Wednesday, 9 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 2

2. இயற்பியலோடு சில வார்த்தைகள்

இயற்பியல் பற்றி நினைத்துப் பார்க்கையில் எனக்குச் சொல்லித் தராத இராமமூர்த்தி ஆசிரியரும், இயற்பியல் சொல்லித் தந்த பாலசுப்பிரமணியன் ஆசிரியரும் நினைவுக்கு வருவார்கள். அறிவியலை தற்போது பல வகைகளாக பிரித்து வைத்துப் பார்த்தாலும் வேதியியல், இயற்பியல், உயிரியல் (விலங்கியல், தாவரவியல்) என இவற்றை அடிப்படையாக கொண்டு எல்லாம் விளங்கிக் கொள்ளப்பட்டன. வேதியியலும் உயிரியியலும் விளங்கிக் கொள்ளாத முடியாத விசயங்களை இந்த இயற்பியல் விளங்கிக் கொள்ள பெரும் வழி வகுத்தது எனலாம். விசை, சக்தி இவை இரண்டும் இயற்பியலை வேதியியலுக்கும் உயிரியியலுக்கும் ஆசானாக அமர்த்திக் கொள்ளச் செய்தது. தற்போது ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு எண்ணற்ற விசயங்கள் தெளிவு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது' ஆற்றலானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுபாடு அடையுமே தவிர அழிந்து போகாது என்பதை அறிந்து கொண்டவர்கள், ஆற்றலின்  மூலம் எது என நிச்சயம் கேட்கமாட்டார்கள். அப்படி ஒருவேளை கேட்பார்களேயானால் ஆற்றலின் மூலமானது ஈர்ப்பு விசை ஆற்றல் என உறுதியாக சொல்ல முடியும். இதை எந்த கண்ணோட்டத்தில், அதாவது அறிவியல் மற்றும் உணர்வுப்பூர்வமாக, நோக்கினாலும் இந்த ஈர்ப்பு விசை ஆற்றல்தான் என்பதை அறுதியிட்டுக் கொள்ளலாம்.

ஈர்ப்பு விசை ஆற்றலுக்கு மூலமாக என்ன இருந்து இருக்க முடியும் என எண்ணிப் பார்த்தால் எதுவுமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஈர்ப்பு விசை ஆற்றலுடன்  இணைந்து இருந்த ஆற்றலானது  வேதிவினை ஆற்றல். அத்துடன் மூன்றாவதாக இருந்த ஆற்றலானது  இலகுவாதல் ஆற்றல். இதனால்தான் இந்த மூன்று ஆற்றல்களையும் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் என்கிறோம்.

1. ஈர்ப்புவிசை ஆற்றல்
2. வேதிவினை ஆற்றல்
3. இலகுவாதல் ஆற்றல்

இதன் அடிப்படையில்தான் உலகம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என அறிவியலாளர்களால் இயல்பாக விளக்க முடிந்தது.

ஈர்ப்புவிசை ஆற்றலால்   வாயு ஒன்று அருகில் வந்தது, அழுத்தம் கொண்டது, ஈர்ப்பு விசை ஆற்றல், வேதிவினை ஆற்றலை எழுப்பி விட்டது, வேதிவினை ஆற்றல் வெடித்து சிதறியதுடன் இலகுவாதல் ஆற்றல் விழித்துக் கொண்டது. பிரபஞ்சம் இலகுவாகிக் கொண்டே இன்னும் இருக்கிறது.

இயக்கமற்று இருந்த ஈர்ப்பு விசை ஆற்றலால், இயக்க ஆற்றல் ஏற்பட்டு, வேதிவினை ஆற்றலால்  உருவானதுதான் ஒளி ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல். இந்த ஒளி ஆற்றலானது, மின்சார ஆற்றலுக்கு  வழி காட்டியது. வேதிவினை ஆற்றலின் கோர வடிவமே நியூக்ளியர் ஆற்றல், இதை கருவினை ஆற்றல் என சொல்வோம்.

