Wednesday 2 March 2016

மாறா மரபு - 6

8. மனிதனே மகானுபாவன் 

‘’இங்க பாரு ராம், உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு நான் வேறு எங்காச்சும் போயி வேலைப் பார்த்துகிறேன், இப்படி என்னை கொலை பண்ணுவேன்னு மிரட்டுறது நல்லா இல்லை. நீ டாக்டருக்குத்தான் படிச்சியா இல்லை கொலைகாரனாகப் படிச்சியா. நீ நல்லது செய்றேன்னு நினைச்சித்தான் நான் சரின்னு சொன்னேன். வேற உள்நோக்கம் எதுவும் இல்லை. நீ இதை முறையா செஞ்சா என்ன? உனக்கு அனுமதி கிடைக்காதுன்னு தெரிஞ்சிதான் இப்படி கள்ளத்தனம் பண்ற. இனிமே என்னை மிரட்டின அப்புறம் நான் என்ன பண்ணனுமோ அதை பண்ண வேண்டி இருக்கும்’’

‘’டாக்டர் சுபா, கோபப்படாத, நான் இது என்னோட லட்சியம் மாதிரி செய்றேன். இதுக்கு இடையூறா எது வந்தாலும் அலட்சியப்படுத்த முடியாது. அதனால் தான் அப்படி ஒரு வார்த்தையை விட்டுட்டுட்டேன். உன்னை நம்பறேன். மனப்பூர்வமா நம்பறேன்’’

‘’சரி ராம், என்னை மிரட்டி அடிபணிய வைக்க மட்டும் ஒருபோதும் கனவு காணாத’’

சுபா டாக்டர் ராமிடம் சொல்லிவிட்டு தனது அறையில் சென்று அமர்ந்தாள். கண்ணீர் எட்டிப்பார்க்க எத்தனித்தது. இந்த உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் நன்றாக வாழ வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அந்த அந்த உயிரினங்கள் அதன்பாட்டுக்கு இருப்பின் எவ்வித நெருக்கடியும் இல்லை, எதனுடனும் போட்டி இடாதவரை அதன் இயல்பை தொலைப்பதும் இல்லை.

பிறரை மிரட்டி அடிபணிய வைக்கும் போக்கு இந்த உலகில் நிறையவே நடந்து வருகிறது. இதற்கு எல்லாம் எந்த மரபணு காரணம் என மருத்துவ உலகம் கண்டுபிடித்து விட்டதா என்ன. நோய் என வந்தால் மட்டுமே அதற்கு என்ன காரணிகள், அதற்கு எந்த மரபணு எனத் தேடித் திரியும் மருத்துவ உலகம் ஒவ்வொரு மனிதனின் சிந்தனைக்கும் என்ன அடிப்படை என புரியாமல்தான் இருக்கிறது. சுபா எப்படியும் இந்த வாரம் ஸ்ரீரங்கம் சென்று வர வேணும் என திட்டமிட்டாள்.

‘’டாக்டர், பேசன்ட்ஸ் வெயிட் பண்றாங்க, வரச் சொல்லட்டுமா?’’

‘’ம்ம், வரச் சொல்லுப்பா’’

ஒவ்வொருவராக பார்த்து அனுப்பி வைக்கையில் மாலை மணி ஆறு ஆகிவிட்டது. வழியில் டாக்டர் ராம் வந்து பார்த்தார்.

‘’என்ன டாக்டர் சுபா, ஆர் யூ ஆல்ரைட்?’’

‘’எஸ் ராம், நல்லா இருக்கேன்’’

‘’நான் சொன்னது எதுவும் மனசில வைச்சிகிரலையே’’

‘’ராம், அதுபத்தி பேச வேணாம், திரும்பவும் எனக்கு அதை நினைவுபடுத்தி என்னோட இரவுப்பொழுதை கெடுத்துறாத’’

‘’சரி டாக்டர் சுபா’’

சுபா வீட்டிற்கு போனதும் குளித்துவிட்டு சமையல் அறையில் அருகில் இருந்த மேசையில் அமர்ந்தாள்.

‘’சுபா, உன் அண்ணன் ரகு போன் பண்ணி இருந்தான்’’

‘’என்ன விசயம்மா’’

‘’உன் அண்ணி லட்சுமியோட சொந்தக்கார பையன் ஒருத்தன் இருக்கானாம். அவனும் டாக்டர் தானாம். உனக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னான்’’

‘’எதுக்கும்மா இப்ப அவசரம். அப்படியே கல்யாணம் பண்ணினாலும் நான் சிவராம் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுத்தான் பண்ணுவேன்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டா பிறகு யோசிக்கலாம்மா’’

‘’யாரு அந்த சயின்டிஸ்ட் பையனா’’

‘’ஆமாம்மா’’

‘’உன் அப்பாவுக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டியது இல்லை’’

‘’நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம்’’

‘’அதுக்கில்லை சுபா’’

‘’அம்மா ப்ளீஸ் என்னை விட்டுடு. எனக்கே தலை வலிக்கிற மாதிரி இருக்கு’’

‘’ஒரு நிமிஷம் இரு, சப்பாத்தி செஞ்சி தரேன், எங்களை மீறி நீ எதுவும் செய்யமாட்டல’’

‘’செய்யலைம்மா’’

மூன்றே சப்பாத்திகள் சாப்பிட்டுவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள். இன்ட்ரான் பற்றி புரட்ட ஆரம்பித்தாள். படித்துக்கொண்டே இருந்தவள் சட்டென யோசித்தாள். எப்போது செல்லில் கரு உருவாகத் தொடங்கியதோ அப்போதுதான் இந்த இன்ட்ரான்கள் உருவாகத் தொடங்கி இருக்கும். அப்படியெனில் ஈஸ்ட்டில் இன்ட்ரான்கள் உண்டா எனும் கேள்வி அவளுக்குள் எழுந்தது. இந்த ஈஸ்ட்கள் செல்லில் கரு கொண்டுதானே இருக்கிறது. சிவராமிற்கு போன் செய்தாள்.

‘’சிவா ஈஸ்ட்ல இன்ட்ரான் இருக்கா?’’

‘’என்ன சுபா, எந்த திசைக்கு இன்ட்ரான் இருக்கு, ஒரு திசைக்கும் இன்ட்ரான் இல்லை’’

‘’இதுக்கு நான் சிரிச்சி வைக்கட்டுமா?’’

‘’ஓ நீ ஈஸ்ட் செல் பத்தி கேட்டியா, அது இருக்கட்டும். எனக்கு வீட்டில பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு பொண்ணு பார்க்கவே ரொம்ப நல்லா இருந்தா. பேரு கூட ராகினி, சாப்ட்வேர் எஞ்சினியர்’’

‘’சிவா ஈஸ்ட் செல்லுக்கு இன்ட்ரான் இருக்கா இல்லையா’’

‘’இருக்கு சுபா, ஏன் கேட்கிற?’’

‘’பாக்டீரியாவுக்கு இல்லாத இன்ட்ரான் எப்படி ஈஸ்ட்க்கு வந்துச்சி. ஈஸ்ட்ல நியூக்ளியஸ் இருக்கிறதுதானே காரணம்’’

‘’சுபா, உனக்கு எப்படி இந்த யோசனை வந்துச்சி’’

‘’கேட்கறதுக்கு பதில் சொல்லு சிவா’’

‘’ஆமா சுபா. எதுக்கும் ஜூலியோட ஆர்டிக்கில் படிச்சிப் பாரு. உனக்கு நான் லிங்க் அனுப்புறேன்’’

‘’தேங்க்ஸ் சிவா. சிவா, என்னோட அம்மாவும் எனக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னாங்க. நான் உன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னேன். அதான் இப்ப உனக்கு பொண்ணு பாத்துட்டாங்கள வீட்டில எனக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிருறேன்’’

‘’சுபா என்ன சொல்ற’’

‘’ஆமா சிவா’’

‘’சுபா நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதுபத்தி பேசினது இல்லையே, திடீருன்னு ஏன்?’’

‘’சிவா, எனக்கு காதல் அப்படின்னு எதுவும் எண்ணம் இல்லை. கல்யாணம்னு வந்தா உன்கிட்ட கேட்டுட்டு செய்வோம்னு இருந்தேன். அதுவும் நீ ஒரு மாப்பிள்ளை இருக்கேன்னு என் வீட்டில சொல்ல சொன்ன நினைவு இருக்கா. அதிருக்கட்டும் அவ்வளவுதான், இப்போதான் எல்லாம் தெளிவாயிருச்சி’’

‘’சுபா, என்னை மன்னிச்சிரு. நான் அன்னைக்கு சொன்னது உண்மைதான்’’

‘’இதில என்ன மன்னிப்பு வேண்டி இருக்கு. என் மனசில பட்டதை சொன்னேன், மறக்காம அந்த லிங்க் அனுப்பு இப்போ’’

‘’ம்ம் அனுப்புறேன் சுபா’’

சிவராம் சுபாவிடம் பேசியபின்னர் மிகவும் மனம் சஞ்சலத்திற்கு உள்ளானான். சுபா மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என அவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. தான் விளையாட்டாக பேசியதை அவள் மனதில் உண்மை என்றே எண்ணி இருக்கிறாள் என நினைத்தபோது சற்று கஷ்டமாக இருந்தது. எது என்றாலும் தன்னைத் தேடி வரும் சுபாவை நினைத்தபோது அவனுக்குள் ஒரு குற்ற உணர்வு வந்து உட்கார்ந்தது. வேகமாகத் தேடி அந்த இணைப்பை சுபாவுக்கு சிவராம் அனுப்பி வைத்தான்.

Deletion of Many Yeast Introns Reveals a Minority of Genes that Require Splicing for Function

எல்லாவற்றையும் படித்து பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. பாலூட்டி வகையின் செல்களில் இந்த இன்ட்ரான்கள் முக்கியத்துவம் நிறைந்தது என்ற வரிகளை வாசித்தபோது தான் டாக்டர் ராம் மீது ஒரு இனம் புரியாத கோபம் வந்து சேர்ந்தது. அதோடு தனது ஆசையை தொலைந்து போகச் செய்த சிவராம் மீதும் சற்று வெறுப்பு வந்து சேர்ந்தது.

எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் சராசாரிக்கு உட்பட்டு இருப்பார்கள் என்பதை புரியாத போது காதல் வந்துவிடுகிறது. ஆல்டர்நேடிவ் ஸ்பிலிசிங் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும் எனும் பயம் மீண்டும் சுபா மனதில் வந்து அமர்ந்து கொண்டது. மேலும் மேலும் படித்துக் கொண்டே வந்த போது செல்லின் வளர்ச்சியில் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் எவ்வித மாற்றம் உண்டு பண்ணுவதில்லை என அறிந்ததும் குழப்பம் அடைந்தாள். எப்படி இருந்தாலும் இந்த இன்ட்ரான்கள் நீக்கப்படுவதால் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகவே செய்யும் என தெளிவாக முடிவு ஒன்றை எடுத்தவளாக அறைக்குள் சென்றாள். ஏதோ ஒரு ராம் தனது உறக்கத்தை இன்று கெடுக்க வேண்டும் போல் இருந்து இருக்கிறது என எண்ணினாள்.

அடுத்த நாள் அப்பாவிடம் சிவராம் குறித்து பேசினாள். அவரும் உனக்கு என்ன விருப்பமோ அதன்படி செய்மா.

‘’நாங்க ஒரு மாப்பிள்ளை பாத்து உனக்குப் பிடிக்காம போச்சுனா எங்களுக்கும் தான் கஷ்டம்’’

‘’என்ன பேசறீங்க, ஒரு பொண்ணு உங்ககிட்ட ஒரு விஷயம் சொன்னா, நாங்க பாக்கற பையனை கட்டுன்னு சொல்லாம என்ன இது’’

‘’டாக்டர் விருப்பப்படி செய்யட்டும்’’

தனக்கு தரப்பட்ட சுதந்திரம்தனை பயன்படுத்த முடியாமல் தவித்தாள் சுபா. சிவராமிடமே சென்று என்னை திருமணம் பண்ணிக்கொள் என கேட்கலாமா என்று கூட ஒரு கணம் நினைத்துவிட்டாள். பிறகு நடப்பது நடக்கட்டும் என அந்த வாரம் முழுவதுமே எப்படியோ கடத்திவிட்டாள். அந்த வாரம் முழுவதுமே சிவராமிடம் அதிகம் பேசவில்லை. இன்ட்ரான்கள் பற்றிய எண்ணம் கூட பின்னோக்கி போய் இருந்தது. வெள்ளிக்கிழமை காலையில் தான் அம்மாவிடம் தான் ஸ்ரீரங்கம் செல்ல இருப்பதாக சொன்னாள்.

‘’என்ன விஷயம்’’

‘’ஒருத்தரை வேலை விசயமா பாக்கணுமா’’

‘’எங்க தங்கப்போற?’’

‘’நாளைக்கு காலையில போயிட்டு நைட்டே வந்துருவேன்மா’’

‘’சுபா, நீ ஒரு மாதிரியா இருக்கியேம்மா’’

‘’அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா’’

எப்பொழுது நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசிக்கவில்லை என தெரிகிறதோ அப்போதே நாம் பாதி இறந்து விடுகிறோம். அதற்குப் பின்னர் நம்மை குறித்து ஒரு பெரிய கேள்விக்குறி ஒன்று எழுகிறது. இந்த உலகில் நமக்கு என்று எதுவும் இல்லை என்றது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. சுபா அடுத்தநாள் ஸ்ரீரங்கம் நோக்கிப் போனாள். அவள் அதிகாலை எழுந்து கிளம்பி மதியம் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தாள். நேராக கோவில் சென்று மூடும் முன்னர் வணங்கிவிட்டு வந்தபோது அவளுக்குள் ஒருவித தெளிவு உண்டாகியது. இதே ரெங்கமன்னாரை தான் அடைய வேண்டி தவம் இருந்த ஆண்டாள் குறித்து எண்ணிப்  பார்த்தாள். தான் ஒன்றை அடைய வேண்டி இருக்கும் தவத்தின் வலிமை அந்த ஒன்றை நிச்சயம் தனக்கு கொண்டு வந்து சேர்க்கும். இந்த டாக்டர் ராம் அப்படித்தான். அவன் இருப்பது ஒரு தவம். இந்த மனித குலமே ஒவ்வொரு மாற்றத்திற்கு என ஒரு மாபெரும் தவம் இருக்கிறது. ஒன்றை புரியாது எனில் அது புரியாது என தவம் இருக்கும் மனிதர்கள் ஒதுங்கிப் போவது இல்லை. அதைப் புரியும் வரை அந்த தவத்தின் வலிமையை அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்களே அன்றி குறைத்துக் கொண்டது இல்லை. அதே எண்ணத்துடன் ரெங்கநாதனை தேடிச் சென்றாள்.

குடிசையின் வெளியில் அமர்ந்து இருந்தார் ரெங்கநாதன். அவர்தான் என அடையாளம் கொண்டவள் போல அவர் அருகில் சென்றாள்.

‘’நீங்க ரெங்கநாதன்’’

‘’அவனை சேவிச்சிட்டு வரேளா’’

‘’யாரை’’

‘’வேறு யாரை, அந்த ரெங்கன்தான்’’

‘’ஆமா தாத்தா’’

‘’என் வீட்டில சேரு இல்ல, இப்படி கீழ உட்காருவேளா’’

சுபா அமர்ந்தாள். சிவராம் சொன்ன அனைத்து விசயங்களையும் சொல்லி முடித்தாள்.

