத் தோன்றும். இயல்பாக நடக்கும் விசயத்தை இது கனவா என எண்ணும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவருக்குள் கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டுப் போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. கனவு சாதாரணமாக கலைந்து போகும் நிலைத்தன்மையற்றது. நடக்கின்ற விசயத்தின் அடிப்படையில், இயல்பு சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியும் தன்மை உடையது. ஆனால் அப்படி இல்லாமல் கலையாத கனவாகவும், விளங்காத இயல்பாகவும் இருக்கும் இறைத்தன்மை முரண்பட்ட இரண்டு விசயங்களை ஒன்றாக்கி வைத்து இருக்கிறது, இருந்து கொண்டிருக்கிறது.

கனவுலகில் சஞ்சரிப்பவர்கள்:

இப்பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து இந்நாள்வரை இந்த உலகம் எப்படி தோன்றியது என்பது எவரும் அறியாத நிலையில் 'அவனின்றி ஒரு அணுவும் அசையாது' என சொன்னதின் அர்த்தம், கலையாத கனவின் அடிப்படை, விளங்க முடியாத இயல்பின் துவக்கம் என கொள்ளலாம்.

இருந்ததை எண்ணி, நடக்கின்ற இயல்பின் அடிப்படையை வைத்து 'தகுதியுள்ள இனமே வாழ்வை நிலைநிறுத்திக் கொள்ளும்' என சார்லஸ் டார்வினின் விளக்கமும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் மிகவும் பிரபலமான சக்தி, நிறை மற்றும் ஒளி தொடர்பான வாய்ப்பாடும், கிரிகரி மெண்டலினின் மரபியல் தத்துவமும் என ஒவ்வொரு மனிதரும் இருக்கின்ற இயல்பை விளங்கிக் கொண்டனரேயன்றி எவராலும் இதுவரை முதல் கனவை கலைக்க இயலவில்லை எனலாம்.

மொத்த மனித இனமும் விதவிதமாக கண்ட அந்த இறையை பற்றிய கனவு கலைந்து போவதற்கு வழியற்றுப் போனது. உண்மையான கனவு என்பது தானாக வருவது, ஆனால் இந்த கனவு வாழையடி வாழையாய் காணாமலே கண்டது போல் ஆகிப் போனது. விழித்த நிலையில் காணும் கனவு என சொல்வது போல் ஆனது. இப்படி கலையாத கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதர்களாக நாம் இருப்பது விளங்கிக் கொள்ள முடியாத இயல்பாகிறது.

இதை மாணிக்கவாசகர் அருமையாக தனது திருவாசகத்தில் பாடுகிறார்.

'புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகிப்
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய்ச்
செல்லாய் நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்'

வெடித்துச் சிதறிய வேதாந்தம்:

பூமியும், சூரியனும் மட்டுமே தெரிந்து வைத்திருந்த மனித இனத்திற்கு, எண்ணற்ற நட்சத்திரங்களும், நட்சத்திரங்களுக்கான கோள்களும் கண்டு இது எப்படி சாத்தியமானது என எண்ணிக் கொண்டு இருக்காமல் ஒரு அற்புதமான கனவு காணத் தொடங்கியதன் விளைவாக 'நட்சத்திரம் வெடித்துச் சிதறியது' என கண்ட கனவு ஒரு கலையாத கனவுதான். வெஞ்சினரின் 'எல்லா நிலப்பரப்பும் ஒன்றாக இருந்தது' எனும் கனவும் கலையாத கனவுதான், ஆனால் இவை விளங்க முடியாத இயல்பாக இருக்கின்றன.

இந்த விளங்க முடியாத இயல்பை விளக்கிக் கொள்ள எண்ணற்ற பொருட்செலவில் நடக்கும் ஆய்வுகளும், வெளி கோள்கள் மற்றும் வெளி நட்சத்திரங்கள் நோக்கியப் பார்வைகளும் பெரும் ஆர்வத்தை நம்மிடையே ஏற்படுத்தி இருக்கின்றன. இயல்புநிலை விளங்கிக் கொண்டதன் காரணமாக பல கனவுகள் தகர்ந்து போயின. எழுத்தாளர்களின் அதீத கற்பனை வளமும், கிடைக்கும் சிறு விசயத்தை வைத்து அறிவியலாளர்கள் காணும் கனவும் சாதாரண மனிதனை கனவு காணும்படி வைத்துள்ளது. இந்த கனவுகள் கலையாமல், விளங்கிக் கொள்ள முடியாமல் தொடர்வது ஒரு இலக்கைத் தொட்டுவிட உதவும், அந்த இலக்கோடு நிற்காமல் தொடர்ந்து பயணிக்க கலையாத கனவுகள் மிக அவசியம். வேறு கிரகத்தில் உயிரினங்கள், அதிக அறிவுள்ள உயிரினங்கள் என காணும் இந்த கனவுகள் நனவாக வேண்டும் என்ற எந்த ஒரு அத்தியாவசியமும் இல்லை. அது ஒருவகையில் அநாவசியம் கூட.

'எந்நிலை கொண்டு என்னை விளக்கும் முயற்சியில்
தன்னிலை மறந்து வாழும் மனிதருள்
ஒளியாக கண்டிடும் காணும்
ஒளியால் பிறிதொரு
உலகமது'

இறைவனான என்னை விளங்கிக் கொள்கின்ற இந்த முயற்சியில், ஒளியாய் என்னை உள்ளத்துள் காண்பது போல், ஒளியினை அடிப்படையாக கொண்டு பிறிதொரு உலகத்தை இம்மனிதர்கள் காண்பார்கள் என்பது இக்கவிஞனின் கலையாத கனவு, ஆனால் விளங்க முடியாத இயல்பு.

முடிவுரை:

'கனவுகள் இல்லையேல் வாழ்வு சுகப்படாது' என்பது என் மொழி. கலைந்து போகும் வீணான கனவுகளை கண்டு வேதனைப்படுவதைவிட, இருக்கின்ற இயல்பின் அடிப்படையில் நாம் காணும் கனவு நிச்சயம் நனவாகி மகிழ்வைத் தரும். இறைவன் எனும் கலையாத கனவுடனும், விளங்கிக் கொள்ள முடியாத இயல்புடனும் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நமது அன்றாட கனவானது உலகம் செழிப்புற இருக்க வேண்டுமென ஒவ்வொருவரும் நனவாக்க பாடுபட்டு இருப்போமெனில், நமது இயல்பு நிலை விளக்கம் பெறும், அந்த இறைவனும் மகிழ்ச்சி கொள்வான்.