Wednesday 25 September 2013

பச்சை மாமலைபோல் மேனி

காலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.
ஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.

பக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய்டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.

நகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.

''பக்தா''

''வாருங்கள் சாமி, அமருங்கள்''

''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''

''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''

''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''

''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''

''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''

''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''

''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''

''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''

''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''

''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி?''

''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''

''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''

''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''

''சாமி, விளக்கம் சொல்லுங்கள்''

''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''

''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி"

''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''

''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''

''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''

''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''

''பச்சை மாமலைபோல் மேனி''

சாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன். 

Tuesday 24 September 2013

நிலையில் பிரியேல்

உன்னை மறந்துவிட 
என்னிடம் 
ஆயிரம் கோடி 
கொடுத்தாலும் 
என்னை நான் மறந்தால் 
அன்றி 
எதுவும் நடக்காது 

கொண்ட துயரமோ 
கூடி வரினும் 
கண்டு கலங்கி 
செய்வதறியாது 
திகைத்து நிற்பினும் 
உன்னை விட்டு 
விலகிட மனம் உண்டோ!

தீயவை எனின் 
புறம் தள்ளலாம் 
செய்யத்தகாவை எனின் 
சீ என ஒதுங்கலாம் 
கண்ணில் மனதில் 
எண்ணத்தில் உள்ள 
உன்னை 
தூக்கி எறிந்திட முடியுமோ!

கீழ்தட்டு நிலையில் 
இருந்து 
மேல்தட்டு நிலைவரை 
உயர்ந்து ஓங்கிய பின் 
கீழே வீழ்ந்திடும் 
நிலை வரின் 
உயிர் நிற்குமோ!

எவ்வித தடைவரின் 
குழப்பமும் 
குந்தகமும் 
விளைவித்தே எவரும் வரின் 
நாம் கொண்ட 
காதல் நிலையில் 
எக்கணமும் பிரியேல் காதலி. 


Sunday 22 September 2013

சூப்பர் ஸ்டார்

என் இனிய நண்பா,

நலம், நலம் அறிய ஆவல். இ-மெயில், பேஸ்புக், ட்விட்டர் என எத்தனையோ வந்த பின்னும் உன்னுடன் எனக்கு கடித போக்குவரத்து மட்டுமே நிகழ்கிறது. தந்தி அனுப்புவதை கூட சமீபத்தில் நிறுத்தி விட்டார்கள், இல்லையெனில் உனக்கு ஒரு தந்தி அனுப்பி இருப்பேன்.

உனக்குத் தெரியும், நான் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகன். அவர் என்ன செய்கிறார், என்ன பேசுகிறார் என நாள் தவறாமல் தேடித் தேடி படிப்பது உண்டு. அவரை காண்பதற்காக அவரின் ஒவ்வொரு பிறந்தநாளின்போது நான் அவரது போயஸ்கார்டன் தெருக்களில் சுற்றிக் கொண்டு இருப்பேன். எனது நோட்டு புத்தகங்களில் அறிவியல் படங்கள் இருக்குமிடத்தில் எல்லாம் சூப்பர் ஸ்டார் இருந்து கொண்டு இருப்பார். நான் எனது அறையில் தலைவர் படத்தை மட்டுமே வைத்துக் கும்பிட்டு வருகிறேன் என்பது கூட உனக்குத் தெரியும்.

தலைவரது  திரைப்படம் வெளியாகும்போது, முன் இரவே சென்று திரையரங்கு வாசலில் துண்டு விரித்து தூங்கியவன் நான். நீ கூட என்னிடம் எதற்கு இப்படி பைத்தியக்காரனாக இருக்கிறாய் என்றே என்னை கோவித்து இருக்கிறாய். என்னால் முடியவில்லை நண்பா, நான் அவருக்கு ஒரு அடிமையாய் ஆகிப் போனேன். உன்னை கூட, நண்பன் என பாராமல் என் தலைவரை நீ அவதூறாக பேசியதற்கு உனது மூக்கை உடைத்ததை நினைக்கும்போது நான் செய்தது இன்னமும் சரி என்றே கருதுகிறேன். ஆனால் நீயோ என்னை கோவித்துக் கொள்ளாமல் உன்னை என் நண்பனாகவே ஏற்றுக் கொண்டாய்.

நான் முக்கியமில்லை, உனது குடும்பம் முக்கியம்  என்றெல்லாம் தலைவர் சொன்னபோது கூட, அவரே முக்கியம் என அவரது உடல் நலன் சரியில்லாதபோது அவருக்காக நான் ராகவேந்திரா ஆலயத்திற்கு பாத யாத்திரை சென்றேன். இதை கேள்விப்பட்ட நீ,  நான் பத்திரமாக சென்று திரும்ப வேண்டும் என எனக்கு துணையாய் நீ காரில் பயணம் செய்து வந்தாய். உன் தலைவிதி, நீ நடக்கிறாய், என் தலைவிதி உனக்கு பாதுகாப்பு தருவது மட்டுமே, எவரோ ஒருவருக்காக நான் நடக்க வேண்டிய அவசியமில்லை என எனது நலனில் நீ காட்டிய அக்கறை என்னால் என்றுமே மறக்க முடியாது. எனது தந்தையின் மரணத்தின் போது கூட மொட்டை அடிக்காத நான், தலைவரின் உடல் நலம் தேற வேண்டி திருப்பதியில் மொட்டை அடித்த விசயம் கேள்விப்பட்டு நீ கண்ணீர் விட்டு அழுதாய். எதற்கு அழுகிறாய் என உன்னை நான் கேட்டபோது, எனது தந்தையை பற்றி நினைத்தாய் என்றே கூறினாய். அதனால் என்ன இப்போ என்றே அலட்சியம் செய்தேன்.

