Wednesday 4 February 2009

லெமூரியாவும் அட்லாண்டிஸும் - அத்தியாயம் 1 தொடர்ச்சி.

காபி ரொம்ப சூடாத்தான் இருந்தது. அப்படியே சூடான காபியை குடிச்சதும் நாக்கு சுட்டுக்கிட்டது. ஸ்... சத்தம் கேட்டதும் பதறிப்போய் வீட்டுக்காரி ஓட முடியாம ஓடிவந்துட்டா. 'பாத்து குடிக்கப்படாதோ' அப்படினு சொல்லிட்டு டம்ளரை வாங்கிட்டுப் போனா. நாக்கு சுர்னு சுட்டுக்கிட்டே இருந்தது. அப்படியே அந்த ரங்கநாதனை பார்த்துட்டே இருந்தேன். அப்பத்தான் எனக்கு ஒரு யோசனை தோணிச்சி. இப்ப எழுதறப்ப எல்லாம் வேகமாக எழுத முடியறதில்லை, வரிக்கு வரி தகினதத்தோம் போடுது. சொல்ல சொல்ல யாராவது எழுத மாட்டாங்களானு அப்படியே அந்த வானத்தையே பார்த்துட்டு இருந்தேன். அப்பத்தான் தெரிஞ்சிச்சி, மாலை நேரம் ஆயிருச்சினு. அப்படியே எழுதுறதை எழுதாம எடுத்து வைச்சிட்டு போய் ஸ்நானம் பண்ணிக்கிட்டேன். வீட்டுக்காரியும் ஸ்நானம் பண்ணி தயாரா இருந்தா. 'போலாமா' னு கேட்டுக்கிட்டே வீட்டை பூட்டிட்டு நானும் வீட்டுக்காரியும் ஸ்ரீரங்கநாதனை சேவிக்க கிளம்பினோம்.

என்னை பத்தி அறிமுகம் சொல்லலை, நான் யாரோனு நினைச்சிட்டு இருப்பீங்கதான. என் பேரு தேவநாதன், எல்லோரும் நாதா நாதானு கூப்பிடுவாங்க, நீங்களும் அப்படியே கூப்பிடுங்க, என்னோட வீட்டுக்காரி பேரு தேவநாயகி, அவளை நாயகி நாயகினு கூப்பிடுங்க. மெல்ல நடந்து கோபுர வாசலை அடைஞ்சோம்.

மலர்கள் எல்லாம் நல்லா மணம் வீசிட்டு இருந்தது, அப்படியே மல்லிகைப்பூ வாங்கி வீட்டுக்காரிக்கு வைச்சி விட்டேன். அவளும் வெட்கத்தில சிரிச்சா. நானும் சிரிச்சேன். மெல்ல பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சதும் 'ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்' அப்படினு ஆண்டாள் பாசுரம் மெல்லியதா காதுல விழுந்தது. இப்ப எல்லாம் திருப்பாவை எல்லாம் மறந்துட்டு வருது எனக்கு.

'நீங்க இப்ப எல்லாம் பக்தி பாடலை எல்லாம் கேட்கறதில்லைன்னா' அப்படினு வீட்டுக்காரி சொன்னதும் 'நீ பாடேன், நான் தினமும் கேட்கறேனு' சொன்னதும் அந்த கோவில் பிரகாரத்தில் கம்பர் அரங்கம்னு ஒன்னு இருக்கு, அது பக்கத்தில நின்னு 'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள்' னு பாட ஆரம்பிச்சிட்டா. அவ பாடினதை கேட்டதும் கூட்டம் கூடிருச்சி. எல்லாரும் சேர்ந்து பாட ஆரம்பிச்சிட்டாங்க. நானும் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டேன். முப்பது பாசுரத்தையும் அத்தனை அழகா பாடினா. எல்லோரும் 'மாமி ரொம்ப நல்லா பாடினேள்'னு பாராட்டிட்டு போனாங்க. நான் ஒவ்வொருத்தரா போனப்பறம் அவகிட்ட போய் 'தேனாட்டம் இருந்தது நாயகினு' வார்த்தை வராம சொன்னேன். அவ கண்ணுல இருந்து பொல பொலனு கண்ணீர் கொட்ட ஆரம்பிச்சிருச்சி. 'அந்த ரங்கநாதர் கேட்டுருப்பாரோன்னா' என நா தழுதழுத்தாள். எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை, இருந்தாலும் ஒரு நம்பிக்கையில நிச்சயம் கேட்டுருப்பார்னு சொன்னதும் அவ முகம் மலர்ந்தது.
ஸ்ரீரங்கநாதனை சேவிச்சோம். 'ஏன்னா அவா கேட்டுருப்பானு எப்படி சொல்றேள்'னு கேட்டா. 'உன் குரலை கேட்காம அவா எப்படி இருப்பா'னு சொன்னேன். 'நீங்க பொய் சொல்றேள்னா, என்னோட எல்லாரும்தானே பாடினா'னு சொன்னா. 'அசடே உன் குரல் மட்டும்தான் என் காதுல விழுந்தது'னு சொன்னதும் 'அப்படின்னா அவா கட்டாயம் கேட்டுருப்பான்னா' னு அவளுக்கு நம்பிக்கை வந்தது. அப்படியே பிரகாரத்தில ஓரிடத்தில உட்கார்ந்தோம்.

