Monday 11 January 2016

தட்சாயினியும் கல்யாண உறவும் -1

எனது பெயர் தட்சாயினி, வயது 23. சராசரிப் பெண்ணைப் போலவே இருப்பேன். சராசரி என்றால் என்னவென்று சொல்ல, சாதாரணம் அல்ல. கணக்கியல் படித்து வேலையில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகிறது. எனது கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேன்.

எனக்கு ஒரு மூத்த சகோதரன் உண்டு. அவனுக்கு திருமணம் ஆகியிருக்கக்கூடாது என்றுதான் இன்றும் வேண்டுகிறேன். எங்களது குடும்பம் ஒரு விவசாய குடும்பம். கல்யாணம் முடித்த ஒரு மாதத்தில் எங்களுடன் இருந்த தொடர்பை என் அண்ணன் முற்றிலுமாகத் துண்டித்துவிட்டான். எங்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னை கரை சேர்ப்பான் என்ற எனது பெற்றோரின் நம்பிக்கை வீணாகிப் போனது. நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த நேரம் இது. பணம் சேர்த்து படித்து முடிக்க போதும் போதும் என்றானது.

என் அண்ணனைப் பார்த்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. வேலை கிடைப்பது பெரும்பாடாக இருந்தது. சில மாதங்கள் விவசாயம் செய்தேன். அதற்குள் பலவாறு பேச்சுக்கள். எப்படியோ ஒரு வேலை கிடைத்து அது எனக்குப் பிடித்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்தபின்னர்தான் நிம்மதியாக இருந்தது.

பதினோராவது படிக்கும்போது அருண் என்பவனை நான் உயிருக்கு உயிராக காதலித்தேன். பன்னிராண்டாவது முடித்ததும் எனது காதலை அவனிடம் சொன்னேன். சந்தோசப்பட்டான் ஆனால் பதில் ஏதும் சொல்லவில்லை. இன்று கூட அவனை எதேச்சையாக சந்தித்தேன். வேலை கிடைத்த விஷயத்தை சொன்னேன். வாழ்த்துக்கள் சொன்னவன் தன்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருந்தான். என்ன பண்ற என்ற எனது கேள்விக்கு விவசாயம் பார்க்கிறேன் என்ற பதில் தந்தவன் சரி பார்ப்போம் எனப்  போய்விட்டான். இன்றுவரை எனது காதலுக்கு அவன் பதில் சொல்லவே இல்லை. அவனைத்தவிர வேறு எவரையும் காதலிக்க மனமும் இல்லை. அவனை இன்னமும் எனக்குப் பிடித்து இருக்கிறது. அவனுக்கு என்னைப் பிடித்து இருக்கிறதா என கேட்கும் மன தைரியம் எனக்கு இருந்தது இல்லை.

''தட்சா  பொண்ணு கேட்டு வராங்க என்ன சொல்லட்டும் என்று அம்மா கேட்டதும் ஒரு மூனு வருஷம் போகட்டும்மா என்றேன். சரிம்மா என அம்மா அமைதி ஆனார். அருணுக்கு திருமணம் ஆகிவிடக்கூடாதே என்ற கவலை எனக்கு இருந்தது. எப்படியும் என்னை மணம்  முடிப்பான் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அருண் எனது ஊரில் இருந்து ஒரு 15கி மீ தொலைவில் உள்ள ஊரில் இருக்கிறான். அந்த ஊர்ப்பக்கம் சிலமுறை சென்றது உண்டு. ஆனால் அந்த ஊருக்குள் ஒரே ஒருமுறை சென்றது உண்டு. சின்ன கிராமம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அருண் அன்று ஊரில் இல்லை. பின்னர் அந்த ஊருக்குள் செல்லும் தைரியம் வந்தது இல்லை.