‘’மனுசா எல்லாம் மகானுபாவன். அவாளுக்கு எல்லாம் தெரியும். இந்த ஜீவராசிகளில் மனுசா மட்டும் தான் இந்த பிரபஞ்சத்தை அலசி ஆராய முற்பட்டா. ஒளி வைச்சி இந்த லோகத்துக்கு ஒளி கொடுக்கிறவா இந்த மனுசா தான். இதே போல ஒரு பூமியை இந்த மனுசா உருவாக்கும் அளவுக்கு திறமை  படைச்சவா, பிரசாதம் சாப்பிட்டேளா’’

‘’ம்ம், நீங்க சிவா கிட்ட சொன்னது எல்லாம் நடக்குமா தாத்தா’’

‘’அந்த இன்ட்ரான்கள் குழந்தைகளா. உம்ம கையால்தானே தொடக்கம்’’

‘’அது வந்து... உங்களுக்கு எப்படித் தெரியும்’’

‘’நான்தான் சொல்றேனில்லையோ, இந்த மனுசா மகானுபாவன்’’

‘’மகானுபாவன் அப்படின்னா?’’

‘’ஒரு பேரறிஞன்,  பிறர் போற்றிட சிறந்தவன், மாபெரும் ஞானி, தனக்கென்று இல்லாமல் பிறருக்கு என குணம் கொண்ட  கொடைப்பண்பினன்''

‘’அப்படி இருக்காங்களா?’’

‘’நிறைய இருக்கா, ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறா. எல்லாம் இந்த இன்ட்ரான்கள் நீக்கிட்டா சரியாகிரும்’’

‘’நமது சிந்தனைக்கும் இன்ட்ரான்களுக்கும் என்ன சம்பந்தம்’’

‘’நிறைய இருக்குனு சொல்வா. நினைக்க நினைக்க நடுக்கமும், சந்தோசமும் உண்டாகும்னு எழுதி வைச்சிருப்பா. நாராயண ஸ்தோத்திரம் கேட்டது உண்டோ’’

‘’இல்லை’’

‘’ஊருக்கு திரும்பிப் போறப்ப அதை வாங்கிட்டுப் போங்கோ, தினமும் கேளுங்கோ’’

‘’ ம்ம்’’

’அச்சலோத்ருதி சஞ்சல்கரா, பக்தனுக்ரக தல்பார நாராயணா’’ இதோட அர்த்தம் என்ன தெரியுமோ. அதாவது ஒரு மலையையே தூக்கிய  வலிமை கொண்டவனே, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆர்வம் கொண்டவனே நாராயணா அப்படின்னு பொருள், மலையை தூக்கினது யாரு. அந்த பரந்தாமன். பரந்தாமன் வடிவிலா தூக்கினார். இல்லையே மனுஷ ரூபத்தில் தூக்கினார். அதான் மனுசனே மகானுபாவன். ஒரு தனிப்பட்ட மனுசாளோட உடல் வலிமையை விட மன வலிமை புத்தி கூர்மை ரொம்ப பெரிசுனு இப்ப சொல்றா’’

சுபா தன்னை அறியாமல் அவரை நோக்கி வணங்கினாள் (தொடரும்)
9. மனம் மயங்குதல்


சுபா ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பியதில் இருந்து ரெங்கநாதன் குறித்து சிவராமிடம் நிறைய பேசிக்கொண்டே வந்தாள். எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுவது குறித்தும் அவள் சொன்னதும் சிவராம் மறுத்தான். சிவராம் தனக்கு நிறைய நம்பிக்கை இருப்பதாக கூறினான்.

நாட்கள் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. சுகுமார் தீபா தம்பதிகளின் விந்தணுக்கள், அண்ட செல்களை பெற்றுக் கொண்டாகிவிட்டது. டாக்டர் ராம் முக்கிய வேலையாக இருந்தார். டாக்டர் சுபா அவற்றை நுண்ணோக்கியில் பார்த்துவிட்டு மயக்கம் போடாத குறையாக டாக்டர் ராமிடம் வந்தாள்.

‘’ராம், அந்த செல்கள் எல்லாம் உருப்படியாகவே இல்லை, வந்து பார்’’

‘’என்ன சுபா, விளையாடுறியா’’

‘’இதில் என்ன ராம் விளையாட வேண்டி இருக்கு’’

டாக்டர் ராம் அவசர அவசரமாக வந்து பார்த்தவர் நெற்றி எல்லாம் வியர்க்கத் தொடங்கி இருந்தது.

‘’தெய் டோன்ட் லுக் நார்மல்’’

‘’இப்ப என்ன பண்றது ராம்’’

‘’ஃப்யூஸ் தெம்’’

‘’நோ’’

‘’டூ வாட் ஐ சே, டோன்ட் டூ எனிதிங், ஜஸ்ட் ஃப்யூஸ் தெம். யூஸ் இன்ஜெக்சன் புரொசிஜர்’’

‘’ஐ கான்ட், தெய் வில் ஃபெயில்’’

‘’ஜஸ்ட் டூ இட். ஒன் டூ ஒன், செலக்ட் வாட் யூ தின்க் பெஸ்ட்’’

டாக்டர் ராம் தனது தலையில் அடித்துக் கொண்டார்.

‘’சுபா, சொன்னதை செய்துட்டு வா, எனக்கு மயக்கம் வருவது போல இருக்கு’’

சுபா ஒரு விந்து செல் எடுத்து ஒரு அண்ட செல்லுடன் ஊசி முறையில் இணைத்தாள். இப்படியாக மூன்று விந்து செல்களை மூன்று அண்ட செல்களுடன் தனித்தனியாக இணைத்தாள்.


ஆய்வகத்தில் அவைகளை வைத்துவிட்டு டாக்டர் ராமினை சந்திக்க வந்தாள்.

‘’ராம், இணைத்து பண்ணியாச்சு’’

‘’தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்தாச்சா’’

‘’இன்னும் இல்லை ராம்’’

‘’என்னதான் நடக்குது சுபா, அவங்க கிளம்பி போயிருந்தா என்ன பண்ணுவ. இன்னும் ஆறு நாளில் அவங்களுக்கு நாம இந்த கருவை உள்ளே வைச்சாகனும். நாளைக்கு வந்து கருத்தரிச்சி இருக்கான்னு பாரு’’

‘’எனக்கு நிறைய சந்தேகமா இருக்கு ராம்’’

‘’ஒன்னு நடக்கிற முன்னாடி சந்தேகம் எல்லாம் பட வேண்டாம், நீ முதல போயி தீபாவுக்கு ஹார்மோன் கொடுத்து ஆறு நாள் கழிச்சி வரச் சொல்லு’’

சுபா, தீபாவிடமும் சுகுமாரிடமும் நடந்த உண்மையை மறைத்து எல்லாமே நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை சொன்னவள் தீபாவின் கருப்பையை தயார் செய்ய ஹார்மோன் ஊசி போட்டாள். தீபா சுபாவின் முகத்தில் ஒருவித பயம் இருப்பதை கண்டார்.

‘’டாக்டர் உங்க முகமே சரியில்லையே, எதுவும் பிரச்சினையா?’’

‘’ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரு இருபது மணி நேரத்தில கரு உருவாகிரும், அப்புறம் ஒரு ஆறு நாள் அதை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்து வருவோம். அப்புறம் ஆறு நாள்  பிறகு வந்தீங்கனா உங்க கருப்பையில கருவை வைச்சிரலாம்’’

‘’எத்தனை கரு உருவாக்குவீங்க டாக்டர்’’

‘’மூனு உருவாக்கி இருக்கோம், உங்க விருப்பபடி உங்க கருப்பையில வைக்கிறோம்’’

‘’மூனும் வைச்சிருங்க டாக்டர்’’

‘’மூனுமே நல்லா இருந்தா வைக்கலாம். ஆனா மூனு வேண்டாம், இரண்டு மட்டும் வைப்போம், உங்க உடம்பு தாங்கனும் இல்லையா’’

‘’சரி டாக்டர்’’

சுபா, தீபாவும் சுகுமாரும் செல்லும் வழியினைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ராம் அங்கே வெகுவேகமாக வந்தார்.

‘’டாக்டர் சுபா, அவங்க போயிட்டாங்களா’’

‘’போயிட்டாங்க ராம்’’

‘’எனக்கு வந்து அந்த செல்களை காட்டு, ஐ வான்ட் டு மேக் சுயர்’’

சுபா, ராமிற்கு அந்த செல்களை காட்டினாள்.

‘’வெல் டன் சுபா, இட்ஸ் மிராக்கிள்’’

‘’என்ன ராம்’’

‘’இந்த செல்கள் எல்லாம் சாதாரண செல்களா, இல்லையே அப்புறம் எப்படி நார்மலா இருக்கும், நீ கொஞ்சம் கூட யோசனை இல்லாம என்கிட்டே வந்து சொல்ல நானும் பயந்து சே ஒரு அரைமணி நேரம் என்னை பாடாபடுத்திட்டியே டாக்டர் சுபா’’

‘’இல்லை ராம், அப்நார்மல் செல்கள் அது’’

‘’அதேதான், நாம கொடுத்த கேப்ஸ்யூல் வேலை செஞ்சி இருக்கு, நீ எதுக்கும் ஒரு கருவை நாளைக்கு எடுத்து ஜீன் டெஸ்டிங் பண்ணிரு, மீதி ரெண்டு மட்டும் வளரட்டும். அந்த ரெண்டு மட்டும் கருப்பையில் வைச்சா போதும்’’

‘’சரி ராம்’’

‘’இன்னைக்கு உன்னை நான் ஒரு ரெஸ்டாரன்ட் கூப்பிட்டு போகப் போறேன், என்னோட ஆராய்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தரும் உனக்கு சின்ன பார்ட்டி’’

‘’எதுவும் வேண்டாம் ராம், எனக்கு இன்னும் திக் திக்னு மனசு அடிச்சிக்கிது’’

‘’கவலைப்படாதே சுபா, இட் வில் வொர்க். அப்போ நீ வரலை’’

‘’இல்லை ராம், நாளைக்கு இந்த கருவை வந்து பாக்கிறவரை எனக்கு நிம்மதி இல்லை. அவங்க நம்பிக்கையை நாம தகர்த்துரக்கூடாது’’

‘’சரி சுபா, நான் மட்டும் போயி இந்த நாளை கொண்டாடப் போறேன்’’

அன்று இரவு சுபா சரியாக சாப்பிடவில்லை. அம்மா அப்பாவுக்கு காரணம் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. சிவராமிடம் இந்த விஷயத்தை சொல்லவும் மனம் வரவில்லை.

‘’சுபா’’

‘’என்னம்மா’’

‘’அந்த பையன் கிட்ட பேசினியா’’

‘’இல்லம்மா, அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டான், சாதாரணமா பழகினான், பேசினானாம்’’

‘’அப்போ பையன் பாக்க சொல்லவா’’

‘’இப்ப இதைப் பத்தி பேசனுமாம்மா, எனக்கு வேலை இடத்தில நடந்ததை நினைச்சே கவலையா இருக்கு’’

‘’என்னம்மா என்ன ஆச்சி’’

‘’ஒன்னுமில்லைம்மா’’

‘’சொல்லு சுபா, சரியாவும் நீ சாப்பிடலை’’

சுபா தனது அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொன்னதும் எல்லாம் நல்லாவே நடக்கும், அதுபத்தி கவலைப்படாதம்மா என்று ஆறுதல் சொல்லிவிட்டு கல்யாணம் குறித்து யோசிக்க சொன்னார்

இரவு மிகவும் மெதுவாக கடந்து கொண்டு இருந்தது. ரெங்கநாதன் சொன்னது போல நாராயண ஸ்தோத்திரம் கேட்க ஆரம்பித்தாள். எல்லா வரிகளுமே புரியாததாக இருந்தன. எதையாவது அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டவாறே குரலின் இனிமையை ரசித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளது செல்பேசி ஒலித்தது.

‘’டாக்டர் சுபா, எல்லாவற்றையும் பாதுகாப்பாகத்தானே வைச்சிட்டுப் போன, அது பக்கத்தில வேறு எந்த ஒரு பொருளும் இல்லையே. எனக்கு திடீருன்னு ஒரு சந்தேகம்’’

‘’இல்லை ராம், எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கு’’

‘’நீ இல்லாத ஒரு குறைதான் சுபா, பார்ட்டிக்கு நாலைஞ்சி பேரு வரவைச்சிட்டேன்’’

‘’சரி ராம், குட் நைட்’’

மீண்டும் பாடல் கேட்க ஆரம்பித்தாள். தான் செய்வது சரிதானா எனும் ஒரு உணர்வு தன்னை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. எவருமே இப்படி ஒரு காரியத்திற்கு துணை போயிருக்கமாட்டார்கள் என்றே எண்ணினாள். தனக்கு புகழ் அடைய விருப்பமா அல்லது ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் தந்த தைரியமா என தெரியாது அப்படியே அசதியில் உறங்கியவள் நடுசாமத்தில் முழித்தாள்.

பிறந்தவுடன் இறந்த குழந்தையைப் பார்த்த நினைவுகள் வந்து போயின. இப்படி இயற்கையை மீறிய செயல் ஒன்றை செய்வது சரியா என யோசித்தாள். எப்படியாகினும் நாளை விடிய வேணும் எனும் எண்ணத்தில் உறங்க நினைத்தாலும் உறங்க இயலவில்லை.
அதிகாலையில் உறங்கியவளை அவளது அம்மாதான் எழுப்பி விட்டார்.

‘’அம்மா குழந்தை குழந்தை’’

‘’என்ன சுபா’’

‘’பயமா இருக்குமா, கெட்ட கனவு ஒன்னு’’

‘’நீ மனசைப் போட்டு குழப்பாதே’’

சுபா குளிக்கும்போது அவளுக்கு அழுகை தானாக வந்தது. அவசர அவசரமாக கிளம்பினாள். மிகவும் தாமதமாகவே கிளினிக்கிற்கு சென்றாள், டாக்டர் ராம் அங்கே இருந்தார்.

‘’குட் மார்னிங் டாக்டர் சுபா’’

‘’வணக்கம் ராம்’’

‘’எவரிதிங் இஸ் சக்சஸ்’’

‘’ராம்’’

‘’ஆல் ஆர் பெர்டிளைஸ்ட், லுக்கிங் குட்’’

‘’தேங்க்ஸ் ராம்’’

‘’எல்லாம் உன்னால நடந்தது டாக்டர் சுபா’’

‘’ஜீன் டெஸ்டிங் பண்ணவா’’
‘’வேண்டாம்’’

‘’நேத்து பண்ண சொன்ன ராம்’’

‘’இல்லை வேண்டாம்’’

‘’உறுதிபடுத்திக்கிட்டா நல்லதுதானே’’

‘’இல்லை சுபா, ஆறு நாட்கள் ஆகட்டும். அன்னைக்கு பண்ணுவோம். எப்படி ஒவ்வொரு நாள் வளரும்னு நமக்கு தெரியாது. ஒன்னாவது நிச்சயம் நல்லா இருக்கனும். நாம எடுக்கிறது நல்லதா இருந்து பிரச்சினை ஆகிட்டா என்ன பண்றது. லெட் அஸ் பீ சேப்’’

‘’சரி ராம்’’

‘’யூ கேன் கோ அன்ட் லுக். அவங்களுக்கு தகவல் சொல்லிருங்க’’

சுபா அவற்றை எல்லாம் பார்த்து ஆச்சரியம் கொண்டாள். எப்படி இவை நல்ல செல்களாக மாறிக்கொண்டன என புரியாமல் இருந்தது. அப்போதே தீபா சுகுமார் தம்பதிகளுக்கு தகவல் சொன்னாள். அவர்கள் சந்தோசத்தில் நிறைய பேசினார்கள்.