'புதுசா என்ன கதை எழுதப் போறேள்' னு கேட்டு வைச்சா. 'என்ன எழுதப் போறேன் நானு, எதாவது ஒரு ஜீவனைப் பத்தித்தான் எழுதனும்' னு சொன்னதும் கோபுர தூணையெல்லாம் பாத்துட்டு இருந்தா. என்னோட நாலு கதையும் படிச்சிட்டு நல்லா இருக்குனு பாராட்டின மகராசி அவ. என்னோட கதை அவளுக்கு மட்டும்தான் தெரியும். பெத்த புள்ளைகளுக்குக் கூட கதையைப் பத்தி ஒரு மூச்சும் விடல. 'இந்த வாட்டி மனுசாளைப் பத்தி எழுதுங்கோண்ணா' னு சொன்னதும் எனக்கு பகீருன்னு ஆயிருச்சி.

மனுசாளைப் பத்தி என்ன எழுதப் போறோம், எல்லாம்தான் எழுதிட்டே இருக்காங்கனு சொன்னேன். 'இல்லைண்ணா மனுசாளைப் பத்தி எழுதுங்கோ'னு திரும்பவும் சொன்னா. ஐஞ்சாவது எழுத்து மனுசாளைப் பத்தி எழுதனும் போல இருக்குனு சொல்லிட்டு, ஆனா என்னால வேமா எழுத முடியறதில்ல, யாராவது நா சொல்ல சொல்ல எழுதினா நல்லா இருக்கும்னு என் யோசனையை சொன்னேன். அதுக்கு அவ 'உங்களால எப்ப எழுத முடியாத நிலை வருதோ அப்போ சொல்லுங்கண்ணா, நான் எழுதுறேன், அதுவரைக்கும் நீங்களே கைப்பட எழுதுங்கோண்ணா' னு சொன்னதும் எனக்கு புதுத் தெம்பு வந்த மாதிரி இருந்திச்சி. பிரசாதம் அங்கேயே சாப்பிட்டோம். நீங்களும் சாப்பிடறீங்களா?

(தொடரும்)

லெமூரியாவும் அட்லாண்டிஸும் - தொடர்கதை

அத்தியாயம் 1

அழகிய கிராமம் அது. அவ்வளவுதான் அந்த கிராமத்தைப் பற்றி சொல்ல முடியும். இதற்கு மேற்கொண்டு சொல்லனும்னா கண்ணீர் முட்டிக்கொண்டு வந்து நிற்காம எழுதும் தாளினை அழிச்சிப் போட்டுரும். போன வருசம் அங்கு போய் இருந்தேன். அப்பொழுது எனக்கு மனதில் ஏற்பட்ட வலியை என்னனு சொல்றது. மெளனமாக இருந்துட்டு மெளன அஞ்சலி செலுத்திட்டு வந்துவிட்டேன்.

இன்னைக்கு இந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்துகிட்டு சாலையில் செல்லும் வாகனங்களையும், மனிதர்களையும், வானத்தில் பறக்கும் பறவையையும், காற்றினையும், அந்த ஸ்ரீரங்கநாதர் குடிகொண்டிருக்கும் கோபுரத்தையும் பார்த்துக்கிட்டு பொழுதைப் போக்கிக்கிட்டு இருக்கேன். அப்பப்போ மனதில் தோணுறதை எழுதி அதனை பத்திரமாக பாதுகாத்துட்டு வரேன்.