நான் வேலைப் பார்க்கும் ஊருக்குத்தான் அவன் பொருள் விற்க வாங்க வர வேண்டும். எங்க ஊருக்கும் இதுதான் விற்பனை இடம். அப்பா இங்கேதான் வருவார். அப்பாவின் கண்களில் பட்டு இருக்கலாம். ஆறு மணிக்கு அப்பா ஊரில் இருந்து கிளம்புவார். ஒன்பது மணிக்கு வீடு வந்து பின்னர் தோட்டம் செல்வார். வாரத்தில் மூன்று நாட்கள் நிச்சயம் செல்வார். இதுவரை நான் அந்த விற்பனை பகுதிக்கு சென்றது இல்லை. இப்போது அந்த இடம் எதுவெனப் பார்க்கத்தான் ஆர்வம் உண்டானது. அன்று இரவு அப்பாவிடம் பேசினேன்.

''என்னம்மா புது அக்கறை''

''சும்மா தோனிச்சிப்பா''

''நாளைக்கு என்னோட வாம்மா''

சனி அன்று அப்பாவுடன் சென்றேன். அப்பா கொண்டு போன காய்கறி மூட்டைகள் வெகுவேகமாக விற்றது. என்னை பலரும் விசாரித்தார்கள். அருணை எனது கண்கள் வேறு எவருக்கும் தெரியாமல் தேடித் தவித்தன.

''வாம்மா போகலாம், இன்னைக்கு நீ வந்த வேளை எல்லாம் சீக்கிரம் வித்துருச்சி''

''அப்பா வேற விற்பனை இடம் இங்கே இருக்கா''

''இல்லைம்மா, இது ஒரே இடம் தான். ஆனா பொருள் பொருத்து மாறும். வத்தல் எல்லாம் தெற்கால விப்பாங்க''

அப்பாவுடன் இத்தனை சுலபமாக இன்றுதான் பேசி இருக்கிறேன். ஒருவித பயம் எப்போதும் இருக்கும். ஆனால் அருண் பற்றிய நினைப்பில் பயம் விலகும்.

''பொங்கல் இந்த கடையில் நல்லா இருக்கும், வாம்மா சாப்பிட்டுப் போகலாம்''

நான் பார்க்காத ஒரு புதிய கடை அது. எவரைப் பார்க்க நினைக்கிறோமோ அவரைப் பார்த்தே தீர்வோம் என்று புரிந்த தருணம் அது. அருண் அந்த கடையில் இருந்து வெளியே வந்தான்.

(தொடரும்) 

Tuesday 29 December 2015

நமது திண்ணை டிசம்பர் மாத இணைய இதழ்

ஒன்றின் வளர்ச்சியானது அவை பெறும் எதிர்ப்புகளைப் பொருத்து அமைகிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதுவும் சர்ச்சைக்கு உள்ளாகும்.

நமது திண்ணை இணைய இதழ் தற்போது ட்விட்டர் பயன்பாட்டில் உள்ள தமிழ் மக்களின் சிலருக்கு மிகவும் பரிச்சயமாக மாறி எரிச்சல்தனை ஒரு சிலரின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்த இணைய இதழில் இடம் பெற்றுள்ள அவனதிகாரம் எனும் ட்விட்டர் பயன்பாட்டு தமிழரின் எழுத்துக்கள். நமது திண்ணையில் எதற்கு அப்படி சர்ச்சையை அந்த அவனதிகாரம் உண்டு பண்ணின எனப் பார்த்தால் குழந்தைத்தனமான எழுத்துக்கள். குழந்தையின் செயல்களை எப்படி ரசித்து மகிழ்கிறோமோ அதைப்போலவே இது போன்ற அழகிய காதல் ரசிப்புகளை ரசிக்க வேண்டும், ஆனால் ஒரு பிரமாண்டமான படைப்பையே விமர்சிக்கும் விமர்சகர்கள் அதிகமாகிப் போன சூழலில் இதுபோன்ற எழுத்துக்கள் விமர்சனம் பெறவே செய்யும். ஆனால் அவனதிகாரம் எல்லாமே வெகு அழகு.

