Friday 26 June 2009

பொதுவாத்தான் சொல்றேன்

பொதுவாத்தான் சொல்றேன் (உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)

மேலப்பட்டி அரசுநடுநிலைப் பள்ளிக்கு அருகில் தான் பாலர் பள்ளியும் அமைந்து இருந்தது. மேலப்பட்டியில் எல்லா சாதியினரும் இருந்தார்கள், அதில் ரெட்டியார்கள் அதிகம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சக்கிலியர்கள் குறைவாகவே இருந்தாலும் அவர்களுக்கென ஊரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கேதான் அவர்கள் வாழ வேண்டும். ஊருக்குள் எல்லாம் வீடு கட்டி வாழ முடியாது.

இந்த சாதிய முறை எப்படி உருவானது, எதனால் கொண்டு வரப்பட்டது, எத்தனையோ முன்னேற்றங்களை தொழில்நுட்பத்தில் அடைந்தபோதிலும் இன்னமும் பல கிராமங்களில், நகரங்களில் என ஏன் அழியாமல் செழித்தோங்கி இருக்கிறது என ஆராய்ச்சியெல்லாம் செய்து அதற்கு மாற்று வழி கொண்டு வந்துவிட முடியாது. சாதிகளை முற்றிலும் ஒழித்துவிட வழியில்லாமலே இருக்கிறது. மொழி எதிர்ப்பு போராட்டம் வந்தது போல சாதி எதிர்ப்பு போராட்டத்தை ஒருவரும் கூட்டக் காணோம். திரைப்படங்களில், நாடகங்களில், கவிதைகளில், காவியங்களில் என சாதியை எதிர்த்து எழுதப்பட்டதும், கலப்புத் திருமணம் என காதல் திருமணங்கள் பெரிதாகப் பேசப்பட்டதுடன் அப்படியே நின்றுபோய்விட்டது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என சொன்னதுபோல சாதியில்லாத ஊரிலே வாழ்ந்திருக்கவும் வேண்டாம் என எண்ணுமளவுக்கு ஆகிப்போய்விட்டது. மேலப்பட்டி இதற்கு விதிவிலக்கு அல்ல.

பாலர் பள்ளியில் சேர்ப்பதற்காக தாழ்த்தப்பட்ட வகுப்பில் சக்கிலியர் பிரிவினைச் சார்ந்த மாரியப்பன் தனது மகன் வேல்முருகனுடன் தனியாய் ஓரிடத்தில் நின்றான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே சிலர் தங்களது குழந்தைகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ‘நாம் இருவர், நமக்கு ஒருவர்’ என குடும்பக் கட்டுப்பாடு எண்ணம் கொள்ளும்வகையில் இது இருந்தாலும், பலர் தங்களது குழந்தைகளை பணம் கொடுத்து தல்லாநகரில் உள்ள பள்ளியில் சென்றுச் சேர்த்திருந்தனர்.

வரிசையில் நிற்காமல் தனியாய் நிற்கும் வேல்முருகனைப் பார்த்து பாலர் பள்ளியில் சேர இருந்த இலட்சுமி எனும் சிறுகுழந்தை ‘வா’ என கையைக் காட்டி அவனை அழைத்தது. வேல்முருகனும் ஆசையுடன் அங்கே ஓட எத்தனிக்க அவனைப் பிடித்துக்கொண்டான் மாரியப்பன். ‘’இங்கனயே நில்லு’’ என அதட்டினான் மாரியப்பன்.

வேல்முருகன் மறுபேச்சு பேசாமல் அப்படியே நின்றான். இலட்சுமி தன் தந்தையிடம் ‘’கூப்புடுப்பா, கூப்புடுப்பா’’ என மழலையில் கெஞ்சியது. ‘’செத்த சும்மா இரு’’ என அதட்டினார் இலட்சுமியின் தந்தை இராமசாமி. மற்றவர்கள் இலட்சுமியைப் பார்த்தனர். குழந்தைகளைச் சேர்த்துவிட்டு பெற்றோர்கள் திரும்பிய போது சிலர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள். வேல்முருகன் பள்ளியில் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அது. பள்ளியில் சேர்த்துவிட்டுச் சற்று தாமதமாகத் தோட்ட கூலி வேலைக்குச் சென்றான் மாரியப்பன். தோட்ட முதலாளி கணேஷமூர்த்தி மாரியப்பனைப் பார்த்து சத்தமிட்டார்.

‘’இதுதான் வேலைக்கு வர நேரமாடா’’

‘’பையனை ஸ்கூலுல சேர்த்துட்டு வரேன் சாமி’’

‘’ஸ்கூலுக்குப் போயிட்டா அப்புறம் இங்க உனக்கப்பறம் யாரு வேலைப் பார்க்குறது’’

‘’அந்த யோசனை உங்களுக்கு முன்னமே இல்லாமேப் போச்சே சாமி’’

‘’பேசுவடா பேசுவ, பேச்சுல ஒன்னும் குறைச்சலில்ல, போயி வேலையக் கவனி’’

கணேஷமூர்த்திக்கு இரு மகன்கள், ஒரு மகள். அனவைரும் நன்றாகப் படித்து இருந்தார்கள். விவசாய நிலத்தை கூலிக்கு ஆட்கள் வைத்து அவரேப் பராமரித்து வந்தார்.

