Sunday 28 June 2009

கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே!


ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் எனில் அனைவரையும் கவரும் வண்ணம், அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்க வேண்டும் என சொல்லலாம். மேலும் கதை எழுதும் முன்னர் கதைக்கான கரு, கதாபாத்திரங்களின் குணநலன்கள், சூழல்கள் என பல விசயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். திட்டமிடுதல் மிகவும் அவசியமாகிறது. எந்த காலகட்டத்தில் கதையானது நடந்தது என்பதையும் அந்த காலகட்டத்தில் மக்களின் பழக்கவழக்கங்கள் என பலவிசயங்களை உள்ளடக்கி சிறந்த தமிழ் கொண்டு வளம் நிறைந்து எழுதப்படும்போது அந்த கதை இலக்கிய உலகில் இடம்பெற்றுவிடுகிறது.

மனித உணர்வுகளை அடிப்படையாக வைத்தும், கற்பனையை மையமாக வைத்தும், நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தும், காதலை அடிப்படையாக வைத்தும், சமூக நலனை கருத்தில் கொண்டும், மற்றும் வரலாற்று விசயங்களை அடிப்படையாக வைத்தும் எழுதப்படும் கதைகள் என பிரித்துக்கொண்டே செல்லலாம்.

கதை எழுதுவதற்குத் தேவை மிகச் சிறந்த கதை. ;) ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையானது சிறந்த கதையாக இருந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அதை மிகவும் சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும்!

இதுவரை நான் எழுதிய கதைகள் எப்படிப்பட்டவை எனில் எழுத்துப்போக்கில் எழுதப்பட்டவை எனலாம். நுனிப்புல் முதற்கொண்டு தற்போதைய கதைகள் வரை எதுவுமே திட்டமிடப்படாமல் எழுதப்பட்டவையே. எழுதும் கதையில் அவசரம் அவசியமில்லை என்ற கருத்தினைக் கொண்டபோதும் லெமூரியாவும் அட்லாண்டீஸும் அவசரகதியில் முடிக்கப்பட்ட ஒன்று. சில அத்தியாயம் தாண்டியதும் நிறுத்துவது சரி எனப்பட்டது. பழங்காலச் சுவடுகள் எந்த ஒரு சுவடும் இன்றி தொடரப்பட்டது, அவசரத்தில் அந்த கதையும் முடிக்கப்பட்டது. சில்வண்டுகளில் எப்படியெல்லாம் மனிதர்கள் சச்சரவுடன் வாழ்கிறார்கள், ஆனால் அதுவே சிறந்த வாழ்க்கை முறை எனச் சொல்லும் முழு அத்தியாயம் எழுதப்படாமலே அவசர அவசரமாக முடிக்கப்பட்ட கதையே.

நுனிப்புல் பாகம் 1 அவசரமாக முடிக்கப்படவில்லையெனினும் நுனிப்புல் பாகம் 2 மிக அவசரமாக முடிக்கப்பட்ட ஒன்று. மரபியலும், நரம்பியலும் உள்ளே திணிக்கப்படும் அபாயமும், சாத்திரம்பட்டி சரித்திரம் எழுத வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட அதிவேகமாக கதையை முடிக்க வேண்டி வந்தது. நூல் வெளியிடும் முன்னர் அவைகளை இணைத்துவிடலாமா என எண்ணமும் எழுவது உண்டு. இப்படி எழுத வாய்ப்புக் கிடைத்த காரணத்தினாலேயே எழுதிய கதைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது. இந்த கதைகளை பிறர் படித்து என்ன நினைக்கிறார்கள் எனும் அறியும் வாய்ப்பும் குறைவே. நூலாக வெளியிடும் வரை காத்திருப்பதா அல்லது தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பவரிடம் தந்து கருத்துக்கள் அறிந்து கொள்வதா எனத் தெரியவில்லை.

இலக்கியத்தரம் என்னவென்பது எனக்குத் தெரிகிறதோ இல்லையோ, கதை எழுதுவது எப்படி எனத் தெரியாமலே என்னால் பல கதைகள் எழுதப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன, வாழ்க்கை எதுவெனத் தெரியாமல் நாம் வாழ்ந்து முடித்துவிடுவது போல ;)

Saturday 27 June 2009

இதுவா அங்காடித் தெரு?