மதுப்பிரியாவின் ''அவனா வந்தான். சினிமா டயலாக்க அளந்தான். நான் ஙே-னு  சொன்னேன். அவன் கிர்ர்ர்ர்-னு சொல்லிட்டுப் போயிட்டான்'' இந்த ஙே கிர்ர்ர்ர் எல்லாம் ட்விட்டர் பயன்பாட்டு மொழிகள். ஒரு படைப்பாளி தனது எண்ணங்களை வெளிப்படுத்த பயன்படுத்துவதே மொழி. அதுவும் டார்லின்ரெதா உவமை எல்லாம் காதலின் உச்சம். ''எரியும் நெருப்பாய் நீ, திரியாய் நான், நீ பிரகாசமாய் எரிய என்னை நான் எரிப்பேனடா'' இங்கே நெருப்பின் நிலையை திரியே அதிகரித்து விடுவதாக ஒரு அழகிய கவித்துவம். ஜீவசுசியின் அழகிய சொல்லாடல். 'உன்னைப் பிடிக்கும் அதைவிட உன் இதயம் பிடிக்கும்' என சொல்லப்பட்டதாக இருக்கிறது. இங்கே உன்னைத்தவிர வேறு எனக்கு எதுவுமே பிடிக்காது என சொல்வது போல அமைக்கப்பட்டு இருக்கிறது. இவர் எனது கவிதைகளை ட்விட்டரில் எழுதியது உண்டு. இவரது கவனத்தை ஈர்த்த எனது கவிதைகளை நான் கவிதைகள் என்றே அங்கீகரித்தது இல்லை.

இப்படியான அவனதிகாரம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணி ஆசிரியரை பேட்டி  எடுக்கும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது. ஆசிரியரின் பொறுமையான பதில்கள் கூட கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விளம்பரம் தேடும் பிரியராக ஆசிரியரை சித்தரித்து இருப்பது கண்டு எல்லாம் கவலைப்படத் தேவை இல்லை. நமது திண்ணையின் இணைய இதழின் வளர்ச்சி கண்டு பெருமைப்படலாம். இதைவிட பெரும் பரிசு எனக்கு சிறந்த சகிப்புத்தன்மையாளர் விருது பெற வழி செய்ததே இந்த நமது திண்ணை இணைய இதழ் தான். ஏளனம் செய்கிறார்களோ அல்லது உண்மையில் பாராட்டுகிறார்களோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மை ஒருவராக மதித்து நமது செயலுக்காக நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நன்றி நமக்கு இருக்க வேண்டாமா? அதற்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரிஸ்வான் எழுதிய மழை கவிதை மிகவும் அருமை. கொலையுண்ட மரம் கொண்டு யாகம். அட. பாட்டி அறிந்திடா பாட்டில் நீர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம். முன் அட்டைப்படம் சினிமா இதழ் போன்ற பிரமையை உண்டு பண்ணி இருக்கிறது.

மகனதிகாரம் அன்பின் மிகுதி. வெகு சாதாரண செயல்களை சொல்லும் விதத்தில் அற்புத செயலாக்கி காட்டிவிடுகிறார்கள். ஒரு பருக்கை அமிர்தம். அதுவும் மகளதிகாரம் எல்லாம் நிறையவே அன்பை சொல்லுக்குள் அடக்கிவிடுகிறது. ஏன் ஊசி போடறாங்க?