அன்று மாலையில் பள்ளியைவிட்டு வந்த வேல்முருகன் ‘அ’ என தரையில் கரித்துண்டால் எழுதிக் காட்டினான். ‘என் பிள்ளைக்குப் படிப்புல அக்கறை இருக்கு’ என மாரியப்பன் தனது மனைவி மூக்காயியிடம் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொண்டான். படித்தே வளர்ந்தான் வேல்முருகன்.

அதே பள்ளியில் மூன்று வரைப் படித்த தனது தங்கை பூங்குழலி படிப்பை பாதியிலெயே நிறுத்திவிட்டாள். வேல்முருகன் வற்புறுத்தியும் அவள் படிக்க விருப்பம் இல்லாமல், தாயுடன் தோட்டத்துக்கும், முள் பறிக்கவும் சென்றாள். மாரியப்பன் பலமுறைக் கண்டித்தும் அவள் கேட்பதாக இல்லை. படிக்காமலே வளர்ந்தாள் பூங்குழலி.

வேல்மூருகன், தொட்டு விளையாடும் விளையாட்டுக்களில் எல்லாம் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தாங்கள் தீண்டத்தகாதவர்கள் எனவும் ‘ஹரிஜன்ஸ்’ எனவும் அவன் வளர வளர அவனுக்குப் புரிந்துப் போனது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ வரியைக் கேட்கும்போது அவனுக்கு வேதனையாக இருந்தது. இலட்சுமிக்கும், வேல்முருகனுக்கும் பள்ளியில் அதிக போட்டி இருந்தது. இலட்சுமியே எல்லா த் தேர்விலும் முதல்நிலை மாணவியாக வந்தாள். வேல்முருகனுக்கு முதல்நிலை நிராகரிக்கப்பட்டே வந்தது. எட்டாவது வரை அங்கேயே படித்தார்கள்.

வெளிநாட்டில் வேலைப் பார்த்து வந்த முதல் மகனுக்கும், இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடத்தி அழகுப் பார்த்த கணேஷமூர்த்தி தன் கடைசி மகனுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து வைத்தார். கல்யாணத்தை வெகுச் சிறப்பாகச் செய்ய ஏற்பாடு செய்து இருந்தார்.

மாரியப்பன் தனது மகனின் மாற்றுச் சான்றிதழழைப் பள்ளியில் பெற்றுக் கொள்ளச் சென்றான். பள்ளி தலைமையாசிரியர் நடராசன் மாரியப்பனிடம் பேசினார்.

‘’பையனை நல்லாப் படிக்க வைச்சிட்ட, பொண்ணு ம் படிச்சி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்’’

‘’ஏதோ அவன் பொழப்பைப் பார்த்துக்குவானுட்டுதான் படிக்க வைக்கிறேன் சாமி, இந்த வேகாத வெயிலுல படாதபாடு பட்டாலும் கா வயிறுக்குத்தானே கஞ்சி கிடைக்குது, போடறதுக்கு ஒரு துணி எடுக்க முடியுதா சாமி’’

’குருவி சேர்க்கறதப் போல சேர்க்கனும், நீங்க எடுக்கற சம்பளத்துல பாதிய குடிச்சித் தீர்த்துறீங்க, கால காலமா அடிமைப்பட்டேத்தானே கிடக்குறீங்க, உங்களுக்கு போராடுறேனு கொடி கட்டிக்கிட்டு அவனவன் வயித்தை நிரப்பிட்டுத் திரியறானுக, உங்களுக்குத் தேவையின்னா நீங்கதான போராடனும், படிக்க எவ்வளவோ வாய்ப்பு இருக்கு, வேலைக்கு வாய்ப்பு இருக்கு, எத்தனையோ வசதிக செஞ்சு கொடுத்தும் நீங்க எப்பவும் இப்படித்தானே இருக்குறீங்க, இந்த அடையாளத்தை முதல மாத்தனும், நீங்க தாழ்த்தப்பட்ட பிரிவினரா காட்டிக்கிற அடையாளத்தைப் போக்கனும், எல்லோரோடையும் சமமா இருந்தாத்தான் ஒரு தன்னம்பிக்கை வரும், வளரும். ஆனா அது நடக்காது நடக்கவும் விடமாட்டீங்க. இப்படியே இருந்தா ஒரு வேல்முருகனோ, ஒரு பால்பாண்டியோ மட்டும்தான் முன்னேறுவான்’’

