Friday 18 May 2012

குருட்டுத்தனமான குரு பெயர்ச்சி

இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படித்தான் வாழ்க்கையில முன்னேறுரது? வழக்கம் போல பழைய புராணம் ஒன்றை கேட்க வேண்டியதாகி போனது. 'என்னை என்ன பண்ண சொல்ற' என பழைய புராணம் ஒன்றை நானும் தான் எடுத்துவிட்டேன். 'ஏதாவது பண்ணி தொலை' அதே சலிப்புடன் அம்மா நகர்ந்து போய்விட்டாள். எனக்கு அப்பாடா என்று இருந்தது.

இந்த முறை கனவு எல்லாம் நம்ப நான் தயாராக இல்லை. எனவே ஏதேனும் சாமியார் ஒருவரை நிஜத்திலேயே சந்தித்து எதிர்கால வாழ்க்கை குறித்து கேட்டு விடலாம் என கிளம்பினேன். நமது ஊரில் சாமியார்களுக்கா பஞ்சம். சாமியாரிடம் என்ன அருள்வாக்கு கேட்பது என மனதில் திட்டம் போட்டு கொண்டேன். இந்த சாமியார்கள் எல்லாம் மிகவும் சக்தி படைத்தவர்கள். அதாவது பிறரை ஏமாற்றும் சக்தி படைத்தவர்கள் அல்லது பிறர் தங்களிடம் வந்து ஏமாறும் நிலையை அறிந்தவர்கள்.

படித்தறிந்த மேதாவிகள் முதற்கொண்டு படிக்காத தற்குறிகள் உட்பட தங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்து கொள்ள கொண்டிருக்கும் ஆவலை அவல் போல மென்று துப்பும் வித்தையை இந்த சாமியார்கள் நிறையவே தெரிந்து வைத்து இருக்கிறார்கள். இதற்காக சாமியார்களை மட்டும் குறை சொல்ல முடியுமா? இது வியாபார உலகம். எது எது வியாபாரம் நன்றாக ஆகுமோ அது அது நன்றாக வியாபாரம் ஆகும்.

உடல் விற்று வாழும் பெண்களை வைத்து நடத்தப்படும் தொழில் கூடத்தான் இவ்வுலகில் பெரும் விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக அந்த பெண்களை குறை சொன்னால் மட்டும் போதுமா? எல்லாவற்றுக்கும் மோகம் கொண்டு திரியும் மனிதர்கள்தான் அத்தனை குட்டிச்சுவர்களுக்கும் முழு காரணம். வாய்ப்பு இருக்கிறது என்பதற்காக தவறு செய்பவர்கள் கொஞ்சம் என்றால் தவறு செய்ய வாய்ப்புதனை ஏற்படுத்தி கொண்டு வாழ்பவர்கள் மிகவும் அதிகமாகவே இருக்கிறார்கள். இந்த குட்டி குடைசலை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஊரிலேயே பெரிய சாமியார் என சொல்லப்படும் ஒருவரை சந்திக்க சென்றேன். எனது கால கிரகம்.

அப்பாய்ன்ட்மென்ட் இருக்கிறதா என வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து இருந்த ஒருவர் என்னை பார்த்து கேட்டதும் எனக்கு வியர்த்து கொட்டியது. இல்லை, எப்போ சாமியாரை பார்க்கலாம் என கேட்டேன். கையில் இருந்த நோட்டில் வேகமாக பார்த்துவிட்டு அடுத்த மாசம் பத்தாம் தேதி வா என பெயர் விலாசம் எல்லாம் குறித்து கொண்டார். சாமியார் இருக்கும் அறைக்குள் எட்டி பார்த்தேன். ஒரு ஐம்பது நபர்கள் அமர்ந்து இருப்பார்கள். சாமியாருக்கு வந்த கிராக்கி என நினைத்து கொண்டு வெளியே வந்தேன்.