மணல் கவிதை சற்று வித்தியாசம். மண் தின்று மண் திங்கும். மண்ணில் பெயர் எழுதும். சுசீமா அம்மா அவர்களின் திருவடி சேவை எனும் புதிய தொடர். மோட்சம், வீடுபேறு, ஆன்ம விடுதலை என்று தொடங்குகிறது. மனிதனின் அதிகபட்ச தேர்வு முக்தி அடைதலே அதற்கு திருவடி பற்ற வேண்டும் என அருமையாக விளக்கி இருக்கிறார். பல திருக்குறள்களை மேற்கோள் காட்டியதோடு மட்டுமில்லாமல் திருவாசகம் கூட துணைக்கு அழைத்து இருக்கிறார். திருமூலர் குறிப்பிட்ட திருவடி சிறப்பும் உள்ளது. திருநாவுக்கரசர் குறிப்பிட்ட திருவடி, திருவெம்பாவையில் திருவடி என திருவடிகள் பெருமையை சொல்லி இருப்பது வெகு சிறப்பு. ஆவலுடன் எதிர்பார்க்கும் தொடர் இது.

அவளதிகாரம் அவனதிகாரத்திற்கு சளைத்தது அல்ல. கான் அவர்களின் போடா என்றாள். போயிடவா என்றேன். போகாத லூஸு  என்று இறுக் க அணைத்துக் கொள்கிறாள். நம்மில் சிரிப்பை உண்டாக்கும் சொல்லாடல். கண்ணனின் அவளதிகாரம் எழுத தேவையில்லை. அவளே... அதிகாரம் தான். சுகிபாலாவின் காதல் செய்யும் முடிவு அவளே கழட்டிவிடும் முடிவு அவளே. இவை எல்லாம் இப்படி எழுதப்படுவதற்கு காரணம் ட்விட்டர் தான். ஒரு பெரும் கவிதையை சில வரிகளில் எழுதி வெளிப்படுத்தி விடுகிறார்கள். அதற்கு நிச்சயம் ஒரு தனித்திறமை வேண்டும்.

நண்பர் ரவியின் பரங்கிக்காய் துவையல் வெகு சிறப்பு. உதயாவின் வாடகை எனும் தலைப்பின் வாடகைத் தாய் பற்றிய ஒரு சின்ன கதை. கதையில் வெறுமை தலைதூக்கித் தெரிகிறது. உமா க்ருஷ்  அவர்களின் பாடல் பரவசம். காதல் ஊர்வலம் இங்கே எனும் பாடல் கேட்டதில்லை. ஆனால் டி ஆர் அவர்களின் பாடல்கள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்.ஆசிரியரின் புருஷ்லீ குறித்த பார்வை சிறப்பு.

நமது திண்ணை மென்மேலும் புகழும் வளர்ச்சியும் பெற இதில் வரும் படைப்புகள் எல்லாம் வெகு சிறப்பாக கொண்டு வர வேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. நிச்சயம் முயற்சி வெற்றி பெறும். வாழ்த்துக்கள், வடிவமைப்பு வெகு அருமை.


Sunday 29 November 2015

அம்மா - சௌம்யா (மின்னூல் கவிதைத் தொகுப்பு) 2 நிறைவு


20 இரவு

பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரின் கவிதையைப் படித்துப் பார்த்துவிட்டு இப்படி சோகமாகத்தான் எழுத வேண்டுமா என அவரிடம் கேட்டு வைக்க அதற்கு அவர் இது என் பாணி, நீ வேண்டுமெனில் சந்தோசமாக எழுதி வைத்துக் கொள் என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு நடை, சிந்தனை உண்டு.

இரவு குறித்த கதையில் பெண்ணின் கைப்பை உவமை அழகு. விட்டத்து பல்லி பேய்க்கதைகள் கரப்பான் பூச்சி என இரவின் பயத்தை பாடல்களே துணை

21. ஸ்வீட்டான்

மிகவும் அழகிய கவிதை. ஒற்றுப்பிரச்சினை எனக்கு உண்டு. எங்கு க்  வரும் த்  என. தேவதைத்தனங்கள் தேவதை தனங்கள். கைகள் மெத்தை. மிகவும் அழகாக சிவந்த முதுகின் காரணம் மருதாணி கரங்கள்.

