Wednesday 19 February 2014

ஆண் கேட்க வந்தவள்

அடேங்கப்பா ஆண்டாள் - 4

பெண் பார்க்க போறது எல்லாம் ஒரு வைபவம் மாதிரியே நடக்கும். முதலில காமிப்பாங்க, அப்புறம் ஜாதகம் பார்ப்பாங்க இதெல்லாம் சரியா இருந்தா பெண் பார்க்க போவாங்க. அப்புறம் பெண் பார்க்க போற இடத்தில் பெண்ணுக்கு என்ன என்ன தெரியும்னு கேட்டுட்டு பையனுக்கு என்ன வேலை, எவ்வளவு சம்பளம் வரைக்கும் பேசி அப்புறம் பலகாரங்கள், இனிப்பு வகைகள் எல்லாம் கொடுத்து அதோட ஒரு காப்பி கொடுப்பாங்க.

இந்த பொண்ணு அன்னைக்குன்னு சும்மா ஜெகஜோதியா அலங்காரம் பண்ணி உலகத்திலே இல்லாத வெட்கத்தை எல்லாம் ஒரு சேர முகத்தில் சேர்த்து அன்னப்பறவை நடை சேர்த்து குனிஞ்ச தலை நிமிராமல் அப்படியே பாத்தும்  பாக்காமல் காபி கொடுத்துட்டு போவாங்க. பொண்ணு பிடிச்சி இருந்தா அந்த நேரத்தில் பையன் முகத்தில் தெரியும் கலக்கமிகுந்த சந்தோசம் ஒருவித  வெட்கம்தான்.

இப்ப எப்படி ஊருல பொண்ணு பார்க்கும் வைபவம் எல்லாம் நடைபெறுகிறதுன்னு தெரியலை. இதே மாதிரிதான் கிட்டத்தட்ட இருக்கும்னு வைச்சிக்கிரலாம். கல்யாணத் தரகர் பண்ண வேண்டிய வேலையை திருமண இணையதளங்கள் பண்ணி கொடுக்குது இப்ப.

சில விசயங்கள் மனசுக்கு பிடிச்சி இருந்தா மேற்கொண்டு எல்லா வைபவங்களும் நடைபெறுது. எப்படினாலும் பெண் கேட்கும் படலம் இருக்கத்தான் செய்து. இது அந்த காலத்தில் கூட உண்டு. சீதையை பெண் பார்க்க வந்த அரசகுமாரர்களுக்கு போட்டி வைத்து அதில் வில் உடைத்து வென்ற ராமனே மணாளான். உண்மையிலேயே ராமன் வில் உடைத்தது அவருடைய பராக்கிரம உடல் வலிமை எல்லாம் கிடையாது. எல்லாம் சீதையின் கடைக்கண் பார்வை வந்த வலிமைதான். என் வலிமை பெண்ணால் வந்ததா அப்படின்னு ராமர் வருத்தப்படமாட்டாரு.

ஆனா ஒரு பெண் ஆண் கேட்க இந்த பூவுலகில் வலம்  வந்தாள். அவள் தான் நம்ம ஆண்டாள். உனக்கு எந்த மணாளன் வேண்டும் எடுத்துக்கொள் என்று எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்குப் பிடித்த மணாளானை தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள். ஆனால் அந்த மணாளானை தான் தேர்ந்தெடுக்கும் முன்னர் பட்ட பாட்டிற்கு தமிழ் பெருமை கொண்டது.

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள் 
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோராச் சோர்வேனை 
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே 

என்னை சேராதிருந்தால் அந்த திருவேங்கடத்தானுக்கு என்ன பெருமை, என்னை இப்படி அழ வைக்கின்றானே, என் பெண்மையை அழிக்கின்றான் என மேகங்களிடம் சொல்லித் தவிக்கும் ஆண்டாள் தவிப்பு மேகங்களிடம் ஆண் கேட்டவள். நீ உடன் இருக்க நான் வேண்டினேன் என்பதுவே இது.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள், வேங்கடத்துத் 
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு 
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும் 
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே 

மார்புடன் மார்பாக தான் கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றே நான் பிறந்து இருக்கிறேன் என சொல்லுமாறு மேகங்களை பணித்த ஆண்டாள், வேங்கடவனின் மார்பில் அந்த நப்பினை பிராட்டி இருப்பதை தெரிந்தேதான் கேட்கிறாள். அடடே ஆண்டாள் பிறரின் கணவன் உனக்கு ஏனடி என்று பெற்ற அப்பா ஓங்கி நாலு அறைவிடாமல் எந்த மணாளன் வேண்டுமென சொல் என்றல்லவா சொல்லி இருக்கிறார் என்பது ஏனெனில் நப்பின்னையே ஒரு ஆண்டாள் உருவம் கொண்டு வந்ததுதான், ஆக அந்த பரந்தாமன் எழுந்தருள வேண்டியதுதான் பாக்கி.

