Thursday 16 October 2008

புற்றுநோய்

புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.

Wednesday 15 October 2008

பேரின்பத் தழுவல்கள் நிறைவுப் பகுதி (9)

பொய்யென சொல்ல ஆரம்பித்ததும் அதில்
மெய்யும் இருக்கும் என்றே நீயும்
தாயாய் காத்து இருந்தாய் நானும்
சேயாய் விளையாடி விட்டேன்

இருநிலை வைத்ததன் நோக்கம் மனம்
ஒருநிலை எவர்கொள்வார் என்றே அறியவோ
பலநிலை பார்த்தபின் பழிசொல்லும் குணமற்று
தவநிலை எய்திட விரைந்தேன்

நடந்திடும் செயல்களில் எல்லாம் நீயென
கிடந்து உழலும் மனம் கொண்டதும்
மடிந்து எழும் மானிட பிறவிகள்
நொடிந்து போகாது இருத்திடுவாய்.

இருக்கிறாய் என்றே உரக்கச் சொல்கிறேன்
உருக்கிய உயிரை உனதென தருகிறேன்
தெளிவாய் சிந்தையில் ஒளிர்வாய் என்றென்றும்
அளிப்பாய் ஓரருள் யாவர்க்கும்.

பாதைகள் பலவென போடச் சொல்லி
போதையில் அமிழ்த்தி விட்டது போதும்
உனை அடையும் வழியானது ஒன்றேயென
வினை தீர்த்து சொல்லிடுவாய்!

முடி ரொம்பத்தான் அழகு

''ஏண்டா போய் முடிவெட்டிட்டு வரதுதானே, இப்படி பரட்டையாட்டம் முடிக்கு எண்ணெய் தேய்க்காம சீவாம இப்படியா வெயிலுல அலைஞ்சிட்டுத் திரிவ'' அம்மா ஏகநாதனிடம் சத்தம் போட்டார்.

''எனக்கும் உன்னைப்போல முடியை வளர்க்கனும்னு ஆசைம்மா, பேசாம இரேன்''

''சொன்னா கேளுடா, போய் முடியை வெட்டிட்டு வா, முடி ரொம்ப இருந்தா ஜலதோசம் பிடிச்சிக்கப் போகுது''

''இத்தனை நாளு பிடிக்காத ஜலதோசம் இன்னைக்காப் பிடிக்கப் போகுது நீ வேலையப் பாரும்மா''

''உங்க அப்பா வரட்டும் அவரைக் கூட்டிட்டுப் போய் வெட்டிவிடச் சொல்ரேன்''

''அவரே முடியை ஒழுங்கா வெட்டுரதில்லை, இதுல எனக்குத் துணையா அனுப்புறியா, அவருக்கு முடியை வெட்டச் சொல்லிட்டு நான் வேடிக்கைப் பார்த்துட்டு இருப்பேன்''

''நீ முடியை வெட்டாம வீட்டுக்குள்ள வந்த உனக்கு சாப்பாடு இல்லை சொல்லிட்டேன்''

''சாப்பாடு நீ போடாட்டா எதிர்த்த வீட்டு பாட்டி வீட்டுல சாப்பிட்டு போறேன்''

''அம்மா கூட பேசாதடா, எதிர்த்த வீட்டுல போய் சாப்பிடுவானாம்''

''பேசாதேனு சொல்லாதம்மா, நாளைக்கு வெட்டிட்டு வரேன்''

ஏகநாதனுக்கு முடியை வெட்டுவது என்றால் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை. ஒவ்வொருமுறையும் நன்றாகவே வளரவிட்டு பின்னர் அம்மாவுடன் சண்டையிட்டு வெட்டிக்கொண்டு வருவது வழக்கம். இந்த முறையும் அவ்வாறே சண்டையிட்டுவிட்டு மனதில்லாமல் முடியை வெட்டச் சென்றான். முடியை வெட்டிக்கொண்டு ஆற்றினில் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டு இருக்கையில் ஒரு முனிவர் போல் தோற்றம் கொண்டவர் மரத்தில் கீழ் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர் அருகில் சென்றான் ஏகநாதன்.

''உங்களை இதுக்கு முன்னமே இங்கே பார்த்ததில்லையே''

''எப்பவும் இங்கதான் நான் வந்து உட்கார்ந்திருப்பேன், நீ என்னைப் பார்த்திருக்க மாட்ட, என்ன விசயம் சொல்லு''

''நீங்க இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கீங்க, தாடியும் பெரிய தாடியா இருக்கே, முடி வெட்டுறதில்லையா அதுவும் ஜடைவிழாமே நல்லா இருக்கே''

''நீட்டலும் மழித்தலும் வேண்டா, அது அதுபாட்ட வளர்ந்துட்டுப் போகுது, விழுந்துட்டுப் போகுது''

''எனக்கும் ஆசைதான், ஆனா முடியை வெட்டச் சொல்லி வற்புறுத்துராங்க''

''வெட்டமாட்டேனு வளர்த்துப் பாரு அப்புறம் வெட்டச் சொல்ல மாட்டாங்க, நான் சின்ன வயசில இருந்து இதுவரைக்கும் முடியை வெட்டினது இல்லை''

''நீங்க கொடுத்து வைச்சவருதான்''

''பேப்பர் எல்லாம் படிக்கிறது உண்டா?''

''இல்லையே''

''அறிவியலுல ஆர்வம் இருக்கா''

''அது எதுக்கு''

''ரத்தம் மூலம் உடலுல என்ன என்ன இருக்குனு அறிய முடியறதைவிட முடியை வைச்சி நம்ம உடலுல என்ன என்ன அப்படினு ஆதியில இருந்து சொல்லிரலாம் அதுக்கான ஆய்வு முறையை கண்டுபிடிச்சி இருக்காங்கலாம்''

''மரத்துக்கீழ உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்கிறீங்களோ''

''இந்தா பேப்பரை படிச்சிப் பாரு, அறிவியல் விசயம் தெரியும். மூடவிசயம்னு சொல்லப்படற செய்வினை செய்றதுக்குக் கூட முடியை உபயோகிப்பாங்க தெரியுமா''

''அதுதான் இவ்வளவு நீளமா முடியை வளர்த்து வைச்சிருக்கிங்களா''

''நீளமான முடி நிறைய உயிரியல் விசயங்களை அடக்கி வைச்சிருக்குமாம், அதனால என்னோட சின்ன வயசு கால முதல் இன்னைக்கு வரைக்கும் என்ன இருந்ததுனு சொல்லிரலாம், எப்படி சாப்பிட்டாங்க, என்ன சாப்பிட்டாங்கனு கூட இந்த முடியில விசயம் மறைஞ்சிருக்குமாம்''

''அப்ப ஏன் மொட்டை போடுறாங்க''

''எல்லாம் தெரிஞ்சிருச்சினு வைச்சிக்கோ அகங்காரம் வந்துரும். முடிதான் ஒருத்தருக்கு அழகு. அப்படி அகங்காரத்தை தொலைக்கத்தான் மொட்டை போடச் சொல்றதா சொல்வாங்க, வளருர முடிதானே அதான் மொட்டை போடறதா சொல்வாங்க''

''இனி நான் முடியை வெட்டவே மாட்டேன், எனக்கும் உயிரியல் விசயங்களை இந்த முடி அடக்கி வைக்கட்டும்''

''தானா கொட்டிராம பார்த்துக்கோ''

''அட பாவிகளா'' ஏகநாதன் சொல்லிவிட்டு வேகமாய் ஓடினார் முடி திருத்தும் கடையில் தனது முடியைத் தேடி!