Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Tuesday 2 February 2010

காமம் - 2

காமம் - 1 படிக்க இங்கே அழுத்தவும்.

காமம் பற்றி எழுத வேண்டியதன் அவசியம் என்ன? இதனை எழுதுவதன் மூலம் பிறருக்கு என்ன பயன் இருந்துவிடும் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது என என்னிடம் கேட்கப்பட்டபோது என்னால் என்ன பதில் சொல்லியிருக்க முடியும் என்பதை இப்போதைக்கு நீங்கள் யூகம் செய்து கொள்ளுங்கள்.

பலரின் கவனமானது மறைத்து வைத்திருக்கப்படும் விசயங்களில்தான் அதிகமிருக்கும் என உளவியலாளர்கள் சொல்கிறார்கள், அதாவது அது என்னவாக இருக்கக்கூடும், எப்படி இருக்கக்கூடும் என்கிற ஒருவித தேடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடிய விசயங்களில் மனம் நாட்டம் கொள்கிறது.

ஆடைகளே இல்லாமல் எத்தனை பேர் உலகில் நிர்வாணமாக வாழத் தயார் எனக் கேட்கப்பட்டால் 'அடச் சீ, இதென்ன மானங்கெட்ட நினைப்பும், கேள்வியும்' என்றே பதில் வந்து சேரும். ஆனால் சமணர்கள், சில முனிவர்கள் நிர்வாணமாக வாழ்ந்தார்கள் எனும் கதை கேட்டதுண்டு,  நிர்வாணமாக வட இந்தியாவில் வாழும் 'சித்தர்கள்' என அழைக்கப்படும் மனிதர்கள் பற்றிய விசயத்தை, நிர்வாணமாகவே இருந்திட வேண்டும் என்கிற கட்டுப்பாடோடு கூடிய கடற்கரை பகுதிகள், வீட்டினுள் நிர்வாணமாகவே வாழ்ந்து வரும் 'இயற்கைவாதிகள்' என தொலைகாட்சியில் காட்டியது உண்டு.

இப்பொழுது மானம் என்பது அங்கங்களை மறைத்து வாழ்வது எனச் சொன்னால் மருத்துவ உலகத்தை கொஞ்சம் உற்று நோக்குங்கள். மருத்துவ உலகத்தில் காமம் என்கிற வார்த்தைக்கு கொஞ்சமும் இடம் கிடையாது. இந்தியத் திருநாட்டில் எப்படி எனத் தெரியவில்லை, ஆனால் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் எல்லாம் ஆண்களும் மருத்துவ தாதிகளாகப் பணியாற்றுகிறார்கள்.

ஆனால் எவரும் எந்த நாட்டிலும் நிர்வாணமாக செல்ல முடியாது. நிர்வாணமாக விளையாட்டு அரங்குகளில் ஓடித் திரிந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாணமாக எவரேனும் வாழ நினைத்தால் அவர்கள் மனநிலை பிறழ்வுக்கு உட்பட்டவர்களாகவே இருக்கக் கூடும் என்கிறார்கள். கிழிந்த ஆடையில் தங்களை மறைத்துக் கொள்ள இயலாமல் தவிக்கும் மனிதர்கள் எத்தனை பேர். உண்ணவே உணவின்றி உலகத்தில் ஒரு பகுதி தத்தளித்துக் கொண்டுதானிருக்கிறது.  எனினும் விலங்குகளின் நிர்வாணம், குழந்தைகளின் நிர்வாணம் நமது கண்களுக்கு ஏன் அருவெறுப்பாகத் தெரிவதில்லை! மனதில் எழுதப்பட்டது எல்லாம் தவறுதலாகவே எழுதப்பட்டு வந்திருக்கிறது. எதை எதை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டுமோ அது மட்டுமே வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் எனப்படும் நாகரீகம் விதைத்தது மனிதர்களாகிய நாம் தான். மறுப்பதற்கில்லை.

நமக்குச் சொந்தம் அல்லாத பிறிதொரு பொருளின் மீது ஆசைப்பட்டாலே அங்கே நமது மானம் தொலைந்துவிடுகிறது என்கிறது நமது முன்னோர்களின் சொல்வளம். அப்படியெனில் எத்தனை பேர் மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் கேள்வி எழுமெனில் கிராமத்து வழக்கச் சொல்லாகிய 'மானங்கெட்ட பொழப்பு' என எளிதாகச் சொல்லிவிடலாம்.