தனக்கு என ஒரு மனைவி இருக்க எப்படியம்மா அவன் கீழிறங்கி வருவான் என்றே நாம் நினைக்க அந்த பரந்தாமன் அருள் பாலித்து வந்தான் என்றே சொல்கிறது ஆண்டாள் வரலாறு. ஆண்டாளின் காதல் தூய்மையானது.

சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச் 
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம் 
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள் 
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே 

இந்த பாடலுக்கு ஏதோ ஆண்டாள் பரந்தாமனுடன் ஒருநாளேனும் வாழ்ந்து அதாவது கலவி செய்து விடவேண்டுமென ஆசைப்பட்டு அழைப்பது போல் ஓரிடத்தில் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். ஆண்டாளின் எண்ணம் கலவிக்காக அன்று. அது காதல். ஒரு நாளேனும் அவர் வந்து என்னை அரவணைத்துக் கொண்டால் எனது கொங்கைகளின் மேல் நான் தடவி இருக்கும் குங்கும பூச்சு அழியும், அந்த ஒருநாள் என் உடன் இருக்கும் அன்பு கூட போதும். நான் அந்த நப்பினை பிராட்டியின் அவதாரம் என்றே அந்த பரந்தாமன் அறியமாட்டாவோ என்பதற்கே ஒருநாள் போதும், என் உயிர் வாழும் என்கிறாள்.

அடேங்கப்பா ஆண்டாள், நீ கொண்ட அந்த பரந்தாமன் மீதான காதலில் உனது மார்புக்கு நீ கொடுத்த முக்கியத்துவம் எதற்கு என்றே எண்ணிப் பார்க்கிறேன். காரணம் உனக்கு தெரியாததா ஆண்டாள்.


(தொடரும்) 

Friday 14 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 3

உண்மையிலேயே ஆண்டாள் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கானு தெரியலைங்க. ஆனால் ஆண்டாள் பற்றி விஜயபாஸ்கர பட்டர் எழுதின புத்தகத்தில் இருந்து ஏராளாமான விஷயங்கள் ஆண்டாள் பற்றி தெரிஞ்சிக்கிரலாம்.

அந்த புத்தகத்தில் ஒவ்வொரு நாச்சியார் திருமொழி எழுதின காரணத்தை சொல்லி இருப்பாங்க. இப்படியா ஒரு பெண் தன்னை அலைக்கழித்து கொள்வார் என்றே எனக்கு தோணியது. எல்லாம் இந்த பெரியாழ்வார் பண்ணின வேலை. சும்மா இருக்காம எப்ப பார்த்தாலும் கண்ணன் கண்ணன் சொல்லி சொல்லியே ஆண்டாளை இப்படி பண்ணிட்டாரு.

ஆண்டாள் அப்படின்னு பேரு கூட பெரியாழ்வார் கொடுத்ததுதான். இந்த பெரியாழ்வார் பத்தின கதை, ஆண்டாள் பத்தின விபரங்கள் எல்லாம் அப்புறம் பாக்கலாம்.

இந்த ஆண்டாள் எதுக்கு இப்படி எழுதினாள் அப்படின்னு நான் நினைச்சிட்டே இருப்பேன். அந்த பாட்டு இப்போ இங்கே.

சுவரில் புராணநின் பேரேழுதிச்
சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதுவைத் தெனொல்லை விதிக்கிற்றியே

வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்தஅவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே

காயுடை நெல்லொடு கரும்பமைத்து
கட்டி யரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்
திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிருமென் தடமுலையும்
தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மேலிருக்கும் பாடல் எல்லாமே முதல் திருமொழி. இப்போ இதுக்கு இந்த மூணு பாட்டு தேர்ந்தெடுத்தேன் தெரியுமா, எல்லாம் காரணமாகத்தான். எங்க கிராமத்தில எல்லாம் தாய்ப்பால் அப்படின்னு சொல்வாங்க. முலைப்பால் அப்படின்னு ஒருத்தரும் சொல்லமாட்டாங்க. இப்ப எல்லாம் இந்த தாய்ப்பால் விஷயம் எல்லாம் விளம்பரம் பண்ணிற மாதிரி ஆகிப்போச்சு. இந்த தாய்ப்பால் மூலமா குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி கடத்தப்படற விஷயம் எல்லாம் அறிவியல் இப்போ சொன்னதுதான். ஆனா இது எல்லா பாலூட்டி ஜீவராசிகளும் வழக்கம் போல செய்வதுதான்.