4. இயக்க ஆற்றல்
5. ஒளி ஆற்றல்
6. ஒலி ஆற்றல்
7. கருவினை ஆற்றல்
8. மின்சார ஆற்றல்

ஈர்ப்புவிசை ஆற்றலுக்கு  இணையாக காந்த ஆற்றலையும் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த காந்த ஆற்றலானது உருவாக பல வருடங்கள் ஆனது, ஆனால் இந்த காந்த ஆற்றல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இயல்புநிலை வாழ்க்கையில் இந்த ஆற்றலானது  ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மிடம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த வெப்ப ஆற்றல்  ஒன்றே உலகம் உருவாக காரணம் என கருத வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாசுக்களும் தூசுக்களும் ஒன்றையொன்றை கவர்ந்திழுத்துக்கொண்டன. அப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின்னர் வருடங்கள் செல்ல செல்ல இறுக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

பொதுவாக எதிர்துகள் எதிர்துகளிலிருந்து விலகி ஓடும். நேர்துகள் எதிர்துகளுடன் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தபோது ஹைட்ரஜனில் கருவில் ஏற்பட்ட மாற்றம் பெரிய கரு வினையாக அமைந்து உள்ளது. இப்படி மாற்றங்கள் உருவானபோது புதிய துகள்கள் இருந்த துகள்களிருந்து எந்த வித மாற்றம் இன்றி உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அதாவது ஒரு புரோட்டானிலிருந்த்து அதே நிறையுள்ள மற்றொரு புரோட்டான். இப்படி உருவானபோது எந்த ஈர்ப்பும் இல்லாத ஒரு துகளும் உருவாகத் தொடங்கி இருக்கிறது. அப்பொழுது வெளிப்பட ஆரம்பித்த வெப்ப ஆற்றல்  ஒட்டிய அனைத்தையும் பறக்கச் செய்து இருக்கிறது.

இப்படி வெப்ப ஆற்றல்  ஒரு சின்ன தனிமத்திலிருந்து பெரிய தனிமம்வரை உருவாகியதும் இதே வினை தொடர்ந்து நிகழ்ந்து இருக்கிறது. இப்படித்தான் ஒரு சூரியன் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.

அப்படி உருவான சூரியன் என்னவாகிறது? சூரியக்கதிர்கள் யாவை எனத் தொடரலாம்.

அடியார்க்கெல்லாம் அடியார் - 16

ஒவ்வொருவராக உள்ளே சென்று உடனே திரும்பினார்கள். ஐந்து பேரையும் பேச்சுப்போட்டியில் பேசக்கூடாது என தடைவிதித்தார் சிவநாதன். அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட இவர்கள் பேசவில்லை. அனைவரிடமும் ஒரே விசயத்தை மட்டுமே சொல்லி இருந்தார். 'தலைப்பு சரியில்லைனு உங்களை பேச அனுமதிக்கலைனு நினைக்க வேணாம், உங்க நோக்கம் சரியில்லை, எப்பவுமே நோக்கம் உயர்ந்ததாக இருக்கனும்' என அவர் சொன்னதாகவே ஐவரும் சொன்னார்கள்.

கதிரேசனுக்கு தனது நோக்கம் எப்படி சரியில்லை என அவர் சொல்லலாம் என மனது துள்ளிக்கொண்டு இருந்தது. வைஷ்ணவிக்கு அவமானமாக இருந்தது. மற்ற மூவரும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வெகுவேகமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். என்ன எனக் கேட்டபோது நாங்கள் பேச இருக்கும் விசயத்தை அவரிடம் காட்டப்போகிறோம் என்றார்கள். கதிரேசனுக்கு நல்ல யோசனை என மனதிற்குப் பட்டது.

கல்லூரியில் விசாரித்தபோது இனிமேல் அவர் மனது மாறமாட்டார் என சொன்னார்கள். எனவே கதிரேசன் அந்த முயற்சியையே கைவிட்டான். மூவருடன் வைஷ்ணவியும் எழுதிக்கொண்டு போனாள். சிவநாதனின் பார்வைக்கு சென்றது. அதைப் படித்துப் பார்த்த அவர் கட்டுரைக்கு உபயோகப்படும் என சொல்லிவிட்டார். இறுதியில் அவர்கள் யாரும் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்றே அறிவுறுத்தப்பட்டார்கள்.