பேசாம சாமியாரா போயிரலாம் போல இருக்கு என எனக்கு நானே பேசினேன். சாமியார் ஆகிறது எத்தனை கஷ்டம தெரியுமா? ஆசைகள் எல்லாத்தையும் துறந்துரனும் என்றார். பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என்றார் அவர். என்னய்யா மடத்தனமா பேசற இப்ப எல்லாம் அந்த ஆசைகள் எல்லாம் இருந்தாத்தான் சாமியார் ஆக முடியும். ஊரெல்லாம் சிரிச்சி கேவலப்படுத்தினாலும் ஒய்யாரமா இந்த காலத்தில உலா வரமுடியும் என எனது பங்குக்கு கரிச்சி கொட்டினேன்.

வழியில் ஒரு ஜோசியர் கடை தென்பட்டது. ஜோசியம் எல்லாம் கடை போட்டு விற்பனை பண்ணும் நிலைக்கு வந்து விட்டது. ஜோசியம், பரிகாரம், பூஜை புனஸ்காரம். அப்பப்பா என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. எதற்கும் ஜோசியரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அங்கே சென்றேன். அங்கே எனக்கு முன்னர் ஒரு ஏழெட்டு நபர்கள் அமர்ந்து இருந்தார்கள். அட பாவி மனுசங்களா என திட்டிவிட்டு பக்கத்தில் இருந்த கடையில் டீ குடித்தேன். அங்கே குருபெயர்ச்சி பலன்கள் என போட்டு இருந்தது. சரி படிப்போம் என பார்த்தேன். இந்த குரு ஒவ்வொரு வருஷம் ஒரு ராசிக்கு பயன் செய்வாராம். இந்த வருஷம் ரிஷபத்தில் இருக்கிறாராம்.

இந்த குருவுக்கு தர மரியாதைய இப்போ எல்லாம் யார் தங்களுடைய ஆசிரியர், தாய், தந்தை என யாருக்கும் தரது இல்லை. கொடுமைடா சாமி. நான் எந்த ராசியா இருந்தா என்ன அப்படின்னு எல்லா ராசிய படிச்சி பார்த்தேன். ஆனா எனக்கு ஒண்ணுமே புரியலை. எதுக்கு இந்த குரு இப்படி குருட்டுத்தனமா இடம் பெயர்ச்சி செய்றார். சரி அப்படின்னு ஜோசியர் கிட்ட போனேன். 

அவர் சொன்னார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு பணம் அந்தஸ்தை அள்ளி தரும் அப்படின்னு சொன்னார். அவர்கிட்ட ஒரு ஆறு வருசமா அப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க ஒன்னும் நடக்கலையே என்றேன். குரு துரோகம் பண்ணாதே அழிஞ்சிருவ அப்படின்னு சொன்னார். 

பணம் அந்தஸ்து இருந்தா எல்லா துரோகம் பண்ணலாம்னு சொல்லிட்டுஉங்க ராசிக்கு என்ன சொல்லி இருக்கு அப்படின்னு கேட்டேன். சகல சௌபாக்கியம் அப்படின்னு சிரிச்சார். 

வெளியே வந்தப்போ வியர்க்க விறுவிறு க்க ஒருத்தர் வேலை செஞ்சிட்டு இருந்தார். என்ன ராசி நீங்க அப்படின்னு கேட்டேன். தெரியாது, எதுக்கு கேட்கறீங்க அப்படின்னு கேட்டார். குரு  பெயர்ச்சிநடந்து இருக்காம் அதான் உங்களுக்கு என்ன பலன் இருக்கும்னு தெரிஞ்சிக்கலாம்னு. 

குரு குருட்டுதனமா பெயர்ச்சி அடைவான். சனி சந்தடிசாக்கில பெயர்ச்சி அடைவான். இப்படி வெட்டித்தனமா சுத்திட்டு திரியற அவங்களே இன்ன இன்ன பலன்கள் தராத வெட்டி கதைகள் பேசிட்டு திரியறாங்களே, உழைக்கிற நாம எவ்வளவு பலன்கள் நமக்கும், நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் தரலாம்னு ஊரெல்லாம் போய் சொல்லு என வியர்வை துடைத்து அவர் வீசி சென்றதில் எனக்குள் இருந்த ஒரு சாமியார், ஜோசியர் என்கிற கற்பனை உலகத்தை முற்றிலும் துடைத்து எறிந்தேன். 


2 comments:

IlayaDhasan said...

ver nice one.

Unknown said...

நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
நன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்