Thursday 5 May 2011

சமூக சேவை எனும் சாக்கடை

சேவை மனப்பான்மை என்பது அனைவருக்கும் அத்தனை எளிதில் கை கூடுவதில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சமூகத்தினை ஒரு சிறந்த, உயர்ந்த சமூகமாக மாற்றிட பலரின் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். 

இந்த சமூக சேவையானது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். வீட்டினை குப்பையாக வைத்திருப்பவர் சமூகத்தினை நிச்சயம் துப்புரவு செய்ய இயலாது. 

இந்த சமூகத்தில் நான் என்பது தனி, நாம் என்பது ஒரு கூட்டம். இதில் ஒரு நாம் என்பதற்கு பதிலாக பல நாம் இருப்பதுதான் சமூக பிரச்சினை ஆகிறது. 

நோய் என ஒன்று வந்துவிட்டால் அதன் அடிப்படை விசயத்தை அறிந்து கொண்டு தீர்வு செய்யாவிட்டால் அந்த நோய் மீண்டும் மீண்டும் வந்து சேரும். அதைப் போலவே சமூக பிரச்சினைகளுக்கான ஆணி வேரதனை அறியாது போனால் பிரச்சினைகள் ஒருபோதும் அழியாது. 

சிறுவர்களை வதைப்படுத்தும் படங்களை சேமித்து வைப்பது தனக்கு ஒரு பொழுது போக்கு என ஒருவரை கைது செய்தபோது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர் சொன்னதை கேட்டபோது தவறு எங்கு தொடங்கபடுகிறது என்பது அறிவது அவசியமாகிறது. 

நல்லவையோடு தீயவைகளும் சேர்ந்தே இருக்கும், அதில் நல்லவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என இருப்பதுதான் பகுத்தறிவு என சொன்னாலும், மனிதர்களின் பலவீனங்களால் தீயவைகளே மிகவும் முன்னிலை வகிக்கின்றன. 

அப்படிப்பட்ட தீயவைகளை அடியோடு ஒழித்து கட்ட முயலாமல் வேடிக்கை பார்க்கும் சாக்கடை சமூகம் தான் இவ்வுலகம் எங்கும் நிலவுகிறது. பல கோடி மக்களை பார்க்கும்போது இவர்களா தவறு செய்கிறார்கள் எனும் இனம் புரியாத கேள்வி எழும் வேளையில் நாமும் தவறு செய்கிறோம் என்கிற ஒரு உணர்வு சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி செல்வதை எவராலும் தவிர்க்க இயலாது. ஏதோ ஒருவகையில் முரண்பட்ட வாழ்வினை வாழும் சமூக புழுக்கள் ஆகிப் போனோம். 

நேர்மையும், நியாயமும் கேலிப் பொருளாகிப் போனது. தவறு செய்பவர்களை மறைக்கும் கேவலம் எங்கும் நிறைந்து போனது. இப்படித்தான் உலகம் இருக்கும் என்பதை ஏற்று கொண்ட பின்னர் அதன்படியே வாழ்வது என்பது பலருக்கும் பழகித்தான் போனது.

கொலை குற்றங்கள் என நிறைந்து காணப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன? 

ஒவ்வொரு வினாடியும் பல குழந்தைகள் பரிதாப நிலைக்கு உட்படுத்தபடுகிறார்கள். இதை தெரிந்தும் தெரியாத சமூகமாகவே வாழும் நமக்கு எதிர்காலம் என்பது வெளிச்சமாகவே இருக்கிறதாம். 

3 comments:

G.M Balasubramaniam said...

ஊழின் வலிமை பெரியது என்று தப்பித்துக்கொள்ளும் மனப்பான்மை மாற வேண்டும்.

Gayathri said...

nyaayamaana adhangam...
nammil palaraal onnume seyya mudiamal poividugirathe

Radhakrishnan said...

மிக்க நன்றி ஐயா. மிக்க நன்றி காயத்ரி