நோக்கம் நன்றாக இருக்க வேண்டும், கதிரேசனின் மனது ஓரிடத்தில் இல்லை. சிவநாதனை சந்திக்க அனுமதி வாங்கி அவன் மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டான். அதற்கு அவர் கதிரேசனைப் பார்த்து ''நீ அன்பே சிவம்னு மட்டும் சொல்லி இருந்தா எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனா சமண சமயம்னு எப்பச் சேர்த்தியோ அப்பவே நீ பிரச்சினை பண்றதா முடிவு பண்ணிருக்கே, எதுக்கும் பேச்சுப்போட்டியில கலந்துக்கிறவங்க எப்படி பேசறாங்கனு பார்த்துட்டு அடுத்த வருசம் முயற்சி பண்ணிப்பாரு'' என்றார்.

''சார் அன்பையும் அகிம்சையையும் போதிச்ச சமயம் அது, ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கிழைக்க நினைக்காத சமயம் அது, தமிழ் இலக்கியங்களை வளர்த்த சமயம் அது'' எனத் தொடர்ந்தவனை ''நிறுத்து'' என்றார் கோபத்துடன். கதிரேசன் நிறுத்தினான். ''அந்த காலத்தில வாழ்ந்தவன் மாதிரி பேசற, உனக்கு உண்மையிலே என்ன நடந்ததுனு தெரியுமா, கல்வெட்டு அகழ்வாராய்ச்சி இலக்கியம் எல்லாம் காரணம் காட்டப் போறியா, நீ வெளியே போ'' என சத்தமிட்டார். ''சார் அது இல்லை சார் என் நோக்கம் உயர்ந்தது சார்'' என்றான் கதிரேசன். ''நீ வெளியே போ'' என்றார் மறுபடியும். கதிரேசன் மறுபேச்சு பேசாமல் வெளியே வந்தான். நெற்றியெல்லாம் வியர்த்து இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி என யாரிடமும் பேசாமலே தினங்களை நகர்த்தினான் கதிரேசன். தேர்வும் முடிந்து ஆண்டுவிழாவும் வந்தது. விழா மிகவும் அருமையாக நடந்தது. பேச்சுப் போட்டியில் எட்டு நபர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் அருமையாக பேசினார்கள். அவர்கள் பேசிய விசயத்தின் மையக்கருத்து, தவறென எது இருப்பினும் அதை களைந்துவிட்டு நல்ல விசயங்களை மட்டுமே நிலைநிறுத்துவது என்றே இருந்தது. எதையும் சாடவில்லை, அலுத்துக்கொள்ளவில்லை, சலித்துக் கொள்ளவில்லை.

சிவநாதனின் உரை கதிரேசனை உலுக்கியது. அவரது உரையில் நுனிப்புல் மேய்வது போல விசயத்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களால் பல பிரச்சினைகள் உண்டாகிறது எனவும் எதையும் நுண்ணிய அறிவால் தெளிந்துணர்ந்த பின்னரே உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை காலம் காலமாக தொடர்ந்து செய்த பின்னரே சாத்தியமாகும் என்றவர் இன்றைய நிலையில் உடனுக்குடன் எல்லாம் செய்தியாவது பிரச்சினையே, அதை மாற்ற ஒரு எழுச்சி வேண்டும் என முடித்தார். ஆண்டு விழா முடிந்த சில தினங்களில் கோடை கால விடுமுறை வந்தது. கதிரேசன் சங்கரன்கோவில் செல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டே புளியம்பட்டியை அடைந்தான்.

(தொடரும்)

Tuesday, 8 June 2010

இது பணம் பறிக்கும் முயற்சி அல்ல

உலக தமிழ் வாசகர்களே,

எனது கனவு உலகில் உள்ள மிகவும் சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்மாலான உதவியை செய்வது என்பதாகும். இந்த சின்னஞ்சிறு உதவியை செய்வதற்கென பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த தொண்டு நிறுவனங்கள் இதற்கென பணியாட்களை நியமித்து செயல்படுவதால் கொடுக்கப்படும் பணத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு என செலவாகிவிடுவது வாடிக்கையாகும்.

