Thursday 6 November 2014

குறையொன்றுமில்லை - திரைக்காவியம்

ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும், எப்படி எடுக்கக் கூடாது என்பது பற்றி எல்லாம் எனக்கு உண்மையிலேயே தெரியாது. ஆனால் எப்படி ஒரு திரைப்படத்தை ரசிக்க வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ் படங்களில் பாடல்களை வெறுத்து ஒதுக்கும் நான் இந்த படத்தில் பாடல்களை, பாடல்களை படம் எடுத்த விதம் தனை சற்று உன்னிப்பாகவே கவனித்தேன். பாடலாசிரியருக்கும், இசை அமைப்பாளருக்கும், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருக்கும்  என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். வெகு பிரமாதம். ஒரே ஒரு பாடல் மட்டும் எல்லாம் நடந்து முடிவது போல வழக்கமான சினிமா இருக்கத்தான் செய்கிறது. எனினும்...

படம் ஆரம்பித்து படம் முடியும் வரை ஏதோ ஒன்று வெகுவாக நெருடிக்கொண்டே இருந்தது. சில படங்களின் பாதிப்பு வெகுவாகவே என்னுள் ஏற்படும். பல வருடங்கள் பின்னர் நான் பார்த்த படங்களில் இந்த குறையொன்றுமில்லை படம் என்னுள் பாதிப்பு ஏற்படுத்திய படங்களில் ஒன்று. தமிழ் படங்களில் வணிகத்தை முன்னிறுத்தி ஆறு பாடல்கள் நான்கு சண்டைகள் எனும் கட்டமைப்பை உடைத்து இதுபோன்ற படங்கள் அத்திப்பூத்தாற்போல் வந்து சேர்கின்றன.

இந்த படத்தின் கரு எப்படியோ அதே நிலைதான் இந்த படத்தின் உண்மையான நிலையும். தயாரிப்பாளர்கள் இந்த படத்தை அதிக விலை கொடுத்து விற்க முற்பட்டு இருந்தாலும் எந்தவொரு விநியோகஸ்தர்களும் படம் நல்லா இருக்கு ஆனால் ஓடுமானு தெரியலை என சொல்லி இருப்பார்கள். இப்போதெல்லாம் படம் பல நாட்கள் ஓடும் வழக்கம்தனை  தமிழ் திரையுலகம் மறந்து கொண்டு இருக்கிறது. படம் வெளியான மூன்றே நாட்களில் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். வணிக வெற்றி தான் ஒரு படத்தின் வெற்றி என தமிழ் திரையுலகம் தலையில் வைத்து கொண்டாட தொடங்கிய காலம் எப்போதும் மாறப்போவதில்லை.

ஸ்டார் வேல்யூ என்பதுதான் தமிழ் திரையுலகின் சாபக்கேடு. 'பெரிய' நடிகர்கள் 'பெரிய' இயக்குனர்கள் என தமிழ் திரையுலகம் போற்றி களித்திருக்கட்டும். நல்லதுதான். அதே வேளையில் இது போன்ற திரைக்காவியங்களை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கக் கூடாது. அவ்வப்போது அருமையான படங்களை வெளியிடும் இயக்குனர்களை தயாரிப்பாளார்களை உற்சாகமூட்டும் அளவிற்கேனும் அவர்களுக்கு வருவாய் கிடைத்தாலே போதும்.

இந்த படத்தின் திரைக்கதை ஒரு நாவலை போல பயணிக்கிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் வாசகன் பக்கங்களை வேகமாக புரட்டிவிட நினைக்காத புத்தகம் போல சினிமாவிற்கு எனும் யுக்தியோடு திரைக்கதை அமைந்து இருக்கிறது. படம் நிதானமாகவே நகர்கிறது. அவசர உலகில் சாப்பிடுவதற்கே அள்ளிப்போட்டு கொண்டு ஓடும் மனநிலை கொண்ட மக்கள் மத்தியில் நிதானம் எல்லாம் எப்போது வரப்போகிறது. எதிலும் ஒரு அவசரம், எதிலும் புரிதலின்மை என வாழ்க்கை கழிந்து கொண்டு இருக்கிறது.

விவசாயம் அதன் மூலம் அந்த மக்கள் அடையும் தன்னிறைவு தாண்டிய ஒரு நிலையை குறையின்றி சொல்ல முற்பட்டு இருக்கிறார் கார்த்திக் ரவி. வாழ்த்துக்கள். படத்தில் அடுத்தவர்களை கேலி பேசி அடி கொடுத்து அடி வாங்கி எனும் கோமாளித்தனமற்ற நகைச்சுவை காட்சிகள் ஆங்காங்கே புன்னகையை வரவழைத்து போகிறது. வறட்டு பிடிவாதம் முரட்டு பிடிவாதம், புதுமைக்கு செல்லும் தயக்கம் என யதார்த்த வாழ்வை மிகவும் அழகாகவே படம் பிடித்து இருக்கிறார்கள்.

