Tuesday, 22 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 18

நீலகண்டனின் இறுதிச் சடங்கில் பலரும் கலந்து கொண்டனர். பரமேஸ்வரனும், சிவநாதனும் கலந்து கொண்டார்கள். கதிரேசனின் அன்னையும், தாத்தாவும் கலந்து கொண்டார்கள். இறுதிச் சடங்கு முடிந்த கணமே அனைவரும் அவரவர் ஊருக்குத் திரும்பினார்கள். மூன்றாம் நாள் காரியம் முடியும் வரை கதிரேசனும் அவனது அம்மாவும், தாத்தாவும் அங்கே தங்க வேண்டியதாகிவிட்டது. பார்வதிக்குத் துணையாக செல்லாயி இருந்தார். மூன்றாம் நாள் காரியம் முடிந்து புளியம்பட்டிக்கு அம்மா, தாத்தாவுடன் திரும்பினான் கதிரேசன்.

புளியம்பட்டியில் கதிரேசனிடம் எதிர்காலம் குறித்துச் சொல்லுமாறு சிலர் வீட்டிற்கு வந்து சென்றார்கள். செல்லாயிக்கு கோபமாக வந்தது. தனது மகன் சாமியார் இல்லை என சொல்லியும் வம்பாக வந்து செல்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிகவும் வாடியது. சில தினங்களாகவே இவ்வாறு நடக்க கதிரேசனிடம் பேசினார் செல்லாயி.

''ஏன்பா, அந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண சம்மதிக்குமா?'' என்றார். ''அந்த தாத்தா செத்துப் போனது எனக்கு கஷ்டமா இருக்குமா, அந்த பொண்ணு சம்மதிச்சா என்ன, சம்மதிக்காட்டா என்ன, இப்ப எதுக்கும்மா அந்த பேச்சு'' என்றான் கதிரேசன். ''அதுக்கில்லைப்பா, நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வருமா?'' என பேச்சை நிறுத்தினார் செல்லாயி. ''வராமலே போகட்டும்மா, இப்போ எதுக்கு அந்த கவலை, பாவம் அவங்களே கவலையில இருக்காங்க, அங்கேயிருந்து இங்கே வந்ததும் ஏன்மா இந்த கவலை'' என்றான் கதிரேசன்.

செல்லாயி எழுந்து கொண்டே ''இருக்கற என் உசிருப் போயிரக்கூடாதேனுதான்ப்பா'' என்ரார். இதைக் கேட்ட கதிரேசன் ''அம்மா, ஏன்மா இப்படி உடைஞ்சி போற, நான் தான் சொல்லிட்டேன்ல, குடும்ப வாழ்க்கையிலே இருப்பேனுட்டு'' என்றான். ''அந்த பொண்ணு கிடைக்காட்டாலும்மா'' என்றார் செல்லாயி. கதிரேசன் அமைதியானான். ''சொல்லுப்பா'' என்றார் செல்லாயி. ''என்னம்மா சொல்ல சொல்ற? அந்த பொண்ணு இல்லாட்டாலும் தான்'' என்றான் கதிரேசன். வேதனையிலும் வேதனை வந்து சேர்ந்துவிடக் கூடாதென விவரமாகத்தான் சொன்னான் கதிரேசன். ஆனாலும் செல்லாயிக்கு நம்பிக்கையில்லை, மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

விடுமுறை கழிந்து கல்லூரிக்குச் செல்லும் தினம் வந்ததும் தனது அன்னையிடம் தைரியம் சொன்னான் கதிரேசன். ''நீதான்பா என் உலகம்'' என்றார் செல்லாயி. கதிரேசனின் கண்கள் கலங்கியது. ''உன் சந்தோசம்தான்மா என் சந்தோசம், இனிமே என்னோட நடவடிக்கையில கவனமா இருப்பேன்மா, நீ கவலைப்படாதேம்மா, என்னோட நல்லதுக்குத்தானே நீ எல்லாம் செய்வ, ஊர்க்காரங்க என்னை சாமியாராப் பார்த்தாக்கூட நீ சந்தோசப்படும்மா'' என கிளம்பும் முன்னர் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினான் கதிரேசன். ''ரொம்ப சந்தோசம்பா'' என்றார் செல்லாயி.

