Monday 22 February 2016

ஜீரோ எழுத்து - 10 (கருந்துளை)

முந்தைய பகுதி 

இதற்கு முந்தைய பகுதியை எழுதி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு வருடங்களில் பேரதிசயங்கள் நிகழவே செய்து இருக்கின்றன. அதிலும் மிகவும் குறிப்பாக இந்த கருந்துளை பற்றிய சமீபத்திய ஒரு கண்டுபிடிப்பு பிரமிக்கத்தக்க ஒன்றுதான். 

இந்த கருந்துளைகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருந்த போதிலும் எதுவுமே விளங்கிக்கொள்ள முடிந்தது இல்லை. தனக்குப் பிடித்த ஒன்றை ஒளித்து வைக்கும் சிறு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சம் தனக்குப் பிடித்த இந்த கருந்துளைகளின் ரகசியங்களை மறைத்து வைத்துக்கொண்டே இருக்கிறது. 

இந்த பிரபஞ்சத்தில் ஒளி அலைகளை வெகு எளிதாக கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் இந்த ஈர்ப்பு அலைகளை அத்தனை எளிதாக கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஐன்ஸ்டீன் இந்த ஈர்ப்பு அலைகள் ஒரு ஈர்ப்பு ஆற்றலாக வெளிப்படும் என்றே தனது கோட்பாடுதனில் குறிப்பிட்டு இருந்தார். இதை இத்தனை வருடங்களாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அதே வேளையில் நிரூபிக்க வழி இல்லாததாகவே தென்பட்டது. நியூட்டனின் கோட்பாடுபடி இந்த ஈர்ப்பு அலைகள் இருக்கவே வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. 

பல வருடங்களாக  இந்த ஈர்ப்பு அலைகள் பற்றி அறிய வேண்டும் என அதற்கான கருவிகளை உருவாக்கிட முனைந்ததன் பலன்  இந்த வருடம் நிறைவேறி இருக்கிறது. 

இந்த கருந்துளைகள் இந்த ஈர்ப்பு அலைகளை கண்டுபிடிக்க உதவி இருக்கிறது. மீண்டும் இந்த இயற்பியல் உலகம் உந்த பிரபஞ்சம் பற்றிய பார்வையினை சற்று மாற்ற வேண்டி இருக்கிறது. 

(தொடரும்) 

மாறா மரபு - 4

6. எவருக்குத் தெரியும்

ஜெகன் சிவராமிடம் பேசிட்டு வா என அனுப்பினான்.

‘’சிவா நீ இப்போ எங்கே இருக்க’’

‘’ஒரு முக்கியமான விசயமா வெளியூர் வந்து இருக்கேன்’’

‘’அதான் எங்கே?’’

‘’திருச்சி’’

‘’எப்போ திரும்பி வருவ?’’

‘’நாளைக்கு வந்துருவேன். என்ன விஷயம்’’

‘’கொஞ்சம் கேப்ஷ்யூல்ஸ் இன்னைக்கு எடுக்கலாம்னு இருக்கேன், அதான் எடுத்த உடனே உங்கிட்ட கொடுக்கணும் இல்லைன்னா பிரச்சினை வந்துரும். ராம் கண் கொத்தி பாம்பா இருக்கான். அவனே இனி வரப்போற தம்பதிகளுக்கு கேப்ஷ்யூல்ஸ் தந்துக்கிறேனு சொல்லிட்டான். அவன் வந்து அதை எடுத்து இடம் மாத்துறப்ப ஏதாவது பண்ணனும்’’

‘’சுபா, நீ எதுவும் பண்ண வேணாம். அந்த கேப்ஷ்யூல்ஸ் வைச்சி நாம ஒண்ணும் பண்ணமுடியாது. அதனால கவலைப்பட வேண்டாம்’’

‘’என்ன சிவா சொல்ற’’

‘’ஆமா, நீ கொஞ்சம் பதறாம இரு. பார்த்துக்கிரலாம்’’

‘’சரி, நீ வந்ததும் எனக்கு தகவல் சொல்லு’’

‘’சரி’’

‘’பேசியாச்சா சிவா. நான் காட்டுற விஷயத்தை கொஞ்சம் கவனமாப் பாரு.

பெரும்பாலான பாக்டீரியாக்களில் எம்ஆர்என் ஏவில் இந்த இன்ட்ரான்கள் கிடையாது, ஆனால் எல்லா உயர்நிலை உயிரினங்களில் இந்த எம்ஆர்என் ஏக்களில் இன்ட்ரான்கள் உண்டு. இந்த எம்ஆர்என் ஏக்களில் உள்ள இன்ட்ரான்களை நீக்கியபின்னரே ஒரு எம்ஆர்என் ஏ புரதம் உண்டாக்கும் நிலைக்குச் செல்லும்.

ஒரு பாக்டீரியா தனது உயிரை பிறவற்றில் இருந்து எப்படி காத்துக் கொள்கிறது என்பதே அவை இன்னமும் இவ்வுலகில் தொடர்ந்து இருக்கக்காரணம். வைரஸ் பாக்டீரியாவை தாக்கும் தன்மை கொண்டது. ஆனால் இந்த பாக்டீரியா தனது டி என் ஏவை வேறு எந்த ஒரு டி என் ஏ வும் தாக்கி கலந்து விட முடியாதபடி தன்னில் இருக்கும் புரத வினையூக்கி மூலம் சரியாக வெட்டிவிடும் தன்மை கொண்டது. இதனால் பிற டி என் ஏ பாக்டீரியா டி என் ஏ வில் கலந்துவிட முடியாது. இதை இந்த பாக்டீரியா மெதிலேசன் வினையூக்கி மூலம் ஒரு மீதைல் மூலக்கூறுதனை தனது டி என் ஏ வில் உள்ள நியூக்ளிக் அமிலங்களில் சேர்க்கும். இப்படி செய்யும் பொது எவை எல்லாம் மீதைல் மூலக்கூறு இல்லையோ அவை எல்லாம் வெளி டி என் ஏ என பாக்டீரியாவில் உள்ள வினையூக்கி முடிவு செய்யும். இப்போது வேறு ஒரு வினையூக்கி வந்து வெட்டப்பட்ட தேவையற்ற டி என் ஏ வை தன்னில் கிரகிக்க வெட்டப்பட்ட தேவையான டி என் ஏக்கள் இணைந்து இப்போது ஒரு முழு டி என் ஏ இருக்கும்’’

