Monday 16 February 2009

பழங்காலச் சுவடுகள் - 3

குளித்துவிட்டு வெளியே வந்த அகிலா அறையினில் சின்னச்சாமி இல்லாதது கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாள். கதவைத் திறந்திட முயற்சித்தபோது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதைக் கண்டாள். பொதுவாக வெளியில் கதவை பூட்டினால் உள்ளிருந்து திறக்கும் வண்ணம்தான் பெரும்பாலான விடுதிகளில் வைத்திருப்பார்கள், ஆனால் இங்கு அப்படியில்லாமல் இருந்தது. அகிலா அச்சம் அடைந்தாள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்யாமல் உடைகள் மாற்றிக்கொண்டு சகஸ்ர நாமம் சொல்ல ஆரம்பித்தாள். சின்னச்சாமி சில உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினார். அகிலா, சின்னச்சாமியின் கைகளில் இருந்த பொட்டலங்களைப் பார்த்தாள்.

''வெளியே போனா சொல்லிட்டுப் போங்க''

''நீ குளிச்சி முடிக்கிறதுக்குள்ள திரும்பிரலாம்னு நினைச்சேன்''

''பயந்துட்டேன்''

''பயம் வரத்தானேச் செய்யும்''

''என்ன சொல்றீங்க''

''நான் உன்னைத் தொலைக்கமாட்டேனு உனக்கு நம்பிக்கை வரவரைக்கும் பயம் வரத்தானேச் செய்யும்''

''கடவுளை வேண்டிக்கிற ஆரம்பிச்சிட்டேன்''

''காப்பாத்துவார்னு நம்பிக்கையா''

''நீங்க என்னைத் தொலைக்கவிடமாட்டாருனு நம்பிக்கை''

''நான் குளிச்சிட்டு வரேன்''

''நான் வெளியே போகமாட்டேன்''

இருவரும் சிரித்தார்கள். இருவருக்குமான நெருங்கிய அன்பு மேலும் அதிகரித்தது. வருடங்கள் ஆக ஆக அன்பு அதிகரிக்க வேண்டும். சின்னச்சாமி குளித்துவிட்டு வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். பின்னர் ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள். அகிலா கண் அயர்ந்தாள். சின்னச்சாமி குறிப்பு எழுதத் தொடங்கினார்.

'எகிப்து நாட்டின் விமானத்தளத்தில் எங்களை வரவேற்க யாரும் இல்லை, ஆனால் நிறைய மனிதர்கள் தென்பட்டார்கள். அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். சிலர் புன்னகைத்தார்கள், சிலர் முகம் திருப்பிக்கொண்டார்கள். வெளியில் வந்ததும் புதிய புதிய கட்டிடங்கள் பழங்கால எகிப்து எப்படி இருந்து இருக்கும் என்பதை முற்றிலுமாக மறைத்துவிட்டது. கட்டிடங்கள் வானை நோக்கி வளர்ந்து கொண்டு இருந்தது. பூமிக்குத்தான் ஈர்ப்பு சக்தி இருக்கும் என்றில்லை, வானுக்கும் உண்டு என்பதுபோல் அந்த கட்டிடங்கள் அமைந்து இருந்தது.

நகரங்கள் செல்வச் செழிப்புடன் இருந்தது. மக்கள் வேகமாக பயணித்தனர். எகிப்து நாட்டின் கைரோ விடுதியில் அமர்ந்து இருப்பது, திருநெல்வேலியில் சென்ற வருடம் தங்கியிருந்த விடுதியைப் போல் இருந்தது. அங்கே தாமிரபரணி ஆறு, இங்கே நைல் நதி'

அகிலா சட்டென விழித்தாள். சின்னச்சாமி மும்முரமாக எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

''என்ன எழுதறீங்க''

''உனக்கு கடைசி கடிதம் எழுதறேன், உன்னை விட்டுட்டு ஓடிப்போக தயாராயிட்டேன்''

''கொடுங்க பார்ப்போம்''

'இந்தா''

அகிலா படித்துப் பார்த்தாள்.