கல்லூரித் தொடங்கியது. நீலகண்டனின் வீட்டுப் பக்கம் செல்லும்போதெல்லாம் தன்னை அறியாமல் அங்கேயே சில நிமிடங்கள் நிற்பான் கதிரேசன். கண்களில் கண்ணீர் கொட்டும். ஆதரவில்லாமல் நின்றபோது ஆதரவு தந்தவர், அன்பு உறவுகளைத் தந்தவர். தன்னால் முடியாதபோதும் ஓரிடம் காட்டிச் சென்றவர். நீலகண்டன் தன்னிடம் கேட்ட 'சிவனை, தமிழை மறந்துட்டியோ' எனும் கேள்வி மனதைச் சுட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் சிவன் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன். அன்றைய தினம் மாலையில் சிவநாதனும் ஆலயத்திற்கு வந்திருந்தார். கதிரேசன் சிவநாதன் வந்ததை கவனிக்கவில்லை. அதே ஆலயத்தில் வைஷ்ணவி தனது தோழிகளுடன் வந்து இருந்தாள். வழிபட்டு முடித்த மறுகணம் கதிரேசன் பாடினான்.

''மொழியில்லா உலகத்திலே நீயும் மொழியாய் இருந்தாய்
வழியில்லா பாதைதனிலே வழியாய் வந்தாய்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் நீயென என்றே
சேதியும் வந்ததென்ன சொல்சிவனே.''

இந்த பாடலைக் கேட்டவுடன் சிவநாதன் கதிரேசனை நோக்கி விரைந்தார். ''பாடாதேனு சொன்ன பிறகும் நீ பாடிக்கிட்டேதான் இருக்க'' என்றார் சிவநாதன். கதிரேசன் மெளனமாக நின்றான். ''இனிமே பாடாதே'' என்றார் சிவநாதன். ''சார் என்னைத் தப்பா நினைக்காதீங்க, நான் பாடறப்போ நீங்க கேட்காம இருக்க முடியுமா, இந்த கோவிலுனு இல்லை, ரொம்ப இடத்திலே பாடிக்கிட்டே இருக்கேன்'' என்றான் கதிரேசன். சிவநாதன் கதிரேசனை முறைத்துப் பார்த்தார். ''ம் பாடு'' எனச் சொல்லிவிட்டு சிவனை நோக்கி வணங்கினார். ஆனால் அவர் இன்று எதுவும் பாடவில்லை. வணங்கியவர் கதிரேசனை நோக்கி ''ம் பாடு'' என்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


இதையெல்லாம் வைஷ்ணவியும் தோழியரும் கவனித்தார்கள். பாடி முடித்த கதிரேசனிடம் ''இந்த பாட்டு எப்படி நல்லா இருக்கு, அதுமாதிரி நல்லா பாட்டு எழுது, அப்புறம் பாடு, அரைகுறையா தெரிஞ்சி வைச்சிக்கிட்டு அதுவும் சொல்சிவனேனு ஏன் பாடுற'' என சொல்லிவிட்டு நகர்ந்தார் சிவநாதன். கதிரேசன் கண்கள் கலங்கியபடி நின்றான்.

வைஷ்ணவியும் தோழியர்களும் கதிரேசனிடம் வந்தார்கள். ''அவர் சொல்றபடி ஏன் அரைகுறையா தெரிஞ்சி வைச்சிட்டுப் பாடுற, நிறைய கத்துக்கிட்டு பாடு'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் கண்கள் கலங்கியபடியே நின்று கொண்டிருந்தான். இரவாகியும் கோவிலிலேயே இருந்தான். கோவில் நடை சாத்தப்போகிறோம் என்றார் குருக்கள். கோவிலை விட்டு வெளியேறினான் கதிரேசன்.

