Saturday 14 March 2015

நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழ் ஒரு பார்வை

மின்னிதழ் நமது திண்ணை இங்கே

எனக்கு தமிழ் தாங்கி வரும் இதழ்களில் ஆர்வம் எப்போதோ முற்றிலும் குறைந்து போனது. குமுதம், ஆனந்தவிகடன் எல்லாம் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எங்கேனும் தமிழ் இதழ் வாசிக்க கிடைத்தால் உள்ளே சினிமா சினிமா மட்டுமே. அதை குறை கூறவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்ள இது போன்ற இதழ்கள் எல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் தவறான விண்ணப்பம் ஆகும்.

திரு. அல் அமீன் அவர்கள் இந்த நமது திண்ணை - சிற்றிதழ் மின்னிதழை எனது பார்வைக்கு கொண்டு வந்தார். அவருக்கு நன்றி. இது ஒரு மாத மின்னிதழ். சிற்றிதழ் என்பதால் மிக மிக குறைவான பக்கங்கள் எனினும் நல்ல விசயங்கள் உள்ளடக்கி இருந்தது. 17 பக்கங்கள் கொண்ட முதல் இதழ் பிப்ரவரியில் வெளிவந்து இருக்கிறது. 21 பக்கங்கள் கொண்ட அடுத்த இதழ் மார்ச் மாதம் வெளிவந்து இருக்கிறது. முதல் இதழில் மாதம் குறிப்பிடவில்லை. 

முதலில் என்ன இருக்கிறது எப்படி இருந்தது என பார்த்துவிடும் முன்னர் இந்த மின்னிதழின் ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன் முயற்சியை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அவரது உரையில் தமிழை வளர்க்கும் ஆர்வம், தமிழ் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கம் என குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது. இவருக்கு உறுதுணையாக இந்த மின்னிதழை சிறப்பாக வடிவைமக்க உதவிய நண்பர் திரு அல் அமீன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

முதல் இதழின் அட்டை பக்கத்தில் பல முகங்கள் தென்படுகின்றன. அதில் எனக்குத் தெரிந்த முகங்கள் பலர் இருந்தார்கள். இதழின் உள்ளே பல படங்கள் இருக்கின்றன. அவை ஏனோ தெளிவின்றி காணப்படுகிறது. இரண்டாவது இதழில் உள்ளிருக்கும் படங்களில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது என சொல்லலாம். இரண்டாவது இதழின் அட்டைப்படத்தில் தமிழர் விளையாட்டு குறித்து காணப்படுகிறது. பல்லாங்குழி விளையாட்டில் நாங்கள் புளியம்பழ முத்துக்கள் வைத்து தான் விளையாடி இருக்கிறோம். தாயம் விளையாடுவதற்கு கூட ஒரு பக்கம் உரசப்பட்ட முத்துகள் உபயோகித்து இருக்கிறோம். சோசியர் உபயோகிக்கும் முத்துகள் பல்லாங்குழியில் இருப்பது ஆச்சரியம். அட்டைப்பட வடிவமைப்பை சற்று மெருகேற்றினால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. அதைப்போல 'நமது திண்ணை' என்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எல்லா இதழிலும் ஒரே மாதிரியாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். திண்ணை என்பதற்கு ஆசிரியர் தந்த விளக்கம் சரிதான். திண்ணை ஒரு ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓர் இடம். எங்கள் கிராம வீட்டில் திண்ணை இருந்தது. இப்போது அது மூடப்பட்டு எவரும் அமர இயலா வண்ணம் இருப்பது வருத்தம் தரக்கூடியது.

முதலில் சுஷீமா அம்மாவின் என் பார்வையில் திரௌபதி. இவரது எழுத்து மிகவும் எளிமையாக அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கும். ஒரு பெண்ணின் பெருமையை சொல்லும் எழுத்து என சொல்லலாம். சீதை, அகலிகை, மன்டோதரி, தாரை பற்றி குறிப்பிட்டு திரௌபதி பெருமை சிறப்புதான் என எண்ண வைக்கும் வகையில் சிறப்பாக எழுதி இருக்கிறார். பெண் அடிமை என்பதெல்லாம் நாம் ஏற்படுத்திக் கொண்டது என அன்றே ஒரு பெண்ணின் திறமையை போற்றி இருக்கிறார்கள், வெற்றி பெற்று இருக்கிறார் என தெளிவாக சொல்லி இருக்கிறார். அடுத்த இதழில் எடுத்துக்கொண்ட என் பார்வையில் அனுமன். மிகவும் அருமையாக இருந்தது. பொக்கிஷம் போல போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஸ்லோகம் மற்றும் எழுத்து. எங்கிருந்தோ வந்து குரங்கு ராமர் கதை கேட்கும் விஷயம்  நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதுவும் வணங்கியது போல நிற்கும் அனுமன். பிரமாதம். உங்கள் எழுத்துகளில் எப்போதும் அன்பு இருக்கும். திருக்குறள், கம்ப ராமாயணம் என அருமை. ஆன்மிகம் குறித்த எனது குறுக்குசால் எண்ணங்களை கைவிட வேண்டும் என எண்ண  வைத்துவிட்ட உங்கள் எழுத்துக்கு பாராட்டுகள்.