காமத்துப்பால்தனை இப்பொழுதெல்லாம் படிக்கும்போது மனதில் எவ்வித குற்ற உணர்வுகளும் ஏற்படவில்லை. காமம் பற்றிய திருவள்ளுவரின் பார்வை காதலைச் சார்ந்தே இருக்கிறது எனச் சொன்னால் அங்கே காதல் என்று அவர் எழுதியிருக்கலாம், ஆனால் காமம் என்றே எழுதப்பட்டு இருக்கிறது. காமத்தினால் பயன் எதுவெனின் எனச் சொல்லும்போது ஊடல், உணர்தல், புணர்தல் என்கிறார். காதலில் ஊடல் இல்லை, புணர்தல் இல்லை, காதலில் உணர்தல் மட்டுமே உண்டு. இதைத்தான் ஒரு கவிதையில் எழுதினேன், காதல் புரிந்து கொள்ளும் என. இதைப் படித்தவர்கள் காதல் புரிந்து கொல்லும் என்றார்கள். சில திருக்குறள்களைப் பார்வைக்கு இணைக்கிறேன்.

மலரினும் மெல்லியது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

எத்தனை பேர்தனை வேண்டுமெனிலும் காதல் செய்யலாம், ஆனால் காமம் ஒருவரின் மீதுதான் இருக்க வேண்டும் என்பதுதான் சரியெனச் சொன்னால் காதலை கொச்சைப்படுத்தியதாகவேத் தோன்றும்.

இப்பொழுது கவிதையை நினைவுபடுத்துவோம், காதலில் ஆசை கடுகளவும் இல்லை, காதலில் காமம் தர்மம் இல்லை. காதல் ஒருபோதும் கொச்சைப்படுவதில்லை. மாறாக இச்சை கொண்ட காமம் கொச்சைப்பட வைக்கிறது.

முதன்முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு சொன்ன பதில் உலகில் எவருக்கேனும் எப்பொழுதேனும்  பயன் பெறும் என்கிற நோக்கத்தில்தான் எனது எழுத்துதனை அமைத்துக் கொண்டேன், அதில் காமம் மட்டும் விதிவிலக்கா?

(தொடரும்)

Wednesday 27 January 2010

காமம் - 1

1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எழுதியதை ஒளித்து வைத்து இருப்பேனோ எனும் ஒரு தேடல் உங்களுக்குள் இப்போதைக்கு எழுந்து இருக்கலாம்.

'காமம்' என்ற சொல் மிகவும் அருவெறுப்பாகவேத் தெரிகிறது. காமம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் எனும் ஒரு தேடல் என்னுள் இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதேனும் தேவையெனின் நூலகங்களுக்கோ, அறிவிற்சிறந்தவர்களைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு செளகரியமாக இருக்கிறது.

காமம் என்ற சொல்லுக்கு ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல் எனவும்  காமம் என்பதின் விளக்கம் காம சூத்திரத்தில்

'ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'

எனும் சுலோகம் மூலம் சொல்லப்பட்டு அதற்கு விளக்கமாக காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது கண்டு அதிசயமாக இருந்தது.

இந்த காமசூத்திரத்தை வாத்சயானர் எனும் முனிவர் எழுதினார் என பலமுறைக் கேள்விபட்டதுண்டு. அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என இதுவரை படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. ஆனால் இந்த காமசூத்திரம் பலரால் பின்னர் தொகுத்து எழுதப்பட்டது என தமிழ்விக்கிபீடியா சொல்கிறது.

அதுவும் காமசூத்திரத்தின் முதல் வரிகள் 'தர்மார்த்த காமேப்யோ நம' அதாவது 'அறம் பொருள் இன்பமே போற்றி' எனவும் சொல்கிறதாம். அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் ஒவ்வொரு பருவகாலத்திலும் என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வதாகவும் ஒரு சுலோகம் அமைந்திருக்கிறது.

அந்த சுலோகத்தின் விளக்கமாக குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள் எனவும், இளமைப் பருவத்தில் காமம் எனவும் முதுமைப்பருவத்தில் தர்மம் செய்யவும் அதனால் மோட்சம் கிட்டும் என்பது போல் எழுதப்பட்டு இருக்கிறது.

ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

காமம் என்றாலே தலைதெறிக்க ஓடிய காலங்களும், காமம் பற்றி பேசினால் அவர்கள் தவறானவர்கள் எனும் எண்ணம் கொண்ட அந்த சிறு வயது முதலான இளமைப் பருவ காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு அறிவியல் நோக்கோடுப் பார்க்க வேண்டும் எனும் நிர்பந்தமோ, சொந்த அறிவோ இருந்திருக்கவில்லை.