கோவிலின் வாசலில் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தாள். ''இந்தா கோவில் பிரசாதம், ஏன் அப்படியே உட்கார்ந்துட்ட, உன்னை தொந்தரவு செய்ய வேணாம்னு அங்கே உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன், விடுதிக்கு போகுற நேரம் வேற ஆகுது. என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கேன். பாட்டு சரியில்லைனு சொல்லிட்டோம்மா, அவர் சொன்னது சரிதான், நீ பேசாம சொல்பெருமாளேனு பாடு'' என்றாள் வைஷ்ணவி. ''பிரசாதம் வாங்கியவன், அதெல்லாம் இல்லை வைஷ்ணவி, எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை'' என்றான் கதிரேசன். ''அப்ப சரி'' என வைஷ்ணவி விடைபெற்றுச் சென்றாள். கதிரேசன் 'சொல்பெருமாளே' என சொல்லிப் பார்த்தான். 'சொல்பெருமானே'' பொருத்தமா இருக்குமோ என எண்ணினான்.

(தொடரும்)

Sunday, 20 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 8


8. கேசவன் பூங்கோதை


வீட்டுக்குள் அனைவரும் வந்து அமர்ந்தனர். கேசவனின் தாய் மோகனா கேட்டார்.


‘’வீட்டுல அம்மா அப்பா இல்லையா’’ 


‘’கல்யாணம் முடிஞ்சதும் சோலையரசபுரம் போய்ட்டாங்க, என்ன விசயமுனு தெரியலை’’ 


அனைவருக்கும் பலகாரங்களும், இனிப்பும் எடுத்து வைத்து உபசரித்தான். அத்தை கமலாவை வரச் சொல்லுமாறு பழனியிடம் சொல்லி அனுப்பினான் வாசன். குளிர்பானங்கள் கேட்டவர்களுக்கு கடையில் வாங்கி வைத்திருந்த குளிர்பானங்கள் தந்தான். அத்தை கமலா வந்ததும் மற்றவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்தார்கள். பூங்கோதையின் தந்தை கோபாலிடம் வாசன் பேசினான்.


‘’நாளைக்கு திருமலைக்கு கிளம்பறீங்களா’’ 


‘’ஆமாம்பா, அங்க இரண்டு நாளு இவங்களை தங்க வைச்சிட்டு அனுப்பி வைக்கலாம்னு இருக்கோம், நீங்க கூட திருவில்லிபுத்தூருக்கு ஏதோ செடி விசயமா வரதா விநாயகம் சொன்னாரு, வந்தா எங்க வீட்டுல தாராளமா தங்கலாம்பா’’ 


‘’ஆமா அப்பா, பெரியவர் விருப்பப்பட்டா உங்க வீட்டில தங்கிக்கிறோம், மலைப்பகுதியெல்லாம் போகனும்’’ 


கேசவன் வாசனிடம் அவர்களுடன் வரச் சொன்னான். அதற்கு வாசன் ஏதோ சில விசயங்களை எல்லாம் சரி பண்ணனும் அதுக்காக புதன்கிழமை கிளம்பலாம்னு சொல்லி இருக்கார் பெரியவர் என்று சொன்னதும் சரி என கேசவன் சம்மதித்தான். பார்த்தசாரதியும் விஷ்ணுப்பிரியனும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசன் அவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கமலா வாசனிடம் தனியாய் அழைத்து கேட்டார்.


‘’அம்மா சேலை எதுவும் எடுத்து வைச்சிருக்காங்களா, இருந்தா கொடு தம்பி, பொண்ணுக்குத் தரனும்’’ 


‘’தெரியலை அத்தை, அப்படி எதுவும் கொடுக்கனுமா’’ 


‘’இருந்தா பாரு, இல்லைனா பரவாயில்லை’’ 


வாசன் தேடிப் பார்த்து ஒரு சேலையை கொண்டு வந்து தந்தான்.