‘’சாமி தப்பா எடுத்துக்காதீக, இன்னைக்குதான் எங்கிட்ட இவள பேசறீக சாமி. முதல்ல நம்ம ஸ்கூலுல இருக்கிற வேறுபாட்டை நீங்க மாத்திட்டாலே பெரிய விசயம் சாமி, எம் பையன் எங்கன உட்கார்ந்து படிச்சான், எப்படி விளையாடுனான் அவன் மனசுல ஆறாத ரணமா இருக்கு சாமி’’

‘’அது இந்த ஊர் கட்டுப்பாடுனு இருக்கு’’

‘’அதேன் சாமி, இந்த நாட்டுக் கட்டுப்பாடும், எதைச் செய்யனுமோ அதைச் செய்யமாட்டாக, வீராப்பா பேசிக்கிருவாக, தப்பாச் சொல்லியிருந்தா மன்னிச்சிங்கோங்க சாமி, அடக்கத்தைக் கூட அடிமைத்தனமாப் பார்க்குற பூமியிது’’

நடராசன் எதுவும் பதில் பேசாது இருந்தார். பள்ளி மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு வேல்முருகனுடன் வெளியேறினான் மாரியப்பன். வேல்முருகனை காரியனேந்தலில் ஒன்பதாம் வகுப்புச் சேர்த்துவிட்டான் மாரியப்பன். இலட்சுமியும் அங்கேயே சேர்ந்தாள்.

கணேஷமூர்த்தியின் கடைசி மகன் திருமணம் பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்தது. மாரியப்பனுக்கும் மூக்காயிக்கும் வழக்கம்போல சேலை, வேஷ்டி எடுத்துக் கொடுத்திருந்தார் கணேஷ மூர்த்தி.

கணேஷமூர்த்தியின் மூத்த மகன் விநாயகபிரபு மாரியப்பனிடம் ‘’நம்ம ஊருல சாதிப் பிரச்சினை, வெளியேப் போனா இனப் பிரச்சினை, மனுசனுக்கு மனுசன் வெறுப்போடதான் வாழுறாங்க, எங்கே நம்ம சொத்தை அள்ளிட்டுப் போயிருவானோனு கெளரவம் பார்த்துட்டுதான் இருக்காங்க, இனத்துக்காரனு இல்லாம மனுசனா யாருமே நினைக்க மாட்டாங்க, ஏன்னா இனம் பெரிசுனு பேசிட்டு தன் இனத்தையே அழிக்க வழி செய்வாங்க. அது இருக்கட்டும், பையன் படிப்புச் செலவுக்குத் தேவைப்பட்டா எனக்கு தகவல் சொல்லு மாரியப்பா, எப்படி கேட்குறதுனு இருந்திராதே’’

‘’முதலாளி தருவாரு சாமி, தரலைன்னா கேட்கறேன் சாமி’’

‘’நீ எப்போதான் இந்த சாமியை விடப்போற, வெளியிலேப் போய் பாரு நீயும் நானும் வேற ஊருல நடந்தா நீ இந்த குலம், நா அந்த குலம் னு நாம நடந்துக்கிற முறையும், போட்டுக்கிற உடையும் தான் அடையாளம் காட்டும், யாருமே உன்னை தாழ்த்தப்பட்டவராவோ என்னை மேல் சாதிக்காரனாவோப் பார்க்கமாட்டாங்க, எல்லாம் இந்த ஊருக்கு மட்டுந்தான், எதுலயும் சாதியை முன்காட்டி எதையும் செய்யாத, அப்படி செய்யாம இருந்தாலே சாதி செத்துரும். ஆனா இங்க சாதியை வைச்சித்தான் எல்லாம் நடக்குது. மதத்தையும் தனக்கு அடையாளம் காட்டிக்கிர மனுசங்களும் ரொம்ப அதிகம், உம்பையன் டாக்டரா வரட்டும், இந்த ஊரிலேயே ஒரு ஆஸ்பத்திரி கட்டித் தரேன்’’

வேல்முருகன் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் வாங்கினான். இலட்சுமியும் அதிக மதிப்பெண்கள் வாங்கினாள். இருவருக்குமே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிட்டியது. தன்னிடம் பணம் இல்லாத குறைதான் பெரிதாக மாரியப்பனுக்குப் பட்டது. மாரியப்பன் கணேஷமூர்த்தியிடம் பண உதவிக்காக நின்றான்.

கணேஷமூர்த்தி தன்னிடம் கொடுப்பதற்கு இல்லை கல்யாணத்திற்கு அதிக செலவு பண்ணிவிட்டேன் என மறுத்து விட்டார். விநாயகபிரபுவிடம் பணம் கேட்டான் மாரியப்பன். சொன்னதுபோலவே விநாயகபிரபு பணத்தை உடனே அனுப்பி வைத்தான். சிலநாட்களுக்குப் பின்னர் இந்த விசயம் கணேஷமூர்த்திக்குத் தெரியவர மூத்தமகன் மேல் கடுங்கோபம் கொண்டார். மாரியப்பனை வேலையை விட்டு நிறுத்திவிட நினைத்தாலும் அவனைப் போல் உழைக்க ஆளில்லை என பேசாமல் இருந்துவிட்டார்.