அடுத்ததாக 'நளபாகம்' நண்பர் ரவி. இவரது சிந்தனை கண்டு வியப்பது உண்டு. அதுவும் மகளே என அனு, நிவேதி, கோதை, ரேணுகா, நிலாமகள் போன்ற சக பெண் ட்விட்டர்களை இவர்கள் அழைக்கும்போது நிறைய ஆச்சரியம் அடைவது உண்டு. எத்தனை உரிமையாக பழகும் எண்ணம். அதுவும் இவரது நளபாகம் அனைவரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. சமையல் செய்ய இவரது இணையதளம் எனக்கும் உதவியது என்று சொல்வதில் மகிழ்ச்சிதான். முதல் இதழில் மைசூர் பாகு. அடுத்த இதழில் கைமா இட்லி. மிகத் தெளிவாக எழுதி இருக்கிறார். படித்ததும் சமைக்க வேண்டும் என எண்ணம் வரும்படி இருக்கிறது. பாராட்டுகள்.

செல்வி. உமாகிரிஷ் அவர்களை புரட்சி பெண்மணி என்றே சொல்லலாம். சமூக ஆர்வலர். இசைப்பிரியை. இவர் சென்ற வருடம் இளையராஜா இசைக்குழு நிகழ்வுக்கு சென்று வந்து எழுதிய கட்டுரையில் நம்மையும் அங்கே அழைத்து சென்றுவிட்டார். அதுபோல இவர் முதல் இதழில் குறிப்பிட்ட பாடல் பரவசம் அபாரம். இசை, பாடும் விதம், பாடல் வரிகள், பாடியவர் நளினம் என அற்புதமான விவரிப்பு. எனக்கு மிகவும் பிடித்த பாடல் கூட. இரண்டாவது இதழில் பாடல் கேள்விபட்டது இல்லை. அதற்காக இசை சண்டை எல்லாம் செய்து விடாதீர்கள். ஆனால்  அந்த பாடல் மூலம் எழுந்த எண்ணங்கள் என அவர் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அருமை. பனை ஓலை கொண்டு பதநீர் குடித்தது உண்டு. குருத்தோலை என்றெல்லாம் நான் கேள்விபட்டது கிடையாது. பல விசயங்கள் அறிய முடிந்தது. பாராட்டுகள்.

கவிதை என இரண்டு இதழிலும் எடுத்தவுடன் தொடங்குகிறது. முதல் இதழில் ரிஸ்வான் அவர்களின் புதிய வரவு கவிதை. குழந்தைகளின் வலி சொல்லும் கவிதை. தாயின் உருவம் வரைதல், பாலூட்டி செல்தல் என பல வரிகளில் நம்மை மனம் வலிக்க செய்து புதிய வரவுதனை குப்பை தொட்டியில் எதிர்பார்க்கிறேன் என முடிப்பது சமூக அவலம் மாறவில்லை என்பதை குறிப்பிடுகிறது. அடுத்த இதழில் மிஸ்டர்.ஒயிட் என்பவரின் நண்பேன்டா கவிதை பாடல் வரிகளை போல வாசித்து செல்லும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒவ்வொருவரும் அந்த வரிகள் சொல்லும் நிகழ்வில் இருந்து இருப்பார்கள். இருவருக்கும் பாராட்டுகள்.

அடுத்து நகைச்சுவை, சிரிங்க நல்லா சிரிங்க. எனக்கு நகைச்சுவை என்று சொன்னதும் திருமதி ஜனனி என நினைக்கிறேன். அவர்கள் சொன்ன 'மொக்கை ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பான்' என்பதுதான் எனக்கு நினைவுக்கு வரும். திரு முருகன் மற்றும் திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை அருமை. திரு செந்தில்குமார் அவர்களின் நகைச்சுவை தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். எவரேனும் ஒரு நகைச்சுவையை கொண்டு வந்து யாரோடது என கேட்டால் திரு. செந்தில்குமார் என சொல்லிவிடலாம். அதற்காக என்னை பரிசோதிக்க வந்துவிடாதீர்கள். திரு முருகன் வித்தியாசமான சிந்தனையாளர்.