சில வருடங்களாக தலைவரின் படம் வெளிவராத காரணத்தினாலும், ராணா, கோச்சடையான் பற்றிய செய்திகள் மூலம் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானேன். உன்னிடம் இதை சொல்லாமல் மறுத்தது எனது தவறு என்றே இன்று உணர்கிறேன். இப்போது இதை எப்படி உனக்கு சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாக இன்று மருத்துவர் சொன்னபோது ஆடிப் போய்விட்டேன் நண்பா. நீ அன்று என்னை பைத்தியகாரன் என்று சொன்ன நிலையை இன்று உணர்கிறேன் நண்பா. என்னை ஊரில் 'மெண்டல்' என்றே அழைத்தது உண்மையாகிவிட்டதே என அச்சம் கொள்கிறேன். எனது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லாத போது நான் எந்திரன் படம் பார்க்க திரையரங்கு வாசலில் தவம் இருந்தபோது, நீ எனது அம்மாவிற்கு மருத்துவம் பார்த்த விசயம் கேள்விப்பட்டு மனதில் எவ்வித குற்ற உணர்வு அப்போது இல்லை. நண்பா, என்னை மன நோயில் இருந்து உன்னால் மட்டுமே மீட்க முடியும் என்றே எனது அம்மா சொன்னார். அதனால் தான் இந்த மடல் எழுதுகிறேன்.

ஒரு விசயத்தில் அதிக பற்று வைத்து விட்டால், இது போன்ற கொடிய விளைவு ஏற்படும் என்றே மருத்துவர் சொன்னார். மனம் வெகு பாரமாக இருக்கிறது. எதையோ இழந்து பரிதவிப்பது போல் இருக்கிறது. நான் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் நண்பா. என்னை நீ வந்து அழைத்து சென்று உனது அருகில் என்னை வைத்து கொள்ளமாட்டாயா என்றே ஏங்குகிறேன். உனது நிறுவனத்தில் நான் வேலை செய்ய இப்போது சம்மதம் சொல்கிறேன் நண்பா. தீராத மன நோயில் நான் விழுந்துவிடக் கூடாது எனும் அச்சமே முழுக் காரணம். அரசியலுக்கு வருவார், வரமாட்டார் என பலர் கிண்டலாக பேசியபோது அவர்களை நொறுக்கி இருக்கிறேன். தலைவர் என்ன முடிவு செய்கிறாரோ அதுவே எனது முடிவு என்றே இருந்தேன்.

இறுதியாக, எனது தலைவர் தனிமையில் இருப்பதாய் உணர்கிறேன் என நேற்று பேசியதை கேட்டு மிகவும் வேதனைப்படுகிறேன். அவரை உயரத்தில் வைத்தது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்றே சொன்னார். ஆனால் உண்மையிலேயே என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்கள் தான் அவரது இந்த உயர்நிலைக்கு காரணம் என்பதை நீ அறிவாய் நண்பா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரஜினிதாசன் என்றே என்னை கேட்டுக் கொள்கிறேன். எனது அழகிய 'முருகன்' எனும் பெயரை நான் அலங்கோலம் படுத்திக் கொண்டதாய் நினைக்கிறேன்.

சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அவர் தூக்கி எறிந்துவிட்டு என்னைப் போன்ற ஏழை பங்காளன் உடன் அவர் நேரத்தை செலவிட சொல்ல வேண்டும் என்றே என் மனம் கேட்கிறது. எதற்கு தனிமையாய் உணர வேண்டும்! ஆனால் 'டாப்' இல் இருப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சினை என்றே சொல்லிவிட்டார் நண்பா. ஆனால் நீ, எத்தனயோ உயரத்தில் இருந்தும் சாதாரண நபரை போலவே உலா வருகிறாய். பிரமிப்பாக இருக்கிறது நண்பா. இதற்கு முன்னர் இப்படித்தான் சூழ்நிலை கைதி என சொன்னார், ஆனால் நான் என் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் என்பதை நீ அறிவாய்.

எப்படி மது, மாது என அடிமையாய் ஆகிறார்களோ, அதைப்போலவே சினிமா மோகம் என்னை பிடித்து ஆட்டிவிட்டது. ஒரு தனி மனிதனுக்கு என்னை தாரை வார்த்துவிட்டது கண்டே கலங்குகிறேன். ரஜினி ரசிகையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்கிற கொள்கையை தளர்த்தி கொள்கிறேன். இனி அவர் என் தலைவர் இல்லை என்பதை முழு சம்மதமின்றி ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக, என்னைப் போன்ற பைத்தியகார ரசிகர்களுக்காக அவர் தனிமையாக இருக்கவும் வேண்டாம், சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டாம், இனி வரும் காலங்களில் அவர் சுதந்திரமாக வாழட்டும் என்றே விரும்புகிறேன். இப்போது கூட என்னால் அவர் கஷ்டப்படுவதை தாங்கிக் கொள்ள இயலவில்லை நண்பா. என்னை விரைவில் வந்து அழைத்து செல், இல்லையெனில் நான்... தெருக்களில்... எழுதவே கைகள் நடுங்குகிறது நண்பா.

உனது வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

அன்பு நண்பன்
முருகன் என்ற ரஜினிதாசன்

சினிமா ஒரு மாய உலகம், நல்ல மனிதர்கள் நாசமாகப் போகிறார்கள், நாசமாகப் போக இருந்தவர்கள் நல்லவர்கள் ஆகிறார்கள்.