''இதுக்கு எதுக்கு இத்தனை செலவழிச்சி இவ்வளவு தூரம் வரனும்''

''இங்க வராட்டி தெரிஞ்சிருக்காது, சாயந்திரமா நைல் நதிக்குப் போவோம்''

''என்னைத் தள்ளிவிடமாட்டீங்களே''

''என்னை பயமுறுத்திட்டே இருக்க, நீ இப்படியே பேசினா எனக்கு அந்த நினைப்பு வந்தாலும் வரும்''

அகிலா அமைதியானாள். இருவரும் மாலை நேரத்தில் விடுதியிலிருந்து நடந்து நைல் நதியினை அடைந்தார்கள். அந்த இடத்தில் ஆள் அரவமற்று இருந்தது. காற்று சிலுசிலுவென அடித்தது. நதியின் ஓரமாகவே இருவரும் நடந்தார்கள்.

''அந்த காலத்தில நைல் நதியை ஒட்டியேதான் மக்கள் வாழ்ந்து இருக்காங்க, நைல் நதிதான் கடவுள். நைல் நதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி குடியிருப்புகளை அழிச்சி இருக்கு, அப்போ கடவுள் கோபிக்கிறார்னு நினைக்கிறாங்க, மனித நாகரிகம் தொடங்கினது இங்கதானு சொல்வாங்க, அது மட்டுமில்லாம சமய கோட்பாடுகள் எதுவும் இல்லாத சமூகமாகத்தான் இருந்து இருக்காங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் வாழ்ந்திருக்காங்க''

''எந்த புத்தகத்தில படிச்சீங்க, இப்ப நீங்களும் நானும் இருக்கற மாதிரி''

''ஆமா ஆமா நீயும் நானும் மாதிரி, ஆனா அப்போ மொத்த சமூகம்''''எப்படி மாறிச்சி''

''பேராசை, தானே பெரியவன், தனக்கே எல்லாம் தெரியும் அப்படிங்கிற அகந்தை''

சின்னச்சாமி அகிலாவைத் தோளில் தொட்டார். அகிலா சின்னச்சாமியின் கைகளைத் தட்டிவிட்டார்.

''இந்த பயம் தான் அன்பை அடியோட அழிக்க பயன்பட்ட முதல் ஆயுதம். தற்காப்புனு சொல்லி அழிவைத் தொடங்கி வைச்ச பெரும் ஆயுதம்''

அகிலா திடுக்கிட்டாள். சும்மாதானே கையைத் தட்டிவிட்டோம், இப்படி நினைக்கிறாரே இந்த மனுசன் என நினைக்கத் தோன்றியது. சின்னச்சாமி ஈரம் எனப் பார்க்காமல் அங்கேயே அமர்ந்தார். அகிலாவும் உடன் அமர்ந்தாள். தொலைவில் யாரோ வருவதுபோல் இருந்தது. ஐந்து நபர்கள் இவர்களின் அருகில் வந்ததும் இவர்கள் எழுந்து கொண்டார்கள். அகிலாவுக்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது. ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம் மனதில் சொல்ல ஆரம்பித்தாள்.

(தொடரும்)

பழங்காலச் சுவடுகள் - 2

''என்னங்க நாம தெரியாத ஊருக்குப் போறோமே அங்க யாராவது நம்மளை ஏதாவது பண்ணிட்டா என்ன பண்றது''

''என்ன திடீருனு இந்த யோசனை''

''மாமா நம்மளை போக வேணாம்னு சொன்னாரே அதான் ஒரே யோசனையா இருந்தது''