வேல்முருகனும், இலட்சுமியும் நன்றாகப் படித்து மருத்துவராக வெளிவந்தார்கள். பூங்குழலிக்கு வெளியூரில் அவன் வசதிற்கேற்ப திருமணம் முடித்து வைத்தான் மாரியப்பன்.

விநாயகபிரபு தனது சொந்த செலவில் மேலப்பட்டியில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினான். இதைக் கண்டு கொதித்துப் போனார் கணேஷமூர்த்தி. அதே மருத்துவமனையில் வேல்முருகனையும், இலட்சுமியையும் மருத்துவராகப் பணியாற்றுமாறுக் கேட்டுக் கொண்டான் விநாயகபிரபு.

அருகிலிருந்த ஊர்க்காரர்களெல்லாம் மருத்துவம் பார்க்க வந்தார்கள். எந்த மருத்துவரைப் பார்ப்பது என்பதில் அவர்கள் பேதம் பார்க்கவில்லை. ஆனால் உள்ளூர்காரர்கள் வேல்முருகனிடம் செல்வதைத் தவிர்த்தார்கள். இலட்சுமி ஒரு வேலை விசயமாக சில நாட்கள் வெளியூர் சென்று இருந்தாள்.

அப்பொழுது கணேஷமூர்த்தி மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் வேல்முருகன் மட்டுமே இருப்பதை அறிந்த கணேஷமூர்த்தி தன்னை நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொன்னார். நிலைமை மோசமாக இருக்கவே வேல்முருகன் அவரை அந்த ஊரின் மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சைப் பார்க்கச் சொன்னான். அருகிலிருந்த மாரியப்பன் சொன்னான்.

‘’சாமி நான் வேலைப் பார்த்த விவசாய நிலம் தானே சாமி சோறு போட்டுச்சு, அதை நீங்க வேணாம்னு ஒதுக்கலையே, மோட்டாரு தூக்கி வைக்கறப்ப, மூட்டைத் தூக்கறப்ப உங்க கையை என் கையி உரசுச்சே சாமி, இப்போ அவ என் மகன் இல்லை சாமி, இந்த ஊரு டாக்டரு’’

கணேஷமூர்த்தி மயக்கநிலையை அடைந்தார். வேல்முருகன் எதையும் யோசிக்காமல் உடனடி சிகிச்சைத் தந்தான். சில மணி நேரங்களுக்குப் பின்னர் கண்விழித்துப் பார்த்தபோது கணேஷமூர்த்தியின் கண்களில் ‘’கணேஷமூர்த்தி பொது மருத்துவமனை, மேலப்பட்டி’’ எனும் வாசகம் மிகவும் பிரகாசமாக தெரிந்தது.

முற்றும்

பழங்காலச் சுவடுகள் - 11 (நிறைவுப் பகுதி)

பழங்காலச் சுவடுகள் - 11

சிறிது நேரத்திற்கெல்லாம் மழை ஓய்ந்தது. இருவரும் ஒளி கற்கள் கோபுரத்தை அடைந்தனர். கோபுரத்தில் உள்ளே செல்வதற்காக அனுமதி பெற்று நுழைந்ததும் இருவரும் ஒருவித அமைதியை உணர்ந்தனர். மனம் இலேசாகியது. அங்கேயே பல மணி நேரம் கழிந்தது. புத்தம் புதிய உலகத்தில் இருப்பது போன்று இருந்தது.

மாலை நேரம் வந்ததும் பெருவின் இயற்கை அழகை ரசித்தபடியே பல இடங்களை சுற்றி பார்த்தனர். நேராக கோவிலில் சந்தித்தவரின் வீட்டிற்குச் சென்றனர். இவர்களின் வரவை எதிர்நோக்கியவாறே மெகாய்ட் காத்து இருந்தார்.

''வாங்க வாங்க''

''நல்ல மழை பெய்தது''

''எங்கும் தண்ணீர் தேங்கியிருக்காதே''

''இல்லை, மிகவும் துடைத்துவிட்டது போன்று இருந்தது''

''அமருங்கள், என்ன சாப்பிடுகிறீர்கள்''

''வெளியில் சாப்பிட்டுவிட்டோம்''

''பழரசமாவது அருந்துங்கள்''

''ம்ம் சரி''

பழரசங்கள் எடுத்து வந்தார் அவர். தானும் குடிக்க எடுத்துக்கொண்டார். அப்பொழுது ஒருவர் அங்கே வந்தார்.