திக் திக் திக் எனும் கதை ஒரு கனவுதான் என எண்ணும்படியாக  மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறார் சம்பத். சுதா ஆனந்த் அவர்களின் ஹைக்கூ அருமை. விடுகதை என இரண்டு இதழ்களிலும் உள்ளது. மிகவும் நல்ல முயற்சி. திரு விவேக் மற்றும் திரு சுரேஷ் அவர்களின் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் என இரண்டு இதழ்களில் வெளிவந்து இருக்கும் விசயங்கள் அந்த செல்பேசி பயன்பாட்டாளருக்கு நன்மை தரும். ஜப்பான் திரு ரகு அவர்களின் புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. எப்போதும் போல திரு பரணி அவர்களின் ஓவியங்கள் மிகவும் அருமை. மின்னிதழில் சற்று தெளிவாக வந்தால் நல்லது. இரண்டாவது இதழில் திரு ராஜா முகம்மது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் திரு தினகர் அவர்களின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இப்போது இந்த புகைப்படங்கள் ஓவியங்கள் என்ன சொல்ல வருகின்றன எனும் ஆராய்ச்சியை இப்போதைக்கு தள்ளி வைப்போம். பொதுவாக புகைப்படங்கள், ஓவியங்கள் தங்களுக்குள் ஒரு பெரும் கதையை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள். எதையோ எடுக்கிறோம், எதையோ வரைகிறோம் என்பதல்ல. அதற்காக பின்னணி குறித்து ஒரு கதையே எழுதலாம். வாழ்த்துகள்.

மருத்துவர் நேரம் என டாக்டர் வந்தனா அவர்களின் சர்க்கரை நோய் பற்றிய விபரங்கள் மிகவும் அருமை. பயனுள்ள விசயங்கள் இருந்தது. அடுத்த இதழில் பல் மருத்துவர் டாக்டர் ரியாஸ் அகமது அவர்களின் பற்சொத்தை மிகவும் சிறப்பும் பயன்படும் வண்ணம் இருந்தது. இந்த சர்க்கரை வியாதி மற்றும் பல்லுக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த இரண்டு விசயங்களை அடுத்து அடுத்து இதழில் கொண்டு வந்தது வெகு சிறப்பு. வாழ்த்துகள்.

முதல் இதழில் திரு கவுண்டமணி, இரண்டாவது இதழில் திரு எம் ஆர் ராதா குறித்து பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இதை ஆசிரியர் அவர்களே எழுதி இருக்கிறார்கள். அப்படியே தமிழ் புலவர்கள், தமிழ் அறிவியல் அறிஞர்கள் என குறிப்புகள் இருப்பது கூட நன்றாக இருக்கும். நூல் விமர்சனம் இரண்டவாது இதழில் உள்ளது, வெகு சிறப்பாக பிறர் நூலை வாங்கும் வண்ணம் எழுதி இருப்பது சிறப்பு. எழுத்தாளர் முத்தலிப் அவர்களுக்கு பாராட்டுகள். திரு சாத்தூரான் அவர்களின் பாட்டி கதை இவ்வுலகில் அன்பு எப்படி இருக்கிறது, எப்படி மனிதர் கஷ்டம் கொள்கிறார்கள் என அறிய முடிந்த அழகிய பதிவு. நிறைய அனுபவங்கள் கொண்டவரும் இயற்கையை நேசிப்பவரும் ஆவார். அருமை.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு வித்தியாசம். என்ன காரணத்திற்கு சொல்லப்பட்டு இருக்கும் அதன் பின்னணி என்ன என அலசிப்பார்க்கும் பழமொழிகள் குறித்த எண்ணங்கள் அருமை. திரு பாலகணேஷ் அவர்களின் புதிர் சிறப்பு. மேலும் ஆங்காங்கே டவிட்கள் மின்னுகின்றன. முன்னரே படித்து இருந்தாலும் இதழில் படிக்கும்போது அதற்குரிய சிறப்பே தனிதான்.

ஒரே வரியில் விமர்சனம் - நமது திண்ணையில் வெட்டிக்கதைகள் பேசப்படுவதில்லை.

ஆசிரியர் திரு. ஆந்தைகண்ணன், வடிவமைப்பாளர் திரு அல் அமீன் அவர்களின் முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

நன்றி. 


2 comments:

S.P.SENTHIL KUMAR said...

நல்ல விமர்சனம் அய்யா, இதழுக்கான தொடர்பை (லிங்க்) கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Radhakrishnan said...

இணைப்பு தருகிறேன் நன்றி :-)