Saturday 2 February 2013

விஸ்வரூபம்

கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணிநேரம் படத்தை பார்த்துவிட்டு இறுதி காட்சி முடிந்த பின்னர் ப்பூ என்றும், படம் மண்ணு போல இருக்கிறது என்றும் வாய் முணுமுணுத்தது. இருப்பினும் இது தமிழ் பட  உலகின் ஒரு புதிய அவதாரம். ஆப்கானிஸ்தானின் வறண்ட பிரதேச மலைகள் கூட கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. தமிழ் பட உலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட இயக்குனர் மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். மிகவும் சிரமமான இடங்களில் எல்லாம், அதுவும் போர் காட்சிகள் எல்லாம் தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்.

மிகவும் சிரமமான கதைக்கருவை மிகவும் நேர்த்தியாக கையாளத் தவறிவிட்டார் என்றே சொல்லலாம். முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள் என்று வாய்க்கு வாய் வெளியில் சொல்லியவர் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவும் செய்துவிடவில்லை. ஒரு இந்து, அதுவும் ஆராய்ச்சியாளர், புற்று நோய் எனும் கொடிய நோயிற்கு கதிரியக்கம் மூலம் தீர்வு காண முயல்பவர்,  முஸ்லீம் தீவிரவாதத்திற்கு உதவியாக இருக்கிறார் என்பதில் இருந்து முஸ்லீம்கள் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல என்பது தெள்ளத் தெளிவு. மேலும் உலகில் நடைபெறும் தீவிரவாதம் அனைத்திற்கும் முஸ்லீம்கள் பொறுப்பல்ல என்பது மிகவும் கண்கூடு. எதற்கும் உதாரணத்திற்கு அமெரிக்க தீவிரவாதம் படித்து பாருங்கள்.

வானம் என்ற ஒரு திரைப்படம். அதில் முஸ்லீம்கள் பெருமைப்படும் அளவிற்கு காட்சி அமைப்புகள் இருந்தது. ஒரு முஸ்லீம் சமூகம் எப்படி தீவிரவாத சமூகமாக பார்க்கப்படுகிறது என்றும் அதே வேளையில் ஒரு முஸ்லீம் எப்படி உதவுகிறார் என்றும் காட்சி அமைப்புகள் இருக்கும். ஆனால் அந்த திரைப்படம் இந்த அளவிற்கு காசில்லாத விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. எவரும் அந்த படத்தில் காட்டப்படும் தீவிரவாதம் குறித்து அதிக அளவில் கேள்வி எழுப்பவில்லை.

இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சிறு வயதில் தீபாவளி சமயத்தில் துப்பாக்கி வெடி வெடித்த நியாபகம் வந்து தொலைந்தது. திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம் நினைவில் வந்து போனது. எப்போதுமே ஒரு சமூகம் அமைதியில் மட்டுமே திளைத்திருக்க விரும்பும். இயக்குனரின் இறைமறுப்பு எண்ணம் ஆங்காங்கே தென்படுகிறது. இந்து மதத்தையும் விட்டுவைக்கவில்லை. விநாயகரை கடலில் கரைப்பது போன்ற விசயங்கள் சிரிப்பலைகள் எழுப்பின எனலாம். இந்துக்கள் சிரித்துக்கொண்டு போய்விடுவார்கள், ஏனெனில் இந்து சமயம் ஒரு அழுத்தத்தில் இருந்து புறப்படவில்லை. அது மனதில் இருந்து கிளம்பிய ஒன்று. பகவத் கீதை எல்லாம் இந்துக்களின் புனித நூல் அல்ல.

அப்படியெனில் முஸ்லீம் சமூகம்! முகம்மது நபிகளின் வரலாறுதனை புரட்டிப் பார்த்தால் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சி எத்தகைய போராட்டத்தில் இருந்து தொடங்கியது என்பதை கண்கூடாக காணலாம். ஒரு குரான் மட்டும் இல்லையெனில் இந்த முஸ்லீம் எனும் மதம் இல்லாது ஒழிந்து போயிருக்கும் நிலைதான் அன்று இருந்தது. எப்படியெல்லாம் குரான் ஒரு சமூகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்பதை மற்றொரு நேரத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இயக்குனரின் இறைமறுப்பு கொள்கைக்கு மதிப்பு தரும் வகையில் டாகின்ஸ் எனப்படும் இறைமறுப்பாளர் பெயரை ஒரு கதாபாத்திரத்திற்கு சூட்டி பெருமைப்பட்டு கொள்கிறார். நான் சிறுமைப்பட்டு கொண்டேன்.