சேலையுடன் வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து கமலா பூங்கோதையிடம் தந்தார். பூங்கோதை அதனை வாங்கிக் கொண்டு கமலாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். பார்த்தசாரதி வாசனிடம் பேச வேண்டும் என அழைத்தார். நிலைமையை புரிந்து கொண்ட வாசன் பார்த்தசாரதியை பூஜையறைக்குள் அழைத்துச் சென்றான். விஷ்ணுப்பிரியனும் உடன் சென்றார். பார்த்தசாரதி பேசினார்.


‘’குழந்தை விசயத்தை வெளியில் சொல்லிட வேண்டாம்னு சொன்னேன், பூசாரி தாயாக நிற்கிறீயேனு சொல்றார், இதோ இப்படி துண்டு காகிதத்தில எழுதி வேற யார்கிட்டயோ கொடுத்து இருக்க’’ 


வாசன் அமைதியாய் எதுவும் பேசாமல் நின்றான். 


‘’இந்த கல்யாணம் எந்த பிரச்சினை இல்லாம நடந்துருச்சு, இனியும் பிரச்சினை இல்லாம இருக்கனும்னு நினைச்சா நீயே பிரச்சினை கொண்டு வந்துருவ போலிருக்கே வாசன்’’ 


வாசன் மீண்டும் அமைதியாகவே இருந்தான். விஷ்ணுப்பிரியன் குறுக்கிட்டார்.


‘’பதில் சொல்லுங்க வாசன்’’ 


வாசன் சற்றும் கூட யோசிக்காமல் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தை அப்படியே பார்த்தசாரதியிடம் சொன்னான். அதிர்ச்சி அடைந்தவர் தடுமாறினார்.


‘’விஷ்ணு, என்ன காரியம் பண்ணிட்ட’’ 


‘’பார்த்தா’’ 


‘’இனிமே இதுபற்றி என்கிட்ட எதுவும் பேசாத விஷ்ணு, இப்படி அநியாயமா என்னை ஏமாத்தி இப்படி அவசர கல்யாணம் பண்ண வைச்சிட்ட’’ 


வாசன் உடனடியாக சுதாரித்துக் கொண்டான்.


‘’நீங்க இப்படி பேசிக்கிட்டு இருந்தா பிரச்சினை பெரிசாயிரும், வாங்க வெளியில போவோம்’’ 


வாசன் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டினான். பார்த்தசாரதியின் உடல் நடுங்கியது. அவரது குரல் உடைந்தது.


‘’என்னை ஏமாத்திட்டல்ல, ஒரு நல்ல குடும்ப உறவு கிடைச்சதுனு விடறேன் ஆனா விஷ்ணு’’


வாசன் பார்த்தசாரதியினை சமாதனப்படுத்தினான். பார்த்தசாரதியின் முகம் வாடியது. கனவு ஒன்று நொறுங்கிப் போவதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தார். வாசனது வீட்டிலிருந்து விரைவாக பார்த்தசாரதி வெளியேறினார். அனைவரும் அவரை பின் தொடர்ந்து வெளியேறினார்கள். விடைபெற்றுக் கொண்ட பார்த்தசாரதியால் ஜோதியிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கேசவனது வீட்டினை அடைந்ததும் ஜோதியிடம் விபரம் சொன்னார். ஜோதி சந்தோசப்பட்டாள். அந்த சந்தோசத்தை சுபாவிடம் தெரிவித்தாள். சுபா விஷ்ணுப்பிரியனைத் தேடினாள். 


‘’அதெல்லாம் இல்லை, உடனே சோதனை செய்ய வேண்டும், கரு உள்ளேதான் இருக்கும் எப்படியும் இரண்டு வாரத்தில தெரிஞ்சிரும், விஷ்ணு விளையாடறார் நேத்துல இருந்தே ஒரு மாதிரிதான் இருந்தார், வரட்டும்...’’ 