‘’அது பாக்டீரியா, ஒரு செல் உயிர். ஆனால் மனிதர்கள் அப்படி இல்லையே. எவ்வளவு பெரிய பிரச்சினை வரும் தெரியும்தானே ஜெகன்’’

‘’அதனால் என்ன, பாக்டீரியா சில நேரங்களில் வைரஸ் டி என் ஏ வை தனதாக்கி கொள்ளும் தன்மை கொண்டது. அப்போது அந்த வைரஸ் டி என் ஏ வை கூட மெதிலேசன் பண்ணி தனதாக்கிக் கொள்ளும். அதைப் போல தான் இந்த இன்ட்ரான்கள். உனக்குத் தெரியாதது இல்லை. இந்த இன்ட்ரான்கள் எப்படி வந்தது ஏன் வந்தது எதற்கு இருக்கிறது என புரியாமல் இருந்தது. உன்னோட ரிசர்ச்ல கூட பண்ணி இருப்ப. இப்போ இந்த இன்ட்ரான்கள் பல முக்கிய வினையூக்கி, புரதம் உருவாக காரணமாக இருக்கிறது. எப்படி பாக்டீரியா செயல்படுதோ அதைப்போல நமது செல்கள் செயல்படுது. எம் ஆர் என் ஏ உருவாகும் முன்னர் இந்த இன்ட்ரான்கள் எப்படி ஒரு வினையூக்கி வெட்டுதுன்னு நான் ரிசர்ச் பண்ணி இருக்கேன். அதை வைச்சிதான் நான் இந்த மூலக்கூறு உருவாக்கி அதே வினையூக்கி போல செயல்பட வைச்சி இருக்கேன். அதாவது டி என் ஏவில் இதை செய்றது. எதுக்கு எம் ஆர் ஏ வரைக்கும் காத்து இருக்கணும்’’

‘’ஜெகன் எனக்கு இது சாத்தியம்னு தோணலை. நீ உருவாக்கின மூலக்கூறு எப்படி வேலை செய்யும்னு உனக்குத் தெரியும்’’

‘’இந்த படத்தைப் பாரு சிவா, இது விந்து அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அது அண்ட அணுவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட டி என் ஏ. அதில் எல்லாம் இன்ட்ரான் எக்சான் எல்லாம் இருக்கு. அடுத்ததா நான் மூலக்கூறு  சேர்த்தப்போ எல்லா இன்ட்ரான்களிலும் இந்த மூலக்கூறு போய் இணைகிறது. எப்படி பாக்டீரியா மெதிலேசன் பண்ணுதோ அதே டெக்னிக் நான் பண்ணினேன். அடுத்தது பாரு, நான் இணைச்சதும் வினையூக்கி வந்து நான் மூலக்கூறு இன்ட்ரான் எல்லாம் வெட்டுது பாரு, அடுத்து இன்னொரு வினையூக்கி வந்து அவை எல்லாம் விழுங்குது, இப்போ எக்சான் மட்டும் தான்’’

‘’ஜெகன், என்னால் நம்பமுடியலை’’

‘’அதுக்குத்தான் நான் இதை எல்லாம் படம் எடுத்து வைச்சி இருக்கேன். எப்படி ஒவ்வொரு இன்ட்ரான் எல்லாம் வெட்டப்பட்டு விழுங்கப்படுதுன்னு’’

‘’எல்லா விந்து அணுவிலும் இப்படி நடக்குமா?’’

‘’ஆமா, எழுபது சதவிகிதம் வெற்றி கிடைச்சிருக்கு. அடுத்த கட்டமே எப்படி இந்த மூலக்கூறுதனை கொண்டு போறது அப்படின்னு யோசிச்சி டாக்டர் பாண்டே கிட்ட மூலக்கூறு டெலிவரி பத்தி பேசி இந்த கேப்ஸ்யூல் உருவாக்கினேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற வேற முறை. சிவா நீ இதைப் பத்தி எல்லாம் கவலைப்படாத, இந்த டாக்குமென்ட் ல எல்லா விபரமும் எப்படி ஒவ்வொரு ஸ்டெப் பண்ணனும்னு இருக்கு. நீ அதை மட்டும் கவனமா பண்ணு போதும். இது ஒரு நாள் வேலை இல்லை. எங்கேயாவது ஒரு சின்ன தவறு நடந்தாக்கூட இந்த மூலக்கூறு வேலைக்கு ஆகாது. கேப்ஸ்யூல் எப்படி பண்றதுன்னு இந்த டாக்குமென்ட்ல இருக்கு’’

‘’ஜெகன், எனக்கு இதை பண்ண முடியும்னு தோணலை. அதுவும் நீ சொல்றது எல்லாம் சத்தியமா நடக்க வாய்ப்பே இல்லை. நீ காட்டினது உண்மையா இருந்தாலும் அதுவும் நியூக்ளியஸ்க்குள்ள இந்த மூலக்கூறு போய் இப்படி எல்லாம் பண்ணும்னு உனக்கு எப்படி தெரியும், நீ ஒரு எலி அல்லது வேறு சின்ன உயிரில் முயற்சி பண்ணி இருக்கலாம். இப்படி நேரடியா மனித உயிரோட விளையாடுறது எனக்கு சரியாப்படல’’