''இதோ இவன் பெயர் ஜொவியன், மற்றொரு கோவிலில் தலைமை பூசாரியாக இருக்கிறான்''

''காலையில் சந்தித்தோம், என்மீது தெரியாமல் மோதிவிட்டார்''

''ஓ சந்திப்பு நடந்துவிட்டதா, நாங்கள் இருவர் மட்டுமே இங்கே தங்கி இருக்கிறோம்''

''திருமணம் ஆகவில்லையா''

''இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டோம், அதே கோவிலில் பணிபுரிவதே எங்கள் கடமையாக கருதுகிறோம்''

''ஒளிகற்கள் கோபுரம் சென்று இருந்தோம், மனம் இலேசாகியிருந்தது''

''பூமி எல்லாமே இப்படித்தான் இருக்கும், ஆனால் ஒரு இடத்தில கோபுரத்தைக் கட்டி அங்கே அமைதியான உணர்வும், கடவுள் உணருர தன்மையும் இருக்கிறதா பழங்காலத்தில உருவாக்கின காரணம் எப்பவும் சண்டையும் சச்சரவுமா இருக்கிறவங்களை அமைதிபடுத்தத்தான்; மொத்த பூமியும் அப்படித்தான் இருக்கும்னு உணருர மாதிரி சுவடுகளை எந்த ஒரு மனித நாகரிகமும் வளர்க்கலை, அதுதான் இன்னமும் பிரிவினைக்கெல்லாம் காரணம், இதெல்லாம் அழிஞ்சி மொத்த பூமியும் தெய்வீக உணர்வை உணருமாறு ஒரு புது நாகரிகம் தோன்றனும், அந்த நாகரிகம் எல்லாரையும் வசப்படுத்தனும், இல்லைன்னா இந்த பழங்காலச் சுவடுகள் மனசில வலியை உருவாக்கிக்கிட்டே இருக்கிற வடுக்களாகத்தான் இருக்கும்''

''எங்க நாட்டிலயும் பல கோவில்கள், சிற்பங்கள், சிந்து சமவெளி நாகரிங்கள்னு எல்லாம் சிதைந்து போயிருக்கு''

சின்னசாமி பேசி முடித்ததும் அகிலா சொன்னாள்.

''இரகசியங்கள் பத்தி சொல்லுங்க''

அப்பொழுது அந்த இரவில் ஒரு சிலர் அங்கே வந்தார்கள். வந்தவர்கள் நேராக மெகாய்ட்டிடம் இரகசியங்களைத் தருமாறு கேட்டார்கள். மெகாய்ட் மறுத்தார். வந்தவர்கள் இதோடு பலமுறை வந்துவிட்டதாகவும் இனிமேலும் பொறுமை காக்கமுடியாது என்றும் கோபத்துடன் கூறினார்கள். அகிலாவையும் சின்னசாமியையும் பார்த்தார்கள். இவரிடம் இரகசியங்கள் பெற வந்திருக்கிறீர்களா எனக் கேட்டுக்கொண்டே இரகசியங்கள் பெற்று இருந்தால் உடனடியாகத் தருமாறு கேட்டார்கள். அகிலாவும் சின்னசாமியும் இல்லையென சொன்னார்கள். ஜோவியன் அவர்களை அங்கிருந்து போகுமாறு கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் இந்த முறை இரகசியங்கள் பெறாமல் செல்வதில்லை என மேலும் சொன்னார்கள்.

சின்னசாமி மெகாய்ட்டிடம் இரகசியங்கள் தந்துவிடுமாறு கூறினார். மெகாய்ட் ஒரு சின்னதாளில் எழுதி அந்த மனிதர்களிடம் கொடுத்தார். பூமியில் எல்லா இடமும் அமைதியானது என்பதை உணர்த்தும் வகையில் எந்த ஒரு நாகரிகமும் தோன்றவில்லை அதுவே இந்த பூமியின் இந்த கொடூர நிலைக்கு காரணம் இதுவே ஒவ்வொருவரும் அறிய வேண்டிய இரகசியம் என்பதை வாசித்ததும் வந்தவர்களின் ஒருவன் மெகாய்ட்டின் தலையில் ஓங்கி அடித்தான். தடுக்க வந்த ஜோவியனை மற்றொருவருன் தாக்கினான். பலமாக இருவரையும் அடித்துவிட்டு அகிலாவையும் சின்னசாமியையும் ஒன்றும் செய்யாது ஓடினார்கள். மெகாய்ட் முனகினார். அகிலாவும் சின்னசாமியும் செய்வதறியாது பயத்தில் உறைந்து போயினர். மெகாய்ட் கோவிலில் கிழக்குப்பகுதியில் ஒரு சுரங்க அறை ஒன்று இருப்பதாகவும் அங்கேதான் எல்லா உலக ரகசியங்கள் இருப்பதாகவும் எப்படியாவது இந்த நாட்டில் தங்கிவிடுமாறும் கூறிக்கொண்டே சாவியினை சின்னசாமியின் கைகளில் தந்து மரணம் அடைந்தார். ஜொவியன் முன்னரே மரணமடைந்து இருந்தான்.

