Wednesday 29 January 2014

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்



அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

ஒரு கவிஞன் என்ன மனநிலையில் இருந்து எழுதுகிறான் என்பது அந்த கவிஞனுக்கே வெளிச்சம். அந்த கவிஞன் பணி தனது எண்ணங்கள் மூலம் சமூகத்தில் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமே.

ஏன் எழுதினேன் தெரியுமா? எதற்காக எழுதினேன் தெரியுமா என இன்றைய கவிஞர்கள் சொல்வது ஒரு புத்தகவடிவில் வந்து விடும் நிலை இன்று இருக்கிறது. அன்றைய சூழலில் இதுபோன்று தனது நெருங்கியவர்களிடம் கவிஞர்கள் சொல்லியிருக்கக்கூடும். அப்படி சொல்லப்பட்டது பதிவு செய்யப்பட்டு இருப்பின் கவிதைக்கான பொருள் நேரடியாக கவிஞன் பார்வையில் கிடைத்துவிடும். இப்பொழுது வாசகன் அங்கு வருகிறான் என வைத்துக்கொள்வோம். வாசகருக்கு கவிஞனின் பின்புலம் எதுவும் தெரியாத நிலை. அப்படியிருக்க கருப்பொருள்தனை தனது கற்பனைக்கு கொண்டு செல்கிறான் வாசகன். இது காலம் காலமாக நடப்பதுதான்.

வாசகன் பல வடிவம் கொண்டவன். சிந்தனையற்ற நிலையில் இருந்து எண்ணற்ற சிந்தனை களம் சென்று பயணித்து வருபவன். படித்தவன் பாட்டை கெடுத்தான் என்பது எத்தனையோ பொருள் தரும். ஒரு பாடலின் கருச்சிதைவு என்பது வாசகனின் பார்வை படும்போதே நடந்தேறிவிடுகிறது. புரிதல் எளிதில்லை என்பதே பலரும் புரிந்து கொண்டு இருப்பது. கவிஞன் மனநிலையை அடைய வாசகன் முற்படுவதே இந்த சங்கடங்களுக்கு காரணம்.

இந்த பாடல் மூலம் பாரதி என்ன சொல்ல வருகிறார் என்பதைவிட என்ன சொன்னார் என்றுதான் முதலில் பார்க்க வேண்டும்.

நெருப்பு பொறி அதுவும் சின்னதாக காண்கிறான். காட்டில் சென்று ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான்.

ஆனால் அடுத்துச் சொல்கிறான், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா? த தரிகிட தி தரிகிட தி தோம்

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு சின்ன சிந்தனை நெருப்பு, அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

கடைசி வரிகள் மிருதங்க தாளங்கள்
த திரிகிட நான் திருகிட
தி திரிகிட நீ திருகிட
தி தோம் நாம் முடித்தோம்.

த கி ட த க
தி கி ட த க
தி தோம்

கி ட த க என்பது தரிகிட என பாடுவர். அழுத்தி சொல்ல வார்த்தை திருகி தத்தரிகிட என்றார்.

தன்னுள் ஞானம் தோன்றி தனக்குள் உள்ள அழுக்காறுகளை போக்க இந்த பாடல் என்றெல்லாம் புறணி பேசித் திரிவர். பாரதி தனக்கு தேவை எனில் நேராகவே கேட்கும் வழக்கம் கொண்டவன். இது போதும் என்னுள் நெருப்பு சிந்தனை எழுப்புகிறான் பாரதி, என் குடும்பம், என் வாழ்க்கை என என்னை போன்று வாழ்பவருக்கு பாரதியின் சமூக சிந்தனை தோன்றாது! 
இதே பாடலுக்கு ஒவ்வொருவரும் ஒரு அர்த்தம் கொண்டு உள்ளனர். அதில் ஏதும் தவறில்லை. ஒரு சிறந்த கவிதைக்கு பல அர்த்தங்கள் உண்டு என்பது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு வரும் வழக்கம். 
''நான் நனையாமல் இருந்துவிட குடை நனைகிறது'' இது என்ன பெரிய கவிதை. இது சாதாரண பேச்சுமொழி. இதில் அர்த்தங்கள் எழுதிப் பாருங்கள். வரி சொல்லும் கதைகள் ஆயிரம்.
''நின்று கொண்டு இருந்தேன் திடீரென அவள் வந்தாள் உன்னை காதலிக்கலாமா என்றாள். என்ன கேள்வி இது, உன் அனுமதி கேட்டா உன்னை காதலிக்கிறேன் என்றேன், வெட்கத்தில் சிரித்தாள்'' இதை எல்லாம் பெரிய கவிதை என சொல்லிவிட முடியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை அது காதலின் வெளிப்பாடு. 
அவள் எல்லாரிடமும் சென்று அவ்வாறு கேட்கவில்லை. தன்னை காதலிக்கிறான் என்பதை உணர்ந்த அவள் அவனது வாயிலிருந்து கேட்கவே வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவளது உணர்வுகளை புரிந்தவன் சொல்கிறான், உன்னை நான் காதலிக்கிறேன் என! இதில் என்ன பெரிய அர்த்தங்களை கொண்டு சேர்த்துவிட முடியும். ஆனால் அக்கினிக் குஞ்சொன்று அப்படி அல்ல. அதனால் தான் பாரதி ஒரு மகாகவி. 
இந்த கவிதை அவரது பாடல்களில் சமூக பாடலாக வைக்கப்படவில்லை. பிற பாடல்கள் என்ற குறிப்பில் உள்ளது. எனவே அர்த்தம் கொள்வோர் எப்படி வேண்டுமெனில் கொள்க, நல்லவிதத்தில் மட்டுமே என்று முடித்தல் சுபம். 