‘’சிவா, ஜஸ்ட் மேக் தீஸ் மாலிக்குல்ஸ், ரெஸ்ட் ஐ வில் சீ. ஐ வில் செட்டில் த அமவுண்ட் டு யூ. ப்ளீஸ் டோன்ட் சே நோ அண்ட் டோன்ட் பேக் அவே ப்ரம் திஸ் (just make these molecules, rest I will see. I will settle the amount to you. Please don’t say NO and don’t back away from this)

ஜெகன் எல்லா விபரங்களையும் சிவராமிடம் காட்டினான். ஒவ்வொரு விசயங்களையும் தெளிவாக சொல்ல சொல்ல சிவராம் மனதில் மாற்றம் உண்டானது. எப்படி நியூக்லியஸ் உள்ளே இந்த மூலக்கூறு செல்லும், எப்படி மற்ற செல்களில் சென்று இவை செயல்படாது என ஜெகன் சொன்னபோது சிவாராமிற்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. ஜெகன் அத்தனை நேரம் பேசவில்லை என்றால் நிச்சயம் சிவராம் எழுந்து போயிருப்பான். ஆனால் ஜெகனின் விடாத பேச்சு, எல்லாம் அப்படியே நடக்கும் எனும் உறுதிப்பாடு சிவராமிற்கு ஆசையை உண்டாக்கியது.

‘’சரி ஜெகன். பண்ணித்தரேன்’’

‘’வெல்டன், டேக் திஸ் சிவா  கீப் இட் சேப், லெட் அஸ் ஈட் நவ்’’

அன்று மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதாக திட்டம் போட்டான் சிவராம். ஜெகனிடம் சொல்லிவிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போனான். இந்த உலகில் இத்தனை விசயத்தையும் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு எந்த ஒரு மனிதரும் அமைதியாக இருந்து விடவில்லை. அதது அதன்பாட்டில் நடக்கும் எனில் நாம் எதற்கு எனும் சிந்தனையே மனிதனை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. இந்த இன்ட்ரான்கள் ஏதுமற்று மரபணுவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கே இருந்த ஒருவர் பாடிய பாடல் கேட்டு சிவராம் அங்கேயே நின்றான்.

ஊரிலேன் காணி யில்லை உறவுமற் றொருவ ரில்லை
பாரில்நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ண னேஎன் கண்ணனே கதறு கின்றேன்
ஆருளர்க் களைக ணம்மா அரங்கமா நகரு ளானே.

இந்த பாடலில் உள்ள அர்த்தம் போல இருக்கிறது வாழ்வு என எண்ணினான் சிவராம். தான் செய்யும் செயலில் கொள்ளும் நம்பிக்கைகள் பொய்த்துப் போகாதவண்ணம் இருக்கவே இறைவனின் மீதான நம்பிக்கைகள் மனிதர்களுக்கு உண்டாகி இருக்கக்கூடும். அப்படி என்னதான் இந்த இன்ட்ரான்கள் தம்மில் பெரும் ரகசியத்தைக் கொண்டு இருக்கக்கூடும் என சிவராம் தனது ஆராய்ச்சி மீது ஒரு புதிய கண்ணோட்டம் உண்டாகவேண்டி சிந்தித்தான்.

மீண்டும்அதே வரிகளை அவர் அங்கே பாடிக்கொண்டே இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் கூட்டம் அதிகமானது. அங்கிருந்து கிளம்பியவன் பணம் கொடுத்து தரிசனம் செய்வதா, பணம் கொடுக்காமல் தரிசனம் செய்வதா எனும் குழப்பத்தில் நின்றவன் பணம் கொடுக்காமலே வரிசையில் சென்று நின்றான். அங்கே ஒவ்வொருவரின் பேச்சுக்கள் அவனுக்கு சற்று சுவாரஸ்யமாக இருந்தன. இந்த இன்ட்ரான்கள் எக்சான்கள் பற்றி எல்லாம் இவர்களுக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என கருதினான்.  இருவரின் பேச்சு அவனுக்கு திகைப்பூட்டியது.

‘’இத்தனை வயசுல உனக்கு என்ன இந்த வரிசையில் நின்னு பெருமாளை சேவிக்கணும்னு தலைவிதியா, அதோ அங்கே பணம் கொடுத்து போக வேண்டியதுதானே’’

‘’உமக்கு என்ன தலைவிதியோ அதுவே எனக்கு இருக்கட்டும். எத்தனை மணி நேரம் வெட்டியா உலகத்தில மனுசா செலவழிக்கிறா, என் ரெங்கநாதனுக்கு இப்படி நான் நின்னு போறதுலதான் இஷ்டம்’’

‘’உன்னைத் திருத்த முடியாது’’

‘’அது என்னோட மரபணுவில ஊறினது, உமக்கு அது பத்தி எப்படி தெரியும், பேசாம வாரும், மத்தவா பாக்கிறா’’

அதிக வயதான முன் தலை எல்லாம் வழித்து பின்னால் குடுமி போட்டு நெற்றியில் நீண்ட ராமம் இட்ட மரபணு என சொன்ன அவரின் பேச்சு சிவராமிற்கு ஆச்சரியம் வரவழைத்தது.

பொதுவாக எல்லோரும் என் ரத்தத்தில் ஊறியது என்றல்லவா சொல்வார்கள், இவரோ என்னோட மரபணுவில் ஊறினது என்கிறாரே
என அவரிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘’தாத்தா, நீங்க சொன்னதில தப்பு இருக்கு. மரபணுவில் எப்படி ஊறும், ரத்தத்தில் அல்லவா ஊறும்’’

‘’பாக்கறதுக்கு படிச்சவா மாதிரி இருக்க, என்னை சோதிக்கிற மாதிரி கேள்வி கேட்கறளே. என்னை சோதிக்க அந்த ரெங்கநாதனுக்கு மட்டுமே உரிமை உண்டு. உமக்கு மரபணு அப்படின்னா என்னான்னு  தெரியாதா, இல்லை தெரியாதமாதிரி நடிக்கிறேளா’’

‘’தெரியும், ஆனா நீங்க அப்படி சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது’’