தினமும் செல்களை பார்ப்பதும் அவைகள் குறித்து எழுதுவதுமாக சுபா இருந்தாள். மூன்றாம் தின மாலை அன்று சிவராம் சந்திக்க வேண்டும் என சொன்னதால் அவனை சென்று பார்த்தாள்.

‘’என்ன சிவா’’

‘’சுபா உன்னை நான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன், உனக்கு சம்மதமா’’

‘’சிவா’’

‘’பரிதாபமோ, குற்ற உணர்வோ இல்லை’’

‘’உண்மையா சிவா’’

‘’ஆமா சுபா. உன்னை அறிய முயன்றபோது என்னை அறிந்து கொண்டேன்’’

‘’கவிதையா சிவா’’

‘’உன்னை போற்றி ஆராதிக்க என்னைவிட எவரும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை எனும் பேரகந்தை எனக்கு எப்போதும் உண்டு’’

‘’எங்கே இதை எல்லாம் மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்த’’

‘’நீ தொலைத்ததாய் நினைத்த ஒன்று நீ என்னிடத்தில் இன்னும் இருக்குமென்று நீ எதிர்பார்த்து இருக்கமாட்டாய். ஒருவேளை உன்னை மீண்டும் உள்ளுக்குள் நினைத்துப் பாத்திராவிட்டால் எனக்கு காதல் என்றால் என்னவென தெரியாமல் போயிருக்குமோ? அன்று உன்னிடம் நான் பேசியதை இன்றும் சொல்லிக்கொண்டு இருக்கவே நான் விருப்பம் கொள்கிறேன்’’

‘’வாவ் அசத்தல் சிவா. நீதான் எழுதினியா’’

‘’உண்மையானவர்கள் ஒருபோதும் ஒளிந்து கொள்வதில்லை’’

‘’போதும் போதும் சிவா, நீ சொன்னதே எனக்கு இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு. எங்கே எனக்கு நீ இல்லாம போயிருவியோனு ஒருவித மனக்கலக்கம் இருந்துட்டே இருந்துச்சி. அப்புறம் மூனு கருக்கள் அருமையா வளர்ந்துட்டு இருக்கு. ராம் கூட என்னை பார்ட்டிக்கு கூப்பிட்டாரு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்’’

‘’மேற்கொண்டு என்ன செய்யலாம் என யோசித்தபோது நான் உன்னை காதலிக்கத் தொடங்கினேன்’’

‘’சிவா. இந்த உலகத்திற்கு வா’’

‘’சுபா இன்னும் நிறைய சொல்லணும் போல இருக்கு. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு எனக்கு துணையாக கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கணும். நல்லவேளை உன்னை இழக்க இருந்தேன். எல்லா கருவுமே நல்ல நிலையில் இருக்கா’’

‘’இருக்கு, ஜெகன் பேசினாரா’’

‘’தினமும் பேசிட்டு இருக்கோம். இன்னும் மூனு நாளுல ஆரம்பிக்க போறோம்’’

‘’சிவா நாங்களும் கருவை மூனு நாளில் வைக்கப் போறோம்’’

சந்தோசம் நிலைத்து இருக்க வேண்டி மழை பெய்யத் தொடங்கி இருந்தது. (தொடரும்)

பகுதி 10 பிரபஞ்சத்தின் கூறு 

அடுத்த இரண்டு தினங்களில் இரண்டு கருக்கள் சிதைந்து போயின. டாக்டர் ராம் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சுபாவை அழைத்து கடுமையாக சத்தம் போட்டார். சுபா தான் என்ன செய்ய இயலும் என்றே வருத்தம் தெரிவித்தாள். ஆனால் டாக்டர் ராம் சுபாவின் மீது பழியை சுமத்தினார். அன்று தன்மீது சுமத்தப்பட்ட பழியை எவரிடம் சொல்வது என வாடிய முகத்துடனே இருந்தாள். மிச்சம் இருக்கிற அந்த ஒரு கரு பிழைக்க வேண்டுமே எனும் கவலை சுபாவை மிகவும் வாட்டியது. டாக்டர் ராம் சுபாவின் அறைக்கு வந்தார். 

''சுபா அந்த கருவை வேறு ஒரு மீடியாவுக்கு மாத்திரு, இந்த கரு மட்டும் சிதைஞ்சதுன்னா என்னோட கனவு எல்லாம் சிதைஞ்சிரும். உன்னை சத்தம் போட்டது எல்லாம் மனசில வைச்சிக்காதே. என்னோட கோபம் எல்லாம் உன் மேல தான் என்னால காட்ட முடியுது. சாரி சுபா. உனக்கேத் தெரியும் நான் இதற்காக எவ்வளவு போராடுறேனு. எனக்கு நிறைய படபடப்பா இருக்கு சுபா''

''ராம் நான் என்ன பண்ணுவேன். எல்லாம் சரியாத்தான் இருந்தது. எல்லாம் சிதைஞ்சி இருந்தா என்ன பண்றது. நாளைக்கு தீபா வந்துருவாங்க. இந்த கருவை இப்போ வேற மீடியாவுக்கு மாத்தி ஏதாவது ஆச்சினா என்ன செய்றது. இப்படியே இருக்கட்டும். நீ என்னை திட்டினதை எல்லாம் என்னால ஈசியா எடுத்துக்க முடியலை. நீ ஒரு டாக்டர் மாதிரி நடந்துக்கிற மாட்டேங்கிற. உனக்கு புகழ் பெருமை தான் ஒரே குறிக்கோள். தனிப்பட்ட மனுஷரோட எண்ணத்திற்கு நீ எப்போ மதிப்பு தந்து இருக்க சொல்லு''

''இல்லை சுபா. எனக்கு கைகால்கள் ஓடலை, சரி நீ சொன்னமாதிரியே மாத்த வேணாம். நான் வெளில போறேன். நாளைக்கு நல்ல முறையில் இந்த கருவை வைச்சிரு''

''எங்க போற ராம்''

''பிரார்த்தனைப் பண்ணப் போறேன்''

''நல்ல புத்தி கொடுக்கச் சொல்லி பிரார்த்தனை பண்ணு ராம். அப்படியாவது உபயோகமா இருக்கும்''

டாக்டர் ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். 

சுபா இந்த மூன்றாவது கரு சிதையுமோ என்றே பயந்தாள். 

சிவாவை ஜெகன் சந்தித்தான். 

''என்ன சிவா எல்லாம் தயார இருக்கா''

''எல்லாம் தயார் பண்ணிட்டேன், நீ எனக்கு பணம் கொடுத்தா நான் எல்லாம் ஆர்டர் பண்ணி இன்னும் ஒரு மாசத்தில வேலையை ஆரம்பிச்சிருவேன். நாளைக்கு நீ பணத்தை எனக்கு அனுப்பிரு''

''நான் உன்னோட யுனிவேர்சிட்டிக்கு வரேன். என் கண் முன்னால நீ ஆர்டர் பண்ணு''

''என்ன ஜெகன் என் மீது உனக்கு நம்பிக்கை  இல்லையா''

''அதில்லை சிவா, எனக்கு திருப்தியா இருக்கும். நீ சரியானதைத்தான் ஆர்டர் பண்றியானு எனக்கும் தெரியும். தப்பா நினைக்காதே''

''இப்படி இதுவரை நீ சொல்லலியே ஜெகன்''

''வேலைன்னு வந்திட்டா அப்படித்தான் சிவா''

மறுநாள் சிவாவின் ஆய்வகத்திற்குச் சென்றான் ஜெகன். சிவாவிற்கு சிறிது பணத்தை மாற்றினான் ஜெகன். அவனுக்கு முன்னாலேயே சிவா தேவையான காரணிகளை ஆர்டர் செய்தான். ஒவ்வொன்றின் விலையை பார்த்தபோது இது எல்லாம் தேவையா என்றே சிவா மனதில் நினைத்துக் கொண்டான். ஜெகனை சிவா தனது சூப்பெர்வைசரிடம் அறிமுகம் செய்து வைத்தான். இதை ஜெகன் கொஞ்சமும் விரும்பவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளதவன் போலவே இருந்தான். 

''இங்க பாரு சிவா, நீ இந்த காரணிகள் எல்லாம் வந்ததும் பத்திரமா எடுத்து வை. நீ எப்போ ஆரம்பிக்கப் போறியோ அப்போ சொல்லு நான் வரேன்''

''ஜெகன் நீ வந்தா நல்லதுன்னு நானே நினைச்சேன்''

''நீ ரொம்ப சந்தேகத்தோடு இருந்ததால நான் வர வேண்டி இருந்தது. இல்லைன்னா நான் இதில் தலையிட வேண்டியது இல்லை. அதுவும் என்னை அந்த டாக்டர் ராம் பார்த்தா என்னோட நிலைமை என்னாகிறது''

''எதுக்கு ஜெகன் இப்படிப் பயப்படுற''

''சிவா நான் கிளம்பறேன். எல்லா காரணிகள் வந்ததும் தகவல் சொல்லு''

''சரி ஜெகன்''

ஜெகன் சிவாவின் மீது நம்பிக்கை இல்லாதவனாக தென்பட்டான். இவன் நிச்சயம் குழப்பிவிடக்கூடும் என்றே அவனது மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவன் வெளியே சென்றபோது சிவாவின் சூப்பர்வைசர் அழைத்தார். இதை ஜெகன் எதிர்பார்க்கவில்லை. நிறைய விசாரித்தார். ஜெகன் வேறு வழியின்றி தனது பணியிடம் குறித்து சொல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்கு அவர் தன்னிடம் ஒரு புராஜக்ட் இருப்பதாகவும் விருப்பம் இருப்பின் சொல்லவும் கூறினார். ஜெகன் தான் பரிசீலனை செய்வதாக சொல்லிவிட்டு வெளியே வந்தான். 

இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளவே திட்டமிட்டான். ஆனால் டாக்டர் ராம் மீதான அச்சம் அவனை யோசிக்கவிடாமல் தடுத்தது. 

சுபா வேண்டாத தெய்வம் இல்லை. அவளின் முகம் கலக்கத்துடன் இருந்தது. இரவு எல்லாம் சரியாகவே உறங்கவில்லை. சுபாவின் அம்மா சுபாவின் நிலையை எண்ணி மிகவும் வருந்தினார். அதிகாலையில் கிளம்பி கிளினிக் வந்து அடைந்தாள். அவளுக்குள் இருந்த பதட்டம் அவள் அறியாதது. தனது அறையில் எல்லாவற்றையும் வைத்துவிட்டு வேகமாக ஆய்வகத்தில் நுழைந்தாள். கரு இருந்த மீடியாவை எடுத்து நுண்ணோக்கியில் பார்த்தவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்

டாக்டர் ராமை அழைத்து தகவல் சொன்னாள். டாக்டர் ராம் எவ்வித பதிலும் சொல்லாமல் இருந்தார். சுபா மீண்டும் பேசியபோது கருவை வைத்தபின்னர் அது எப்படி வளருமோ அதைப் பொறுத்தே எதுவும் சொல்ல இயலும் என்றார். டாக்டர் ராமின் குரல் உடைந்து இருந்தது. சுபாவுக்கு கொஞ்சம் இருந்த நிம்மதியும் இப்போது போய்த் தொலைந்தது. தீபா தம்பதியினர் வந்து சேர்ந்தார்கள். 

தீபாவை சுபா நன்றாக பரிசோதனை செய்துவிட்டு டாக்டர் ராம் வரட்டும் என்றே காத்து இருந்தாள். ஆனால் டாக்டர் ராம் வெகு நேரமாகியும் வரவில்லை. டாக்டர் ராமிடம் சுபா பேசியபோது தனக்கு வர விருப்பம் இல்லை அதை சுபாவையே செய்ய சொன்னார். சுபா கருவை தீபாவின் கருப்பையில் வைத்துவிட்டு கவனமாக இருக்கும்படி பல ஆலோசனைகளை வழங்கினாள். தீபாவின் எல்லையில்லா சந்தோசம் கண்டு மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் அச்சம் தலைவிரித்தாடியது. 

''எப்போ வரட்டும் டாக்டர்''

''ஒரு வாரம் கழிச்சி வாங்க, நிறைய கவனமா இருங்க''

''இரண்டு கருவுல ஒன்னு தப்பிச்சிரும்ல டாக்டர்''

''ம்ம் தப்பிச்சிரும்’’ தான் ஒன்றுதான் வைத்தேன் என சொல்லாமல் மறைத்தாள் சுபா.

அன்று முழுவதும் டாக்டர் ராம் வரவில்லை. சுபாவின் மனம் நிறைய வருத்தத்தில் இருந்தது. ஒவ்வொரு தினமும் எப்படி கடந்தது என அவளால் விவரிக்க இயலவில்லை. டாக்டர் ராம் சுபாவிடம் அதிகம் பேசவும் இல்லை. 

''ராம் என்ன ஆச்சு''

''டாக்டர் சுபா, நான் தப்பு பண்ணிட்டேனோ''

''என்ன ராம்''

''இதை பண்ணியிருக்கக் கூடாதுன்னு மனசில ஒரு யோசனை''

''முன்னமே சொன்னேன் ராம் நீதான் கேட்கலை''

''அந்த இரண்டு கரு சிதைஞ்சது என்னை என்னமோ பண்ணுது டாக்டர் சுபா, அதுவும் இந்த கரு நிலைக்குமானு ஒரே பயம்''

''இதுவரைக்கும் அவங்க ஒன்னும் சொல்லலை ராம்''

''நாலு நாள் தான் ஆயிருக்கு, முழு குழந்தை உருவாகி பிறந்து என்னால தோல்வியை ஏற்க முடியாது டாக்டர் சுபா''

''ராம்''

ராம் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார். ஒரு மனிதனின் முயற்சிக்கு ஏற்படும் தோல்வி ஒருவரை துவளவே செய்யும். 

சுபா ஸ்ரீரங்கம் புறப்பட்டுச் சென்று ரெங்கநாதனை சந்தித்தாள். ரெங்கநாதன் சுபாவை பார்த்ததும் என்னோட ஞாபகம் வந்துருச்சா என்றார். சுபா ரெங்கநாதனிடம் எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தாள். ரெங்கநாதன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு தான் என்ன செய்ய வேணும் என்றார். 

''இந்த குழந்தை நல்லபடியா பிறக்குமா தாத்தா''

''நான் என்ன ஜோசியக்காரானா''

''நீங்க சொன்னதே எனக்கு தைரியம் தந்தது தாத்தா''

''பிறக்கும் பிறக்கும், என்னை பெரிய சாமியாரா ஆக்கிராதேள்''

''தாத்தா உங்களப் பாத்து மனசு தைரியம் அடையலாம்னு வந்தேன்''

''கவலைப்படவேணாம், எல்லாம் நல்லா நடக்கும்னு நம்புங்கோ''

அவர் அப்படி சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பினார். சுபா தான் எதற்கு வந்தோம் என்கிற உணர்வு எதுவும் இன்றி அப்படியே உறைந்து நின்றாள். அவரை பின் தொடர்ந்து செல்ல வேண்டும் என மனம் எண்ணி பின் தொடர்ந்தாள். ரெங்கநாதன் கோவிலுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். 

''தாத்தா''

''நீங்க ஊருக்குப் போங்கோ, எல்லாம் நல்லபடியா நடக்கும், நான் இப்போ ரெங்கனோட பேச வந்து இருக்கேன், நீங்க ஸ்தோத்திரம் கேளுங்கோ''

''வரேன் தாத்தா''

கோவிலில் சென்று வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். சுபாவின் பெற்றோர்கள் சுபாவிடம் நிறைய நேரம் பேசினார்கள். சுபா எல்லா விபரங்களையும் சொல்ல வேண்டிய சூழல் வந்தது. ஆனால் ரெங்கநாதன் குறித்து சொல்லி விஷயத்தை மாற்றினாள். 