'டர்டி பாம்' எனப்படும் கதிரியக்க ஐசோடோப்களின் மூலம் உருவாக்கப்படும் குண்டுகளினால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இது அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்டம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகமான அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் இல்லை. மேலும் இது போன்ற விசயங்களால் நேரடி பாதிப்பு குறைவுதான், ஆனால் மக்களில் ஏற்படும் பய உணர்வு மிகவும் அபாயகரமானது. மனதளவில் பெரும் பாதிப்பினை இதுபோன்ற கதிரியக்க குண்டுகள் ஏற்படுத்திவிடும் என்றே கருதப்படுகிறது. பெரும்பாலும் சீசியம் எனும் உலோகத்தின் ஐசோடோப்கள் பயன்படுத்தபடுகிறது. இந்த சீசியம் பற்றியும் கதிரியக்க விளைவுகள் பற்றியும் மற்றொரு முறை பார்க்கலாம். செர்னபில் அணு உலை வெடிப்பின் போது இந்த சீசியமே அதிக அளவில் வெளிப்பட்டதாக தகவல் இருக்கிறது.

அப்படிப்பட்ட கதிரியக்க விளைவைத்தான் இந்த திரைப்படம் ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் இஸ்லாமிய அமைப்புகளின் மனதில் குறிப்பாக தமிழகத்தில் வந்து சேர்ந்து இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகம்மது ஓமர் பற்றி பெயர் குறிப்பிட்டதோடு பல காட்சிகள் அதீத கற்பனைகளுக்கு உட்பட்டவைதான். அவருடைய அமெரிக்க வெறுப்பு ஏற்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் ஒரு போர் நிலமாகவே திகழ்ந்து வந்து இருக்கிறது. இதையெல்லாம் படத்தில் ஒரு சில வரிகளில் ஒரு மூதாட்டியின் சொல்லில் இருந்து முடித்து கொள்கிறார்கள். தலிபான் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை தான் பெண்கள் ஒடுக்குமுறை எல்லாம் இருந்தது எனலாம். தலிபான் இயக்கம், ஷ்ரியா விதிகள் எல்லாம் ஒரு சமூகம் தனக்கு விதித்து கொள்ளும் கட்டுபாடுகள். இதைத்தான் குரானும் செய்கிறது. தனது சமூகத்தை தன்னுள் ஒரு கட்டுப்பாட்டினை கொண்டு வரச் செய்ய அது மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றே இருக்கிறது. இல்லையெனில் க்வரைசி எனும் குழுக்களில் இருந்து முஸ்லீம் முன்னேறி இருக்குமா என்பது கேள்விக்குறியே!

வாமன அவதாரம் மகாபலிக்காக! கிருஷ்ண அவதாரம் கம்சனுக்காக பின்னர் பாண்டவருக்கு உதவிட. இதில் விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து இருப்பார் அதிலும் குறிப்பாக கிருஷ்ண அவதாரத்தில். சகோதர போராட்டத்தில் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் அது. விஸ்வரூபம் எல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. போர் நடந்தே ஆனது.

ஆனால் இந்த நிழல் விஸ்வரூபம், குரானை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க வைத்து இருக்கிறது, தமிழகத்தில் மட்டும்! 

Friday 1 February 2013

லைப் ஆஃப் பை - வாழ்வியல் விசித்திரம்

கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் எங்குமே செல்ல இயலாத சூழல். லண்டன் நகரிலேயே பொழுது கழிந்தது. பனி விழும் என எதிர்பார்த்து பனி விழவே இல்லை. அதற்கு பின்னர் இந்த ஜனவரி மாதம் பனி விழுந்தது வேறு கதை.

கிறிஸ்துமஸ் முன்னர் ஒரு படம் பார்க்கலாம் என சென்றோம். படத்தின் பெயர் லைப் ஆப் பை என முடிவு எடுத்தோம். படம் பற்றிய கதை என எதுவும் அறிந்திருக்கவில்லை. சில பாகங்கள் பாண்டிச்சேரியில் எடுத்து இருக்கிறார்கள் என கேள்விபட்டதுடன் சரி. முப்பரிமாணத்தில் பார்க்கலாம் என முடிவு எடுத்து சென்றது நன்றாகவே இருந்தது.