‘’இப்போதான் எல்லாம் ஜீன் ஜீன் அப்படின்னு ஊரு உலகம் எல்லாம் பேசறாளே, ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களுக்கு கருவே கிடையாது அப்படின்றது நோக்கு தெரியுமோன்னோ, இப்போ நான் அதை பேச விரும்பலை. ரெங்கநாதனை சேவிக்க வந்துட்டு எதுக்கு எனக்கு இந்த வியாக்கியானம் எல்லாம், நீர் சேவிச்சிட்டு என்னோட ஆத்துக்கு வந்தா எல்லாம் சொல்றேன். பொது இடத்தில மத்தவாளுக்கு நாம இடைஞ்சலா இருக்கப்படாது. புரியுதுன்னோ’’

‘’சரிங்க தாத்தா’’

கோவிந்தா, கோவிந்தா எனும் சத்தம் அனைவரும் ஒரு சேர எழுப்பினார்கள். ஆனால் அந்த வயதானவர் ஒரு பாடலை தனக்குள் முனுமுனுத்தார்.

தவத்துளார் தம்மி லல்லேன் தனம்படத் தாரி லல்லேன்
உவர்த்தநீர் போல வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்
துவர்த்தசெவ் வாயி னார்க்கே துவக்கறத் துரிச னானேன்
அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகரு ளானே

சிவராமிற்கு அந்த பாடல் தெரியவில்லை, சரியாக கேட்கவும் இல்லை. இவ்வுலகில் எத்தனையோ அதிசயமிக்க மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். ஒவ்வொருவரும் இவ்வுலகைப் பற்றிய ஒரு கருத்தைக் கொண்டு இருக்கிறார்கள். டாக்டர் ராம் இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிட நினைக்கிறார். இன்ட்ரான்கள் நீக்கப்பட்ட பின்னே புரதங்கள் எல்லாம் உருவாகிறது என்றாலும் அந்த இன்ட்ரான்கள் கருவிலேயே இருக்கக்கூடாது என கருதுகிறார். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிறந்தோம், வேலை பார்த்தோம், சந்ததிகள் உருவாக்கினோம் என பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் பிறந்து இறந்து போனார்கள் எனும் யோசனையில் நகர்ந்தான் சிவராம்.

வயதானவர் ‘ரெங்கநாதா’ எனும் மெல்லிய குரல் கொண்டு அழைத்து கைகள் மேல்தூக்கி கூப்பியபோது அந்த வயதானவரின் முகத்தில் எத்தனை சந்தோசம் என்பதையே நோக்கினான் சிவராம். ஒரு சில வினாடிகளில் அந்த வேண்டுதல் கடந்து விட்டது. சிவராம் தான் என்ன வேண்டினோம் என்பதையே நினைவில் கொள்ளவில்லை.

‘’ஆத்துக்கு வரேள்தானே, ஆத்துல நா மட்டும் தான் இருக்கேன், ஆத்து அப்படின்னா மாளிகைனு நினைச்சிண்டு வராதேள்’’

சிவராம் சரி என சொல்லியபடி அவருடன் நடந்தான்.

‘’என்ன வேண்டிண்டு வந்தேள்’’

‘’வேண்ட மறந்துட்டேன் தாத்தா’’

‘’நீர் வேண்டித்தான் அந்த ரெங்கநாதன் தருவாரில்லை’’

‘’நீங்க என்ன வேண்டினீங்க தாத்தா’’

‘’ரெங்கநாதானு வேண்டிண்டேன், அது போதும் எனக்கு’’

‘’நீங்க என்ன படிச்சி இருக்கீங்க, என்ன வேலை பாத்தீங்க’’

‘’நான் வேதம் படிச்சி இருக்கேன், கோவிலில பூசாரியா வேலை பார்த்தேன், ரெங்கநாதனுக்கு சேவகம் பண்றதுதான் என்னோட வேலை. நீர் என்ன படிச்சி இருக்கேள்’’

‘’மூலக்கூறு உயிரியல் படிச்சி இப்போ ஆராய்ச்சி பண்றேன் தாத்தா’’

‘’மரபணு ஆராய்ச்சியா, என்கிட்டே ஒரு ரகசியம் இருக்கு, சொல்றேன் வாரும்’’

சிவா திடுக்கிட்டான் (தொடரும்) 

Tuesday 16 February 2016

மாறா மரபு - 3

5 இவன்கண்

ஜெகன் தந்து கணினியை திறந்து பார்த்தபோது எல்லா பைல்களும் திறக்கமுடியாதது கண்டு அதிர்ச்சி அடைந்தான். இது யாருடைய விஷமம் என அவனால் ஓரளவுக்கு யூகிக்கமுடிந்தது. நிச்சயம் டாக்டர் ராம் எவரையோ வைத்துதான் இதைச் செய்து இருக்க முடியும் என முடிவு செய்தான். நேராக தனது அலுவலகம் சென்று கணினி திறந்து பைல்கள் திறக்க முயற்சித்தபோது அதே பிரச்சினை கண்டு அவனுக்குள் எரிச்சல் கோபம் கொப்பளித்துது.

நேரடியாக தனது சூப்பர்வைசரை சென்று பார்த்தான்.