பேகன் நடைபாதை வழியாக பல வருடங்கள் கழித்து அன்று செல்ல வேண்டியிருந்தது. நடைபாதையில் நடப்பதற்கு இடமில்லாமல் இருபுறங்களிலும் கடைகள் வைத்து பொருட்களை விற்றுக் கொண்டு இருந்தார்கள். பேகனின் கண்கள் நேராக பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. கடைகளில் என்ன வைத்து இருக்கிறார்கள் என்று கூட அவருக்கு பார்க்கத் தோணவில்லை.

கடையில் பொருட்களை கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

'சார் சார் இந்தாங்க சார் வாங்கிக்கோ சார்'

பேகனின் முகத்தின் முன்னால் ஒரு பொம்மையை காட்டினார் ஒரு கடைக்காரர். அந்த கடைக்காரரை சட்டை செய்யாமல் பேகன் நடந்து கொண்டிருந்தார்.

''ஆப்பிள் ஆப்பிள், ஆரஞ்சு நாலு ஐம்பது பைசா ம்மா '

''பெல்ட்டு இது சாதா பெல்ட்டு இல்ல, லெதர் பெல்ட்டு இரண்டு ரூபாதான் சார்''

பலருடைய பேச்சுக்கள் மொத்தமாக கேட்டதால் ஒன்றும் உருப்படியாக பேகனுக்கு கேட்கவில்லை. கேட்காதது போல் தலையசைக்காமல் நடந்து சென்றார் பேகன். ஒவ்வொரு கடையிலும் குழுமியிருந்த மக்களை வேறு விலகிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த பாதையை கடந்து செல்லும் முன்னர் நா வறண்டு, கால்கள் பின்னிக்கொள்ளும் போலும் என நினைத்துக் கொண்டு முகத்தில் புள்ளியிடத் தொடங்கிய வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு நடந்தார்.

''கர்சீப் நாலு ஒரு ரூபா சார், புதுசா வாங்கிக்கோ சார் இதுல மல்லிகை வாசனை வரும்''

என்றபடியே கட்டாக இருந்த கைக்குட்டைகளை பேகனிடம் காட்டினார் மற்றொரு கடைக்காரர். பதில் எதுவும் அளிக்காமல் பாதையில் நடப்பதையே குறிக்கோளாக வைத்துக் கொண்டார் பேகன். அடிக்கின்ற வெயிலைப் பொருட்படுத்தாது வியாபாரம் பண்ணிக் கொண்டு இருந்தவர்களின் நிலையை பற்றி சிந்தனை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார் அவர்.

''சார் நீங்க கட்டியிருக்க வாட்ச் பழசு, அதைத் தூக்கிப் போட்டுட்டு இது ரோலக்ஸ் வாட்ச்சு நூறு ரூபாதான், எடுத்துக்கோங்க சார்'

பேகனுக்கு முதன்முதலாக கோபம் முணுக்கென்று எட்டிப் பார்த்தது. கோபத்தை சட்டை செய்யாமல் பதில் அளிக்காமல் ஒருவழியாய் அந்த நடைபாதையை கடந்தார். அந்த நடைபாதை கடைசியில் ஒரு குளிர்பானக் கடை இருந்தது. தாகமாக இருந்தது அவருக்கு. ஒரு நல்ல கடை கண்ணுக்கு எட்டும் தொலைவில் கூட இல்லை. அப்பொழுது அந்த குளிர்பான கடைக்காரர் பேகனைப் பார்த்து சொன்னார்.

''இதமா ஒரு இளநீர் குடிச்சிட்டுப் போங்க சார்''

பேகன் நின்றுவிட்டார்.

''இனாமாத் தருவியா?''

''இல்லை சார், இரண்டு ரூபாதான்''

''இனாமாத் தருவியா, மாட்டியா''

''தரமாட்டேன் சார்''

பேகன் கடைக்காரரிடம் எதுவும் பேசாமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

''பாக்கறதுக்கு பெரிய இடத்து ஆளு மாதிரி இருக்கு, ஒரு இரண்டு ரூபா கொடுத்து இளனி வாங்கிக் குடிக்க வக்கில்ல''

கடைக்காரர் முணுமுணுத்தார். பேகன் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் வீடு போய் சேர்ந்தார்.