''இராத்திரி நேரம் ஆனாலே பயம் வந்துருமே, என் அப்பாவுக்கு ஞாபக மறதி அதிகமாகிட்டே வருது அதான் அப்படி சொல்லிருக்கிறாரு, நீ தைரியமா தூங்கு, படத்தில வர மாதிரி எகிப்துக்கு கனவுல போய்ட்டு வந்துராத''

''உங்களுக்கு எப்பவும் கிண்டல்தான்''

அந்த இரவில் தங்களது அறையில் சின்னச்சாமியும் அகிலாவும் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் அறை நிசப்தமானது. மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அதிகாலைப் பொழுதில் எழுந்த சின்னச்சாமி வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தார், வெள்ளம் போல் தண்ணீர் வீட்டினை சூழ்ந்து கொண்டிருந்தது. படகு ஒன்றை வாங்கி வைக்க வேண்டும் என வீட்டுத்தரகர் சொன்னது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. இரண்டு மணி நேரத்தில் பாதை சரியாகிவிடும் என்று மீண்டும் தனது அறைக்கு வந்து படுத்துக்கொண்டார்.

''என்னங்க எழுந்துச்சா''

''இல்லை இனிமேதான் தூங்கனும்''

''மணி எத்தனை''

''நாலு''

''பிளைட்டுக்கு நேரமாச்சா''

''அது நாளைக்கு, இப்போ நீ தூங்கு''

சின்னச்சாமி எகிப்து பற்றிய சிந்தனையில் இருந்தார். எகிப்து நாட்டிற்கு ஏன் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம் என நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. எகிப்து அரசராக இருந்ததை போன்ற உணர்வு வந்தது. சிறுக சிறுக சேமித்த பணத்திலும், தந்தை மற்றும் தாய் சேர்த்து வைத்த பணத்திலும் தனது கனவு நினைவாகப் போவதை நினைத்துக் கொண்டே கண் அயர்ந்தார். நைல் நதி கரைபுரண்டோடியது. எகிப்துக்கு செல்ல ஆயத்தமாகி விமான நிலையம் வந்தபோது சாமிமுத்து சின்னச்சாமியை தனியே அழைத்தார்.

''நீ அவளை அங்கேயே தொலைச்சிட்டு வந்துரு, இதை சொல்லனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டே இருந்தேன், இப்ப சொன்னாதான் உனக்கு மறக்கவே மறக்காது, என்ன புரியுதா''

''எகிப்துல தொலைக்கவா? இல்லைன்னா பெருல தொலைக்கவா?''

''நீ எந்த நாட்டில தொலைச்சாலும் பரவாயில்லை, ஆனா நீ அவளோட திரும்பி வீட்டுக்கு வந்தா உனக்கும் அவளுக்கும் இங்க இடமில்லை''

''நீங்க சொன்னதை அப்படியே நான் நினைவில வைச்சிக்கிறேன்''

''சமத்தான பையன், இங்க உனக்கு டாக்டர் பொண்ணு பாத்து வைச்சிருக்கோம்''

சின்னச்சாமி சிரித்துக்கொண்டே விமானநிலையத்து இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டார். அகிலாவிடம் விசயத்தை சொன்னார். அகிலா அரண்டு போனாள்.

''நீங்க திட்டம் போட்டுத்தான் கூப்பிட்டுட்டு போறீங்களா, நாம போக வேணாம்''

''உன்னை எதுக்கு நான் அப்படி தொலைக்கனும்''

''நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கனும்னு மாமா நினைக்கிறாரே''

''நல்ல யோசனைதான், ஆனா எதுக்கு வேற கல்யாணம்''

''நீங்கதான் திட்டம் போட்டீங்க, சொல்லுங்க''

சின்னச்சாமி அகிலாவிடம் சொல்லாமல் இருந்து இருக்கலாம் என நினைத்துக்கொண்டே விமானத்துக் கட்டுப்பாடுகளை முடிக்க கிளம்பினார். அகிலாவுக்குச் செல்ல மனமில்லாமல் போனது. சற்று குழப்பமாக இருந்தது. சின்னச்சாமி அகிலாவை அழைத்துக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.அகிலா அச்சத்துடன் காணப்பட்டாள். சின்னச்சாமி அகிலாவை கவனித்தார்.