‘’நான் எனது ஊருக்கு ஒரு மாத விடுமுறையில் செல்ல வேண்டும், எனக்கு மனது சரியில்லை’’

‘’நான் திட்டினது உனக்கு கோபமா ஜெகன், என்னிடம் அனுமதி இல்லாமல் நீ என்ன என்னவோ ரீஏஜென்ட்ஸ் வாங்கி இருக்கிறாய், இதனால் நான் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. எவ்வளவு பண விரயம், கொஞ்சம் கூட யோசனை இல்லாமல் செய்து இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. நீ தாராளமாக போய்விட்டு வா, நான் பேசி சமாளித்துக் கொள்ளவேண்டியதுதான். அதற்கு முன் எனக்கு நீ சில விசயங்களை சொல்ல வேண்டும்’’

‘’இனிமேல் அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’’

‘’அது இருக்கட்டும் அப்படி என்னதான் அந்த ரீஏஜென்ட்ஸ் வைத்து செய்தாய் என நான் தெரிந்து கொள்ள வேண்டும்’’

‘’நான் இன்ட்ரான் சம்பந்தபட்ட நமது ஆராய்ச்சிதான் செய்தேன்’’

‘’இல்லை ஜெகன், என்னிடம் நீ மறைக்க முயலாதே. நீ உபயோகப்படுத்திய சில ரீஏஜென்ட்ஸ் நமது ஆராய்ச்சிக்கு சம்பந்தமே இல்லாதது. அதுவும் அவை சற்று விலை கூடுதல் வேறு’’

‘’இன்ட்ரான் ரிமூவ் பண்ண வேண்டிதான் வாங்கினேன். வாங்கும் முன்னர் உங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது எனது தவறுதான்’’

‘’அதற்கு என்சைம் போதுமே, எதற்கு இந்த ரீஏஜென்ட்ஸ்?’’

‘’என்சைம் கிடைக்கவில்லை அதனால் இதை வாங்கினேன்’’

‘’இனிமேல் இதுபோன்று செயல்படாமல் இரு, நீ இப்போ ஊருக்கு போறது கூட எனக்கு நல்லதுதான். அப்படியே நான் சொன்னபடி திருச்சியில் அந்த வேலையை சேர்த்து முடித்துக்கொண்டு வந்துவிடு. எப்படியும் இரண்டு மாதங்கள் அங்கே ஆகும். நான் டாக்டர் புருசோத்தமனிடம் பேசிவிடுகிறேன். உன்னால் அடுத்த மாதம் அங்கு போக இயலும்தானே’’

‘’பிரச்சினை இல்லை சார் ’’

‘’நீ ஒரு நம்பத்தகுந்தவன் என்ற முறையில் தான் இம்முறை மன்னித்து அனுப்புகிறேன், கவனமாக இரு’’

ஜெகன் அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தான். வீடு வந்து சேர்ந்தபோது அப்பாடா என்று இருந்தது. தன்னிடம் இருந்த மெமரிஸ்டிக்  பத்திரமாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டான். தங்கராஜ் ஜெகனைப் பார்க்க வந்து இருந்தான்.

‘’ஜெகன் எங்க போயிருந்த, ஆளையேக் காணோம் உன்னோட மொபைல் கூட இன்னைக்கு காலையில் இருந்து வேலை செய்யலையே’’

‘’சென்னை வரைக்கும் போயிருந்தேன், வரப்ப ஏர்போர்டில மொபைலை தொலைச்சிட்டேன், பக்கத்தில வைச்சிருந்தேன், எவனோ எடுத்துட்டுப் போயிட்டான் ’’

‘’இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்ப. என்ன விசயமாகப் போன’’

‘’டாக்டர் ராம் அப்படின்னு ஒருத்தரைப் பார்க்க போயிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிஞ்சது. முன்னரே என் சார் சொன்னமாதிரி நான் இன்னைக்கே பஞ்சாப் போக வேண்டி இருக்கு’’

‘’என்ன விசயம்’’

‘’லேப் சம்பந்தமா வேலை ஒரு மூணு மாசத்திற்கு இருக்கு’’

‘’அப்போ டில்லி?’’

‘’மூணு மாசம் பிறகு வருவேன், இந்த வேலையைத்தான் அங்க செய்ய வேண்டி இருக்கு’’

‘’சரி நான் கிளம்பறேன்’’

‘’அதுக்குள்ளே கிளம்பிட்டே’’

‘’உன்னோட ரூம் திறந்து இருந்தது ஒருவேளை நீ வந்து இருப்பியோனு பார்க்க வந்தேன். வந்தப்ப நீ காணலை. நீ வேலைக்குப் போனியா’’

‘’போனேன் உடனே சார் என்னை கூப்பிட்டு பஞ்சாப் போகச் சொல்லிட்டார். அதான் அப்படியே திரும்பி வந்துட்டேன். ஆமா என்னோட ரூம் மேட் நீ பாத்தியா’’

‘’நேத்து இருந்தானே, அவன்தான் ஆறு மணிக்கு எல்லாம் வேலைக்குப் போறவன் ஆச்சே’’

‘’அவன் வந்தா நான் பஞ்சாப் போயிருக்கிறதா சொல்லு, புது மொபைல் வாங்கித்தான் அவனுக்கு தகவல் சொல்லணும். உனக்கும் நம்பர் அனுப்பறேன்’’

‘’பத்திரமாப் போயிட்டு வா, டிக்கட் லேப்டாப் மூலமா புக் பண்ணப் போறியா. உன்கிட்ட மெமரி ஸ்டிக் இருக்கா’’

‘’அது என்னோட சார் கிட்ட கொடுத்துட்டேன். அதில அவரோட வேலை சம்பந்தமான விசயங்கள் மட்டுமே இருந்தது. எதுக்கு கேட்ட. டிக்கட் இங்க புக் பண்ண நேரமில்லை, லேப்டாப் இங்கேயேதான் விட்டுட்டுப் போகப் போறேன். எதுக்கு தேவை இல்லாத சுமை. அலமாரில பூட்டி வைச்சிட்டேன் சாவி என்கிட்டதான் இருக்கு’’

‘’என்னோட பைல் மாத்தணும் வேலை இடத்தில வைச்சிட்டு வந்துட்டேன் அதான். சரி, நீ கவனமாப் போயிட்டு வா’’

தங்கராஜ் டாக்டர் ராமிற்கு எல்லாத் தகவல்களையும் சொன்னான். அவசரத்தில் வந்து இருந்ததால் ஜெகன் எந்த சந்தேகமும் இல்லாதமாதிரி இருந்ததாக லேப்டாப், அலுவலக கணினி குறித்து எதுவும் பேசவில்லை என சொன்னான். டாக்டர் ராம் சந்தோசம் கொண்டார். அவனது புதிய எண் தந்ததும் தனக்குத் தரச் சொன்னவர்  மூணு மாசம் எனக்குப் போதுமானது என டாக்டர் ராம் தங்கராஜிற்கு நன்றி சொல்லிக்கொண்டார்.