இந்த எழுத்து இப்போ எனது ஐந்தாவது எழுத்து. எனக்கு அறுபத்தி ஐந்து வயதிருக்கும், அப்போ எழுத ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஒரு கதை என எழுதி வரேன். அதற்கு முன்னர் எதுவும் எழுதத் தோணலை. எதையாவது படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் மனதிற்கு பிடித்து இருந்திச்சினா அதனை அப்படியே சேகரித்து வைச்சிருவேன்.

என் வீட்டுக்காரி 'இதெல்லாம் எதுக்கு' எனக் கேட்கும்போது 'நம்ம பிள்ளைகளுக்கு உதவும்னு' சொல்லி அவளை சமாதானப்படுத்தி விடுவேன். 'பேப்பர்காரனுக்கு போட்டாக்கா ஏதாவது தேறும்னு சொல்வாள், நீ போட்டுருக்க நகையை வித்தாக்கூட இந்த பேப்பர் எல்லாம் கிடைக்காது' னு நான் சொன்னதும் நகையைப் பாதுகாக்க வேண்டி என்னை இந்த பேப்பர்களை எல்லாம் பாதுகாக்க வைச்சிட்டா. அப்படி பரண்மேல போட்டு வைக்காம என் அறையெல்லாம் அடுக்கி வைச்சிருக்கிற விசயங்களை திரும்ப எடுத்து பார்க்கிறதுல்ல ஒரு தனி அலாதிப் பிரியம் வந்து சேர்ந்துரும்.

நம்ம பிள்ளைகளுனு சொன்னதும்தான் எனக்கு அவங்களைப் பத்தி ஒரு வரியாவது சொல்லனும்னு தோணுது. இரண்டு பையன், இரண்டு பொண்ணு, எல்லோருக்கும் திருமணம் நடத்தி வைச்சிட்டேன். அற்புதமா வாழ்ந்துட்டு இருக்காங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். அதுக்கு மேல அவங்களைப் பத்தி சொன்னா எனக்கு கை கால் எல்லாம் தழுவறதுக்கு எவரும் இல்லாம, உரிமையா சத்தம் போட்டு பேச முடியாம இருக்கற நிலையை நினைச்சி பேனாவை தூக்கிப் போட்டுட்டு பேசாம உட்கார்ந்துருவேன். அதனால வேண்டாம்.

இதோ காபி கொண்டு வந்து வைச்சிட்டு போறாளே, இவதான் என் வீட்டுக்காரி. இப்போ அவளுக்கு அறுபத்தி எட்டு வயசாயிருச்சி. எப்பவும் குறையாத அன்பு. எங்க வீடு எப்படி இருக்கும்னு சொல்லனும்னா உங்க வீடு எல்லாம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்னு நினைச்சிக்கோங்க, அப்பதான் என்னை நீங்க எல்லாம் ஒரு நாள் பார்க்க வரப்போ உங்க வீட்டுல இருக்கறமாதிரி உணர்வீங்க. வீட்டுக்காரியைப் பத்தி ரொம்ப புகழ்ந்தா, 'வீட்டுல எலி, வெளியில புலி' னு சிரிப்பீங்கதான. ம்... இருக்கட்டும்.

முதன் முதல்ல நான் எழுதின கதை ஒரு நாயைப் பத்தி எழுதினேன். அவ்வளதான் சொல்ல முடியும், வேணும்னா எங்க வீட்டுக்கு நீங்க வந்தா எடுத்து காட்டுறேன். இரண்டாவது கதை ஒரு ஆட்டைப் பத்தி எழுதினேன். அப்புறம் மூணாவது கதை கோழியைப் பத்தி எழுதினேன். நாளாவது கதை மாட்டைப் பத்தி எழுதினேன். ஒவ்வொரு கதையும் பத்துப் பக்கம் மட்டும்தான் எழுதி இருந்தேன். அதுல எல்லாம் முற்றும்னு போட்டு வைச்சதுக்கு அப்புறம் தான் வேறு வேலை செய்யப் போவேன். இப்ப எழுதற கதையில முற்றும்னு போட முடியாது. வேறு வேலை செய்ய போகவும் முடியாது. உங்ககிட்ட அப்பப்போ பேசிட்டே இருக்கப் போறேன். காபி குடிக்கப் போறேன், நீங்களும் குடிக்கிறீங்களா?

(தொடரும்)

Tuesday 6 January 2009

அறுபத்தி நான்காம் மொழி - தொடர்கதை

1.