காவல் அதிகாரிகள் வந்தனர். அகிலாவும் சின்னசாமியும் நடந்ததை சொன்னார்கள். சுரங்க அறைக்கான சாவியை தந்தார்கள். இருவரின் நேர்மையை காவல் அதிகாரிகள் போற்றினார்கள். உடனே எந்த கூட்டம் இதற்கான பின்னணியில் இருக்கும் என கண்டுபிடித்து அந்த இரவோடு இரவே அவர்களை சிறையிலடைத்தனர். மறுநாள் கோவிலில் அகிலா சின்னசாமியை வைத்தே சுரங்க அறையை திறந்தனர். அங்கே சூரியன் ஒளி தருவது போன்று சுவரெல்லாம் வரையப்பட்டு இருந்தது. மொத்த பூமியும் ஒன்றான நிலப்பரப்பாக இருந்தது போன்ற வரைபடம் எல்லாம் இருந்தது. எகிப்தியர்கள் மாயன்கள் இடத்திற்கு வந்து போனதாகவும் ஆரியர்கள் எகிப்துக்கு வந்து சென்றதாகவும் குறித்து இருந்தது. லெமூரியர்களும் மாயன்களும் அட்லாண்டிஸுகளும் தொடர்புடையவர்களாக காட்டி இருந்தது. அஜ்டெக்குகளும் இன்கா சமூகமும் தொடர்புடையவை என குறித்து இருந்தது. அந்த அறையின் சுவர்களிலே இந்த விபரங்கள் மட்டும் குறிக்கப்பட்டு இருந்தது.

அறையில் இருந்த இரும்பு பெட்டிகளை திறந்தபோது ஏடுகள் இருந்தது. அதை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினர். அகிலாவும் சின்னசாமியும் உடன் இருந்தனர். நாம் அறியாத ஒரு நாகரிகம் பற்றி குறிப்பிட்டு இருந்தது. மேலும் மாயன்கள் இன்கா அஜ்டெக்குகள் எகிப்தியர்கள் பயன்படுத்திய நாட்காட்டிகள் இருந்தது. பல்லாயிரக்கணக்கான வருடங்கள் வாய்மொழியாகவே விசயங்கள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன என்பதை மறுக்கும் வண்ணம் பல இலட்ச வருடங்கள் முன்னரே எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன என்பதை பறைசாற்றும் வண்ணம் அந்த ஏடுகள் இருந்தது. அந்த எழுத்துக்களைப் பார்த்து அகிலாவும் சின்னசாமியும் பரவசமடைந்தனர். அனைத்து ஏடுகளும் தமிழ் மொழியிலே எழுதப்பட்டு இருந்தது. எழுத்துக்கள் இந்திய எண்களே என பறைச்சாற்றும் வண்ணம் பூச்சியம் எல்லாம் இருந்தது. கடைசியாக எழுதப்பட்ட வருடம் 129304 என குறிக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொரு வருடத்திற்கு ஒரு பக்கம் மட்டுமே எழுதி இருந்தது. ஒரு வருட நிகழ்வுகளை மொத்தமாக குறிப்பிட்டு இருந்திருக்கக்கூடும் என சின்னசாமி யோசனை சொன்னார். அகிலாவும் வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்திப் பார்த்தார், கடைசி எழுதிய வருடங்களில் இருந்த குறிப்புகள் நாம் அறிந்த நமக்குத் தெரிந்த வரலாற்று குறிப்புகளுடன் தொடர்புடையதாக எதுவும் இல்லை. முதல் பக்கத்தில் சூரியன் வரையப்பட்டு சின்ன சின்ன துகள்கள் போன்று வரைந்து இருந்தது. இரண்டாம் பக்கத்தில் உலக ரகசியம் உரைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில பகுதிகள் மட்டும் வாசித்துப் பார்த்ததில் உலகம் யாவும் அமைதியாகவே இருந்து இருக்கிறது. ஒரே நாகரிகம் தான் இருந்து இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. மனிதன் எப்படியெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பான் என கையில் கத்தியும் வேலும் கொடுத்தது நமது கொடூர எண்ணங்களேயன்றி அதையே கருத்தில் கொண்டு கொடுங்கோலர்களாய் வளர்ந்தது, வளர்ந்து கொண்டிருப்பது நமது குற்றமேயன்றி மனிதர்கள் மனிதத்தோடு வாழ்ந்தார்கள் என ஒரு நாகரிகம் இருந்தது என்பதை எந்த ஒரு சுவடும் இல்லாமல் ஆக்கியது நாமே என அறிய முடிந்தது.