ஜெகனுக்கு தங்கராஜ் மீது கோபம் வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டான். நிச்சயம் இவனது வேலையாகத்தான் இருக்கும் என உறுதி செய்து கொண்டான். டாக்டர் ராம் தன்னை சந்தித்தபோது இவனை சந்தித்து இருக்கக்கூடும் என எண்ணம் கொண்டான். அப்போதே தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு டில்லி விமான நிலையம் விரைந்தான். சென்னைக்கு செல்ல அவனுக்கு ஒரு பயணச்சீட்டு கிடைத்தது. மொபைல் தொலைந்து போனதை தங்கராஜ் நம்பி இருக்க நிறைய சாத்தியங்கள் இருந்தன என எண்ணியவன் தனது தொலையாத மொபைலுக்கு அப்போதே வேறு ஒரு சிம்கார்டு வாங்கிக்கொண்டான். மெமரி ஸ்டிக் தப்பித்த விஷயம் தங்கராஜிற்கு தெரியப்போவது இல்லை என்பதே நிம்மதியாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அப்படியே திருச்சி சென்று விட வேண்டும் என திட்டம் போட்டான். சிவாவிடம் பேசினால் நல்லது என தோணியது.

‘’சிவா, நான் ஜெகன் பேசறேன். நீ நாளைக்கு ஸ்ரீரங்கம் வர முடியுமா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இன்னைக்கு நைட் கிளம்பினா நாளைக்கு வந்துருவதானே’’

‘’என்ன விஷயம் ஜெகன்’’

‘’இன்ட்ரான் பத்தியது. உன்கிட்ட நான் பேசி ஆகனும். தயவு செய்து வந்துரு. இந்த நம்பருக்கு போன் பண்ணு. யாருக்கும் நீ சொல்லாத’’

‘’ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபம் பக்கத்தில் வந்து நிற்கிறேன். அங்க வந்துரு’’

சிவராம் ஜெகனின் தொலைபேசி அழைப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் ஏதும் பிரச்சினை இருக்கும் என யூகித்தது சரியாகிவிட்டது. சுபா வேறு கேப்ஸ்யூல் கிடைக்காத நிலையைச் சொல்லி இருந்தாள். சுபாவுக்கு தகவல் சொன்னால் டாக்டர் ராம் சந்தேகம் கொள்ள சாத்தியம் இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

ஜெகன் சென்னைக்கு  மாலையில் வந்து இறங்கியதும் திருச்சிக்கு பேருந்தில் அங்கிருந்தே பயணம் செய்தான். ஜெகனுக்கு தான் செய்து கொண்டிருப்பது சரியா என புரியவில்லை. தான் ஸ்ரீரங்கம் வந்து இருப்பதுவோ சென்னையில் வேலை செய்ய இருப்பதுவோ டாக்டர் ராமிற்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது யோசனையாக இருந்தது. திருச்சி வந்தடைந்து அங்கிருந்து ஸ்ரீரங்கம் வீட்டிற்கு சென்றபோது இரவு பன்னிரண்டு மணி ஆகி இருந்தது.

மக்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டு இருந்தனர். ஸ்ரீரங்கத்து கோபுரம் அந்த இரவிலும் பளிச்சென இருந்தது. ஜெகனை அவனது வீட்டில் எவருமே எதிர்பார்க்கவில்லை. காவிரி ஆற்றில் ஓடும் சிறிது  நீர் கொண்டு வீசிய காற்று சில்லென்று வீசியது. தன்னை வீட்டில் எப்படி எதிர்கொள்வார்கள் என ஜெகன் அப்போதும் யோசித்து இருக்கவில்லை.

அப்பா பூரணசந்திரன், அம்மா பூரணி. இருவருமே ஆசிரியர் வேலை பார்த்து வருபவர்கள். ஜெகனுக்கு ஒரு தங்கை சத்யபாமா. மதுரை மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறாள். இந்த ஸ்ரீரங்கம் தான் அவர்களது பூர்வீகம் எல்லாம். இரண்டு பிள்ளைகள் பிறந்த போதும் தனியாக அவர்கள் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்து ஸ்ரீரங்கநாதர் அவர்களுக்கு துணை. மாலை, சனி ஞாயிறுகளில் கோவில் வாசம் அவர்களுக்கான வேண்டுதல், விரும்புதல்.

வீட்டின் அழைப்பு மணி அழுத்த வீட்டில் விளக்கு எரிய சில நிமிடங்கள் மேல் ஆனது. பூரணசந்திரன் தூக்க கலக்கத்துடன் வந்து கதவின் பக்கம் வந்து நிற்க ஜெகனைக் கண்டதும் ஆச்சரியம் ஏற்பட்டது. வேகமாக கதவைத் திறந்தார். ஜெகன் உள்ளே நுழைந்ததும் கதவைச் சாத்தினார்.

‘’வாப்பா, என்ன ஒரு தகவலும் சொல்லாம வந்து நிக்கிற’’

‘’ஒரு முக்கியமான லேப் விசயமாக வந்தேன். இன்னும் இங்கேதான் ஒரு மூணு மாசம் இருக்கப் போறேன்ப்பா’’

அதற்குள் ஜெகனின் அம்மாவும் வந்து நின்றார்.

‘’எதுவும் சாப்பிட்டியாப்பா?’’

‘’ம்ம் சாப்பிட்டேன்மா, காலையில ஒரு ஆறு மணிக்கு எழுப்பமுடியுமா. இப்ப தூங்குறேன்’’

‘’காலையில் பேசிக்கிறலாம், தூங்குப்பா’’ என பூரணசந்திரன் சொன்னார்.