''பயமா''

''ரொம்பவே''

''இறங்கிப் போ''

''தொலைஞ்சி போனு சொல்றீங்களா''

''அவ்வளவு ஈசியா தொலைச்சிருவேனா''

''மாமா ஏன் அப்படி சொன்னாரு''

''அது அவரோட விபரீத ஆசை''

''நாம காதலிச்சி கல்யாணம் பண்ணினது பிடிக்கலையா''

''அப்படின்னா எதுக்கு மூணு வருசம் காத்து இருக்கனும்''

''தொலைக்கமாட்டீங்கதானே''

சின்னச்சாமி சிரித்தார். அகிலா அமைதியானாள். விமானப் பயணம் இனிதாய் அமைந்தது. எகிப்து நாட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் சுட்டெரித்தது. கண்ணுக்கு எட்டிய தொலைவில் பிரமிடுகள் வரவேற்றுக்கொண்டிருந்தன. நைல் நதியின் ஓரத்தில் பிரமாண்டமாக அமைந்திருந்த விடுதி ஒன்றில் இருவரும் நுழைந்தனர். சின்னச்சாமி சன்னல் வழியே நதியை பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.

''மனசுக்கு அமைதியா இருக்குங்க''

''எனக்கும் தான்''

''குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வெளியில போவோம்''

''தொலைச்சிர மாட்டீங்களே''

''இன்னுமா நினைச்சிட்டே இருக்க, இல்லை வசனம் பேசிப் பழகுறியா''

''டாக்டர் பொண்ணு எந்த ஊரு''

''இனி அந்த பேச்சை நீ எடுத்த நாம இந்த ரூமிலேயே இருப்போம், எங்கயும் போக வேணாம், சரியா''

''குளிச்சிட்டு வரேன்''

அகிலா குளியலறைக்குள் நுழைந்ததும் சின்னச்சாமி அறையை விட்டு வெளியேறினார்.

(தொடரும்)

Saturday 14 February 2009

பழங்காலச் சுவடுகள் -1

பரந்து விரிந்த வானத்திற்கு வெள்ளை மேகங்கள் வைத்த நீல வண்ண சேலையில் ஜரிகையாக மழை பொழிந்திட தயாராகிக்கொண்டிருந்தது. மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் திருநகரைத் தாண்டியதும் ஒரு சாலை வடக்குப் புறமாகச் செல்லும். அந்த சாலையின் வழியாக நடந்தால் சற்றுத் தொலைவில் ஒரே ஒரு வீடு மட்டும் இருக்கிறது. வீடு இருக்கும் இந்த நிலமானது முன்னர் விளைநிலமாக இருந்தது. இங்கே இந்த நிலம் வீட்டுமனைகளாக மாற முன்னேற்பாடுகள் எல்லாம் நடந்து முதன்முதலாக சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வீடும் வந்துவிட்டது. மற்ற இடங்களும் விற்பனையாவதில் கால தாமதம் ஏற்படுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் சின்னச்சாமி. வயது இருபத்தி ஆறு. அவரது மனைவி அகிலா. வயது இருபத்தி மூன்று. குழந்தை தற்போது வேண்டாம் என தற்காலிகமாக தள்ளிப்போட்டார்கள், வருடம் மூன்று உருண்டோடி விட்டது. சின்னச்சாமியுடன் அவரது தந்தை சாமிமுத்துவும், அன்னை தமிழ்மணியும், இளைய சகோதரி பூர்ணிமாவும், இளைய சகோதரர் சகாதேவனும் வசித்து வந்தார்கள்.