இந்த பெண்ணின் அங்கம் ஒரு கவர்ச்சி என்ற விதத்தில் மாறிப்போனது நமது துரதிர்ஷ்டம். பாரதியார் கூட கச்சணிந்த கொங்கை மாந்தர் என எழுதினார். அதைவிட அபிராமி பட்டர் ஒருபடி மேலே போய் எழுதி இருப்பார். அவரை பிறகு பார்ப்போம். பைத்தியமாடா உங்களுக்கு என்று இவர்களை ஏசி விடத்தோணுமா, தோணாது. ஆனால் இதை எல்லாம் ஒரு இலக்கியத்தில் வைத்து அழகு பார்த்தார்கள். இந்த வரிகளை படிக்கும்போது ஒருத்தரும் தவறான எண்ணங்களை மனதில் கொண்டு வரமாட்டார்கள், காரணம் என்ன தெரியுமா. அதுதான் அடேங்கப்பா என பிரமிக்க வைக்கும் எழுத்துகளின் ஆளுமை. பெண்களை இப்படித்தான் வர்ணிக்கவேண்டும்  என்பதல்ல. அது காதலின் உச்சகட்டம், கலையுணர்வில் காமம் தெரிவதில்லை என்பதற்கே கல்லில் எல்லாம் நிர்வாண கோலங்களை செதுக்கி வைத்தார்கள். உணர்வில் மறைத்தும், உணர்வற்ற ஒன்றில் வெளிப்படுத்தியும் காட்டியது அன்றைய கலை.

இன்றைக்கு வேண்டாம், எல்லாமே வக்ர துண்டாய தீமஹி என ஆகிவிட்டது. தனது எண்ணத்தை ஆண்டாள் வெளிப்படுத்தினாள், அதைத் தேடிப் படித்து அவள் இப்படி எழுதிவிட்டாள் என சொல்வது நமது குற்றம். கெட்ட நோக்கத்தில் இப்போது சொல்லிவிட்டு ஆண்டாள் மட்டும் எழுதலாமா என்றால் நம்மால் ஆண்டாள் போல் பக்தியை வெளிக்காட்ட முடியுமா என்ன. நினைத்த போதெல்லாம் காதலன், காதலி மாற்றும் நமது சமூகத்திற்கு ஆண்டாள் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

இந்த ஆண்டாள் எதற்கு இப்படி எழுதினாள். தனது மார்பகங்கள் குறித்து எழுதவேண்டிய நிர்பந்தம் ஆண்டாளுக்கு வந்தது என்ன காரணம். ஒரு பெண் தனது காதலை இத்தனை வெளிப்படையாகவா சொல்ல இயலும். அதுவும் அந்த மன்மதனிடம் மன்றாடினாள். தான் ஒரு பெண் என்பதையும் அந்த எம்பெருமானுக்கே என்னை கொடுத்தேன் என்பதையும் காதலால் கசிந்துருகி சொன்னாள். இதில் எவ்வித விரசமும் இல்லை. எங்கள் கிராமமும், எங்கள் கிராமத்து அம்மாக்கள் எல்லாம் மிகவும் சகஜமாகவே பேசுவார்கள். ஆனால் இன்றைய நாகரிகம் எல்லாம் மூடித்தொலைத்து காமம் என ஆக்கிவிட்டது. அதுசரி ஆண்டாள் எதற்கு சொல்ல வேண்டும் இதோ அவள் எழுத காரணமான காட்சி.


திருப்பாவை ஒன்றில் இப்படித்தான் பாடினாள்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்


அடேங்கப்பா ஆண்டாள். நீ தைரியமானவள். நான் மிகவும் கோழை.

(தொடரும்)

Thursday 13 February 2014

அடேங்கப்பா ஆண்டாள் - 2

ஸ்ரீவில்லிபுத்தூர் அப்படினாலே எனக்கு ரொம்ப பிடிச்சது பால்கோவா. ஐயோ எப்படி இருக்கும் தெரியுமா. அப்படியே மொத்தமா வாங்கி சாப்பிட்டு பழகி இருக்கேன். எங்க ஊருல ஒரு ஹெல்ப்பர் மாமா இருந்தாங்க, அவரோட பையன் ஸ்ரீதர். ஸ்ரீதர் என்னோட ரொம்ப நெருங்கிய நண்பன். இன்னமும் என் மேல மாறாத பாசம் வைச்சிருக்கிறவன். சின்ன வயசுல நிறைய புத்தகங்கள் வாசிப்பான். புத்தகத்தை கூட பத்து பைசா, பதினைஞ்சி பைசான்னு வாடகைக்கு தருவான். எங்க ஊருல இருந்து மல்லாங்கிணறுக்கு மாறி போனாங்க. ஆனாலும் ஊருக்கு வந்தா என்னை பாக்காம போகமாட்டான். நான்தான் ரொம்பவே ஒதுங்கி போயிட்டேன். இந்த வாட்டி தேடி வந்து பாத்துட்டு போனான். சந்தோசமாகவே இருந்தது. 