அன்று இரவு பத்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி பேருந்து நிலையத்தில் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்துவிட்டு பதினோரு மணிக்கு ஸ்ரீரங்கம் நோக்கி சிவராம் பயணம் செய்யத் தொடங்கினான்.

பேருந்தில் எங்கேயும் எப்போதும் படம் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த படத்தினை பார்க்க விரும்பாமல் கண்களை மூடிக்கொண்டான். சுபா மனதில் வந்து போய்க்கொண்டு இருந்தாள்.

‘சிவா, டாக்டர் ராம் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. குழந்தைகளோட வாழ்க்கையில் விளையாடுறார்’ என்ற வரிகள் அவனது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருளை பொருட்படுத்தாது பேருந்து வேகமாக சென்று கொண்டு இருந்தது. எங்கேயும் எப்போதும் படம் போல ஆகிவிட்டால் எனும் எண்ணம் அவ்வப்போது அவனுக்குள் வந்து போனது. சரியாக ஐந்து மணிக்கு எல்லாம் திருச்சி வந்து பாதுகாப்பாக இறங்கியாகிவிட்டதே அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஜெகன் ஐந்து மணிக்கு தானாகவே எழுந்து இருந்தான். ஆறுமணிக்கு எழுப்ப சொல்லிட்டு ஐந்து மணிக்கே எழுந்திட்டியா என அம்மா சொன்னார். திருச்சி வந்துவிட்டதாக சிவராம் தகவல் சொல்லி இருந்தான். ஜெகன் அவசரம் அவசரமாக கிளம்பினான். தனது நண்பர் ஒருவர் வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நேராக அம்மா மண்டபத்தில் சென்று ஜெகனை அழைத்துக்கொண்டு தனது வீடு வந்தான். சிவராமினை தயாராகச் சொன்னான் ஜெகன். அதற்குள் காலை உணவு எல்லாம் தயாராகி இருந்தது.

‘’என்னப்பா முன்னமே சொல்லி இருந்தா நாங்க லீவு போட்டு இருப்போமே’’

‘’அம்மா நீங்க வேலைக்குப் போங்க, இங்கதானே இருக்கப்போறேன், மதியம் நான் வெளியில் சாப்பிட்டுக்கிறேன்’’

‘’சாதம் வடிச்சி வைச்சிருக்கேன்ப்பா’’

‘’சரிம்மா’’

அதிகாலை எழுந்து எல்லாம் தயார் செய்து வேலைக்கு செல்வது இன்று நேற்றல்ல பல வருட பழக்கம். அனைவரும் காலை உணவு உண்டார்கள். ஜெகன் சிவராமினை தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

‘’சிவா நான் ஒரு பிரச்சினையில் மாட்டி இருக்கேன். டாக்டர் ராம் என்னை மிரட்டுறார்’’

‘’எந்த டாக்டர் ராம்’’

‘’பாக்யா வருணன் கிளினிக்ல வேலை செய்றார். டெஸ்ட் டியூப் பேபி பண்றவர்’’

‘’முந்தாநாள் பார்க்க வந்தியே அவரா’’

‘’ஆமா, அவரை நான் டில்லியில் வைச்சி சந்திச்சேன். என்னோட ஆராய்ச்சி பத்தி பேசிட்டு இருந்தோம். அப்போதான் இன்ட்ரான் ரிமூவல் ப்ரம் ஸ்பெர்ம் அண்ட் எக் பத்தி பேசினார். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என்னைப்பத்தி சில ஆர்டிகல்ஸ்ல படிச்சி இருக்கேன்னு சொன்னார். என்னை மெனக்கெட்டுப் பார்க்க வந்தது போல இருந்துச்சி. ஆனா ஒரு மருத்துவ விசயமா வந்தேன்னு சொல்லிட்டு இருந்தார். நானும் தாராளாம பண்ணிரலாம்னு சொல்லிட்டேன். இட் இஸ் வெரி காம்ப்ளிகேட்டட் ஐடியா. ஆனா ரொம்ப சாதாரணமா சொன்னார்.  அண்ட செல், விந்து செல் இவற்றில் இருந்து இன்ட்ரான் நீக்கிட அவை இன்ட்ரான் அற்ற செல்களாக உருவாகும். பின்னர்  அவைகளை ஒன்று சேர வைத்தால் இன்ட்ரான் இல்லாத குழந்தை உருவாகும் அந்த குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என அறியலாம். இது என்னுடைய சிந்தனை. நீ ஒத்துழைப்பு தந்தால் நாம் ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம். அதை நீ எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. இது எனது கனவு. என்னால் தனியாக செய்ய இயலாது நீ இந்தவேலையில் இருப்பதால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உன்னை சந்தித்து ஒப்பந்தம் போட நினைக்கிறேன். என்ன சொல்கிறாய்? (Remove all introns from those gametes, then you will have intron free gametes. Make them fuse together, you will have a child without introns then you see how a child behaves. This is my idea, if you agree to help me we can sign an agreement and you should not breach this at any cost. This is my dream. I could not do this on my own, when I saw you are working on this field I took this opportunity to see you and make an agreement. What do you say?) நானும் யோசிக்காமல் சரி என சொல்லிட்டேன். ஒப்பந்தம்தனில் கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன்’’

‘’சரி ஆனா எப்படி இன்ட்ரான் நீக்குறது என்ன ரீஏஜென்ட்ஸ் (reagents) உபயோகம்  பண்றதுன்னு அவர் எழுதித் தந்தாரா?’’