முதலில் படம் ஆரம்பித்த போது ஒரு பாடல். அதுவும் தமிழில். கண்ணே கண்மணியே! நான் பொதுவாக படங்களில் பாடலை கொஞ்சம் கூட விரும்புவதில்லை. கதையின் போக்கினை பாடல்கள் சிதைக்கின்றன என்றே கருதுவேன். ஆனால் முதன் முதலில் தொடங்கிய பாடல், அதை காட்சி அமைத்த விதம் என ஒரு அந்த பாடல் முடியும் வரை பிரமிப்பாக இருந்தது. இத்தனை தத்ரூபமாக காட்சி எவரேனும் அமைத்து இருப்பார்களா என அந்த பாடல் முடியும் வரை நினைத்து கொண்டே இருக்க செய்தது. தமிழ் கண்டு மனம் மிகவும் பூரிப்பு அடைந்தது.

இந்த படத்தின் கதை என பாண்டிச்சேரியில் தொடங்கி அதற்கடுத்து கடலிலேயே பல காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் அயர்ச்சி ஏற்பட்டது உண்டு. கதை வேகமாக நகராதா என எண்ணம் வந்து சென்றது.

அதுவும் படத்தில் ஒரு இயற்கை காட்சி, அதுவும் இரவில் ஒளிரும் தாவரங்கள் என காட்டிய இடம் பிரமிக்க வைத்தது. இந்த இடம் உண்மையிலேயே இருக்கிறதா என ஏக்கம் கொள்ள வைத்துவிட்டது. அத்தனையும் தாண்டி படத்தின் இறுதி காட்சி வாழ்க்கையின் பெரிய அனுபவத்தைச் சொல்லி சென்றது. படம் முடிந்து வெளிவருகையில் உணர்வுப்பூர்வமான படம் என்று சிலர் கண்களை கசக்கி கொண்டிருந்தார்கள். சிலர் இருக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள். மிகவும் உணர்வுப்பூர்வமான படம் என்று வயதான இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். நானும் அந்த படத்தின் கடைசி காட்சியில் பிரமித்து போனேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனம் புரியாத ஒரு இறுக்கம் மனதில் எட்டிப் பார்த்தது.

பன்னிரண்டு சிறுவனுடனும், பத்து வயது சிறுமியுடன் படம் பார்த்தோம்.  படம் எப்படி என்று அவர்களிடம் கேட்டேன். இட்ஸ் ஓகே என்றார்கள். படத்தின் அர்த்தம் புரிகிறதா என்றேன். புரியவில்லை என்றார்கள் வாழ்வியல் தத்துவம் சொன்ன திரைப்படம் இது என புலி பற்றிய கதாநாயகனின் எண்ணவோட்டத்தை விளக்கினேன். விளங்கியது போன்றே தலையாட்டினார்கள். கடைசியில் கதாநாயகன் சொன்ன விசயம் வாழ்வியலில் விசித்திரம்.

எனது வாழ்வில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்தது உண்டு. ஆனால் எப்படி இந்த படத்தில்  முதல் பாட்டு ஒரு பெரிய பிரமிப்பை உருவாக்கியதோ அதைப்போல இறுதி காட்சியும்  பிரமிப்பை உருவாக்கியது.

இந்த படம் ஒரு புத்தகத்தின் தழுவல் என தெரிந்து அந்த புத்தகம் பற்றி தெரிந்து கொண்டபோது கிட்டத்தட்ட ஐந்து புத்தக நிறுவனங்கள் அந்த புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டன. அதன் பின்னர் அந்த புத்தகம் வெளிவந்து சிறந்த பரிசும் பெற்றுவிட்டது. எனது அக்கா மகன் இந்த புத்தகத்தை முன்னரே படித்து இருந்ததாக சொன்னான். நீ எல்லாம் நாவல் ஆசிரியர், முதலில் இது போன்ற புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் பட்டேன். வாசிப்பு அனுபவம் மிக மிக குறைவுதான்.