ஒரு வாரம் கழித்து தீபாவை பரிசோதித்தபோது எவ்வித பிரச்சினை இல்லாமல் இருந்தது சுபாவுக்கு திருப்தியாக இருந்தது. டாக்டர் ராமிடம் சொன்னபோது தான் கவலைப்படுவது போலவே ராம் காட்டிக்கொண்டார். இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தது. 

ஜெகன் சிவாவின் ஆய்வகத்தில் வேலைக்குச் சேர்ந்தான். சிவா அதிர்ச்சி அடைந்தான். 

(தொடரும்) 






 11. துரோகம் சிலரின் இயல்பு

‘’என்ன ராஜ் சொல்ற, ஜெகன் வேலையை விட்டுட்டானா? இப்போ எங்கே இருக்கான்’’

‘’டாக்டர், அவன் பஞ்சாப் போறதா சொல்லிட்டுப் போனான்ல, அப்புறம் வந்து பஞ்சாப்பில் வேலை உறுதி ஆயிருச்சினு எல்லாம் காலிபண்ணிட்டுப் போயிட்டான்’’

‘’அவனோட நம்பர் இருக்கா’’

‘’இல்லை டாக்டர்’’

‘’அவன் என்னமோ விளையாடுறான் ராஜ், நீ பஞ்சாப்புக்கு வேலை மாத்திப் போக முடியுமா?’’

‘’அவன் எங்கே இருக்கானு தெரியாம எப்படி மாத்திப் போறது டாக்டர்’’

‘’நீ அவனோட சூப்பர்வைசர்கிட்ட அவனைப்பத்தி விசாரிச்சி இப்பவே சொல்லு’’

‘’டாக்டர் இருங்க இப்பவே கேட்டுட்டு வரேன்’’

தங்கராஜ் சென்று சூப்பர்வைசரிடம் விசாரித்தபோது எதுவும் என்னால் ஜெகனைப் பற்றி சொல்ல முடியாது. அவன் ஒரு துரோகி. அவனுக்கு துரோகம் இழைப்பதே பழகிப்போய்விட்டது. விடுமுறை என போனவன் எனக்கு எந்த தகவலும் அவன் சொல்லவே இல்லை. எங்கு போனான் என்ன ஆனான் எனத் தெரியாது. எல்லாத் தொடர்புகளையும் துண்டித்து வைத்து இருக்கிறான் என்ற செய்தி தங்கராஜிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘’டாக்டர் அவன் வேலை விசயமா போகலை’’

‘’ராஜ், அப்படின்னா அவன் சொந்த ஊருக்குப் போயிருக்கனும்’’

‘’எல்லா சோசியல் நெட்வொர்க் அவன் டீஆக்டிவேட் பண்ணி இருக்கான் டாக்டர்’’

‘’நீ எதுக்கும் சென்னைக்கு கிளம்பி வா. உன்னோட வேலையை இங்கப் பாத்துக்கிரலாம்’’

‘’டாக்டர், அங்கே வேலை கிடைச்சப்பறம் சொல்றேன் டாக்டர்’’

‘’ராஜ், நீ கிளம்பி வா’’

‘’ஒரு மாசம் டைம் கொடுங்க டாக்டர்’’

‘’சரி வந்து சேரு’’

ஜெகன் தன்னை ஏமாற்றுவது போன்று உணர்ந்தார் டாக்டர் ராம். தான் உண்மையில் பயப்படுவது போல குழந்தை பிறக்கும் வரை டாக்டர் சுபாவிடம் நடிக்க வேண்டும் என முடிவு செய்தவருக்கு ஜெகனின் பிரச்சினை புதியதாக இருந்தது.

‘’ஜெகன், எப்படி நீ இந்த ஆய்வகத்தில் சேர்ந்த’’

‘’எல்லாம் நீ செய்துவைத்த அறிமுகம் சிவா’’

‘’என்ன புரோஜக்ட்’’

‘’பிறகு சொல்றேன், எல்லா வேலையும் நானே செய்துக்கிறேன். இதில் நீ தலையிட வேண்டாம்’’

‘’ஜெகன், உன்னால எப்படி இப்படி நடக்க முடியுது, டாக்டர் ராம் கண்ணில் நீ பட்டால் என்ன ஆகும்னு தெரியுமா. பயந்துட்டு இருந்தியே’’

‘’என்ன ஆகும், எல்லாத் திருட்டும் அவன் பண்ணிட்டு இருக்கான், நான் எதுக்குப் பயப்படனும்’’

‘’ஜெகன், உன்னால என்னோட வேலைக்குப் பாதிப்பு வந்துராம பாத்துக்கோ, இல்லை நான் பொல்லாதவன் ஆயிருவேன்’’

‘’அது நீ சூப்பர்வைசரிடம்தான் போய் பேசனும், என்னைப் பிடிச்சி இருந்தது சேர சொல்லிட்டார்’’

‘’உன்னோட டில்லி சூப்பர்வைசர்கிட்ட சொன்னியா’’

‘’எதுக்கு, நான் கொடுத்த ரெபெரேன்ஸ் வேற, அவருக்கு நான் எங்க இருக்கேன்னு தெரியாது. நீ என்னோட விசயத்தில் இனிமே தலையிடாத, அப்படி பண்ணின அவ்வளவுதான்’’

சிவா ஜெகனின் குணம் கண்டு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தான்.

‘’ஜெகன் இனிமேல் இந்த விசயத்தில் நான் தலையிட மாட்டேன்’’

‘’வெல்டன் சிவா’’

சிவா சூப்பர்வைசரிடம் சென்று ஜெகன் பற்றி பேசியபோது நீ  இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா என்ன அர்த்தம் என சிவாவையே அவர் சத்தம் போட்டார். ஜெகனுக்காக என்ன ஆர்டர் பண்ணினியோ அதெல்லாம் ஜெகன் கிட்ட கொடுத்துரு. அவரோட புரொஜக்ட்ல நீ தலையிடாத. அதற்குமேல் எதுவும் பேசுவதற்கு இல்லை என சிவா அமைதியானான்.

ஜெகன் எல்லாம் திட்டமிட்டுப் பேசித்தான் உள்ளே வந்து இருக்கிறான் என்று நினைத்தபோது சிவாவினால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி இருக்கிறான் என்றே நினைத்தான் சிவா. தான் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தான்.

டாக்டர் ராம் தான் எதிலும் நேரடியாக தலையிடக்கூடாது என்றே எல்லா விசயங்களையும் தங்கராஜ் மூலம் செய்து வந்தார். தங்கராஜ் சென்னைக்கு வந்தபின்னர் ஜெகன் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்தார். வேலையைவிட்டு வர நாட்கள் வேணும் என்றதால் உடனே விடுமுறை எடுத்துக்கொண்டு ஜெகன் பற்றி அவனது ஊரில் சென்று விசாரிக்கச் சொன்னார்.

தங்கராஜ் அதன்படியே நேராக ஸ்ரீரங்கம் சென்று தன்னை ஜெகனின் நண்பன் என அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்தான். அதற்கு ஜெகனின் பெற்றோர்கள் ஜெகன் டில்லியில் இருப்பதாக சொன்னார்கள். தங்கராஜ் விபரங்கள் எல்லாம் கூறியபின்னர் தங்களுக்கு வேறு எந்த தகவலும் வரவில்லையே என்றார்கள். இந்த ஜெகன் என்ன ஆனான் எனும் குழப்பம் தங்கராஜிற்கு வந்து சேர்ந்தது.

‘’டாக்டர் ராம், ஜெகன் பத்தின விபரங்கள் அவங்க அப்பா அம்மாவுக்கே தெரியலை’’

‘’ராஜ், அவன் என்னை ஏமாத்துறான், நீ சென்னைக்கு கிளம்பி வா, உனக்கு புது வேலை நான் இங்கே ஏற்பாடு பண்றேன்’’

‘’இல்லை டாக்டர், நான் வேலை மாறிட்டுத்தான் வர முடியும்’’

‘’சரி ராஜ்’’

டாக்டர் ராம் குழப்பம் நிறைந்தவராகத் தென்பட்டார். டாக்டர் சுபா ராமிடம் பேச வேண்டும் என அனுமதி கேட்டுக்கொண்டு சென்றாள்.

‘’என்ன டாக்டர் சுபா?’’

‘’பாலகுரு திவ்யா அவங்களுக்கு இதே மாதிரி பண்ணனும் ராம். எதுவும் மாத்தாம அப்படியே பண்ணினா பிரச்சினை இருக்காது’’

‘’டாக்டர் சுபா, நீ உன் விருப்பம்போல செய். எனக்கு இன்னும் மனசு ஒரு நிலைக்கு வரலை’’

‘’ரொம்பவும் ஒருமாதிரி இருக்கியே ராம்’’

‘’அதெல்லாம் ஒன்னுமில்லை, நீ அவங்களுக்கு இப்படியே பண்ணு’’

‘’ராம் எதுவும் உதவி தேவையா’’

‘’எதுவும் வேணாம்’’

டாக்டர் ராம் தன்னை நம்பி எல்லாம் ஒப்படைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் சுபா. தீபாவிடம் விசாரித்தபோது தான் நன்றாக அதுவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

அன்று சிவா அவசரம் அவசரமாக சுபாவை சந்திக்க வேணும் என அழைத்தான். சுபாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லி சிவா முடித்தபோது அந்த வேலையை மட்டும் விட்டுராதே சிவா என்று சொன்னாள் சுபா.

தினங்கள் நகர்ந்து கொண்டு இருந்தன. ஜெகன் தன்னை ஒரு முழுமூச்சுடன் ஆய்வில் ஈடுபடுத்திக் கொண்டான். சிவராம் ஜெகனின் மீது தனி வெறுப்பு வளர்க்க ஆரம்பித்தான்.

திவ்யாவின் அண்ட செல்கள், பாலகுருவின் விந்து செல்கள் எடுத்து முன்னர் போலவே ஆய்வகத்தில் இணைத்தாள் சுபா. எப்படியும் இந்த முறை நன்றாக வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். டாக்டர் ராம் சுபா என்ன செய்து வைத்து இருக்கிறாள் என சுபா சென்றபின்னர் ஆய்வகத்தில் சென்று பார்த்து திருப்தி அடைந்தார்.

நாட்கள் நகர கரு எவ்வித பிரச்சினை இன்றி வளர்ந்து இருந்தது. அதில் ஒன்றை மரபணு ஆய்விற்கு உட்படுத்தினார் டாக்டர் ராம். இதை எம்ப்ரோயினிக் பிரி இம்ப்லேன்ட்சன் என சொல்வார்கள். இதன் மூலம் ஏதேனும் கருவில் பாதிப்பு இருக்கிறதா என்றெல்லாம் கண்டு கொள்ளலாம். இந்த ஆய்வின் முடிவில் இன்ட்ரான்கள் இல்லாமல் கரு வளர்ந்து இருந்தது. அதைக்கண்டு பேரின்பம் கொண்டார் டாக்டர் ராம்.

‘’ராம், ரிப்போர்ட் எப்படி இருக்கிறது’’

‘’நினைச்சது நடந்திருச்சி டாக்டர் சுபா’’

‘’இன்ட்ரான்கள் எல்லாம் இல்லையா’’

‘’இல்லை டாக்டர் சுபா, எல்லாம் திரும்பத் திரும்ப ஆய்வு செய்து உறுதிபடுத்தியாகிவிட்டது. மகிழ்ச்சியின் எல்லைக்கு அளவே இல்லை’’

‘’நேத்து வரை ஒருமாதிரி இருந்தியே ராம்’’

‘’அது நேத்து டாக்டர் சுபா. ஆனா இது இன்று. கடந்தகால இன்பத்திற்கு நிகழ்காலம் பொறுப்பாகிறது’’

‘’எனக்கும் மகிழ்ச்சி ராம். இதற்கடுத்து எப்போ அடுத்த தம்பதிக்கு பண்ணப் போறோம்’’

‘’இல்லை டாக்டர் சுபா, இன்னும் ஒரு வருஷம் கழிச்சி பண்ணலாம், இப்ப ஒன்னும் அவசரமில்லை’’
‘’சரி ராம்’’

‘’டாக்டர் சுபா, உனக்கு எப்போ கல்யாணம்’’

‘’தெரியலை ராம்’’

‘’உன்னை பொண்ணு கேட்டு வரலாம்னு யோசிக்கிறேன்’’

‘’ராம்’’

‘’உன்னை மாதிரி ஒரு நம்பிக்கையான பொண்ணுதான் வேணும் டாக்டர் சுபா’’

‘’ராம், உன்னை மாதிரி ஒரு ஆளு எல்லாம் எனக்கு கணவன் ஆக முடியாது, இதைபத்தி மேற்கொண்டு பேச வேண்டாம்’’

சந்தோசத்தில் என்ன பேச வேண்டும் என தெரியாமல் பேசிவிட்டோமோ என டாக்டர் ராம் ஒருகணம் சிந்தித்தார். மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். ஆனால் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் நாம் தடுமாறிவிடுகிறோம்.

‘’டாக்டர் சுபா, தெரியாமல் கேட்டுட்டேன்’’

சுபா பதில் எதுவும் சொல்லாமல் வெளியேறினாள். இந்த உலகம் பெண்களுக்கானதுதான். ஆனால் ஆண்கள் அதை ஒருபோதும் உணர்ந்து கொண்டது இல்லை. தானே இவ்வுலகத்தின் முதன்மை என ஒவ்வொரு ஆணும் ஒரு கணத்தில் எண்ணிவிடக்கூடும்.

அந்த வார சனிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்றுகொண்டு இருந்தாள் சுபா. ரெங்கநாதன் பற்றி அறிந்து கொள்ள நிறைய ஆர்வம் வந்து இருந்தது. சுபாவை கண்டதும் அடையாளம் கண்டவராக என்ன விசேசம் என்றார்.

‘’உங்க ரத்தம் பரிசோதனை பண்ணலாமா தாத்தா’’

‘’மரபணு பரிசோதனையா’’

‘’ஆமா தாத்தா’’

‘’தாராளமா பண்ணலாம்னோ’’


ரெங்கநாதனை தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் சென்றாள் சுபா (தொடரும்) 

Friday 26 February 2016

மாறா மரபு - 5

7. அறியாதவரை ரகசியம்

‘’தாத்தா உங்க பேரு என்னனு சொல்லலையே’’

‘’ரங்கநாதன்’’

‘’உங்க பேரு’’

‘’ரங்கநாதன்’’

‘’அது இல்லை தாத்தா, உங்களுக்கு உங்க அம்மா அப்பா வைச்ச பேரு’’

‘’ரங்கநாதன்’’

‘’ரங்கநாதன்?’’

‘’ஏன் என் பேரு ரங்கநாதன் அப்படினு இருக்கக்கூடாதா? பேசாம வாரும்’’

சாலை இருமருங்கிலும் கடைகள். மல்லிகைப்பூ வாசமும், குளிர்ந்த காற்றும் என மிகவும் ரம்மியமாக இருந்தது. இத்தனை கடைகளிலும் வியாபாரங்கள் நடந்துகொண்டு இருக்கத்தான் செய்கின்றன, வாங்குவதற்கு மக்கள் கடையில் நின்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரின் முகமும் பரிச்சயமற்ற முகங்களாகவே சிவராமிற்கு காட்சி அளித்தது. என்னவென்னவோ பேசிக்கொண்டே இவர்களை பலர் கடந்து கொண்டு போனார்கள்.