மேலும் ஆப்ரிக்கா போன்ற மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கென இந்த தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. நமது நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளில் வறுமையின் காரணமாக பல சிறுவர் சிறுமியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள போகிறார்கள் என நினைக்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

நமது வளத்தை நாம் பாதுகாத்து கொள்வது அவசியமாகும். நமது தேவைகள் எப்போதும் குறையப்போவதில்லை. அந்த தேவைகளுக்கும் இடையில் நம்மால் முடிந்த உதவிகள் நலிந்தோருக்கு செய்வது நமது வாழ்நாளில் நாம் செய்யும் ஒரு முக்கிய பணியாகவே கருதுகிறேன்.

பணம் மட்டுமே எல்லா விசயங்களுக்கும் முடிவாகி விடாது. ஆனால் இந்த பணம் மூலம் பல காரியங்களை நிச்சயம் நல்ல முறையில் சாதிக்க இயலும். இதற்கான திட்டபணிகள் எல்லாம் விரிவாக நடைபெறும். பணம் இல்லாமல் பேசுவது ஆகாயத்தை பார்த்து கோட்டை கட்டுவதாகும். எனவே முதலில் உரிய பணம் சேர்ப்பதுதான் எனது முதல் திட்ட நடவடிக்கை.

பெரிய கடல்தனை சுத்தம் செய்யும் முயற்சியல்ல இது. சின்ன சின்ன ஓடைகளை, சின்ன சின்ன ஆறுகளை சுத்தம் செய்யும் பணி இது. இந்த சிறிய முயற்சி நிச்சயம் கடல்தனை சுத்தப்படுத்தும் அளவுக்கு விரிவடையும். எனது நோக்கம் உதவ வேண்டும் எனும் எண்ணம் உடைய மனிதர்களின் கரங்களின் மூலம் இந்த நல்லதொரு செயலை செய்வதாகும்.

என்னை எப்படி நம்புவது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். இதெல்லாம் தேவையா எனும் எண்ணம் கூட எழலாம். எனக்குள் எழுந்த எண்ணங்கள்தான் அவை. தீவிரமாக யோசித்தே இந்த முடிவு எடுத்து இருக்கிறேன். எனது முயற்சி உடனடியாக  பெரும் வெற்றியடையாமல் போகலாம். பல கோடிக்கணக்கான பணம் வைத்து இருக்கிறார்களே இன்னும் உலகம் இப்படி ஏன் இருக்கிறது என எண்ணும்போது எனது வாழ்க்கைமுறையும் என்னை கேலி செய்வதாகத்தான் இருக்கிறது.  கோவில்கள், சாமியார்கள் என பணத்தை கொட்டும் மனிதர்களை ஒருபோதும் குறை சொல்லப்போவதில்லை. அவரவர் தேவை அவரவருக்கு.

உலக  குழந்தைகளின் நலனுக்காக உதவிட எண்ணம் இருப்பவர்கள் உங்கள் உதவியை தாராளமாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று கூறிக்கொண்டு பணம் சம்பாதிக்க முயல்பவர்கள் இருக்கக் கூடும். அதற்கு ஒரு வழி ஏற்படுத்தி நான் தருவதாக நினைத்தால் அதற்காக வருந்துகிறேன். நல்ல செயலையும் கொச்சைப்படுத்தும் கூட்டம் இவ்வுலகில் உண்டு. சுயலாபத்துக்காக எதையும் செய்யும் கூட்டம் உண்டு. அரசுக்கு இல்லாத அக்கறை தனி மனிதனுக்கு எதற்கு என்கிற எண்ணமும் எழலாம். கூட்டங்கள் என தனி தனி பிரிவாக சேர்த்துக் கொண்டு வாழும் மனிதரிடையே தனியாய் ஒரு விதை போட்டு இருக்கிறேன். இதற்கு பின்னால் உதவும் கூட்டம் மட்டுமே எனக்கு தேவை , விளம்பரம் தேடும் கூட்டம் அல்ல என்பதை உறுதி செய்கிறேன்.

ஒவ்வொரு மாதம் முதல் தேதி கணக்கு விபரங்கள் இங்கே காட்டப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த திட்டத்துக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.