எனது கிராமத்தில் எனது தாத்தா கடை ஒன்று இருக்கிறது. அங்குதான் வத்தல், பருத்தி என சென்று விவசாயிகள் கூலியாட்கள் கொண்டு போடுவார்கள். அவர்களுக்கு தாத்தா ஒரு விலை நிர்ணயம் செய்வார். ஓரளவு எல்லாம் சேர்ந்தபின்னர் மாட்டு வண்டி, டிராக்டர் என விருதுநகருக்கு அவ்வளவும் கொண்டு சென்று ஒரு கமிசன் மண்டியில் கொண்டு சேர்ப்பார். அங்கே கமிசன்காரர் ஒரு விலை நிர்ணயம் செய்வார். பின்னர் அங்கிருந்து அவை வெவ்வேறு இடங்களுக்கு செல்லும். இப்போதும் கூட கிராமத்தில் விளைபவைகள் எல்லாம் அருகில் உள்ள நகரங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்று வரும் வழக்கமே உள்ளது. ஒரு மூட்டை கத்தரிக்காய் இவ்வளவு விலை எனபது போன்று நிர்ணயம் செய்யப்படும்.

பெரிய விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் எனது விவசாய பணி என்பது நீர் பாய்ச்சுவது, வேலையாட்களுக்கு சாப்பாடு கொண்டு செல்வது என்பதோடு முடிந்தது. மற்றபடி இதுவரை இந்த வியாபார நுணுக்கம் எல்லாம் சென்று நேரடியாக பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் இன்னும் விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்கள் தான் கிடைக்கமாட்டேன்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பணம் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கையை சீரமைக்க முடியவில்லை என்றாலும் குடிப்பழக்கங்கள் புகைப்பழக்கங்கள் சீரழித்து விடுகின்றன. முறையாக விவசாயம் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் ஆனால் விவசாயம் என்பது வானம் பார்த்த பூமி. மழை பொய்த்தால் எல்லாம் பொய்க்கும். எப்படி விலங்குகள் தங்களுக்கு தேவையானதை சேகரித்து கொள்கிறதோ அது போல மழை இல்லாமலும் வரும் விவசாயம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கதைநாயகன் கதைநாயகி என படத்தின் காதல் காட்சிகள் அட! முதலிலேயே கதைநாயகனின் குண நலன்களை ஒரு காதல் காட்சியில் சொல்லி விடுகிறார்கள். புதிய விஷயத்தை சாதிக்க நினைக்கும் எவருடைய குணமும் அப்படித்தான் இருக்கும். இந்த உலகில் எதையும் சாதிக்க வேண்டும் எனில் திறமை மட்டும் போதாது எவரேனும் அதை ஊக்குவித்தால் மட்டுமே இயலும். மிக இயல்பாக ஒரு திரைப்படம் செல்கிறது. நமது கனவுதனை வேறு ஒருவர் காண இயலாவிட்டாலும் நமது கனவுக்கு சரி என சொல்ல ஒருவர் போதும்.

படத்தில் பர்மிங்க்ஹாம் நகரம், லண்டன் நகரம் எல்லாம் கதைநாயகியின் தயவால் வந்து போகிறது. இந்த நகரங்களின் ஒளிப்பெருக்கை விட தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தின் ரம்யமான காட்சிகள் மனதை வருடிச் செல்கின்றன. கிராம வளர்ச்சி என சில வருடங்கள் முன்னர் ஒரு சிறுகதை எழுதி இருந்தேன். அந்த கதையின் நாயகன் கிராமத்திற்கு சென்று மருத்துவ பயிற்சி பெற வேண்டும். அந்த கதையை நினைவுபடுத்துவது போல இந்த கதைநாயகியின் மருத்துவ சேவை. அதையொட்டிய விவசாயிகள் கடன் பட்டு படும் தொல்லைகள் தற்கொலைகள், கதாநாயகனின் நண்பனின் தங்கை கல்யாணம் பண்ண இயலாது என நினைத்து தற்கொலை பண்ண முயலும் காட்சி என விவசாயியின் துயரம். புதிய விஷயம் நமக்கு சரிப்பட்டு வருமா என யோசிக்கும் ஊர்க்காரர்கள்.

பணத்தை தந்தால் என்ன பண்ணுவீர்கள் என மிகவும் இயல்பாக எடுக்கப்பட்ட காட்சிகள். புதிய விஷயத்தை கொண்டு வர பெரிய நிறுவனங்கள் லாப கணக்குதனை மனதில் வைத்து புறம் தள்ளும் முயற்சிகள் என ஒரு யதார்த்தமான சூழலை இந்த படம் சொல்லிச்செல்கிறது. இப்போதெல்லாம் நிறைய தமிழ் குறும்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் தமிழ் குறும்படங்களின் ஒரு நீட்சி என சொல்லலாம். ஒரு சமூகம் முன்னேற எவரெவர் தடை இருப்பார்கள் என அழகாகவே சித்தரித்து இருக்கிறார்கள்.

ஜிகர்தண்டா, அஞ்சான், கத்தி, பூஜை போன்ற படங்கள் மத்தியில் இது போன்ற படங்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பது வெகு கடினம். அடுத்தவர் கவலையை படுவதற்கு நமக்கே நேரம் கிடையாது என்பதுடன் அல்லாமல் சினிமா ஒரு பொழுதுபோக்கு அதில் இப்படி எல்லாம் எடுத்தால் எவர் பார்ப்பார்கள் என்கிற மனப்பக்குவமும் இருக்கத்தான் செய்யும். தமிழில் இது போன்ற படங்கள் எல்லாம் விருதுக்குரிய படங்கள் என ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் இதுபோன்ற படங்கள் நிச்சயம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

படம் முழுக்க காதல் ததும்பி வழிகிறது, அத்தோடு உணர்வுப்பூர்வமான காட்சிகளும். குறையொன்றுமில்லை மிகவும் சிறப்பான தமிழ் சினிமா. இந்த திரைப்பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

2 comments:

Yarlpavanan said...


சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

Radhakrishnan said...

நன்றி சார் :-)