இந்த அறிவியல் உலகில் ஆன்மிகம் எனும் ஒன்று இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் என்னவென ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள் என சிவாரம் எண்ணிக்கொண்டே நடந்தான். ரங்கநாதன் கோவிலின் பிராதன  வாசற்படியைத் தாண்டியதும் வலப்புறம் திரும்பினார். அங்கிருந்து நேராக நடந்து இடப்புறம் திரும்பினார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சிவராம் தன்னைத்தான் பேச வேண்டாம் என சொன்னார், அவராவது பேசலாமே என மனதில் எண்ணிக்கொண்டான். அந்த தெருவானது அத்தனை சுத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த தண்ணீர்க்  குழாய் ஒன்றில் ஆடவர், பெண்டிர் என தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சின்ன இடம்  ஒன்றில் சிறுவர்கள் சிறுமியர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருவின் இரண்டு பக்கங்களிலும் வெட்டப்படாத மரங்கள் பூத்து குலுங்கிக் கொண்டு இருந்தன.

ரங்கநாதன் குடிசையின் முன் சென்று நின்றார். அந்த குடிசைக்கு கதவு அவசியமில்லை என்றாலும் கதவு ஒன்று இருக்கத்தான் செய்தது. குடிசையின் இருபுறமும் சன்னல்கள் கூட வைக்கப்பட்டு இருந்தன. கதவைத் தள்ளினார், திறந்தது.

‘’கதவுக்கு பூட்டு போடும் பழக்கம் இல்லையா தாத்தா?’’

‘’இல்லை’’

ஒரு விளக்கை ஏற்றி வைத்தார். உள்ளே சமையல் அறை என எதுவும் இல்லை. ஒருபுறம் துணிகள் என சில அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மறுபுறம் பல புத்தகங்கள் இருந்தது.

‘’ரகசியம் அப்படின்னு சொன்னீங்களே’’

‘’சத்ய யுகம் தெரியுமோ?’’

‘’தெரியாது’’

‘’கலியுகம் தெரியுமோ?’’

‘’இப்ப நடக்கிறதுதானே தாத்தா’’

‘’வேத சாஸ்திரங்கள் படிக்கிறது உண்டோ?’’

‘’எனக்கு ஆர்வம் இருந்தது இல்லை, சாமி கும்பிடறது எல்லாம் ஒரு சம்பிரதாயம்’’

‘’கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும்’’

‘’படிக்கிறது இல்லை’’

‘’சத்ய யுகத்திலே இருந்த மனுசாளுடோ மரபணுக்கள் வெறும் முப்பதாயிரம் மட்டுமே. அவா உயிரோட வாழ்ந்த வருடங்கள் நூறு வருஷ கணக்கு இல்லை ஆயிர வருஷ கணக்கு. அவாளுக்கு மூப்பு எல்லாம் உடனே வருவது இல்லை. நோய் இல்லை. நொடி இல்லை. இது எல்லாம் ரகசியம்’’

சிவராம் தனது தலையில் கை வைத்துக் கொண்டான். நாம் இன்ட்ரான் எக்ஸ்சான் பத்தி எதுவும் ரகசியம் சொல்வார் என்று நினைத்தால் பழம்பெரும் கதை ஒன்றை சொல்கிறார் என நினைத்து பெருமூச்சு விட்டான்.

‘’இப்போ லோகத்திலே மரபணு பத்தி பெரிசா பேசறா, அதுவும் இன்ட் ரான் எக்ஸான் அதிலும் இன்ட்ரான் எல்லாம் விலக்கப்பட்டு எக்ஸான் மட்டுமே புரதம் உருவாக்க போதும் அப்படினும் இந்த இன்ட்ரான் எல்லாம் எப்படி உருவாச்சுனும் தலையைப் போட்டு பிச்சுக்கிறா. அதுவும் இந்த இன்ட்ரான் எல்லாம் இருக்கிறதாலதான்  மனுசா நிறைய அறிவாளியா உருவானாங்கனு சொல்லிக்கிறா, ஆனா இந்த இன்ட்ரான் இல்லாம இருந்ததால் தான் மனுசா எல்லாம் பேதம் குரோதம் எல்லாம் பாக்காம இருந்தா அப்படின்னு சத்யயுகத்திலே சொல்லப்பட்டு இருக்கு.  எந்தவொரு வர்ணாஸ்ரமம் எல்லாம் இல்லை, மதம் இல்லை, சிலைகள் இல்லை, கோவில்கள் இல்லை அப்போ மனுசாள் மட்டுமே கடவுள்.  எல்லோரிடத்திலும் இறைவன் உண்டு அப்படின்னு சொல்றதுதான் சத்ய யுகம், எக்ஸான் யுகம், சத்ய யுகத்திற்கு அப்புறம் இந்த இன்ட்ரான் மெல்ல மெல்ல உள்ள சேர்ந்தப்ப உண்டானதுதான் மனித வேறுபாடுகள், மனுசாள் எல்லாம் இந்த இன்ட்ரான்களால் தான் குரோதம் கொண்டு இருக்கா’’

சிவராம் தான் என்ன கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தான். ஒரு விஷயத்தை அப்படியே புராண கதைகளோடு சம்பந்தபடுத்தும் ஒரு புத்திசாலித்தனம் வெகுவாக பரவிக்கொண்டு வருகிறது என சிவராம் மனதில் நினைத்தான், ஆனால் இவர் எப்படி?

‘’இதை வேறு யாருகிட்ட எல்லாம் சொல்லி இருக்கீங்க தாத்தா?, இல்லை இது யாரு உங்களுக்கு சொன்னா தாத்தா?’’

‘’என்னை என்னனு நினைச்சேள்?, விளைச்சல் இல்லா நிலத்தில நீரைப் பாய்ச்சி அறுவடை பண்றதுக்கு எல்லாம் நான் கத்துக்கிட்டது இல்லை. ரகசியம் அப்படின்னு சொன்னேனே, உம்ம காதில விழுந்துச்சோ இல்லையோ, எப்படி வேறு யாருகிட்டயும் இதை சொல்லி இருக்க முடியும்னு நினைக்கிறேள், முத முதலில் இதை உம்மகிட்டதான் நான் சொல்றேன். எனக்கு இது என்னோட தாத்தா சொன்னது, என் தாத்தாவுக்கு அவங்க அப்பா சொன்னது இப்படி பல காலங்களாக சொல்லப்பட்டு வரக்கூடிய ஒன்னு. அவா எல்லாம் சொல்லும்போது இந்த இன்ட்ரான் எக்ஸான் அப்படின்னு சொல்லலை. உள்ளுக்குள்ள இருக்கிற மாற்றம் மனுசாளை மாத்துதுனு சொல்லிட்டு வந்தா. நான்தான் அது என்னவாக இருக்கும்னு யோசிச்சி இந்த ஞானம் தோன்றினது. இன்ட்ரான் இல்லாத குழந்தைகள் உருவாகும் காலம் ஒன்று தோன்றும்போது இந்த கலியுகம் மறைஞ்சி சத்யயுகம் தோன்றும். இது கால சுழற்சி’’

‘’சரி, பேச்சுக்காகவே வைச்சிக்குவோம், இது இயற்கையாகவே நடக்குமா தாத்தா’’

‘’என்ன பேச்சுக்குனு சொல்றேள், எல்லாம் இயற்கை தான், செயற்கைனு நாம பேரு வைச்சிக்கிட்டோம், இங்கே இருந்துதானே எல்லாம் நாம செய்றோம்னோ, உமக்கு அது எப்படி நடந்தா என்ன, கால காலமாக அதுதான் நடக்கிறது. இதுதான் இந்த பிரபஞ்ச உலக ரகசியம். நான் இதை எல்லாம் எழுதலை, இதை நீர் எழுதி பெரிய பேரு வாங்கிக்கும். உம்மகிட்ட சொல்லிய திருப்தி எனக்கு போதும். இந்தாரும் தண்ணீர் அருந்தும்’’

‘’விலங்குகள் கூடவா அப்படி?’’

‘’அவா எப்பவுமே அப்படித்தான், சத்ய யுக தொடக்கத்திலே இந்த கலியுக விலங்கு, மனுசா எல்லாம் இருப்பா, கொஞ்ச வருசத்திலே எல்லாம் அழிஞ்சி போயிருவா. பல்லாயிர வருஷம் பின்னால் மறுபடியும் தோன்றுவா, அடுத்த யுகம் அடுத்த யுகம் அப்படின்னு தொடரும். ஆனா சத்ய யுகம் மட்டுமே எக்ஸான் யுகம்’’

‘’சாப்பாடு, சமைக்க அப்படின்னு சமையல் அறை எதுவும் இல்லையே தாத்தா’’
‘’யாராவது வந்து கொடுத்தால் மட்டுமே நான் சாப்பிடுவேன். இந்த தண்ணீர் கூட ஒருத்தர் வந்து வைச்சிட்டுப் போனதுதான். இந்த குடிசை வீடு என்னோட நிலம் இல்லை. நான் இங்கே தங்க ஒருத்தர் கொடுத்த இடம்தான் இது. மாளிகை எல்லாம் தந்தா, அது நீயே அனுபவினு சொல்லிட்டேன். இந்த புத்தகங்கள் எல்லாம் ஒருத்தர் வந்து தந்தா. நான் எதுவும் விலை கொடுத்து வாங்குறது இல்ல. எனக்கு இருக்க துணி எல்லாம் தட்சணையா வந்தது. ஒரு தடுமல், காய்ச்சல் அப்படின்னு இதுவரை படுத்தது இல்லை, ஆனா முதுமை வந்துடுத்து’’ 

‘’இப்படி இருக்கிறதால என்ன சாதிச்சிட்டதா நினைக்கிறீங்க?’’

‘’என்ன சொல்றேள், சாதிக்கவா இந்த லோகத்தில பிறக்கிறோம்?, வாழனும், நம்ம விருப்பப்படி வேறு எவருக்கும் கட்டுப்படாம சுதந்திரமா வாழனும்’’

‘’அப்படி வாழ்ந்து என்ன உலகத்தில் கண்டீங்க’’

‘’என் ரங்கநாதனை கண்டேனில்லையோ, சத்ய யுகத்தை எனக்குள்ள கண்டேனில்லையோ’’

‘’தாத்தா, வேறு ஏதாவது ரகசியம் இருக்கா?’’

அமர்ந்தவர் கண்களை மூடினார். காற்று வீசும் சப்தம் மட்டுமே கேட்டது. எப்படியும் ஒரு பத்து நிமிடங்கள் மேல் ஆகி இருக்கும். சிவராம் தாத்தா என அழைக்க நினைத்து அமைதி ஆனான். அமர்ந்து இருந்தவர் சட்டென வலது புறம் சாய்ந்தார். சிவராம் அதிர்ச்சி ஆனான். தாத்தா என அலறியவன் தண்ணீர் எடுக்க நினைத்து எழும் முன்னர் சட்டென சாய்ந்தவர் எழுந்து நின்றார்.

‘’இன்ட்ரான் இல்லாத பெண் குழந்தை ஒன்று ஆண் குழந்தை ஒன்று இன்னும் இரண்டு வருடத்திற்குள் இந்த பூமியில் பிறக்கும். அந்த குழந்தைகளே சத்ய யுகத்தைத் தொடங்கி வைக்கப்போகின்ற குழந்தைகள். இன்னும் பல ஆயிரம் வருடங்களில் எக்ஸான் யுகம் மட்டுமே. எதுவுமே பேசாமல் நீர் இனி போகலாம்’’

சிவராம் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.
‘’தாத்தா, நீங்க சொல்றது’’

அதற்குள் ரங்கநாதன் அப்படியே கீழே படுத்து கண்களை மூடிக்கொண்டார். சிவராம் பலமுறை அழைத்தும் அவர் கண்களை திறந்து பார்த்தவர் எதுவும் பேசவில்லை. இனி அங்கு இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என கருதி வெளியேறினான். சுபாவிடம் தான் நாளை சென்னையில் இருப்பேன் என தகவல் மட்டும் சொன்னான்.

இந்த ரங்கநாதன் தாத்தா சொன்னது எல்லாம் அவனுக்குள் சுழன்று கொண்டு இருந்தது. தான் ஸ்ரீரங்கம் வந்தது, ஜெகனிடம் பேசியது, இவரை சந்தித்தது எல்லாம் கனவாக இருக்கக்கூடும் என்றே எண்ணுமளவு அவனுக்குள் ஒரு பெரும் குழப்பம் வந்து சேர்ந்து இருந்தது.

நமது சிந்தனைக்கு உதவும் மனிதர்கள் நமது வழியில் தென்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்வதில் உள்ளது நமது சிந்தனையின் செயல்பாடு. யூகத்தில் பேசும் பேச்சுக்கள் எல்லாம் பலிப்பது இல்லை. பலித்தபின் யூகம் வந்த காரணம் எவரும் விளங்க முடிவது இல்லை.

இதை எல்லாம் சுபாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என எண்ணி பேருந்தில் சென்னை நோக்கி பயணம் செய்தான் சிவராம். அதிகாலையில் வீடு சென்று விரைவாக குளித்து சுபா மருத்துவமனை செல்லும் முன்னர் அவளை வழியில் சந்தித்தான். எல்லா விசயங்களையும் சொல்லி முடித்தான்

‘’சிவா, இது எல்லாம் உண்மையா இல்லை நீயா கதை எதுவும் சொல்றியா?’’

‘’நான் சொன்ன விபரங்களை வைச்சி நீ வேணும்னா ஸ்ரீரங்கம் போயிட்டு வா’’

‘’அப்போ அந்த ராம் சொன்னது எல்லாம் நடக்குமா?’’

‘’நடக்கும்னு எனக்கு தோணுது சுபா, ஜெகன் காட்டின படங்கள், மூலக்கூறுகள் வேலை செய்யும் விதம் அப்படியே என் மனசுக்குள்ள இன்னும் இருக்கு. இது உண்மையிலேயே மனித வரலாற்றில் ஒரு மாபெரும் மரபணு புரட்சி, நீ அந்த தம்பதிகளைப் பார்த்தியா, அவங்க உடம்புல எதுவும் மாற்றம் இருக்கா, ஏதாவது சிம்ப்டம்ஸ் சொன்னாங்களா’’

‘’எதுவும் சொல்லலை சிவா, அவங்களை ராம் நேரடியா டீல் பண்றான். நான் அங்கே ஒரு வேடிக்கைப் பார்க்கிற மாதிரிதான் இருக்கேன். ரொம்ப நார்மலா இருக்காங்க. சிவா, அடுத்த தம்பதிகள் பாலகுரு, திவ்யா வர இருக்காக்கங்க, திங்கள் வர வேண்டியவங்களை மாத்திவிட்டுட்டான் ராம். அவங்ககிட்ட பேசட்டுமா?’’

‘’நோ நோ சுபா. நீ இனி பண்ண வேண்டியதெல்லாம் டாக்டர் ராமுக்கு உதவி பண்றது மட்டும்தான். டாக்டர் ராம் கிட்ட போய் நல்லா யோசிச்சிப் பார்த்தேன், ஐ வில் கோ ஆப்பரேட் வித் யூ அப்படின்னு சொல்லு’’

‘’சிவா திஸ் இஸ் நாட் ரைட்’’

‘’சொன்னா கேளு சுபா, அந்த ரங்கநாதன் தாத்தா சொன்னதை கேட்டதுல இருந்து ஐ திங் யூ சுட் ப்லீவ் இட்’’

‘’சரி சிவா, நான் ராம் கிட்ட சொல்றேன். நானும் இந்த வீக்கென்ட்ல ஸ்ரீரங்கம் போயிட்டு வரேன்’’

சுபா மருத்துவமனைக்குள் நுழைந்தாள். டாக்டர் ராம் நிறைய ஆலோசனையில் தனது அறையில் அமர்ந்து இருந்தார். அறையை விட்டு வெளியேறியவர் சுபா வருவதைப் பார்த்ததும் சுபாவை நோக்கி சென்றார்.