அதைக்கேட்டுக்கொண்டே விஷ்ணுப்பிரியன் உள்ளே வந்தார்.


‘’சோதனை பயனளிக்காது, தேவையில்லை, நான் கருவை உருவாக்கவே இல்லை’’ 


சுபாவிற்கு பயங்கர கோபம் வந்தது. மனதை அடக்கிக் கொண்டவள் சுவரை நோக்கிய வண்ணம் நின்றாள். ஜோதி சுபாவினை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். பார்த்தசாரதி அங்கிருந்த மேசையில் தனது தலையை கவிழ்த்துக் கொண்டார். விஷ்ணுப்பிரியன் அடுத்த கட்ட திட்டமாக கேசவனுக்கும் பூங்கோதைக்கும் இந்த விசயம் சொல்வது என வாசன் குறுக்கிடும் முன்னர் அவசரமாக செயல்பட்டார். அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என கேசவனிடம் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தவர் கேசவனை உடனே சந்தித்தார். முழுவிபரங்களும் சொன்னார்.


‘’எதுக்கு இத்தனை சிரமம்’’ 


‘’முயற்சி பண்ணினது வழி கிடைக்கல, அதனால திருமண விசயத்தை நிறுத்த வேண்டாம்னு சொல்லாம விட்டுட்டேன்’’ கேசவன் சற்று அதிர்ச்சி அடைந்தான், வாசனிடம் பேச வேண்டும் என கிளம்பினான். விஷ்ணுப்பிரியன் தடுத்தார். 


‘’எதுக்கு இப்போ வீண் பிரச்சினை வாசனுக்கும் தெரியும், சொல்லிட்டேன் உங்களுக்கு திருமணம் ஆயிருச்சி புது வாழ்க்கை தொடங்குங்க நீங்களே குழந்தை பெத்துக்கோங்க’’ 


அப்பொழுது பூங்கோதை வந்தாள். விஷ்ணுப்பிரியன் விலகிச் சென்றார். பூங்கோதையிடம் கேசவன் நடந்ததை சொன்னான். கேசவன் மேல் மெதுவாக சாய்ந்தாள் பூங்கோதை.


‘’ம் இருந்துட்டுப் போகட்டும் என்னை உங்களைப் பிடிச்சிருக்கு தானே, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாம குழந்தைப் பெத்துக்கிரலாம்’’ 


‘’அப்படின்னா நீ அந்த குழந்தைய சுமக்காம போனதுக்கு வருத்தப்படலையா’’ 


‘’அந்த குழந்தையை சுமக்கனும்னு முழு மனசா இருந்து செஞ்சேன், உங்களை பார்க்கறவரைக்கும், கல்யாணம் கூட வேணாம்னுதான் சொன்னேன் ஆனா கல்யாணம் வரைக்கும் வரவைச்சி இப்ப இவர் இப்படி சொன்னா நாம பிரியனுமா’’ 


கேசவன் பூங்கோதையை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவர்களுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அறையினுள் அந்த இனிய பொழுதினிலே நுழைந்தனர். இருவரும் மனம் விட்டு எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் மேல் உயிரை வைத்தான். பூங்கோதை கேசவன் மேல் தனது உயிரை வைத்தாள். அறையின் கதவு பூட்டிக்கொண்டது. 


அதே வேளையில் வாசன் விஷ்ணுப்பிரியனின் செயல்கள் குறித்தும், மாதவி வரைந்து தந்த படம் குறித்தும் தீவிர யோசனையில் இறங்கினான். கேசவனிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணி இருந்தவனுக்கு சோலையரசபுரம் தர்மலிங்கத்திடம் இருந்து வந்த தொலைபேசியால் யாரிடமும் சொல்லாமல் வீட்டினைப் பூட்டிவிட்டு சோலையரசபுரத்திற்கு விரைவாக சென்றான். அங்கு அவனுக்காக சோதிட சாஸ்திரி நம்பெருமாள் காத்துக் கொண்டிருந்தார். 