இது போன்ற கதைகள் நான் இந்தியாவில் இருந்தபோது நிறையவே கேள்விபட்டது உண்டு. அத்தனை நம்பிக்கைக்கு உரிய கதைகள் அவை. இந்த படத்தில் கேட்கப்படும், இது எதற்காக நடந்தது, எனக்கு மட்டும் எப்படி நடந்தது போன்றே பல விசயங்கள் பகிரப்படுபவை.

சிறு வயதில் கேட்ட ஒரு கதை என்னை இன்னமும் பிரமிப்பில் வைக்கும்.

சந்தோசமாக இருந்த போது
நான்கு கால் தடங்கள் இருந்தது
இரண்டு உன்னுடையது
மற்ற இரண்டு இறைவனோடது

துன்பமாக இருந்தபோது
இரண்டு கால் தடங்களே இருந்தன.
இரண்டு இறைவனோடது

அப்படியெனில் நான் எங்கே?
உன்னை இறைவன் தூக்கி கொண்டு நடந்தான்!

இதுதான் அந்த கதை. இறைவனின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அப்படித்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகிறர்கள. எனக்கு இது மிக மிக பிடித்து போனது.

ஒரு நிகழ்வு - அதில் இரண்டு கதைகள்.

இந்த உலகம் உருவானது குறித்து கூட உண்டு.

இறைவன் உருவாக்கிய உலகம். இதில் நம்புமாறு எந்த ஒரு விளக்கங்களும் இல்லை. ஆனால் சுவராஸ்யமாக இருக்கும். இருப்பினும் பைபிள், குரான், பகவத் கீதை என எல்லாம் தோற்று போவது போலவே தோற்றம் அளிக்கின்றன.

பெருவெடிப்பில் உருவாக்கிய உலகம். இதில் காஸ்மிக் கதிர்கள், ரெட் ஷிப்ட் என பல விசயங்கள் உண்டு.

இந்த இரண்டில் எது உண்மை என கேட்டால் ஏழு பில்லியன் மக்களில் பலரும் இன்னமும் இன்ஷா அல்லா என்றும், இயேசுவே பரம பிதாவே என்றும், நமோ நாராயணா என்றும் ஓம் நமசிவாயா என்றும் இறைவன் உருவாக்கிய உலகம் என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

லைப் ஆப் பை - இறைவன் பெருமை சொல்லும் மாபெரும் காவியம்.

இப்படி ஒரு நல்ல படத்தை பார்த்த கண்கள் மற்றொரு படம் பற்றியும் நாளை எழுதும். அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் என்ன!

Thursday 31 January 2013

தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விடும் என தமிழக முதல்வர் மிகவும் பயப்படுகிறார். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே  ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர் அறிவித்ததை கண்டு பெரும்பாலான அமைப்புகள் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டு இருக்கின்றன.

இனிமேல் சட்ட ஒழுங்குதனை  சீர்குலைய செய்வோம் என ஒவ்வொருவரும் அவரவருக்கு வேண்டியதை நிறைவேற்ற அரசுவிடம் மனு கொடுக்க ஆயத்தமாகிறார்கள் என அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

திருடர்கள் அமைப்பு:  
உறுப்பினர்கள்: நான்கு கோடி 

எங்களை எந்த தொந்தரவும் செய்யாமல் திருட வழி வகுக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விடும் அபாயம் இருக்கிறது.

சாதி கட்சி:
உறுப்பினர்கள்: ஏழரை கோடி 

தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினர்களும் இனிமேல் வன்னியர்கள் என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிக்காத பட்சத்தில் எங்கள் உறுப்பினர் கணக்கு பொய்யாகும் சாத்தியம் உள்ளது, அதோடு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு சாலைகளில் குவிக்கப்படும்.

அரசியல் கட்சி: 
உறுப்பினர்கள்: கணக்கு காட்டப்படவில்லை 

இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அரசு கவிழ வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக ஆளும் கட்சி என போஸ்டர்கள் ஒட்டப்படுவதுடன் தனித்திராவிட நாடு அமைக்கப்படும்.

மொடாக்குடியர்கள் அமைப்பு:
உறுப்பினர்கள்: ரேஷன் கார்டு இல்லை. 

வீட்டுக்குழாயில் தண்ணீர் பதிலாக மதுபானம் வரவேண்டும்.

இன்னும் இன்னும் தொடரும்...

'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'