‘’டாக்டர் சுபா, இன்னைக்கு வரவங்க கிட்ட எதுவும் சொல்லமாட்டேன்னு எனக்கு உறுதி கொடு’’

‘’சொல்லமாட்டேன் டாக்டர் ராம், நானும் நல்லா யோசிச்சேன் எனக்கு உன் மூலமா வரப்போற பேரை எதுக்கு நான் கெடுத்துக்கணும்’’

‘’வாவ், கிரேட் டாக்டர் சுபா. வாட் எ சர்ப்ரைஸ். ஆனா உன்னோட கிரிமினல் புத்தியை பயன்படுத்த நினைச்சா அப்புறம் நான் டாக்டராக இருக்க மாட்டேன். என்னோட நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும்’’

‘’இல்லை டாக்டர் ராம். சத்தியம். நோ வேர்ட்ஸ். ஐ டேக் இன்சார்ஜ்’’

‘’வெரிகுட், எப்படி இப்படி ஒரு மாற்றம்’’

‘’சுகுமார், தீபா ரொம்பவும் இயல்பா எவ்வித பிரச்சினை இல்லாம இருக்காங்க அதனால எனக்கு நம்பிக்கை வந்தது’’

‘’நைஸ். பாலகுரு இன்னைக்கு தன்னோட மனைவியோட மதியம் இரண்டு மணிக்கு வரார். அதோட இதை நிறுத்திக்குவோம். நாம் கொஞ்ச நாளைக்கு எதுவும் பண்ண வேண்டாம். குழந்தைகள் பிறந்தப்பறம் நாம் அவங்க டெவெலப்மென்ட் பார்த்துட்டு அவங்க இப்படி பிறந்த காரணத்திற்கு என்னவெல்லாம் செய்தோம்னு  உலகத்துக்கு காட்டணும் டாக்டர் சுபா, அந்த ஜெகன் எப்படியும் உன்னை மாதிரி என்கிட்டே வருவான்’’

‘’ஓகே டாக்டர் ராம்’’

சுபாவின் மனமாற்றம் குறித்து ராம் பெரிதாக யோசிக்கவில்லை. தன்னை மீறி சுபா எதுவும் செய்ய இயலாது என ராம் நம்பினார்.

பாலகுரு, திவ்யா நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதுவும் குறிப்பாக கேப்ச்யூல்ஸ் பற்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராம் தெளிவாக பதில் சொன்னாலும் பாலகுரு இதெல்லாம் தேவையா என்றே கேட்டார். ஒருவழியாக அவர்களை சம்மதிக்க வைக்கும் முன்னர் ராம் சரி கேப்ச்யூல்ஸ் வேண்டாம் என சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். சுபா தான் சில விசயங்களை பேசி அவர்களை முழு மனதோடு சம்மதிக்க வைத்தாள். அவர்கள் சந்தோசமாக கிளம்பி சென்றார்கள். கோபத்தின் உச்சியில் இருந்தார் ராம்.  

‘’டாக்டர் சுபா, நான் ஒரு முட்டாள்னு நீ என்னை நம்ப வைக்க பாக்கிறல, இதுல கேம் விளையாடின உன்னோட லைப்ப முடிச்சிருவேன்’’

சுபா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள் (தொடரும்)


Monday 22 February 2016

ஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)

முந்தைய பகுதி 

இதற்கு முந்தைய பகுதியை எழுதி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் பேரதிசயங்கள் நிகழவே செய்து இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக இந்த கருந்துளை பற்றிய சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு பிரமிக்கத்தக்க ஒன்றுதான். 

இந்த கருந்துளைகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்த போதிலும் எதுவுமே விளங்கிக்கொள்ள முடிந்தது இல்லை. தனக்குப் பிடித்த ஒன்றை ஒளித்து வைக்கும் சிறு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சம் தனக்குப் பிடித்த இந்த கருந்துளைகளின் ரகசியங்களை மறைத்து வைத்துக்கொண்டே இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் ஒளி அலைகளை வெகு எளிதாக கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் இந்த ஈர்ப்பு அலைகளை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படும் என்றே தனது கோட்பாடுதனில் குறிப்பிட்டு இருந்தார். இதை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அதே வேளையில் நிரூபிக்க வழி இல்லாததாகவே தென்பட்டது. நியூட்டனின் கோட்பாடுபடி இந்த ஈர்ப்பு அலைகள் இருக்கவே வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. 

பல வருடங்களாக  இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி அறிய வேண்டும் என அதற்கான கருவிகளை உருவாக்கிட முனைந்ததன் பலன்  இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது. 

இந்த கருந்துளைகள் இந்த ஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது. மீண்டும் இந்த இயற்பியல் உலகம் உந்த பிரபஞ்சம் பற்றிய பார்வையினை சற்று மாற்ற வேண்டி இருக்கிறது. 

(தொடரும்) 

மாறா மரபு - 4

6. எவருக்குத் தெரியும்

ஜெகன் சிவராமிடம் பேசிட்டு வா என அனுப்பினான்.

‘’சிவா நீ இப்போ எங்கே இருக்க’’

‘’ஒரு முக்கியமான விசயமா வெளியூர் வந்து இருக்கேன்’’

‘’அதான் எங்கே?’’

‘’திருச்சி’’

‘’எப்போ திரும்பி வருவ?’’

‘’நாளைக்கு வந்துருவேன். என்ன விஷயம்’’

‘’கொஞ்சம் கேப்ஷ்யூல்ஸ் இன்னைக்கு எடுக்கலாம்னு இருக்கேன், அதான் எடுத்த உடனே உங்கிட்ட கொடுக்கணும் இல்லைன்னா பிரச்சினை வந்துரும். ராம் கண் கொத்தி பாம்பா இருக்கான். அவனே இனி வரப்போற தம்பதிகளுக்கு கேப்ஷ்யூல்ஸ் தந்துக்கிறேனு சொல்லிட்டான். அவன் வந்து அதை எடுத்து இடம் மாத்துறப்ப ஏதாவது பண்ணனும்’’

‘’சுபா, நீ எதுவும் பண்ண வேணாம். அந்த கேப்ஷ்யூல்ஸ் வைச்சி நாம ஒண்ணும் பண்ணமுடியாது. அதனால கவலைப்பட வேண்டாம்’’

‘’என்ன சிவா சொல்ற’’

‘’ஆமா, நீ கொஞ்சம் பதறாம இரு. பார்த்துக்கிரலாம்’’

‘’சரி, நீ வந்ததும் எனக்கு தகவல் சொல்லு’’

‘’சரி’’

‘’பேசியாச்சா சிவா. நான் காட்டுற விஷயத்தை கொஞ்சம் கவனமாப் பாரு.

பெரும்பாலான பாக்டீரியாக்களில் எம்ஆர்என் ஏவில் இந்த இன்ட்ரான்கள் கிடையாது, ஆனால் எல்லா உயர்நிலை உயிரினங்களில் இந்த எம்ஆர்என் ஏக்களில் இன்ட்ரான்கள் உண்டு. இந்த எம்ஆர்என் ஏக்களில் உள்ள இன்ட்ரான்களை நீக்கியபின்னரே ஒரு எம்ஆர்என் ஏ புரதம் உண்டாக்கும் நிலைக்குச் செல்லும்.

ஒரு பாக்டீரியா தனது உயிரை பிறவற்றில் இருந்து எப்படி காத்துக் கொள்கிறது என்பதே அவை இன்னமும் இவ்வுலகில் தொடர்ந்து இருக்கக்காரணம். வைரஸ் பாக்டீரியாவை தாக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த பாக்டீரியா தனது டி என் ஏவை வேறு எந்த ஒரு டி என் ஏ வும் தாக்கி கலந்து விட முடியாதபடி தன்னில் இருக்கும் புரத வினையூக்கி மூலம் சரியாக வெட்டிவிடும் தன்மை கொண்டது. இதனால் பிற டி என் ஏ பாக்டீரியா டி என் ஏ வில் கலந்துவிட முடியாது. இதை இந்த பாக்டீரியா மெதிலேசன் வினையூக்கி மூலம் ஒரு மீதைல் மூலக்கூறுதனை தனது டி என் ஏ வில் உள்ள நியூக்ளிக் அமிலங்களில் சேர்க்கும். இப்படி செய்யும் பொது எவை எல்லாம் மீதைல் மூலக்கூறு இல்லையோ அவை எல்லாம் வெளி டி என் ஏ என பாக்டீரியாவில் உள்ள வினையூக்கி முடிவு செய்யும். இப்போது வேறு ஒரு வினையூக்கி வந்து வெட்டப்பட்ட தேவையற்ற டி என் ஏ வை தன்னில் கிரகிக்க வெட்டப்பட்ட தேவையான டி என் ஏக்கள் இணைந்து இப்போது ஒரு முழு டி என் ஏ இருக்கும்’’

‘’அது பாக்டீரியா, ஒரு செல் உயிர். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே. எவ்வளவு பெரிய பிரச்சினை வரும் தெரியும்தானே ஜெகன்’’

‘’அதனால் என்ன, பாக்டீரியா சில நேரங்களில் வைரஸ் டி என் ஏ வை தனதாக்கி கொள்ளும் தன்மை கொண்டது. அப்போது அந்த வைரஸ் டி என் ஏ வை கூட மெதிலேசன் பண்ணி தனதாக்கிக் கொள்ளும். அதைப் போல தான் இந்த இன்ட்ரான்கள். உனக்குத் தெரியாதது இல்லை. இந்த இன்ட்ரான்கள் எப்படி வந்தது ஏன் வந்தது எதற்கு இருக்கிறது என புரியாமல் இருந்தது. உன்னோட ரிசர்ச்ல கூட பண்ணி இருப்ப. இப்போ இந்த இன்ட்ரான்கள் பல முக்கிய வினையூக்கி, புரதம் உருவாக காரணமாக இருக்கிறது. எப்படி பாக்டீரியா செயல்படுதோ அதைப்போல நமது செல்கள் செயல்படுது. எம் ஆர் என் ஏ உருவாகும் முன்னர் இந்த இன்ட்ரான்கள் எப்படி ஒரு வினையூக்கி வெட்டுதுன்னு நான் ரிசர்ச் பண்ணி இருக்கேன். அதை வைச்சிதான் நான் இந்த மூலக்கூறு உருவாக்கி அதே வினையூக்கி போல செயல்பட வைச்சி இருக்கேன். அதாவது டி என் ஏவில் இதை செய்றது. எதுக்கு எம் ஆர் ஏ வரைக்கும் காத்து இருக்கணும்’’

‘’ஜெகன் எனக்கு இது சாத்தியம்னு தோணலை. நீ உருவாக்கின மூலக்கூறு எப்படி வேலை செய்யும்னு உனக்குத் தெரியும்’’

‘’இந்த படத்தைப் பாரு சிவா, இது விந்து அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அது அண்ட அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அதில் எல்லாம் இன்ட்ரான் எக்சான் எல்லாம் இருக்கு. அடுத்ததா நான் மூலக்கூறு  சேர்த்தப்போ எல்லா இன்ட்ரான்களிலும் இந்த மூலக்கூறு போய் இணைகிறது. எப்படி பாக்டீரியா மெதிலேசன் பண்ணுதோ அதே டெக்னிக் நான் பண்ணினேன். அடுத்தது பாரு, நான் இணைச்சதும் வினையூக்கி வந்து நான் மூலக்கூறு இன்ட்ரான் எல்லாம் வெட்டுது பாரு, அடுத்து இன்னொரு வினையூக்கி வந்து அவை எல்லாம் விழுங்குது, இப்போ எக்சான் மட்டும் தான்’’

‘’ஜெகன், என்னால் நம்பமுடியலை’’

‘’அதுக்குத்தான் நான் இதை எல்லாம் படம் எடுத்து வைச்சி இருக்கேன். எப்படி ஒவ்வொரு இன்ட்ரான் எல்லாம் வெட்டப்பட்டு விழுங்கப்படுதுன்னு’’

‘’எல்லா விந்து அணுவிலும் இப்படி நடக்குமா?’’

‘’ஆமா, எழுபது சதவிகிதம் வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த கட்டமே எப்படி இந்த மூலக்கூறுதனை கொண்டு போறது அப்படின்னு யோசிச்சி டாக்டர் பாண்டே கிட்ட மூலக்கூறு டெலிவரி பத்தி பேசி இந்த கேப்ஸ்யூல் உருவாக்கினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற வேற முறை. சிவா நீ இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாத, இந்த டாக்குமென்ட் ல எல்லா விபரமும் எப்படி ஒவ்வொரு ஸ்டெப் பண்ணனும்னு இருக்கு. நீ அதை மட்டும் கவனமா பண்ணு போதும். இது ஒரு நாள் வேலை இல்லை. எங்கேயாவது ஒரு சின்ன தவறு நடந்தாக்கூட இந்த மூலக்கூறு வேலைக்கு ஆகாது. கேப்ஸ்யூல் எப்படி பண்றதுன்னு இந்த டாக்குமென்ட்ல இருக்கு’’

‘’ஜெகன், எனக்கு இதை பண்ண முடியும்னு தோணலை. அதுவும் நீ சொல்றது எல்லாம் சத்தியமா நடக்க வாய்ப்பே இல்லை. நீ காட்டினது உண்மையா இருந்தாலும் அதுவும் நியூக்ளியஸ்க்குள்ள இந்த மூலக்கூறு போய் இப்படி எல்லாம் பண்ணும்னு உனக்கு எப்படி தெரியும், நீ ஒரு எலி அல்லது வேறு சின்ன உயிரில் முயற்சி பண்ணி இருக்கலாம். இப்படி நேரடியா மனித உயிரோட விளையாடுறது எனக்கு சரியாப்படல’’

‘’சிவா, ஜஸ்ட் மேக் தீஸ் மாலிக்குல்ஸ், ரெஸ்ட் ஐ வில் சீ. ஐ வில் செட்டில் த அமவுண்ட் டு யூ. ப்ளீஸ் டோன்ட் சே நோ அண்ட் டோன்ட் பேக் அவே ப்ரம் திஸ் (just make these molecules, rest I will see. I will settle the amount to you. Please don’t say NO and don’t back away from this)

ஜெகன் எல்லா விபரங்களையும் சிவராமிடம் காட்டினான். ஒவ்வொரு விசயங்களையும் தெளிவாக சொல்ல சொல்ல சிவராம் மனதில் மாற்றம் உண்டானது. எப்படி நியூக்லியஸ் உள்ளே இந்த மூலக்கூறு செல்லும், எப்படி மற்ற செல்களில் சென்று இவை செயல்படாது என ஜெகன் சொன்னபோது சிவாராமிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஜெகன் அத்தனை நேரம் பேசவில்லை என்றால் நிச்சயம் சிவராம் எழுந்து போயிருப்பான். ஆனால் ஜெகனின் விடாத பேச்சு, எல்லாம் அப்படியே நடக்கும் எனும் உறுதிப்பாடு சிவராமிற்கு ஆசையை உண்டாக்கியது.