‘’இல்லை. அது எல்லாமே என்னோட ஆராய்ச்சி. நான் திட்டமிட்டு பண்ணினது. நான் உருவாக்கி இருக்கிற  அந்த மூலக்கூறு நேரடியா ஸ்பெர்ம், எக் செல்களை அட்டாக் பண்ணும். ஐ மேட் திஸ் கான்செப்ட் டு அட்டாக் 23 குரோமொசொம்ஸ் செல்கள். ( I made this concept to attack those 23 choromosomes cells)’’

‘’ரிப்ளிகேஷன் (replication) ப்ராசெஸ் ட்ரான்ஸ்லேசன் (translation) ப்ராசெஸ் பத்தி யோசிச்சியா’’

‘’எஸ், எல்லாம் யோசிச்சி அட்டெம்ப்ட் பண்ணி இருக்கேன். இட் வில் ஒர்க் அவுட்’’

‘’அப்ப என்னதான் பிரச்சினை’’

‘’அக்ரீமென்ட். என்னால இதை உருவாக்கி வேற ஒருவருக்கு தர முடியாது. டில்லியில் ஒரு டாக்டர்கிட்ட பேசினேன். அவருக்கு ஆர்வம் வந்தது. ஆனா கேப்ஸ்யூல் கொண்டு வந்து தா நான் பரிசோதிச்சிட்டு உனக்கு இதைப் பண்ண மேற்கொண்டு பணம் தரேன்னு சொன்னார். அதை வாங்கத்தான் வந்தேன். ஆனா டாக்டர் ராம் தர முடியாது, இது என்னோட கனவு எல்லாமே நான் பண்ணினது நீ இல்லைனு சொல்லிட்டார்.’’

‘’அக்ரீமென்ட் ரீட் பண்ணாமலா கையெழுத்துப் போட்ட’’

‘’எனக்கு அப்ப அந்த யோசனை இல்லை. நிறைய பணம் தரேன்னு சொன்னார்’’

 ‘’இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லு’’

‘’லுக் நான் எல்லா விபரங்களும் தரேன். நீ அதை இங்கே உருவாக்கு. எனக்கு நீ அனுப்பி வை. நான் அந்த டில்லி டாக்டர்கிட்ட கொடுத்து அடுத்த ப்ரோஜெக்ட்க்கு பணம் வாங்கிருவேன். நாம சேர்ந்து நிறைய செய்யலாம். நீ பண்ண ஆரம்பிச்சதும் பேடன்ட் உன்னோட பேருல அனுப்பிருவோம். டாக்டர் ராம் எதுவும் பண்ண முடியாது. அவர் என்ன பண்ணினார் தெரியுமா? என்னோட லேப்டாப்,வொர்க்  சிஸ்டம் இருந்த என்னோட டாட்டா எல்லாம் தங்கராஜ் அப்படின்னு ஒருத்தன் மூலமா இன்பெக்ட் பண்ண வைச்சிட்டார். அவன் ஒரு கம்ப்யூட்டர் வித்தகன். ஆனா நான் எல்லா விபரத்தையும் இந்த மெமரி ஸ்டிக் ல வைச்சி இருக்கேன். என்ன சொல்ற?’’

‘’எஸ். நான் உனக்கு உதவி பண்றேன், இது நமக்குள்ள இருக்கட்டும்’’

‘’ஐ  ஆம் சோ கேப்பி சிவா. பை த வே டோன்ட் சே டூ தட் கேர்ள் டூ. ஒரு நிமிஷம் இரு. உனக்கு எப்படி என்ன மூலக்கூறு எப்படி குரோமோசோம் எல்லாம் அட்டாக் பண்ணி இன்ட்ரான் ரிமூவ் பண்றதை காமிக்கிறேன். இட் இஸ் ஜஸ்ட் மிராக்கிள் ஹவ் திஸ் ஹுயூமன் ஸ்பீஸிஸ் டெவெலப்ட் யூ நோ’’

‘’ம்ம்’’

‘’ஆமா எப்படி பணத்திற்கு, ரீஏஜென்ட்ஸ் மேனேஜ் பண்ணுவ’’

‘’அதை நான் பாத்துக்கிறேன், ஐ வில் மில்க் சம் மணி பார் திஸ்’’

‘’அப்படின்னா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டு வைச்சிக்கிருவோம்’’

‘’இல்லை ஜெகன் அது சரிப்பட்டு வராது. நானும் நீயும் இதில் சம்பந்தம் அப்படின்னு தெரிஞ்சா ராம் நம்ம மேல கேஸ் போட வாய்ப்பு இருக்கு. ஆமா ராம் கிட்ட இந்த வொர்க் காப்பி எதுவும் இருக்கா. எதுக்கு டெலிட் பண்ண சொல்லணும்’’

‘’எதுவும் இல்லை’’

‘’இல்லை எனக்கு சந்தேகமா இருக்கு ஜெகன். எப்படியும் இது சம்பந்தமான பைல் எல்லாம் தங்கராஜ் சேவ் பண்ணிட்டுதான் இன்பெக்ட்  பண்ணி இருக்க முடியும். நாளைக்கு இதே விஷயத்தை செய்யணும்னா எப்படி ராம் உடனே செய்ய முடியும். இது என்னோட முயற்சி அப்படின்னு எப்படி உரிமை கொண்டாட முடியும்’’

‘’இல்லை. குழந்தை உருவானா போதும். சக்செஸ் ஆயிருச்சினா என்கிட்டே பணம் கொடுத்தே பண்ண முடியும். வேற யாருகிட்டயும் போக வாய்ப்பு இல்லை. அக்ரீமென்ட் வில் வொர்க் பார் கிம். இப்போ என்னை மிரட்டி வைச்சி இருக்கார். நான் அதை யாருக்கும் தரக்கூடாது அதுதான் அவரோட திட்டம். இப்போ நான் சொன்ன ஐடியா வைச்சி நீ கேமிட்ஸ்ல இன்ட்ரான் ரிமூவ் பண்ண முடியாதா? கொஞ்சம் யோசிச்சா போதும். யூ கேன் டூ இட்’’

‘’இல்லை ஜெகன். என்னால யோசிக்க முடியலை’’

‘’சரி இதோ காட்டுறேன்’’


சிவராம் பேரார்வத்தில் அமர்ந்து இருந்தான். அப்போது சுபாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

(தொடரும்)