திருக்குறளில் எழுதப்பட்ட காமத்துப்பால் பக்கம் எட்டி கூடப் பார்ப்பதற்கு அத்தனை அசெளகரியமாக இருந்தது. அசிங்கமான வார்த்தைகளாகக் எனக்குக் காட்டப்பட்டவைகள் என எதையுமே எப்போதும் பிரயோகம் செய்தது இல்லை. அப்படி பேசினால் நான் மோசமானவன் எனும் எண்ணம் என்னுள் ஆழ வேரூன்றியிருந்தது. எழுத்து நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு, 'கொச்சையான வார்த்தைகள் எல்லாம் அவற்றை கொச்சையாகப் பார்ப்பதில்தான் இருக்கிறது என பலர் உரக்கச் சொல்லிக்கொள்வதோடு எழுத்திலும் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருப்பாவை எழுதிய ஆண்டாள் எழுதவில்லையா எனவும் கேட்கிறார்கள். இலக்கியத்தரத்தோடு ஒரு விசயத்தை பார்க்க வேண்டும், வக்கிர புத்தியோடு பார்த்தால் எல்லாம் வக்கிரமாகத்தான் தெரியும் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருந்துவிடட்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நமது கலாச்சாரத்திற்கு அவையெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாகவே இன்றுவரை எனக்குத் தெரிகிறது. இலைமறை காயாகவே எல்லாம் உணர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாகவே கருதப்பட்டு வருகிறது. இனப்பெருக்கம் பற்றிய விசயங்களை பாடம் சொல்லித்தர  ஒருவித தயக்கமாகத்தான் இருக்கிறது. நிற்க.

'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' எனும் கவிதையை மனதில் பதிவு செய்தபோது 'மோகம்' என்றால் பெண் மோகம் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். மோகம் என்பதற்கான அர்த்தங்கள் நன்றாக தமிழ் தெரிந்ததும் பலவகையில் புரிந்து  போனது.

காமம் சம்பந்தமான விசயங்கள் எதுவெனினும் கெட்டவர்கள் செய்யக்கூடியது என்றும் 'நீலப்படம்' பார்ப்பவர்கள் அயோக்கியர்கள், அங்க அவயங்களை வெளிக்காட்டும் எந்த ஒரு இதழ்களையும் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்றெல்லாம் மனதில் சித்திரம் வரைந்து வைத்திருந்தேன்.

ஏன் அப்படி இருந்தேன், எதற்காக அப்படி இருந்தேன் என என்னுள் கேட்டுக் கொண்டபோது எனக்குள் ஒரே ஒரு விசயம் தெரிந்தது. என்னை எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான் அது. அதாவது நல்லவன் என்றால் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது போன்றவைதான் எனக்குத் தெரிந்தவைகள். கல்லூரிக் காலங்களில் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன். அவர்களாகவே நான் எழுதிய கவிதையைப் பாராட்டிய போது என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

இந்த காமம் வாழ்க்கையில் ஒருவர் அடைய வேண்டிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்பன ஒருவர் வாழ்வில் அடைய வேண்டிய செயல்களாகும்.

ஆனால் சமீபத்தில் எழுதிய 'காதல் மட்டும்' கவிதை ஒன்றில் இப்படியும் எழுதினேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

நான் காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்க்கிறேன். காதலை காமத்திலிருந்து விலக்கி வைத்திடவே விளைகிறேன். காதல் கொண்ட பார்வைக்கும், காமம் கொண்ட பார்வைக்கும் வேறுபாடு இருப்பதாகவேத்தான் நான் பார்க்கிறேன்.

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.

(தொடரும்)

Friday 21 August 2009

சமணர்களே தமிழுக்கு முன்னோடி

சமண சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் என பல குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சமணத்தை அடியோடு அழிக்க சைவம் புறப்பட்டதாக சொல்லப்படுவதும் உண்டு. உண்மையிலேயே சமணர்கள் தான் தமிழை வளர்த்தார்களா என்றால் மிக எளிதாகச் சொல்லிவிடுவேன், எனக்குத் தெரியாது.

திருக்குறள் சமணர் நூல் என மார்தட்டிக் கொண்டிருக்கும் வீரச் சமணர்களும் உண்டு! திருக்குறள் பொது நூலா? இல்லை, அது இந்து நூல் என வாதிடுவார்கள் என்பதையும் அறிவோம். அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் திருக்குறள் இந்து நூல் என கட்டுரைகளும் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலும் எழுதி இருக்கிறார். உலகப் பொதுமறை நூல் எனும் திருக்குறளுக்கே இந்த கதி எனில்!

இந்திரனில் பல உண்டு என்பதையும் காரணம் காட்டி திருக்குறளில் வரும் இந்திரனே சாலுங் கரி எனும் குறளுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அது சமணர் நூல் தான் என சொல்கிறார்கள்.

ஆதிபகவன் எனும் பெயர் சமணர் வணங்கும் ஆதிநாதனைத்தான் குறிக்குமாம். எழுதி வைத்தத் திருவள்ளுவர் இப்படியெல்லாமா நினைத்து இருப்பார், தனது நூலுக்கு சமண நூல் என வர்ணம் பூசுவார்கள் என!