பிறந்து வளர்ந்தபோது ங்கா சொல்லாமல் வளர்ந்த குழந்தை. மேலும் வளர்ந்தபோதும் ம்மா என்று சொன்னதே இல்லை. பள்ளிக்குச் சென்று சேர்த்தபோது உன் பெயர் என்ன என இவனைக் கேட்டபொழுது 'மிங்கி மிங்கி பா' என்று மட்டுமே சொன்னது. ஆனால் நாங்கள் வைத்ததோ நாவரசன். இன்று நாவரசனுக்கு இருபது வயதாகிறது. மிங்கி மிங்கி பா வைத் தவிர வேறு எதுவுமே பேசுவதில்லை. நாங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது. சாதாரணமானவனாகவே இருந்தான். பள்ளிக்குச் சென்றபோது பிறர் இவனைக் கேலி செய்ததால் நாங்கள் வலுக்கட்டாயமாக இவனை பள்ளிக்குச் செல்லாமல் நிறுத்திவிட்டோம்.

யார் என்ன கேட்டாலும் மிங்கி மிங்கி பா மட்டுமே. எத்தனையோ மருத்துவர்களை பார்த்தாகிவிட்டது. எந்த குறையும் இல்லை எனச் சொல்லிவிட்டார்கள். சிறு வயதாக இருக்கும்போதே பேச்சுப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றோம். அங்கே அவர்கள் பேச இவன் பார்த்துக் கொண்டே இருப்பான், ஆனால் அவர்கள் சொல்வது போல சொல்லவும் மாட்டான். ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் எனக் கேட்டபோது மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொல்வான். அவர்களால் எதுவும் செய்ய இயலாது என கூறிவிட்டார்கள். வேண்டாத கோவில் இல்லை. எப்படியாவது இவனை பேச வைத்துவிடு என எத்தனையோ விரதம் இருந்துவிட்டேன்.

முதலில் எரிச்சலாக இருந்த எங்களுக்கு பின்னர் பழகிப் போனது. இப்பொழுதெல்லாம் எதையுமே கேட்பது இல்லை. எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என ஒருநாளும் வந்து கேட்டதும் இல்லை. எழுதப் பழகிக்கொண்டாலாவது எழுத்தில் மூலம் கேட்கட்டும் என எழுதச் சொல்லிக்கொடுத்தோம். ஒரு எழுத்தையும் படிக்காமல் சரியாக மிங்கி மிங்கி பா மட்டும் படித்துக் கொண்டான். எழுத்து மாற்றி எழுதவே மாட்டான். மிங்கி என்பதை அம்மா என சொல்லிக் கொடுத்திருக்கலாமோ என சில நேரங்களில் எனக்குத் தோன்றும். அவன் அம்மா என எழுதியாவது நான் பார்த்திருப்பேன். எங்களுக்கு மேலும் சில குழந்தைகள் இருந்ததால் இவனைப் பற்றிய கவலை அதிகம் துரத்தியதில்லை.

எந்த வேலைக்குச் செல்வான் எப்படி வாழ்வான் என இருந்தால் சரியாக பதினாறு வயதானபோது எங்கள் ஊருக்கு அருகாமையில் இருந்த ஒரு உடல்நலமற்றோர் காப்போர் இல்லத்துக்குச் சென்று அவனாகவே வேலைக்குச் சேர்ந்துவிட்டான். இதை என் கணவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னால் என்ன கேட்க முடியும்? மிங்கி மிங்கி பா என்று மட்டுமே பதில் சொல்லப் போகிறான். ஆனால் நான் அவன் வேலை சேர்ந்த இடத்தில் சென்று விசாரித்தேன். மிங்கி மிங்கி பா என்று மட்டுமே சொன்னதாக சொன்னார்கள். அவனது அம்மாதான் நான் என சொல்லி அவன் மனவளர்ச்சி குன்றியவன் இல்லை என்று மட்டும் சொன்னேன். என் கணவர் இதற்கு முன்னரே இதை சொல்லியிருக்க வேண்டும், எங்களுக்குத் தெரியும் என்றே சொன்னார்கள்.

இப்படியாய் இருந்த நிலையில் ஒரு பெண் இவனைப் பார்த்து மிகவும் நேசமாக சில நாட்கள் பழகி வருவதாக பக்கத்து வீட்டு ஜெயராணி நேற்றுதான் சொல்லிவிட்டுப் போனாள். எனக்கு மனதில் சின்ன ஆசை பிறந்தது. ஒருவேளை அந்தப் பெண் இவனுக்குப் பேச கற்றுக்கொடுத்துவிடலாமே எனத் தோன்றியது. யார் அந்தப் பெண் என்று விசாரிக்கத்தான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

(தொடரும்)