சின்னச்சாமி திருநகரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் புவியியல் பாடம் மற்றும் கணிதம் சொல்லித்தரும் ஆசிரியர். அவரது மனைவி அகிலா அதே பள்ளியில் வரலாறு மற்றும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை. பூர்ணிமா மதுரையில் ஆயுர்வைசியா கல்லூரியில் இரண்டாம் வருட இயற்பியல் துறை படித்து வந்தார். சகாதேவன் தல்லாகுளத்தில் மின்சாரத் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகிறது. சாமிமுத்துவும் தமிழ்மணியும் திருநகரில் உள்ள சின்னச்சாமி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

தேன்நிலவுக்காக சென்ற வருடம் திட்டமிட்டபடி இந்த வருடம் கோடை கால விடுமுறையில் எகிப்து மற்றும் பெரு நாடுகளுக்குச் செல்ல தீர்மானித்தார் சின்னச்சாமி. அதற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் முறையாக செய்தார். அகிலா மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். மதுரையும், திருநெல்வேலியும், கன்னியாகுமரியும் மற்றும் சென்னையும் மட்டுமே சுற்றிப்பார்த்து இருந்த அகிலாவுக்கு எகிப்து என்றதும் மிகவும் கொண்டாட்டமாக இருந்தது. பிரமிடுகளின் பிரமிப்பை நேரில் காணும் ஆவல் அதிகமானது. பெரு நாட்டிற்குச் செல்வதில் அத்தனை விருப்பமில்லை, இருந்தாலும் தனது கணவருடன் தனியாய் இந்த விடுமுறையினை கழிக்கப் போவதில் மகிழ்ச்சியாக இருந்தது. சின்னச்சாமியும் எகிப்து மட்டும் பெரு செல்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தார். சில வருடங்களாக எகிப்து நாட்டிற்கும் பெரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்தார்.

மழை விழ ஆரம்பித்தது. அனைவரும் வீட்டில் ஒரு அறையில் அமர்ந்து இருந்தார்கள். தொலைகாட்சி துண்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. சாமிமுத்து கேட்டார்.

''எப்போடா பிளைட்டு''

''நாளன்னைக்கு காலையில எட்டு மணிக்குப்பா''

''எல்லாம் எடுத்து வைச்சாச்சா''

''எடுத்து வைச்சாச்சுப்பா''

''எடுத்து வைச்சதெல்லாம் திருப்பி கீழ எடுத்து வைச்சிடுங்க, இப்போ போக வேண்டாம்''

''என்னப்பா திடீருன்னு இப்ப சொல்றீங்க''

''கொல்கத்தாவில நிலைமை சரியில்லை, அதனால நீ சொன்ன மாதிரி டிசம்பர்ல போகலாம்'''

'அப்பா, நாங்க போகப் போறது எகிப்து நாட்டுக்கு''

''மறந்துட்டேன்பா, நீ கொல்கத்தாவுக்குப் போகனும்னு சொன்னியே அதான் சொன்னேன்''

''அப்பா நான் சொன்னது பஞ்சாப்புக்கு, அங்கதான் இந்த டிசம்பர்ல போகனும்னு சொன்னேன்''

''வர வர எல்லாம் மறந்துட்டே வருதுடா''

''இனி உங்களுக்கு நீங்க வைத்தியம் பார்க்க வேண்டியதுதான்''

அனைவரும் சிரித்தார்கள் சாமிமுத்து உள்பட. ஒவ்வொருவரும் தனக்கு இதுதான் வேண்டும் என குறிப்பு எழுதிக் கொடுத்தார்கள். சந்தோசமாக வாங்கிக்கொண்டார் சின்னச்சாமி. அகிலாவுக்கு இரண்டுதின இரவுகள் இப்பொழுதே கழியாதா என்று இருந்தது. இவர்களின் இனிய வரவை நோக்கி எகிப்து உற்சாகமாகிக் கொண்டு இருந்தது.

(தொடரும்)