அப்புறம் அவங்க அருப்புகோட்டை போய்ட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்க ஸ்ரீவில்லிபுத்தூர்ல கொஞ்ச வருஷம் இருந்தாங்க. என்னை அங்க வந்து சில நாள்கள் இருக்க சொன்னாங்க. நானும் விடுமுறைக்கு  அங்க போயி ரெண்டோ மூணோ நாட்கள் தங்கி இருந்தேன். மலைகள் அது இதுன்னு இருந்தது. கோவிலுக்கு எல்லாம் போனேன். அங்கே ஆண்டாள் முகம் பாக்கிற கிணறு எல்லாம் காட்டினாங்க. நான் கூட ஆண்டாளோட முகம் எங்கனயாச்சும் ஒட்டிக்கிடாக்கானு பாத்தேன். சும்மா சொல்லலைங்க, எனக்கு ஆண்டாள் அப்படினா அத்தனை இஷ்டம். 

அப்புறம் எப்போ ஸ்ரீவில்லிப்புத்தூர் போனேன்னு எனக்கு தெரியாது. மறந்து போயிட்டேன். சமீபத்துல சில வருடங்கள் முன்னர்  நுனிப்புல் புத்தக விஷயமா நண்பர் ரத்தினகிரியை சிவகாசியில பார்த்துட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போனேன். அங்கே அனந்தசயன பட்டர் எனக்கு நிறைய கதைகள் சொன்னாரு. அதை வைச்சித்தான் நுனிப்புல் இரண்டாம் பாகத்தில் சில கதைகளை கலந்துவிட்டேன். எனக்கு அவருகிட்ட பேசிட்டே இருக்கணும் போல இருந்தது. 

எப்படி திருவில்லிபுத்தூர் உருவானது முதற்கொண்டு அந்த கதைகள் இருந்தது. எனக்கு பெரியாழ்வார் வம்சாவழி இருக்காங்களான்னு தேடிப் பார்க்கணும் போல இப்போ இருக்கு. ஆனால் அப்போ எதுவுமே எனக்கு கேட்க தோணலையே. அப்போதான் எனக்கு இந்த பெரியாழ்வார்தான் ஸ்ரீ ஆண்டாள் மாதிரி தன்னை உருவகிச்சி எழுதினாரு அப்படின்னு ஒருத்தர் சேதி சொன்னார். உடனே எனக்கு வந்த வாசகம் தான். ''உண்மையை யார் உண்மையாக இருக்க விட்டது'' அப்படின்னு. இதை முத்தமிழ்மன்றத்தில பார்த்த மணிப்பாண்டினு ஒரு நண்பர் இது ஞான வாக்கு அப்படினு சொன்னார். ஐயோ இது கோப வாக்கு அப்படின்னு மனசுல சொல்லிக்கிட்டேன். ஆமா எதுக்கு பெரியாழ்வார் தன்னை ஆண்டாள் மாதிரி வேஷம் போட்டு பண்ணனும். அவருக்கு வேறு வேலை இல்ல. அன்னைக்கி சொன்னவர்கிட்ட பதிலே பேசாம சிரிச்சிட்டே போய்ட்டேன். 

இந்த ஆண்டாள் யாரு பெத்த புள்ளையோ. என்னை எங்க ஊருல ஒருத்தர் 'உன்னை தவிட்டுக்குத்தான் வாங்கினாங்க'னு சொன்னதும் ஓனு அழுதுட்டே போய் என்னை தவிட்டுக்கா வாங்கினீங்கனு அம்மாகிட்ட சின்ன வயசில கேட்டு இருக்கேன். அது கிண்டலுக்கு சொல்றதுன்னு அதுவரைக்கும் எனக்கு தெரியாது. எங்கம்மா சொன்னப்பறம் தான் படுபாவி பசங்க இப்படி கூட பண்ணுவாங்க என நினைச்சேன். அப்போதான் எனக்கு இன்னொரு விஷயம் தெரிய வந்திச்சி. இதைக்கூட எங்கேயாச்சும் சொல்லி வைச்சிருப்பேன். 