''அப்பப்பா, நடக்கிற பாதையில கடையை வச்சிக்கிட்டு பொருள் விற்கிறாங்க, யாருதான் அதை வாங்குவாங்க''

பேகன் சலித்துக் கொண்டார். பேகனின் தந்தை கடிந்து கொண்டார்.

''பேசுவடா, வசதி வாய்ப்புனு வந்துட்டா ரோட்டில விற்கிற பொருள் எல்லாம் சீயினுதான் இருக்கும், ஒரு காலத்தில ரோட்டில விற்கிற பொருளை வாங்கித்தான் குடும்பம் நடத்துனேன் அதை மறந்துராத, ரோட்டுல விற்கிற பொருளை நம்பி வாழுற குடும்பங்கள் இன்னும் எத்தனையோ நம்ம நாட்டுல இருக்கு''

உழைக்கும் வர்க்கத்தினை நினைக்கையில் பேகனுக்கு சுர்ரென்றது.

முற்றும்

குறிஞ்சிப் பூ

குறிஞ்சிப் பூ

இளந்தென்றல் வீசும் மலையோரத்தில் ஓலைக் குடிசையில் மதி எழுதிக் கொண்டிருந்தான்.

''பெண்ணினமே!
வீறு கொண்டு உன் தன்
பேதைமையை அகற்று

விழியற்றுக் கிடக்கும் கண்ணை
ஓங்கி ஒலித்தும் கேளா செவியை
மாற்றிட புறப்படு

அதோ பழித்துக் கொண்டிருக்கும்
பகல் வேசக்காரர்களை
உலகு காண
பறைசாற்றிட கிளம்பு

நீ எழும் வேகத்தில்தான்
உன் எதிர்ப்பு அடங்கும்
எழு! போராடு!

உன்னைக் காக்க
உன் இனத்தை
தூசு தட்டிக் கொள்
அப்பொழுதுதான் தூய்மைப் பிறக்கும்''

கவிதையை அருவிபோல் கொட்டினான், அதனை வார இதழுக்கு அனுப்ப எழுந்து சென்றான் மதி.

இந்தியாவின் சிறந்த தொழிலும் மூத்த தொழிலுமான விவசாயம்தனை அவனது தாய் தந்தையர் செய்து வந்தனர். மதி நகரின் வாசலை அடைந்தான். அவனது விழிகள் ஒரு மதியை நோக்கியது. அது வானத்து மதியல்ல, மண்ணகத்து மதி.

இவனைக் கண்டு அவள் புன்னகைத்தாள். மறுபதிலாய் இவனும் புன்னகைத்தான். அறிமுகம் புன்னகையில் ஆரம்பமானது. இவனது எழுத்துக்கள் பல அவளை கவர்ந்திருக்கின்றன. அந்த எழுத்துக்கள் போல் இவனும் அவளுக்குப் பிடித்திருந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.

ஆனால் அவள் செல்வந்தருக்கு செல்லச் சிட்டு, காதலை எப்படி அனுமதிப்பார் மனம் விட்டு. அவள் ஆதரவற்ற பூவையருக்கும் வழி தெரியா பெண்களுக்கும் நல்வாழ்வு மையம் நடத்தி வந்தாள். தந்தையின் பேருதவியால் தரணி போற்றுமளவு செயல்பட்டு வந்தாள்.

மதியின் கால்கள் நகரத்து வாசலை பலமுறை நாடின. நங்கையும் இவனை நாடினாள். புன்னகை சந்திப்பானது.

முதல் வார்த்தை ''நீங்க எழுதற கவிதைகளை நான் நிறைய இரசிப்பேன்'' என்றாள் ரதி.

''உங்க நல்ல செயலை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்'' என்றான் மதி.

காலம் கடந்தது, காதலும் வளர்ந்தது. காதலைச் சொன்னான் மதி. மறுப்பேதும் சொல்லவில்லை தந்தை. மதியை முழுதாய் தெரிந்தவர் அவர். ஆனால் ரதியின் தந்தையோ தடையாய் நின்றார்.