(தொடரும்)

Friday, 18 June 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6


கல்லூரியில் நாட்கள் இனிதே சென்றது. கட்சி ஆரம்பிப்பது குறித்து தீவிர சிந்தனையாகவே இருந்தான் ரகுராமன். கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான் முதல் சிந்தனையாக இருந்தது. திராவிடர் எனும் அடையாளம் தேவையா எனும் எண்ணம் எழுந்தது. முதலில் இந்த திராவிடர் எனும் அடையாளத்தை அழித்தால்தான் ஆரியர் எனும் அடையாளமும் அழியும். பின்னர் தமிழர் எனும் அடையாளம் தேவையா என சிந்தித்தான். தமிழர் எனும் அடையாளத்தையும் ஒழித்து விடவேண்டும் எனும் எண்ணமும் அவன் மனதில் ஓடியது, இப்பொழுது இது ஒரு பிரச்சினையாகவே பேசப்படும், தமிழ் உணர்வு அற்றவன் என்றே பேச்சு எழும், ஆனால் காலப்போக்கில் இந்த விசயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் மனதில் சிந்தித்து வைத்தான்.


அதற்கடுத்ததாக சாதியைப் பற்றி சிந்தித்தான். நான் கட்சி ஆரம்பித்தால் இன்னார் சாதி என கண்டிப்பாக‌ தெரிந்துவிடும். உடனே அந்த சாதிக்காரன் என பேசுவார்கள். இவன் நம்ம சாதிக்காரன் என நாலு பேர் உடன் வருவார்கள். நமது சாதி அடையாளத்தை எப்படி அழித்துக் கொள்வது. உண்மையிலேயே உதவி வேண்டுவோர்க்கு நாம் உதவி புரிய அவன் சாதிக்காரனுக்கு மட்டும் செய்றான் எனும் பேச்சு வருமே, அதை எப்படி தடுத்து ஒதுக்குவது. சாதிக்காரன் என எவரேனும் அணுகினால் அவர்களை அருகிலேயே ஒட்டவிடக்கூடாது என நினைத்தான். ஆனால் காலமெல்லாம் மனதில் ஊறிப்போன இந்த சாதிய எண்ணத்தை எப்படி தனிமனிதரின் எண்ணத்திலிருந்து நீக்குவது என மனதில் நினைத்தபோது சந்தானலட்சுமி என்ன சாதி என்பதே தனக்குத் தெரியாமல் இருப்பது கண்டு இந்த சாதி ஒழிப்பு ஒரு சத்திய சோதனைதான் என மனம் எண்ணமிட்டது. 


சாதியை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும் என நினைத்துக்கொண்டான். இதுவும் கால மாற்றங்களினால் சாத்தியமே. முதலில் பெயர் வைக்கும்போது இந்த சாதிப்பெயர் எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் நமது எண்ணத்துக்குப் போராட முன்வர வேண்டும். முதலில் எனது கிராமத்தில் இருக்கும் சாதியப் பிரிவினைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அனைத்து மக்களும் ஒன்று என்ற எண்ணத்தோடு தனித்தனி சாதியினராய் கூட்டமாக இல்லாமல் அனைவரும் கலந்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டான். ஊரில் என்ன சொல்வார்கள் என நினைக்கும்போதே எப்போதும் தண்ணி அடித்துவிட்டு ரகளை பண்ணும் கோபிநாத் மனதில் தோன்றினார். எப்படியும் தொடங்கித்தான் ஆகவேண்டும், அதற்காக எதிர்ப்பு கண்டு அஞ்சுவதில்லை என முடிவெடுத்தான். 