என்னோட சின்னம்மா அவங்களுக்கு ஆண் வாரிசு இல்லைன்னு என்னை தத்து எடுத்துகிறேன்னு சொன்னப்ப எங்க அப்பா திட்டி விட்டுட்டாராம். அப்படி ஒரு புள்ளைய எப்படி தர முடியும்னு. இப்ப கூட என் சின்னமாவை நினச்சா கஷ்டமா இருக்கும். என்னைய வேணும்னு கேட்டு இருக்காங்களே.ஆனா எல்லா அக்காக்களும் நல்ல முறையில திருமணம் முடிச்சி எல்லாருமே நல்லா இருக்காங்க. ஆண் வாரிசு, பெண் வாரிசு எல்லாம் ஒன்னுதேன். நாங்க வீட்டுல சின்னம்மா, பெரியம்மா எல்லாம் கூப்பிட மாட்டோம், எல்லோருமே அம்மாதான். 

அதிருக்கட்டும், அம்மா அப்பா தெரியாத ஆண்டாள் துளசி செடிக்கு கீழே கிடந்ததை பார்த்து பெரியாழ்வார் எடுத்து வளர்த்தார் அப்படின்னு சொல்லுது ஆண்டாள் வரலாறு. அதாவது அந்த மகாலட்சுமியே அவதாரமாக வந்ததா நம்மளை எல்லாம் நினைக்க சொல்லுது வரலாறு. ஆனா நான் அப்படி நினைக்கலைங்க. என் ஆண்டாள் எவராலோ கைவிடப்பட்டவர். இந்த ஆண்டாளை இப்படி தன்னந்தனியா போட்டுட்டு போன பெற்றோர்களை நினைச்சா பரிதாபமாகவே இருக்கும். எப்படி ஒரு அற்புதத்தை தொலைத்துவிட்டார்கள்னு. இல்லைன்னா பெரியாழ்வாருக்கு பெயர் போகுமா. 

இப்போ பெரியாழ்வார் வீட்டில வளரும் ஆண்டாளுக்கு ஒன்னே ஒண்ணுதான் தெரியும் அது பெரியாழ்வாரின் பக்தி அப்புறம் இந்த நாராயணன். சின்ன புள்ளைங்க மாதிரி விளையாடும் இந்த ஆண்டாளுக்கு பெரியாழ்வார் பாடுற பாட்டு, நாராயணன் பத்தின அன்பு எல்லாம் சொல்ல சொல்ல தனக்குள்ளே ஆசைய ஆண்டாள் வளர்த்துக்காம என்ன பண்ணுவா. 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து பல கோடி நூறாயிரம் அப்படின்னு சொன்னா எனக்கே சில்லுனு இருக்கே, எப்படி இருந்து இருக்கும் இந்த ஆண்டாளுக்கு. ஆண்டாள் போல இருந்த தோழிகள் எல்லாம் எதுக்கு ஆண்டாள் மாதிரி பாடலை. அதுதான் கொடுப்பினை. சரி, நான் சமீபத்தில ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு போனேனா, அந்த ஆண்டாள் பார்த்தேனா. சின்ன பொண் போல என் கண்ணுக்கு தெரிஞ்சிதுங்க, பாத்துட்டே இருந்தேனா, கண்ணீர் கோத்திருச்சி. என்ன ஆச்சின்னு மனைவி கேட்டாங்க. ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேன். 

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். அடேங்கப்பா ஆண்டாள். எப்படி இப்படி உன்னால் நினைக்க முடிந்ததுன்னு அப்ப நினைச்சப்ப வந்த கண்ணீர் அது. 

இப்ப கூட எங்கயாச்சும் உட்காந்து ஆண்டாள் பத்தி நினைச்சா கண்ணீர் கோத்துக்கும். என்னை பொருத்தவரை ஆண்டாள் ஒரு கற்பனை உலகத்தை தனக்கு உருவாக்கிகிட்டானுதான் தோணும். 

இந்த ஆண்டாள் நாச்சியார் திருமொழிக்கு காரணமே, திருப்பாவை கேட்டும் மனம் இரங்காத நாராயணன் தான் காரணம்னு சொல்வாங்க. ஒருவேளை இந்த நாராயணன் ஆண்டாள் இப்படி எல்லாம் பாடட்டும்னு நினைச்சி இருப்பாரோ. 

அனங்கதேவன் யாரு தெரியுமாங்க! சிவனால் உடல் எரிக்கப்பட்ட மன்மதன். அடேங்கப்பா ஆண்டாள். 

(தொடரும்)