காதலை தடுக்க களவு முறைகள் கையாளப்பட்டும் வானைப் போல் உயர்ந்து வளர்ந்தது. ரதியின் தந்தை இறுதியாய் ஓர் அஸ்திரத்தை ஏவினார்.

''இங்க பாரும்மா, நான் சொல்றதை நீ கேட்கலைன்னா நல்வாழ்வு மையம் நாளைக்கே மூடியிருக்கும், யோசனை செஞ்சுக்கோ'' என்றார்.

அவள் துடியாய் துடித்தாள், மறுமலர்ச்சி ஏற்பட மறுக்கும் பூமியில் புதியதாய் தோன்றும் மறுமலர்ச்சி மசிவதா? கண்ணீர் அருவியானது.

''உனக்கு ஒரு வாரம் அவகாசம் தாரேன்'' என்று காலக்கெடு விதித்தார் தந்தை ரதியை நோக்கி.

விதியை நோவதா, வளர்ந்த இடத்தை நோவதா மதியை நேசித்ததை நோவதா ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆத்தங்கரை மேட்டில் அந்தி சாயும் வேளையில் மதியை காண ரதி விரைந்தாள். மதி ஏற்கனவே காத்திருந்தான். விசயத்தைக் கூறினாள் விம்மலுடன். என்ன செய்வது எனக் கேட்டாள். அவனோ பதிலேதும் கூற முடியாது வானம் நோக்கினான்.

''காரணம் சொல்லுங்கள், நம் காதலை விட நான் செய்யும் காரியம் உயர்ந்ததா இல்லையா'' என்றாள் ரதி.

''என்ன சொல்வது, எனக்கே விளங்கவில்லை'' என்றான் மதி.

''முடிவைச் சொல்லுங்கள், மூன்று முடிச்சு முக்கியமா? முப்பத்து முப்பது பெண்களின் நல்ல நிலை முக்கியமா? விம்மலுடன் வந்த வார்த்தைகள் காற்றில் கரைந்தது.

''என்னை மறந்து விடு'' உள்ளத்தில் இடியாய் இறங்கியது அவனது வார்த்தை.

''காதலையா மறக்கச் சொல்கிறீர்கள், நினைவுகளையா இழக்கச் சொல்கிறீர்கள். முடியாது, என்னால் முடியாது'' அவளது வார்த்தையின் உள்ளன்பு இமயத்தின் உயரத்தைத் தொட்டு விம்மியது.

''பின் அவர்கள் வாழ்வு'' தன்னை தன் காதலை இழக்க தைரியம் அற்றவனாய் விக்கித்து கேட்டான், ஆனாலும் உறுதியாய் இருந்தான்.

''அர்த்தமற்றதாய் போகட்டும், நம் காதல் அர்த்தமாக வேண்டும்'' என்றாள் அர்த்தமே புரியாதவளாய்.

''நம் காதல் அர்த்தமுடையதாக வேண்டுமெனில் நீ நல வாழ்வு மையத்தை தவிர்த்தலாகாது செல்'' என்றான் உறுதி கொண்டவனாய். அவள் ஒன்றும் பேச முடியாதவளாய் அமைதியானாள். சில விநாடிகள் அடுத்து ''நம் காதல்'' என்றாள் தனக்கு இவன் இதயம் இல்லாது போகுமோ? என்ற அச்சத்துடன்.

''காதல் தெய்வீகமானது'' என்று ஆறுதல் அளித்தான். அது அவளுக்கு உறுதியாக தெரிந்து இருக்க வேண்டும், நல வாழ்வு மையத்தின் நலன் உறுதியாக புரிந்து இருக்க வேண்டும்.

நடந்தாள், நம்பிக்கையுடன் நடந்தாள் ரதி. இருள் சூழ இருந்த நலவாழ்வு மையத்தினை காத்திட்ட மகிழ்ச்சியில் தனக்கு அவள் இல்லாது போன கவலையினையும் மறந்து? நடந்து கொண்டு இருந்தான் மதி.

முற்றும்