‘’சரி ஜெகன். பண்ணித்தரேன்’’

‘’வெல்டன், டேக் திஸ் சிவா  கீப் இட் சேப், லெட் அஸ் ஈட் நவ்’’

அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதாக திட்டம் போட்டான் சிவராம். ஜெகனிடம் சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனான். இந்த உலகில் இத்தனை விசயத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எந்த ஒரு மனிதரும் அமைதியாக இருந்து விடவில்லை. அதது அதன்பாட்டில் நடக்கும் எனில் நாம் எதற்கு எனும் சிந்தனையே மனிதனை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த இன்ட்ரான்கள் ஏதுமற்று மரபணுவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கே இருந்த ஒருவர் பாடிய பாடல் கேட்டு சிவராம் அங்கேயே நின்றான்.

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

இந்த பாடலில் உள்ள அர்த்தம் போல இருக்கிறது வாழ்வு என எண்ணினான் சிவராம். தான் செய்யும் செயலில் கொள்ளும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகாதவண்ணம் இருக்கவே இறைவனின் மீதான நம்பிக்கைகள் மனிதர்களுக்கு உண்டாகி இருக்கக்கூடும். அப்படி என்னதான் இந்த இன்ட்ரான்கள் தம்மில் பெரும் ரகசியத்தைக் கொண்டு இருக்கக்கூடும் என சிவராம் தனது ஆராய்ச்சி மீது ஒரு புதிய கண்ணோட்டம் உண்டாகவேண்டி சிந்தித்தான்.

மீண்டும்அதே வரிகளை அவர் அங்கே பாடிக்கொண்டே இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் கூட்டம் அதிகமானது. அங்கிருந்து கிளம்பியவன் பணம் கொடுத்து தரிசனம் செய்வதா, பணம் கொடுக்காமல் தரிசனம் செய்வதா எனும் குழப்பத்தில் நின்றவன் பணம் கொடுக்காமலே வரிசையில் சென்று நின்றான். அங்கே ஒவ்வொருவரின் பேச்சுக்கள் அவனுக்கு சற்று சுவாரஸ்யமாக இருந்தன. இந்த இன்ட்ரான்கள் எக்சான்கள் பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதினான்.  இருவரின் பேச்சு அவனுக்கு திகைப்பூட்டியது.

‘’இத்தனை வயசுல உனக்கு என்ன இந்த வரிசையில் நின்னு பெருமாளை சேவிக்கணும்னு தலைவிதியா, அதோ அங்கே பணம் கொடுத்து போக வேண்டியதுதானே’’

‘’உமக்கு என்ன தலைவிதியோ அதுவே எனக்கு இருக்கட்டும். எத்தனை மணி நேரம் வெட்டியா உலகத்தில மனுசா செலவழிக்கிறா, என் ரெங்கநாதனுக்கு இப்படி நான் நின்னு போறதுலதான் இஷ்டம்’’

‘’உன்னைத் திருத்த முடியாது’’

‘’அது என்னோட மரபணுவில ஊறினது, உமக்கு அது பத்தி எப்படி தெரியும், பேசாம வாரும், மத்தவா பாக்கிறா’’

அதிக வயதான முன் தலை எல்லாம் வழித்து பின்னால் குடுமி போட்டு நெற்றியில் நீண்ட ராமம் இட்ட மரபணு என சொன்ன அவரின் பேச்சு சிவராமிற்கு ஆச்சரியம் வரவழைத்தது.

பொதுவாக எல்லோரும் என் ரத்தத்தில் ஊறியது என்றல்லவா சொல்வார்கள், இவரோ என்னோட மரபணுவில் ஊறினது என்கிறாரே
என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘’தாத்தா, நீங்க சொன்னதில தப்பு இருக்கு. மரபணுவில் எப்படி ஊறும், ரத்தத்தில் அல்லவா ஊறும்’’

‘’பாக்கறதுக்கு படிச்சவா மாதிரி இருக்க, என்னை சோதிக்கிற மாதிரி கேள்வி கேட்கறளே. என்னை சோதிக்க அந்த ரெங்கநாதனுக்கு மட்டுமே உரிமை உண்டு. உமக்கு மரபணு அப்படின்னா என்னான்னு  தெரியாதா, இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறேளா’’

‘’தெரியும், ஆனா நீங்க அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது’’

‘’இப்போதான் எல்லாம் ஜீன் ஜீன் அப்படின்னு ஊரு உலகம் எல்லாம் பேசறாளே, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களுக்கு கருவே கிடையாது அப்படின்றது நோக்கு தெரியுமோன்னோ, இப்போ நான் அதை பேச விரும்பலை. ரெங்கநாதனை சேவிக்க வந்துட்டு எதுக்கு எனக்கு இந்த வியாக்கியானம் எல்லாம், நீர் சேவிச்சிட்டு என்னோட ஆத்துக்கு வந்தா எல்லாம் சொல்றேன். பொது இடத்தில மத்தவாளுக்கு நாம இடைஞ்சலா இருக்கப்படாது. புரியுதுன்னோ’’

‘’சரிங்க தாத்தா’’

கோவிந்தா, கோவிந்தா எனும் சத்தம் அனைவரும் ஒரு சேர எழுப்பினார்கள். ஆனால் அந்த வயதானவர் ஒரு பாடலை தனக்குள் முனுமுனுத்தார்.

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

சிவராமிற்கு அந்த பாடல் தெரியவில்லை, சரியாக கேட்கவும் இல்லை. இவ்வுலகில் எத்தனையோ அதிசயமிக்க மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொருவரும் இவ்வுலகைப் பற்றிய ஒரு கருத்தைக் கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் ராம் இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிட நினைக்கிறார். இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட பின்னே புரதங்கள் எல்லாம் உருவாகிறது என்றாலும் அந்த இன்ட்ரான்கள் கருவிலேயே இருக்கக்கூடாது என கருதுகிறார். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிறந்தோம், வேலை பார்த்தோம், சந்ததிகள் உருவாக்கினோம் என பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பிறந்து இறந்து போனார்கள் எனும் யோசனையில் நகர்ந்தான் சிவராம்.

வயதானவர் ‘ரெங்கநாதா’ எனும் மெல்லிய குரல் கொண்டு அழைத்து கைகள் மேல்தூக்கி கூப்பியபோது அந்த வயதானவரின் முகத்தில் எத்தனை சந்தோசம் என்பதையே நோக்கினான் சிவராம். ஒரு சில வினாடிகளில் அந்த வேண்டுதல் கடந்து விட்டது. சிவராம் தான் என்ன வேண்டினோம் என்பதையே நினைவில் கொள்ளவில்லை.

‘’ஆத்துக்கு வரேள்தானே, ஆத்துல நா மட்டும் தான் இருக்கேன், ஆத்து அப்படின்னா மாளிகைனு நினைச்சிண்டு வராதேள்’’

சிவராம் சரி என சொல்லியபடி அவருடன் நடந்தான்.

‘’என்ன வேண்டிண்டு வந்தேள்’’

‘’வேண்ட மறந்துட்டேன் தாத்தா’’

‘’நீர் வேண்டித்தான் அந்த ரெங்கநாதன் தருவாரில்லை’’

‘’நீங்க என்ன வேண்டினீங்க தாத்தா’’

‘’ரெங்கநாதானு வேண்டிண்டேன், அது போதும் எனக்கு’’

‘’நீங்க என்ன படிச்சி இருக்கீங்க, என்ன வேலை பாத்தீங்க’’

‘’நான் வேதம் படிச்சி இருக்கேன், கோவிலில பூசாரியா வேலை பார்த்தேன், ரெங்கநாதனுக்கு சேவகம் பண்றதுதான் என்னோட வேலை. நீர் என்ன படிச்சி இருக்கேள்’’

‘’மூலக்கூறு உயிரியல் படிச்சி இப்போ ஆராய்ச்சி பண்றேன் தாத்தா’’

‘’மரபணு ஆராய்ச்சியா, என்கிட்டே ஒரு ரகசியம் இருக்கு, சொல்றேன் வாரும்’’

சிவா திடுக்கிட்டான் (தொடரும்) 

Tuesday 16 February 2016

மாறா மரபு - 3

5 இவன்கண்

ஜெகன் தந்து கணினியை திறந்து பார்த்தபோது எல்லா பைல்களும் திறக்கமுடியாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். இது யாருடைய விஷமம் என அவனால் ஓரளவுக்கு யூகிக்கமுடிந்தது. நிச்சயம் டாக்டர் ராம் எவரையோ வைத்துதான் இதைச் செய்து இருக்க முடியும் என முடிவு செய்தான். நேராக தனது அலுவலகம் சென்று கணினி திறந்து பைல்கள் திறக்க முயற்சித்தபோது அதே பிரச்சினை கண்டு அவனுக்குள் எரிச்சல் கோபம் கொப்பளித்துது.

நேரடியாக தனது சூப்பர்வைசரை சென்று பார்த்தான்.

‘’நான் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் செல்ல வேண்டும், எனக்கு மனது சரியில்லை’’

‘’நான் திட்டினது உனக்கு கோபமா ஜெகன், என்னிடம் அனுமதி இல்லாமல் நீ என்ன என்னவோ ரீஏஜென்ட்ஸ் வாங்கி இருக்கிறாய், இதனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. எவ்வளவு பண விரயம், கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் செய்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நீ தாராளமாக போய்விட்டு வா, நான் பேசி சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான். அதற்கு முன் எனக்கு நீ சில விசயங்களை சொல்ல வேண்டும்’’

‘’இனிமேல் அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’’

‘’அது இருக்கட்டும் அப்படி என்னதான் அந்த ரீஏஜென்ட்ஸ் வைத்து செய்தாய் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்’’

‘’நான் இன்ட்ரான் சம்பந்தபட்ட நமது ஆராய்ச்சிதான் செய்தேன்’’

‘’இல்லை ஜெகன், என்னிடம் நீ மறைக்க முயலாதே. நீ உபயோகப்படுத்திய சில ரீஏஜென்ட்ஸ் நமது ஆராய்ச்சிக்கு சம்பந்தமே இல்லாதது. அதுவும் அவை சற்று விலை கூடுதல் வேறு’’

‘’இன்ட்ரான் ரிமூவ் பண்ண வேண்டிதான் வாங்கினேன். வாங்கும் முன்னர் உங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது எனது தவறுதான்’’

‘’அதற்கு என்சைம் போதுமே, எதற்கு இந்த ரீஏஜென்ட்ஸ்?’’

‘’என்சைம் கிடைக்கவில்லை அதனால் இதை வாங்கினேன்’’

‘’இனிமேல் இதுபோன்று செயல்படாமல் இரு, நீ இப்போ ஊருக்கு போறது கூட எனக்கு நல்லதுதான். அப்படியே நான் சொன்னபடி திருச்சியில் அந்த வேலையை சேர்த்து முடித்துக்கொண்டு வந்துவிடு. எப்படியும் இரண்டு மாதங்கள் அங்கே ஆகும். நான் டாக்டர் புருசோத்தமனிடம் பேசிவிடுகிறேன். உன்னால் அடுத்த மாதம் அங்கு போக இயலும்தானே’’

‘’பிரச்சினை இல்லை சார் ’’

‘’நீ ஒரு நம்பத்தகுந்தவன் என்ற முறையில் தான் இம்முறை மன்னித்து அனுப்புகிறேன், கவனமாக இரு’’

ஜெகன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான். வீடு வந்து சேர்ந்தபோது அப்பாடா என்று இருந்தது. தன்னிடம் இருந்த மெமரிஸ்டிக்  பத்திரமாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டான். தங்கராஜ் ஜெகனைப் பார்க்க வந்து இருந்தான்.

‘’ஜெகன் எங்க போயிருந்த, ஆளையேக் காணோம் உன்னோட மொபைல் கூட இன்னைக்கு காலையில் இருந்து வேலை செய்யலையே’’

‘’சென்னை வரைக்கும் போயிருந்தேன், வரப்ப ஏர்போர்டில மொபைலை தொலைச்சிட்டேன், பக்கத்தில வைச்சிருந்தேன், எவனோ எடுத்துட்டுப் போயிட்டான் ’’

‘’இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்ப. என்ன விசயமாகப் போன’’

‘’டாக்டர் ராம் அப்படின்னு ஒருத்தரைப் பார்க்க போயிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. முன்னரே என் சார் சொன்னமாதிரி நான் இன்னைக்கே பஞ்சாப் போக வேண்டி இருக்கு’’

‘’என்ன விசயம்’’

‘’லேப் சம்பந்தமா வேலை ஒரு மூணு மாசத்திற்கு இருக்கு’’

‘’அப்போ டில்லி?’’

‘’மூணு மாசம் பிறகு வருவேன், இந்த வேலையைத்தான் அங்க செய்ய வேண்டி இருக்கு’’

‘’சரி நான் கிளம்பறேன்’’

‘’அதுக்குள்ளே கிளம்பிட்டே’’

‘’உன்னோட ரூம் திறந்து இருந்தது ஒருவேளை நீ வந்து இருப்பியோனு பார்க்க வந்தேன். வந்தப்ப நீ காணலை. நீ வேலைக்குப் போனியா’’

‘’போனேன் உடனே சார் என்னை கூப்பிட்டு பஞ்சாப் போகச் சொல்லிட்டார். அதான் அப்படியே திரும்பி வந்துட்டேன். ஆமா என்னோட ரூம் மேட் நீ பாத்தியா’’

‘’நேத்து இருந்தானே, அவன்தான் ஆறு மணிக்கு எல்லாம் வேலைக்குப் போறவன் ஆச்சே’’

‘’அவன் வந்தா நான் பஞ்சாப் போயிருக்கிறதா சொல்லு, புது மொபைல் வாங்கித்தான் அவனுக்கு தகவல் சொல்லணும். உனக்கும் நம்பர் அனுப்பறேன்’’

‘’பத்திரமாப் போயிட்டு வா, டிக்கட் லேப்டாப் மூலமா புக் பண்ணப் போறியா. உன்கிட்ட மெமரி ஸ்டிக் இருக்கா’’

‘’அது என்னோட சார் கிட்ட கொடுத்துட்டேன். அதில அவரோட வேலை சம்பந்தமான விசயங்கள் மட்டுமே இருந்தது. எதுக்கு கேட்ட. டிக்கட் இங்க புக் பண்ண நேரமில்லை, லேப்டாப் இங்கேயேதான் விட்டுட்டுப் போகப் போறேன். எதுக்கு தேவை இல்லாத சுமை. அலமாரில பூட்டி வைச்சிட்டேன் சாவி என்கிட்டதான் இருக்கு’’

‘’என்னோட பைல் மாத்தணும் வேலை இடத்தில வைச்சிட்டு வந்துட்டேன் அதான். சரி, நீ கவனமாப் போயிட்டு வா’’

தங்கராஜ் டாக்டர் ராமிற்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். அவசரத்தில் வந்து இருந்ததால் ஜெகன் எந்த சந்தேகமும் இல்லாதமாதிரி இருந்ததாக லேப்டாப், அலுவலக கணினி குறித்து எதுவும் பேசவில்லை என சொன்னான். டாக்டர் ராம் சந்தோசம் கொண்டார். அவனது புதிய எண் தந்ததும் தனக்குத் தரச் சொன்னவர்  மூணு மாசம் எனக்குப் போதுமானது என டாக்டர் ராம் தங்கராஜிற்கு நன்றி சொல்லிக்கொண்டார்.