தனித்தனி நாகரிகங்கள் பற்றிய குறிப்புகளும் இருந்தது, அது அந்த அந்த நாகரிக சம்பந்தபட்ட மொழி தொடர்புடையதாக இருந்தது. நாம் அறிந்த தெரிந்த வரலாறும் அந்த சுரங்க அறையில் இருந்தது. தமிழ் சம்பந்தபட்ட விசயங்கள் மட்டும் பெற்றுத்தருமாறு அரசிடம் கோருமாறு இருவரும் வேண்டினர். அரசு அதனை நகல் எடுத்து தருமாறு உடனே உத்தரவிட்டது. இவையெல்லாம் எப்படி கோவிலில் வந்தது என்பது குறித்து விசாரணையை தொடங்க அரசு காவல்துறைக்கு ஆணையிட்டது. இதை ஒரு செய்தியாக வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர். மெகாய்ட் மற்றும் ஜொவியன் முன்விரோதத்தினால் கொலை என மொத்த விசயத்தையும் அரசு கட்டளைப்படி மறைத்தது.

அகிலாவும் சின்னசாமியும் பெரு நாட்டிலிருந்து தேன்நிலவு முடித்து தமிழகம் வந்தனர். சின்னசாமியின் தந்தை அகிலாவை அன்புடன் வரவேற்றார், சிலவாரங்களில் அவர் விமான நிலையத்தில் என்ன சொன்னார் என்பதையே மறந்து இருந்தார்.

அந்த மொத்த எழுத்துக்களையும் புத்தகமாக எழுதி வெளியிட இருவரும் திட்டமிட்டனர். அதற்கான தலைப்பும் தேர்ந்தெடுத்தனர். அந்த பழங்காலச் சுவடுகள் மூலம் உலகத்திற்கு ஒரு புதிய நாகரிகத்தை அவர்கள் காட்டிட எண்ணினார்கள். அந்த நாகரிகத்தை பற்றி தெரியவந்தால் இந்த மொத்த மனித குலமும் மனிதம் என்பதை பற்றி உணரும் என நம்பிக்கை கொண்டார்கள். அகிலா முதல் வரி எழுதினாள். இன்றைய மனிதர்கள் தலைகுனிந்தார்கள்.

முற்றும்.

பழங்காலச் சுவடுகள் - 10

''மாயன்கள் அஜ்டெக்குகள் கலாச்சாரம் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த மனிதர்களும் கடவுள் வழிநடத்துவதாக தங்களுக்கென கடவுளை கொண்டாடி வந்தனர். சிற்பக்கலை போன்ற கலைகளில் மிகவும் கை தேர்ந்தவர்களாகவே இருந்தனர். இவர்கள் இருந்த பகுதி மெக்ஸிகோ பகுதியாகும். குவாட்டமேலா, ஹோண்டுராஸ் பகுதிகளில் மாயன்கள் வாழ்ந்தனர். அஜ்டெக்குகள் கட்டிய பிரமிடும் உருவாக்கிய நகரமும் மிகவும் பிரபலமானவை. இந்த மனிதர்கள் தங்களது அரசை போரிட்டு விரிவாக்கிக் கொண்டனர். பதினைந்தாம் நூற்றாண்டில் ஸ்பெயின் எப்பொழுது கால் எடுத்து வைத்ததோ அப்பொழுதே இந்த கலாச்சாரம் அழிவுக்கு வித்திட்டது''

அகிலா கேட்டாள்.

''ஒற்றுமையின்மையினால் தானே அழிந்தார்கள், பெருவில் இது போன்று இருந்தார்களா''

''பெருவில் நாஜ்கா, இன்கா என மனித கூட்டம் இருந்தது. இங்கே சூரியக்கடவுள்தான் பிரசித்தம். ஏனைய கடவுள்கள் இருந்தாலும் சூரியனே எல்லாம். நீங்கள் இங்கே மச்சு பிச்சு பகுதியைப் பார்க்கலாம். ஆண்டிஸ் எனப்படும் மலைப்பகுதியில் அந்த நூற்றாண்டிலேயே இத்தனை பெரும் வியப்புகளை ஏற்படுத்தியது இன்கா வம்சவழியினர். மாயன்கள் அஜ்டெக்குகள் போன்றே விவசாயம் தான் இவர்களுக்கு எல்லாம்''

''எல்லா இடங்களுக்கும் எங்களை அழைத்துச் செல்ல முடியுமா''

''என்னால் வர இயலாது, எனக்கு இங்கே வேலை இருக்கிறது, ஒரே ஒரு இடம் அதை நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். ஒளிக் கற்களால் ஆன ஒரு கோபுரம் இருக்கிறது. அங்கே சென்றால் அத்தனை சக்தியும் நமக்குள் வந்துவிடும் போன்ற உணர்வு ஏற்படும். இதை இன்கா வம்சத்தினர் அஜ்டெக்குகளிடம் இருந்து திருடினார்கள் என சொல்வார்கள். ஆனால் அன்றைய மக்கள் கடவுளுடன் தொடர்பு கொள்வதையே பெரும் பேறாக கருதினார்கள்''

''இன்கா சமுதாயம் என்ன ஆனது''