Tuesday 28 January 2014

தேடிக்கொண்ட விசயங்கள் - 6

பகுதி 5 இங்கே 

ஒரு மனிதருக்குள் நோய் ஏற்படுத்துவதற்கு இந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஏற்படுத்தாத நோய்கள் மரபியல் வாயிலாக ஏற்படும் நோய்களாக அமைந்துவிடுகின்றன. நம்மில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருந்தாலும் நோய் ஏற்படுத்தும் தன்மை கொண்ட பாக்டீரியாக்களை வைரஸ்களை 'pathogens' என்றே அழைக்கிறார்கள்.

எப்படி இந்த பாக்டீரியாக்கள் நம்மில் நோயை ஏற்படுத்துகின்றன. நமது உடல் தாமாகவே எதிர்ப்பு சக்தி கொண்டு அமைந்துவிடுகிறது. அந்த எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை வெள்ளை அணுக்கள். வெள்ளை அணுக்கள் வெளிப்படுத்தும் 'antibody' இந்த பாக்டீரியாக்களில் உள்ள 'antigen' தனை மிகவும் சரியாக கண்டுபிடித்து பாக்டீரியாக்களை செயல் இழக்க செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இந்த antibody கள் பலவகைப்படும்.

நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இரண்டு வகைப்படும். அது 'granules' கொண்டவை, அல்லாதவை. 'granules' கொண்டவை நியூட்ரோபில், ஈசொனோபில், பெசோபில் எனப்படும். 'granules' அல்லாதவை லிம்பொசைட், மோனோசைட் எனப்படும். இந்த லிம்பொசைட் எங்கு உற்பத்தி ஆகிறது என்பதை பொருத்து அவை டி லிம்பொசைட், பி லிம்பொசைட் எனப்படும். டி என்றால் தைமஸ் சுரப்பியில் இருந்து தோன்றியவை. பி லிம்பொசைட் என்பது எலும்பு மஜ்ஜையில் இருந்து தோன்றியவை. இந்த பி லிம்பொசைட் தான் இந்த 'antibody' யை உருவாக்கும் வல்லமை கொண்டவை. இருப்பினும் டி லிம்பொசைட் இதற்கு அவசியம்.

இந்த antibody Y வடிவில் இருக்கும்.


















நமது உடம்பில் நடந்து கொண்டிருக்கும் இந்த செயல்பாடுகள் குறித்து எல்லாம் நாம் அதிகமாக சிந்திக்க முடிவதில்லை. இந்த படத்தில் குறிப்பிட்டது போல கீழே இருப்பது நீளமான சங்கிலி, மேலே இருப்பது சின்ன சங்கிலிகள். குறிப்பிட்ட இணைப்பு அல்லது பிணைப்பு இடமானது ஒவ்வொரு antigen க்கு வேறுபாடு அடைய செய்யும், அதனால் தான் எண்ணற்ற பாக்டீரியா, வைரஸ் மாற்றம் கொண்டாலும் அதற்கேற்ப ஒரு antibody தனை பிளாஸ்மா செல்கள் உருவாக்கி கொள்ளும் தன்மை உடையதாகவே இருக்கிறது.

இந்த antibody  புரதம் மற்றும் கார்பொஹைட்ரெட் இணைத்து கிளைக்கொபுரொட்டீன் எனும் வகையை சார்ந்தது. நமது உடலில் அல்புமின், குலொபுலின் என புரதங்கள் இருக்கின்றன். இந்த antibody யானது  immunoglobulin வகையை சார்ந்தது. இவை ஐந்து வகைப்படும். IgA, IgD, IgE, IgM மற்றும்  IgG. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயல்பாடுகள் கொண்டவை.

(தொடரும்)