காமத்துப்பால் எப்படி ஒரு சமணர் எழுதியிருப்பார் எனக் கேட்பவர்க்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறார்கள். திருத்தக்கத் தேவர் சீவகசிந்தாமணி எழுதவில்லையா? என்பதுடன் நில்லாது மேலும் சமணம் தான் முதன்முதலில் இல்லறத்தையும் துறவறத்தையும் தனியாய் பிரித்தது எனவும் தைரியமாகச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லத் தைரியம் தேவையில்லை என்பதை இப்போது நினைவில் கொள்க!

இதில் சீவகசிந்தாமணி கதை என்னை ஒருநிமிடம் 'அடடா' என்றுதான் சொல்ல வைத்தது. கதையின் நாயகன் பல தாரங்களை மணந்து கொள்கிறான், அதோடு நில்லாமல் இன்பத்தையும் சொல்வதே சீவக சிந்தாமணியின் கதை, அனைத்துமே ஆசிரியப்பா போன்ற வகையில் அமைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சில பாடல்களைப் படித்தேன், மிகவும் இரசனையுடனே எழுதியிருக்கிறார். நிச்சயம் அவரைப் பாராட்டியேத் தீரவேண்டும். முழு சீவக சிந்தாமணியைப் படித்து அப்படியே ஒரு அட்டகாசமான கதையாக எழுதிவிடலாம்.

திருத்தக்கத் தேவருக்கு விடப்பட்ட சவாலால்தான் அந்த சீவக சிந்தாமணியே எழுந்தது. ஒரு சமணருக்கு இல்லறம் பற்றி என்னத் தெரியும் எனக் கேட்க இப்படி எழுதிவைத்துவிட்டார்.

இதைவிடக் கொடுமை என்னவெனில் திருத்தக்கத் தேவரை அவரது பாடல்களையெல்லாம் கேட்டு முடித்தபின்னர் அவமானப்படுத்தி விட்டார்களாம். தன்னை சுத்தமானவர் என நிரூபிக்க சீதை அக்னியில் குதித்து கற்பை நிரூபித்தது போன்று இவரும் தனது கையை எரித்து, எழுதிய கை எரியவில்லை, கற்பினை என நிரூபித்தாராம். களங்கம் கற்பிக்கவே ஒரு கூட்டம் அன்று என்ன இன்றும் தொடர்ந்து வருகிறது. எழுதத் தெரியாது உனக்கு என்பது, எழுதினால் அனுபவமில்லாமலா எழுதினாய் என ஏளனம் செய்வது!

ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமணர்களின் நூல் தான் என்கிறார்கள் உறுதியுடன். நீலகேசி எனும் நூல் வேறு. இவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்பல. தொலைந்த நூல்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்படி தொலைந்த நூல்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியவந்தது என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதைப்போலத்தான் எனக்கு திருநாவுக்கரசர் எழுதிய பல பாடல்கள் காணவில்லை எனச் சொல்வது எப்படி எனவும் யோசிக்கிறேன். இத்தனை பாடல்கள் எழுதினேன் என எங்காவது திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறாரா எனவும் தெரியவில்லை. இதுபோன்று பல கேள்விகளை இந்த தமிழ் எழுப்பாமல் இல்லை. திருநாவுக்கரசரை இங்கே குறிப்பிட்டது காரணம் இவர் ஒரு சமணர் என்று அடையாளம் காட்டப்பட்டதுதான்! சமணராக இருந்தபோது எழுதியவை தொலைக்கப்பட்டதா? அழிக்கப்பட்டதா என கேள்வி எழும்.

வைணவம் தமிழ் வளர்த்தது என்பதை விட ''கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்'' எனக் கேட்க எப்படி சுவையாய் இருக்கிறது. எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது என நினைக்கும்போது சற்று இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.

திருஞானசம்பந்தர் வேண்டுமெனில் தமிழ் எனத் தன்னை அடையாளம் காட்டியிருக்கலாம், அவரைப் போல் எவரேனும் தமிழ் என்று மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்களா? தமிழ்க்கென ஒரு கடவுள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்துத்தானோ முருகன் என பின்னாளில் அடையாளம் காட்டினார்கள்?

இப்படித்தான் இலண்டன் கோவிலில் சொற்பொழிவு ஆற்ற வந்த மங்கையர்க்கரசி (கிருபானந்த வாரியாரின் மாணவி) முருகன் பற்றி பேசினார். தொகுப்பாளாராக பேசிய நான் முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி வைக்க, அவரும் முருகன் தமிழ்க் கடவுள்னா மற்ற கடவுளெல்லாம் இங்கிலீஸ் கடவுளா எனக் கேட்டு வைத்தார்.

அதற்கு நான் மனதில் இப்படிச் சொல்லி வைத்தவர்களைத்தான் கேட்க வேண்டும், அதோடு இப்படிச் சொல்லும்படி மூளைச் சலவை செய்யப்பட்டு முட்டாளானது என் தவறு எனக் கூறிக்கொண்டேன்.