''மாயன் அஜ்டெக்குகள் சின்ன கூட்டங்களாக இருந்தார்கள், அதைப்போல இன்கா வும் கூட்டங்கள்தான். மாயன், அஜ்டெக்குகளை வெற்றி கொண்டதை கண்ட அதற்கடுத்த வந்த தளபதி பெருவின் மேல் கண் வைத்தான், இன்கா சமுதாயத்தை வெற்றி கொண்டான்''

''இவர்களது கலாச்சாரம் வழிமுறைகள் என்ன ஆனது''

''ஸ்பெயின் தளபதிகள் கத்தோலிக்கத்தை முற்றிலும் விதைத்தனர், மாயன்களும் அஜ்டெக்குகளும் தங்களது சுயம்தனை இழந்தார்கள், ஆனால் இன்கா சமுதாயத்தினர் தங்களது வழிமுறையை வைத்துக்கொண்டார்கள், இந்தியர்களைப் போல''

'வேதம் என பெயரைச் சொல்லி சமுதாயத்தை அழித்துக்கொண்டே இருக்கிறார்கள்' விவிட் சொன்னது அகிலாவின் காதுகளில் ஒலித்தது. சின்னசாமி திக்கிக்கொண்டே கேட்டார்.

''கலாச்சாரம் தொலைந்தது ஆனால் கலாச்சார சின்னங்கள் இருக்கிறதா''

''மாயன்கள் அஜ்டெக்குகள் உருவாக்கிய நகரம் சின்னபின்னமானது, முற்றிலும் மாறிவிட்டது. டெக்னிக்குவான் இடத்தை அஜ்டெக்குகள் உருவாக்க கடவுளே கட்டளையிட்டார் என சொல்வார்கள், இப்பொழுது உருக்குலைந்து இருக்கிறது, மாயன் பெண்மணி நோபல் பரிசு எல்லாம் வென்று இருக்கிறார் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர். குவாட்டமேலா பெரும் சர்ச்சைக்குரியதாக இப்பொழுது இருக்கிறது, இன்கா அமைத்த பெரிய சாலைகள் கோவில்கள் எல்லாம் இங்கே அப்படியேதான் இருக்கிறது''

''இரகசியங்கள் என சொன்னீர்களே என்ன''

''எனக்கு வேலை இருக்கிறது, நீங்கள் எத்தனைநாள் இங்கே இருப்பீர்கள், முகவரி தருகிறேன், இரவு வீட்டிற்கு வாருங்கள், நான் விடுதிக்கெல்லாம் செல்வதில்லை''

அகிலாவும் சின்னசாமியும் நன்றி சொல்லிக்கொண்டு பெரு நகரத்தை வலம் வந்தார்கள். இந்தியாவில் இருப்பது போன்று உணர்ந்தார்கள்.

''ஒளிக்கற்கள் கோபுரம் போகலாமா''

''இந்த ஊரிலேயே இருக்கலாம் போல இருக்கு''

''ஏன் சண்டையிட்டே வாழ்ந்து இருக்காங்க, ஒருத்தரை தன்வசப்படுத்திதானே பெரும் சாம்ராஜ்யம் உருவாக்கி இருக்காங்க, அடிமைகளா நடத்தி இருக்காங்க, ஆனா தெய்வீக உணர்வு மட்டும் தன்னோட வச்சிகிட்டாங்க''

''நம்ம ஊருல மட்டும் என்னவாம், ஜைனர்களை ஆறாம் ஏழாம் நூற்றாண்டில வேட்டையாடுனவங்கதானே நாம, எத்தனை பேரை கொன்னோம், மாற்றத்தை உருவாக்க பலியாக்கப்பட்ட மனிதம்தான் எத்தனை, அதான் விவிட் சொன்னானே கொலை பாதகர்கள், ரத்த வெறியுடன் அலைபவர்கள்''

''நல்ல விசயத்தை ஏன் எடுத்துக்கலை யாரும்''

''நல்ல விசயத்தை மட்டுமே ஏன் போதிக்கலை எவனும்''

சின்னசாமியின் மேல் ஒருவன் மோதினான். மோதியவன் மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு விலகி நடந்தான். சற்று தூரத்திற்குச் சென்றவன் திரும்பினான்.

''வலிக்கிறதா''

''இல்லை''

''வலி குறைந்திருக்கும் என்றே சற்று தொலைவு சென்று திரும்பினேன்''

சின்னசாமியும் அகிலாவும் புன்னகைத்தனர். அந்த மனிதரும் புன்னகைத்தார். தனது பெயர் ஜொவியன் என அறிமுகப்படுத்திக் கொண்டுவிட்டு சென்றார்.

''உலகம் எத்தனை அமைதியாக இருக்க வேண்டியது''

''நம்மளை நாமே தொலைச்சிட்டோம்''

''உன்னை தொலைக்க வேண்டாம்னு சொல்றியா''

அகிலா சிரித்தார். பெரு வில் பெரும் மழை கொட்டத் தொடங்கியது.

(தொடரும்)