ஜெகனுக்கு தங்கராஜ் மீது கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். நிச்சயம் இவனது வேலையாகத்தான் இருக்கும் என உறுதி செய்து கொண்டான். டாக்டர் ராம் தன்னை சந்தித்தபோது இவனை சந்தித்து இருக்கக்கூடும் என எண்ணம் கொண்டான். அப்போதே தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு டில்லி விமான நிலையம் விரைந்தான். சென்னைக்கு செல்ல அவனுக்கு ஒரு பயணச்சீட்டு கிடைத்தது. மொபைல் தொலைந்து போனதை தங்கராஜ் நம்பி இருக்க நிறைய சாத்தியங்கள் இருந்தன என எண்ணியவன் தனது தொலையாத மொபைலுக்கு அப்போதே வேறு ஒரு சிம்கார்டு வாங்கிக்கொண்டான். மெமரி ஸ்டிக் தப்பித்த விஷயம் தங்கராஜிற்கு தெரியப்போவது இல்லை என்பதே நிம்மதியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்படியே திருச்சி சென்று விட வேண்டும் என திட்டம் போட்டான். சிவாவிடம் பேசினால் நல்லது என தோணியது.

‘’சிவா, நான் ஜெகன் பேசறேன். நீ நாளைக்கு ஸ்ரீரங்கம் வர முடியுமா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்கு நைட் கிளம்பினா நாளைக்கு வந்துருவதானே’’

‘’என்ன விஷயம் ஜெகன்’’

‘’இன்ட்ரான் பத்தியது. உன்கிட்ட நான் பேசி ஆகனும். தயவு செய்து வந்துரு. இந்த நம்பருக்கு போன் பண்ணு. யாருக்கும் நீ சொல்லாத’’

‘’ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் பக்கத்தில் வந்து நிற்கிறேன். அங்க வந்துரு’’

சிவராம் ஜெகனின் தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் ஏதும் பிரச்சினை இருக்கும் என யூகித்தது சரியாகிவிட்டது. சுபா வேறு கேப்ஸ்யூல் கிடைக்காத நிலையைச் சொல்லி இருந்தாள். சுபாவுக்கு தகவல் சொன்னால் டாக்டர் ராம் சந்தேகம் கொள்ள சாத்தியம் இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

ஜெகன் சென்னைக்கு  மாலையில் வந்து இறங்கியதும் திருச்சிக்கு பேருந்தில் அங்கிருந்தே பயணம் செய்தான். ஜெகனுக்கு தான் செய்து கொண்டிருப்பது சரியா என புரியவில்லை. தான் ஸ்ரீரங்கம் வந்து இருப்பதுவோ சென்னையில் வேலை செய்ய இருப்பதுவோ டாக்டர் ராமிற்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது யோசனையாக இருந்தது. திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு சென்றபோது இரவு பன்னிரண்டு மணி ஆகி இருந்தது.

மக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீரங்கத்து கோபுரம் அந்த இரவிலும் பளிச்சென இருந்தது. ஜெகனை அவனது வீட்டில் எவருமே எதிர்பார்க்கவில்லை. காவிரி ஆற்றில் ஓடும் சிறிது  நீர் கொண்டு வீசிய காற்று சில்லென்று வீசியது. தன்னை வீட்டில் எப்படி எதிர்கொள்வார்கள் என ஜெகன் அப்போதும் யோசித்து இருக்கவில்லை.

அப்பா பூரணசந்திரன், அம்மா பூரணி. இருவருமே ஆசிரியர் வேலை பார்த்து வருபவர்கள். ஜெகனுக்கு ஒரு தங்கை சத்யபாமா. மதுரை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாள். இந்த ஸ்ரீரங்கம் தான் அவர்களது பூர்வீகம் எல்லாம். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் தனியாக அவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்து ஸ்ரீரங்கநாதர் அவர்களுக்கு துணை. மாலை, சனி ஞாயிறுகளில் கோவில் வாசம் அவர்களுக்கான வேண்டுதல், விரும்புதல்.

வீட்டின் அழைப்பு மணி அழுத்த வீட்டில் விளக்கு எரிய சில நிமிடங்கள் மேல் ஆனது. பூரணசந்திரன் தூக்க கலக்கத்துடன் வந்து கதவின் பக்கம் வந்து நிற்க ஜெகனைக் கண்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. வேகமாக கதவைத் திறந்தார். ஜெகன் உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

‘’வாப்பா, என்ன ஒரு தகவலும் சொல்லாம வந்து நிக்கிற’’

‘’ஒரு முக்கியமான லேப் விசயமாக வந்தேன். இன்னும் இங்கேதான் ஒரு மூணு மாசம் இருக்கப் போறேன்ப்பா’’

அதற்குள் ஜெகனின் அம்மாவும் வந்து நின்றார்.

‘’எதுவும் சாப்பிட்டியாப்பா?’’

‘’ம்ம் சாப்பிட்டேன்மா, காலையில ஒரு ஆறு மணிக்கு எழுப்பமுடியுமா. இப்ப தூங்குறேன்’’

‘’காலையில் பேசிக்கிறலாம், தூங்குப்பா’’ என பூரணசந்திரன் சொன்னார்.

அன்று இரவு பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்துவிட்டு பதினோரு மணிக்கு ஸ்ரீரங்கம் நோக்கி சிவராம் பயணம் செய்யத் தொடங்கினான்.

பேருந்தில் எங்கேயும் எப்போதும் படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த படத்தினை பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டான். சுபா மனதில் வந்து போய்க்கொண்டு இருந்தாள்.

‘சிவா, டாக்டர் ராம் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தைகளோட வாழ்க்கையில் விளையாடுறார்’ என்ற வரிகள் அவனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருளை பொருட்படுத்தாது பேருந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது. எங்கேயும் எப்போதும் படம் போல ஆகிவிட்டால் எனும் எண்ணம் அவ்வப்போது அவனுக்குள் வந்து போனது. சரியாக ஐந்து மணிக்கு எல்லாம் திருச்சி வந்து பாதுகாப்பாக இறங்கியாகிவிட்டதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஜெகன் ஐந்து மணிக்கு தானாகவே எழுந்து இருந்தான். ஆறுமணிக்கு எழுப்ப சொல்லிட்டு ஐந்து மணிக்கே எழுந்திட்டியா என அம்மா சொன்னார். திருச்சி வந்துவிட்டதாக சிவராம் தகவல் சொல்லி இருந்தான். ஜெகன் அவசரம் அவசரமாக கிளம்பினான். தனது நண்பர் ஒருவர் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நேராக அம்மா மண்டபத்தில் சென்று ஜெகனை அழைத்துக்கொண்டு தனது வீடு வந்தான். சிவராமினை தயாராகச் சொன்னான் ஜெகன். அதற்குள் காலை உணவு எல்லாம் தயாராகி இருந்தது.

‘’என்னப்பா முன்னமே சொல்லி இருந்தா நாங்க லீவு போட்டு இருப்போமே’’

‘’அம்மா நீங்க வேலைக்குப் போங்க, இங்கதானே இருக்கப்போறேன், மதியம் நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’’

‘’சாதம் வடிச்சி வைச்சிருக்கேன்ப்பா’’

‘’சரிம்மா’’

அதிகாலை எழுந்து எல்லாம் தயார் செய்து வேலைக்கு செல்வது இன்று நேற்றல்ல பல வருட பழக்கம். அனைவரும் காலை உணவு உண்டார்கள். ஜெகன் சிவராமினை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘’சிவா நான் ஒரு பிரச்சினையில் மாட்டி இருக்கேன். டாக்டர் ராம் என்னை மிரட்டுறார்’’

‘’எந்த டாக்டர் ராம்’’

‘’பாக்யா வருணன் கிளினிக்ல வேலை செய்றார். டெஸ்ட் டியூப் பேபி பண்றவர்’’

‘’முந்தாநாள் பார்க்க வந்தியே அவரா’’

‘’ஆமா, அவரை நான் டில்லியில் வைச்சி சந்திச்சேன். என்னோட ஆராய்ச்சி பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போதான் இன்ட்ரான் ரிமூவல் ப்ரம் ஸ்பெர்ம் அண்ட் எக் பத்தி பேசினார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என்னைப்பத்தி சில ஆர்டிகல்ஸ்ல படிச்சி இருக்கேன்னு சொன்னார். என்னை மெனக்கெட்டுப் பார்க்க வந்தது போல இருந்துச்சி. ஆனா ஒரு மருத்துவ விசயமா வந்தேன்னு சொல்லிட்டு இருந்தார். நானும் தாராளாம பண்ணிரலாம்னு சொல்லிட்டேன். இட் இஸ் வெரி காம்ப்ளிகேட்டட் ஐடியா. ஆனா ரொம்ப சாதாரணமா சொன்னார்.  அண்ட செல், விந்து செல் இவற்றில் இருந்து இன்ட்ரான் நீக்கிட அவை இன்ட்ரான் அற்ற செல்களாக உருவாகும். பின்னர்  அவைகளை ஒன்று சேர வைத்தால் இன்ட்ரான் இல்லாத குழந்தை உருவாகும் அந்த குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என அறியலாம். இது என்னுடைய சிந்தனை. நீ ஒத்துழைப்பு தந்தால் நாம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அதை நீ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. இது எனது கனவு. என்னால் தனியாக செய்ய இயலாது நீ இந்தவேலையில் இருப்பதால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உன்னை சந்தித்து ஒப்பந்தம் போட நினைக்கிறேன். என்ன சொல்கிறாய்? (Remove all introns from those gametes, then you will have intron free gametes. Make them fuse together, you will have a child without introns then you see how a child behaves. This is my idea, if you agree to help me we can sign an agreement and you should not breach this at any cost. This is my dream. I could not do this on my own, when I saw you are working on this field I took this opportunity to see you and make an agreement. What do you say?) நானும் யோசிக்காமல் சரி என சொல்லிட்டேன். ஒப்பந்தம்தனில் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்’’

‘’சரி ஆனா எப்படி இன்ட்ரான் நீக்குறது என்ன ரீஏஜென்ட்ஸ் (reagents) உபயோகம்  பண்றதுன்னு அவர் எழுதித் தந்தாரா?’’

‘’இல்லை. அது எல்லாமே என்னோட ஆராய்ச்சி. நான் திட்டமிட்டு பண்ணினது. நான் உருவாக்கி இருக்கிற  அந்த மூலக்கூறு நேரடியா ஸ்பெர்ம், எக் செல்களை அட்டாக் பண்ணும். ஐ மேட் திஸ் கான்செப்ட் டு அட்டாக் 23 குரோமொசொம்ஸ் செல்கள். ( I made this concept to attack those 23 choromosomes cells)’’

‘’ரிப்ளிகேஷன் (replication) ப்ராசெஸ் ட்ரான்ஸ்லேசன் (translation) ப்ராசெஸ் பத்தி யோசிச்சியா’’

‘’எஸ், எல்லாம் யோசிச்சி அட்டெம்ப்ட் பண்ணி இருக்கேன். இட் வில் ஒர்க் அவுட்’’

‘’அப்ப என்னதான் பிரச்சினை’’

‘’அக்ரீமென்ட். என்னால இதை உருவாக்கி வேற ஒருவருக்கு தர முடியாது. டில்லியில் ஒரு டாக்டர்கிட்ட பேசினேன். அவருக்கு ஆர்வம் வந்தது. ஆனா கேப்ஸ்யூல் கொண்டு வந்து தா நான் பரிசோதிச்சிட்டு உனக்கு இதைப் பண்ண மேற்கொண்டு பணம் தரேன்னு சொன்னார். அதை வாங்கத்தான் வந்தேன். ஆனா டாக்டர் ராம் தர முடியாது, இது என்னோட கனவு எல்லாமே நான் பண்ணினது நீ இல்லைனு சொல்லிட்டார்.’’

‘’அக்ரீமென்ட் ரீட் பண்ணாமலா கையெழுத்துப் போட்ட’’

‘’எனக்கு அப்ப அந்த யோசனை இல்லை. நிறைய பணம் தரேன்னு சொன்னார்’’

 ‘’இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு’’

‘’லுக் நான் எல்லா விபரங்களும் தரேன். நீ அதை இங்கே உருவாக்கு. எனக்கு நீ அனுப்பி வை. நான் அந்த டில்லி டாக்டர்கிட்ட கொடுத்து அடுத்த ப்ரோஜெக்ட்க்கு பணம் வாங்கிருவேன். நாம சேர்ந்து நிறைய செய்யலாம். நீ பண்ண ஆரம்பிச்சதும் பேடன்ட் உன்னோட பேருல அனுப்பிருவோம். டாக்டர் ராம் எதுவும் பண்ண முடியாது. அவர் என்ன பண்ணினார் தெரியுமா? என்னோட லேப்டாப்,வொர்க்  சிஸ்டம் இருந்த என்னோட டாட்டா எல்லாம் தங்கராஜ் அப்படின்னு ஒருத்தன் மூலமா இன்பெக்ட் பண்ண வைச்சிட்டார். அவன் ஒரு கம்ப்யூட்டர் வித்தகன். ஆனா நான் எல்லா விபரத்தையும் இந்த மெமரி ஸ்டிக் ல வைச்சி இருக்கேன். என்ன சொல்ற?’’

‘’எஸ். நான் உனக்கு உதவி பண்றேன், இது நமக்குள்ள இருக்கட்டும்’’

‘’ஐ  ஆம் சோ கேப்பி சிவா. பை த வே டோன்ட் சே டூ தட் கேர்ள் டூ. ஒரு நிமிஷம் இரு. உனக்கு எப்படி என்ன மூலக்கூறு எப்படி குரோமோசோம் எல்லாம் அட்டாக் பண்ணி இன்ட்ரான் ரிமூவ் பண்றதை காமிக்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் மிராக்கிள் ஹவ் திஸ் ஹுயூமன் ஸ்பீஸிஸ் டெவெலப்ட் யூ நோ’’

‘’ம்ம்’’

‘’ஆமா எப்படி பணத்திற்கு, ரீஏஜென்ட்ஸ் மேனேஜ் பண்ணுவ’’

‘’அதை நான் பாத்துக்கிறேன், ஐ வில் மில்க் சம் மணி பார் திஸ்’’

‘’அப்படின்னா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டு வைச்சிக்கிருவோம்’’

‘’இல்லை ஜெகன் அது சரிப்பட்டு வராது. நானும் நீயும் இதில் சம்பந்தம் அப்படின்னு தெரிஞ்சா ராம் நம்ம மேல கேஸ் போட வாய்ப்பு இருக்கு. ஆமா ராம் கிட்ட இந்த வொர்க் காப்பி எதுவும் இருக்கா. எதுக்கு டெலிட் பண்ண சொல்லணும்’’

‘’எதுவும் இல்லை’’

‘’இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு ஜெகன். எப்படியும் இது சம்பந்தமான பைல் எல்லாம் தங்கராஜ் சேவ் பண்ணிட்டுதான் இன்பெக்ட்  பண்ணி இருக்க முடியும். நாளைக்கு இதே விஷயத்தை செய்யணும்னா எப்படி ராம் உடனே செய்ய முடியும். இது என்னோட முயற்சி அப்படின்னு எப்படி உரிமை கொண்டாட முடியும்’’

‘’இல்லை. குழந்தை உருவானா போதும். சக்செஸ் ஆயிருச்சினா என்கிட்டே பணம் கொடுத்தே பண்ண முடியும். வேற யாருகிட்டயும் போக வாய்ப்பு இல்லை. அக்ரீமென்ட் வில் வொர்க் பார் கிம். இப்போ என்னை மிரட்டி வைச்சி இருக்கார். நான் அதை யாருக்கும் தரக்கூடாது அதுதான் அவரோட திட்டம். இப்போ நான் சொன்ன ஐடியா வைச்சி நீ கேமிட்ஸ்ல இன்ட்ரான் ரிமூவ் பண்ண முடியாதா? கொஞ்சம் யோசிச்சா போதும். யூ கேன் டூ இட்’’

‘’இல்லை ஜெகன். என்னால யோசிக்க முடியலை’’

‘’சரி இதோ காட்டுறேன்’’


சிவராம் பேரார்வத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது சுபாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

(தொடரும்)