கூட்டம் போட்டு பேசும்போது தலையாட்டிக் கேட்கும் மனிதர்கள் தனக்குத் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளுடன் உரசுவது என்பதுதான் தான் செய்யப்போகும் செயல் என்பதில் கவனமாக இருந்தான். ஒவ்வொரு ஊருக்கும் தன்னைப்போல எண்ணம் உடையவர்கள் எப்படி கண்டுபிடிப்பது என்பதை எல்லாம் சிந்தித்துத் தெளிந்தான். கட்சியின் பெயரை மனதில் எழுதினான். 'மக்கள் ஒற்றுமை இயக்கம்'. எவரும் ம ஒ இ என சுருக்கக்கூடாது எனத் தெளிவு கொண்டான். 


தனது எண்ணத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னதும் அவளது மனம் படபடவென அடித்துக்கொண்டது. காலம் காலமா இருந்துட்டு வரதை மாத்துரது சாத்தியமில்லையே என மனம் நினைத்தது. முதலில் தன்னை, தனது வீட்டை மாத்துவது என்பது எத்தனை கடினமான காரியம் என எண்ணினாள். அதை வெளிப்படையாகவே சொன்னாள்.


''நான் சொன்னா நீ எதுவும் கோவிச்சிக்கமாட்டீயே' எனத் தொடங்கினாள். 'ஆனானப்பட்ட காந்தியையே குறை சொல்லும் கூட்டம், ஆனானப்பட்ட அம்பேத்காரையே குறை சொல்லும் கூட்டம், நீ நினைக்கறது எல்லாம் நடக்க சாத்தியம் சத்தியமா இல்லை, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டமா, ரெண்டு மூணுனு பெத்துப் போட்டமா, அதை வளர்த்தமா, அதுக பிள்ளைகள கொஞ்சினமானு போகாம எதுக்கு இந்த பொறுப்பில்லா சனத்துக்காக‌ உன் வாழ்க்கைய வீணடிக்கிற' என நிறுத்தினாள்.


''நீ இப்படி பொறுப்பில்லாம பேசுவனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, இந்த சாதி எல்லாம் பின்னால வந்தது, இந்த தமிழ் அடையாளம் எல்லாம் பின்னால வந்தது ஒரு மொழி பேசினா அது அவங்களுக்கு அடையாளமா, ஒரு நாடுனு இருந்தா அது அவகளுக்கு அடையாளமா, நிர்வாகம் பண்றத்துக்கு பிரிச்சி வைக்கலாம், ஆனா பிரிச்சி வைச்சதனாலேயே பிரிவினை பேசக்கூடாது'' என அவளது கையைப் பிடித்தான் ரகுராமன்.


''பொறுப்பு வேற, வாழ்க்கை நிலமை வேற, ஆகாயத்துல கோட்டை கட்டுறது கனவுக்கு சரி, ஆனா அஸ்திவாரம் இல்லாம பலூன்ல வேணும்னா கோட்டை மாதிரி செஞ்சி தொங்கவிடலாம், இப்பவும் சொல்றேன் இதெல்லாம் சாத்தியமே இல்லை, அதுக்கு மீறி நீ நடந்தா உன்னோட நானும் வரேன், இனி மறு கருத்து பேசலை, எப்படி செய்யலாம்னு யோசனை மட்டும் சொல்றேன்' என ரகுராமனின் கைகளை தனது கன்னங்களில் ஒற்றிக்கொண்டாள். 


கல்லூரியில் இவனது எண்ணத்தை கேள்விபட்ட வேறு எவரும் இவனுடன் சேர்ந்து கொள்ள தயாராக இல்லை. புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி அதுக்கு அடையாளம் தேடி, நீ சொல்றதை நடமுறைப்படுத்தி வரதுக்குள்ள நாங்க கிழடாயிருவோம், அதக்கப்பறம் எப்படி பணம் சேர்க்கறது, என்றார்கள்.


பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வாழும் உலகில் எதுவெல்லாம் சாத்தியப்படும் என எண்ணும்போது இந்த பணத்தாலும் சில விசயங்கள் சாத்தியப்படுவதில்லை என்பதை எப்படி மறுக்க முடியும்? 


(தொடரும்)