22 பிரார்த்தனை

நல்ல புத்தி கொடு என சின்னஞ்சிறு குழந்தையே சாமியிடம் வேண்டும். ஒரு வெள்ளேந்தியாக சாமியிடம் பிரார்த்தனை மிகவும் சிறப்பு. என்னவெல்லாம் எண்ணம் வரும் என நேர்த்தியான சிந்தனை

23 மீ காதல்

காதலித்தபடி இருக்கிறோம் இயல்பாக இருப்பதே சுகம். எதையும் கேட்காமல் தரப்படுவது காதல். பெண்ணியம். ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாள் என தாண்டி அன்பில் நிலைத்து நிற்கும்

24 இதழதிகாரம்

முத்தம் தாடி. சிலுங்கும் கொலுசு. பெண் முத்தங்கள்.

25 ஊடலுணவு

கோபங்கள் தொலையுமிடம் அன்பு

26 தேவதைகள்

சிறுமியின் தேவதை உரையாடல் கவிதைத்தனமானதுதான். கட்டுபாடற்ற வாழ்வே சிறப்பு

27 காத்திருப்பு

நொடிகளுக்கு யுகம். நிறைவடைந்த நினைவுகள். இதை ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு கட்டத்தில் உணர்ந்து இருப்பார்கள்.

28 யாத்திரை.

தமிழ் மின்னிதழில் வெளியான கவிதைகளில் இதுவும் ஒன்று.

29 அறியாமை

அம்மா! அம்மா இல்லாத வாழ்வு குறித்த ஓர் பார்வை இது. என்னவெல்லாம் அம்மா தன்  குழந்தையைப் பற்றி அறிந்து இருப்பார் என சுகம் சொல்லி சோகம் ஆகும் கவிதை.

30 படையல்

சற்று வித்தியாசமான சிந்தனை

31 எதிர்காலம்

உறவுகள் சலிப்பூட்டுகின்றன. நீ இருக்கிறாய் என்பதே போதுமானது எதிர்காலம் சிறப்புற

32 ஜன்னல்

ஜன்னல் பற்றி எழுதாத கவிஞர்கள்  இல்லை எனலாம். அத்தனை வசீகரமானவை. ஜன்னல் ஒரு காட்சி பெட்டகம். கம்பிகள் கொண்ட ஜன்னல். முத்தாய்ப்பான முடிவு

33 விலைமகள்

தமிழ் மின்னிதழில் வெளியான மற்றொரு கவிதை.

34 குறுங்கவிதைகள்.

உழைப்பு எனத்  தொடங்கி ஒவ்வொரு கவிதையும் வெகு சிறப்பு

வலிக்குதா வலிக்குதா என்று குழந்தை தன்  அம்மாவைப் போல் அல்லாமல் பொம்மையிடம் கேட்பதாக முடிகிறது கவிதைத்தொகுப்பு.

எளிய வார்த்தைகள் கொண்டு அழகிய மாலைகள் தொடுக்கப்பட்டு இருக்கின்றன. சின்ன சின்ன நிகழ்வுகளே ஒரு காவியம் ஆகின்றன. பேசத் தெரியாதவனுக்கு பேச்சு சொல்லிக் கொடுப்பதைப் போல கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என சொல்லித் தருகின்றன.

கவிதைகள் அந்த படைப்பாளியின் எண்ணத்தை வெளிக்கொண்டு வருவனவாக இருந்தாலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமலும் ஒருவர் சிந்திக்கக் இயலும். பெரும்பாலும் ஒரு படைப்பாளி சுதந்திரமாக சிந்திக்கும் போது  தன்னை பாதிக்கும் விசயங்களையே கவிதைக்கான கருப்பொருளாக வைப்பார். இந்த கவிதைகளில் அன்பு, அம்மா, காதல் என உறவுகள் பற்றியே வலம்  வருகிறது.

சிந்தனைகள் செழித்தோங்கி பல அழகிய படைப்புகள் தந்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

(நிறைவு